• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நான் போடுற கோட்டுக்குள்ளே -1

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
300
நான் போடுற கோட்டுக்குள்ளே -1

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அதிகாலை நான்கு மணி. இன்றைய காலகட்டத்தில் பல பேருக்கு அது அர்த்த ராத்திரி. சிங்கார சென்னையில் ஆவின் பால் லாரிகளைத் தவிர மற்ற எல்லாரும் சற்று முன் தான் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருந்தார்கள்.



ஸ்ரீ ஸ்ரீநிவாசம், சென்னையின் ஆடம்பர பகுதிகளில் ஒன்றான அண்ணா நகரின் பிரதான சாலையில் இருந்த வீடு. சமீபத்தில் தான் பழமையில் இருந்து புதுமைக்கு மாறி இருக்கிறேன் என்பதைப் பறை சாற்றும் தோற்றம்.



"அப்பனே! ராகவா! இன்னைக்கு. பொழுது நேக்கு நல்ல படியா விடியட்டும் பா!" என்ற வேண்டுதலுடன் உள்ளங்கைகளைத் தேய்த்துக் கண்களில் ஒற்றிக் கொண்டே எழுந்தார் பத்மாசனி.



அடுத்த அரைமணி நேரத்தில் குளித்துத் தயாராகி மடியாக உலர்த்தி இருந்த புடவையை உடுத்திக் கொண்டு ஈரத் தலையில் நுனியில் ஒரு முடிச்சிட்டு பூஜையறைக்குப் போனார். நெற்றியில் ஸ்ரீசூர்ணத்தை கோபி போல இட்டுக் கொண்டு ஒரு பெருமூச்சுடன் அங்கே இருந்த எல்இடி லைட்டின் சுவிட்சைத் தட்டினார்.



தங்கம் போலப் பளபளத்த வெண்கல விளக்குகள் வா என்று அழைத்ததில் திரியைத் தூண்டி விட்டு எண்ணையை ஊற்றினார்.



'அதெப்படி? உங்களுக்குன்னு வந்தா மட்டும் ப்ரேக் தி ரூல்ஸ்னு எல்லாத்தையும் மறந்து போயிடறேள்? எல்லாரும் தூங்கிண்டு இருக்கும் போது அதுவும் ஆத்து பொம்மனாட்டி தூங்கிண்டு இருக்கும் போது விளக்கேத்தக் கூடாதுன்னு உங்களுக்குத் தெரியாதோ? நான் வந்து விளக்கேத்தற வரைக்கும் வெயிட் பண்ணலாம். ஒன்னும் குறைஞ்சு போயிடாது. அதுவும் போக இந்த பெருமாள் சன்னதி…' மருமகள் பாதியில் நிறுத்திய வாக்கியம் என்னவாக இருக்கும் என்று மாமியாருக்கு நன்றாகவே தெரியும். எல்லாம் அவர் விதைத்த விதை தானே.



காதுகளில் அசரீரியாக ஒலித்த மருமகள் அனுராதாவின் குரலில் தீப்பெட்டியை நோக்கிச் சென்ற கைகளைக் கட்டுப் படுத்திக் கொண்டு கைகூப்பி வணங்கினார்.



"பெருமாளே! எல்லாரையும் நல்ல படியா வை!" என்று சத்தமாக வேண்டிக் கொண்டு சாஷ்டாங்கமாக சேவித்தார். அதன் பின்னர் அவரது தினசரி பழக்கங்கள் அவரை இழுத்துக் கொண்டன.



வீட்டு வாசல் கதவுகளைத் திறந்து வெளியே வந்தவர், வழக்கமான புலம்பல்களுடன் தனது நாளை ஆரம்பித்தார். "எத்தனை வயசானாலும் நாமளே தான் இதையெல்லாம் பண்ண வேண்டியதா இருக்கு. மாட்டுப் பொண்ணு தான் மாடர்ன்னா பேத்தி அல்ட்ரா மாடர்னா இருக்கா! எல்லாம் அவா அவா வளர்ப்பைச் சொல்லணும்."



'இப்பவும் அவா பண்ணுவா… ஆனால் உன்னை மாதிரி அர்த்த ராத்திரி நாலு மணிக்கு இல்லை… எட்டு மணிக்கு. உனக்கு அது தானே பிடிக்க மாட்டேங்கறது' என்றது மனசாட்சி.



அதற்கும் ஒரு பதிலைக் கொடுத்து ஓரம் கட்டி விட்டு வேலையில் கவனமானார். "நான் இல்லேன்னா இவா தானே எல்லாம் பண்றா… என்னைக் கண்டாலே இளக்காரம் தான்."



வாசலைத் தெளித்து, கோலம் என்ற பெயரில் நாலு கோடுகளை இழுத்து விட்டு பக்கவாட்டில் இருந்த சிறிய தோட்டத்திற்குப் போனார். கொட்டிக் கிடக்கும் பவளமல்லியின் மணம், வா வா என்று அழைத்தது. கையோடு கொண்டு வந்திருந்த கூடையில் முடிந்த வரையில் பூக்களைச் சேகரித்தார்.



பூக்கூடையைக் கொண்டு வந்து டீப்பாய் மேலே வைத்து விட்டு சமையலறைக்குள் நுழைந்தார். இதோ அடுத்த புலம்பல் அத்தியாயம் ஆரம்பித்தாயிற்று.



"சாப்பிடறது ஒரு வாய் காப்பி. அதையும், ஒரு நாள் ஒரு பொழுதாவது ஃப்ரஷ் பால்ல கலக்க முடியறதா? எல்லாம் என் நேரம். தடி எடுத்தவா எல்லாம் தண்டல்காரன் ஆயிடறா. எனக்கென்ன போக்கிடமா இல்லை. எங்க ஆத்துக்காரர் ஆசையா வாங்கின ஆம் இல்லையா என்ன? நான் மாட்டுக்கு கிருஷ்ணா ராமான்னு தனியா இருந்துடறேன்னா யார் கேட்கறா? வயசானவா எல்லாம் தனியா இருக்கப் படாதுன்னு நேத்து பிறந்த நண்டு சிண்டெல்லாம் அட்வைஸ் பண்ண ஆரம்பிக்கறதுகள். ஹூம்! இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி விதிச்சிருக்கோ தெரியலையே! பெருமாளே!" என்ற நீண்ட புலம்பல்களுடன் ஃப்ரிட்ஜைத் திறந்தவர் கவனமாக முதல் வரிசையில் இருந்த பால் பாக்கெட்டை எடுத்தார்.



எதற்கும் இருக்கட்டும் என்று தேதியைச் சரிபார்த்து, அது நேற்றைய பால் என்பதை உறுதி செய்த பின்பே ஃப்ரிட்ஜை மூடினார். இன்றைய பால் இன்னும் வந்திருக்கவில்லை என்பதே அவருக்கு இருந்த பதட்டத்தில் ஞாபகம் வரவில்லை.



'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்றது இது தான் பத்மா.. நன்னா தெரிஞ்சுக்கோ' என்றது மனசாட்சி.



'முந்தின நாள் பால் மட்டும் இல்லாமல் மூணாவதா இறக்கின ரொம்ப ஸ்ட்ராங்கான(!?) டிகாஷன்ல கழனித் தண்ணிய விட பிரமாதமான காப்பியை மாட்டுப் பொண்ணுக்குப் பார்த்துப் பார்த்துக் கலந்து கொடுத்தியே! இப்போ அனுபவி. இந்த மட்டும் நீயே காப்பி போடற அளவுக்கு சமையல் கட்டுக்குள்ள உன்னை அலோவ் பண்ணி இருக்காளேன்னு நினைச்சு சந்தோஷப்படு. அவளை நீ அதைக் கூட பண்ண விடலை, ஞாபகம் இருக்கா? எப்படியோ உனக்கு நல்ல காப்பி கிடைக்கிறதோ இல்லையோ..'



விடாமல் கொட்டிய மனசாட்சியை ஓரம் கட்டி வேலையில் கவனமானார். ஃபில்டரில் பொடியைப் போட்டு கெட்டிலில் கொதித்துக் கொண்டிருந்த வெந்நீரை ஊற்றியவர் பால் குக்கரை எப்போதும் உள்ள இடத்தில் காணாமல் திகைத்து நின்றார்.



"ஞாயித்துக்கிழமை வந்தாலே இவளோட பெரிய தொல்லையா போச்சு" என்று அங்கலாய்த்துக் கொண்டு அங்கிருந்த ‌அலமாரிகள் பூராவும் தேடி பால் குக்கரைக் கண்டுபிடித்தார். குக்கர் இப்படி அடிக்கடி, குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் காணாமல் போவதற்கு ஒரு கனமான காரணம் உண்டு.. அதை மாமியின் மாட்டுப் பெண் சொன்னா தான் நன்னா இருக்கும்!!



அடுப்பில் குக்கரை வைக்கப்போனவரின் முகம் அஷ்டகோணலாக மாறியது. "நாராயணா! இந்த காலத்து பொம்மனாட்டிகளுக்கு எதை எதை எப்படி மெயின்டெய்ன் பண்ணனும்கற அக்கறையே இல்லை. ராத்திரியே அடுப்பு மேடை எல்லாம் துடைச்சால் தான் என்ன? கேட்டா நாங்க எல்லாம் வேலைக்குப் போறவா.. எங்களுக்கு எப்போ தோதுப்படறதோ அப்போ தான் வீட்டு வேலையைப் பார்ப்போம்னு வியாக்கியானம் பேசறது. மாசம் ஒரு நாள் கிச்சனுக்கு பிரேக் வேணும், ஹோட்டல்ல போய் சாப்பிடுவோம்னு ஆரம்பிச்சு இப்போ வாரம் ஒரு நாள்னு இம்ப்ரூவ் ஆயாச்சு. இன்னும் கொஞ்சம் போனா ஆத்துக்குள்ள சமையல் கட்டு எங்க இருக்குன்னே யாருக்கும் தெரியாது."



புலம்பல்களுக்கு இடையே வேலையும் படு ஜோராக நடந்தது. அடுப்பும் மேடையும் இவர் இத்தனை புலம்பும் அளவுக்கு மோசமாக இல்லை.



பால் குக்கர் விடாமல் அடித்த விசிலும், வாசல் வரை மணக்கும் டிகாஷனும் இன்னும் சில நிமிடங்களில் காப்பி ரெடி என்றது.



கள்ளிச் சொட்டாக இறக்கி இருந்த டிகாஷனில் பெயருக்கு சர்க்கரையும் பாலும் சேர்த்து தனக்கான காப்பியைக் கலந்து கொண்டு ஹால் சோஃபாவில் வந்து அமர்ந்தார். தலை போகும் அவசரமாக இருந்தாலும் நிதானமாக உட்கார்ந்து ரசித்து ருசித்து காப்பியைக் குடிப்பதை ஒரு வேளையும் மறந்ததில்லை அவர். இதனால் மருமகளின் பொறாமையை ஏகமாக சம்பாதித்து வைத்திருப்பது தனிக் கதை.



'ம்க்கும்..‌ அவளுக்கு ஒரு காப்பியை ரசிச்சு குடிக்கறதுக்குப் பொறுமை இல்லேன்னா அதுக்கு நானா பொறுப்பு?' என்று இப்போதும் நினைத்து தோளில் இடித்துக் கொண்டார்.



சூடான காப்பி தொண்டையில் இறங்கிய உடன் தெம்பு வரப் பெற்றவராக, வரப் போகும் பஞ்சாயத்தை எதிர்கொள்ளத் தயாரானார். அவர் செய்து வைத்த வேலை அப்படி. பால் குக்கர் அடித்த விசில் அதன் வேலையைச் செவ்வனே செய்திருந்தது. சமையலறையை அடுத்திருந்த படுக்கை அறையில் ஒரு பிரளயம் உருவாகும் அறிகுறிகள் தென்பட்டது.



"காலங்கார்த்தால ஆரம்பிச்சுட்டா!" என்று கோபமும் அலுப்புமாகக் கண்விழித்தாள் அவள்.



"என்ன ஆச்சு அனு? மணி என்ன?"



"ம்… அஞ்சாகப் போறது"



"அதுக்குள்ள எதுக்கு எழுந்துக்கற. சன்டே தானே. பேசாமல் தூங்கேன்" சொன்னதோடு நில்லாமல் அவளை இழுத்து அணைத்துக் கொண்டு தனது தூக்கத்தைத் தொடர்ந்தார் ரங்கராஜன், பத்மாசனியின் சீமந்த புத்திரன்.



"ஆமா.. இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை. இதுக்கு மேல எங்க தூங்கறது?" அவளை வளைத்திருந்த கைகளை கோபத்துடன் தள்ளி விட்டு எழுந்து அமர்ந்தாள் அனுராதா, திருமதி ரங்கராஜன், பத்மாசனியின் அருமை மாட்டுப்பெண்.



"ம்ச். இவாளோட பெரிய ரோதனையா போச்சு. பெரியவாளை ரொம்ப பேச வேண்டாம்னு பார்த்தா.. ஒரு சன்டே மார்னிங் தூக்கத்தை என்ஜாய் பண்ண விடறாளா உங்க அம்மா? டெய்லி அரக்கப் பறக்க எழுந்து கால்ல சக்கரம் கட்டாத குறையா ஆத்து வேலையும் பாத்துண்டு வேலைக்கும் போயிட்டு வராளே ஒரு மனுஷி, வாரத்துல ஒரு நாள் நிதானமா தான் எழுந்துக்கட்டுமேன்னு தோணறதா? வயசான காலத்துல இவாளுக்குத் தூக்கம் வரலேன்னா ஆத்துல இருக்கற யாருமே தூங்கிடக் கூடாதா? இல்லை.. அப்படியும் இல்லை.. மாட்டுப்பொண்ணு தூங்கறது தான் இவாளுக்கெல்லாம் ஆகாது.



அதே இவா பொண்ணா இருந்தா நடுமத்தியானம் வரைக்கும் தூங்கினால் கூட பிரச்சினை எதுவும் இல்லை.‌ ஏன்னா அவ பாவம்.. நாள் பூராவும் ஆத்துல இரண்டே இரண்டு வேலைக்காரி வச்சிண்டு கஷ்டப்பட்டு வேலை பாக்கறா.. நான் அப்படியா..? ஆத்துலயும் எந்த வேலையும் ஒழுங்கா பாக்கறதில்லை.. வேலை வேலைன்னு போயிட்டு அங்கேயும் என்ன பண்றேன்னு தெரியலை."



ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ரங்கராஜனை உலுக்கி கேள்வி மேல் கேள்வி கேட்டால் அவரும் என்ன தான் செய்வார் பாவம். மனைவியின் பேச்சு புரிந்தும் புரியாமலும் முழித்தார்.



"என்ன முழிக்கறேள்? மணி அஞ்சு கூட ஆகலை. அவாளுக்குக் காஃபி வேணும்னா சின்ன பாத்திரத்தில கொஞ்சூண்டு பாலைக் காய்ச்சிக்க வேண்டியது தானே. மனசுல என்ன ஒரு வன்மம் இருந்தா, ஒளிச்சு வச்ச குக்கரைத் தேடிக் கண்டு பிடிச்சு அலற விடுவா? இதுவே அவா பொண்ணு வந்தா சைலன்ட் ஏர்போர்ட் மாதிரி வேலை பார்ப்பா உங்க அம்மா..



நீங்க நன்னா இழுத்துப் போர்த்திண்டு தூங்குங்கோ. தலைல இடியே விழுந்தாலும் எப்படித் தான் தூங்கறேளோ தெரியலை. நாராயணா! இன்னைக்கு ஞாயித்துக் கிழமை பொழுது இப்படியா விடியணும்? இன்னைக்கு இரண்டுல ஒன்னு பார்க்கத் தான் போறேன். ஒன்னு இந்த ஆத்துல அந்த குக்கர் இருக்கணும் இல்லை… "



வீர சபதம் போட்டு எழுந்த மனைவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் தூக்கத்தைத் தொடர்ந்தார் ரங்கராஜன். அவரைப் பொறுத்தவரை வாரத்தின் எல்லா நாளும் ஒரே நாள் தான். ஆறு மணிக்கு டான் என்று எழுந்து விடுவார். அவரது மனைவி தான் ஞாயிற்றுக்கிழமை எட்டு மணிக்கு முன்னால் எழுந்திருக்கக் கூடாது என்று டார்கெட் வைத்துக் கொண்டு இருப்பவள். ஆனால் அது அவள் ஒரு நாளும் achieve பண்ணாத, பண்ண முடியாத டார்கெட் என்பது வேறு விஷயம்.



