• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

உசுரே நீதானே - 5

Bandhini

New member
Joined
Mar 27, 2025
Messages
14
உசுரே நீதானே - 5



சிறுவர்கள் இருவருக்கும் அதிர்ச்சியும் அழுகையும் ஒரு சேர வந்தன.

"அப்ப மாணிக்கம் அண்ணனும் நம்ம அப்பா மாரி குடிக்குமா?" என்று மெல்லிய குரலில் கேட்டான் கதிர்.

"குடிக்கறது மட்டுமில்லடா.. அண்ணன் சேட்டாண்ட தான வேல செய்யிறன்னு சொல்லிச்சு.. ஆனா ஏதோ அண்டர்கிரவுண்ட் வேல செய்யிது போல கீதுடா.." என்றான் குமார்.

"எனுக்கு ரொம்ப பயம்மா கீது! நம்ம பாய் வூட்டுக்கே போயிரலாமாடா?" என்றான் கதிர்.

"இல்லடா! நேத்து சாந்தரம் பாய பாத்தேன்.. பாயோட கடை கடன் அடைக்க முடியாம மூய்கி போச்சாம்.. பாயும் அவரு சம்சாரமும் ராவோட ராவா வூட்ட காலி பண்ணிக்கினு வேற ஊருக்கு போறாங்களாம்.. யாராண்டயும் சொல்லாதன்னு சொல்லி என்னாண்ட சொல்ட்டு போனாரு.." என்றான் குமார்.

"ஐயியோ!"

"ஆனா அத்தன கஸ்டத்லயும் என்னாண்ட ஐநூறு ரூபா குட்த்துட்டுதாண்டா போனாரு.." என்று சொல்லி தன் புத்தகப் பையை இழுத்து அதிலிருந்த தமிழ் புத்தகத்திலிருந்து ஒரு ஐநூறு ரூபாய்த் தாளை எடுத்துக் காட்டினான் குமார்.

"பாவம்டா பாய்!" என்ற கதிர்,

"இத்த ஏண்டா வாங்க்கின? வோணாம்னு சொல்றதுதானே?" என்று கேட்டான்.

"அவரு என் கையில திணிச்சிட்டு போய்ட்டாருடா.. அவரு போனப்றம்தான் என் கையில இன்னாத்த திணிச்சாருன்னு நா பாத்தேண்டா.." என்றான் குமார்.

"ம்ச்.. பாவம் பாய்! அவரே கஸ்டத்தில கீறாரு.." என்று வருந்திய கதிர்,

"இப்ப இன்னாடா செய்றது? மாணிக்கண்ண தப்பு தண்டாவுக்கு போறவரு போல.. தப்பு செய்யறவங்க கூட சேரக் கூடாதுன்னு நம்ம அம்மா நம்ம கையில சொல்லிகிதுல்ல.." என்று கேட்டான்.

"உன்னும் ரெண்டு மாசம்.. ரெண்டு மாசத்தில நம்ம முயு பர்ச்ச முஞ்சிரும்.. அப்றம் நம்ம எதுனா வேல பாத்துக்கினு வேற எங்கனாச்சும் போயிறலாம்.." என்றான் குமார்.

"ஆனா அம்மா நம்மள நறைய படிக்கணும்னு சொல்லிச்சேடா!" என்று வருத்தத்துடன் கேட்டான் கதிர்.

"கவலப்படாதடா.. நா வேல பாத்து உன்னிய படிக்க வக்கிறன்.. நீ நறைய படி.. பட்ச்சு பெரிய ஆஃபீசர் ஆவு!" என்றான் குமார்.

கதிர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

"இல்லடா! உனுக்கும் பெரிய போலீஸ் ஆவணும்னு ஆச கீதுல்ல.. நீயும் படி.. நம்ம ரெண்டு பேருமே படிக்கலாம்.." என்றான் கதிர்.

"நம்ம ரெண்டு பேருமே படிக்க துட்டு வோணாவா?"

"இல்லடா.. நல்லா பட்ச்சா அரசாங்கத்தில உதவித் தொகை குடுப்பாங்கன்னு நம்ம சயின்ஸ் வாத்தி அன்னிக்கு சொன்னாருல்ல.. அதனால நம்ம ரெண்டு பேருமே நல்லா பட்ச்சி நறைய மார்க் எட்த்தா நம்ம எட் மாஸ்ட்டரே நம்ம படிக்க உதவித் தொகை வாங்கி குடுப்பாரு.." என்றான் கதிர்.

"ஆமாடா! இன்னா கஸ்டம் வந்தாலும் நம்ம படிப்ப மட்டும் வுட்டுடவே கூடாதுன்னு அம்மா எப்பயும் சொல்லும்.. நேத்தி பாயும் அததான் சொல்ட்டு போனாரு.." என்றான் குமார்.

இருவரும் சேர்ந்து வருகின்ற பத்தாவது பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்துக் கொண்டனர்.

அதே நேரத்தில் பத்தாவது பொதுத் தேர்வு எழுதி முடித்தவுடனேயே மாணிக்கத்தின் வீட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்றும் திடமாக முடிவு செய்து கொண்டு தத்தம் இடத்தில் படுத்தனர்.

தூக்கம் வரவில்லையெனினும் நாளை பள்ளிக்கூடம் போயே ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டதால் விரைவிலேயே தூங்கிப் போயினர்.


*****


"அண்ணே! இப்ப எப்டிண்ணே கீது?" என்று தன்னைப் பார்த்துக் கேட்ட பூபதியை யாரென்று அறிந்து கொள்ள முடியாமல் குழப்பமாகப் பார்த்தான் அவன்.

"தம்பி! நீ ஆரு பா?" என்று குழப்பத்துடன் கேட்டான்.

"யோவ்! நல்லா கீதுய்யா நாயம்! உன்ன இங்க இட்டாந்து சேத்ததே இந்த தம்பிதான்.. சேத்துவுட்டு அப்டியே எஸ்கேப் ஆவாம டெய்லி வந்து வந்து உனுக்கு கஞ்சி வாங்கியாந்து குட்த்து.. நீ எப்டி கீர.. இன்னா ஏதுன்னு பாத்துட்டு போவுது இந்த தம்பி.. நீ இன்னாடான்னா.. அத்தையே ஆருன்னு கேட்டுக்கின!" என்றான் அருகில் நின்றிருந்த வார்ட் பாய்.

மெத்தையில் படுத்திருந்த அந்த மனிதன் சிரமப்பட்டு மெதுவாக எழுந்து அமர்ந்தான்.

"ரொம்ப தேங்க்ஸ் தம்பி! என்ன நீதான் ஆஸ்பத்ரில சேத்தன்னு தெரியாம உன்ன யாருன்னு கேட்டுகினேன்.. சாரி தம்பி!" என்றும் கூறினான்.

"ஐய! அண்ணே! அத்த வுடுங்க.. இப்ப ஒடம்பு எப்டி கிது? டாட்டரு இன்னா சொன்னாரு.. வூட்டுக்கு எப்ப போலாம்ன்னு எதுனாச்சு சொன்னாரா?" என்று அக்கறையுடன் கேட்டான் பூபதி.

"இன்னும் ஒரு வாரம் இவரு ஆஸ்பத்ரில இருக்கணும் தம்பி.. இவரு நெஞ்சு சளி இப்பதான் கொஞ்ச கொஞ்சமா கரையிது.. இன்னும் ஒரு வாரத்துக்கு நெபுலெய்சர் வெக்கணும். மருந்து மாத்தர சாப்படணும்.. ஊசி போடணும்.." என்றாள் அருகில் நின்றிருந்த நர்ஸ்.

"சரிங்க சிஸ்டர்!" என்ற பூபதி அந்த மனிதனிடம் திரும்பினான்.

"அண்ணே! உங்க பேர் இன்னா? வூடு எங்க கிது? வூட்ல யாராச்சும் இட்டாரணும்னா சொல்லுங்கண்ணே!" என்று கேட்டான்.

"என் பேரு.. சேகரு! வூடு இல்ல.. என் ஃப்ரண்டு கூட ரூம்ல தங்கிருக்கேன்.. பொண்டாட்டி புள்ளல்லாம் ஊர்ல ருக்காங்க.." என்றான் அந்த சேகர்.

"அப்டியாண்ணே! உங்க ஃப்ரண்டாண்ட பேசணுமா?" என்று கேட்டு தன் கைப்பேசியை அவனிடம் நீட்டினான் பூபதி.

"வோணா.. என்னாண்டயே போன் கீது.." என்றவன் தன் கைப்பேசியைத் தேடினான்.

அவனருகில் அது இல்லை.

"அன்னிக்கு நீங்க வுய்ந்து கெடந்த எடத்தில போன் எதுமில்லண்ணே! பரால்ல.. இத்த வாங்கி பேசுங்க.." என்றான் பூபதி.

வேறு வழியின்றி பூபதி நீட்டிய கைப்பேசியை சற்று தயக்கத்துடன் வாங்கிய சேகர், அதில் ஒரு எண்ணை டைப் செய்து அழைத்தான்.

"ஹலோ!"

".."

"இல்ல.. நா.. ஆஸ்பத்ரில சேந்திருக்கேன்.."

".."

"தம்பி! இந்த ஆஸ்பத்ரி எங்க இருக்குன்னு.." என்று சேகர் பூபதியிடம் வினவ, அவன் பதிலளிக்கும் முன், அருகில் நின்றிருந்த வார்ட் பாய்,

"ஐய! கவுர்மன்ட் ஆஸ்பத்ரி எங்க கிதுன்னு சின்ன கொய்ந்தக்கு கூட தெர்யும். உனுக்கு தெரியாதா? சென்ரல் டேசன் எதிர்க்க ருக்கே.. அங்க வந்து தொராசி டிபாட்மன்ட்ன்னு கேட்டா சொல்வாங்க.." என்று கூறினான்.

"தொராசின்னா இன்னா சிஸ்டர்?" என்று குழப்பமாகக் கேட்டான் சேகர்.

"யோவ்! உனுக்கு தெரியாத விஷயத்தப் பத்தி பேசாதன்னு எத்தன தபா சொல்லிருக்கேன்?" என்று தன் தலையில் அடித்துக் கொண்டபடி கேட்ட அந்த நர்ஸ்,

"சார்! ஆஸ்பத்ரி வாசலுக்கு வந்துட்டு கால் பண்ண சொல்லுங்க. நா வழி சொல்றேன்.." என்றாள்.

"ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர்!" என்ற சேகர் தன் நண்பனிடம் விவரங்களைத் தெரிவித்துவிட்டு கைப்பேசி அழைப்பைத் துண்டித்துவிட்டு பூபதியின் கைப்பேசியை அவனிடம் நீட்டியபடி,

"உன்னும் அர மணியில வரேன்னு சொல்லிருக்கான்.. நீ போணும்னா போ தம்பி!" என்றான்.

"யோவ்! சரியான ஆளுய்யா நீயி! இந்த தம்பி போய்டுச்சுன்னா ஒன் ஃப்ரண்டு எப்டி இங்க வருவாரு.. இப்பதானே ஆஸ்பத்ரி வாசலுக்கு வந்துட்டு போன் பண்ணினா வயி சொல்றேன்னு சிஸ்டர் சொல்லிச்சு.." என்று கேட்டான் அந்த வார்ட் பாய்.

"ம்.." என்று அசடு போல இளித்த சேகர்,

"உன் பேர் என்ன தம்பி! இன்னா வேல செய்யற? வூடு எங்க கிது?" என்று பூபதியிடம் விசாரித்தான்.

அவன் என்ன சொல்லப் போகிறான் என்று அவன் வாயைப் பார்த்துக் கொண்டிருந்த வார்ட் பாயை,

"யோவ்! அங்க பன்னண்டாம் நம்பர் பேசன்டுக்கு பாத்ரூம்பு போவணுமாம்.. இட்டுனு போய்யா!" என்று நர்ஸ் கத்தி அழைக்க,

"ம்க்கும்! ஒரு நிமிட் சொம்மா நிக்க வுட மாட்டாங்களே!' என்று மெலிதாய் முணுமுணுத்துக் கொண்ட அந்த வார்ட் பாய், "தோ வண்ட்டேன் சிஸ்டர்!" பெரிதாகக் குரல் கொடுத்துக் கொண்டே ஓடினான்.

"எம்பேரு பூபதி! ஆட்டோ ஓட்றேண்ணே! அன்னிக்கு நைட்டு சவாரி முஸ்ட்டு வூட்டுக்கு வர சொல்ல நீங்க ரோட்ல மயங்கி கெடந்தீங்களா.." என்று ஆரம்பித்து அன்றிரவு நடந்ததையும் அவனும் அவன் நண்பனும் சேர்ந்து சேகரை அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டுப் போனதையும் பற்றி விவரமாகக் கூறினான் பூபதி.

சேகருக்கு பூபதியின் மேல் மிகுந்த மதிப்பு ஏற்பட்டது.

"ரொம்ப தேங்க்ஸ் தம்பி! இப்டி யாராச்சும் ரோட்ல வுய்ந்து கெடந்தா யாரும் கண்டுக்கவே மாட்டாங்க. ஆனா நீயும் ஒங்க அக்காவும் ஒன் ஃப்ரண்டும் எனுக்காக இவ்ளோ பண்ணிருக்கீங்க.. ஒங்களுக்கு ரொம்ப பெரிய மன்சு தம்பி!" என்று நெகிழ்ந்து போய்க் கூறினான். அவன் கண்கள் லேசாகக் கலங்கின.

"ஐய! என்னண்ணே! மனுசாளுக்கு மனுசாள் செய்ற ஒதவிதான அண்ணே இது.. இதுக்கு போயி கண்ணுல தண்ணி வுட்டுக்கறீங்க.." என்று சொல்லி பூபதி அவன் கையை ஆதரவாகப் பிடித்துக் கொண்டான்.

சேகரின் இதழ்களில் புன்னகை அரும்பியது.

"அக்கா இன்னா பண்றாங்க. கண்ணாலம் ஆயிடுச்சா?" என்று கேட்டான் சேகர்.

"ம்.. நடக்கப் போவுது.. உன்னும் ரண்டு மாசத்தில.. மாப்ளல்லாம் பாத்தாச்சு.." என்றான் பூபதி.

"அப்டியா? ரொம்ப சந்தோசம் தம்பி! மாப்ள இன்னா பண்றாப்ல?"

"அதுதான்.. அது ஒண்ணுதான்.." என்ற பூபதி மாப்பிள்ளை மாணிக்கம் பற்றி சுருக்கமாகக் கூறினான்.

"மாமா நல்ல மாரி தான்.. ஆனா அவருக்கு சரியான வேல தான் கெடக்க மாட்டிது.. ஆனா அக்காவ நல்லா பாத்துக்கணும்னு மாமாவுக்கு மன்சு நெறைய ஆச.. சீக்ரமே அவருக்கு ஒரு நல்ல வேல கெடக்கணும்னு நானும் ஆத்தாள வேண்டாத நாளில்ல!" என்று பூபதி கூறியதை மிகக் கவனமாகக் கேட்டுக் கொண்டான் சேகர்.

சில நிமிடங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது சேகரின் நண்பன் பூபதியின் எண்ணுக்கு அழைத்தான்.

அவனை சேகரிடம் அழைத்து வந்தான் பூபதி.

"இன்னா சேகரு? இன்னாச்சு?" என்று கேட்ட நண்பனிடம் சேகர் விவரங்கள் கூறினான். பூபதியைப் பற்றியும் சேகர் கூறினான்.

எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுக் கொண்ட அந்த நண்பன், பூபதியிடம் திரும்பி,

"ரொம்ப தேங்க்ஸ் தம்பி!" என்று கூறி கையெடுத்துக் கும்பிட்டான்.

"ஐயியோ! என்னண்ணே! என்னியப் போயி கும்பிடுறீங்க?" என்ற பூபதி அந்த நண்பனின் கையைப் பிடித்துக் கொள்ள, அப்போது பூபதியின் பேன்ட் பேக்கெட்டிலிருந்த அவனுடைய கைப்பேசி நழுவி மெத்தையின் மேல் சேகரின் அருகே விழுந்தது. அதை எடுத்த சேகர், அதில் டயல் செய்யப்பட்ட தன் நண்பனின் எண்ணை கவனமாக அழித்துவிட்டு பூபதியிடம் நீட்டினான்.

பூபதிக்குத் தன் கைபேசி நழுவி சேகரின் அருகே விழுந்ததோ அவன் தன் கைப்பேசியிலிருந்த எண்ணை அழித்ததோ எதுவும் தெரியவேயில்லை.

சேகரின் நண்பன் பூபதியிடம் பேச்சுக் கொடுத்து, பூபதியின் கவனத்தைத் தன் பக்கமே வைத்திருந்ததால் அவனுக்கு இது எதுவும் தெரியாமல் போனது.

"ரொம்ப தேங்க்ஸ் தம்பி! இனிமே இவன நா பாத்துக்கறேன்.. பாவம்! நீ உன் சவாரிய வுட்டுட்டு கஸ்டப்பட்டு இம்மாந் தூரம் வர வோணாம்.." என்று அந்த நண்பன் பூபதியிடம் சொல்ல,

"இதில என்னண்ணே கஸ்டம் இருக்குது.. ஏதோ என்னால முட்ஞ்ச ஒதவி!" என்ற பூபதி சேகரிடம் பேசிவிட்டு இருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.

அவன் தலை மறையும் வரை பாத்துக் கொண்டிருந்த சேகரும் அவன் நண்பனும், அவன் சென்றுவிட்டான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்ட பின்னர், பேசிக் கொள்ளத் தொடங்கினார்கள்.

"அவன் செல்லுல என் நம்பர அளிச்சிட்டதான?"

"அக்காங் எசக்கி! அளிச்சிட்டேன்.."

"ம்! உன் செல்லு எங்க போச்சு?"

"தெர்ல! அன்னிக்கு மயங்கி வுய்ந்தப்ப யாராச்சும் ஆட்டைய போட்ருப்பாங்கன்னு நெனக்கிறேன்!"

"சரி வுடு! அந்த மாணிக்கம் என்ன ஆனான்?"

மாணிக்கம் சென்ற இடமெல்லாம் அவன் பின்னாலேயே தொடர்ந்து சென்று கண்காணித்த விவரத்தைக் கூறிய சேகர்,

"கடசீயா அவன் அந்த பாலத்தாண்ட பார்ட்டிக்காக காத்துகிட்டு நின்னுட்டிருந்தப்பதான் எனுக்கு மயக்கம் வந்திருச்சு. உனுக்கு போன் பண்ணனும்னு நெனச்சிகிட்டே நான் மயங்கி வுயுந்துட்டேன்.." என்று கூறி முடித்தான்.

"சாவுகிராக்கி! இந்த மாணிக்கத்த ஒயிச்சு கட்டுனாதான் எனுக்கு நிம்மதி!" என்றான் எசக்கி.

"அவனதான் இந்த பூபதியோட அக்காவுக்கு கண்ணாலம் பண்ணப் போறாங்க!"

"பூபதி ஆரு?" என்றே குழப்பத்துடன் கேட்டான் எசக்கி.

"அட என்னப்பா நீயி? பூபதிதான் என்னிய இங்க இட்டாந்து சேத்தவன்! இப்ப உன்ன இட்டாந்து வுட்டுட்டு போனானே!" என்று கூறினான் சேகர்.

"இன்னாடா சொல்ற? இவனா? இப்ப போனானே.. அந்த சுண்டெலியா?"

"அக்காங்!"

"இந்த சுண்டலியோட அக்காளதான் மாணிக்கம் கட்டிக்க போறானா?" என்று இன்பான அதிர்ச்சியுடன் கேட்டான் எசக்கி.

"ம்! இப்பதான் பூபதி சொன்னான்!"

"அடி ஷக்க! அப்டி போடு! அந்த நாதாரி மெய்யாலுமே மாப்ளையா மாற சொல்ல மாமியார் வூட்டுக்கு போவப் போறாண்டா?" என்று கூறி சிரித்தான் எசக்கி.

இதைக் கேட்ட சேகரும் அவனுடன் இணைந்து சிரித்தான்.







- தொடரும்....

 

Author: Bandhini
Article Title: உசுரே நீதானே - 5
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
222
கூடா நட்பு
கேடாய் முடியும்...
கல்வி மட்டுமே
கடலில் தத்தளிக்க
காப்பாற்றும் கட்டுமரம்
குழந்தைகள் எண்ணம்
கவனம் பேச்சு அருமை
 
Top Bottom