• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

ஆடியிலே முத்தெடுத்து - 11

Pochampalli

Member
Joined
Sep 3, 2024
Messages
48
அத்தியாயம் – 11


அன்று மாலையில் அஞ்சனாவின் தந்தையைச் சந்தித்த பின்னர், நிரஞ்சன் மிகவுமே உற்சாகமாக வீடு திரும்பினான். அவர் அடுத்தமுறை அமெரிக்கா செல்வதற்கு முன்னர்த் தன் மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என நினைத்திருப்பதாகச் சொல்ல, நிரஞ்சனும் தன் பெற்றோரைக் கூடிய விரைவில் அழைத்துக் கொண்டு வருவதாக வாக்குறுதி தந்தான்.

ஆனால் அவன் திருமணம் நடப்பதற்கு முன்னர்த் தன் தங்கையின் திருமணத்தை நடத்திவிடப் பிரியப்படுவதாகவும் அதற்கு வேண்டிய ஏற்பாட்டை உடனே பார்க்கப் போவதாகவும் நிரஞ்சன் சொன்னான்.

அதற்காக அஞ்சனா எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும் என்ற யோசனையில் ஆழ்ந்தார் அஞ்சனாவின் தந்தை. கூடிய விரைவில் நல்ல செய்தியுடன் வருவதாகச் சொல்லிச் சென்றவன் அடுத்து வந்த வாரங்களில் பவித்ராவுக்காக மணமகன் வேட்டையில் தீவிரமாக இறங்கினான்.

சில வாரங்கள் கழித்து வீட்டில் அனைவரும் ஒன்று கூடியிருந்த சமயத்தில் திடீரென்று பவித்ராவுக்குத் திருமணம் செய்து வைப்பதற்கு மணமகன் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தான்.

“என்னப்பா திடீர்னு... சொல்லவேயில்லை” எனக் கௌரி திகைக்க, “நீங்க பார்க்கப் போறதாச் சொன்னீங்களே அம்மா. ஓர் அண்ணனா என் கடமையைச் செய்யறேன்” என்றான்.

உண்மையே. அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர் என்றாலும் அவள் இன்னும் படித்து முடிக்கச் சில மாதங்கள் இருக்கிறதே. அதன்பிறகு தீவிரமாக ஆரம்பிக்கலாம் என நினைத்திருந்தனர். ஆனால் இவன் மாப்பிள்ளை வேட்டையில் பெற்றோரான தங்களிடம் கூடக் கலந்தாலோசிக்காமல். இறங்கிவிட்டானே.

மகளின் முகத்தைப் பார்க்க, பவித்ராவின் முகத்தில் அதிர்ச்சி கலந்த கோபம் கொப்பளித்தது. இது செய், அது செய் என்று பெற்றவர்கள் இதுவரையில் அவளைக் கட்டாயப்படுத்தியதில்லை. தன் வாழ்க்கைப் பற்றிய மிக முக்கிய முடிவை எடுக்கும் விஷயத்தில் அவள் அண்ணன் திடீரென்று இப்படிச் செய்கிறானே. அவன் கொடுங்கோலானாய் காட்சியாளித்தான்.

“உங்களுக்குக் கல்யாணம் பண்ணனும்னா பண்ணிக்கோங்க. அதுக்கு ஏன் என்னையும் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி டார்ச்சர் பண்ணறீங்க” எனக் கோபத்தை வார்த்தைகளில் கொட்டினாள் பவித்ரா.

“நான் ஒன்னும் சுயநலவாதி இல்லை பவி. உனக்கும் வயசாயிட்டு போகுதே. இன்னும் கொஞ்ச நாள்ல படிப்பையும் முடிச்சிடுவ. அப்புறம் என்ன பிரச்சனை உனக்கு?” என வாதாடினான் நிரஞ்சன்.

“எனக்கு வேலைக்குப் போகணும்... அத்தோட...” என அவள் ஆரம்பிக்க, “நான் ஏற்கனவே சொல்லிட்டேனே. வெளில எங்கேயும் வேலைக்குப் போக வேண்டாம். என்னோட கம்பெனிக்கே வா” என இடையிட்டான் நிரஞ்சன்.

“நான் வேலைக்கே போகலைன்னாலும் பரவாயில்லை. உங்க கம்பெனிக்கு மட்டும் கண்டிப்பா வரவே மாட்டேன். ஏன்னா அது உங்க கம்பெனி” என அவளும் எதிர்த்துப் போராடினாள்.

பின்னே வீட்டில் தான் ஹிட்லர் ஆட்சி என்றால் வேலைக்குச் சென்று அங்கேயும் அதே ஹிட்லரைப் பார்த்துக் கொண்டிருக்க அவள் என்ன பைத்தியக்காரியா? அதுவும் அந்த அஞ்சனா வேறு, ‘ரஞ்சு, மஞ்சு, , பிஞ்சு போன பஞ்சு’ எனக் கொஞ்சிக் கொண்டு அடிக்கடி அலுவலகத்துக்கு வந்து விடுவாள்.

அவளைக் கண்டாலே சகிக்கவில்லை. இதில் இவள் அண்ணன் வேறு அவளை ‘அஞ்சு.. ஆரஞ்சு’ என்று கொஞ்சுவான். அவள் தான் அந்தப் பிஞ்சு போன பஞ்சை வைத்துக் காதை அடைத்துக் கொள்ள வேண்டும். இந்த ரஞ்சுவுக்கு ஏற்ற ஜோடி அந்த அஞ்சு!

“என்னை விட்டுத் தூரமா போகணும்னு அடிக்கடி சொல்லுவியே. அதற்கு உனக்கு ஒரு சான்ஸ் தர்றேன்” என நிரஞ்சன் நக்கலாகச் சொல்ல, “அதை என் சொந்த முயற்சியிலே பார்த்துக்கிறேன். தாங்க்ஸ்...” என நொடித்துக் கொண்டாள் பவித்ரா.

அதற்குமேல் அவளிடம் அவன் தர்க்கம் செய்யவில்லை. முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அவள் கோபமாகப் பேசியதில் அந்தப் பேச்சை விட்டுவிட்டான் என மனதுக்குள் தனக்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டாள் பவித்ரா. நல்லவேளை அதன்பின்னர் அவன் தன் திருமணம் பற்றிப் பேசவில்லை என நிம்மதியாகவும் உணர்ந்தாள்.

அவளின் நிம்மதியெல்லாம் தற்காலிகமானது என்று அவள் அறியவில்லை. அவளின் எதிர்ப்பார்ப்பைக் கூடிய விரைவிலேயே தவிடுபொடியாக்கினான் அண்ணன்காரன். எதிர்ப்புகள் அனைத்தையும் தகர்த்தெறிந்தான்.

கல்லூரியில் பரீட்சை, பிராஜக்ட் என அனைத்தையும் முடித்துவிட்டு வேலைக்கான உத்திரவாதக் கடிதத்துக்குக் காத்திருந்தாள் பவித்ரா. அவள் மனதில் உள்ள ஆசைகளைப் பற்றிச் சொன்னால் தன் அண்ணன் சிறிதாவது புரிந்து கொள்வானா? சொல்லிப் பார்க்கலாமா என்ற குழப்பத்தில் இருந்தாள் பவித்ரா.

அவசர வேலையாகப் பெங்களூருக்குச் சென்றிருந்த நிரஞ்சன் அன்று மாலையில் வீடு திரும்பினான். வந்தவன், “பவி, உனக்கு ஒரு ஃபோட்டோ அனுப்பி வைக்கிறேன். பாரு” எனக் கைபேசியில் ஒரு புகைப்படத்தை அனுப்பினான்.

அது அவளுக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளையின் புகைப்படம் என்றதும் பவித்ராவுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

இவன் மட்டும் தனக்குப் பிடித்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்வானாம். ஆனால் அவள் மட்டும் இவன் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட வேண்டுமாம். எந்த ஊர் நியாயம் இதுவென்று வெகுண்டாள்.

பவித்ராவுக்கு உடலெல்லாம் தீயாய்த் தகிக்க ஆரம்பித்தது. அவளுக்கு என்று விருப்பம், பிடித்தம் என எதுவும் இருக்காதா என்ன என்ற எரிச்சல் சுரந்தது.

“இங்க பாரு, நமக்காக அஞ்சுவோட அப்பா அலைஞ்சு திரிஞ்சு இந்த மாப்பிள்ளையைப் பத்தி விசாரிச்சுப் பேசியிருக்கிறார். அவர் இருக்கும் பிஸில நமக்காகப் பார்த்துச் செய்யறார். அவருக்கு நாம் மரியாதை கொடுக்கணும்.

இதைப் பத்திப் பேசறதுக்கு நான் அவசரமா பெங்களூருக்குப் போனேன். நானும் பார்த்துப் பேசினேன். எனக்கும் இந்த மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கு. நீ சும்மா முரண்டு பண்ணிட்டு இருக்காத பவி” என நிரஞ்சன் தொடர்ந்து பேச, அதுவரையில் கட்டி வைத்திருந்த பொறுமை அனைத்தும் கட்டுப்பாடற்றுப் போனது.

“அவ்வளவு நல்ல மாப்பிள்ளையா இருந்தா அவர் பொண்ணையே கட்டி வைக்கலாமே. எனக்கு ஏன் பார்க்கணும்?” எனச் சினம் தலைக்கேற நாகப்பாம்பாய் சீறினாள் பவித்ரா.

தங்கையைப் பார்த்து முறைத்த நிரஞ்சன், “அஞ்சுவுக்கு நான் இருக்கேனே” என அசராமல் பதில் தந்தான்.

வீணாகப் பிடிவாதம் பிடிப்பதாக அவன் எண்ணிக் கொண்டிருக்கிறான் என எண்ணிய பவித்ரா “எனக்கு இதுல விருப்பமில்லை” என்று சொன்னவள், சற்றுத் தயங்கி தான் ஒருவரை விரும்புவதாகச் சொன்னாள். அப்படியாவது மனம் மாறுவானா என எண்ணியே பகிர்ந்து கொண்டாள்.

ஆனால் விளைவுகள் விபரீதமாக முடியும் என்று தெரிந்திருந்தால் வாயைத் திறந்திருக்க மாட்டாள். எங்கேயாவது அவள் அண்ணனின் கண்ணில் படாத தூரத்துக்குச் சென்றிருப்பாள்.

இந்தப் பதிலை நிரஞ்சன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒரு கணம் திகைத்து நின்றவன், “சரி யார்ன்னு சொல்லு. நம்ம அந்தஸ்துக்கும் தகுதிக்கும் ஒத்து வந்தா நானே பேசிக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என நிரஞ்சன் பெரிய மனது பண்ணி இறங்கி வந்தான்.

அதைக் கேட்ட பவித்ராவிற்குச் சற்றுத் தைரியம் கூடினாலும், பயத்துடன் நின்று கொண்டிருந்தாள். தேவையில்லாமல் அவனையும் பிரச்சனையில் இழுத்து விடுகிறோமோ என அஞ்சினாள். ஆனால் அதற்காக நிரஞ்சன் சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டிக் கொண்டிருந்தால் பாதிக்கப்படுவது அவளது வாழ்க்கை அல்லவா?

சரியாக அந்தச் சமயத்தில் பள்ளியில் இருந்து கௌரியும் வீட்டுக்கு வந்து சேர, அவளுக்கு அசுர பலம் கிடைத்ததைப் போலுணர்ந்தாள். பெற்றோரும் என்ன சொல்வார்கள் என்று தெரியாது. ஆனால் இதற்கு மேல் தயங்கி, வாயை மூடிக் கொண்டிருந்தால் அவளுக்கே தீங்காய் முடியலாம்.

“எனக்கு உங்க ஃப்ரெண்ட் நந்தகுமாரை ரொம்பப் புடிச்சிருக்கு” எனப் பட்டென்று வெளியில் போட்டு உடைத்தாள்.

அதைக் கேட்டதும் அமர்ந்திருந்த இருக்கை ‘கிரீச்’ என்ற பயங்கரச் சத்தமிட படாரென்று எழுந்தான் நிரஞ்சன். “என்ன சொன்ன, நந்தாவா?” என அவன் முகம் அஷ்டகோணலாக மாறியது.

“உனக்கு வேற ஆளே கிடைக்கலையா? நம்ம அந்தஸ்து என்ன, அவன் அந்தஸ்து என்ன? கொஞ்சமாவது யோசிச்சுப் பேசறியா?” என நிரஞ்சன் கோபத்தில் தைய தக்கவென்று குதிக்க ஆரம்பித்தான்.

மகள் சொன்னதைக் கேட்டதும் கையைப் பிசைய ஆரம்பித்தார் கௌரி. நந்தகுமார் மிகவும் பொறுப்பானவன், அன்பானவன், தன் மகளை நன்றாகவே பார்த்துக் கொள்வான் என்றாலும் உறவினர்கள் என்ன சொல்வார்களோ என அஞ்சினார்.

மகன் அஞ்சனாவைத் திருமணம் செய்யப் போவதாக அரசல்புரசலாக வெளியில் தெரிய வரவுமே உறவுகளில் பலர், ‘பணக்காரங்க ஆனதும் உறவையும், சொந்தத்தையும் மறந்துட்டீங்களா?’ எனக் குதர்க்கமாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இப்போது மகளும் இப்படிச் சொல்கிறாளே என என்ன சொல்வது என்று தெரியாமல் செயலற்று நின்றிருந்தார். அதுமட்டுமல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுக்கக் கூடிய விஷயமும் அல்ல இது.

கௌரி எப்பொழுதுமே நிதானமாகவே செயல்படுவார். தன் கணவர் வந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினார்.

“நல்லவன்னு தானே ஃப்ரெண்ட்டா இருக்கீங்க...” எனப் பவித்ராவும் எரிச்சலுடன் சொன்னாள்.

“அதுக்காக நல்லவனா இருக்கிறவனை எல்லாம் உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்க முடியாது. வல்லவனாகவும் இருக்கணும். முக்கியமா பணம் இருக்கணும். அந்தஸ்து இருக்கணும்” என நிரஞ்சன் அடுக்கிக் கொண்டே போனான்.

கௌரி இதை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. அந்தஸ்தை மட்டுமே பெரிதாகக் காட்டி நந்தகுமாரை நிராகரித்துக் கொண்டிருக்கிறானே. அப்படியென்றால் காதலித்துத் திருமணம் செய்யலாம். ஆனால் வசதியுடையவனாகப் பார்த்துக் காதலி என்று சொல்வதைப் போலிருந்தது அவன் பேசுவது.

அது மிகவும் தவறு. இவனை அந்தஸ்து மோகம் இப்படிப் பிடித்து ஆட்டுகிறதே. தன் மகனா இவன் என அவருக்கே சந்தேகம் தோன்ற, மகனை வேற்று கிரக வாசியைப் பார்ப்பது போல் பார்த்தார் கௌரி.

“நிரஞ்சன், அந்தஸ்து மட்டும் முக்கியமா என்ன? நம்ம பவியோட மனசும் முக்கியமில்லையா?” எனக் கௌரி நிதர்சனத்தை எடுத்துச் சொல்ல, நிரஞ்சனுக்கு ஆத்திரம் மூண்டது.

“என்னம்மா சொல்லறீங்க? நீங்களும் இதுக்கு உடந்தையா?” என அவரிடமே பாய்ந்தான்.

“அதில்லைப்பா... பவி ஒன்னும் யாரையோ கை காட்டலையே. நந்தகுமார் நமக்குப் பல வருஷமாப் பழக்கமான பையன். அப்பா வரட்டும். பேசி முடிவெடுக்கலாம்” எனக் கௌரி சொல்லவும்,

“நான் இவளுக்காகப் பெரிய பணக்காரன் ஒருத்தனைக் கண்டுபிடிச்சு மாப்பிள்ளையாக்க நினைச்சா, ஒண்ணுமே இல்லாத நந்தகுமாரைப் போய் மாப்பிள்ளையாக்க நினைக்கிறீங்களே. அதுவுமில்லாம தகுதியற்ற நந்தகுமாரை நம்ம ஏத்துக்கிட்டா எனக்கு அஞ்சனா வீட்ல என்ன மரியாதை இருக்கும்?” என ஆத்திரமாகக் கத்தினான் நிரஞ்சன்.

“உங்களுக்கு வேணும்னா நீங்களே கல்யாணம் பண்ணிக்கோங்க. இல்லை, உங்க அஞ்சுவுக்குக் கட்டி வைங்க. எனக்கு வேண்டவே வேண்டாம்” எனப் பவித்ராவும் தீர்மானமாகச் சொன்னாள்.

தங்கை இவ்வளவு அடம்பிடிப்பாள் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எத்தனையோ தொழில்முறை பிரச்னையைக் கையாண்டிருக்கிறான். இதெல்லாம் அவனுக்கு ஒரு விஷயமே அல்ல.

எங்கே இருவருக்கும் சண்டை மூண்டுவிடுமோ எனப் பயந்த கௌரி பக்கத்து அறைக்குள் சென்று கணவருக்கு அழைத்தார். இங்கே முன்னறையில் இன்னுமே வாக்குவாதம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

“எனக்குப் பணத்தை விட மனசுக்கு இதம் தரும் ஆள் வாழ்க்கைத் துணையா வந்தா போதும். உங்க பணத்தாசையால் என்னால ஒரு சின்ன சின்னச் சந்தோஷத்தைக் கூட அனுபவிக்க முடியறதில்லை. என் மனசு சஞ்சலமடையும் போதெல்லாம் நந்தகுமார் அவரை அறியாமலேயே என் மனசுக்கு இதமளிப்பார். அவரோட இருந்தா எனக்குச் சந்தோஷமா இருக்கும்” எனப் பவித்ரா சொல்லிக் கொண்டிருக்க, அஞ்சனா சரியாக அங்கே வந்து சேர்ந்தாள்.

“என்ன பவி இது? வேற ஆளே கிடைக்கலையா? அப்பா சொல்லறவர் பெங்களூர்ல பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வச்சிருக்கார். உன் லைஃப் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஜாலியா இருக்கும்?” என அறிவுரை வழங்கினாள்.

அஞ்சனாவுக்கு என்னவென்றால் பவித்ரா அவள் கண்களில் படாமல் எங்காவது தொலைதூரம் தொலைந்து போனால் போதும். அதன்பிறகு அவள் ராஜ்ஜியமே. அவள் மட்டுமே எங்கிருந்தாலும் தனித்துத் தெரிய வேண்டும் என்ற சிந்தனை அஞ்சனாவுக்கு எப்போதுமே உண்டு.

ஏனெனில் நிரஞ்சனிடமிருந்து வெளிவரும் வார்த்தைகள் கடினமானதாக இருந்தாலும் அவனுக்குத் தன் தங்கையின் மேல் அதீத பாசமிருக்கிறது என்பதை அவள் அறிவாள். எதைச் செய்தாலும் பேசினாலும், தங்கைக்குப் பிடிக்கும், பிடிக்காது என அவன் தங்கையைப் பற்றி நடுவில் இழுக்காமல் இருக்கமாட்டான்.

அது அஞ்சனாவுக்கு அறவே பிடிக்கவில்லை. நிரஞ்சன் தன்னைப் பற்றி மட்டுமே பேச வேண்டும். தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். ஆகவே பவித்ரா இங்கேயே இருந்தால் அஞ்சனாவால் நிரஞ்சனை மாற்ற முடியாது.

அவள் தந்தை வேலை மெனக்கெட்டு ஒருவனைப் பெங்களூரில் இருந்து பவித்ராவுக்கு மாப்பிள்ளை எனக் கையைக் காட்ட, சற்றுப் பொறாமை தோன்றினாலும், ‘இங்கிருந்து போய்விடுவாள்’ என உவகைக் கொண்டாள் அஞ்சனா.

இப்போது அந்த ஏற்பாட்டுக்கு மறுத்துக் கொண்டிருக்கும் பவித்ராவைப் பார்க்க பார்க்க எரிச்சல் சுரந்தது.

“இப்பவும் என் லைஃப் ஜாலியாகவே இருக்கு. எங்க வீட்டு ஆளுங்க என்ன ஷாப்பிங் காம்ப்ளக்ஸா வச்சிருக்காங்க?” எனப் பவித்ரா சந்தோஷத்துக்கும் பணத்துக்கும் சம்மந்தமில்லை என்பதைப் போல் வாதாடினாள்.

தோழிகளாகட்டும், தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களாகட்டும், உறவினர்களாகட்டும் இதுவரையில் யாரும் அவளிடம் இப்படி எடுத்தெறிந்து பேசியதில்லை.

“உன் நல்லதுக்குச் சொல்லறோம் பவி” என அஞ்சனா வார்த்தைகளைத் தேனில் முக்கியெடுத்ததைப் போல் பேசி வைக்க, “என் நல்லதைப் பத்தி என் அம்மா-அப்பா பார்த்துக்குவாங்க” என விடாமல் வாதிட்டாள் பவித்ரா.

“பவி, அவளும் நம்ம குடும்பத்து ஆளு. என்ன பேசற?” என நிரஞ்சன் அவளருகில் சென்று அதட்டல் போட,

“விடுங்க ரஞ்சு, சின்னப் பொண்ணு அவ. நம்ம வீட்டுப் பொண்ணச் சொல்லி எந்தத் தப்புமில்லை. ஃப்ரண்டுங்கிற பேர்ல அந்த நந்தகுமார் உங்க தங்கச்சியோட மனசை எப்படியெல்லாம் கலைச்சு வச்சிருக்கிறான் பாருங்க? பொண்ணு வசதியான வீட்டுப் பொண்ணு. மடக்கிடலாம்னு நினைச்சு மடக்கியிருப்பான்” என எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றினாள் அஞ்சனா.

பின்னே, தன் தந்தை இருக்கும் வேலையையெல்லாம் விட்டுவிட்டு இவளுக்காக மெனக்கெட்டு ஒருவனைப் பார்த்தால் அதற்குக் கூழைக் கும்பிடு போட்டு நன்றி சொல்லாமல் யாரோ ஒரு சராசரி மனிதனைக் கை காட்டுகிறாளே.

அப்புறம் தன் தந்தைக்கு என்ன மரியாதையிருக்கிறது? எதிர்காலத்தில் இவளை எப்படித் தன் உறவினர்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பது?

அஞ்சனா சொன்னதைக் கேட்டதும் வெகுண்ட பவித்ரா, “எல்லோரையும் உங்களை மாதிரி பேசியே மனசைக் கலைக்கறவங்கன்னு நினைச்சுட்டீங்களா? இதுக்கும் அவருக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை” எனக் கத்தினாள்.

“பவி, யார்கிட்டே என்ன பேசற? அஞ்சுகிட்டே கொஞ்சம் மரியாதையாப் பேசு. அவ உனக்கு அண்ணியாகப் போறவ” என அப்பொழுதும் தங்கையைக் கடிந்து கொண்டான் நிரஞ்சன்.

“அண்ணி ஆகறப்போ பார்க்கலாம்” என அதிருப்தியைத் தெரிவித்துவிட்டு,

“நந்தகுமாரை இவங்க மரியாதையில்லாம ஏன் பேசணும்? பார்க்கப் போனா எனக்குக் கூட இவங்க அண்ணியாகறது பிடிக்கலை. அதுக்காக நீங்க என்ன இவங்களை வேண்டாம்னு சொல்லிடப் போறீங்களா?” என அண்ணனை கோபத்துடன் பார்த்தாள்.

அவன் திகைத்துப் போய் என்ன பேசுவது என்று தெரியாமல் தங்கையைப் பார்க்க, “முடியாதில்லை... அப்போ உங்களுக்குப் பிடிக்கலைன்னு சொன்னதும் நான் மட்டும் ஏன் மண்டையை ஆட்டிக் கேட்டுக்கணும்? நான் ஏன் அப்படிச் செய்யணும். உங்களுக்கு ஒரு நியாயம். எனக்கு ஒரு நியாயமா?” எனப் பவித்ரா சிடுசிடுக்க, அஞ்சனா சொல்வதைப் போல் தங்கையிடம் பேசி எந்தப் பிரயோஜனமும் இல்லை என்ற முடிவுக்கு வந்தான் நிரஞ்சன்.

ஆனால் அஞ்சனாவுக்குப் பவித்ராவின் பேச்சு சற்றும் ரசிக்கவில்லை. அவளை விட எந்த விதத்தில் தான் குறைந்து போய்விட்டாளாம். பார்க்கப் போனால் இப்படி நேருக்கு நேர் நின்று பேசும் தகுதியைக் கூட இந்தப் பவித்ரா பெறவில்லை. ஏதோ நிரஞ்சனுக்காகப் பார்த்தால் ரொம்பவும் துள்ளுகிறாளே.

அவளையே மட்டம் தட்டுகிறாளா? அவள் தந்தை பார்த்த மாப்பிள்ளையைப் பவித்ரா திருமணம் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் இனி இவள் நினைத்தது நடக்கவே நடக்கக் கூடாது என்ற வெறி அவளுள் கிளர்ந்தது.

‘இவளுக்குப் பிடித்த நந்தகுமாருடன் இவள் எப்படிச் சேர்கிறாள் எனப் பார்க்கிறேன்?’ என மனதுக்குள் சூளுரைத்துக் கொண்டாள் அஞ்சனா.

“உன்கிட்ட பேசி எதுவும் ஆகப் போறதில்லை. பேச வேண்டியவங்ககிட்ட பேசிக்கிறேன்” என நிரஞ்சன் கோபத்துடன் அங்கிருந்து விடுவிடுவென்று வெளியில் நடக்க ஆரம்பித்தான். அஞ்சனாவும் அவனைப் பின்பற்றிப் போய் அவனுடன் சேர்ந்து கொண்டாள்.

அவன் எங்கே செல்கிறான் எனப் பவித்ராவுக்குப் புரிந்து போனது. அவளது விருப்பத்தைத் தன் அண்ணனிடம் பகிர்ந்து கொண்டாள். அதற்காகச் சம்பந்தமே இல்லாதவனிடம் ஏன் போய்ப் பேச வேண்டும் என அவளும் வாசலுக்கு ஓடினாள்.

“இங்க பாருங்கண்ணா, நந்தகுமாருக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்கிட்ட என் விருப்பத்தைச் சொன்னேன். அவர் ஒத்துக்கவேயில்லை. அவர்கிட்ட எதுவும் பேசாதீங்க” எனப் பவித்ரா நந்தகுமாருக்காகப் பரிந்து கொண்டு பேச, நிரஞ்சனுக்கு இன்னுமே ஆத்திரம் வந்தது.

நண்பன் என்ற போர்வையில் வந்து தன் தங்கையின் மனதைக் கலைத்து விட்டான் துரோகி என அவன் மேல் கோபாவேசம் கொண்டான்.

உடனிருந்த அஞ்சனாவும், “பாருங்க ரஞ்சு, அதைக் கூட நந்தகுமார் உங்ககிட்ட சொல்லவேயில்லை. என்ன ஒரு சாமர்த்தியம்?” எனப் புகைகின்ற அவன் உள நெருப்புக்குத் தூபம் போட்டாள்.

பக்கத்து அறைக்குச் சென்று அலைபேசியில் கணவரிடம் விஷயத்தைச் சுருக்கமாகக் கௌரி சொன்னதும் அவரும் உடனே கிளம்பி வருவதாகச் சொல்லி வங்கியிலிருந்து கிளம்ப ஆயத்தமானார். மீண்டும் கௌரி முன்னறைக்கு வர, அங்கே யாரையும் காணவில்லை. சத்தம் கேட்டு வெளிவாசலுக்கு விரைய, நிரஞ்சனும் அஞ்சனாவும் காரில் ஏறிக் கொண்டிருப்பது தெரிந்தது.

“ இவ எப்போ வந்தா?” என மகளிடம் கேட்க, “அண்ணனோட கோபத்துக்குத் தூபம் போடற நேரத்துக்குக் கரெக்ட்டா வந்துட்டாங்க” எனச் சிடுசிடுத்தவள்,

“அம்மா, நந்தாகிட்ட விருப்பத்தைச் சொன்னதும், இது சரிவராதுன்னு மறுத்துட்டார். அவரைப் போய் என்ன கேட்கப் போறாங்க? எனக்குப் பயமாயிருக்கும்மா. தேவையில்லாம அவரையும் நம்ம பிரச்சனைல ஏன் இழுத்துவிடணும்?” எனக் கண்களில் நீர்த் தளும்பப் பவித்ரா கேட்டாள்.

“பேசிட்டு வரட்டும். இவன் நிதானம் தவறினாலும் நந்தகுமார் அப்படி ஒன்னும் நிதானம் தவறுகிற ஆளில்லை. அப்பா வரட்டும் நம்ம பேசிக்கலாம்” எனத் தோள் மீது தலை சாய்த்து அழுகையில் குலுங்கும் மகளின் முதுகை ஆதூரமாகத் தட்டிக் கொடுத்தார் கௌரி.

நிரஞ்சனின் கார் அவன் கைகளில் ஏவுகணையாய்ப் பறந்தது. அவனுக்கு மட்டும் சக்தி இருந்திருந்தால் பறந்து சென்றிருப்பான். கிரீச்சென்று காரை வேகமாகக் கொண்டு போய் நந்தகுமாரின் வீட்டின் முன் நிறுத்தினான்.

அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நந்தகுமாரின் இரு சக்கர வாகனத்தின் மீது உரசி நிறுத்த, அந்த அதிர்வில் அவன் வண்டி கீழே டங்கென்று விழுந்தது.

தொடரும்...
 
Last edited:

Author: Pochampalli
Article Title: ஆடியிலே முத்தெடுத்து - 11
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
222
ஆத்திரம் கண்ணை மறைத்து விட்டது போல
அஞ்சனா பேச்சில்
ஆத்திரம் கொண்டு
அதனால் உறவு முறிந்தது போல.....
 
Top Bottom