• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

கடல் தேடும் மீன்கள் -11

Ilampillai

New member
Joined
Mar 27, 2025
Messages
22
கடல் தேடும் மீன்கள் -11


அன்று விடுமுறை நாள் என்பதால் வீட்டில் இருந்தவளுக்கு அதிர்ச்சி. கையில் புது உடையுடன் வந்தவன் அவசரமாக குளிக்கப் போனான். ஏதோ வெளியில் செல்லும் அவசரத்தில் இருந்தான் . குளித்து உடை மாற்றி வந்தவனை பார்த்தவளுக்கு அதிர்ச்சி. பூத் தொட்டியை கவிழ்த்தது போல ஒரு தலை அலங்காரம். அதிலும் ஆங்காங்கே நரை முடி போல கலர் செய்திருந்தான். நிறம் வெளுத்துப் போன ஜீன்ஸ். சில பல கிழிசல்களுடன். அது தான் மூவாயிரம் ரூபாயாம்.
பத்து ரூபாய்க்கு வாங்கும் கால் மிதியடிக் கூட பளிச்சென்று எந்த குறைபாடும் இல்லாமல் இருக்கிறதா என பார்த்து வாங்கும்போது இந்த உடைக்கு மூவாயிரம் அவளால் ஜீரணிக்க முடியவில்லை. அதிலும் பேருந்தில் செல்லும்போது எத்தனை பாலியல் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டுதான் இவளும் காசு சம்பாதிக்கிறாள்.

பார்த்தவளுக்கு நொடியில், போன வாரம் பேருந்தில் கூட்டத்தில் இவளின் ஆடைக்குள் கை வைத்து என்னன்னவோ செய்தது கண் முன் வந்து விட்டது. அத்தனை ஆத்திரம். அது மட்டுமா?
மனம் தானாகவே அன்று பார்ட்டியில் இருந்த ஆண்களுடன் நல்லவனை ஒப்பிட்டுப் பார்த்தது. அவர்களின் கெத்தும் நுனி நாக்கு ஆங்கிலமும் கண் முன் தோன்றியதில் அந்த பான்டை கிழித்து விட்டாள்.
பளீரென்று அவளுக்கு அரை விழுந்தது.
"வெளில வேலைக்கு போய் கஷ்டப்பட்டு சம்பாதிச்சா தானே அந்த காசோட அருமை தெரியும்?"
உச்ச ஸ்தானியில் கத்தியவள்
தலையை சுவற்றில் மோதினான். பளார் பளார் என்று மாறி மாறி அறைந்ததில் இப்போது இவளுக்கும் உதட்டின் ஓரத்தில் ரத்தம் வந்தது. பார்வதி தான் ஓடி வந்து காப்பாற்றினாள்.

தலை வீங்கி இருந்தது. இரவெல்லாம் அழுதாள். பார்வதி தான் வந்து ஏதோ பெயருக்கு சாப்பிடுறயா என கேட்டாள். வேண்டாமே என்று சொல்லி விடவும் நல்லது என சென்றுவிட்டாள். அவள் மாமியார் தானே அன்னை இல்லையே கட்டாயப்படுத்தி உணவு ஊட்டி, உடலுக்கு மருந்து போட ?

பின்னிரவில் வந்தவன் இவள் அருகில் கூட வரவில்லை. இப்போதெல்லாம் இப்படித் தான். பார்வதியும் இவளால் தான் அண்ணன் உறவு இல்லாமல் போனது என்று குத்தி காட்ட ஆரம்பித்தாள். அவளுக்கு அண்ணன் என்றால் இவளுக்கு அப்பா இல்லையா? இதோ இப்படி அடி வாங்கி கொண்டு நிற்கும் போது அப்பா என்ற உறவு இருந்திருந்தால் தன்னுடைய நிலை இப்படி இருந்திருக்குமா? என்னதான் எதிர்த்துப் பேசி அவமானப் படுத்தினாலும் அன்னை தன்னை இப்படி அனாதையாக விட்டுருப்பாரா? தீபக்கும் நல்லவனை சும்மா விட்டிருப்பானா ? அக்கா இதை கொஞ்சம் குடிக்கா. ப்ளீஸ் கா தீபா வந்து கட்டாயப்படுத்தி ஏதாவது குடிக்க வைத்திருப்பாள். காதலனோ கணவனோ கொடுக்கும் முதல் முத்தம் மட்டும் கன்னம் சிவக்க வைப்பதில்லை. மறுநாள் கண்ணாடியில் பார்த்தவளுக்கு புரிந்துப் போனது.

இவள் செய்த அசிங்கத்தினால் தேவேந்திரன் இருந்த வீட்டை காலி செய்து விட்டு வேறு எங்கோ என்று விட்டார்கள் . பல வருடங்களாக வாழ்ந்த வீடு. பிறகு சிறிது சிறிதாக பணம் சேர்த்து அதையே விலைக்கு வாங்கி விட்டார்கள். அதற்காக எப்படி எல்லாம் வாயை கட்டி வயிற்றை கட்டி மிச்சம் செய்தாள் அன்னை என்பது இனியாவுக்கும் தெரியும். விசேஷம் என்றால் நாலு வடை செய்வாள். ஒன்று காக்காவுக்கு. மூன்று குழந்தைகளுக்கு. அப்படித்தான் எல்லாவற்றையும் தியாகம் செய்து அந்த வீட்டை வாங்கி இருந்தார்கள். அப்பாவும் இரண்டு ட்யூட்டி வேலைப் பார்த்தார். இப்ப உடம்புல உழைக்க தெம்பு இருக்கற வரைக்கும் உழைக்கிறேன். அம்மாவும் இரவில் அமர்ந்து ஏதேதோ உணவுப் பொட்டலங்களை பாக்கெட் செய்து கொடுப்பாள். பகலில் அருகில் இருந்த தையல் கடையில் வேலை செய்தாள் . எனக்காக நீ பண்ண? கேள்விகள் சுலபம். பதில் அத்தனை சுலபத்தில் சொல்லி விட முடியுமா?

இந்து தர்மத்தில் ஒரு நம்பிக்கை உண்டு. அதாவது இன்று நாம் வசதியாக அமர்ந்து உண்கிறோம் என்றால் நம்முடைய மூதாதையர்கள் மேட்டில் சைக்கிள் மிதிப்பது போல கஷ்டப் பட்டு சேர்த்த புண்ணியம் தான் காரணமாம். மற்றவர் நலன் நினைக்கமால் சுயநலமியாக இருப்பது அதே சைக்கிளை இறக்கத்தில் செலுத்துவது போலத் தான் இன்று நாம் இருப்பது என்று சொல்வார்கள்.
நம்முடைய அடுத்த தலை முறைக்கு நாம் இருக்கும் புண்ணியங்களை செலவு செய்து விட்டு கஷ்டப் படுத்தப் போகிறோமா இல்லையா என்பது நம் கையில் தான் இருக்கிறது. என்னை பொறுத்த வரையில் இது பாவம் புண்ணியம் என்பது மட்டுமல்ல.

நம்முடைய பெற்றவர்கள் எப்படி எல்லாம் கடினப் பட்டு வளக்கிறார்கள் என்பதை கண்ணைத் திறந்துப் பார்த்தாலேப் போதும்.

இந்த நாள் பெற்றவர்களின் நினைப்பு அதிகமாக வருகிறது. தீபக் எண்ணிற்கு அழைத்தாள். தந்தைக்கு, குழலி எல்லார் என்னும் உபயோகத்தில் இல்லை என்று தான் வந்தது. எல்லாருமே அவரவர் எண்களை மாற்றி விட்டார்கள். குழலி கூட வேலையில் இருந்து விலகி விட்டாள்.
இதற்கு முன்பும் மாமியார் மருமகள் எத்தனையோ முயன்றும் அவர்களைப் பற்றி எந்த விஷயமும் தெரியவில்லை. குழலியும் தொடர்பில் இல்லை. யாருமே இல்லாத அனாதை என்ற எண்ணம் தான் இனியாவை ஆட்டிப் படைத்தது. அதுவே மாமியார் மீதும் வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த கணவன் மீதும் திரும்பியது. அன்னை எத்தனை தடவை சொன்னாள்? தன்னை பற்றி யோசித்து யோசித்து எத்தனை அழுத்திருப்பாள்?

அன்று தனக்காக பிரசவ வலி கண்டவளுக்கு தான் கொடுத்தது இருதய வலி தானே. அப்போதாவது உடனிருந்து பார்த்துக் கொண்டிருக்கலாம்.
இறைவன் கணக்கு தப்புவதில்லை.

இறைவன் பற்றியே நினைப்பதில்லை. சுவற்றில் சாய்ந்து அழுதுக் கொண்டிருந்தவள் மாலையில் குளித்து விட்டு விளக்கேற்றினாள். அப்போது தான் நினைவு வந்தவள் தேதி பார்த்தாள். நாள் தள்ளிப் போய் விட்டது. எப்படியும் ஐம்பது நாட்களை கடந்து விட்டது.

மருத்துவரிடம் சென்று பார்த்தபோது கிட்டத்தட்ட அறுபது நாட்கள் ஆகப் போகிறது என்றார்,
பிறகு வழக்கமான அறிவுரைகள், சில சத்து மாத்திரைகள் கொடுத்தனுப்பினார்.

நிச்சயம் இந்த செய்தி தங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் மனஸ்தாபத்தை போக்கும் என்று நம்பினாள்.

இதை சொன்னால் கணவன் எப்படி எல்லாம் தன்னை கொண்டாடுவான்? கன்னத்தில் முத்தமிட்டு தேங்க்ஸ் சொல்லுவானா? இடுப்பில் கை கொடுத்து தூக்கி சுற்றுவானா?

"இனிமே என் புள்ளைக்காக வேலைக்குப் போக போறேண்டி " பலவிதமான கற்பனைகளுடன் வீட்டுக்கு வர ஆட்டோவில் ஏறியவளுக்கு போனில் அதிர்ச்சி செய்தி வந்தது.

வீட்டுக்கும் வராமல் அப்படியே ஆட்டோவில் ஏறி நல்லவனை அடையாளம் காட்ட சென்றுக் கொண்டிருந்தாள்.

ஏற்கனவே நான் சொன்னபடி கரிகாலன்தான் ரூபாவின் தந்தையை சமாதானம் செய்துக் கொண்டிருந்தான்.

இவள் முகம் பார்த்த நல்லவனோ, "நான் எதுவுமே பண்ணல. என் மேல பொய் கேசு போட்டுருக்காங்க" என்று தன்னிடம் பாவமாகச் சொல்வான் என்ற எதிர்பார்ப்பில் தான் இனியா இருந்தாள். அதை எதிர்பார்ப்பு என்றுக் கூறுவதை விடவும் நம்பிக்கை என்றுச் சொல்லலாம்.

நல்லவன் அவளுக்கு நம்பிக்கை துரோகம் செய்த விஷயம் தான் அவளுக்குத் தெரியாதே. அவனுடைய தற்போதைய தொழில் கட்டப் பஞ்சாயத்துக்கு நண்பர்களுடன் செல்வது. அதற்குத் தான் இந்த கேவலமான அலங்காரமெல்லாம் .
கல்லூரி காலத்தில் ரூட் தல போட்டியில் வென்றவன். இப்போது நண்பர்களுடன் இந்த மாதிரி வேலைகளுக்குச் செல்கிறான். சம்பளம் எதுவும் வருவதில்லை. மற்ற விஷயங்கள் கிடைத்துவிடும். இருப்பினும் மனைவிக்குப் பயந்து எதையும் தீண்டியதில்லை. யாரோ ஒரு தலைவனாம். அவனுடன் சேர்ந்து சுற்றுவது தன்னை ஏரியாவில் பெரிய ஆளாகக் காட்டிக் கொள்வது இந்த விஷயம் எதுவும் நல்லிக்குத் தெரியவில்லை. இப்போது தெரிந்துக் கொண்டாள். அந்த தலைவனைத் தேடி வரும் பல விதமான பெண்கள் பல விதமான வனப்புடன் வரவும் புதுப் பொண்டாட்டி மீது கூட ஆசை குறைந்து விட்டாதா? அல்லது அலுப்பு தட்டிவிட்டதா?

காவலரிடம் இவள் கெஞ்சிப் பார்த்தாள்.

"ஏம்மா ! நீங்கப் படிச்சவங்க தானே. உங்களுக்கு வேற நல்ல ஆளே கிடைக்கலையா? உங்கள பார்த்தா நல்ல குடும்பத்துப் பெண் மாதிரி இருக்கியேம்மா? ஒரே ஒரு தடவை மருத்துவமனையில போய் அந்தப் பெண்ணோட முகத்தைப் பாருங்க. அதுக்கு அப்புறமும் உங்களுக்கு உங்க கணவர் செய்தது சரின்னு தோணினா நீங்க வக்கீல் யாரவது பார்த்து பேசி ஜாமீன் வாங்கிட்டு வாங்க. ஒரே ஒரு நல்ல விஷயம் இவன் ஆசிட் அடிக்கல.

இனியாவும் காவலரும் பேசிக் கொண்டிருக்கும்போதே,

"நீ எதுவும் கவலைப் படாத செல்லம். மாமனை தலைவர் பார்த்துக்குவார் . இன்னும் 24 மணி நேரத்துல நான் வெளில வந்துக் காட்டறேனா இல்லையா பாரு நெஞ்சில் அடித்துக் கூறினான்.

அதற்குள் கான்ஸ்டபிள் ஒருவர் வந்து வேகமாக லத்தியால் ஓங்கி ஒரு அடிப் போட்டார். பெற்றவர்களும் பள்ளி ஆசிரியர்களும் அடித்து வளர்க்கா விட்டால் இப்படி போலீஸ் காரன்கிட்ட அடி வாங்கற நிலைமைதான் வரும். (சரிதானே!)

காவலர் சொல்வதும் சரிதான். இவளுக்கும் மனம் கேட்கவில்லை. அரசு மருத்துவமனைக்குச் சென்று அந்தப் பெண்ணை பார்த்தாள். கண்ணாடி வழியாகத் தான் பார்க்க முடிந்தது. நொடியில் அந்த கோர முகத்தை பார்த்தவளுக்கு சட்டென தூக்கி வாரிப் போட நெருப்பைத் தொட்டது போல பின் வாங்கியவள் பொங்கி வந்த அழுகை பயம் எல்லாவற்றையும், வாயில் கை வைத்து முட்டி அழுத்த படியே ஒரு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தாள்.

விஷயம் கேட்ட பார்வதிக்கும் அதிர்ச்சி தான்.

இருப்பினும் மகனை எப்படியாவது வெளியில் கொண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணம் தான் அவளுக்கு இருந்தது.

மகன் யாரிடம் வேலை செய்கிறான் என்ன செய்கிறான் எல்லாம் அவளுக்குத் தெரிந்திருந்தது.

"அப்ப அவரு என்ன பண்ணறாருன்னு உங்களுக்கு தெரியுமா அத்தை?"

அதிர்ச்சி விலகாமல் மருமகள் கேட்டாள்.

"அவன் என்ன இப்பவா இது செய்யறான். காலேசு போன காலத்துலேர்ந்தே தான் செய்யறான். வயசுக்கு வந்த காலத்துலயே அவனை மாராப்புல முடிஞ்சு வச்சுக்கிட்டியே. இது கூடவா தெரியாது" சர்வ சாதாரணமாகச் சொன்னாள்.

உண்மையிலேயே தன்னிடம் அன்பு இருந்திருந்தால் இப்படிப்பட்டவனுக்கு தன்னை திருமணம் செய்து வைத்திருப்பாளா? தனக்கு நல்லது நினைக்கும் அத்தையின் ஆசீர்வாதம் போதும். அவளின் முட்டாள்தனமான எண்ணம் அவளை பார்த்து கேலியாக சிரித்தது. கண்ணில் இருந்து கண்ணீர் கொட்டியது.

மேனியில் படர்ந்தவன் விஷப் பாம்பு என்று அறிந்து கொள்ளாமல் விட்டு விட்டாள். பாம்பின் அம்மாவும் பாம்புதானே . அசிங்கமான இரட்டை அர்த்தப் பேச்சுக்கள் பார்வதிக்கு கை வந்த கலை. அன்னையை பேசும்போது இளக்காரமாகப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு இப்போது வார்த்தைகள் விஷமாக கொட்ட ஆரம்பித்தது.

'நான் எப்படி ஏமாந்துப் போனேன்?' அவளுக்கு யோசிக்கத் தெரியவில்லை. அவர்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாகவே அவள் நினைத்தாள்.

பின்னாளில் கரிகாலனின் தாய் சொல்லிப் புரிய வைத்தபோது தான், தான் எத்தனை பெரிய முட்டாளாக இருந்திருக்கிறோம் என்பதே அவளுக்குப் புரிந்தது.

சொன்ன படியே மறுநாள் வீட்டுக்கு வந்தான். அவனே எண்ணெய் தேய்த்துக் குளித்தான். மனைவியின் காசில் பெட்ரோல் போட்டு ஊர் சுத்துவதும், பத்தாத போது அன்னையை மிரட்டி காசு பறிப்பதும், கட்டப் பஞ்சாயத்துக்கு போவதும் என்று எப்போதும் தன்னை பிஸியாகவே வைத்துக் கொண்டான். இனி இனியாவுக்கு பயப்படத் தேவை இல்லை. பல நாட்கள் வீட்டுக்கு வருவான். சில நாட்கள் வர மாட்டான். நிறைய நேரம் போதையில் இருப்பான். தினமும் ஓசியில் கிடைத்த சாராயம் போலும்.

"நீங்க அப்பாவாக போறீங்க. நான் அம்மாவாகப் போறேன். நமக்கு பாப்பா வர போகுது" எப்படி அவனிடம் சொல்வது பல முறை யோசித்து விஷயத்தை அவனிடம் சொன்னாள்.

நம்ம வீட்டுக்கு ஒரு குட்டி பாப்பா வரப் போறாங்க. அவளையும் அறியாமல் கண்கள் மின்னியது. கன்னங்கள் சிவந்தன. அருகில் வந்து நின்று அவளை ஆராய்ந்தவன் அவள் காது அருகில் வந்தான்.
வெகு நாளைக்கப்புறம் கிடைத்த அவனின் மேனி வாசம். உஷ்ணமான மூச்சுக் காற்று. காதல் கணவன் கொடுக்க போகும் முத்தங்களுக்காக முகம் சிவக்க காத்திருந்தாள்.

அவனோ கூசாமல், "யாரு அப்பா?" என்றான்.

நொடியில் பதறி விலகினாள்.

"இல்ல ! நானோ பாதி நாள் வீட்டுலையே இருக்கறதில்ல. அப்புறம் எப்படி?"

நாக்கை உள் கன்னத்தில் வைத்த உதடு சுளித்து கேட்டான்.

"என்ன மாமா என்னப் பார்த்து இப்படி கேக்க உனக்கு எப்படி மனசு வந்துச்சு? வெறி பிடித்தவள் போல அவன் சட்டையை பிடித்து உலுக்கினாள்.

"ஏ! சீ ! சும்மா டிராமா பண்ணிக்கிட்டு. போ! அந்தால" அவளை வேகமாக மூலையில் தள்ளி விட்டு வெளியில் சென்று விட்டான். அன்று முதல் இருவருக்குமே பேச்சு வார்த்தை இல்லை. கணவனின் பாராமுகம், பார்வதியின் கொடுமைகள், அலுவலக பிரஷர் எல்லாம் சேர்ந்து அவள் பாடாத பாடு படுத்தியது.

அப்போது ஒருநாள்..........

மீன் துடிக்கும்..........
 
Last edited:

Author: Ilampillai
Article Title: கடல் தேடும் மீன்கள் -11
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
222
பெற்றவர்களை
புரிந்து கொள்ளாத பெண்களின் நிலை
படிக்க பிடிக்க உண்மையை படம் பிடித்து வலிக்க உரக்கச் சொல்லுது....
 
Top Bottom