• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

உனதன்பின் கதகதப்பில் 14

Dhakai

Member
Joined
Mar 23, 2025
Messages
69
"புருஷனைப் பார்த்ததும் நாய்க்குட்டி மாதிரி இந்த மனசு பின்னாடியே போய்டுதே" என்று மனத்திற்குள் நினைத்தவளாய் கண்ணாடியைப் பார்த்தவாறு தலைவாரிக் கொண்டிருந்த கணவனைப் பார்த்திருந்தாள் சுந்தரலட்சுமி.

மடியில் தலையணையை வைத்து அதன் மேல் அடிப்பட்ட கையை வைத்தவாறு அமர்ந்திருந்த சுந்தரியைப் பார்த்த செந்தில் அவளருகில் வந்து அமர்ந்தவனாய், "எப்ப நம்ம வீட்டுக்கு வருவ சுந்தரி?" எனக் கேட்டான்.

இவனிடம் பேச வேண்டும் என நினைத்து வைத்திருந்த விஷயங்கள் எல்லாம் அவளின் மூளைக்குள் அப்பொழுது தான் ஊர்வலம் போக, "உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்றாள் அவள்.

நேற்றே அவளின் அன்னை இவன் மீதும் இவனின் அன்னை மீதும்‌ குற்றம் சாட்டிப் பேசியதில் கோபம் உண்டாக, இவளின் சூழ்நிலைக் கருதி அடங்கி இருந்தவனுக்கு இப்பொழுது அவள் பேச வேண்டுமென உரைத்ததும்,

"நானும் உன்கிட்ட பேசனும்னு நேத்தே நினைச்சேன்" என்றவன் சிறிது தயங்கியவனாய்,

"அம்மாவைப் பத்தி யாருக்கிட்டயும் குறையாப் பேசாத சுந்தரி" அறிவுரைப் போல் உரைத்தான்.

"நான் யாருக்கிட்டயும் அத்தையைப் பத்தி எதுவும் சொல்லலையே!" என்று யோசனையுடன் இவள் கூற,

"நேத்து உங்க அம்மா எங்க அம்மாவைப் பத்தி பேசினதைத் தான் சொல்றேன். என்னமோ அம்மா உன்னைக் கொடுமைப்படுத்தின மாதிரி பேசுறாங்க. வெளில இருக்கிறவங்க கேட்டா என்ன நினைப்பாங்க?" என்றவன் சொன்னதும் கோபம் கொண்டவளாய்,

"அம்மா! அப்பா இங்கே வாங்க" என்று அவள் கத்திய சத்தத்தில் அவள் அறைக்கு வந்திருந்தனர் இருவரும்.

"நான் இங்கே வந்ததிலிருந்து என்னோட புகுந்த வீட்டைப் பத்தியோ இல்ல புகுந்த வீட்டு ஆளுங்களைப் பத்தியோ எதுவும் குறையா சொன்னேனா உங்ககிட்ட?" என்று கேட்டிருந்தாள்.

திடீரென்று அவள் அவ்வாறு அழைத்துக் கேட்டதில் அவளைக் கண்டனப் பார்வைப் பார்த்தவனாய் மாமனார் மாமியாரைப் பார்த்து விழித்தான் செந்தில்.

"இல்லையேமா!" என்று முகுந்தனும்,

"நானும் தான் விதவிதமா கேட்டேனே! நீ வாயைத் திறக்கவே இல்லையே! முன்னாடி நீ உன் மாமியார் கூடச் சேர்ந்து சமைக்க முடியாம கஷ்டப்படுறதைச் சொல்லி வருத்தப்பட்டதை நினைச்சு நேத்து நானே தான் பேசினேன்" என்ற செல்வராணி,

"என்னாச்சு? ஏன் ரெண்டு பேரும் இப்படி மூஞ்சைத் தூக்கி வச்சிட்டு இருக்கீங்க?" எனக் கேட்டார்.

இரண்டு பேருமே வாயை மூடிக் கொண்டு அமைதியாக இருக்க, பிரச்சினைக்கான காரணத்தை யூகித்தவராய், "நேத்து நான் உங்கம்மாவைப் பத்தி பேசினது என்னோட யூகம் தான் தம்பி. லட்சுமி சொல்லி நான் உங்களை அப்படிக் கேட்கலை. இதை மனசுல வச்சிக்கிட்டுச் சண்டைப் போடாதீங்க" என்றவராய் வெளியே சென்று விட, முகுந்தனும் அறையை விட்டு வெளியே சென்றார்.

"நல்லா காதுல விழுந்துச்சா? நம்ம வீட்டுப் பிரச்சினையை இது வரைக்கும் வெளில யார்கிட்டேயும் நான் சொன்னதே இல்லை. ஆனா உங்கம்மா என்னைப் பத்தி உங்க அத்தைக்கிட்ட தினமும் புகார் வாசிச்சிட்டு தான் இருக்காங்க" என்று கோபத்துடன் உரைத்த சுந்தரலட்சுமி,

"அம்மா எப்படி இருந்தாலும் பொறுத்துப் போனு எனக்கு எத்தனை தடவை அட்வைஸ் செஞ்சிருப்பீங்க செந்தில். ஒரு தடவையாவது அத்தைக்கிட்ட போய்ச் சுந்தரி மனசு கஷ்டப்படுற மாதிரி பேசாதமானு சொல்லிருப்பீங்களா? உங்க அம்மா என்ன செஞ்சாலும் நான் மட்டும் அடங்கிப் போகனும். ஆனா உங்கம்மா என்னைப் பத்தி ஊர் ஊரா கெட்ட மருமகனு பேசுவாங்க. என் காதுபடவே சண்டாளி பாவி குடும்பத்தைப் பிரிக்க வந்தவனு பேசுவாங்க, நான் புத்தர் மாதிரி அமைதியா பொறுத்துப் போகனும். அப்படித் தானே! ஆனா அந்தளவுக்குப் பொறுமைசாலி நான் இல்லங்க. இதுக்கு மேலயும் என்னால பொறுத்துப் போக முடியாது. எப்ப நீங்க மாடில வீடு கட்டித் தரீங்களோ அப்ப தான் நான் அங்கே வருவேன். அது வரைக்கும் இங்கே தான் இருப்பேன்" என்றவள் உரைத்ததைக் கேட்டு அதிர்ந்து பார்த்தவன் கோபக் குரலில், "இது தான் உன் முடிவா?" எனக் கேட்டான்.

"ஆமா இது தான் என் முடிவு" அழுத்தமாய் உரைத்த மனைவியின் குரலில் கோபம் தலைக்கேற கையிலிருந்த சீப்பைத் தூக்கி எறிந்தவனாய் விறுவிறுவென அங்கிருந்து சென்றிருந்தான் செந்தில்.

பெரும் கோபத்துடன் தனது வண்டியை இயக்கியவனாய்ப் பயணித்திருந்த செந்திலின் மனசாட்சியும் மூளையும் தர்க்கம் செய்து கொண்டிருந்தன.

'ரெண்டு நாள் உங்களைப் பார்க்காம மிஸ் செஞ்சேன்னு சொன்ன மனைவி இன்னிக்கு அப்படிப் பிரிஞ்சி வாழ்ந்தாலும் பரவாயில்ல அந்த வீட்டுக்கு வர மாட்டேன்னு சொன்னா, அவ எந்தளவுக்கு இங்கே கஷ்டப்பட்டிருப்பா' என்று எடுத்துக் கொடுத்தது மனசாட்சி.

"அதுக்காக வீட்டுக்கு வர மாட்டேன்னு சொல்லுவாளா?" என்றது மூளை.

"உன் வீட்டுக்கு வந்து தான் எனக்குப் பிபி வந்துருச்சு. அந்தளவுக்கு எனக்கு அழுத்தம் கொடுக்கிற வீட்டுக்கு நான் போய் வாழ்ந்து என்ன சாதிக்கப் போறேன்னு தானே அவ யோசிப்பா" என்றது மனசாட்சி.

இவ்வாறாக மூளையும் மனசாட்சியும் மாறி மாறிப் பேசியதில் இறுதியாக, 'இப்படியே போச்சுனா ஒரு நாள் மொத்தமா உன்னை விட்டு பிரிஞ்சி போய்ட போறா செந்தில். ஜாதகத்துல வேற அப்படித் தான் இருக்குனு உங்கம்மா சொன்னாங்களே' என்று மூளை எடுத்துக் கொடுத்ததில் அப்படியே சர்ரெனப் பிரேக்கை பிடித்து வண்டியை நிறுத்தினான் செந்தில்.

'இல்ல அப்படிலாம் சுந்தரி என்னை விட்டு போய்ட மாட்டா' என்று உள்ளுக்குள் அவன் கூறிக் கொண்டாலும், அடியாழ மனமோ 'அப்படி ஏதேனும் நடந்தால் என்ன செய்வாய்?' என்று கேள்வி எழுப்பியது.

சுந்தரலட்சுமி தன்னை விட்டு பிரிந்து போவதை நினைத்தாலே மனதை பிசைய பயம் நெஞ்சைக் கவ்வியது.

"இல்ல அப்படிலாம் நடக்காது! நாங்க குழந்தை குட்டியோட சந்தோஷமா வாழுவோம்" என்று தனக்குள்ளேயே கூறிக் கொண்டவனாய் வீட்டை அடைந்திருந்த செந்திலிடம், "அம்மானு இங்கே ஒருத்தி தனியா இருப்பாளேனு நினைப்பு இல்லாம போச்சுல உனக்கு" என்று தொடங்கினார் மீனா.

"வாயை மூடுமா" என்று கத்தியிருந்தான் செந்தில்.

ஏற்கனவே பலவித சிந்தனையும் மனக்கவலையுமாய் வந்திருந்தவனுக்குத் தாயின் இப்பேச்சு அவனது மொத்த கோபத்தையும் அவர் மீது திருப்பியிருந்தது.

அவனின் கத்தலில் திகைத்து விழித்து அவனை அவர் பார்க்க,

"உன்னால தான் உன் வாயால தான் இப்படித் தனியா இருக்கிற நிலைமையே உனக்கு வந்திருக்கு அம்மா! கொஞ்சம் உன் வாயை அடக்கிருந்தீனா இப்ப இந்தப் பிரச்சினை எல்லாம் வந்திருக்குமா?" என்று காட்டமாய்க் கேட்டிருந்தான்.

"என்னடா என்னாச்சு? ஏன் இப்படிப் பேசுற? அந்தச் சிறுக்கி எதுவும் என்னைப் பத்தி வத்தி வச்சாளா?" என்று படபடப்புடன் மீனா கேட்கவும், இவனது அடிவயிற்றில் இருந்து அக்கினியாய் கோபம் பொங்கி வர,

"என் பொண்டாட்டி என் கூட வாழ மாட்டேன்னு சொல்லிட்டா! அதுக்குக் காரணம் நீ மட்டும் தான்மா" என்று அமிலப் பார்வை வீசியவனைப் பார்த்து,

"நான் என்னடா பண்ணேன்!" என்று பாவமாய்க் கேட்டிருந்தார் மீனா.

"நீ மட்டும் அவக்கிட்ட மாமியார் மாதிரி இல்லாம அம்மா மாதிரி நடந்துக்கிட்டு இருந்திருந்தீனா இந்த வீட்டுல நாம கூட்டுக் குடும்பமா வாழ்ந்திருக்கலாம். இப்ப நான் தனியா தான் இருப்பேன்னு அடம்பிடிச்சிட்டு அம்மா வீட்டை விட்டு வர மாட்டேங்கிறா என் பொண்டாட்டி. அதுக்குக் காரணம் நீ மட்டும் தான்மா" என்றவன் நெஞ்சுக் கொதிப்புடன் உரைக்க,

"எல்லாம் திமிரு! தான் சம்பாதிக்கிறோம்ங்கிற திமிரு அவளுக்கு" என்று பொங்கினார் மீனா.

"யாருக்கு திமிரு? அப்படி அவ திமிருப்பிடிச்சவளா இருந்திருந்தா என்னைக் கல்யாணம் செய்யவே ஒத்துக்கிட்டு இருந்திருக்க மாட்டாமா! அவ என்னைக் கல்யாணம் செய்ற தகுதில நான் இல்லவே இல்லை. ஆனா இது வரைக்கும் அதைப் பத்தி அவ பேசினதே இல்லை. அவ வீட்டுக்கும் இந்த வீட்டுக்கும் எவ்ளோ வித்தியாசம்! அந்த வீட்டுல வாழ்ந்தவ ஒரு குறையும் சொல்லாம தானே இந்த வீட்டுல வாழ்ந்தா! நீ தான் அவளைக் கொடுமைப்படுத்தி இப்ப என்னை விட்டு பிரிஞ்சி போக வச்சிருக்க!

நாமளே நம்ம அம்மாவை விட்டுக் கொடுத்து பேசிட்டா மத்தவங்களுக்கு இளக்காரமா போய்டுமே குறிப்பா என் மனைவிக்கு உன் மேல இருக்க மரியாதை போய்டுமேனு உனக்காக எல்லார்கிட்டயும் நான் சண்டைப் போட்டுட்டு வந்தா, நீ என் வாழ்க்கையைப் பிரிக்கிற வேலைய செஞ்சிட்டு இருக்கியே! உனக்கே இது நியாயமா இருக்கா மா" என்று அவன் ஆத்திரத்துடன் முடிக்கவும்,

"நான் என்னடா செஞ்சேன்?" என்றார் மீனா.

"உன் மருமகளைக் கைக்குள்ள வைக்கிறேன்னு நீ செஞ்ச காரியம் தான் இப்ப இந்த நிலைமைல என்னைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. அவ விருப்பப்படி ஒரு நாளாவது அவளை இங்கே வாழ விட்டியா?" எனக் கேட்டான் செந்தில்.

"இல்லடா காஞ்சனா அண்ணி தான் படிப்புலயும் வேலைலயும் உசரத்துல இருக்க மருமகளை மொதல்லயே அதட்டி கைக்குள்ள வச்சிக்கனும். விட்டுட்டா அப்புறம் பிடிக்க முடியாது, கடைசிக் காலத்துல என்னை முதியோர் இல்லத்துலக் கொண்டு போய் விட்டுருவானுலாம் சொன்னாங்க" என்று அவர் பேசிக் கொண்டே போக,

"அவங்க சொன்னா உனக்கு அறிவு எங்கே போச்சுமா? நான் அவங்களை விட மேலே வளர்ந்துடக் கூடாதுனு உன் மூலமா என் வாழ்க்கையைக் கெடுக்கப் பார்க்கிறாங்க உன் அண்ணன் குடும்பம். அது உனக்குப் புரியதா இல்லையா? நானும் சொந்தம் விட்டுப் போய்டக் கூடாதேனு என்னை வளர்த்து ஆளாக்கின நன்றிக்கடனுக்கு அமைதியா போனா, அது இப்ப என் வாழ்க்கையையே உலை வைக்கிற அளவுக்கு வந்து நிக்குது. இனி ஒரு நேரம் நீ அத்தைக்கிட்ட என்னைப் பத்தியோ சுந்தரி பத்தியோ ஏதாவது பேசினேன்னு தெரிஞ்சிது இங்க கொலை விழும்" என்று கர்ஜனையாய் உரைத்தவன் மீனாவின் கைப்பேசியை வாங்கி மாமா குடும்பத்தினர் அனைவரின் எண்களையும் பிளாக் செய்து விட்டான்.

"வேற ஏதாவது நம்பர்லருந்து போன் வந்தாலும் பேசக் கூடாது சொல்லிட்டேன்" என்று எச்சரித்தவனாய் மனச்சூடு தணிய குளித்து விட்டு உண்ணாது கடைக்குக் கிளம்பிச் சென்றான்.

மகனின் பேச்சில் கண்ணீர் சிந்தியவராய் பெரும் வருத்தத்துடன் அமர்ந்திருந்தார் மீனா. மகன் இவ்வாறு பேசுவதற்குச் சுந்தரி தான் காரணமெனத் தீர்க்கமாக நம்பினார். ஆயினும் மகனை மீறி அண்ணன் குடும்பத்தினருடன் பேசவும் அவருக்கு மனமில்லை.

கோபத்துடன் வீட்டிலிருந்து வந்த செந்தில் சிறிது நாளிற்காவது தன்னிடம் பேசாமல் இருப்பான் என நினைத்திருந்த சுந்தரலட்சுமியின் எண்ணத்திற்கு எதிர்பதமாய் மதியமே புலனத்தில், "சாப்பிட்டியா?" என்று அனுப்பியிருந்தான் செந்தில்.

அவன் அனுப்பிய செய்தியில் அகமகிழ்ந்தவளாய், "சாப்பிட்டேன். நீங்க சாப்டீங்களா?" என்றவள் கேட்டதற்குப் பதில் அளிக்கவில்லை அவன்.

அடுத்து வந்த நாள்களிலும் இதையே தொடர்ந்தான் அவன். அவளின் உடல்நிலைக் குறித்தும் அவள் உண்டு விட்டாளா என்றும் கேட்பவன், அவனைக் குறித்து அவள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் புறக்கணித்தான்.

ஏதோ வகையில் கணவன் தன்னிடம் பேசினால் போதும் என்று இவளும் பெரிது படுத்தாமல் நாள்களைக் கடத்தினாள்.

அன்றாடம் செந்தில் மூன்று வேளையும் வீட்டில் உண்டாலும், தாயுடன் பேசுவதை முற்றிலுமாய்த் தவிர்த்தான். அவனின் இச்செயலில் மேலும் புண்பட்டுப் போனார் மீனா.

தாய் மற்றும் மனைவியிடம் ஒதுக்கத்துடன் பழகிய செந்திலின் செயலில் இருவருமே துயருற்றனர்.

ஒரு மாதத்தில் கார்த்திக் பணம் தந்ததும் வீட்டு வேலையைத் தொடங்கி விடலாம் என்று நினைத்திருந்த செந்திலின் எண்ணத்தில் தீயை வைப்பது போல் பணத்தைத் தராமல் தள்ளிக் கொண்டே போனான் கார்த்திக்.

இதற்கு மேல் அவனை நம்பினால் வேலைக்கு ஆகாது என்று தன்னுடைய சேமிப்பை எல்லாம் திரட்டி மாடி வீட்டு வேலையைத் தொடங்கினான்.

மகன் தன்னைப் புறகணிப்பதில் நொந்து போன மீனா, ஒரு முடிவுடன் சுந்தரலட்சுமியின் வீட்டிற்குச் சென்றிருந்தார்.
 

Author: Dhakai
Article Title: உனதன்பின் கதகதப்பில் 14
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
222
சூப்பர்....
சுந்தரின் ஆதங்கம்
செந்திலின் கோவம்
சரியே ஆனால்
சத்தமாக பேசியோ
சண்டை போட்டால்
சரி ஆகி விடுமா?????
 

Goms

New member
Joined
Apr 28, 2025
Messages
20
செந்திலின் நிலை பாவம்தான் 🙄😔
 

Dhakai

Member
Joined
Mar 23, 2025
Messages
69
சூப்பர்....
சுந்தரின் ஆதங்கம்
செந்திலின் கோவம்
சரியே ஆனால்
சத்தமாக பேசியோ
சண்டை போட்டால்
சரி ஆகி விடுமா?????
அதே தான். மிக்க நன்றி சிஸ் ❤️
 

Dhakai

Member
Joined
Mar 23, 2025
Messages
69
செந்திலின் நிலை பாவம்தான் 🙄😔
ஆமா ஆமா. பல ஆண்களின் நிலை இது தான். சமாளிக்கனும். மிக்க நன்றி சிஸ் 🙏
 
Top Bottom