• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தொட்டுத் தொடரும் -21

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
300
தொட்டுத் தொடரும் -21
முந்தை நன்முறை அன்பு உடை மகளிர்* முறை முறை தம் தம் குறங்கிடை இருத்தி*

எந்தையே என்தன் குலப் பெருஞ் சுடரே* எழு முகிற் கணத்து எழில் கவர் ஏறே*

உந்தை யாவன் என்று உரைப்ப* நின் செங்கேழ்- விரலினும் கடைக்கண்ணினும் காட்ட

நந்தன் பெற்றனன் நல்வினை யில்லா* நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே

(*பெற்ற தாயினை மிஞ்சும் வளர்த்த தாயின் பாசம்)



ஸ்ரீவத்ஸன், தன்னைத் துரத்தும் கசப்பான நினைவுகளில் இருந்து கவனத்தைத் திருப்ப, தான் கொண்டு வந்த மருத்துவக் கோப்புகளில் கவனத்தைச் செலுத்த முயன்றான். முதலாவதாக இருந்த கோப்பைக் கையில் எடுத்தவன், தனது மருத்துவ நண்பரின் பெயரையும் அவரது தனிப்பட்ட குறிப்பையும் கண்டவுடன், அதிர்ந்து நோயாளியின் பெயரைப் பார்த்தான். பெண், வயது:50 என்ற விவரம் மட்டுமே இருக்க, இன்னும் குழப்பம் ஆனான். இந்த சிறிய விவரம் கூட தாயுடன் ஒத்துப் போகிறதே என்று வாடினான்



ஒரு வேளை தனது தாய் மருத்துவ உதவியை நாடும் அளவு பிரச்சினை ஆகிவிட்டதா? நேற்று தன்னை அழைத்த போது கூட எதுவும் சொல்லவில்லையே? அபிமன்யு எப்போதும் “நான் என் மாமியார் வீட்டுக்கு போறேன்” என்று இவனை வெறுப்பேற்றி விட்டுச் செல்பவன், இன்று அங்கே இருப்பதைக் கூட சொல்லவில்லை. ‘என்ன தான் நடக்கிறது அங்கே?’ என்று தலையைப் பிடித்துக் கொண்டான்.



“வத்ஸ், எப்போதுமே குழப்பமா இருக்கும் போது இன்னும் குழப்பம் தரும்னு நல்லா தெரியற விஷயங்களை யோசிக்கவே கூடாது. கண்ணை மூடி அமைதியா தூங்க முயற்சி பண்ணனும்” என்று ராதாவின் குரல் காதோரம் ஒலிப்பது போல் இருந்தது. முதல் முறையாக ஸ்ரீவத்சன் தனது தாயையும் மற்றவர்களையும் அதாவது நண்பர்களின் தாய்மார்களையும் ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்தான். ஜீன்ஸ் அதாவது பாரம்பரியம், வளர்ந்த விதம், வளர்க்கும் விதம், சூழ்நிலை இவை எல்லாம் மருத்துவ ரீதியாக ஒரு மனிதனை உருவாக்குவதில் பங்கு வகிக்கும் முக்கிய அம்சங்கள் எனக் கருதப் படுபவை..



ஆனால், இவை மட்டுமே காரணம் என்றால் அபிமன்யுவின் தாய் ராதா கௌசல்யாவை விட மோசமாக இருந்திருக்க வேண்டும். சரணின் தாய் கிரிஜா கூட இந்த அளவு வளர்ந்து இருக்க வாய்ப்பே இல்லை. இவர்கள் இருவரது இளமைப் பருவமும் கௌசல்யாவைக் காட்டிலும் கொடுமையானது.



எல்லாவற்றையும் தாண்டி தன்னம்பிக்கை, சுய கட்டுப்பாடு, சுய ஒழுக்கம், தெளிவான சிந்தனைகள் என்பதெல்லாம் கூட தனி மனிதனை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதற்கு ராதா ஒரு பெரிய எடுத்துக்காட்டு என்பது மறுக்க முடியாத உண்மை.



கிரிஜா சிறுவயதிலேயே தாயை இழந்தவர். பெரும் பணக்காரரின் ஒரே வாரிசு என்று, நோயாளியான அவரைக் கைப் பிடித்த தந்தை. மனைவி இறந்த பின்னரே அந்த சொத்துக்கள் தனக்கு வராது என்று தெரிந்து கொண்டு, சில மாதங்களிலேயே வேறு மணம் செய்து கொண்டார். பிள்ளை, தாத்தா பாட்டியிடம் வளரத் தனக்கு ஆட்சேபணை இல்லை என்று பேரம் பேசி அதற்கும் ஒரு தொகையைப் பெற்றுக் கொண்டு எழுதிக் கொடுத்த நல்ல மனிதர் அவர்(?!)



அதனால் கிரிஜா முழுமையாக, தாயைப் பெற்ற பாட்டி தாத்தாவின் அரவணைப்பில் தான் வளர்ந்தார். வசதி வாய்ப்புகள் இருந்திருக்கலாம். பெரியவர்கள் பாசத்தை பொழிந்து இருக்கலாம். ஆனால் தாய் இல்லை, தந்தை இருந்தும் இல்லை என்பது எத்தனை கொடுமையானது. ஆனாலும், நல்ல மனிதராகத் தானே தன்னைச் செதுக்கி இருக்கிறார்.



ராதாவின் நிலையோ வேறு மாதிரியானது, யாரும் நினைத்துக் கூடப் பாராதது. இவர்கள் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த காலத்தில் ராதாவின் தாயார் இறந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அனைவரும் ஊருக்குச் சென்றனர். பலவகையான புலம்பல்கள் தான் அவர்களை வரவேற்றன. அனைவரும் அறிந்த வகையில் ராதா வீட்டிற்கு ஒற்றைப் பெண். உடன் பிறந்தவர்கள் என்று யாரும் கிடையாது.



“ம்ஹும். ஒன்னும் சொல்றதுக்கு இல்லை பெத்த புள்ளையாட்டம் வளர்த்தாளே? கடைசி காலத்தில பக்கத்துல வச்சு பாத்துக்குவோம்னு தோணிச்சா? கொள்ளி போடக் கூட ஆள் தேட வேண்டிய நிலமை இப்போ. எடுத்தது தான் எடுத்தா.. ஒரு ஆம்பிளை பிள்ளையை எடுத்து இருந்தா அந்த கொடுப்பினையாவது கிடைச்சிருக்கும்” என்ற இறந்தவரது அக்காவின் புலம்பல்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி அளித்தது.



“என்ன தான் இருந்தாலும் வளர்த்தது தானே. பெத்தவங்களைப் பத்தி ஏதாவது தெரிஞ்சிருந்தா, பாசம் பந்தம் இப்படி ஏதாவது இருந்திருக்கும். இது அனாதை இல்லத்தில இருந்து வந்தது தானே. அதான், கல்யாணத்த பண்ணி விட்டதும் சந்தோஷமா கிளம்பிடுச்சு. என் பிள்ளையில ஒன்னை எடுத்துக்கோன்னு சொன்னேன். கேட்டாளா?” இது இறந்தவரது தங்கையின் புலம்பல். அக்காளின் சொத்தெல்லாம் யாருக்கோ செல்கிறதே என்று வயிறு எரிந்ததில் வந்த வார்த்தைகள்.



ராதா அழுகையை அடக்க முடியாமல் கிருஷ்ணனின் தோளில் சாய்ந்து கதறிய காட்சி கண் முன்னே வந்து நின்றது. ராதாவுடன் வந்த அனைவரும் அந்த புலம்பல்களின் அர்த்தம் புரிந்து திகைத்து நின்றனர், அவரது பிள்ளைகளுக்கு கூட இதுவரை இந்த உண்மை தெரியாது. அப்படி ஒரு பாசப் பிணைப்பு இருந்தது அந்த மூதாட்டிக்கும் இவர்களுக்கும்.



மிகவும் கம்பீரமானவர், பார்ப்பவர் கையெடுத்துக் கும்பிடும் அளவு மரியாதையான தோற்றமும், நடத்தையும் கொண்டவர். கடைசி வரை தனது உழைப்பிலேயே வாழ்ந்து, யாருக்கும் ஒரு தொந்தரவும் இன்றித் தூக்கத்திலேயே உயிர் பிரிந்து இருந்தது. அபியும் கவியும் சிறு வயதாக இருக்கும் போதே ராதாவின் தந்தை இறந்து விட, அவர்கள் இருவரும் பாட்டியிடம் அவ்வளவு சீராடி இருக்கிறார்கள். அவரிடம் சரண் கூட, பேரனைப் போல சலுகைகள் பெற்று இருக்கிறான். அவர்களுக்கும் இப்போது தெரிந்த உண்மையை ஜீரணிக்க முடியவில்லை. எத்தனையோ முறை தங்களுடன் வரும் படி வற்புறுத்தியும், வராதவர் இன்று இப்படி ஒரு பேச்சை கேட்க வைத்து விட்டாரே என்று கிருஷ்ணனுக்குத் தோன்றாமல் இல்லை.



அதுவரையில் கம்பீரமான ராதாவையே பார்த்து இருந்த பிள்ளைகளுக்கு, அவரை அழ வைத்த அந்த சூழ்நிலை பிடிக்கவே இல்லை. சரண், “ராதாம்மா! யூ டோன்ட் வொர்ரி! இத்தனை பேரப் பசங்க இருக்கோம். பாட்டிக்கு நாங்க எல்லாம் செய்யறோம். நீங்க அழவே கூடாது. இப்படி இருந்தா பாட்டிக்குப் பிடிக்கவே பிடிக்காது, தெரியுமில்ல?” என்ற தனது அதட்டல் பேச்சினால் நிலைமையை சகஜமாக்கி, காரியங்களை ஆரம்பிக்க பிள்ளையார் சுழி போட்டான். அவனுமே ராதாவின் கம்பீரம், தன்னம்பிக்கை எல்லாம் அவரது தாயிடம் இருந்து வந்தது என்று நினைத்து இருக்கிறான். பெறாவிட்டால் என்ன, இவையெல்லாம் ராதாவிற்கு வர, கண்டிப்பாக அவரது வளர்ப்பும் ஒரு காரணம் என்பதை யாராலும் மறுக்க இயலாது.



அங்கே நடந்த காட்சிகளில் கௌசல்யாவும் அதிர்ந்து போய் நின்றாலும், அவருக்குள் ஏதாவது மாற்றம் நிகழ்ந்ததா என்பது இன்னமும் புரியாத புதிர் தான். ஆனால், அந்த நிகழ்ச்சியின் பிறகு ராதாவின் முழு கதையையும் அவரது வாயாலேயே கேட்டு இன்னமும் ஒடுங்கித் தான் போனார் என்று ஸ்ரீவத்ஸன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.



தாயின் மனநிலையைச் சரிப்படுத்த நிச்சயமாக ராதா மற்றும் கிரிஜாவைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்ட, ஸ்ரீவத்ஸனின் கைகள் அதன் போக்கில் கோப்பின் பக்கங்களைத் திருப்பிக் கொண்டு இருக்க, மனமோ அலை பாய்ந்து கொண்டு இருந்தது. இன்னும் ஒரு சில விஷயங்களை குடும்பத்தினர் தன்னிடம் மறைத்து இருக்கின்றனர் என்றும் அவன் அறிவான்.அதில் முக்கியமான ஒன்று, ஸ்ரீநிதியின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள்.



மேற்படிப்பை பற்றி யோசனைகளிலேயே இருந்த ஸ்ரீவத்ஸன், கௌசல்யா சற்றும் யோசிக்காமல், கவியைப் பெண் கேட்டு விடுவார் என்று நினைத்தும் பார்த்ததில்லை. பல விளக்கங்களுக்குப் பின்னும், புரிந்து கொள்ள மறுக்கும் தாயிடம் சொல்லிப் புரிய வைப்பது கஷ்டம் என்று உணர்ந்தவன் சட்டென்று முடிவெடுத்தான்.



எடுத்த முடிவுகளில் மிகவும் தெளிவாக இருந்தான். அவனது முடிவால், அவனது தங்கையின் வாழ்வும் புயலில் சிக்கிய காத்தாடி போல் ஆகப் போவதை அவன் அப்போது அறியவில்லை.



ஸ்ரீநிதி அப்போது லண்டனில் தனது மேற்படிப்பைத் தொடர்ந்து கொண்டு இருந்தாள். மனநலம் சார்ந்த துறைகளைத் தேர்வு செய்து இருந்தாலும், அவளது குறிக்கோள் ராதாவைப் போல பேராசிரியராக வேண்டும் என்பதாகவே இருந்தது.



அவள் லண்டன் செல்லும் முன்பே திருமணம் முடித்து விடவேண்டும் என்று முயன்ற கௌசல்யாவின் முயற்சிகளை முறியடித்துச் சென்று இருந்தாள் அவரது மகள். இப்போது வசதியாகிப் போனது அவருக்கு, மகளுக்கு மாப்பிள்ளை தேடும் படலத்தை தொடங்கினார். என்ன நினைத்துத் தேடினாரோ, அவர் பார்த்த மாப்பிள்ளை அபிமன்யு இருந்த அதே இத்தாலியில் இருந்தான்.



கிருஷ்ணன் தம்பதிகளுக்கு ஸ்ரீநிதியை மருமகளாக்கிக் கொள்ளும் எண்ணம் இருந்தாலும், படிக்கின்ற பெண்ணைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்தனர். அபியின் எண்ணமும் இந்தியாவில் தொழில் தொடங்கிய பின்னரே தனது திருமணத்தைப் பற்றி யோசிக்க வேண்டும் என்பதாக இருந்ததால், மகளது திருமண நிச்சயத்தை மட்டும் அவள் மேற்படிப்பை தொடங்கும் முன் முடித்து விட எண்ணினார் கிருஷ்ணன். படிப்பினூடே திருமணத்தை நடத்தி விடலாம் என்று முடிவு செய்தார்கள்.



விதியின் சதியா இல்லை கௌசல்யா திட்டமிட்டுச் செய்த சதியா தெரியவில்லை. ஒரே நாளில், ஒரே நேரத்தில் சரண்- ராகவி, ஸ்ரீநிதி - ஸ்ரீராம் ஆகிய இரு ஜோடிகளின் நிச்சயதார்த்தம் சென்னையின் இரு வேறு இடங்களில் நடைபெற்றது. அதில் அனைவரும் ஒரு விதத்தில் மகிழ்ந்தாலும், வேண்டும் என்றே தான் கௌசல்யா அதே நாளைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்றே நம்பினார்கள்.



ஒரேயொரு வித்தியாசமாக முதலாவது நிச்சயம் கோலாகலமாகவும், மற்றது ஏனோதானோ என்று உற்சாகம் இல்லாமலும் நடைபெற்றது. கௌசல்யா தேர்ந்தெடுத்த மாப்பிள்ளை பெயரில் மட்டுமே ஸ்ரீராமாக இருந்து மகளது வாழ்வை மாற்றி அமைப்பான் என்று கனவிலும் நினைத்திருப்பாரா என்ன? டிடெக்டிவ் மூலமாக விசாரித்தவர்களால், மனிதனின் மனதில் இருந்த வக்கிரங்களைத் தெரிந்து கொள்ள முடியாமல் போனது.



அதன் பிறகு என்ன நடந்தது என்பதை அபிமன்யுவும் சரணுமே அறிவார்கள். வத்ஸனுக்குக் கூட மேலோட்டமான விவரங்கள் தான் சொல்லப்பட்டது. கண்டிப்பாக அபிமன்யு இனிமேல் அதைப் பற்றிப் பேச விரும்ப மாட்டான்; ஆனால், தாயின் மனநிலையை மாற்ற நிதியின் வாழ்க்கையில் நடந்த பிரச்சினைகளைக் கண்டிப்பாக வெளிக் கொணர வேண்டும்; சென்னை செல்லும் முன்பே சரணிடம் அந்த விவரங்களைக் கேட்டு விடவேண்டும் என்று நினைத்துக் கொண்டான், ஸ்ரீவத்ஸன்.



ஸ்ரீவத்ஸன் இதையெல்லாம் நினைத்துப் பார்த்த நேரத்தில் சம்பந்தப்பட்ட மேலும் இரு ஜீவன்களும் கூட தங்கள் மலரும் நினைவுகளில் மூழ்கி இருந்தன. டெல்லியை நோக்கிப் பயணித்துக் கொண்டு இருந்த சரணும், ராகவியும் தான் அது.

அபிமன்யுவின் தொழில்முறை நண்பரின் தனி விமானத்தில் வத்ஸனுடன் இருவரும் திரும்புவதாக முடிவு செய்யப்பட்டு அவசரமாக டெல்லிக்குச் சென்று கொண்டு இருந்தார்கள். ஸ்ரீவத்ஸன் மூலம் அவனுடன் விமானத்தில் வரும் கௌசல்யாவின் குடும்பத்தினரைப் பற்றி அறிந்து கொண்ட அபிமன்யு செய்த திடீர் ஏற்பாடு இது.



வத்ஸனது பயண திட்டப்படி டெல்லியில், சென்னை விமானத்திற்காக கிட்டத்தட்டதினைந்து மணிநேரம் காத்திருக்க வேண்டும். மீண்டும் ஒர் வார்த்தைப் போரை வத்ஸன் தாங்க மாட்டான் என்று நண்பர்களுக்குள் அவசரமாக முடிவு செய்து, ஸ்ரீவத்ஸனை டெல்லியில் இருந்து சீக்கிரமே அழைத்து வருவதற்காக இருவரும் சென்றனர். இவை எதுவும் ஸ்ரீவத்ஸன் இதுவரை அறியமாட்டான்.



