• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

சமச்சீர் உணவு

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
300
சமச்சீர் உணவு!


சிறுவயது முதலே, கிட்டத்தட்ட ஐந்தாம் வகுப்பிலிருந்தே பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இந்தக் கேள்வியைக் கடந்து வந்திருப்போம். 'சமச்சீர் உணவு என்றால் என்ன?' என்பதுதான் அந்தக் கேள்வி.

உடலுக்குத் தேவையான விகிதத்தில் புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, விட்டமின்கள், தாதுக்கள் இவை கலந்திருப்பதே சமச்சீர் உணவு என்ற பதிலும் நமக்குத் தெரிந்திருக்கும். மேலோட்டமாகப் பார்க்கும்போது நமது உணவில் இத்தனை பொருட்களும் இருப்பதாகவே நமக்குத் தோன்றும். 'நல்லா காய் சாப்பிடுறேன், பருப்பு சேர்க்கிறேன், கீரை சேர்க்கிறேன், முட்டை, பால், வாரம் ஒரு முறை மாமிசம்.. இத்தனையும் சாப்பிடுவேன். அப்போ எனக்கு எப்படி சத்துக்குறைபாடு வரமுடியும்?' என்பதே பலரின் எண்ணமாக இருக்கிறது.

வாழும் இடமும் ஒவ்வொருவரின் உணவுப் பழக்கவழக்கமும் குறிப்பிட்ட சத்துக்கள் உணவில் இருப்பதை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உதாரணமாக இமய மலை அடிவாரங்களில் வாழும் மனிதர்களுக்கு அங்கு கிடைக்கும் முட்டைகோஸ், காலிபிளவர் போன்ற உணவுகளை சாப்பிடுவதாலும் அயோடின் சத்துக் குறைபாட்டாலும் தைராய்டு பிரச்சனைகள் அதிகம். இதுவே உப்புச்சத்து இயல்பாகவே மண்ணில் கலந்திருக்கும் கடல் புரங்களில் மிகவும் குறைவு.

சென்ற மாதம் 16 வயது சிறுவன் ஒருவன் வந்தான். 20 அடிகள் கூட நடக்க முடியாத அளவு மூச்சிரைப்பு, மயக்கமாக வருவது இவை இரண்டும் தான் அவனுடைய அறிகுறிகள். சோதனை செய்து பார்க்கையில் அவனுக்கு ஹீமோகுளோபின் அளவு மிகக்குறைவாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள், தட்டணுக்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. அடுத்தகட்டப் பரிசோதனைகளுக்கு அவனை உட்படுத்தியதில் அவனுக்கு வைட்டமின் பி 12 (Vitamin B12) மற்றும் போலிக் ஆசிட் (folic acid) குறைபாடு அதிக அளவில் இருந்ததும், அதனால் ரத்த அணுக்களின் உருவாக்கத்தில் பிரச்சனை ஏற்பட்டதும், அதன் விளைவாக இதயம் லேசாக பாதிக்கப்பட்டதும் தெரிந்தது.

அவன் என்னென்ன சாப்பிடுவான் என்று விசாரிக்கையில் அவன் பால் முட்டை எதுவுமே சாப்பிட மாட்டான் என்பது தெரியவந்தது. வறுமையான குடும்பம் தான் என்றாலும் ஒரே பையன் என்பதால் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்தே வளர்ப்பதாகவும் எப்படி சத்துக்குறைபாடு ஏற்பட்டது என்று தெரியவில்லை என்றும் பெற்றோர் கூறினர்.

கேட்பதை, பிடித்ததைக் கொடுத்து குழந்தையை வளர்ப்பது வேறு, வளர்ச்சிக்கு அவசியமானவற்றைக் கொடுத்து வளர்ப்பது வேறு என்று அவர்களுக்கு விளக்கி, பின் கிட்டத்தட்ட ஒரு மாதம் சிகிச்சையளித்து இப்போதுதான் நல்ல நிலைக்கு வந்திருக்கிறான். இப்பொழுதும் வாராவாரம் பரிசோதனைக்கு வருகிறான். நேத்து என்ன சாப்பிட்ட? காலையில் என்ன சாப்பிட்ட? பால் குடிச்சியா? என்று தவறாமல் கேட்கிறோம்.

தீவிர சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களிடம் இந்த B12 குறைபாடு பரவலாகக் காணப்படக்கூடிய ஒன்று. எந்தத் தாவர உணவிலும் இந்த வைட்டமின் கிடைக்காது. மாமிசம், முட்டை போன்றவற்றை சாப்பிடாதவர்கள் நிச்சயம் வேறு வடிவில் இந்த வைட்டமின் சத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இது ஒரு சிறிய உதாரணம் தான். இதைப் போன்று உடலின் இயக்கத்திற்கு பல சத்துக்கள் தேவைப்படுகின்றன. இவற்றில் குறைபாடுகள் ஏற்பட்டால் ஒருவரை முடக்கியே விடக் கூடும். இன்னொரு நபர். மிகச் சிறந்த சமூக சேவகர், பேச்சாளர். அரசின் மருத்துவம் குறித்த திட்டங்களை, செயல்பாடுகளை மக்களுக்கு விளக்க வேண்டுமென்றால் அவரின் உதவியை நாடுவோம். அந்த அளவுக்குக் கல்வியறிவு நிரம்பியவர். அவருக்கு கை கால்களில் எரிச்சல் மதமதப்பு ஏற்பட்டிருக்க, என்னவோ ஏதோ என்று பயந்து பல நிபுணர்களை அணுகி பரிசோதனைகள் பல செய்திருந்தார். எல்லாமே 'நார்மல்' என்று அறிக்கை வந்ததாம். ஒரு நாள் அவரை எதேச்சையாக சந்திக்கையில், அவரது முகம் தெளிவில்லாமல் இருந்ததைக் கண்டு, "என்ன சார்! என்னவோ போல இருக்கீங்க?" என்று கேட்டேன். தன் உடல் உபாதைகளைக் கூறினார்.

"நீங்க ப்யூர் வெஜிடேரியன்?" என்று கேட்டதற்கு, "ஆமாம் மேடம்.. பால் கூட குடிக்க மாட்டேன்" என்றார். அப்போ உங்களுக்கு 'பேன்டொத்தெனிக் ஆசிட்' (வைட்டமின் B5) குறைபாடு இருக்கலாம் சார். இந்தக் குறைபாட்டை கண்டுபிடித்தவர் கோபாலன்னு ஒரு தமிழர். 'கோபாலன்'ஸ் பர்னிங் ஃபீட் சின்ட்ரோம்'னு அதற்கு ஒரு பெயர் இருக்கு சார்" என்று கூறினேன். "அப்படியும் இருக்குமோ? நான் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்" என்றார் பதட்டத்துடன்.

பின் அவருக்கு விளக்கி, தற்சமயத்துக்கு மாத்திரைகளைப் பரிந்துரைத்து, உட்கொள்ள வேண்டிய உணவு வகைகளையும் பற்றிக் கூறியவுடன் மகிழ்ச்சியுடன் சென்றார். ஒரு வாரத்திலேயே அவரது அறிகுறிகள் சரியாகி விட்டதாகவும் தொலைபேசியில் தெரிவித்தார்.

இந்த வைட்டமின் குறைபாடு அயல்நாட்டில் வசிக்கும் நம் நாட்டு மக்கள் சிலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. நம் நாட்டில் இருந்தவரை கிடைத்த உணவுப் பொருட்களில் அவர்களுக்கு அத்தகைய குறைபாடு ஏற்படவில்லை. அயல்நாட்டுக்கு சென்று அங்குள்ள உணவுப் பழக்க வழக்கங்களுக்கு மாறும்பொழுது குறிப்பிட்ட சில உணவு வகைகள் கிடைக்காததால் இப்படி சில குறைபாடுகள் ஏற்படுவதும் உண்டு.

அதே போல நம் நாட்டில் பஞ்சமில்லாமல் கிடைக்கும் இன்னொரு விஷயம் வெயில். வெயில் நம் தோலில் விழுவதால் மட்டுமே உருவாகும் கிடைக்கக்கூடிய ஒரு சத்து 'வைட்டமின் டி'. எலும்பு உருவாக்கத்துக்கு அது மிகவும் அவசியம். உணவில் கிடைக்கும் கால்சியமும், சூரிய ஒளி நம் தோலில் படுவதால் உருவாகும் வைட்டமின் டியும் இணைந்துதான் எலும்புகளின் வளர்ச்சிக்கும் தொடர் இயக்கத்துக்கும் உதவுகிறது. பனிப் பிரதேசங்களில் இருப்பவர்களுக்கும் வீட்டை விட்டு வெளியே போகாமல் இருப்பவர்களுக்கும் வைட்டமின் D குறைபாடு அதிக அளவில் ஏற்படுகிறது. அதனால் தான் காலை 6 முதல் 8 வரை வெயில் தோலில் படுமாறு நடப்பது நல்லது என்று கூறுகிறார்கள். பிறந்த குழந்தைகளை அதிகாலை வெயிலில் காட்டுவதும் இந்த விஷயத்திற்காகத் தான்.

வழக்கமாக உணவில் கால்சியம் அதிகம் எடுத்துக் கொள்ளும் பெண்களுக்குக் கூட கர்ப்ப காலத்திலும், தாய்ப்பாலூட்டும் நேரத்திலும் கால்சியம் சத்தினை மாத்திரைகளாக வழங்க வேண்டியது அவசியம். ஏனெனில் தாய்ப்பால் ஊட்டும் போது பாலில் அதிக அளவு கால்சியம் சுரப்பதால் தாயின் உடல்நலம் பேண இன்னும் அதிகமாகக் கொடுக்க வேண்டியது இருக்கும்.

இப்படிப் பல உடலியல் இயக்கங்களுக்குத் தேவையான வைட்டமின்களைக் கண்டுபிடித்ததே ஒரு சுவாரசியமான நிகழ்வு. 1800களில் கிறிஸ்டியன் ஐக்மேன் என்ற விஞ்ஞானி மனிதர்களில் ஏற்பட்ட நரம்புத்தளர்ச்சி நோய் குறித்து பல வருடங்களாக ஆராய்ந்து வந்திருக்கிறார். அதற்குக் காரணம் ஏதோ ஒரு நுண்ணுயிரி என்ற நோக்கிலேயே அவருடைய ஆராய்ச்சி இருந்திருக்கிறது. அவர் நிறைய கோழிகளை வளர்த்து வந்திருக்கிறார். சில கோழிகளிலும் அப்படிப்பட்ட அறிகுறிகள் இருந்திருக்கின்றன. திடீரென்று அவரது சமையல்காரரை மாற்ற நேர்ந்திருக்கிறது. புதிய சமையல்காரர் வந்தவுடன் நரம்புத் தளர்ச்சியுடன் காணப்பட்ட கோழிகள் திடீரென்று ஆரோக்கியமாக மாறிவிட்டிருக்கின்றன. இரண்டு பேர் கொடுத்த உணவையும் ஆராய, முதல் பணியாள் அருகே இருந்த ராணுவக் குடியிருப்பில் மீதமிருந்த அரிசியை கோழிகளுக்கு போட்டது தெரிந்திருக்கிறது. அது அப்போது பிரபலமாகி வந்த மேல்தோல் அகற்றப்பட்ட வெள்ளை அரிசி (Polished white rice). இரண்டாவது பணியாளர் தோல் நீக்கப்படாத அரிசியைக் கோழிகளுக்கு உணவாகக் கொடுத்திருக்கிறார். இரண்டு உணவிலும் உள்ள வேறுபாடு என்ன, என்று ஐக்மேன் ஆராயப் போக, அப்போதுதான் வைட்டமின் B1 பற்றிய புரிதல் அவருக்கு வந்திருக்கிறது. அதை உலகத்துக்கும் எடுத்துச் சொல்லியிருக்கிறார். அதன்பின் அந்த நரம்புத்தளர்ச்சி நோயிலிருந்து லட்சக்கணக்கானவர்கள் குணமானது வரலாறு. குடிநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதீத மது உட்கொள்வதாலும் சரியான உணவு எடுக்காததாலும் இதே விதமான பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இவர்களுக்கு தையமின் எனப்படும் வைட்டமின் B1 ஊசியை செலுத்தினால் உடனடியாகக் குணமடைந்து வருவதையும் பார்க்கிறோம்.

இதேபோல் வைட்டமின் C குறைபாட்டைக் கண்டுபிடித்த நிகழ்வும் தற்செயலானது தான். 1700களில் கப்பல் பயணிகளுக்கு இருந்த முக்கிய பிரச்சினை 'ஸ்கர்வி' என்ற நோய். பயணிகள் பலருக்கு வாந்தி, மயக்கம், உடல் சோர்வு, தோல், ஈறுகளில் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டு மிகவும் அவதிப்பட்டிருக்கின்றனர். அவர்களுடைய உணவு பெரும்பாலும் தானியங்கள் மற்றும் உலர வைக்கப்பட்ட மாமிசங்கள் இப்படியாகவே இருந்தது. ஒரு சமையல்காரர் எதேச்சையாக எலுமிச்சம் பழங்களை பிழிந்து சாறெடுத்துக் கொடுத்ததில் பயணிகளின் பிரச்சினை சரியாகியிருக்கிறது. எனவே எலுமிச்சம் பழம் போன்ற சிட்ரஸ் பழங்களை மாலுமிகளும் பயணிகளும் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு மருத்துவர் கூற அதுவே நடைமுறையில் இருந்திருக்கிறது. அதன் பின்னும் அது என்ன பொருள் என்று கண்டறிய பல ஆராய்ச்சிகள் தொடர, இறுதியில் 1912இல் வைட்டமின் சி என்ற பெயர் வைக்கப்பட்டு 1928ல் தான் அது சிட்ரஸ் வகைப் பழங்களிலிருந்து பிரித்தறியப் பட்டிருக்கிறது.

இப்படி வரலாற்றைத் தேடினால் உணவு குறித்த பல சுவாரசியமான கதைகள் கிடைக்கும். அதேபோல் நம்மைச் சுற்றிலும் கிடைக்கும் உணவுப் பொருட்களில் இருக்கும் பல சத்துக்கள் குறித்தத் தகவலும் கிடைக்கும். தெரிந்து கொள்வோம், சமச்சீர் உணவை ஏட்டில் மட்டும் இல்லாமல், நாம் சாப்பிடும் தட்டிலும் கொண்டுவந்து பல பிரச்
சினைகளை முன்கூட்டியே தடுப்போம்!
 

Author: SudhaSri
Article Title: சமச்சீர் உணவு
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom