• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தொட்டுத் தொடரும் -24

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
300
தொட்டுத் தொடரும் -24
நாறு நறும் பொழில் மாலிருஞ் சோலை நம்பிக்கு நான்

நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்

நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்

ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ!

(*அண்ணன் தங்கை பாசம்)



"அபி! கன்ட்ரோல் யுவர் செல்ஃப்! வத்ஸன், இப்போ தான் வந்து இருக்கான். நிதானமா பேசலாம். நீயே டென்ஷன் ஆனா நாங்க எல்லாம் என்ன பண்றது? இப்போ கிளம்புங்க எல்லாரும். நிதி பசங்களை விட்டு வந்து கிட்டத்தட்ட ஃபோர் ஹவர்ஸ் ஆகப்போகுது. பசங்க பசில இருப்பாங்க. இரண்டு நாள் கழிச்சு நாம இந்த விஷயங்களைப் பேசலாம்.



வத்ஸ்! என்ன அப்படியே உட்கார்ந்து இருக்க? எழுந்திரு. உன் லக்கேஜ் எல்லாம் தூக்கிட்டு வந்த எனக்கு தனியா ஏதாவது ஸ்பெஷல் கிஃப்ட் வேணும் சொல்லிட்டேன். வீட்டுல போய் நல்லா ஹாட் வாட்டர் பாத் எடுத்தா தான் உடம்பு வலி எல்லாம் போகும் போல. கெட் அப் மேன்! இவன் ஒருத்தன் ஆ ஊன்னா சிலை மாதிரி உட்கார்ந்திடுவான்



கவி! நிதி! இரண்டு பேரும் தயவு செய்து ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வந்திடுங்கம்மா. பார்க்க முடியலை. எனக்கே பயம்மா இருக்கு. குட்டிப் பசங்க பார்த்தா, எங்க அம்மா எங்கேன்னு கேட்டுருவாங்க.



நேத்து ராத்திரில இருந்து தூக்கமே இல்லை. சோ, நான் டிரைவ் பண்ண மாட்டேன். அப்படி நான் தான் ஓட்டணும்னா, யார் உயிருக்கும் நான் உத்தரவாதம் இல்லை" ஆளுக்கொரு அட்வைஸ் கொடுத்து அனைவரையும் கிளப்பிய சரண், முதல் ஆளாக காரில் பின் சீட்டில் போய் அமர்ந்து கொண்டான்.



அனைவருமே வீடு வந்து சேர, பேரனைப் பார்க்கும் ஆர்வத்தில், தங்கள் யாத்திரையைப் பாதியில் முடித்துத் திரும்பி இருந்த ஸ்ரீதரனின் தாயும் தந்தையும், அவனை ஆரவாரத்துடன் வரவேற்றனர். பாட்டி முதலில் வந்து ஆரத்தி எடுக்க, கௌசல்யா அதை வாங்கி மகனது நெற்றியில் திலகமிட்டு வரவேற்றார். ஆரம்பம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. போகப் போக பார்ப்போம்!!



வீட்டினுள் நுழைந்த மாமனுக்கு தங்களது இருப்பை உணர்த்தும் வகையில் அறையில் இருந்தே குரல் கொடுத்தார்கள், அவனது மருமக்கள் இருவரும்.



"டேய் மாமா! என்ன ப்ரோகிராம் வச்சிருக்கியோ, எத்தனை நாள் ஜெட் லேக்னு தூங்குவியோ எனக்குத் தெரியாது. என் பசங்க இரண்டு பேருக்கும் இன்னும் ஒரு வாரத்தில மாமனா லட்சணமா முறையா பேரை வச்சு எங்க வீட்டுல கொண்டு வந்து விடற.



பெர்த் சர்ட்டிபிகேட்ல எல்லாம் பேர் பிரிண்ட் பண்ணியாச்சு. இன்னும் கூப்பிட முடியாமல் இருக்குடா. நல்ல வேளை டா, நான் கூட அவங்க பேச ஆரம்பிச்சு எங்க பேரென்னன்னு கேட்டதுக்கு அப்புறம் தான் பேர் வைப்போம்னு நினைச்சேன். மூணு மாசத்துல வந்து சேர்ந்துட்ட" என்று மச்சானை ஓட்டினான் அபிமன்யு.



"என்னடா சொல்ற? ஃபங்ஷன் எல்லாம் வைச்சீங்களே?" என்று தனது அதிர்ச்சியை அதிக டெசிபெல்லில் காட்டினான் வத்ஸன்.



"அதை ஏன் டா கேட்கிற? தொட்டிலில் போட்டதுக்கு அப்புறம் மாமா தான் பேர் வைக்கணும்னு வந்தவங்கள்ல இரண்டு திடீர் அறிவாளிகள் சொல்ல, சரண் மாமா ஸ்தானத்தில் உட்கார ரெடியாக" என்று ஆரம்பித்த அபியை நிறுத்தி,



"உன் அருமை தங்கச்சி என்னைக்காவது என்னை அண்ணான்னு கூப்பிடவாவது செஞ்சிருக்காளா? எங்க அண்ணன் வந்து தான் பேர் வைக்கணும்னு ஒரே அழுகை. பசங்களே மாமாக்கு வெயிட் பண்றோம், தயவு செஞ்சு அழாதம்மா, பார்க்க முடியலைன்னு கெஞ்சினதுக்கு அப்புறம் தான் நிறுத்தினா. இல்லேன்னா, இன்னோரு வரலாறு காணாத வெள்ளத்தைச் சென்னை சந்திச்சிருக்கும்" என்று சரண் நிதியை ஓட்டினான்.



அதற்குள் குழந்தைகளை ஹாலுக்கு அழைத்து வந்திருந்த நிதி, சரணைத் துரத்தித் துரத்தி அடிக்க, பல வருடங்கள் கடந்து ஏற்பட்ட சந்திப்பில், ஒரு சந்தோஷ அலை பொங்கி நண்பர்களை முழுவதுமாக நனைத்தது. அனைவருமே அந்த நிமிட சந்தோஷத்தைக் கண் மூடி அனுபவித்தனர்.



வழக்கம் போலவே அபிமன்யுவின் இளவரசி எல்லோரையும் பார்த்த உற்சாகத்தில், யாராவது என்னைக் கவனியுங்கள் என்று நன்றாகவே குரல் கொடுத்தாள். அவளது உடன் பிறந்தவனோ அவ்வளவு எனர்ஜியை வேஸ்ட் செய்யாமல், ஒரு மோகனப் புன்னகை வீசி அனைவரையும் மயக்கினான்.



"வத்ஸ்! பார்த்தியா இது தான் அக்மார்க் ஜூனியர்ஸ். மேனரிசத்தில கூட, அப்படியே குட்டி அபியும் நிதியும் தான். நல்லா ட்ரைனிங் கொடுத்து இருக்காங்க டா. எனக்கும் இரண்டு பிறந்திருக்கே, ஒன்னாவது என்னை மாதிரி இருக்கா" என்று அத்தையாக மருமக்களைக் கொஞ்சுவதில் கவனமான ராகவி,



"நல்ல வேளை. என்னால ஒரு கவியைத் தான் சமாளிக்க முடியும்" என்று முணுமுணுத்த சரணைக் கவனிக்கவில்லை. அதைக் கேட்டுவிட்ட வத்ஸனோ, மனம் விட்டுச் சிரித்தபடி அவனுக்கு ஹை-ஃபை கொடுத்தான். இப்படியாகச் சுற்றிலும் நண்பர்கள் கலகலத்துக் கொண்டிருக்க ஸ்ரீவத்ஸனோ தங்கையின் குழந்தைகளுடன் ஒன்றிப் போயிருந்தான்.



சரணும் ராகவியும் அடுத்த சந்திப்பு பற்றி ஃபோன் செய்வதாகக் கூறி விடைபெற்றுக் கிளம்ப, வீட்டில் இருந்தவர்கள், என்ன பேசுவது என்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தனர். அன்று அதிகாலை நான்கு மணியளவில் வீடு வந்து சேர்ந்த ஸ்ரீதரனின் தாயும் தந்தையும் மகன் தங்கள் அறையில் உறங்குவதையும், மருமகளிடம் பேசவே இல்லை என்பதையும் கண்டு குழப்பம் அடைந்தனர்.



