Pochampalli
Member
- Joined
- Sep 3, 2024
- Messages
- 48
அத்தியாயம் – 24
சற்றுநேரத்தில் கதவைத் திறந்தான் நிரஞ்சன். முகமெல்லாம் சிவந்து போய்க் கோபத்துடன் நின்று கொண்டிருந்த மதுமிதாவைப் பார்த்து, “என்னாச்சு மது?” எனச் சிறிதும் பதட்டமில்லாமல் வினவ, அதுவரையில் கட்டி வைத்திருந்த நிதானத்தை இழந்தாள் மதுமிதா.
“என்ன நொன்னாச்சு? என்னைக் கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுத்தது எல்லாம் என்னாச்சு? என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? காதலை வந்து சொல்லிட்டுப் பேசாம ஒதுங்கிட்டீங்க” என அவள் சண்டைக்குத் தயாராகிச் சிடுசிடுத்தாள்.
“நீ ஒத்துக்கலையே. அப்புறம் நான் என்ன பண்ணறது? நீ உன் காதலை என்கிட்ட சொல்லறப்போ நான் எதுவும் சொல்லலைன்னு நீயும் என் கூடப் பேசாம ஒதுங்கிட்ட இல்லையா? அதே மாதிரி நானும் ஒதுங்கிட்டேன். உன்னைக் கட்டாயப்படுத்த சொல்லறியா?” என அவளை ஊடுருவிப் பார்த்தவன்,
“அப்படியெல்லாம் யாரையும் கட்டாயப்படுத்த கூடாதுன்னு நான் ஏற்கனவே என் தங்கை மூலமா உணர்ந்திட்டேன்” எனத் தன் பக்க நியாயத்தை எடுத்து முன் வைத்தான்.
“என்னது கட்டாயப்படுத்த மாட்டீங்களா? அப்போ முத்தம் வைக்கிறது எல்லாம் அதுல சேராதா?” எனப் பாம்பைப் போல் சீறினாள்.
நீ காதலைச் சொன்னதால உனக்கு என் மேலே காதல் இருக்கும் என்கிற நம்பிக்கையில முத்தம் வச்சேன். அப்படி இல்லைன்னு புரிஞ்சிடுச்சு. வேணா திருப்பிக் கொடுத்துடு...” என அவன் அசராமல் சொல்ல, அவள் ஒரு சில நிமிடங்கள் திகைத்து நின்றுவிட்டாள்.
என்ன முத்தத்தைத் திருப்பித் தருவதா?
அவளையே அவன் பார்த்துக் கொண்டிருக்க, ஆவேசமாக அவன் அருகில் நெருங்கி, “யாருக்கு வேணும் உங்க முத்தம்? நீங்களே வச்சுக்கோங்க” என அவன் கன்னத்தில் இதழ்களைக் குவித்துத் தடம் பதித்தாள்.
வந்த புன்னகையை அடக்கிக் கொண்ட நிரஞ்சன், “நான் கன்னத்துல கொடுத்ததா ஞாபகம் இல்லையே” என்றான். சட்டென்று மூண்ட கோபத்துடன், அவன் கன்னத்தில் பலமாகக் கடித்து வைத்தவள், “இது மட்டும் தான் நான் கொடுப்பேன்” என்று அவனிடமிருந்து விலகினாள்.
“ஆஆ... இரத்தக் காட்டேரியைப் போய் லவ் பண்ணியிருக்கேன். என் உயிருக்கு உத்திரவாதம் இல்லை போல. நல்லவேளை தப்பிச்சேன்” என நிரஞ்சன் இளநகையுடன் சொல்ல, “நீங்க என் உயிரை எடுக்கிறது பத்தாதா?” எனக் கத்தினாள்.
“எதுக்கு என் மேலே இவ்வளவு கோபமா இருக்க மது?” என அவன் அப்போதும் நிதானத்துடன் வினவ,
“அந்த அஞ்சனாவை மிரட்டி, அவளைக் கல்யாணம் வரைக்கும் துரத்தினீங்க இல்லை. அப்புறம் எதுக்கு என்னோட ட்ரான்ஸ்பர்க்கு ஒத்துக்கிட்டீங்க. நான் போயிட்டா நிம்மதியா வேற ஒரு பொண்ணுக்கு முத்தம் கொடுக்கலாம்னு பார்த்தீங்க போல” எனச் சீறினாள்.
“என்னடா இது வம்பா இருக்கு? என்னை வேண்டாம்னு மறுத்தது நீ. ட்ரான்ஸ்பர் வேணும்னு கேட்டது நீ. உன் விருப்பப்படி நடக்கிற என்கிட்ட வந்து ஏன் சண்டை போடற?” என அவளைச் சீண்டினான்.
“போடா இடியட்... உங்களோட பேசறது வேஸ்ட். நான் கிளம்பறேன்” என அவள் திரும்பி ‘டொம் டொம்’மென தரை அதிர நடக்க ஆரம்பித்தாள். நான்கு அடிகள் கூட எடுத்து வைத்திருக்க மாட்டாள். அவள் கையைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்துத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன்,
“அர்ஜூனோட வொய்ஃப் இங்க வர்றதுக்குப் பிளான் பண்ணி வேலை தேடிட்டு இருந்தாங்க. எப்படியும் பவியும் கிளம்பிடுவா. அதனால உனக்குச் சென்னைக்கு மாத்திக் கொடுத்துட்டேன். அவங்களும் அடுத்த வாரம் வேலையில சேர்ந்திடுவாங்க. வேலையும் எந்தத் தடங்கலும் இல்லாமல் போகும். பொறுப்பில்லாம நடந்துக்கக் கூடாதில்லையா?” என விளக்கமளித்தான்.
யாருக்கு வேண்டும் இவனது விளக்குமாறு விளக்கம்! அர்ஜூன் ஏன் நன்றி தெரிவித்தான் என்று இப்போது தெளிவாக விளங்கியது மதுமிதாவுக்கு. எனினும் எதுவும் பேசாமல் அவனிடமிருந்து விடுபட இன்னுமே திமிறிக் கொண்டிருந்தாள்.
அவள் கேட்ட கேள்விக்கான பதில் இதுவல்ல. ஆனாலும் அவனின் திறமையையும், பொறுப்பையும் நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை. இந்தக் குணத்தால் அல்லவா அவன் இந்தளவு முன்னேறியிருக்கிறான்.
“நான் இன்னும் ரெண்டு வாரத்துல சென்னைக்கு நிரந்தரமா போகப் போறேன். அதனால உன் ட்ரான்ஸ்பர்க்குச் சம்மதம் சொன்னேன்” எனத் தொடர்ந்தான்.
திமிறிக் கொண்டிருந்தவள் சட்டென்று அதை நிறுத்திவிட்டுப் புரியாமல் அவனை ஏறிட்டுப் பார்க்க, “ஞாபகமிருக்கான்னு தெரியலை நான் ஆரம்பிச்ச கம்பெனி இன்னும் சென்னையில இயங்கிட்டு இருக்கு. இங்கே ப்ராஜக்ட் முடிஞ்சதே” எனப் பளீரென்று புன்னகைத்தான்.
மதுமிதாவின் முகம் இளக ஆரம்பிக்க, “அஞ்சனா இனி நம்ம வாழ்க்கையில குறுக்கே வர மாட்டா? இப்போவது ஒத்துக்குவியா? என்கூட வாழ்க்கை முழுவதும் வரச் சம்மதமா? கல்யாணம் பண்ணிக்கலாமா?” என அவன் வார்த்தைகளில் இதத்தை முக்கியெடுத்துப் பேசவும், அவள் கண்களில் கரகரவென்று கண்ணீர் வந்துவிட்டது.
அவன் மார்பிலேயே புதைந்து அவள் அழ ஆரம்பிக்க, “கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டது தப்பா? இப்படி அழற. சரி பிடிக்கலைன்னா விடு. வேற ஆளைப் பார்க்கலாம்” என நிரஞ்சன் சொன்னாலும், அவளை இறுக்கி அணைத்துக் கொண்டிருந்தான்.
அவன் மார்பிலேயே மீண்டும் பல்லை வைத்துக் கடித்துக் வைக்க, “பல் உனக்குப் பலத்த ஆயுதம் போல. கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் உன்கிட்ட” என்றான்.
“இடியட்...” என அப்பொழுதும் அவள் மனக்குமுறலைத் தெரிவிக்க, “என்னை இப்படி ஆசையாகக் கூப்பிடப் போறன்னு முன்னாடியே என் கார்ல எழுதி வச்சு எனக்கு ஹின்ட் கொடுத்தியா மது?” எனச் சிரிப்பில் குலுங்க, “என்னை விடுங்க... நான் கிளம்பறேன்” என மீண்டும் திமிற ஆரம்பித்தாள்.
“விடமாட்டேன்” என அவன் அவளை மேலும் இறுக்கிக் கொண்டான்.
சற்றுநேரம் அவர்களுக்கான நாழிகைகள் எந்த இடையூறுமில்லாமல் நகர்ந்தன.
“என்னை எதுக்கு இத்தனை நாள் காத்திருக்க வைச்சீங்க? முன்னாடியே வந்து சொல்லியிருந்தா இந்த ரெண்டு-மூணு வாரம் நிம்மதியா இருந்திருப்பேனே” என கரகரத்தக் குரலில் மதுமிதா வினவ, .
குனிந்து அவள் தலையில் முத்தம் பதித்தவன், “நீயா உணர்ந்து வரணும் என நினைச்சேன் மது. நீயா யோசிச்சு முடிவெடுக்க உனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுத்தேன். உனக்குத் தெளிவு கிடைக்கட்டும் என இருந்தேன். இப்போ நீ தெளிவா இருக்க இல்லை?” என்றான்.
அவன் தனக்காக ஒவ்வொரு செயலையும் பார்த்துச் செய்திருக்கிறான் என அவளுக்குப் புரிந்தது.
“சாரி மது. என்னால அந்த அஞ்சனா உனக்குச் சிரமத்தைக் கொடுத்துட்டா” என அவன் மன்னிப்பை வேண்ட, தலையை உயர்த்தி அவனைப் பார்த்தாள். அவன் கண்களில் பெருங்கடலெனப் பொங்கும் காதலைக் கண்டாள்.
அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் (குறள் 706)
வள்ளுவரின் குறளுக்கு இணங்க, கண்ணடியைப் போல் அவனுடைய உள்ளத்தில் எழும் உணர்வுகளை அவன் முகம் காட்டிக் கொண்டிருந்தது.
சற்று எம்பி, அவன் இதழில் தன் இதழ் பதித்து முத்தம் கொடுத்து அதே வேகத்தில் விலகி, “நீங்க கொடுத்ததைத் திருப்பிக் கொடுத்துட்டேன்” என்றாள். அவள் அப்படிச் செய்வாள் என்று எதிர்பார்க்காதவன் இனிமையாக அதிர்ந்தான்.
அதரங்கள் சிரிப்பில் நெளிய, விழிகள் இரசனையுடன் அவளை நோக்க, “இதெல்லாம் போகட்டும்... நான் இப்படி ஒன்னும் அவசர முத்தம் கொடுக்கலை. மூச்சை நிறுத்தற மாதிரி ரொம்ப நேர....ம்ம்ம் கொடுத்தேன்” என இழுத்தான்.
“உங்க மூச்சை நிறுத்தறதுக்கு முன்னாடி நான் மூச்சடைச்சுப் போயிடுவேன்” என அவள் எரிச்சலுடன் சொல்ல, அதற்கு மேல் அவளை அவன் பேசவிடவில்லை. அவள் முகத்தை நிமிர்த்தி, உணர்ச்சிக் கொந்தளிப்பில் துடிக்கும் இதழ்கள் நோக்கிக் குனிந்து முத்தமிட்டான்.
எவ்வளவு நேரம் அப்படியே இருந்தார்களோ இருவருமே அறியவில்லை. திடீரென்று அவன் அலைபேசி பக்கத்து அறையிலிருந்து சிணுங்க, இருவரும் தன்னுணர்வு பெற்றனர்.
படாரென்று அவள் அவனைவிட்டு விலகி முன்னறைக்குச் சென்று இருக்கையில் அமர்ந்து கொண்டாள். அவள் சற்றுச் சமன்பட அவளுக்குக் குடிக்கத் தண்ணீர் எடுத்து வந்து தர, மறுக்காமல் அதை வாங்கிக் கொண்டாள்.
அவளருகில் அமர்ந்தவன், “ஒரு ஜப்பானிய பழமொழி இருக்கிறது தெரியுமா? தவறான ரயில்ல ஏறினா உடனே அடுத்த ஸ்டேஷன்ல இறங்கிடணும். காத்திருந்து ரொம்பத் தூரம் போயிட்டு இறங்கினா நமக்குத் தான் செலவு அதிகம்.
இது ஒரு சின்னப் பயணத்துக்கு மட்டுமில்லை வாழ்க்கைக்கும் ரொம்பப் பொருந்தும். நான் என்ன சொல்ல வரேன்னு உனக்குப் புரியும்னு நினைக்கிறேன். எனக்கான ரயில் அஞ்சனா இல்லைங்கிறதை எப்பவோ புரிஞ்சிகிட்டேன். அதனால உடனே இறங்கிட்டேன். திரும்பவும் கண்டிப்பா ஏறப் போறதில்லை” என அவள் கையைப் பற்றி வாக்குறுதி தருவதைப் போல் சொன்னான்.
“எனக்கு இப்போ மனம் தெளிஞ்சிடுச்சு. நீங்க எந்த விளக்கமும் தர வேண்டாம்” என்றாள் மதுமிதா.
அவளைக் காதலுடன் பார்த்தவன் பற்றியிருந்த கையை மேலே ஏந்தி முத்தம் வைத்துவிட்டு, “அப்போ கல்யாணத்துக்கு நாள் பார்க்கச் சொல்லலாமா?” என்றான்.
அவள் “ம்ம்ம்..” எனத் தலையாட்ட, யாரோ அழைப்பு மணியை அழுத்தினார்கள்.
நிரஞ்சன் போய்க் கதவைத் திறக்க, பவித்ராவும் கௌரியும் நின்று கொண்டிருந்தனர். “பேசி முடிச்சுட்டீங்களா? இதுக்கு மேலே சும்மா வெளில சுத்திட்டு இருக்க முடியாது. மயக்கமே வந்திடும்” என்றவாறே உள்ளே நுழைந்தாள் பவித்ரா.
ஆக இவர்களும் இவனுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டார்களா என மதுமிதா உள்ளுக்குள் பூரித்துப் போனாள். நிரஞ்சன் தன் அன்னை மற்றும் பவித்ராவிடம் அவர்களுக்குள் என்ன பிரச்சனை எனச் சொல்லி, ஒவ்வொரு காயாக நகர்த்திக் கொண்டிருப்பதாகச் சொன்னான்.
“இந்த அஞ்சனா சரியில்லைன்னு நான் அப்போவே சொன்னேன். கேட்டீங்களா?” எனப் பவித்ரா அப்போதும் தன் அதிருப்தியை வெளிக்காட்ட மறக்கவில்லை.
கூடிய விரைவில் எந்தத் தடைகளுமின்றி மதுமிதாவுடன் ஒன்று சேரப் போவதாகச் சொன்னான். ஆகவே அவர்களின் திட்டப்படி அவர்கள் மதுமிதாவிடம் எதைப் பற்றியும் கேட்கவில்லை. பகிர்ந்து கொள்ளவுமில்லை.
“என்ன ஆச்சு மது? ஓகே சொன்னியா இல்லையா?” எனப் பவித்ரா தோழியிடம் கேட்க, “ஓகே சொல்லி வாழ்க்கை கொடுக்கலாமான்னு நீயே சொல்லு பவி” என்றாள்.
“அடப்பாவி.. இப்போ தானே சம்மதம் சொன்ன” என நிரஞ்சன் போர்க்கொடியைத் தூக்க, கலகலவென்று இரண்டு பெண்களும் சிரித்தனர்.
“பாவம்.. போனாப் போகட்டும்.. இதுக்கு மேலே யாரும் இவரைக் கல்யாணம் பண்ணமாட்டாங்க. அப்புறம் ஆண் ஔவையார் ஆகிடுவார் என் அண்ணன்” எனப் பவித்ரா சொல்ல, “போதும் என் பையனைக் கலாட்டா பண்ணினது” எனக் கௌரி மகனுக்கு ஆதரவாக வந்தார்.
“பவி, அடிக்கடி ஒரு டயலாக் என்னைப் பார்த்துச் சொல்லுவியே” எனத் தங்கையைப் பார்க்க, அவள் புரியாமல் விழித்தாள். அவள் அண்ணனைப் பார்த்து இடக்கு மடக்காக ஆயிரம் சொல்லுவாள். அதையெல்லாம் சேர்த்து வைத்தால் ஒரு புத்தகமே போடலாம்.
“ஊர் உலகத்துல நாலைஞ்சு அண்ணன்கள் இருக்கிற தங்கச்சி எல்லாம் நல்லா இருக்கா. ஒரே ஓர் அண்ணனை வச்சுட்டு இருக்கிற நான் படற பாடு இருக்கே... ஞாபமிருக்கா” எனக் கேட்டான்.
“ஓஹ்.. நான் சொன்னது உங்களுக்குத் தெரியுமா?” எனத் திகைத்தாள்.
“ஆமா, அப்போவே காதுல விழும். ஆனா அந்த டயலாக் இப்போ எனக்கு ரொம்ப யூஸ் ஆகுது” என்றான்.
“எப்படி?” எனப் பவித்ரா அண்ணனை நோக்க, “ஊர் உலகத்துல பத்து பதினைஞ்சு பொண்ணுங்களைக் காதலிக்கிறவன் எல்லாம் ஜாலியா இருக்கான். ஒரே ஒரு காதலியை வச்சுட்டு நான் படற பாடு இருக்கே... ஐயையோ...” என அவன் சலித்துக் கொள்ள,
“இப்படியே பேசிட்டு இருங்க, அப்புறம் உங்களுக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது” எனத் தலையில் அடித்துக் கொண்ட பவித்ரா, மதுமிதாவை நெருங்கி இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
“எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு மது. அந்த அஞ்சனாவைச் சுத்தமா எனக்குப் பிடிக்கலை. நல்லவேளை அவ எனக்கு அண்ணியா வரலை” என மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேச,
“நல்ல நேரத்துல எதுக்குத் தேவையில்லாததைப் பேசற பவி. வந்து சாப்பிடுங்க. மது ஊருக்குக் கிளம்பணும் இல்லை” எனக் கௌரி சொல்ல, “உங்களுக்கு என்னை மருமகளா ஏத்துக்கச் சம்மதமா ஆன்ட்டி” என மதுமிதா கேட்டாள்.
“அத்தைன்னு கூப்பிடு” என அவர் தன் சம்மதத்தை அந்தப் பதிலில் தெரிவித்தார். “சீக்கிரம் வந்து வீட்ல பேசறோம்” என உறுதியளித்தார்.
அனைவரும் உணவறையை நோக்கிச் செல்ல, திடீரென்று மதுமிதாவின் கையைப் பற்றி நிறுத்தி அவனை நோக்கி இழுத்த நிரஞ்சன் பட்டென்று அவள் கன்னத்தில் முத்தம் வைத்து, “லவ் யூ மது” எனச் சொல்லி அவசரமாக விலகினான்.
கலக்கத்துடன் கௌரியையும் பவித்ராவையும் ஏறிட்டுப் பார்க்க அவர்கள் சமையலறைக்குள் சென்று மறைந்திருந்தனர். வெட்கச் சிரிப்புடன் அவள் நிரஞ்சனை நோக்க, அவன் அவளைக் காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தான். இனி எல்லாம் இன்ப மயமே!
பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் ஆழியில் எடுக்கும் முத்தைப் போலவே... ஆபத்தானது... அதே சமயத்தில் அது விலைமதிப்பில்லாதது.
முத்துக்காக நாம் ஆழியில் குதிக்க வேண்டாம். கண்ணாடியின் முன் நின்றாலே போதும். அதிலிருந்து ஒவ்வொரு முத்தாக எடுத்துக் கோர்த்து நம் வாழ்க்கையை இனிதாக மாற்றிக் கொள்ளலாம்.
நபிகள் நாயகம் அவர்கள் கண்ணாடியின் பண்புகள் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார். அந்தப் பண்புகளை நாம் கடைப்பிடித்தாலே உறவுகளுடன் எந்த மனக்கசப்புமின்றி நம் வாழ்வை வாழலாம்.
இரண்டு வழிகளில் ஒருவரின் வாழ்க்கையில் வெளிச்சத்தைப் பரப்ப முடியும். ஒன்று மெழுகாக உருகி. மற்றொன்று கண்ணாடியைப் போல் பிரதிபலித்து. மதுமிதா கண்ணாடியைப் போல் பிரதிபலித்து உள்ளதை உள்ளபடியே நிரஞ்சனிடம் சொல்லிவிட்டாள்.
கண்ணாடி யாரைப் பற்றியும் புறம் பேசுவதில்லை. அஞ்சனாவைப் போல் புறம்பேசி, பகைமையைப் பாராட்டுவதைத் தவிர்த்தால் வாழ்வு இனிமையாக நகரும்.
கண்ணாடி கோபதாபமின்றி எதிரிலிருப்பவர் அழகிய தோற்றம் பெற உதவுகிறது. பவித்ராவைப் போலல்லாமல் கண்ணாடி எப்படி உதவுகிறதோ அது போல் சக மனிதர்களின் அகம், அழகுபெற உதவிட வேண்டும்.
கண்ணாடியில் பார்க்கும் போது நம் குற்றங்குறைகளைக் கண்டு வெறுப்படைவதில்லை. அதே போல் கோபத்தைக் கண்ணாடி மீதும் காட்டுவதில்லை. அந்தக் குணத்தை நிரஞ்சன் தன் வாழ்க்கையில் பிரதிபலித்தான். தவறு என்று தெரிந்ததும் தன்னையே திருத்திக் கொண்டான். அதனால் அவன் வாழ்வு அழகாக மாறிவிட்டது.
கண்ணாடி தோழமைக்கு உவமானப்படுத்தப்பட்டிருப்பதன் காரணம், சக மனிதர்களிடம் நிலவும் நட்பையும் தோழமையையும் பிரதிபலித்து அவர்களின் நலன்விரும்பியாகத் திகழ வேண்டும் என்பதற்காவே. நந்தகுமாரும் கண்ணாடியைப் போல் தன் நண்பனின் சுகதுக்கங்களில் பங்கெடுத்து ஓர் உண்மையான நண்பனாக இருக்கிறான்.
கண்டிப்பாக ஆடியிலேயே முத்தெடுக்கலாம்!
**முற்றும்**
Author: Pochampalli
Article Title: ஆடியிலே முத்தெடுத்து - 24
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ஆடியிலே முத்தெடுத்து - 24
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.