இது போன்ற ஒரு விமானப் பயணத்தில் தான் சரண் அவனது மனதை ராகவியிடம் தெரியப் படுத்தினான், இருவருமே அடுத்தவர் மனதைப் புரிந்து கொண்டனர் என்பதே சரியாக இருக்கும். ஆகாயத்துல பறந்துட்டே ப்ரோபோஸ் பண்ணி இருக்காங்க.



அவர்களுக்கிடையே இருந்த நட்பு எப்போது காதலானது என்பது இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது. இப்போது நினைத்தாலும், அந்த விஷயம் அவர்களுக்கே ஆச்சரியம் கொடுத்தது. எப்போதும் உள்ள வழக்கமாகச் சரண், ராகவியின் கையை அழுந்தப் பற்றியபடி அமர்ந்து இருந்தான். இருவரது எண்ணமும் ஒரே புள்ளியில் சிந்திக்க ஆரம்பித்தது. தங்கள் காதலை உணர்ந்த தருணத்தை இரு மனங்களும் நினைத்துப் பார்க்கத் தயாராகின.



ராதாவின் தாயார் இறந்த போது, ஸ்ரீதரனின் குடும்பம் இரு நாட்களில் திரும்பிவிட, ராகவன் நெடுநாள் நண்பர்கள் என்ற முறையில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். இறந்த மூதாட்டி, கிரிஜாவையும் தாயைப் போல அரவணைத்தவர் என்பதால் அனைவருமே கர்ம சிரத்தையாக அவரது இறுதிக் காரியங்களை செய்து வந்தனர்.



அபிமன்யு நாலாம் ஆண்டு இன்ஜினியரிங் படிப்பை முடித்து பரீட்சைக்காகக் காத்திருக்க, மருத்துவம் படிக்கும் பிள்ளைகள் நெடுநாள் விடுப்பு எடுக்க வேண்டாம் என முடிவு செய்து, சரணையும், ராகவியையும் சென்னை அனுப்பினார்கள்.



ரயில்கள் எல்லாம் வெயிட் லிஸ்ட்டில் இருக்க, மதுரையில் இருந்து விமானத்தில் செல்வது என முடிவானது. விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த இருவரும், கைகோர்த்தே திரிந்ததில், அங்கிருந்த அனைவருக்கும் திருமணமான ஜோடியாகவே தெரிந்தனர்.



அதற்கு ஏற்றாற் போல் அருகருகே இருக்கைகள் இல்லை எனக் கிடைத்த பதிலில் டென்ஷனான ராகவி, கெஞ்சிக் கூத்தாடி பணம் போனாலும் பரவாயில்லை என்று ஆளில்லாத பிஸினஸ் கிளாஸில் அருகருகே இருக்கைகளை மாற்றிய பின்பே அமைதியானாள்.



"ஏ லூசு! மிஞ்சிப் போன ஒன் அவர். இங்க ஏறவதும் தெரியாது, அங்க இறங்குறதும் தெரியாது. இதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா பண்ணுவ? அவங்க எல்லாம் நம்மள என்னன்னு நினைச்சாங்களோ?" என்று தலையில் அடித்துக் கொண்டான். கண்ணில் தளும்பி நிற்கும் நீருடன் அவனைப் பார்த்தவள் அமைதியாக அமர்ந்து கொண்டாள்.



விமானம் பறக்க ஆரம்பித்த பின்னும் அவளது அமைதி தொடர, சரணால் தாங்கவே முடியவில்லை.அவளது கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டவன், "கவி! இங்க பாரு. கிட்டிஷா பிஹேவ் பண்றத எப்போ தான் விடுவ? எல்லோரும் நம்மள வித்தியாசமா பார்க்கிறாங்க. நார்மலா இருக்க ட்ரை பண்ணு" என்றான்.



"என்ன? என்ன வித்தியாசமா பார்க்கிறாங்க? நானும் நீயும் கல்யாணம் ஆனவங்கன்னா? நினைச்சா நினைச்சிட்டு போறாங்க. அதனால என்ன?" என்றவள், "இப்படி பண்ணாத, அப்படி இருக்காதன்னு வர வர என்னை ரொம்பவே கன்ட்ரோல் பண்ற நீ" என்று குறை படித்தாள்.



"நான் சொல்லாம வேற யார் சொல்லுவா?" என்று முணு முணுத்தவன், "அதனால என்ன கெட்டுப் போச்சு. மெச்சூர்டா பிகேவ் பண்ணுன்னு அபி கூட உன்னை அடிக்கடி சொல்லுவான். அவன் சொல்லலாம், நான் சொல்லக் கூடாதா?" என்று கேட்க, என்ன தான் சொல்வாள் அவள், திருதிருவென விழித்தாள்.



ஏற்கனவே ராகவி மீதான காதலை உணர்ந்து, அது அவனது பெற்றோருக்கும் தெரிந்து அவர்கள் பச்சைக் கொடியை வேகமாக ஆட்டிவிட்டதில் உற்சாகமாக இருந்தான் அவன். தனது மனதை உரைக்க சமயம் பார்த்து கொண்டு இருந்த போது தான், துக்க செய்தி வந்து அனைவரும் சென்றனர். இப்போது, சரியான தருணம் என்று நினைத்த அவன் உற்சாகமாகவே பேச்சை வளர்த்தான்."அது வந்து, அபி வேற நீ வேற புரிஞ்சுக்கோ, சரண். அதுவும் இல்லாமல், நீ என்னைக் குறை சொன்னா எனக்கு பிடிக்கலை" அவன் எதிர்பார்த்த பதிலையே வேறு விதமாகக் கூறிக் கொண்டு இருந்தாள் அவள்.



"ஆமா! ஆமா! அபி, உன் உடன் பிறப்பு. நான் ஜஸ்ட் ஃப்ரண்ட் தானே. நான் சொன்னால் பிடிக்கத் தான் செய்யாது"



"டேய்! கொன்னுடுவேன் உன்னை. அப்படியா சொன்னேன். நான் எது செய்தாலும் உனக்குப் பிடிக்கணும்னு செய்றேன். ஆனால் நீ, போடா!" என்று மிகவும் மரியாதையுடன் பேசியதில் ஒரு விரிந்த புன்னகையுடன் அவளையே பார்த்திருந்தான்.



அவளை நெருங்கி அமர்ந்து, தோளோடு அணைத்து நெற்றியில் முட்டியவன், "தேங்க் யூ மை டியர்" என்று கண் சிமிட்டினான். அவளும் தான் சொன்னதன் அர்த்தம் விளங்கியவளாய், வராத வெட்கத்தை "வா வா" என்று அழைத்து, அவனது தோளிலேயே முகத்தை மறைத்துக் கொண்டாள். சொல்லாமலே மனதை உணர்ந்து அதனைச் சரியாகப் பிரதிபலித்த இருவருக்கும், அதன் பிறகு, பேச வார்த்தைகளே கிடைக்கவே இல்லை. வீடு வந்து சேரும் வரை மௌனமே அங்கு ஆட்சி செய்தது.



விமானத்தில் திடீரென வந்த சில அறிவிப்புகளில் நினைவலைகளில் இருந்து வெளிவந்த ராகவி, ஏதோ ஞாபகம் வந்தவளாய்," சரண் நீ எப்போ எப்படி லவ் ஃபீல் பண்ணினேன்னு இன்னும் எங்கிட்ட சொல்லவே இல்லை. கல்யாணமும் முடிஞ்சு இதோ ஆறு வருஷம் ஆகப்போகுது. இன்னைக்கு இறங்குறதுக்குள்ள நீ சொல்லியே ஆகணும்" என்றாள்.



அவனோ ஒரு நமட்டுச் சிரிப்புடன் "கண்டிப்பா சொல்லிடறேன் டா! உன் கிட்ட சொல்லாமலா" என்றான். "மேம். மேக் யுவர் சீட் ஸ்டரைட்" என்று வந்து நின்ற பெண்ணைப் புரியாது பார்த்தவள் காதுகளில், விமானம் டெல்லியில் தரை இறங்குவதற்கான அறிவிப்பு ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி ஒலித்தது.



அவன் மனைவி மலையேறிவிட்டது தெரியாமலே, "மீ க்ரேட் எஸ்கேப் டுடே" என்றவாறு தரையிறங்கத் தயாரானான் சரண்.
 

Author: SudhaSri
Article Title: தொட்டுத் தொடரும் -21
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
197
😄😄😄😄😄சரண் ராகவிக்கு லைப் லாங் ஆயுள் கைதி இதுல இப்போ எஸ்கேப் 😄😄😄😄
 
Top Bottom