"ஹூம். கொடுத்து வச்ச மகராஜன். நான் தூக்கம் போச்சேன்னு கரடியா கத்திண்டு இருக்கேன். எனக்கென்னன்னு தூங்கறார். எழுந்தாலும் சன்டே தானேன்னு ரிலாக்ஸா இருப்பார். ஆனால் நாம சன்டே தான் ஓவர் சுறுசுறுப்பா நாள் பூராவும் ஓடிண்டே இருக்கணும். சன்டே ஸ்பெஷல் சமையல்ல ஆரம்பிச்சு, நாள் பூராவும் வேலை…வேலை..வேலை.. என்ன தான் ஜென்ட்ஸுக்கு ஈக்வலா வேலைக்குப் போனாலும் அவாளை விட ஜாஸ்தி சம்பாதிச்சாலும் இந்த மாதிரி சலுகைகள் எல்லாம் லேடீஸுக்கு உண்டா? இதை எல்லாம் என் பொண்ணு காலத்துலயாவது மாத்தணும்."



இந்த அனுராதா சபதம் யார் யாரை என்ன பாடு படுத்தப் போகிறதோ.. பொறுத்திருந்து பார்ப்போம்.



—----



"ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே. சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே"



காலைக் கடனை முடித்து விட்டு அனுராதா வெளியே வந்த போது அவளது மாமியார் சின்சியராக விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லிக் கொண்டு இருந்தார். கைகள் பவளமல்லிப் பூவை நூலில் கோர்த்துக் கொண்டு இருந்தன, கண்கள் மருமகளின் நடமாட்டத்தைக் கண்காணித்தன.



'ஹூம்.. இந்த மாதிரி சீப் டெக்னிக் எல்லாம் எனக்கு வராது, வரவும் வேண்டாம்' மனதுக்குள் நினைத்துக் கொண்டு சமையலறையில் காலெடுத்து வைத்தாள்.



தனக்கான காப்பியைக் கலந்தவள் சமையலறை மேடையில் சாய்ந்து கொண்டு மருந்தைக் குடிப்பது போல் கடகடவென்று வாயில் ஊற்றிக் கொண்டாள். என்ன தான் செய்வது, அவளுக்கு தெரிந்தது அது தான். தலையெழுத்தை நொந்தபடி டம்ளரை அலம்பி விட்டுத் திரும்பியவளின் கண்களில் மாமியாரின் நக்கலான பார்வை விழுந்தது.



அதை அலட்சியம் செய்தவளாக, அன்றைய சமையலுக்கான காய்கறிகளை ஆராய்ந்தாள். அவர்களது வீட்டில் சாதாரணமாக காலை டிபன், மதியம் சாப்பாடு என்று இருப்பவர்கள் தான். ஞாயிற்றுக் கிழமை அதற்கு விதிவிலக்கு. அன்று காலை டிபன் கட், பதினோரு மணி வாக்கில் சாப்பாடு தயாராகி விடும்.



'யுரேகா!' என்று கும்மாளமிட்ட மனதைக் கட்டுப்படுத்தி ஃப்ரிட்ஜில் இருந்த பிஞ்சுக் கத்திரிக்காயை எடுத்து வெளியே வைத்தாள். எண்ணெய் கத்தரிக்காய், ஸ்டஃப்ட் கத்திரிக்காய், கத்திரிக்காய் ரசவாங்கி என்று எல்லோருக்கும் பிடிக்கும் கத்திரிக்காய் சமையல் அனுராதாவின் பிரியமான மாமியாருக்கும் ரொம்பவே பிடிக்கும்.



காசிக்குப் போய் பிடித்ததை விடவேண்டும் என்று கத்திரிக்காயை விட்டு வந்து அவர் படும் அவஸ்தை கொஞ்சநஞ்சமல்ல. அவர் கத்திரிக்காயை விட்டு வந்ததில் இருந்து வீட்டில் கத்திரிக்காய் போக்குவரத்து அதிகமானதில் நொந்து போனார். அதிகபட்சமாக அனுராதா மாமியாருக்குக் கொடுக்கும் பதிலடியே விதம் விதமான கத்திரிக்காய் சமையல் என்றானது. அதற்குப் பயந்து வாய் மூடி இருந்து விடுவாரா என்ன?



'அவருக்கு இருக்கவே இருக்கிறது வத்தல் வடாம் எல்லாம்.. அது போறும்'



மாமியாரின் முறைப்பைக் கண்டு கொள்ளாமல் எண்ணெய் கத்தரிக்காய் செய்வது என்ற முடிவுக்கு வந்து விட்டாள் அனுராதா. இதுவும் மாமியாரிடம் கற்றுக் கொண்ட வித்தை தான். கல்யாணம் ஆன புதிதில் இது போன்ற பல பழிவாங்கும் படலத்தை நடத்தி இருக்கிறார் பத்மாசனி.



இன்று ஏனோ இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மனம் அடம் பிடித்தது. விளைவு, ஒரு சொல் யுத்தம் அங்கே ஆரம்பமானது.



"மத்த நாள் எல்லாம் வேலைக்குப் போறா.. வேர்வையோட போனா நன்னா இருக்காது.. அதனால தளிகை பண்ணிட்டு குளிக்கறா. இன்னைக்கு என்ன வந்தது. விழுப்போட உள்ள வரணுமா.. பெருமாளுக்குப் பண்றோமேன்னு நினைப்பு கொஞ்சமாவது இருக்கா?"



"அம்மா! உங்களுக்கே நன்னா தெரியும்.. மத்த நாள் எல்லாம் குளிக்க அஞ்சே நிமிஷம் தான் கிடைக்கறது. இன்னைக்குத் தான் என்னால ஆயில் பாத் எடுக்க முடியும். அதனால நிதானமாத் தான் குளிப்பேன். நீங்க தான் பெருமாளுக்கு சாதம் பண்ணிடறேளே .. அப்புறம் என்ன.. நாள் கிழமைல எல்லாம் குளிச்சிட்டு பண்றேனோன்னோ.. "



"எல்லா நாளும் கொஞ்சம் முன்னாடி எழுந்துண்டா நிதானமா குளிக்கலாம்.. இதைச் சொன்னால் நான் பொல்லாதவளாயிவேன்.."



"சும்மா எதையானும் சொல்லியே ஆகணும்னு பேசப்படாது.. கார்த்தால ஆறு மணிக்கு எழுந்தா ராத்திரி பதினொரு மணி வரைக்கும் எனக்கு வேலை இருக்கு.. நாள் பூராவும் மாடு மாதிரி உழைக்கறேனே ஒரு ஆறு மணி நேரமாவது தூக்கம் வேண்டாமா?



எதையாவது சொல்ல வேண்டியது.. அப்புறம் மாட்டுப் பொண்ணு சொல் பேச்சு கேட்கறதில்லைன்னு போறவா வரவா கிட்ட எல்லாம் புலம்ப வேண்டியது.. கல்யாணம் ஆகி இருபத்தஞ்சு வருஷத்துக்கு மேல ஆச்சு.. இன்னமும் இந்த புலம்பல் விட்ட பாடில்லை."



"நான் ஏண்டிம்மா புலம்பறேன்.. வயசான காலத்துல இதை எல்லாம் அனுபவிக்கணும்னு என் தலைல எழுதி இருக்கு.. எல்லாம் அவன் கொடுக்கற இடம். ஆத்துக்காரி சொல்றதுக்கெல்லாம் தலையை ஆட்டினா.. ஆம் உருப்படுமா?"



"நீங்க சொன்னா சரி தான்.. நீங்க சொல்றதைத் தான் அப்பா கேட்டுண்டு இருந்தார்.. உங்க பொண்ணு சொல்றதைத் தான் மாப்பிள்ளை கேட்கறார்..மாட்டுப் பொண்ணு மட்டும் எதுவும் சொல்லிடக் கூடாது.. உடனே வரிஞ்சு கட்டிண்டு நியாயம் பேச வந்துட வேண்டியது.."



"அனு! காஃபி தரயா?" என்று தப்பான நேரத்தில் சரியாக என்ட்ரி கொடுத்த ரங்கராஜன் அங்கே நிலவிய போர் மேகங்களைக் கண்டு ஜகா வாங்க முயன்றார்.



"இந்த நியாயத்தை நீயே கேளுடா ராஜா…" வழக்கம் போல முந்திக் கொண்ட மாமியாருக்கு ஒரு முறைப்பைப் பரிசளித்து ரங்கராஜனுக்கான காஃபியைக் கொண்டு வந்து கொடுத்தாள் அனுராதா, கையில் திணித்தாள் என்பதே சரியாக இருக்கும்.



காஃபியை கையில் வாங்கிக் கொண்டு, "இதோ வந்துட்டேன் மா.. மோட்டார் போடறவன இன்னும் காணோம்.. ரொம்ப நேரமாச்சே.. ஒரு கால் பண்ணிட்டு வந்துடறேன்" என்று எஸ்கேப் ஆனார் ரங்கராஜன்.
—---



கீழே நடக்கும் களேபரங்கள் எதையும் அறியாமல் அதிசயத்திலும் அதிசயமாக ஏழு மணிக்கே தனது ஞாயிற்றுக்கிழமையைத் தொடங்கி இருந்தாள் நம் நாயகி. மிகவும் சந்தோஷமாக இருக்கிறாள் என்பதை அவளது முகம் பிரதிபலித்தது.



“யெஸ்! லுக்கிங் பெர்ஃபெக்ட்! லவ் யூ ஸோ மச் சுபி!"



கண்ணாடியில் தெரியும் உருவத்தை பார்த்தபடி வாய் விட்டு சொல்லிக் கொண்டாள் அவள். இருக்காதா பின்னே? கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அந்தக் கண்ணாடி முன்னால் நின்றதற்கு பலன் வேண்டாமா?



'இந்த பாட்டியைத் தாண்டி போகணுமே? என்னென்ன அட்வைஸ் வரப்போறதோ?' என்ற கவலையும் பாராட்டின் ஊடே வந்து சேர்ந்தது. கவலைக்கு முக்கிய காரணம் அவள் பெர்ஃபக்ட் என்று சிலாகித்த அவளது தோற்றம் தான். பார்ப்பவரை, திரும்பி பார்க்க வைக்கும் தோற்றம். தோற்றத்தில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்பவள்.



சராசரி இந்தியப் பெண்களை விட அதிக உயரம். ஐந்தே முக்கால் அடி உயரம். இயற்கையே கொடுத்த ஜீரோ சைஸ். அதை மெயின்டெய்ன் பண்ண நிறைய மெனக்கெட்டு இருந்தாள்.



கருப்பு கலரில் ஷார்ட் குர்த்தியும் வெள்ளை நிற ஜெக்கின்ஸும் அணிந்திருந்தாள். வெள்ளை நிற ஸ்டோல் ஒன்று இடது தோளில் தொங்கியது. பார்த்தாலே உடையின் விலை தெரிந்து விடும். காரணம் அவளது தாய். எப்போதும் எதிலும் பிராண்ட் பார்த்தே வாங்கி மகளும் பிராண்ட் பைத்தியமாகி இருந்தாள். சொல்லப் போனால் மகள் பதினாறு அடி பாய்ந்து எதிலும் யூனிக்காக வேண்டும் என்று சத்யா பால், ரித்து குமார் என்று தேட ஆரம்பித்து இருக்கிறாள். உடையின் நேர்த்தியில் திருப்தி அடைந்தவள் முகத்தில் கவனம் செலுத்தினாள்.



ஃபேர் அண்ட் லவ்லி தேவைப்படாத நிறம், மாசு மருவற்ற சருமம்.. உபயம் அவளது டயட்.



முகத்தின் பளபளப்பு, நான் அடிக்கடி பார்லரில் பராமரிக்கப் படுகிறேன் என்றது. மேக் அப் செய்ததே தெரியாத அளவுக்கு அளவான மேக் அப்.



புருவங்களுக்கு மத்தியில்.. அதென்ன மச்சமா?? மைக்ரோஸ்கோப் வைத்துப் பார்த்தால் மட்டுமே தெரியும் அது பொட்டு என்று, அவ்வளவு பெரிய பொட்டு! வழக்கமாக அவளது நெற்றியின் நிறத்திலேயே இருக்கும் பொட்டு இன்று நிறம் மாறி கருப்பாகி இருந்தது.



நெற்றியில் இருந்து மைக்ரோஸ்கோப்பைத் கொஞ்சம் கீழே இறக்கினால் மூக்கில் ஒரு மில்லிமீட்டர் அளவு ஒரு மூக்குத்தி. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல அதன் பளபளப்பு நான் நல்ல ஜாதி வைரமாக்கும் என்றது. காதுகளில் அதே பளபளப்புடன் கொஞ்சம் பெரிய தோடுகள்.



உதடுகள் இயல்பாகவே ரோஜா நிறத்தில் இருக்க, அதே நிறத்தில் matte finish lipstick குடியேறி இருந்தது.



தோள்களைத் தாண்டி வளர்ந்திருந்த முடி ஒரு பெரிய கிளிப்பில் அடங்கி இருந்தது. காஃபி பொடிக் கலரில் மாற்றப்பட்டு பட்டுப் போல பளபளத்த‌ முடி ஒரு பாட்டில் ஹேர் ஸ்ப்ரேயின் உதவியுடன் அடங்கி இருந்தது. கூடுதல் உபயம் பார்லரில் இரண்டு நாட்களுக்கு முன்பு செய்த hair straitening. இல்லையெனில் அவளது முடி அவளைப் போலவே எதிலும் அடங்காமல் அலையலையாக எட்டுத் திக்கிலும் பறக்கும்.



முன்னும் பின்னும் திரும்பி பார்த்து தனது அழகில் மயங்கி நின்றவள் நேரமாவதை உணர்ந்து தனது கைப்பையை எடுத்துக் கொண்டு கீழே இறங்கி வந்தாள். சந்தோஷமாகக் கடைசிப் படியில் கால் வைத்தவள் பாட்டியின் குரலில் எரிச்சல் அடைந்தாள்.



"சுபிக்ஷா! என்ன இது ஏழு மணிக்கே ஊர் சுத்தக் கிளம்பிட்ட? என்ன கண்றாவி டிரஸ் இது? அதுவும் கருப்பு கலர்ல?"



எப்போதும் போல பாட்டிக்கான பதிலாகத் தனது நெற்றிக் கண்ணைத் திறந்து ஒரு பார்வை பார்த்தவள், "மா! எனக்கு காஃபி மட்டும் கொடு.. நான் கிளம்பறேன்.. வரதுக்கு ஈவ்னிங் செவன் ஆகிடும். கவுண்ட் மீ இன் ஃபார் டின்னர்" என்றபடி பாட்டியின் எதிரே கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டாள்.



"பெரியவாளுக்கு நல்ல மரியாதை.. கல்யாண வயசுல இப்படி ஊர் சுத்தினா வரப் போறவன் என்ன பாடு படப்
போறானோ"



பாட்டியின் வாய் முகூர்த்தம் இடைவிடாது புரையேறியது வரப் போறவனுக்கு.



"காலங்காத்தால உன்னை யாரு டா இப்படி நினைச்சுக்கறா?" என்று அவனது பாட்டி ஆச்சர்யப்பட,



"பக்கத்துல தானே தீர்த்தம் இருக்கு.. எடுத்துக் குடியேன் டா" என்று அவனது அம்மா சொல்ல, "யாரா இருக்கும்?" என்று சத்தமாக யோசித்தான் அவன்.
 

Author: SudhaSri
Article Title: நான் போடுற கோட்டுக்குள்ளே -1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom