• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தலைவனின் தடுமாற்றம்! தத்தளிக்கும் குடும்பம்!

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
300
தலைவனின் தடுமாற்றம்! தத்தளிக்கும் குடும்பம்!


பெருந்தொற்று வேகமாகப் பரவிவரும் காரணத்தால் மறுபடியும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு செயல்படுத்தப்படுகிறது. நாளை கடைகள் இருக்காது என்ற நிலையில் நீங்கள் என்னென்ன பொருட்கள் வாங்குகிறீர்கள்? காய்கறி வாங்குவோம், பலசரக்கு வாங்குவோம், சில சமயங்களில் பால் பழங்கள், அவசர மருந்துகள் கூட வாங்கி வைத்துக் கொள்வோம்.

ஆனால் நம்மிடையே ஒரு தனியான இனம் இருக்கிறதே 'குடிமக்கள்' என்று. அவர்கள் என்ன செய்கிறார்கள்? ஞாயிறு தினத்திற்கான தங்கள் உற்சாக பானத்தை முந்தைய நாளே போய் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். கடந்த சில வாரங்களாக சனிக்கிழமைகளில் மது விற்பனை உச்சம் தொடுகிறது. 'அந்த ஒரு நாள் கூட அடிக்காமல் இருக்க முடியாதா?' என்ற பொது மக்கள் மற்றும் இல்லத்தரசிகளின் புலம்பல்கள் ஒருபுறமிருக்க, அவர்களால் இருக்க முடியாது என்பதுதான் முகத்தில் அறையும் நிஜம்.

ஏனென்றால் தினம் மது அருந்துவதற்குப் பழக்கப்பட்டவர்களின் உடல் அதை நோக்கியே காத்திருக்கும். உதாரணமாக தினமும் மாலை ஒரு ஆறு மணிக்கு ஒருவர் மது அருந்துகிறார் என்றால், ஆறு மணியை நெருங்கும்போதே அவரது உடலின் ஒவ்வொரு அணுவும் மதுவை எதிர்பார்த்தே இயங்கத் தொடங்கும். இல்லையென்றால் கை, கால் நடுக்கம், படபடப்பு, வியர்வை போன்றவை வந்து வாட்டும். இத்தகைய அறிகுறிகளுக்கு 'வித்ட்ராயல் சிம்ப்டம்ஸ்' (withdrawal symptoms) என்று பெயர்.

சென்ற வருடம் மார்ச் மாதத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு டாஸ்மாக்கும் அடைக்கப்பட்ட மூன்றாவது நாளில் ஒரு நோயாளி வந்தார். அவருக்கு மேற்சொன்ன அனைத்து அறிகுறிகளும் இருந்தன. கூடுதலாக மூச்சுத்திணறல் என்ற ஒரு வார்த்தையையும் சொன்னார். அப்போதுதான் கொரோனா வந்தால் மூச்சுத்திணறல் வரும் என்ற விஷயம் மருத்துவத்துறை ஊழியர்களுக்கு அறிமுகமாகியிருந்த ஒன்று. அதனால் அவரை கொரோனா நோயாளியாக இருப்பாரோ என்ற பதட்டத்துடனே அணுகினார்கள். மெதுவே அவரைப் பற்றி விசாரித்து, அறிகுறிகளையும் கேட்ட போது, "மெக்கானிக் கடையில் வேலை பார்த்தேன். அன்னன்னைக்கு குடுக்குற சம்பளத்தை வாங்கி சாப்பிட்டு தண்ணி அடிச்சிட்டு கடையிலேயே படுத்துக்குவேன். இப்ப கடையடைப்புன்னதும் முதலாளி ஐநூறு ரூபாயைக் குடுத்து அனுப்பிட்டார். வீட்ல ஏற்கனவே சண்டை. துரத்தி விட்டுட்டாங்க. இருந்த 500 ரூபாய்க்கும் சரக்கு வாங்கித் தொடர்ச்சியா அடிச்சேன். அதுக்கப்புறம் கையில் காசு இல்லாததால இரண்டு நாளாக சாப்பிடலை, சரக்கும் அடிக்கல" என்றார்.

"உங்களுக்கு வந்திருக்கிறது குடிநோய் தான். வேறு எந்த நோயும் இல்லை" என்று கூறி மருத்துவமனையில் அனுமதித்தோம். மருத்துவமனையில் கிடைக்கும் இலவச உணவுக்காகவே எத்தனை நாள் வேண்டுமானாலும் அங்கேயே இருக்கத் தயாராகவே இருந்தார். மது போதை அடிமைத்தனத்தில் இருந்து விடுபட அவருக்கு ஊசிமருந்து சிகிச்சைகள் வழங்கப்பட்டன. அதன்பின் என்ன நினைத்தாரோ திடீரென்று மருத்துவமனையிலிருந்து பாதி சிகிச்சையில் சென்று விட்டார்.

தினமும் மது அருந்தும் பழக்கம் வைத்திருப்பவர்கள் நிறைய பேரை அதுவரை தினந்தோறும் சந்தித்திருந்ததால், "இனிமேல் தினமும் இப்படி நிறைய பேர் வித்ட்ராயல் சிம்ப்டம்ஸோட வருவாங்க.. டாஸ்மாக்கை அடைச்சுட்டாங்களே!" என்று எங்களுக்குள் பேசி வைத்துக் காத்திருந்தோம். ஆனால் அந்த ஒருவரைத் தவிர வேறு ஒரு குடிநோயாளி கூட வரவில்லை.

'நாம தான் தப்பு கணக்குப் போட்டோமோ.. நம்ம மக்கள் இதுவரை அளவாத் தான் குடிச்சாங்க போல!' என்று குழம்பிப் போனோம். அதன் பின் தான் தெரிந்தது, டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டாலும் கருப்பு மார்க்கெட்டில் மது வகைகள் கிடைக்கவே செய்திருக்கின்றன. கூலித் தொழிலாளிகளுக்கு அன்றாடம் கூலி கிடைக்கவில்லை என்றாலும் கூட மனைவி மக்களின் நகைகள், வீட்டில் இருந்த பொருட்கள், பத்திரங்கள், ரேஷன் கார்டு, லைசன்ஸ், நிவாரணப பொருட்கள் அனைத்தும் சரக்கு பாட்டில்களாக மாறிய கொடுமையும் தெரிந்தது. இதுபோக, கள்ளச்சாராய உற்பத்தியும் விற்பனையும் ஆங்காங்கே துவங்கியிருந்ததையும் கேள்விப்பட்டோம்.


இன்று நேற்றல்ல, கடந்த சில ஆண்டுகளாகவே முப்பது பேர் இருக்கும் எங்கள் அரசு மருத்துவமனை ஆண்கள் வார்டில் மூன்று பேராவது தினமும் குடிநோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள். ரத்தவாந்தி, கல்லீரல் பாதிப்பு, நரம்புத் தளர்ச்சி, வலிப்பு போன்ற வியாதிகளுடன் வரும் அவர்கள், "இனிமேல் குடிக்கவே மாட்டேன். எப்படியாவது என்னை இந்த தடவை காப்பாற்றி விடுங்கள்" என்றே கூறுகிறார்கள். அதன்பின் திருந்தி விடுபவர்கள் உண்டு என்றாலும் அது வெறும் பத்து சதவீதத்துக்கும் குறைவாகத்தான். மீதி தொண்ணூறு நபர்கள் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதத்தில் மீண்டும் மது போதை பழக்கத்திற்கு உள்ளாகிறார்கள்.

உலகளாவிய அளவில் ஒவ்வொரு நோய்க்கும் தனிப்பட்ட வரையறைகள் International classification of diseases (ICD) என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. அதன்படி குடிநோய் என்றால் என்ன? என்ற கேள்விக்கு, இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் போது சர்க்கரை நோயாளிக்கு சர்க்கரையோ ஒரு சாக்லேட்டோ சாப்பிட்டால் குணமாகிவிடும் என்ற நிலையில் உடனடியாக இனிப்பை தேடும் நோக்கம் (Craving) எழுவது போல, மது எந்த விதத்திலாவது கலந்திருக்கும் பொருளைத் தேடுவது குடிநோயின் முக்கிய அறிகுறி. உறவு, நண்பர்கள், வேலை, பொழுதுபோக்கு இவை எதையுமே கருத்தில் கொள்ளாமல் மதுவை நோக்கியே அனைத்து செயல்பாடுகளும் இருந்தால் அதையும் குடிநோய் என்கிறது இந்த வரையறை.

ஒருவர் மதுப் பழக்கம் உடையவராக இருக்கலாம், ஆனால் அவர் குடிநோயாளியா, அவருக்கு உடனடி சிகிச்சை தேவையா என்பதைக் கண்டறிவதற்காக மருத்துவத்துறையில் நான்கு கேள்விகளைக் கொண்ட CAGE questionnaire ஐ பயன்படுத்துவோம்.
சில கேள்விகள் நோயாளிகளைப் புண்படுத்தி விட வாய்ப்பு உள்ளது என்பதால் சற்று சுற்றிவளைத்துக் கேட்கும் தொனியில் அமைந்தவை இந்தக் கேள்விகள்.

* நீங்கள் எப்போதாவது நாம் குடியைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கிறீர்களா? (Cutdown)

* மற்றவர்கள் உங்கள் குடிப்பழக்கத்தைப் பற்றி சுட்டிக்காட்டினால் எரிச்சல் படுகிறீர்களா? (Annoying)

* குடிப்பது குறித்து உங்களுக்குக் குற்ற உணர்ச்சி ஏற்படுகிறதா? (Guilty)

* காலையில் கண் விழித்தவுடன் முதலில் மனம் மதுவை நாடுகிறதா? (Eyeopener)

இந்த நான்கு கேள்விகளில் ஏதாவது இரண்டிற்கு ஆம் என்ற பதில் இருந்தால் கூட, உடனடியாக அந்த நபர் சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டியவர் என்பது உறுதியாகிறது.

மற்ற நோய்களில் அந்த நோய்க்கான சிகிச்சை மட்டும் அளித்தாலே முக்கால்வாசி பிரச்சனை தீர்ந்து விடும். ஆனால் இந்தப் பிரச்சினையைப் பொறுத்தவரை குடி நோய்ப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான உடனடி சிகிச்சை மட்டுமல்லாது, நீண்டகாலக் குடிப்பழக்கத்தால் உடலில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள், மனதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், குடும்பம் மற்றும் வேலையிடக் குளறுபடிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்த சிகிச்சை அவசியம். குடி நோயாளிக்கான சிகிச்சை எப்போதும் 100% பலனை கொடுக்கும் என்ற உத்தரவாதம் இல்லை. அதனால் மருத்துவர்களுக்கும், உறவினர்களுக்கும், நோயாளிகளுக்கும் சம அளவில் மன உறுதியும் பொறுமையும் மிகவும் அவசியம்.

போதை மறுவாழ்வு மையங்கள் ஊருக்கு ஊர் செயல்படுகின்றன. குடிநோயிலிருந்து மீண்டுவந்த பழைய நோயாளிகள் பலரே அதில் தன்னார்வலராக பணிபுரியவும் செய்கிறார்கள். பணத்தைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் வெகுசில மையங்களைத் தவிர அர்ப்பணிப்பு உணர்வுடன் பல மையங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் அவை சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். போதுமான நிபுணர்கள், வேலையாட்கள் இல்லாத குறை, அவசியச்செலவுக்குக் கூட குறைந்தபட்ச பணம் செலுத்த இயலாத குடும்பங்களின் நிலை, அருகிலேயே மது, கஞ்சா விற்கத் தயாராய் சுற்றி வரும் சமூக விரோதிகள் என்று இத்தகைய மையங்கள் சந்திக்கும் சவால்களும் அதிகம்.

இத்தனை சவால்களையும் தாண்டித்தான் பல முயற்சிகள் நடத்தப்படுகின்றன. அதில் சில வெற்றியும் பெறுகின்றன. மது போதை மீட்புக்கென்றே தங்கள் வாழ்வையே செலவிடும் நம்பிக்கை மனிதர்கள் இங்கே பலர் உண்டு. நமது கண்ணெதிரில் உருவாகிக்கொண்டிருக்கும் குடிநோயாளிகளையும், தத்தளிக்கும் அவர்தம் குடும்பங்களையும் இத்தகைய நல்லெண்ணத் தொண்டர்களை நோக்கி ஆற்றுப்படுத்தினாலே அது நாம் செய்யும் பேருதவியாக அமையும்.

*Alcoholics anonymous தெரியுமா?

*குழந்தைப் பிராயத்தில் ஏற்படும் போதைப் பழக்கங்கள்

*அடிமைப்படுத்தும் மருந்துவகைகள்


*கொத்தடிமையாக்கும் போதைப் பழக்கம்.

-
 

Author: SudhaSri
Article Title: தலைவனின் தடுமாற்றம்! தத்தளிக்கும் குடும்பம்!
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom