• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

உனதன்பின் கதகதப்பில் 10

Dhakai

Member
Joined
Mar 23, 2025
Messages
69
ஏதோ பெருத்த யோசனையுடன் இரவுணவை உண்டு கொண்டிருந்த மகளிடம், "வேலைலாம் எப்படிப் போகுதுமா?" எனக் கேட்டு அவளின் சிந்தனையைக் கலைத்தார் தந்தை முகுந்தன்.

"ஹ்ம்ம் எப்பவும் போலப் போகுதுப்பா" என்றாள்.

"உன்னோட வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்கமா?" எனக் கேட்டார்.

"அவங்கலாம் நல்லா தான் இருக்காங்கப்பா. எனக்குத் தான் பிக்பாஸ் வீட்டுல நூறு நாள் இருந்துட்டு வந்த மாதிரி இருக்கு" சிரிப்புடன் அவள் கூறவும், கேள்வியாய் அவளைப் பார்த்தனர் தாயும் தந்தையும்.

அவர்களின் பார்வையைப் பொருட்படுத்தாதவளாய் சற்றுத் தயக்கத்துடன், "நான் கொஞ்ச நாள் இங்கே இருந்துக்கவாப்பா" எனக் கேட்டாள்.

"கொஞ்ச நாள்னா எத்தனை நாளு? அங்கே எதுவும் பிரச்சினை பண்ணிட்டு வந்திருக்கியாடி" என்று பதறிக் கொண்டு கேட்டார் செல்வராணி.

"செல்வா என்ன பேச்சு இது?" என்று மனைவியைக் கண்டித்தவர் மகளிடம், "என்னம்மா புதுசா நம்ம வீட்டுல இருக்கிறதுக்குப் பர்மிஷன்லாம் கேட்டுட்டு இருக்க" என்றார்‌.

தந்தையின் பேச்சில் புன்னகைத்தவளாய், "நீ கவலைப்படாதமா! நான் ஒன்னும் இங்கேயே இருக்க வரலை. செந்தில்கிட்ட சில விஷயங்கள் பேசி முடிவெடுக்க வேண்டியது இருக்கு. அது வரைக்கும் தான் இங்கே இருப்பேன்" என்றவளாய் கையைக் கழுவி விட்டு படுக்கையறைக்குள் செல்ல,

"என்னங்க இவ இப்படிச் சொல்றா? எதுவும் பெரிய பிரச்சினையா இருக்குமோ! எனக்குப் பயமா இருக்குங்க" என்றார் செல்வராணி.

"அவ ரிலாக்ஸ்ஸா இருக்கனும்னு இங்கே வந்திருக்கா செல்வா. அவளால மாப்ளையை விட்டு ரொம்ப நாள்லாம் பிரிஞ்சி இருக்க முடியாது. நீ மனசைப் போட்டுக் குழப்பிக்காத" என்று மனைவியைச் சமாதானம் செய்தார்.

இரவு பத்து மணியளவில் கடைப்பணியை முடித்து விட்டு வீட்டுக்கு வந்த செந்தில், தனது மனைவி வீட்டில் இல்லாதிருப்பதைக் கண்டு தாயிடம் வினவ, "உன்கிட்ட சொல்லிருப்பானு நினைச்சேனே! சொல்லலையா? அவ அம்மா வீட்டுக்குப் போறதா போன் செஞ்சி சொன்னா!" என்றார் மீனா.

உடனே அவளின் கைப்பேசிக்கு கோபத்துடன் அழைப்பு விடுத்தவனாய் மாடிக்குச் சென்றான் செந்தில்.

அவள் அழைப்பை ஏற்றதும், "எங்கே இருக்க சுந்தரி?" கோபமான குரலில் கேட்டிருந்தான்.

"அத்தை உங்ககிட்ட சொல்லலையா?" எனக் கேட்டாள் இவள்.

"கடுப்பேத்தாத சுந்தரி! எதுக்கு இப்ப சொல்லாம கொள்ளாம அங்கே போய் உட்கார்ந்திருக்க?" எனக் கேட்டான்.

"மனநிம்மதிக்காகத் தான்" என்றவள் அமைதியாய்ச் சொன்னதும் மேலும் கோபம் ஏற,

"அப்ப இங்கே உன்னை யாரும் நிம்மதியா இருக்க விடலைனு சொல்றியா?" எனக் கேட்டான்.

"அது நான் வேற என் வாயால சொல்லனுமா?" என்றவள் கேட்டதும் கடுப்பானவனாய், பட்டெனக் கைப்பேசி இணைப்பைத் துண்டித்தான்.

இங்குத் தாய் வீட்டில் தனது படுக்கையறையில் படுத்திருந்த சுந்தரலட்சுமிக்கு கணவனின் இந்தச் செயலில் கடுங்கோபம் வந்தது.

உடனே அவனது கைப்பேசிக்கு அழைத்தாள்.

அவன் அழைப்பையேற்ற மறுநொடி, "இப்படிப் பேசிட்டு இருக்கும் போதே கட் செய்றது எனக்குப் பிடிக்காதுனு உங்களுக்கு எத்தனை தடவை நான் சொல்லிருப்பேன். எனக்கு மூஞ்சில அடிச்சா மாதிரி ஃபீல் ஆகுதுனு இதுக்கு விளக்கம் கூடச் சொல்லிருக்கேன். ஆனா இப்ப வரைக்கும் எனக்கு அது பிடிக்கலைனு செய்யாம இருக்கீங்களா என்ன? என் பேச்சை மதிக்காத இடத்துல நான் எதுக்கு இருக்கனும்? அதான் அம்மா வீட்டுக்கு வந்துட்டேன். போதுமா விளக்கம்" கோபத்துடன் சத்தமாய்க் கத்தியவாறு கூறியவள் உடனே இணைப்பைத் துண்டித்தாள்.

கோபத்தில் மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க அங்கிருந்த தண்ணீரை எடுத்துப் பருகி தன்னைச் சமன்படுத்தினாள்.

'அவருக்கு மட்டும் தான் தன்மானம், கௌரவம், சுயமரியாதைலாம் இருக்குமா? ஏன் எனக்கு அந்த ஈர வெங்காயம்லாம் இருக்காதா?' மனத்திற்குள் பொருமியவளாய் படுத்து விட்டாள் சுந்தரலட்சுமி.

அவளின் பேச்சு வெளியில் இருந்த பெற்றோர்களின் செவியில் தெளிவாய் விழவும் மகளின் வாழ்வை எண்ணி செல்வராணி கவலைக் கொள்ள, "கல்யாண வாழ்க்கைல இதெல்லாம் சகஜம் செல்வா! அவளால ஹேண்டில் செய்ய முடியாதுனு தோணும் போது நம்மகிட்ட தானே வந்து நிப்ப! அப்ப பார்த்துக்கலாம். ஃப்ரீயா விடு" என்றார் முகுந்தன்.

அன்றிரவு மாடியிலேயே கயிற்றுக் கட்டிலில் படுத்த செந்திலுக்கு உறக்கம் எட்டாக்கனியாகிப் போக, திருமணத்திற்குப் பிறகான நிகழ்வுகள் மனத்தினுள் ஊர்வலம் போயின.

சுந்தரலட்சுமியை மணம் செய்ய நிச்சயித்த போதே, அவளுக்கென ஒரு மகிழுந்தை வாங்க வேண்டுமெனவும், தனது வீட்டை விரிவாக்கம் செய்திட வேண்டுமெனவும் திட்டமிட்டிருந்தான் செந்தில்.

திருமணத்தைத் தள்ளிப் போட்டால் ஏதேனும் தடங்கலாகி திருமணம் நின்று விடுமோ என்ற பயத்தில் தான் உடனே திருமணம் வைக்கச் சம்மதித்தான் செந்தில். அதனாலேயே அவனால் உடனடியாக வீட்டை விரிவுப்படுத்தும் பணியைத் தொடங்க முடியவில்லை. திருமணமான பின்பு மூன்று மாதங்கள் கழித்து வீட்டு வேலையைத் தொடங்கி விடலாம் என்று திட்டமிட்டவன், திருமணத்தன்றே அவளுக்கு மகிழுந்தை வாங்கிக் கொடுத்து சர்ப்ரைஸ் செய்யலாம் என்று நினைத்திருந்தான்.

அதற்காகக் காரின் விலையைப் பற்றி, அதன் கம்பெனிகளைப் பற்றி முரளியிடம் தான் விசாரித்தான். அதன் மூலம் செந்திலின் திட்டத்தைப் பற்றி அறிந்த காஞ்சனா, முரளிக்கும் அச்சமயம் பணம் தேவையாக இருக்கவும், செந்திலிடம் வாங்கிக் கொள்ளுமாறு கூறிவிட்டார்.

மாமாவின் மேல் நன்றியுணர்வுடன் இருக்கும் செந்திலும் முரளி கேட்டதும் மறுக்க முடியாமல் கொடுத்து விட்டான்.

இவை எதையும் அறியாது இருந்த சுந்தரலட்சுமிக்கு அவர்கள் தேனிலவுக்குப் போய்விட்டு வந்த ஒரு வாரத்தில் காஞ்சனா மூலமாகவே இவையனைத்தும் தெரிய வந்தன.

தேனிலவு போய்விட்டு வந்த அந்த வாரயிறுதி நாளில் மறு வீட்டு சடங்கிற்காகச் செந்திலின் தாய்மாமா வீட்டிற்குச் சென்றிருந்தனர் இருவரும்.

மூன்று அடுக்கு மாடியாய் இருந்த அவர்களின் வீட்டைப் பார்த்தவளாய் பைக்கில் இருந்து இறங்கியவள், "நம்ம வீட்டை விடப் பெரிய வீடுல செந்தில்? ஆனா இவங்க நம்மளை மாதிரி வாடகைக்கு விடலைல" எனக் கேட்டாள்.

ஆமெனத் தலையசைத்தவனாய், "முரளி அவனோட குடும்பத்தோட முதல் மாடிலயும் கார்த்திக் ரெண்டாவது மாடிலயும் இருக்கானுங்க. மூனு மாடிக்கும் தனித்தனி சமையல் தான். கிரவுண்ட் ஃப்ளோர்ல மாமா அத்தை இருக்காங்க. அவங்களுக்குச் சமைக்க வேலைக்காரங்களை வச்சிருக்காங்க" என்றான்.

"நம்ம வீட்டுலயும் சமையலுக்கு வேலைக்காரம்மாவை வச்சிக்கலாமா செந்தில்?" எனக் கேட்டாள்.

"அதான் அம்மா இருக்காங்களே! எதுக்கு வேலைக்காரங்க?" என்று கேட்டவனுக்கு,

'படிச்ச பொண்ணு குடும்பத்தைப் பிரிச்சிடும்னு காஞ்சனா அண்ணி சொல்றாங்க செந்திலு' என்று திருமணத்திற்கு முந்தைய தினம் அவனது தாய் அவனிடம் கவலையுடன் புலம்பியது நினைவிற்கு வந்தது‌.

அதற்குள் இருவருமாய் வீட்டிற்குள்ளே சென்றிருக்க, அத்துடன் இப்பேச்சு அக்கணம் தடைப்பட்டு நின்று போனது. பின்பொரு நாள் இதுவே பெரும் பிரச்சினையாய் இவர்களுக்குள் வெடிக்கப் போவதை அப்பொழுது அறிந்திருக்கவில்லை இருவரும்.

முரளி மற்றும் கார்த்திக்கும் அவரவரது குடும்பத்தினருடன் கீழ் வீட்டினிலேயே இருக்க, அங்கிருந்த விருந்துணவை வேலைக்காரர்கள் பரிமாற அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்டனர்.

அச்சமயம் காஞ்சனா மட்டுமே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

"செந்திலு இந்த ஊருக்கு வந்தப்ப என் புருஷன் மட்டும் இல்லாம இருந்திருந்தா நடுத்தெருவுல தான் நின்னிருப்பான். அவன் இப்ப தொழில் செஞ்சி இந்த நிலைல இருக்கிறதுக்கு நாங்க தான் முக்கியக் காரணம். அதுக்கான நன்றியுணர்வு அவனுக்கு எப்பவுமே உண்டு. அதான் என் மவன் அவன்கிட்ட பணம் கேட்டதும் பத்து லட்சத்தை உடனே தூக்கிக் கொடுத்தான். தன்னோட கல்யாணத்தை வச்சிட்டு இப்படிக் கொடுக்க யாருக்கு மனசு வரும்" என்றவர் பேசிக் கொண்டே போக,

'என்னது பத்து லட்சமா?' என்று அதிர்வுடன் செந்திலைப் பார்த்தாள் சுந்தரலட்சுமி.

"நீயும் செந்தில் மாதிரி எங்ககிட்ட நடந்தக்கனும்னு தான் இதெல்லாம் சொல்றேன்மா" என்று காஞ்சனா பேச்சை நிறுத்தவும்,

'என் புருஷன் மாதிரியே என்னையும் இவங்களுக்கு அடிமையா இருக்கனும்னு சொல்றாங்களா? நான் ஏன் அப்படி இருக்கனும்' என்பது போல் காஞ்சனாவைப் பார்த்திருந்தாள்.

'பத்து லட்சத்தைக் கொடுத்திருக்காரு! ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லனும்னு தோணலையா?' என்று கோபமாய் அவனை முறைத்தாள் சுந்தரலட்சுமி.

தான் கூறியதைக் கேட்டு அவள் செந்திலைக் கோபமாய் முறைப்பதைப் பார்த்து மனத்திற்குள் குதூகலித்தார் காஞ்சனா. செல்லத்துரையிடம் கண் ஜாடைக் காட்டிப் பார்க்கச் சொன்னார்.

"எதுக்குமா அவனைக் கோபமா மொறைக்குற? நீ மொறைக்குறதைப் பார்த்தா இனி செந்திலை எங்களுக்கு எந்த உதவியும் செய்ய விட மாட்ட போலயே" என்று காஞ்சனா நேரடியாக அவளை வம்பிழுக்க,

செந்தில் சுந்தரலட்சுமியைப் பார்த்து இடவலமாய்த் தலையசைத்து எதுவும் பதில் பேசாதே என்று சைகைச் செய்தான்.

அதைக் கண்டு கொள்ளாது இதழில் ஒட்டவைத்த புன்னகையுடன் காஞ்சனாவைப் பார்த்தவளாய், "ஆத்துல போட்டாலும் அளந்து போடனும்னு பெரியவங்க சொல்வாங்க தானே. அதனால இனி அளவா தான் என் புருஷன் உதவி செய்வாரு" என்று விட்டாள்.

'எவ்ளோ நேக்கா இனி என் புருஷன் உங்களுக்குப் பணத்தை அள்ளித் தர மாட்டாருனு சொல்லிடுச்சு இந்தப் பொண்ணு' என்று முரளி மற்றும் கார்த்திக்கின் மனைவிகள் வாய்க்குள் சிரித்திருக்க, "சரி தான். பொண்டாட்டி வந்ததும் இப்படிப் பெட்டி பாம்பா அடங்கிட்டியேடா செந்திலு. என் மாமா அத்தைக்கு நான் செய்வேன் அதைக் கேட்க நீ யாருனு உன் பொண்டாட்டியைக் கேட்க மாட்டியா நீ" என்றார் காஞ்சனா.

அவளை வம்பிழுத்தால் வேலைக்கு ஆகாது என்று தெரிந்ததும் செந்திலை வம்பிழுத்தார்.

காஞ்சனா அவ்வாறு சொன்னதில் சுந்தரலட்சுமி மீது தான் கோபம் வந்தது அவனுக்கு. தான் சொன்னதை மீறி அவள் பேசியதால் தானே இவர் இவ்வாறு தன்னைக் குறித்துப் பேசுகிறார் என்று கோபம் கொண்டான் செந்தில். அதனால் அமைதியாய் உண்டு கொண்டிருந்தவன், "எப்பவும் என்னை யாரும் கண்ட்ரோல் செய்ய முடியாது அத்தை. நான் நினைச்சதை தான் செய்வேன்" என்றவனாய் விருட்டென எழுந்து கைக்கழுவச் சென்றான்.

நான் யாருக்கும் அடங்கி நடப்பவன் அல்ல என்று உரைத்து விடும் வேகத்தில் உரைத்து விட்டுச் சென்றிருந்தான்.

'அவன் எங்களுக்குச் செய்வதை உன்னால் தடுக்க முடியாது' என்பது போன்ற வெற்றிப் புன்னகையுடன் கூடிய இகழ்ச்சியான பார்வையுடன் சுந்தரலட்சுமியைப் பார்த்திருந்தார் காஞ்சனா.

தன்னைப் பொதுவில் விட்டுக் கொடுப்பது போல் பேசிய கணவன் மீது கட்டுக்கடங்காத கோபம் எழுந்தது சுந்தரலட்சுமிக்கு.

சுந்தரலட்சுமி உண்டு முடித்ததும் வேறொரு அவசர வேலை வந்து விட்டதாக உரைத்து உடனே மனைவியுடன் அங்கிருந்து கிளம்பியிருந்தான்.

பைக்கில் சில அடித் தூரம் சென்றதும், வண்டியை ஓட்டியவாறே, "பேசாதனு சொன்னா பேசாம இருக்க வேண்டியது தானே சுந்தரி" எனக் கோபத்துடன் கேட்டிருந்தான் செந்தில்.

"நான் தான் உங்க மேல கோபப்படனும். நீங்க முந்திக்கிறீங்களோ" எனக் கேட்டாள் இவள்.

"நீ ஏன் கோபப்படனும்? கல்யாணமானதும் பொண்டாட்டிக்கு எப்டி அடங்கிப் போய்ட்டான் பார்த்தியா இந்தச் செந்திலுனு எல்லாரும் பின்னாடி பேசி சிரிக்கிற மாதிரி பேசினது நீ! இதுல கோவம் வேற படுவியோ? நாலு செவுத்துக்குள்ள தான் உனக்கு அடங்கி நடப்பேன் சுந்தரி. வெளில எல்லார் முன்னாடியும் உனக்கு மண்டையை ஆடிட்டு இருப்பேன்னு மட்டும் கனவு காணாத" அதட்டலாய் உரைத்தான்.

"சரி நானும் அதே மாதிரி நாலு செவுத்துக்குள்ள தான் உங்களுக்கு அடங்கி நடப்பேன்! வெளில நீங்க என்னை அவமதிக்கிற மாதிரி பேசினா அடங்கிப் போவேன்னு கனவு காணாதீங்க" என்றாள்.

ஏதும் பேசாது கோபத்தை வண்டியில் காட்டியவனாய் முறுக்கிக் கொண்டு ஓட்டியவனை முறைக்கத் தான் முடிந்தது அவளால்.

அடுத்து வந்த ஒரு வாரமும் இருவருமே முறுக்கிக் கொண்டு திரிந்தனர்.

எப்பொழுதுமே ஈகோ பார்க்காமல் தன்னிடம் மன்னிப்புக் கேட்பார் என்று செந்திலை சிலாகித்துப் பேசும் சுந்தரலட்சுமிக்கு அவனின் இந்தப் பிடிவாதத்தை கண்டு பேரதிர்ச்சி.

அவளிடம் ஒரு வார்த்தைக் கூட பேசாது தவிர்த்தவனாய், இரவெல்லாம் மொட்டை மாடிக்குச் சென்று உறங்கினான்.

வாரயிறுதி நாள்களில் கூட பேசாது இருந்தவனிடம், "நம்மளுக்குள்ள சண்டைனு ஊருக்கெல்லாம் தெரியனும்னு தான் மொட்டை மாடிக்குப் போய் தூங்குறீங்களா?" என்று கேட்டு சண்டையிட்டு தான் இந்தச் சண்டையை முடிவிற்கு கொண்டு வந்திருந்தாள் சுந்தரலட்சுமி.

அடுத்த வந்த அனைத்து சண்டைச் சச்சரவுகளின் போதும், இவள் தான் இறங்கி வந்து பேசியிருந்தாள்.

'இப்பவும் மொட்டை மாடில தான் படுத்திருப்பாரு' என்று அவனைப் பற்றிச் சிந்தித்தவளாய் படுத்திருந்த சுந்தரலட்சுமி, 'இப்பவாவது அவரே வந்து சமாதானம் செஞ்சி கூட்டிட்டுப் போவாரா?' என்ற யோசனையுடனேயே புலனத்தில் அவனுடனான முந்தைய உரையாடல்களைப் பார்த்திருந்தாள்.
 

Author: Dhakai
Article Title: உனதன்பின் கதகதப்பில் 10
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
222
தாயின் ஏக்கம்
தந்தையின் ஆறுதல்
தன்னவனின்
திடீர் கோப பேச்சு
தன் அதிகாரத்தை
திணித்த செந்தில் அத்தை
தன் உணர்வை புரியாது
திட்டும் கணவனை
தவிர்க்க நினைத்து
தள்ளி வந்தால்
தீர்ந்து விடுமோ கோபம்....
 

Dhakai

Member
Joined
Mar 23, 2025
Messages
69
தாயின் ஏக்கம்
தந்தையின் ஆறுதல்
தன்னவனின்
திடீர் கோப பேச்சு
தன் அதிகாரத்தை
திணித்த செந்தில் அத்தை
தன் உணர்வை புரியாது
திட்டும் கணவனை
தவிர்க்க நினைத்து
தள்ளி வந்தால்
தீர்ந்து விடுமோ கோபம்....
அருமை 👏 👏 Thank you so much 🙏
 
Joined
Jun 30, 2024
Messages
38
வேணும்னே சண்டை மூட்டுறாங்கன்னு செந்திலுக்கும் அவங்க அம்மாவுக்கும் இன்னுமா புரியலை
 

Dhakai

Member
Joined
Mar 23, 2025
Messages
69
வேணும்னே சண்டை மூட்டுறாங்கன்னு செந்திலுக்கும் அவங்க அம்மாவுக்கும் இன்னுமா புரியலை
அம்மா புரிஞ்சிக்க விரும்பலை 😄😄😄 செந்தில் புரிஞ்சும் தெரியாத மாதிரி இருக்கான் 😄😄😄 நன்றி சிஸ் ❤️
 

Lakshmi

Active member
Joined
Jun 19, 2024
Messages
101
சுந்தரி செய்வது தப்பாக தோன்றும் போது அவன் எப்படி வந்து அழைத்துச் செல்வான்.
 

Dhakai

Member
Joined
Mar 23, 2025
Messages
69
சுந்தரி செய்வது தப்பாக தோன்றும் போது அவன் எப்படி வந்து அழைத்துச் செல்வான்.
ஆமா மிக்க நன்றி சிஸ் ❤️
 
Top Bottom