• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

ஆடியிலே முத்தெடுத்து - 14

Pochampalli

Member
Joined
Sep 3, 2024
Messages
48
அத்தியாயம் – 14

“எங்களுக்குள்ள நடந்த இந்தப் பிரச்சனையால் பவி இப்போ வரைக்கும் என்னோட பேசறதில்லை. அப்பாவோட மறைவுக்கு நான் காரணமென அம்மாக்கும் என் மேல ரொம்பக் கோபம்” என நிரஞ்சன் வேதனை நிறைந்த குரலில் தன் கடந்த காலத்தைப் பற்றிச் சொல்லி முடிக்க, மதுமிதாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

யாருக்காக அழுகிறாள் என்றே தெரியவில்லை. இளகிய மனம் கொண்டதால் அவளுக்குப் பட்டென்று அழுகை வந்துவிட்டது. நிரஞ்சனை நினைத்தா, பவித்ராவை நினைத்தா, கௌரியை நினைத்தா, நந்தகுமாரை நினைத்தா, இல்லை, தன்னை நினைத்தா எனத் தெரியாமலேயே எல்லோருக்காகவும் அழுதாள்.

பவித்ரா அவன் தங்கை என்று தெரிந்ததும் ஆசுவாசமடைந்த அவளது இதயத்துக்கு அவனுக்கு ஏற்கனவே ஒரு காதலி இருந்திருக்கிறாள் என்று தெரிந்ததும் கட்டி வைத்த கனவு கோட்டை மொத்தமும் வெடித்துச் சில்லு சில்லாகச் சிதறியது உண்மையே.

மூன்று நாட்களில் எத்தனை இடிகள் அவள் இதயத்துக்கு.

காதலைச் சொல்லியதும் அவன் பவித்ராவுக்காகத் தன்னை உதாசீனப்படுத்தினான் என்று நினைத்து பவித்ராவின் மேல் சிறிது பொறாமை கூடக் கொண்டாள். ஆனால் அதற்குள் பவித்ராவுக்கு விபத்து ஏற்பட, அவள் பொறாமை கொண்டதால் பவித்ராவுக்கு இப்படி ஆகிவிட்டதோ என்று எண்ணி மருகினாள்.

அதற்குள் அவளின் கடந்தகாலம் தெரிய வர, பவித்ரா பரிதாபத்துக்குரியவள் என்ற முடிவுக்கு வந்தாள். இருந்தும் நெஞ்சின் ஓரத்தில் அஞ்சனாவின் நிழல் படிந்து அவளை இம்சித்துக் கொண்டிருந்தது.

‘முதல்ல உனக்கு அந்தத் தகுதியே இல்லை’ என்று ஏன் சற்று முன்னர்ப் பவித்ரா அப்படிச் சொன்னாள் என்று புரிந்தது. நிரஞ்சன் தகுதி, அந்தஸ்து பார்த்துப் பழகுவான் என்பதை அப்படிச் சொல்லியிருக்கிறாள்.

அவன் திருந்திவிட்டதாக இப்போது சொன்னாலும் பவித்ரா கண்டிப்பாக நம்பப் போவதில்லை. பின்னே எப்படி நம்புவாள்? பிரச்சனை இன்னும் தீராமல் கிணற்றில் போட்ட கல்லாக அப்படியே இருக்கிறதே.

அவள் அழுவதைப் பார்த்து நிரஞ்சனின் மனம் அலைபாய்ந்தது. தன் வலியை மறந்து அவள் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என அவன் கைகள் தாமாக மேலெழுந்துவிட்டன.

‘என்னடா செய்கிறாய்?’ என அவன் நெஞ்சம் நங்கென்று ஓங்கிக் கொட்டியது. ‘எந்த உரிமையில் அவள் கண்ணீரைத் துடைக்கிறாய்?’ என அவன் மூளை அதட்டல் போட, கையைத் தன் தலைமுடிக்குள் விட்டு அளைந்தான்.

“அவங்க ஊரைவிட்டுக் கிளம்பினதும் எனக்கு என்ன பண்ணறதுன்னே தெரியலை மது. எப்படியோ விசாரிச்சு பவி வேலை செய்யற நிறுவனத்தைக் கண்டுபிடிச்சேன். அப்புறம் இங்கே இருக்கிற எனக்குத் தெரிஞ்ச ஒருத்தரைப் பிடிச்சு என் ‘கன்சல்டிங்’ கம்பெனி வழியாகக் குறைஞ்ச விலைக்கு ப்ராஜக்ட் செஞ்சு தர்ரேன்னு சொல்லி சம்மதிக்க வச்சேன்” என நிரஞ்சன் பேசிக் கொண்டிருக்க, நடப்புக்கு வந்தாள் மதுமிதா.

அவன் நேரில் இருந்தால் வேலை இன்னும் சுலபமாக இருக்கும் என்று நம்ப வைத்து நிரஞ்சன் ஹைதராபாத்துக்கு வேலைக்கு வந்தான்.

அவனைப் பார்த்ததும் வேறு வேலை தேடுவதில் பவித்ரா தீவிரமாக, அப்படி அவள் வேறு வேலைக்குச் சென்றால் அங்கேயும் தொடர்ந்து வருவதாக நிரஞ்சன் மிரட்டல் விடுத்தான். அதன்பிறகு அவள் வேலையை விட்டுப் போக நினைக்கவில்லை. நிரஞ்சனைச் சகித்துக் கொண்டிருக்கப் பழகிக் கொண்டாள்.

எப்பாடுபட்டாவது பவித்ராவின் மனதை மாற்ற வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தான். ஆனால் மதுமிதா அங்கே வேலைக்குச் சேரவும் அவள் அவனுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாகவே தோன்றினாள்.

ஏனெனில் யாருடனும் அதிகம் பேசாத பவித்ராவைக் கூட மதுமிதா தன் வசம் சாய்த்துவிட்டாள். அவள் இருக்கும் இடத்தில் எல்லாம் தவறாமல் பவித்ராவும் இருந்தாள். அதுவும் முகம் மலரச் சிரித்தாள். அதைப் பார்க்கவே நிறைவாக இருந்தது நிரஞ்சனுக்கு.

ஆகவே பவித்ராவின் காயத்துக்கு மதுமிதா மருந்தென நம்பினான் அவளையே பலி கொடுக்கப் போகிறான் என்பதை உணராமல். ஏன் தன் மொத்தக் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும் அவளே விடையாகத் தோன்றினாள். அதற்காகவே மதுமிதாவுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தான் நிரஞ்சன்.

“உண்மையை ஒத்துக்கிறேன் மது. பவி உனக்கு ஃப்ரெண்ட்டா இருந்ததால நான் உன்னோட நெருங்கிப் பழகினேன். உன் மூலமா பவியோட நான் மறுபடியும் பேச முடிஞ்சது. ஆனா, அதற்காக உன் கூடப் பாராட்டின நட்பு கண்டிப்பாகப் பொய்யில்லை” என அவன் தன்னிலை விளக்கம் தந்தான்.

‘அஸ்திவாரமே இங்கே ஆட்டம் காண்கிறதாம். அதன்மேல் கட்டி எழுப்பிய கட்டடம் மட்டும் திடமாக இருக்கிறதாம். யார் நம்புவார்கள்?’ மனதுக்குள் விரக்தியுடன் சிரித்துக் கொண்டாள் மதுமிதா.

மதுமிதா எதுவும் சொல்லாமல் வெறித்த பார்வையுடன் நின்று கொண்டிருக்க, அவனே தொடர்ந்தான். “ஒரு வருஷம் கழிச்சு உங்க ரெண்டு பேரோட பர்த்டே அன்னைக்கு என் அம்மாவோட சமையலை நான் சாப்பிட்டேன்” எனச் சொன்னவனின் கண்கள் பனித்திருந்தன.

எதற்காக அன்று அப்படிப் பறந்தான் எனப் புரிகையில் நெஞ்சக்கூடு முழுவதையும் தீயிலிட்டுப் பொசுக்கியதைப் போல் உணர்ந்தாள். ஆனாலும் அவன் அன்னையின் அன்புக்காக ஏங்கியிருக்கிறான் எனப் புரிகையில் அவள் மனம் சற்று இளகிப் போனது உண்மையே.

“முன்னாடியெல்லாம் என் குணம் இப்படியில்லை மது. வசதி குறைவா இருக்கிற ஆட்கள் கூட ரொம்பவும் பேச கூட மாட்டேன் தெரியுமா? அவங்களைப் பார்த்து எனக்குள்ள ஓர் அலட்சியம். காலேஜ்ல கூடப் பணக்காரப் பசங்களா பார்த்துப் பழகினேன்.

நந்தகுமார் மட்டும் அதற்கு விதிவிலக்கு. அவன் ரொம்பவும் அறிவாளி.. புத்திசாலி. அதனால் அவனோட எனக்கு எப்பவும் பேசப் பிடிக்கும். நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்க முடியும். ஆனாலும் நந்தாவோட நட்பு ரீதியா பழகாம சுயலாபத்துக்காக , சுயநலத்துக்காக ஃப்ரெண்ட்டா வச்சிருந்தேன். எவ்வளவு கேவலமானவனா இருந்திருக்கேன் பாரு.

அப்படி என் மேலேயே நான் வெறுப்பா இருக்கிறப்போ என்னையும் ஒருத்தி விரும்புவான்னு சத்தியமா நான் கனவுல கூட எதிர்பார்க்கலை மது. ஐம் ரியலி சாரி” என அவளை ஊடுருவிப் பார்த்தான்.

தவறு செய்தவனே தவறை ஒத்துக் கொண்டு பணிந்து நிற்பதே பெரிய விஷயம். அப்படியிருக்கையில் அவனைப் போட்டுக் குத்திக் கிழிப்பதில் என்ன பிரயோஜனம்? அது செத்த பாம்பை அடிப்பதற்குச் சமானம்.

அதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டாலும் அவளுக்கு வேறொரு விஷயம் நெருடலாக இருந்தது. ஏற்கனவே ஒருத்தியை விரும்பியிருந்ததால் அவன் அவளை ஏறெடுத்துப் பார்க்க வாய்ப்பில்லை என்று புரிகிறது.

ஆனால் இந்த விளக்கத்தை எல்லாம் ஏன் அவன் தன்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான் என்று சத்தியமாகப் புரியவில்லை.

“ப்ச்.. விடுங்க நிரஞ்சன். நான் பேசினதை அப்படியே மறந்துடுங்க. நானும் கொஞ்சம் யோசிக்காம நடந்துகிட்டேன். ஆனா எனக்கு உங்க கடந்த காலத்துல நடந்ததைப் பத்தி என்ன சொல்லறதுன்னு தெரியலை” என அவனுக்குச் சமாதானம் சொன்னவள்,

“உங்க ஃப்ரெண்ட் நந்தாவை கண்டுபிடிச்சீங்களா, இல்லையா? அவர் இப்போ எப்படி இருக்கார்?” என மதுமிதா கண்களைத் துடைத்துக் கொண்டே கேட்டாள்.

“நந்தாவோட பேசிக் கிட்டத்தட்ட ஒரு வருஷமாச்சு மது. அவனுக்குக் கூப்பிட்டா அவன் ஃபோனை எடுக்கறதே இல்லை.ஆனா, அவன் ஒரு மாசத்துல கோமாவில இருந்து வெளில வந்துட்டானாம். என்ன, தலையில அடிபட்டதால காயமெல்லாம் ஆற கொஞ்ச நாளாச்சாம். அடிக்கடி தலைவலி வந்து கஷ்டப்பட்டிருக்கிறான்

இதெல்லாம் அவன் அம்மா சொன்னாங்க. அவங்க ஃபோனை எடுக்கறப்போ எல்லாம் தன் ஆற்றாமையை என்னைத் திட்டித் தீர்த்துக்குவாங்க. அதைக் கேட்டு எனக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்” என்றவனின் புன்னகையில் வலியும் வேதனையும் ஒளிந்திருப்பதைக் கண்டாள்.

அவனை வார்த்தைகளால் விளாசித் தள்ளுவதால் அவரின் மனவலி குறையக்கூடும் என்றால் அந்த வலியைக் குறைக்க அவனால் முடிந்த முழு ஒத்துழைப்பையும் அவன் கண்டிப்பாகக் கொடுப்பான் என நிரஞ்சன் அழைப்பதை நிறுத்தவேயில்லை.

நிரஞ்சன் வேதனையில் வருந்துவதைக் கண்டு அவனைத் தோளில் சாய்த்து ஆறுதல் தர வேண்டும் போலிருந்தது மதுமிதாவுக்கு. அவள் எண்ணம் போன திசையை உணர்ந்து திடுக்கிட்டாள்.

‘இவ்வளவு நடந்த பின்னரும் இன்னும் நீ உன் மனதை மாற்ற முயற்சிக்க மாட்டேன் என்கிறாயே’ என அவள் மூளை அவள் மண்டையிலும் , மனதிலும் நங்கென்று மாறி மாறி இடித்தது.

“நல்லவேளை அவருக்கு ஒன்னும் ஆகலை” என நிம்மதியடைந்த மதுமிதா, “அப்போ அவர் இருக்கிற இடத்தைக் கண்டுபிடிச்சீட்டீங்களா?” எனக் கேட்டாள்.

“ப்ச்... இன்னும் இல்லை...” என விரக்தி பரவிய குரலில் சொன்னவன், “ஒத்துக்கிறேன்... முன்னாடி ரொம்பச் சுயநலவாதியா இருந்திருக்கிறேன் மது. இப்போ திருந்த முயற்சிக்கிறேன். ஆனா ஏனோ கைகளைக் கட்டித் தண்ணீர்ல தள்ளின மாதிரி இருக்கு” என நிரஞ்சன் மேற்கொண்டு பேசும் முன்னால்,

“இப்போ மட்டும் சுயநலமில்லாமலா இருக்கீங்க?” எனப் பட்டென்று கேட்டுவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள். பின்னே, தன் முகத்துக்குப் பின்புறம் சிதைந்து கிடக்கும் அவள் இதயத்தின் துண்டுகளைப் பற்றி அவளைத் தவிர யாரறிவர்? அந்த ஆதங்கத்தில் வார்த்தைகள் கட்டுப்பாடின்றி வெளிவந்துவிட்டன.

“சாரி... சொல்லறேன்னு தப்பா நினைக்காதீங்க. இன்னுமே சுயநலவாதியாச் செயல்படறீங்க. பிரச்சனைக்குத் தீர்வாக இருக்கும் நந்தகுமாரைக் கண்டுபிடிச்சு எப்படியாவது உங்க தங்கச்சியோட ஒன்னு சேர்த்து வைக்காம, பவி உங்களோட ஒன்னு சேரணும், உங்களோட பேசணும்ன்னு என்கிட்டே நெருக்கமாப் பழகியிருக்கீங்க. இது சுயநலமில்லையா?” என்றதும் திகைத்துப் போனான்.

உண்மையல்லவா?! இதுவும் சுயநலவாதியின் செயலே. அவனுக்குத் தொழிலில் உள்ள புத்திசாலித்தனத்தைச் சொந்த வாழ்க்கையில் காட்டியிருந்தால் அவன் இந்நேரம் எங்கேயோ மகிழ்ச்சியுடன் இருந்திருப்பான். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கத் தேவையே இல்லை.

“உங்க ஃப்ரெண்ட் பேசலைன்னா உங்களால கண்டுபிடிக்கவே முடியாதா என்ன?” என வார்த்தைகளில் தயவு தாட்சண்யம் காட்டாமல் சாடினாள் மதுமிதா.

கண்ணாடியின் குணத்தைப் போல் தன் குற்றங்குறைகளை நளினமாக அவள் சுட்டிக் காட்டுகையில் அவள் மேல் அவனுக்கு வெறுப்புத் தோன்றவில்லை. கோபமும் வரவில்லை. மாறாக, மகிழ்ச்சியடைந்தான் நிரஞ்சன்.

மதுமிதாவின் தோழமைக் குணத்தைப் பொக்கிஷமென நினைத்தான். சீர்த்திருத்தத்துக்குத் தயாராகவே இருந்தான். அதனால் மதுமிதா அப்படிக் கேட்டதும் அவனுக்கும் நன்றாக உறைத்தது.

“நீ சொல்லறது ரொம்பவும் கரெக்ட் மது. ஆனா எங்க இருக்கான்னு தெரியலை. பேச நினைச்சாலும் பேச மாட்டேங்கிறான். அவங்க அம்மா பேசறப்போ அந்தச் சிக்னல் வச்சுக் கண்டுபிடிக்கக் கூட முயற்சி செஞ்சேன். ஆனா அவங்க ரொம்ப நேரமெல்லாம் பேசி எனக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்கறதேயில்லை.”

நந்தகுமார் மிகவும் புத்திசாலி. கைபேசி வழியே அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிடுவான் நண்பன் என்று அவன் அன்னையின் பேச்சைச் சுருக்கமாக முடித்துக் கொள்ளச் சொல்லியிருப்பான்.

கைகளைக் கட்டித் தண்ணீர்ல் தள்ளின மாதிரி இருக்கிறது என்று ஏன் சொன்னான் என்று புரிந்தது. இவன் தடுக்கின் கீழே பாய்ந்தால் அவன் நண்பன் கோலத்தில் நுழைகிறான்.

“தெரிஞ்சவங்க, ஃப்ரெண்ட்ஸ் என எல்லோர்கிட்டேயும் விசாரிச்சுட்டேன். பலன் என்னவோ பூஜ்ஜியம். அதுக்கு மேலே என்ன செய்யறது எனப் புரியலை. அவனைக் காணோம்ன்னு நான் விளம்பரம் கொடுக்க முடியுமா என்ன? அது மத்தப் பிரச்சனைகளை இழுத்துவிடுமே” என அவன் விரக்தியில் பேச,

“அவரைப் பத்தி எதுவும் கொடுக்க வேண்டாம். நம்ம பவிக்கு நடந்த பயங்கர விபத்தைப் பத்தி நியூஸ் பேப்பர்ல கொடுக்கலாமே. முக்கியமா அவ படத்தோட போடுங்க. உங்க குடும்பத்துல எல்லோருக்கும் இதைப் பத்தித் தெரியும். அதனால் பவிக்கு எந்தப் பிரச்சனையும் வராது.

ஆனால் நந்தகுமாருக்கு உண்மையில் பவியைப் பிடிச்சிருந்தா கண்டிப்பா உங்களைக் காண்டாக்ட் பண்ணுவார். அப்படி இல்லையா, வேறு வழியில அடுத்து முயற்சிக்கலாம்” என்றாள் மதுமிதா.

தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தவனுக்குத் துடுப்பாய்க் கிட்டியது அவளது ஆலோசனை. ‘இது ஏன் அவனுக்குத் தோன்றவில்லை?’ கண்களில் ஒளி மின்ன அவளைப் பிரகாச முகத்துடன் பார்த்தான்.

“பிரச்சனையை உள்ளுக்குள்ள இருந்து பார்த்தாத் தீர்வு கிடைக்காது. நான் வெளியாள் இல்லையா? அதனால் எனக்கு உடனே தீர்வு கிடைச்சது” என்றாள் மதுமிதா. அவள் வெளியாள் என்று சொன்னது ஏனோ சுருக்கென்று அவன் நெஞ்சைத் தைத்தது. பயங்கரமாக வலிக்கவும் செய்தது.

ஆனால் அதை மறைத்துக் கொண்டு, “என் மேலே கோபமில்லையா மது? எனக்கு ஹெல்ப் வேற செய்யற” என அவன் கேட்க,

“வண்டி, வண்டியா இருக்கு. ஆனா அந்தக் கோபத்தை வச்சு நான் எதுவும் பண்ண முடியாது” விரக்தியாக உதட்டைப் பிதுக்கியவள்,

“தெரிஞ்சவங்க கஷ்டப்பட்டாலே எனக்குப் பொறுக்காது. என்னால முடிஞ்ச உதவி செய்வேன். இதுல உங்க மேலே..” என நிறுத்தியவள், “காதலைத் தெரியாம வச்சுட்டேன். எக்கேடோ கெட்டுப் போ என விடமுடியலை” என்றாள்.

‘தெரியாமல் காதலை வைத்தாளா?’ அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நெஞ்சு பிசைய ஆரம்பித்தது. “சா..” நிரஞ்சன் மன்னிப்பை வேண்ட வாய்த் திறக்க,

“தயவு செஞ்சு சாரி மட்டும் சொல்லாதீங்க. அது என் மனசுல இருக்கற ரணத்தைக் குறைக்காது. உங்களுக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கறப்போ என்னைப் பத்தியெல்லாம் நினைக்கவே உங்களுக்கு நேரமிருக்காது. நானெல்லாம் யாரு உங்களுக்கு?” என அவள் விட்டேற்றியாகப் பேசினாள்.

“மது...” அவன் மீண்டும் சமாதானம் செய்ய விழைய, “இப்போவே ரொம்ப லேட்டாகிடுச்சு. நான் என் மனசைத் திறந்ததை மறந்துடுங்க. நானும் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்” என அவள் மேலேயே பழியைப் போட்டுக் கொண்டாள்.

“அதைப் பத்தி இனி பேசவே வேண்டாம். நான் ஆபீஸ் போகணும். தலைக்கு மேலே வேலையிருக்கு.”

அவள் பேசப் பேச, நிரஞ்சனுக்கு மனம் வேதனையில் துடித்தது. அவளிடம் பேசிய வரையில் அவசரப்பட்டுட்டேன்... தெரியாமல் செய்துவிட்டேன்... எனத் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். ஆனால் அது அவனுக்குச் சற்றும் ரசிக்கவில்லை.

‘இவளை முன்பே சந்தித்திருக்கலாம். தன் வாழ்க்கையின் பாதை அப்படியே மாறியிருக்குமே’ என நிரஞ்சனின் எண்ணப்போக்கு தறிகெட்டு ஓடியது.

‘ஆமாம்.. தலைக்கனம் உன்னைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கையில் இவளிடம் முகம் கொடுத்து பேசியிருப்பாயா என்ன?’ அவன் மனசாட்சியே அவனைக் காறித் துப்பியது.

நல்லவேளை இவளை முன்னரே சந்திக்கவில்லை. அப்படிச் சந்தித்திருந்தால் தன் குடும்பத்தின் மனதை நொறுக்கியது போல், நண்பனின் மனசைப் பொசுக்கியதைப் போல் இவளின் மனதையும் கருகச் செய்திருப்பான்.

“நீங்க போய் உங்க பிரச்சனையைப் பாருங்க நிரஞ்சன். முதல்ல பேப்பர்ல விளம்பரம் கொடுங்க. முக்கியமா தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, பெங்களூர் என எல்லாப் பேப்பர்லேயும் வரணும்.”

மேலும் சில ஆலோசனைகளை வழங்கிவிட்டு, “உங்க வாட்ஸ்ஆப்ல பவிக்கு நடந்த விபத்தைக் குறிச்சு ஏதாவது ஹிண்ட் கொடுத்து ஸ்டேட்டஸ் போடுங்க. உங்க நம்பர் அவர்கிட்டே இருக்கு இல்லையா? அப்புறம் என்ன ஆகுதுன்னு பார்க்கலாம்” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள் மதுமிதா.

தன்னைவிட்டு விலகிச் செல்பவளையே கண்ணிமைக்காமல் நோக்கினான். அவள் தன் வாகனத்தில் ஏறி அங்கிருந்து சென்ற பின்னரும் அவள் புள்ளியாய் தேய்ந்து மறையும் வரையில் அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நின்றான்.

தொடரும்...
 
Last edited:

Author: Pochampalli
Article Title: ஆடியிலே முத்தெடுத்து - 14
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
222
பிரச்சனை என்று அதிலே
படுத்து கிடக்காமல்
பார்வையை விரிவாக்கி
பாதையை நோக்கி
பயணம் என்றும்
பலன் தரும்....
பவி தான் துடுப்பு சீட்டு
பார்ப்போம்.... 🤩🤩👏🏻👏🏻
 
Top Bottom