• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

ஆடியிலே முத்தெடுத்து - 12

Pochampalli

Member
Joined
Sep 3, 2024
Messages
48
அத்தியாயம் – 12

“நந்தா.. நந்தா..” எனச் சிங்கம் போல் கர்ஜித்தவாறே வீட்டினுள் நுழைந்தான் நிரஞ்சன்.

சத்தம் கேட்டு, முன்னறைக்கு வந்த நந்தகுமார், முகமெல்லாம் சிவந்து, வியர்வை முத்துக்கள் நெற்றியில் கோர்க்க, கோபத்தில் கனன்றவாறு நின்று கொண்டிருந்த நிரஞ்சனை அவன் அப்போது தன் வீட்டில் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

“என்ன ஆச்சு நிரஞ்சன்? ஏன் இப்படிக் கோவத்துல இருக்க? வா வந்து உட்காரு” என அவனைச் சாந்தப்படுத்த நினைத்து நிதானமாகவே பேசினான் நந்தகுமார்.

பட்டென்று முன்னால் நின்றிருந்தவனின் சட்டைக் காலரை இரண்டு கரங்களால் பற்றிக் கழுத்துடன் இறுக்கினான் நிரஞ்சன். “உனக்கு எவ்வளவு தைரியமிருந்தா என் தங்கச்சியோட மனசைக் கலைச்சிருப்ப?” எனக் கத்தினான்.

அவனுக்கு விஷயம் தெரிந்துவிட்டது எனப் புரிந்து கொண்டான் நந்தகுமார்.

“நிரஞ்சன் கொஞ்சம் பொறுமையா இரு. நீ நினைக்கிற மாதிரி எதுவுமில்லை. ரெண்டு நாளைக்கு முன்னாடி பவித்ரா என்கிட்ட வந்து என்னைப் பிடிச்சிருக்கிறதாச் சொன்னா. நான் அவளுக்கு இது சரிப்பட்டு வராதுன்னு புத்தி சொல்லி அனுப்பி வைச்சேன்” என்றான் நிதானத்தைக் கைவிடாமல்.

“நீ சொல்றதை நான் நம்பணுமா? அவ அப்படிப் பேசியிருந்தா முதல்ல நீ என்கிட்ட வந்து சொல்லியிருக்கணும் இல்லை” எனக் கத்தினான்.

“உன்கிட்ட அதைப் பத்தி பேசுறதுக்குத் தான் டைம் இருக்குமான்னு அன்னைக்கே கேட்டேனே. நீ ரெண்டு நாளைக்கு நேரமில்லைன்னு சொல்லி, திடீர்னு பெங்களூருக்குக் கிளம்பிட்ட. போறப் போக்குல பேசற பேச்சா இது? உன் கூடத் தனியாப் பேசணும்னு நினைச்சேன். சரி, வந்ததும் பார்க்கலாம்னு இருந்தேன்.” நந்தகுமாரின் வார்த்தைகளில் எவ்வித தடுமாற்றமுமில்லை.

உண்மையே. நந்தகுமார் அவனிடம் பேசச் சென்றான். அலுவலகத்தில் வைத்தல்லாமல் வெளியில் பேச வேண்டும் என்று நினைத்திருந்தான். ஆனால் அஞ்சனாவின் தந்தை நிரஞ்சனை அவசரமாகப் பெங்களூருக்கு வரச் சொல்லவும், முடிக்க வேண்டிய வேலைகளையெல்லாம் அவசரம் என நந்தகுமாரிடம் ஒப்படைத்துவிட்டு, உடனே கிளம்பிவிட்டான்.

அதன்பிறகு நந்தகுமாருக்கு வேலை கழுத்தை நெறிக்க அதில் மூழ்கிவிட்டான். நிரஞ்சன் வந்த பின்னர் இதைப் பற்றிப் பேசலாம் என அவன் காத்திருக்க, பெங்களூரில் இருந்து வந்ததுமே புயலைப் போல் அவனைச் சுழற்றிப் போட்டுப் பழி சுமத்தி அவனைத் துவம்சம் செய்கிறானே.

“ஓ அப்போ என் மேல தப்புன்னு சொல்றியா?” என அதற்கும் அவன் மேலேயே பாய்ந்தான் நிரஞ்சன்.

“நீ கோபத்துல இருக்க. வா வந்து உட்கார்ந்து பேசலாம். முதல்ல தண்ணி குடி” என நந்தகுமார் தன்மையாக அவனிடம் சொல்லிவிட்டு, “அம்மா, நிரஞ்சனுக்குக் குடிக்க ஏதாவது கொண்டு வாங்க” எனச் சத்தம் கேட்டு அங்கே வந்த அவன் அன்னையிடம் சொன்னான்.

அவர் திரும்பி உள்ளே செல்ல முயல, “உன் கூட உட்கார்ந்து சம்பந்தம் பேச ஒன்னும் நாங்க இங்க வரலை. உன் தகுதிக்கு நாங்க உன் வீட்டுக்கு வந்ததே பெரிசு” என அஞ்சனா தெனாவட்டாக ஏக வசனத்தில் பேசினாள்.

“இங்க பாருங்க, நானும் உங்க கூட உக்காந்து சம்பந்தம் பேசணும்னு நினைக்கலை. என்ன நடந்ததுன்னு சொல்லறேன். அதை முதல்ல கேளுங்க” என அவளிடம் சொன்ன நந்தகுமார், நிரஞ்சனின் கையைப் பற்றி அமருமாறு தன் பக்கம் நோக்கி இழுத்தான்.

சமையலறைக்குச் செல்வதற்குத் திரும்பிய நந்தகுமாரின் அன்னை, அஞ்சனா பேசியதைக் கேட்டதும், அவள் அருகில் சென்று, “ஏம்மா, அவங்க பேசிட்டு இருக்காங்க இல்லை. கொஞ்சம் பொறும்மா” எனச் சொன்னார்.

கோபத்தில் குதிக்கும் நண்பனை அமைதிபடுத்த மகன் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கையில் இவள் இப்படி உசுப்பேத்துவதைப் போல் பேசி வைத்தால் பிரச்சனை பெரிதாகிக் கொண்டே போகாதா?

“நாங்க ஏன் பொறுமையா இருக்கணும்? இது எங்க பொண்ணோட வாழ்க்கை. உங்க பொண்ணுக்கு இப்படி நடந்தா சும்மா இருப்பீங்களா? இல்லை, ஒருவேளை கிடைச்சது லாபம்னு அப்படியே விட்டிருப்பீங்க போல” என அஞ்சனா குதர்க்கமாகப் பேசி வைத்தாள்.

“வாய்க்கு வந்ததையெல்லாம் பேசாத. தேவையில்லாம எங்க வீட்டுப் பொண்ணை எல்லாம் எதுக்கு இழுக்கற? என்ன பிரச்சனைன்னு அவங்க பேசட்டும்” என அப்போதும் நந்தகுமாரின் அன்னை கண்ணியமாகவே பேசினார்.

“ஓஹ்... நான் எதுவும் பேசக் கூடாது.... நல்லாயிருக்கே... உங்க மகனுக்காக நீங்க பேசறப்போ... நான் நிரஞ்சனுக்காகப் பேசினா என்ன தப்பு? பேச வந்த என்னை அவமானப்படுத்தறீங்களா? அதற்கு முதல்ல உங்களுக்குத் தகுதி இருக்கா? நீங்க எல்லாம் எங்க கால் தூசிக்குச் சமம்” என அஞ்சனா அவர்களின் தகுதியை இழுத்து பேச ஆரம்பித்தாள்.

அதற்கு மேல் நந்தகுமாரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தன்னிடம் மரியாதையற்றுப் பேசுவது வேறு. ஆனால் அன்னையிடம் அப்படி மரியாதையில்லாமல் பேசுவதற்கு இவளுக்கு என்ன தகுதி இருக்கிறது? முதலில் இவள் யார் அப்படிப் பேச?

என்ன நடந்தது என்று தெரியாமல் அவன் வீட்டுக்கே வந்து அவனை மட்டுமின்றி அவன் அன்னையையும் சேர்த்துத் தரக்குறைவாகப் பேசினால் அவன் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கப் போவதில்லை. அது நண்பனாக இருந்தாலும் சரி, நண்பனுக்கு மனைவியாகப் போறவளாக இருந்தாலும் சரி.

“பேச வேண்டிய விஷயத்தைப் பற்றி மட்டும் பேசுங்க. தேவை இல்லாம வார்த்தைகளை வெளியே விடாதீங்க அஞ்சனா” என நந்தகுமாருக்கும் இப்பொழுது கோபம் வந்துவிட்டது.

“கோபத்துக்கு ஒன்னும் குறைச்சலில்லை. காசு வேணும்னா மட்டும் எங்ககிட்ட ஓடி வந்து குழைஞ்சுட்டு நிப்பீங்க. அப்போ இந்த வீராப்பைக் காட்டியிருக்க வேண்டியது தானே?” என அஞ்சனா அவனை விடுவதாக இல்லை.

நந்தகுமார் நண்பனை நம்பாமல் ஏறிட்டுப் பார்த்தான். தமக்கையின் திருமணத்தின் போது பணம் வாங்கினான் இல்லையென்று சொல்லவில்லை. அந்த நன்றி உணர்வில் அல்லவா பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு நண்பன் கேட்டான் என்று அவன் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தான்.

இந்நாள் வரையிலும் உண்மையாகவும் நேர்மையாகவும் உழைத்துக் கொண்டிருக்கானே. ஆனால் அதைக் கூட இவளிடம் சொல்லியிருக்கிறான். அப்படியென்றால் நண்பன் தன்னைப் பற்றி மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்? தன்னை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லையா?

“அது எனக்கும் நிரஞ்சனுக்கும் உள்ள பிரச்சனை. அதுல நீங்க தலையிடாதீங்க” என நந்தகுமார் சொல்ல, அஞ்சனாவின் கண்களிலிருந்து கண்ணீர் மளமளவென்று கன்னத்தில் இறங்கியது.

“பாருங்க ரஞ்சு, எப்படிப் பேசறார்? எனக்கு எந்த உரிமையும் இல்லையா?” என அஞ்சனா விசும்பினாள். அதைப் பார்த்த நந்தகுமாரின் அன்னைக்கு, ‘இவள் பேசியதை விடவா தன் மகன் பேசிவிட்டான்?’ என அவளைக் கூர்ந்து நோக்கினார்.

“அஞ்சு என் வருங்கால மனைவி. அவகிட்ட மரியாதையாப் பேசு நந்தா” எனக் கையை உதறினான் நிரஞ்சன்.

நந்தகுமார் சற்றுக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்ததால் அவனால் அவ்வளவு எளிதாகக் கையை உதற முடியவில்லை. நிரஞ்சன் சற்றுத் தடுமாறி விழப் போக, நந்தகுமார் அவனை மறுகையால் பிடித்து நிறுத்தினான்.

“என்ன எங்களை அடிக்கப் பார்க்கறியா?” எனக் கத்திய அஞ்சனா, அவளுக்குப் பாதுகாப்புக்கு என்று அவள் தந்தை ஏற்பாடு செய்திருந்த நபரிடம் கண்ணால் ஜாடை காட்டினாள்.

அவன் எப்போதும் அஞ்சனாவைத் தொடர்ந்து வருவான். வசதியான வீட்டுப் பெண் என்று சிறு வயதில் அவளைக் கடத்திக் கொண்டு போவதற்குச் சில எதிரிகள் திட்டமிட்டனர் என அவள் தந்தை அறிந்ததிலிருந்து அவளுக்குப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தார். அது இன்றுவரையிலுமே தொடர்கிறது.

நந்தகுமாரின் வீட்டுக்குப் போகிறோம் என்றும், மேலும் இரண்டு பேரை அழைத்துக் கொண்டு தங்களைத் தொடரச் சொல்லி அவள் காரில் ஏறியதுமே அந்த அடியாளுக்குச் செய்தி அனுப்பியிருந்தாள்.

அடியாளுடன் போய் இறங்கி மிரட்டினால் நந்தகுமார் பயந்து கொள்ளக் கூடும் என நினைத்தாள்.

அப்படியே அவனை இரண்டு தட்டு தட்டி மிரட்டினால், பவித்ராவைப் பற்றிய நினைப்பையே அழித்துவிடுவான். அதன்பிறகு பவித்ரா தலைகீழாக நின்றாலும் அவள் காதலுக்குச் சங்கு ஊதுவதைத் தவிர வேறு வழியிருக்காது.

கூடுதலாக நந்தகுமாருக்கும் அவன் தராதரம் தெரியும், பவித்ராவுக்கும் அஞ்சனாவின் அருமை புரியும் என எண்ணினாள்.

உடன் வந்த அடியாளும் அஞ்சனாவின் செய்தியைப் புரிந்து கொண்டு, நந்தகுமாரின் கையைப் போய் இரும்பெனப் பற்றினான். தற்காப்புக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்த அந்த நபரின் சக்திக்கு முன்னால் நந்தகுமார் மிகவும் பலவீனமானவனாக உணர்ந்தான்.

அவன் பிடித்த பிடியில் கை விண்ணென்று வலித்தது. எங்கே எலும்புகள் நொறுங்கிவிடுமோ எனப் பயந்தான் நந்தகுமார்.

அதற்குள் நந்தகுமாரின் பிடியிலிருந்து விடுபட்ட நிரஞ்சன், “இங்க பாரு... என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது. இந்த ஊரைவிட்டு நீ உடனே கிளம்பணும். இனி ஒரு நிமிஷம் கூடப் பவித்ராவோட கண்ணுல படக் கூடாது” என நிரஞ்சன் இரக்கமற்றுப் பேசினான்.

“என்னப்பா நிரஞ்சன் இது? இதுக்குப் போய் அவன் ஏன் பிறந்து வளர்ந்த ஊரை விட்டுப் போகணும்?” என நந்தகுமாரின் அன்னை கேட்க,

“இவன் இங்க இருக்கிற வரைக்கும் பவி நான் சொல்லறதைக் கேட்க மாட்டா ஆன்ட்டி. அவ கல்யாணம் முடியட்டும் அப்புறம்...” என நிரஞ்சன் மேற்கொண்டு பேசுவதற்குள், “முடியாது... நான் இங்கிருந்து போகமாட்டேன்” என நந்தகுமார் பிடிவாதம் பிடித்தான்.

பின்னே, தப்பே செய்யாத அவன் ஏன் ஊரைவிட்டு ஓட வேண்டும்? இது ஒன்றும் பேசித் தீர்க்க முடியாத பிரச்சனை என்று இல்லை. பவித்ரா அவனிடம் தன் பிடித்தத்தைச் சொன்னாள். அதற்கு அவன் புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தான்.


அப்படி நந்தகுமார் அவள் கண்களில் படாமல் இருந்தால் மட்டும் அவள் உடனே வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையைத் திருமணம் செய்ய ஒத்துக் கொள்வாளா என்ன? அனுசரணையாகப் பேசித் தட்டிக் கொடுத்து மனசை மாற்ற வேண்டும்.

அதை விட்டுவிட்டு என்னவோ ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்று பேசி வைத்தால் எப்படித் தீர்வு கிடைக்கும்?

“சொன்ன பேச்சுக் கேட்க மாட்டியா?” என அஞ்சனாவின் அடியாள் நந்தகுமாரின் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட, இரண்டு மூன்று அடிகள் பின்னால் நகர்ந்து போய் சுவரில் மோதிக் கொண்டான்.

திடீரென்று நடந்த தாக்குதலில் நிலைகுலைந்து போனான் நந்தகுமார். அதுவும் தற்காப்புக் கலையில் தேர்ச்சி பெற்றவன் தன் முழுப் பலத்தையும் அவனிடத்தில் காட்டினால் ? நந்தகுமார் சுதாரித்து நிற்பதற்குள், “ஐயோ.. நந்தா என்னப்பா ஆச்சு?” என அவன் அன்னை அவனருகில் சென்றார்.

“ப்ச்... இப்போ எதுக்கு அவனை அடிச்ச?” என நிரஞ்சன் அந்த அடியாளிடம் கேட்டுக் கொண்டிருக்க, “ரஞ்சு, இது மாதிரி ஆளுங்களுக்கு நாலு அடி வச்சாத் தான் பயமிருக்கும். நம்ம பொண்ணு பக்கம் எட்டிப் பார்க்க கூட யோசிப்பான்” என அஞ்சனா நிரஞ்சனின் கையைப் போய்ப் பற்றினாள்.

அதற்குள் இரண்டாவது குத்தை நந்தகுமாரின் முகத்தில் இறக்கியிருந்தான் அடியாள். ஆனால் அதற்குள் அவன் அன்னை அருகில் வந்திருக்க, அந்தக் குத்து அவர் முகத்திலும் பாதி இறங்கியது.

“ஐயோ “ என அவன் அன்னை அலற, அதைப் பார்த்த நந்தகுமார் வெறி கொண்ட வேங்கையாய்ச் சீறினான்.

“டேய்.. என் அம்மா மேலேயே கை வைக்கிறியா?” என அந்த அடியாளைத் தாக்க முயல, அதற்குள் அருகில் தரையில் ஓரமாக வைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் பேட்டை எடுத்து நந்தகுமாரின் தலையில் இறக்கிவிட்டான் அவன்.

அந்தக் கிரிக்கெட் பேட்டை நந்தகுமாருக்குப் பரிசாக அவர்கள் கல்லூரிப் படிக்கையில் நிரஞ்சன் தந்திருந்தான். இதுநாள் வரையில் பொக்கிஷமெனப் பத்திரப்படுத்திப் பாதுகாத்து வைத்திருந்தான் நந்தகுமார்.

“அம்மா...” என்ற அலறலுடன் தலையயைப் பிடித்தான் நந்தகுமார். ஒருமுறை என்றால் பரவாயில்லை. மீண்டும் மீண்டும் அந்த அடியாள் நந்தகுமாரின் தலையில் அடிக்க, அவன் மண்டை உடைந்து ரத்தம் பீறிட்டு வெளியேற ஆரம்பித்தது.

“ஹே... என்ன பண்ணற? நிறுத்து” என நிரஞ்சன் அஞ்சனாவின் கையை உதறிவிட்டுச் சுதாரித்து வருவதற்குள் ரத்தம் சொட்ட சொட்ட அப்படியே தரையில் தடாலென்று விழுந்திருந்தான் நந்தகுமார்.

தொடரும்...
 
Last edited:

Author: Pochampalli
Article Title: ஆடியிலே முத்தெடுத்து - 12
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
222
இவனால் தான்
அவன் முடியாமல் இருக்கான் போல.....
பணம் பத்தும் செய்யும்
பந்தம் சிதற வைத்து
பின்னாடி பாசத்துக்கு அலைகிறான்.....
 
Top Bottom