அவரது பிடிவாத குணத்தை ஆரம்பம் முதலே அறிந்திருந்தாலும், கௌசல்யாவின் அழகும் பாட்டு, நடனம், வீட்டில் எதையும் நேர்த்தியாகப் பராமரிப்பது என்று அவர்கள் குடும்பத்தில் யாருக்கும் இல்லாத திறமைகள் பலவும் அவரிடம் இருந்ததே, ஸ்ரீதரனின் தாயை உடன் பிறந்தவரிடம், மகனுக்காகப் பெண் கேட்க வைத்தது. குறிப்பாக கௌசல்யா தங்கள் தாயின் சாயலில் இருந்ததும் காரணம்.



மகனது வேலை காரணமாக ஊர் ஊராக அலைய வேண்டியது இருக்கும், மகனால் வீட்டு வேலைகளிலோ பிள்ளை வளர்ப்பிலோ உதவ முடியாது என்பது எல்லாம் தெரிந்த போதும், எல்லாத் தாய்மார்களுக்கும் உள்ள நினைப்பாக, மகனது சாப்பாட்டுப் பிரச்சினை கௌசல்யா போன்ற ஒரு பெண்ணால் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கையில் திருமணம் நடைபெற்றது.



அதிகம் படித்திராத கௌசல்யாவைப் பற்றியோ, அவர் எப்படிப் பல ஊர்களில் கணவனது உதவியின்றி குடும்பத்தில் எல்லாவற்றையும் நடத்திச் செல்ல முடியும் என்பதை யாரும் யோசிக்கவே இல்லை. பெண்ணைப் பெற்றவர்களே யோசிக்காத போது, மற்றவருக்கு என்ன அக்கறை.



கௌசல்யா, அவரது பதினெட்டாவது வயதில் நடந்த அந்த திருமணத்திற்கு, சற்றுத் தயங்கித் தான் ஒத்துக் கொண்டார் என்றாலும் திருமணத்திற்குப் பின்னான வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தார் என்பதைப் பெரியவர்கள் அறிவார்கள். ஆரம்பத்தில் மாமல்லபுரத்தில் இருந்த சில வருடங்கள் வசந்த காலங்களாகவே இருந்தன.



கல்கியைக் கரைத்துக் குடித்து இருந்த கௌசல்யா, நாட்டியத்திலும் சிறந்து விளங்கியதால் சிவகாமியாகவே தன்னை உணர்ந்தார். கணவனது ஆதரவும் இருந்ததால், நாட்டியப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து கொண்டு இருந்தார். அதனை அன்னையிடமும் மாமியாரிடமும் கூட சிலாகித்துப் பேசி இருக்கிறார்.



ஆனால் அதற்கான எதிரொலி முற்றிலும் வேறாகிப் போனதில், அவரது வாழ்வும் திசை மாறிப் போனது. திருமணமாகி மூன்று ஆண்டுகளாகியும், குழந்தையின்மையைக் காரணம் காட்டி பெரியவர்கள், அவரது கலை ஆர்வத்திற்கு மூடுவிழா நடத்தும் வேலையில் ஈடுபட்டார்கள்.



குறிப்பாக கௌசல்யாவின் தாய்க்கு தனது மாமியாரின் உருவத்தைச் சிறிதாக்கி வைத்தது போலவே அழகுச் சிலையாக இருக்கும் மூத்த மகளைக் கண்டால் சிறு பிராயத்தில் இருந்தே பிடிக்காமல் போய்விட்டது. "என்ன பெத்த ராசாத்தி" என்று கணவர் கொஞ்சும் போதெல்லாம் மகளை அடித்து ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வார்.



மகளின் அழகையும் திறமையும் கண்டு பாராட்டாமல் அவரது உருவில் தனது மாமியாரைக் கண்டு வெறுக்க ஆரம்பித்தார். அதற்கு தூபம் போட்டாற் போல் மற்ற குழந்தைகள் நன்றாகப் படிக்க, இவரோ படிப்பைத் தவிர மற்ற எல்லா கலைகளிலும் தேர்ச்சி பெற்றார்.



அதையே காரணமாக வைத்து, பதினெட்டே வயதில் திருமணம் செய்து மகளைத் தனது கண் பார்வையில் இருந்து அகற்றி விட்டார். ஆனாலும் மகளின் மீதும் அவளது திறமைகள் மீதும் ஜென்ம விரோதியைப் போன்று வெறுப்பை வளர்த்துக் கொண்டார்.



தாய் அப்படி என்றால், உடன்பிறந்த தங்கையும் மற்ற சக வயது உறவினரும், அவரது அழகும் திறமையும் கண்டு பொறாமைப் பட்டாலும் படிப்பு வராத கௌசல்யாவை விட மிக நன்றாகப் படிக்கும் தாங்கள் தான் மேல் என்று இதுவரை காண்பித்து கொண்டு இருந்தார்கள். இப்போது ஸ்ரீதரனின் உதவியுடன் கௌசல்யா முன்னேறி விடுவாரோ என்று அதற்கான தடைகளை உருவாக்க ஆவன செய்தார்கள், அதாவது தங்களால் இயன்ற அளவு பெரியவர்களைத் தூண்டினார்கள்.



ஆரம்பத்தில் அவரது கலையைப் பாராட்டி ஊக்குவித்த ஸ்ரீதரன் குழந்தையைப் பற்றிய பேச்சுகள் அனைத்திலும் பார்வையாளராக மட்டுமே இருந்ததில் மனம் விட்டுப் போன கௌசல்யா, முற்றிலும் வேறு அவதாரம் எடுத்து விட்டார். ஸ்ரீவத்ஸன் பிறந்த பிறகு கிடைத்த பதவி உயர்வால் ஸ்ரீதரன், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பணி செய்ய நேர்ந்தது. ஆரம்ப காலங்களில் கௌசல்யா, பாஷை தெரியாமல் மிகவும் சிரமப்பட்டுப் போனார். அவரது இயல்பான வைராக்கியம் அனைத்தையும் கற்றுக் கொள்ள வைத்தது. எழுதப் படிக்கத் தெரியாவிட்டாலும் பல மொழிகளையும் பேசக் கற்றுக் கொண்டார்.



ஸ்ரீதரன் பணியில் இடைவிடாது உழைக்க நேரிட, கௌசல்யா அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிப் போனார். தன்னந்தனியாக குழந்தை வளர்ப்பிலும், குடும்பப் பராமரிப்பிலும் சமாளிக்க நேர்ந்த விஷயங்கள் அவரது பிடிவாதத்தை வளர்த்து தற்போதைய நிலையில் கொண்டு நிறுத்தி இருக்கின்றன.



"எவ்வளவு தங்கமான மருமக வாய்ச்சா எனக்கு. இப்படி ஆகிட்டாளே இப்போ? யாரைக் குத்தம் சொல்லி என்ன ஆகப் போகுது?" கடந்த காலத்தைப் பகிர்ந்து கொண்ட பாட்டியின் ஆதங்கம் நிறைந்த புலம்பல்களைக் கேட்ட, அபி, நிதி மற்றும் வத்ஸனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.



"எல்லாம் சரியாகிடும் பாட்டி. நீங்க போய் கொஞ்சம் நேரம் படுங்க. அப்புறம் பேசலாம்" என்று பாட்டி தாத்தாவை அவர்களின் அறைக்கு அனுப்பி வைத்தனர். ஸ்ரீதரன் தான் பெற்றோரைக் கண்டதும், விருந்தினர் அறைக்குத் தனது ஜாகையை மாற்றி இருந்தாரே.



இரண்டு நாட்கள் கழித்து, ஸ்ரீவத்ஸனின் அறையில் நண்பர்கள் அனைவரும் குழுமி இருந்தனர். அறை அலங்கோலமாக, வத்ஸன் வாங்கி வந்த பொருட்களால் நிரம்பி வழிந்தது. அனைவரும் உட்கார வழி செய்து கொண்டு,



"ஓகே அபி. ஸ்டார்ட் மியூசிக். நோ நோ.. இப்படி சொல்லணுமோ? கன்டிநியூ யுவர் மியூசிக். ஏன்னா விட்ட இடத்திலிருந்து தானே ஆரம்பிக்கப் போற. புதுசா இல்லையே? வத்ஸன் பி ரெடி" என்ற ராகவிக்கு ஹை-ஃபை கொடுத்தான் ஸ்ரீவத்ஸன்.



பேசிக்கொண்டே அறையைச் சுற்றிப் பார்த்த அனைவரும் அதிர்ந்து போனார்கள். "டேய்! இத்தனையும் நீ கொண்டு வந்த பொட்டிலயா இருந்தது. டாக்டருக்கு இரண்டாவது தொழில் ஒன்னு கைவசம் இருக்கு போலடா"



"அபி! உன் ஃபேக்டரிக்கு பேக்கர்ஸ் தேவைப்பட்டா மச்சானை அணுகவும். எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை" என்று விளம்பர தொனியில் சொல்லி, அவன் காலை வாரினான் சரண்.



"போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ்னு இருக்கிற போஸ்ட் எல்லாம், பேக்கிங் மேனேஜர், ஜெனரல் மேனேஜர்னு மாத்திடறேன். எனக்கு செலவும் மிச்சம், நல்ல லாபம் பார்க்கலாம். எதுக்கு இவங்கள எல்லாம் மேனேஜ்மென்ட்டுக்குள்ள கொண்டு வரணும்நு நினக்கணும்? அப்புறம் நாம அவஸ்தைப் படணும்?" என்ற அபிமன்யுவின் குரலில் காரம் ஏறிக் கொண்டே போனது.



"ஹேய் ஹேய் கூல் மேன் கூல்! நான் ஏதோ பேசப் போக நீ என்ன, வர வர நீ சரியே இல்லை அபி. இன்னையோட இந்த பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும். வி வாண்ட் அவர் ஒரிஜினல் அபிமன்யு பேக். இப்படி மனசுக்குள்ள வச்சுட்டு புழுங்கி, கிட்டத்தட்ட ஆறு மாசமா நீ சரியில்லை. ராதாம்மா என்னை விசாரணை செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. என்ன தான் நடக்குது?" சரண் அபிமன்யுவைப் பேசத் தூண்டினான்.



"அதுக்கு முன்னாடி எனக்கு அந்த ஸ்ரீராமோட ஜாதகம் வேணும்" என்றான் வத்ஸன். "இவன் ஒருத்தன், விட்டுத் தள்ளேன்டா. அவன் கதை இனிமேல் நமக்கு எதுக்கு?" என்றாள் கவி.



"இல்லை கவி, எனக்கு நிதி வாயால நடந்தது என்னன்னு தெரியணும். இது அவன் கதைய தெரிஞ்சுக்கிறதுக்காக இல்லை, என் தங்கையும் அவ ஹஸ்பண்டும் இனிமேலாவது ரிலாக்ஸ்ட் மைன்ட்டோட இருக்கணும் அதுக்காகத்தான்.



கமான் நிதி, அம்மா உன் கல்யாணத்த பத்தி உன் கிட்ட பேசியதுல இருந்து இப்போ வரை உன்னோட இன்னர் ஃபீலிங் எப்படி இருக்குன்னு எனக்குத் தெரியணும், ஒரு அண்ணனா, நோட் திஸ் பாயிண்ட் ஒரு அண்ணனா"



அபிமன்யுவின் அருகில் அமர்ந்து அவனது கைகளோடு தனது கைகளை இணைத்துக் கொண்ட நிதி, "அண்ணா! ரொம்ப நாள் நீ இதைக் கேட்கலையேன்னு நிறையவே ஃபீல் பண்ணி இருக்கேன். ஆனால், நீ கேட்கிற இந்த நிமிஷம், எனக்கு ஒன்னே ஒன்னு தான் சொல்லத் தோணுது. பழசை எல்லாம் நினைக்க எனக்கு இஷ்டமே இல்லை. அவன் செஞ்ச கிறுக்குத்தனத்தால தானோ என்னவோ, இப்போ நான் நல்ல குடும்பத்தில இருக்கேன்.



"நான் பட்டது எல்லாம் போதும்னு, கடவுள் எனக்கு நல்லதே செஞ்சு இருக்கார். ஐயாம் வெரி லக்கி டு ஹேவ் சச் நைஸ் பீப்பிள் அஸ் இன்-லாஸ் அன்ட் அப்ஃகோர்ஸ் வொன்டர்ஃபுல் ஹஸ்பண்ட் ஆல்ஸோ" என்று அபியைப் பார்த்துக் கண்ணடித்தாள்.



"என் ஹெல்த் கண்டிஷன்ஸ் தெரிஞ்சு தான் என்னைக் கல்யாணம் செஞ்சாங்க. ஆனாலும் இயல்பா வர ஆசையைக் கூட எனக்காக எல்லாரும் கன்ட்ரோல் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. இயற்கையா குழந்தை பிறக்க முடியாது, அதர்வைஸ் ஐ வாஸ் ஃபிட் டு பி எ மதர்‌.



அதனால் கொஞ்ச நாள் கழிச்சு ட்ரீட்மெண்ட்டுக்கு போலாம்னு தான் எல்லாரும் சொன்னாங்க. நான் தான் கல்யாணம் முடிஞ்ச உடனே, இம்மீடியட்டா ஐயூஐ, ஐவிஎஃப்னு கிரிஜா ஆன்ட்டி கிட்ட கேட்டேன். அவங்க அப்போதும் ஒரு வருஷம் கழிச்சு தான் செய்யணும்னு சொல்லிட்டாங்க. இப்போ டபுள் ஹேப்பினஸ் எனக்கு. வருத்தப்பட எதுவும் இல்லை



"நம்ம வீட்டுல அப்பாவுக்கு தெரியும். வேற யாருக்கும் தெரிய வேண்டியது இல்லைன்னு தான் நான் நினைக்கிறேன். அதனால, நீ என்னைப் பற்றி தேவை இல்லாமல் வருத்தப் படாதே. அம்மா,…" என்று இடைவெளி விட்டவள்,



"அவங்களுக்கு பிரச்சினை நாம இல்லை. அவங்க பிறந்த குடும்பமும் நம்ம அப்பாவும் தான். இதுல நாம என்ன தான் செய்ய முடியும்னு நினைக்கிற? சீக்கிரம் எங்க வீட்டுல கொண்டு போய் விடு. அது போதும் எனக்கு" சமாதானப் படுத்துகிறேன் பேர்வழி என்று அவனை வேதனைப் படுத்தினாள்.



"நிதிமா!" என்று தழுதழுத்தவனை, "சாரி அண்ணா! வந்து ரொம்பவே நாளாச்சு, எனக்கு வேற வழி தெரியலை" என்று அசடு வழிந்தாள். சுற்றி இருந்த அனைவரது கேலிச் சிரிப்பை எதிர் கொள்ள முடியாதவளாக அபியின் தோள்களில் முகத்தை மறைத்துக் கொண்டு, பழைய நிதியாக "பாரு அபி" என்று புகார் அளித்தாள்.



அவனோ, மனைவியை ரசித்தபடி புருவங்களை உயர்த்தி, "பார்த்துட்டே தானே இருக்கேன்" என்றான். இன்னும் வெட்கம் அடைந்தவள் மேலே பேசப் போக, அதற்குள் குழந்தைகள் தாயைத் தேட, நிதி அவர்களைக் கவனிக்கச் சென்றாள். "நான் இல்லாதப்போ, என்னைப் பத்தி எதுவும் பேசக் கூடாது" என்று அனைவருக்கும் ஓர் உத்தரவையும் போட்டுச் சென்றாள்.



சற்று நேரம் அனைவரும் வத்ஸன் வாங்கி வந்த பொருட்கள் அனைத்தையும் பிரித்து தனித் தனியாக பேக் செய்து வைத்தார்கள். பெரியவர்கள் பெயர் வைக்கும் விழாவிற்கு அடுத்த வாரத்தில் நாள் குறித்து இருக்க, அதற்குத் தேவையான பொருட்களை வாங்கத் திட்டம் போட்டனர். விழா அன்று மாலையே நிதி மற்றும் குழந்தைகளை அபியின் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக இருந்தது. திட்டமிடல் படலத்தை முடித்த பிறகு அங்கே அமைதி நிலவியது.



"என்ன அபி, எதுவும் பேசாமல் இருக்க?" என்று சரண் தான் பேச்சை ஆரம்பித்தான்.



"என்னத்த பேசி என்ன தான் செய்ய சரண்? அத்தை மாறணும்னு நாம மட்டும் நினைச்சா போதாது. இவனும்" என்று வத்ஸனைக் கை காட்டியவன் "குறிப்பா மாமாவும் அவங்களை அனுசரித்து நடக்கணும். எல்லா விஷயத்திலயும் அது நடக்குமா. இப்போ, இவன் அந்த ஜில் ஜில் ரமாமணிய கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சா கூட வெளியே சொல்ல மாட்டான். ஆனால் நான் என்ன சொல்றேன்னா அப்படி ஏதாவது ஷாக் கொடுத்தால் தான் காரியம் நடக்கும்.



அந்தப் பொண்ணு பாவம் டா வத்ஸ்! நல்ல பொண்ணு டா! உங்க மாமாவும் மாமியும் கூட நல்லவங்க தான். நீ கொஞ்சம் கன்ஸிடர் பண்ணலாம். தப்பில்லை." என்று ஆளாளுக்கு அட்வைஸ் மழையில் அவனை அடுத்த சில நிமிடங்கள் நனைத்தார்கள்.



திசை மாறிப் போன பேச்சை மீண்டும் பழைய நிலைக்கு திருப்பினான் அபிமன்யு. "உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? அத்தை, ஸ்ரீக்கு கல்யாணம் பண்ணனும்னு முடிவு செஞ்ச உடனே எங்க அம்மா கிட்ட ஏதோ காரணம் சொல்லி என் டீடெயில்ஸ் கேட்டு இருக்காங்க. ஜோசியர் சொன்னதை நம்பி பெயர்க்காரணம் சொல்லி என்னை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க"



"அப்புறம் ஏதேதோ ஆகி எங்க கல்யாணம் நடந்ததுல அவங்களுக்கு இஷ்டமே இல்லை. எப்போ என்ன சான்ஸ் கிடைக்கும்னு பாத்துட்டே இருந்திருக்காங்க"



"ஆறு மாசமா எனக்கு ஏதேதோ ஹின்ட் கொடுத்து குழப்பி விட்டு, பயமுறுத்தி, ரீசென்டா இரண்டு குழப்பம் மேஜரா பண்ணி இருக்காங்க, ஒன்னு எங்க ஆஃபீஸ்ல நின்று போன ஜிஎம் இன்டர்வியூ, இன்னோன்னு கமிஷனருக்கு அனுப்பிய கம்ப்ளைண்ட்."



"இதுக்கெல்லாம் காரணம்னு அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா?" என்று அனைவரையும் நிதானமாக ஒரு பார்வை பார்த்தவன்



"அந்த அறிவாளி சொன்ன ஜோசியத்தை இன்னமும் நம்பிட்டு இருக்காங்களாம். அதனால் என்னை வீடு, ஆஃபீஸ்னு கார்னர் பண்ணி மகளோட வாழ்க்கையை சேஃப்கார்ட் பண்றாங்களாம். எனக்கு ஏதாவது ஆனா கூட அவளால் எல்லாம் பாத்துக்க முடியுமாம்" என்று குரலில் விரக்தியுடன் பேசிக் கொண்டே போனவன், அறை வாசலில் ஏதோ உடையும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு திரும்பினான்.
 

Author: SudhaSri
Article Title: தொட்டுத் தொடரும் -24
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom