• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

கொஞ்சம் காது கொடுத்து கேட்கலாமே!

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
300
கொஞ்சம் காது கொடுத்து கேட்கலாமே!


என்னங்க ரொம்ப மெலிஞ்சு போன மாதிரி இருக்கீங்க? உங்க குரல் ஏன் மாறிப் போயிருக்கு? உங்க கண்ணு ஏன் மஞ்சளா இருக்குது? இப்படி நம்மைப் பார்க்கும் நல விரும்பிகள் சிலர் உங்கள் உடல் நலத்தைப் பற்றி சில சமயம் கேட்டிருப்பார்கள்‌.

'அப்படியா? மெலிஞ்சா போயிட்டேன்? ஆமா கொஞ்ச நாளாக அசதியா தான் இருக்கு' என்று மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகளைக் கண்டறிந்தவர்கள் உண்டு. அதேபோல், 'அப்படியா குரல் மாறிடுச்சா?' என்று பரிசோதிக்கப் போய் தைராய்டு குறைபாட்டையோ, குரல்வளையில் உள்ள பிரச்சனையையோ கண்டறிவது உண்டு.

சமீபத்தில் ஒரு ஐந்து வயதுச் சிறுவனைக் கொஞ்சமே கொஞ்ச நேரம் உள்ளாடை அணியாத நிலையில் பக்கத்து வீட்டுப் பாட்டி பார்க்க நேர்கையில் அவனது உடலில் விதைப்பைகளில் ஒன்று சிறிதாக இருப்பதாக அவன் பெற்றோரிடம் கூற, பெற்றோர் உடனே மருத்துவமனைக்கு வர, அவனுக்கு விதைகளில் (testes) ஒன்று பிறவியிலேயே கீழே இறங்கவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின் அதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. நாம் அனைவரும் அறிந்தது போல ஆண்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு விதைகள் உண்டு. கருவாக இருக்கையில் வயிற்றுப்பகுதியில் மார்பெலும்புக்கு சற்றுக் கீழே உருவாகும் இந்த விதைகள் கருவுற்றிருக்கும் காலம் முழுமைக்கும் பயணித்து, படிப்படியாக இறங்கி வந்து குழந்தை பிறப்பதற்கு சற்று முன்பாக 'வெதர்' என்று அழைக்கப்படும் விதைப்பைப் (scrotum) பகுதியை வந்து சேர்ந்துவிடும். இப்படி ஒன்று அல்லது சில சமயம் இரண்டு விதைகளும் இறங்கத் தாமதம் ஆவதும் (undescended testes) நடக்கலாம். அந்தச் சூழலில் விரைந்து அறுவை சிகிச்சை செய்து உரிய இடத்தில் வைப்பது அல்லது அகற்றுவது அவசியம். இல்லையெனில் புற்றுநோய் போன்ற தீவிர பின்விளைவுகள் ஏற்படும்.

ஒரு மருத்துவரின் பார்வையில் பொது இடங்களில் சாதாரணமாக சந்திக்கும் சில மனிதர்களுக்கு ஏதாவது குறைபாடுகள் கண்ணில் படுவதும் அவ்வப்போது நடக்கும். ஒருவருக்கு ஆறாவது விரல் இருக்கலாம், ஒரு சிலருக்கு காதுக்கு பக்கத்தில் இன்னும் ஒரு சிறிய காது போன்ற அமைப்பு இருக்கலாம். வித்தியாசமான மச்சங்கள், மருக்கள், கட்டிகள் கண்ணில் படலாம். பிரச்சனை இல்லாதபட்சத்தில் அவற்றை ஒரு நிமிடம் கூர்ந்து பார்ப்பதோடு கடந்து விடுவோம். ஆனால் சம்பந்தப்பட்ட நபர் பெரிதாக நினைக்காமல் இருக்கும் அந்த சிறிய பிரச்சனைக்கு அவருக்கு மருத்துவ உதவி தேவைப்படலாம். அப்படிப்பட்ட சமயங்களில் அதைக் குறிப்பிட்டு சொல்வதும் வழக்கம்.

உதாரணமாக மாறுகண் இருக்கும் குழந்தைகள். அவர்களது பெற்றோர் அதுகுறித்து கவலை கொள்ளாமல் இருந்திருப்பார்கள். பேருந்துப் பயணத்தின் போதோ, பொது நிகழ்ச்சிகளின் போதோ, அந்தக் குழந்தை வேறு ஒரு சிகிச்சைக்காகக் கொண்டு வரப்படும் போதோ, 'இந்தக் குழந்தைக்கு மாறுகண் இருக்கிறது. விரைவில் சிகிச்சை அளித்தால் குணப்படுத்தலாம். இல்லையெனில் பிற்காலத்தில் இன்னின்ன விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும்' என்பதையும் நான் சுருக்கமாகச் சொல்வதுண்டு. சிலர் ஏற்றுக் கொண்டு உடனடி சிகிச்சை அளிப்பார்கள். சிலர் அப்படியா என்பதோடு கடந்து போய்விடுவார்கள்.

அதைப் போலவே சிலருக்கு முன் கழுத்தில் வீக்கம் இருக்கும் அதை அவர் கவனித்து இருக்க மாட்டார். மருத்துவரின் கண்ணில் படும் பட்சத்தில், 'ஒரு முறை எச்சிலை விழுங்கிக் காட்டுங்களேன்' என்பார். அது கவனத்திற்குரிய கட்டி என்று தோன்றினால் உடனடியாக சிகிச்சை அளிக்க வற்புறுத்துவதுவார். இப்படி கடந்து செல்லும் நேரம் பிறர் சொல்லக் கேட்டு அதையும் தங்கள் நலனுக்கு நன்றாக நல்லதாகவே எடுத்துக்கொண்டு குணப்படுத்திக் கொண்டவர்கள் அனேகம். இதை accidentally discovered என்று கூறுவர்.

'சும்மா பயம் காட்டுறாங்க' என்று கூறி அறிவுரையை ஒதுக்கி செல்பவர்களும் உண்டு. இப்படி எதேச்சையாகக் கண்டறிந்த விஷயங்கள் பல என் மருத்துவக் கல்லூரி வாழ்க்கையிலும் நடந்திருக்கின்றன. இப்பொழுது அவற்றைத் திரும்பி பார்க்கையில் வெகு சுவாரசியமாகத் தோன்றுகிறது. உங்களுக்கும் ஆச்சரியமாக அமையலாம்.

முதன்முதலாக மருத்துவ கல்விக்காக பெரிய மருத்துவமனையில் அடி எடுத்து வைக்கும் மாணவர்கள் புதிது புதிதாக நோய்களைப் பற்றி அறிந்து கொள்ள நேரும்போது பார்க்கும் பல பிரச்சனைகள் தனக்கும் இருப்பதாக நினைப்பார்கள். இதை 'ஃபஸ்ட் கிளினிகல் சின்ட்ரோம்' (First clinical syndrome) என்று விளையாட்டாகக் கூறுவோம். சில சமயம் அருகில் இருக்கும் நபருக்கும் தான் படித்த வியாதிகள் இருப்பதாகத் தோன்றும். புதிதாக நான்கு வார்த்தைகளை தெரிந்து கொண்டு விட்ட குழந்தை மனப்பான்மையில், காலில் ஏதாவது கல் தடுக்கி நொண்டி நடந்தாலும் கூட, 'என்ன உன் நடை இப்படி இருக்கிறது? உனக்கு இந்த வகை நரம்பியல் கோளாறா?' என்று கேட்டு கிண்டல் செய்வார்கள்.

நான் மூன்றாமாண்டு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போது நடந்தது இது. புதிதாக ஸ்டெதஸ்கோப் வாங்கியிருந்தான் ஒரு மாணவன். அப்போதுதான் பாடத்திட்டத்தில் சரியான இதயத்துடிப்பு எப்படி இருக்கும், குறைபாடுள்ள இதயத் துடிப்புகள் எப்படி இருக்கும் என்ற அறிமுக வகுப்பு நடந்து கொண்டிருந்த நேரம். ஸ்டெதஸ்கோப்பில் கேட்கும் ஒலியை வைத்து இதய நோய்களைக் கண்டறிய சொல்லித் தந்திருந்தார்கள். தனது புதிய ஸ்டெதஸ்கோப் நன்றாக வேலை செய்கிறதா என்று பார்ப்பதற்காக தனது நண்பர்களுக்கு நெஞ்சில் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான் அந்த மாணவன். ஒருவனின் இதயத்தில் ஸ்டெதஸ்கோப்பை வைத்துக் கேட்கும் பொழுது ஒரு வித்தியாசமான ஒலி (murmur) இருப்பதாகத் தோன்றியது. மீண்டும் இன்னொருவன், மற்றும் ஒருவன் எல்லாரும் அவனைப் பரிசோதித்துப் பார்க்க, அந்த Murmur இருப்பதாகவே கூறினார்கள். ஒரு சீனியர் மாணவனை அழைத்து சந்தேகத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக கேட்க, அவரும் அதையே உறுதிப்படுத்தினார், அந்த மாணவனுக்கு இதயத்தில் ஓட்டை இருக்கிறது என்று.

பிறவி முதல் அது இருந்திருக்கிறது.. ஆனால் கண்டறியப்படவில்லை. அதுகுறித்த எந்த அறிகுறிகளும் அவனுக்கு அது வரை தோன்றவில்லை. உடனடியாக அடுத்தடுத்த பரிசோதனைகளைச் செய்து இதயத்தில் ஓட்டை இருந்தது உறுதிப்படுத்தப்பட்டு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இன்னும் சில நாட்கள் தாமதித்திருந்தால் அமைதியாக இருந்த அந்த ஓட்டை அடுத்தகட்ட பிரச்சினைகளை கொண்டு வந்திருக்கும் என்பதை அறிந்தபோது திக்கென்று இருந்தது. சரியான நேரத்தில் கண்டறிந்து குணப்படுத்தியதில் மகிழ்ச்சியும் கூட. குழந்தை பருவத்தில் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள்- regular check ups ஏன் அவசியம் என்பதும் தெரிந்தது.

இதேபோல் நான் கண் மருத்துவராகப் பணிபுரிந்து கொண்டிருந்த நேரம் ஒரு கதை காதில் விழுந்தது. கண்ணின் விழித்திரையை பரிசோதிக்க உதவும் ஆஃப்தல்மோஸ்கோப் கருவியைப் புதிதாக வாங்கியிருந்தார் ஒரு தோழி. அவர் அதன் தரத்தைப் பரிசோதிக்க, தன் அறைத் தோழிகளின் கண்களைப் பார்த்துக் கொண்டிருக்க ஒரு தோழிக்கு மட்டும் விழித்திரையில் நரம்புப் பகுதியில் ஒரு பிரச்சனை இருப்பதாகப்பட்டது. அதுவும் 'சைலன்ட் கில்லர்' என்று அழைக்கப்படும் க்ளுக்கோமா- கண் அழுத்த நோய். சிறுவயதில் ஏன் இந்தக் குறைபாடு என்று பரிசோதனை செய்து பார்க்க அவரது குடும்பத்தில் நான்கு பேருக்கு அதே பிரச்சனை மரபுவழியாக இதேபோல் அமைதியாக இருந்ததும், அது மெதுமெதுவே மோசமாகிக் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நான்கு பேருக்கும் உடனடியாகத் தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு அதற்குமேல் பார்வை இழப்பு ஏற்படாமல் தடுத்தார்கள்.

என் மருத்துவக் கல்லூரி காலத்தில் நடந்த இன்னொரு நிகழ்வும் அந்த நாட்களில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. சாதாரணமாக வகுப்புக்குச் சென்று விட்டு வந்து விடுதிக்குள் நுழைந்த ஒரு வட இந்திய மாணவன் திடீரென்று மயங்கி விழுந்து விட்டான். சுற்றி நின்றவர்கள் போய்ப் பார்க்க, யாருக்கும் எதுவும் புரியவில்லை. பின்னால் இருந்து பார்த்தவன் ஒருவன் மட்டும் அவன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் வழியே நடந்து சென்றான் என்றும் அவன் செல்லும் பொழுது ஒரு வண்டியில் இடித்து விட அது லேசாகச் சாய்ந்தது என்றும் மட்டுமே ஒரு துப்பு கொடுத்திருந்தான். அப்போது அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த ஒரு இறுதியாண்டு மாணவன் அவனைப் பரிசோதித்துப் பார்க்க, மிகவும் அபூர்வமாக நடக்கும் ஒரு காயமான 'ஹேண்டில் பார் இஞ்சுரி' ஏற்பட்டிருக்கிறது என்று சரியாகக் கண்டுபிடித்தான். அதாவது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களின் ஊடாக நுழைந்து போகும் பொழுது தவறுதலாக அந்த வாகனத்தின் கைப்பிடி இடது பக்க விலா எலும்பின் சற்றுக் கீழே இடித்து, நேராக மண்ணீரலைத் தாக்கி மண்ணீரலிலிருந்து அதிக அளவு இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தது. உடலின் மொத்த ரத்தமும் அந்த காயத்தின் வழியே வயிற்றுப் பகுதிக்குள் சென்றுவிட அந்த இறுதியாண்டு மாணவனின் சமயோசிதமான கண்டுபிடிப்பால் இந்த வட இந்திய மாணவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, ஆசிரியர்கள் மற்றும் வார்டன் பொறுப்பேற்று கையெழுத்திட உடனடி அறுவை சிகிச்சை துவங்கப்பட்டது. அதிக ரத்த இழப்பால் பத்து யூனிட் ரத்தம் தேவைப்பட, அந்த குரூப் இரத்தத்தையுடைய ஐம்பது மாணவர்கள் மருத்துவமனை வளாகத்தில் நிமிடங்களில் கூடித் தயாராக‌ நின்றனர்! தொலைவில் இருந்த அவனது பெற்றோர்களுக்கு செய்தி போகும் முன்னே அந்த மாணவன் காப்பாற்றப்பட்டதும், இன்று அவன் வெற்றிகரமான மருத்துவராக பணிபுரிந்து கொண்டிருப்பதும் நெகிழ்வான நினைவுகள்.

கொஞ்சமே கொஞ்சம் மருத்துவ அறிவு, கொஞ்சம் அதிர்ஷ்டம், அதை விட நிறைய மனிதம் இவை அந்தச் சூழலில் நிறைந்திருந்தது இன்றும் பசுமையாக நினைவில் நிற்கிறது!
 

Author: SudhaSri
Article Title: கொஞ்சம் காது கொடுத்து கேட்கலாமே!
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom