• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

உசுரே நீதானே - 6

Bandhini

New member
Joined
Mar 27, 2025
Messages
14
உசுரே நீதானே - 6



குமரேசனும் கதிரேசனும் தங்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்து கொண்டதால், காலையில் பள்ளிக்கு சீக்கிரம் கிளம்புவதும் மாலை பள்ளியிலிருந்து தாமதமாக வருவதும் என, தங்கள் வேலைகளைப் பழக்கப்படுத்திக் கொள்ள முயன்றனர்.

அதற்கேற்றாற் போல் அவர்கள் படித்த பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர், பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களில் படிப்பில் பின் தங்கிய மாணவர்களை எல்லாம் ஒன்று திரட்டி பள்ளியில் கூடுதல் நேரம் இருக்குமாறு செய்து அவர்களுக்கு தன் நேரடி மேற்பார்வையில் சிறப்பு கவனம் கொடுத்து படிக்க வைத்தார்.

குமரேசனும் கதிரேசனும் கொஞ்சம் நன்றாகப் படிக்கக் கூடியவர்கள்தான். அவர்களுக்கு இந்த சிறப்பு கவன வகுப்பு அவசியமில்லைதான். ஆனால் அவர்களுடைய குடும்பச் சூழ்நிலை பற்றி அவர், நன்கு அறிந்தர் என்பதால் அவர்களையும் அந்த கவன வகுப்பில் மற்றவர்களுடன் சேர்ந்து படிக்க ஊக்குவித்தார்.

மற்ற மாணவர்கள் பாடத்தில் ஏதேனும் சந்தேகம் கேட்டால் இவர்களை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வைத்தார்.

இதனால் இவர்களுக்கும் சரி, அவர்களுக்கும் சரி, பாடம் நன்றாக மனதில் பதிந்தது.

சிறுவர்கள் தங்கள் படிப்புக்காகச் செய்யும் கடின உழைப்பைக் கண்டு சிவகாமிக்கு வியப்பாகவும் பெருமையாகவும் இருந்தது.

தன் வேலை முடிந்து வீடு வந்த மாணிக்கம்,

"ம்மா! புள்ளீங்க உன்னுமா இஸ்க்கோல் வுட்டு வரல?" என்று சந்தேகமாய்க் கேட்க,

"உஸ்க்கோல்ல பெசல் க்ளாஸு கீது அத்த.. சாந்தரம் லேட்டாதான் வூட்டுக்கு வருவோம்னு சொல்லி கீராங்க.."

"பெரிய பர்ச்ச வரப் போவுதே! உன்னுமா பெசல் க்ளாஸு வெக்கறானுங்க?"

"டேய்! அவனுங்க என்ன உன்னாட்டமா? ரெண்டும் படிக்கற புள்ளீங்கடா! அப்பன் ஆத்தா இல்ல.. நல்லா பட்ச்சாதான் நல்லா வாய முடியும்னு தெர்ஞ்சி புர்ஞ்சி நட்ந்துக்கறாங்க.. நீயுந்தான் இர்ந்தியே.. படிக்கற காலத்தில வெட்டியா ஊரச் சுத்திட்டு.. யாரு அவ.. சாலினியா மாலினியா.. ஓன் பள்ளிக்கூட வாச்மேன் மவ.. அவ பின்னாடி ஜொள்ளு வுட்டுகிட்டு திரிஞ்சியே.. அப்ப படிப்ப தொலச்சிட்டு இப்ப கால் காசு சம்பாரிக்க நாயா பேயா அலையிற!" என்று தன் மகனை வசை பாடினாள் சிவகாமி.

"ம்மா! அவள பத்தி இப்ப இன்னித்துக்குமா பேசற?" என்று கடுகடுத்தான் மாணிக்கம்.

"ம்க்கும்.. அந்த வாச்மேன் மவ படிப்புதான் முக்கியம்னு ஒனக்கு பெப்பே காட்டிட்டு போய்ட்டா! நீதான் இப்ப எதுக்கும் லாயக்கில்லாதவனா கீர!" என்று தன் உதட்டைச் சுழித்து கழுத்தை வளைத்து தன் முகவாய்க்கட்டையைத் தன் தோளில் இடித்துக் கொண்டாள்.

"ஐய! வர வர ரொம்ப ஓவராதான் போற நீயி! எனுக்கு வேல கீது.. நா போறேன்.." என்று முணுமுணுத்த மாணிக்கம், ஏதோ சிறுவர்கள் இருவரும் தன்னைப் போல இல்லாமல் படிப்பில் கவனம் செலுத்துகிறார்களே என்று நினைத்துக் கொண்டு தன் வேலையைப் பார்க்கப் போனான்.

ஆனால், சிறுவர்கள் இருவரும் தன்னைப் பார்க்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் எப்போதும் பள்ளியிலேயே நேரம் கழிக்கிறார்கள் என்பதை அவன் உணரவேயில்லை.

அவன் மனம் முழுதும், தன் முதுகில் குத்த நினைத்த சேட்டுக்கு எப்படி எந்த வகையில் பாடம் புகட்டலாம் என்பதே நிறைந்திருந்தது.

'அந்தாள் பண்ற அத்தினி வேலயும் டுபாக்கூர் வேல.. போலீஸ்ல மாட்னா நம்ம லைஃபே காலி! நம்ம உசுர பணயம் வச்சிகினு அந்தாளுக்கு நா வேல பண்ணா என்னியே போலீஸ்ல மாட்டி வுடுவானா! கஸ்மாலம்! **' என்று இன்னும் சொல்லக் கூடாத வார்த்தைகளையெல்லாம் மனதுக்குள் சொல்லி பஜன்லால் சேட்டை திட்டிக் கொண்டிருந்தான் மாணிக்கம்.

நடந்தது இதுதான்.

வழக்கம் போல சேட் தன்னிடம் இருக்கும் சரக்கை மாணிக்கத்திடம் கொடுத்து ஒரு முகவரியில் சேர்க்கச் சொன்னான்.

மாணிக்கமும் சேட் கொடுத்த சரக்கை பத்திரமாக எடுத்துப் போனான்.

ஆனால் சேட் சொன்ன முகவரி ஒரு காலி மனையாக இருந்தது கண்டு அதிர்ந்தான்.

உடனே சேட்டுக்குப் போன் செய்தான். ஆனால் சேட் அவன் அழைப்பை எடுக்காமல் துண்டித்தான். எத்தனை முறை அழைத்தாலும், சேட், மாணிக்கத்தின் அழைப்பை துண்டித்துக் கொண்டேயிருந்தான்.

சேட் ஏன் இப்படி புதிராக நடந்துகொள்கிறான் என்று மாணிக்கத்தால் புரிந்துகொள்ள முடியவில்லை.

சிறிது நேரம் அந்த இடத்தையே சுற்றிச் சுற்றி வந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த காலிமனை, அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து கட்டிடக் கழிவுகள் மற்றும் குப்பைக் கழிவுகள் எல்லாம் கொட்டப்பட்டு மினி குப்பைக் கிடங்கு போல காட்சியளித்தது.

மாணிக்கம் குழப்பத்துடன் தன்னிடம் சேட் கொடுத்தனுப்பிய சரக்கை எடுத்துப் பிரிக்க முற்பட்டான். எப்போதுமே அவன் சேட் கொடுத்தனுப்பும் சரக்கை பிரித்துப் பார்த்ததில்லை. அது எந்த நிலையில் அவனிடம் கொடுக்கப்பட்டதோ அந்த நிலையிலேயேதான் அவன் அதை உரியவரிடம் சேர்ப்பிப்பான்.

ஆனால் இப்போது சேர்க்க வேண்டிய முகவரியில் குறிப்பிட்ட நபர் இல்லையென்பதாலும் சரக்கைக் கொடுத்தனுப்பிய சேட்டும் இவனுடைய அழைப்பை ஏற்காமல் அலைக்கழிப்பதாலும் மாணிக்கத்துக்கு இது ஏதாவது சூழ்ச்சியோ என்று தோன்ற ஆரம்பித்தது. அதனால் அவன் அது என்னவென்று பார்க்க முற்பட்டான்.

சரியாக அப்போது காவல்துறையின் சைரன் சத்தம் கேட்க, சட்டென்று சுதாரித்தவன் அங்கே போடப்பட்டிருந்த கட்டிடக் கழிவுகளில் இருந்த ஒரு கோணிப்பையினுள் அந்தச் சரக்கை மறைத்துவிட்டு சற்று தள்ளி நின்று கொண்டு அதைக் கண்காணித்தபடி இருந்தான்.

சில காவலர்களை ஏற்றிக் கொண்டு சீறிப் பாய்ந்து வந்த போலீஸ் ஜீப் ஒன்று அந்த காலி மனையின் அருகில் இருந்த டீக்கடையின் வாசலில் நின்றது.

அதிலிருந்து குதித்து இறங்கிய காவலர்கள் டீக்கடையிலும் அங்கு டீ குடிக்க வந்திருந்தவர்களையும் அந்தப் பகுதியில் நின்றிருந்தவர்களையும் வேக வேகமாகச் சோதனை செய்தார்கள்.

அவர்கள் மாணிக்கத்தையும் சோதனை செய்தார்கள்.

"ஏய்! எதுங்கு இங்க வந்து நிக்கற?"

"சார்! டீ குடிக்க இன்னாத்துக்கு சார் வருவாங்க? டீ குடிக்கதான் வந்தேன் சார்.." என்றான் மாணிக்கம்.

"டீ குடிக்க டீக்கடைக்குதானேடா போவணும்? இங்க காலி கிரவுண்ட்ல என்ன பண்ற?"

"சார்! இதெல்லாம் ஒரு கேள்வியா? ஒண்ணுக்கு இருக்க.." என்று அவன் நமுட்டுச் சிரிப்புடன் ஆரம்பிக்க, எரிச்சலான அந்தக் காவலர்,

"கர்மம்! கர்மம்! போ! போ!" என்று அவனை விரட்டினார்.

அவன் வேகமாக அங்கிருந்து நகர்ந்து டீக்கடைக்குச் சென்று, ஒரு டீ சொல்லிவிட்டு அங்கிருந்த தட்டிலிருந்து ஒரு வடையை எடுத்துக் கடித்துக் கொண்டு காலி மனையைப் பார்த்தவாறு நின்று கொண்டான்.

"ஏய்! இங்கல்லாம் நிக்காத! போ! போ! எல்லாரும் போங்க! யோவ்! போய்யா!" என்று வேறொரு காவலர் அவனை விரட்டினார்.

பலர் அங்கிருந்து தெறித்து ஓட, மாணிக்கம் ஓடாமல் அங்கேயே நின்றான். அவனுடைய கவனம் முழுதும் அந்தக் காலிமனையில் கிடந்த அந்த கோணிப்பையில்தான் இருந்தது.

காலி மனையிலிருந்து அவனை விரட்டிய காவலர் அந்த இடத்தை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு டீக்கடைக்கு வந்து மற்ற காவலர்களுடன் இணைந்து கொண்ட பின்பே அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

இருப்பினும் அவன் கவனம் அந்தக் கோணிப்பையில் நிலைத்திருந்தது.

காவலர்கள் சோதனை செய்கிறேன் பேர்வழியென்று டீக்கடையில் வியாபாரத்துக்காக வைத்திருந்த வடைகளையும் பஜ்ஜிகளையும் உரிமையுடன் எடுத்துக் கடித்தனர்.

"சார்! ஏன் சார் இங்க வந்து என் யாவாரத்த கெடுக்கறீங்க?" என்று டீக்கடைக்காரன் அங்கலாய்த்தான்.

"ஏய்! என்ன லந்தா? கடையே நடத்த முடியாத மாரி செஞ்சிடுவேன்! ஜாக்ரத!" என்று அந்தக் காவலர் டீக்கடைக்காரனை மிரட்ட, அவன் மெல்லிய குரலில் தனக்குள் முணுமுணுத்தபடி அமைதியானான்.

அப்போது அந்தக் காவலர்கள் கும்பலில் தலைவன் போல வாட்டசாட்டமாக இருந்த ஒரு காவலரின் கைப்பேசி அலறியது.

அதை எடுத்துப் பேசிய அந்தக் காவலர்,

"எல்லாரும் வாங்க!" என்று தன் சக காவலர்களை அழைத்துக் கொண்டு ஜீப்புக்குச் சென்றார்.

"என்ன சார் ஆச்சு?" என்று ஒரு காவலர் அவரைக் கேட்க,

"ராங் இன்ஃபர்மேசனாம்! எல்லாம் நம்ம உசுர வாங்கறானுங்க!" என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தபடி ஜீப்பில் ஏறினார்.

"என்ன சரக்காம்?" என்று ரகசியமாகக் கேட்டார் அந்தக் காவலர்.

அதற்கான பதிலை வாயால் சொல்லாமல் போதையில் மயங்குவது போல சைகை செய்தார் அந்தக் காவலர்.

இதெல்லாவற்றையும் மாணிக்கம் துல்லியமாகக் கவனித்துக் கொண்டான்.

ஜீப் கிளம்பிச் சென்றதும்,

"துட்டு குட்த்து வாங்கித் துன்ன துப்பில்ல! வந்துட்டானுங்க! யாவாரத்த கெடுக்க!" என்று முணுமுணுத்த டீக்கடைக்காரனிடம் தான் குடித்த டீக்கும் வடைக்குமான காசைக் கொடுத்த மாணிக்கம் மீண்டும் காலி மனைக்கு ஓடி வந்து தான் மறைத்து வைத்த சரக்கை எடுத்து தன் பேன்ட் பேக்கெட்டில் வைத்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து சென்றான்.

யாரும் தன்னைப் பார்க்காத மறைவான இடத்திற்கு வந்து அதை அவன் சோதித்துப் பார்க்கும் போது அதிலிருந்தது சிறிய வைரக் கற்கள் என்று தெரிந்து கொண்டான். எத்தனை கற்கள் என்று எண்ணிப் பார்த்தான். மொத்தம் ஐம்பத்தியொரு பட்டை தீட்டப்பட்ட வைரக் கற்கள் இருந்தன.

அவன் அதை எண்ணி முடிக்கவும் சேட் அவனை அழைக்கவும் சரியாக இருந்தது.

"மாணிக்கம்! சாரி! அட்ரஸ் மாறி போச்சி! நீ சரக்க ரிட்டன் கொண்டு வா! நா வேற அட்றஸ் தரான்!" என்று சேட் குழைய,

"அட்ரஸ் மாறிச்சா? சரக்கு மாறிச்சா சேட்?" என்று கோபமாகக் கேட்டான் மாணிக்கம்.

"இன்னா மாணிக்கம்? நீ நம்மள் கிட்டயே கோவப்படற?"

"அட்ரஸ் மாறிச்சு.. சரி! நா போன் பண்ணப்ப நீ ஏன் எடுக்கல?"

"அப்ப.. அப்ப.. வந்து.. நா.. பாத்ரூம்ல.." என்று சேட் தடுமாறினான்.

"என்ன இன்னா லூசுன்னு நென்ச்சியா? ஒரு மணி நேரம் பாத்ரூம்புல .. இர்ந்தியா சேட்டு?" என்று மேலும் கோபமாகக் கேட்டான் மாணிக்கம்.

"மாணிக்கம்! நீ நம்மள் மேல சந்தேகப் படறான்? நம்மள் எதுக்கு பொய் சொல்ல போறான்.. நெஜ்மாவே எனுக்கு பேட் மே கட்பட் ஹோ கயா!" என்றான் சேட்.

இத்தனை நாளாக சேட்டுடன் பேசிப் பழகியதால் சேட் பேசும் சில இந்தி வார்த்தைகளை மாணிக்கத்தால் புரிந்து கொள்ள முடிந்தது.

சேட், தன் வயிற்றில் சங்கடம் என்பதைதான் பேட் மே கட்பட்! என்று கூறுகிறான் என்பதை நன்றாகவே புரிந்து கொண்டான் மாணிக்கம். இருப்பினும் அவனுடைய கோபம் காரணமாக அவன் சேட்டிடம் தன் கோபத்தைக் காட்டிப் பேசினான்.

"ஆமா! பேட்டுல கட் பட்தான்! ஆனா உன் பேட்டுல இல்ல.. பொட்டில.. நீ எனுக்கு குட்த்த பொட்டிலதான் கட்பட்!" என்றான் மாணிக்கம்.

"நை! நை!" என்று அவசரமாக மறுத்தான் சேட்.

"எல்லாம் தெர்யும் சேட்டு! நீ என்னாண்ட சரக்க குட்த்து அனுப்பிட்டு போலீசாண்ட என்னிய போட்டு குட்த்துட்ட.. அவனுங்களும் வந்து தேடிட்டு சரக்க கண்டுபுடுக்க முடியாம திரும்பி போயிட்டானுங்க.. அப்பாலிக்கா பாத்தாதான் நீ என்னாண்ட குட்த்த சரக்கு வேறன்னு உனுக்கு புர்ஞ்சிது.. அதான்.. இப்ப எனுக்கு போன் போட்டு சாரி! பூரி! குப்பத்தொட்டி லாரின்னு பாட்டு பாடிகினு கீர! சர்தானே?" என்று மாணிக்கம் கேட்டான்.

"அது.. அது.. வந்து.." என்று சேட் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான்.

உண்மையில் அதுதான் நடந்தது.

சேட், மாணிக்கத்திடம் போதை மருந்து அடங்கிய சிறிய பேக்கெட்டைத் தந்து காலிமனையின் முகவரியை அவனிடம் சொல்லி அந்த முகவரியில் இதைச் சேர்க்கும்படி கூறிவிட்டு மாணிக்கம் அந்தப் பக்கம் போனதும் இந்தப் பக்கம் போலீஸில் அவனை சிக்க வைக்க முயன்றான்.

ஆனால் கவனக்குறைவாக போதை மருந்து அடங்கிய பேக்கெட்டிற்கு பதிலாக வைரங்கள் நிறைந்த பேக்கெட்டை தவறுதலாக மாணிக்கத்திடம் கொடுத்தனுப்பிவிட்டான்.

இதற்கிடையே போலீசாரால் சரக்கை கைப்பற்றவும் முடியாமல், சரக்கு எடுத்துச் சென்ற நபரையும் கைது செய்ய முடியாமல் போனது.

தன் தவறை, மிகவும் கால தாமதமாக உணர்ந்த சேட் பதறிப் போனான்.

சரக்கும் கைப்பற்றப்படவில்லை, மாணிக்கமும் கைதாகவில்லை என்ற தகவல் சரியாக அப்போது அவனுக்குக் கிடைக்க, அவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

அதனால் எதுவும் நடக்காத மாதிரி மாணிக்கத்தை அழைத்து முகவரி மாறிவிட்டது என்று நாடகமாட முற்பட்டான்.

ஆனால் மாணிக்கம் எல்லா உண்மைகளையும் சரியாகக் கணித்துவிட்டான்.

"அரே! பாப் ரே! யே தோ சப் ஜான்த்தா ஹே!" என்று அவன் தன் கைப்பேசியை பொத்திக் கொண்டு மெல்லிய குரலில் முணுமுணுத்ததும் மாணிக்கத்தின் காதில் தெள்ளத் தெளிவாக விழுந்தது.

'ஆமா சேட்டு! நா சப் ஜான்த்தா! இந்த மாணிக்கத்துக்கு எல்லாம் தெரியும்.. உனுக்கு நம்பிக்கையா நட்ந்துகிட்ட என்னிய நீ போலீஸ்ல மாட்டி வுட நென்ச்சல்ல.. வுட மாட்டேன்.. உன்ன நா வுட மாட்டேன்.. இரு! இரு! உன் வைரத்தக் கேட்டு உன்ன நாயா பேயா அலைய வுடறேன் சேட்டு..' என்று மனதுக்குள் கறுவிக் கொண்டான்.

"இன்னா சேட்டு? நா கரீட்டா சொல்றனா?" என்று எள்ளலாகக் கேட்டான்.

"ஐயோ! மாணிக்கம்! உன்ன போயி நம்மள் போலீஸ்ல மாட்டி வுடுவானா? நீ அப்டிலாம் கலத் நெனக்காத! நீ சரக்க பத்ரமா இங்க கொண்டு வா! நம்மள் எப்பயும் போல நிம்மள் பணம் உன் பேங்க் அக்கவுண்ட்ல போடறான்!" என்று நைச்சியமாகப் பேசினான் சேட்.

"சரி! சரி! நீ என்ன நம்பல! ஆனா நா உன்ன நம்பறேன் சேட்டு! உன்னும் கொஞ்ச நேரத்தில வரேன்!" என்று பதிலளித்த மாணிக்கம், கைப்பேசி அழைப்பை துண்டித்தான்.

தன் கைப்பேசியை சுவிச் ஆஃப் செய்து அதன் சிம்மையும் கழற்றி தனியே எடுத்துக் கொண்டு, இரண்டையும் பத்திரப்படுத்திக் கொண்டான்.

ஆனால் நேராகச் சேட்டிடம் செல்லாமல் போலி வைரங்கள் செய்யும் இடம் நோக்கிச் சென்றான்.



- தொடரும்....
 

Author: Bandhini
Article Title: உசுரே நீதானே - 6
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
222
கடத்தல் செய்றவன்
நம்பிக்கையை எப்படி காப்பாற்றுவான்
காட்டி தான் கொடுப்பான்.....
 
Top Bottom