• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

கடல் தேடும் மீன்கள் - 6

Ilampillai

New member
Joined
Mar 27, 2025
Messages
22
கடல் தேடும் மீன்கள் -6

திருவான்மியூர். வால்மீகி முனிவர் வாழ்ந்த இடம். அவர் வணங்கிய சிவ ஸ்தலம். வால்மீகியூர் . மருந்தீஸ்வரர்.
பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் என்று எத்தனையோ பெரிய பெரிய சிவன் கோவில்கள் இருந்தாலும், எங்க ஊர் கபாலி கோஷமும் மருந்தீசர் கோஷமும் தனிதான்.
அது சரி அவரவர் ஊர் பெருமான் அவரவர்க்கு. அனைவருக்கும் எம்பெருமான் தான் இறைவன்.

இதோ தனது மகள் இன்பாவுடன் கொடி மரத்திற்கு அருகில் விழுந்து வணங்கினாள் .(சிலருக்கு முதலில் கொடி மரம் வணங்குவது வழக்கம்) இவள் விழுந்து வணங்கிவிட்டு எழுவதற்குள் தவழ்ந்து யாரோ ஒரு ஆண் மகன் காலைத் தட்டிக் கொண்டிருந்தாள் இன்பா . கோபுரத்தையும் கொடி மரத்தையும் வணங்கிக் கொண்டிருந்த அவர் சட்டென குனிந்து பார்க்கவும் குழந்தையோ ஈ என்று சிரித்துக் கொண்டிருந்தாள்.

அவரும் குனிந்து அவளை தூக்கி கையில் வைத்துக் கொள்ள அவளோ கிளிக்கி சிரித்தாள். இனியா நிமிர்ந்து பார்க்க யாரோ ஒருவர் கையில் இருந்தாள் இன்பா.

லேசாகப் புன்னகைத்தவள் அவனிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டாள்.

அவனும் அவரின் அம்மாவும் வந்திருந்தார்கள்.

அவன் அன்னை மெதுவாகப் பேசத் தொடங்கினார்.

"புள்ளை பேரு என்ன?"
"இன்பா மா "

"பேரு ரொம்பவே நல்லா இருக்கு "
"தாங்க்ஸ்"
அதற்குள் இன்பா கையை காலை உதைத்து அவனிடம் செல்ல வேண்டும் என்று அழத் தொடங்கி விட்டாள். இன்பாவை அத்தனை எளிதில் சமாதானம் செய்து விட முடியாது. இனியா எத்தனையோ சமாதானம் செய்தும் இன்பாவைக் கட்டுப் படுத்த முடியவில்லை.

"பரவால்ல குடும்மா. நாங்களும் சாமி பாக்க தான் போறோம்"
சிறு தயக்கத்துடனேயே அவனிடம் குழந்தையைக் கொடுத்தாள்.

இவளை அத்தனை நேரம் படுத்தி எடுத்த குழந்தை அடுத்த நொடி அவனிடம் சென்றதும் சிரித்தது.

"அச்சச்சோ! இப்படித் தான் அழுவங்களா?" அவன் தன்னுடைய கைக் குட்டையால் அவள் முகத்தை துடைத்தான். இனியா குழந்தைக்கு சிறிது தண்ணீர் ஊட்டவும் இன்பா சமாதானம் ஆகி விட்டாள். பெண்கள் இருவரும் பேசிக் கொண்டே உள்ளே சென்று அம்பாளையும் இறைவனையும் வணங்கி விட்டு வெளியில் வந்தார்கள். இறைவனைப் பார்த்த இருப் பெண்களுக்குமே கண்களில் இருந்து தன்னையும் அறியாமல் கண்ணீர் தான் கொட்டியது.

'எம்புள்ளைக்கு ஒரு வழிக் காட்டக் கூடாதா?' பெரியவரின் குரல்.

'என்னோட தப்புக்கெல்லாம் என் புள்ளைய இப்படி பண்ணிட்டியே ?' இது இனியாவின் குரல். "சாமி பாருங்க! சாமி பாருங்க ! இப்படி கைய சேக்கணும் . உம்மாச்சி காப்பாத்துங்க சொல்லுங்க" அந்த இளைஞன் தான் இன்பாவிடம் சொல்லி சொல்லி சாமி பார்க்க வைத்தான்.

யாரிடமும் ஒட்டாத அவள் அவனிடம் அப்படியே ஒட்டிக் கொண்டுவிட்டாள். ஏனோ அவன் என்ன சொன்னாலும் கிளிக்கி கிளிக்கி சிரித்தாள். அவளின் இந்த நடவடிக்கை இனியாவுக்குமே ரொம்ப புதுசு.



இவர்கள் சுற்றி விட்டு வரவும் கும்பலாக சில பக்தர்கள், "ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை .. "சிவவாக்கியரின் பாடலைப் பாட ஆரம்பித்தார்கள்.

மூவரும் வெளியில் வரவும் , இன்பா அவன் தோளில் முகம் புதைத்து சாய்ந்துக் கொண்டாள். அவள் தந்தையிடம் கூட அவள் இப்படி ஒட்டிக் கொண்டதில்லை. அவனும் தன் குழந்தை என்று எடுத்துக் கொஞ்சியதில்லை. பெண்ணாக பிறந்த காரணம்தான்.

கொடி மரத்தின் அடியில் சிறிது நேரம் அமர்ந்தவர்கள் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. இன்பா மட்டும் அந்த இளைஞன் மடி விட்டு அகலவில்லை. அவனும் தன்னை மீறி சிரித்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தான்.

அவரவர் குழந்தையை இரு அன்னைகளும் வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள் .

"எம் புள்ளையை சிரிக்க வச்ச தேவதை இவ "தன்னையும் அறியாமல் கண்ணில் வெளி வந்த சொட்டு நீரை சுண்டி விட்டார் பெரியவர். இனியாவுக்கும் என்ன சொல்வது என்றுத் தெரியவில்லை. அமைதியாக இருந்தாள் .

இரண்டு குழந்தைகளுமே இப்படி கிளிக்கி கிளிக்கி சிரிப்பது ஆச்சர்யம்தான். மற்றபடி அங்கே சில கிளிகளும் காக்கைகளும் மட்டுமே சத்தமிட்டுக் கொண்டிருந்தன.

"வேலைக்கு போகறீங்களா?"

"ஆமாம்மா "

"வீட்டுக்காரர் என்னம்மா பண்ணறாரு ?"

பெண்கள் எந்த நிலையில் இருந்தாலும் தொடரும் கேள்வி. யார் கேட்டாலும் தனியார் கம்பனியில் வேலை செய்வதாக சொல்லிக் கொண்டிருந்தாள். கோவிலில் பொய் உரைக்க வாய் வரவில்லை. எத்தனையோ பெரிய பெரிய தவறுகளைக் கூட அசால்டாக செய்ய முடிந்தது. அதற்கெல்லாம் திமிரும் ஆணவமும் உடன் இருந்தன. இப்போது ? வாழ்க்கை வலிக்க வலிக்கத் தான் வாழ முடியும். ஏனோ அனுபவம் பல கொடூரமான அடிகளை கொடுத்து தான் பாடங்களை கற்றுக் கொடுக்கிறது.

அமைதியாக இருந்தவள் முகம் பார்த்துப் புரிந்துக் கொண்டு விட்டார் அவர்.

"தப்பான பஸ்சுல ஏறிட்டியாம்மா ?"

அவரின் மகனும் இவளும் ஒரு சேர அதிர்ச்சியுடன் பார்த்தார்கள்.

அப்போது அங்கே டொம் டொம் என்ற மேள வாத்தியம் வந்துக் கொண்டிருந்தது. அவசரமாக எழுந்துக் கொண்டார்கள்.

அங்கே வந்த யாரோ ஒரு மாமி, மடிக் கட்டிக் கொண்டிருந்தார். அம்பாளை போலவே அவரும் சிகப்பு புடவை மஞ்சள் கரை வைத்தப் புடவையை கட்டி இருந்தார். அழகான வட்ட வடிவ முகம். மஞ்சள் பூசி இருந்தார் . பெரிய பொட்டு. கழுத்து நிறைய சங்கிலிகள். வைரக் கம்மல் , மூக்குத்தி அதில் மூன்று முத்துகள் சேர்த்திருந்தார். காலில் பெரிய கெட்டி கொலுசு. கைகள் கால்களில் அடர் நிறமாக இருந்த இலை மருதாணி லேசான வாசத்துடன். இடுப்பில் ஒட்டியாணம் . தொடை வரை நீண்டப் பின்னல். பெரிய பெரிய சரமாக மல்லிகை வாசம் வீசியது.

"வாங்கோ ! வாங்கோ ஓடிப் போய் அந்த இடத்துல நெல்லு குடுப்பா வாங்கி அந்தப் பந்தக்கால் வைக்கறதுக்குள்ள போட்டுட்டு, ஆத்துல யாருக்காவது கல்யாணம் நடக்கனுன்னா வேண்டிக்கோங்க. வேற ஏதாவது பிரார்த்தனை இருந்தாலும் வேண்டிக்கோங்க. நிச்சயம் நடக்கும். ஸ்வாமிக்கு பிரம்மோற்ஸவ விழாவுக்கு முன்னாடி இப்படி பந்தக் கால் நடும்போது பாக்கறதே ரொம்ப விசேஷம்"

கையில் குழந்தையை வைத்துக் கொண்டவன் அருகில் நின்று இருவரும் ஒரு சேர நெல்லை போட்டார்கள். இருவருக்குமே எந்த வேண்டுதலும் இல்லை. வேண்டுதல்கள் இருந்தாலும் அவன் நினைத்தால் தான் நம்முடைய பிரார்த்தனை லிஸ்டும் படிக்க முடியும். சரிதானே!

"என் புள்ளைக்கு நீந்தாம்பா வழி காட்டணும் மருந்தீசா" வேண்டிக் கொண்டு அந்த இளைஞனின் அன்னையும் நெல்லை போட்டு விட்டு திரும்பி அந்த மாமியைத் தேடிய போது அவரைக் காணவில்லை. வந்தவர் அம்பாளா ? மூத்தவருக்கு மனதில் ஏதேதோ யோசனைகள் என்றுச் சொல்வதை விட சொல்ல முடியாத ஏதோ ஒரு அனுபவம். ஆனந்தம் . மகனின் முகத்தைப் பார்த்தால் அவனோ இன்பாவுடன் இன்பமாக இருந்தான். இவருக்கும் மனதில் ஒரு புது சந்தோஷம்.


முதலில் அமைதியாக இருந்த குழந்தை இப்போது கை கால் புதைத்து குதித்து குதித்து அழ ஆரம்பித்தது என்ன காரணம் என்று இனியாவுக்கும் புரியவில்லை . ஆனால் அந்த பெண்மணிப் புரிந்து கொண்டார் .

"குழந்தைக்கு தாகமா இருக்கு . சொல்ல தெரியல "

'ஒரு வேளை தன் அன்னை உடன் இருந்திருந்தால் இப்படித் தான் பார்த்து பார்த்து சொல்லிக் கொடுத்திருப்பார். தான் பெற்ற குழந்தையை கவனிக்கும்போதும் தன்னைப் பெற்றவரின் சிந்தனைதான் எந்நேரமும்.

தண்ணீர் புகட்டியும் இன்பாவுக்குப் போதவில்லை.

"வெளில போய் சில்லுனு குழந்தைக்கு ஏதாவது வாங்கி கொடு"

மூவரும் வெளியில் வந்தார்கள். அங்கே ஆவின் இருந்தது.

" ஐஸ்க்ரீம் தான் வேணும்" படங்களைக் காட்டி காட்டி அழுதாள்.

இனியா சரி சொல்லி விட குழந்தைக்கு தேவையானது எல்லாம் வணங்கி ஊட்டி விட்டான் அந்த இளைஞன்.

இன்பாவோ அவனின் முகம் பார்த்து பார்த்து அவன் ஊட்ட ஊட்ட வாங்கி சாப்பிட்டாள். கையில் எடுத்து அவனுக்கும் ஊட்டிவிட்டாள். இனியா ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் .

வயிறு நிறைந்து விட்டது போலும். அவன் முகம் துடைத்து விட, அவன் தோளில் சாய்ந்து விட்டாள் இன்பா. அவனோ லேசாக முதுகை தட்டிக் கொடுத்தான். அவன் தோளிலே சாய்ந்து உறங்கி விட்டாள் . அதுவும் நல்லதுக்குத்தான். இல்லையென்றால் அவனிடமிருந்து பிரித்து வீட்டுக்கு கூட்டிப் போவது மிகவும் கஷ்டம். இவளுக்கு ஒரு ஆட்டோ பிடித்து ஏற்றி விட்டு அவர்களும் கிளம்பிவிட்டார்கள்.

தன்னுடைய இரு சக்கர வாகனத்தை இயக்கியவன் அன்னையிடம் ,
"ஏம்மா அந்த பொண்ணுகிட்ட தப்பான பஸ்சுல ஏறிடியான்னு கேட்டீங்க?"
அவனை மீறிய வருத்தம் அவன் குரலில் தெரிந்தது.

"பாவம்டா அந்தப் பொண்ணு. எங்கையோ போய் மாட்டிகிடுச்சு போல. தோணுச்சு. அதான் கேட்டேன். தப்பாடா ?"

"தப்பா இருந்திருந்தா சரி. ஆனா நீ கேட்ட விஷயம் ரொம்ப சரியானது தான்மா ?"

"அப்ப ஒனக்கு அவங்களை ஏற்கனவேத் தெரியுமாப்பா?"

விடை அடுத்தப் பகுதியில் இளைஞனின் பெயருடன்...
 
Last edited:

Author: Ilampillai
Article Title: கடல் தேடும் மீன்கள் - 6
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom