• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

அறம் பொருள் இன்பம் -3

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
300
அறம் பொருள் இன்பம்

அத்தியாயம் 3


வெளி வாயிலைக் கடந்து உள்ளே அடியெடுத்து வைத்தான் கிருபா. மனம் நிகழ்வில் இல்லை‌. சிறுவயது நினைவுகளை மீட்டத் துவங்கி இருந்தது.
நிலாவும் அவனும் ஓடிப்பிடித்து விளையாடிய வீடு அது. அவனின் கால்படாத இடமே அங்கு இல்லை எனலாம்.
பள்ளி செல்லும் நேரம் தவிர்த்து மற்ற பொழுதுகளில் பெரும்பாலும் இருவரும் ஒன்றாய் தான் இருப்பர், ஒன்று அவளின் வீட்டில், இல்லையேல் கிருபாவின் இல்லத்தில். உடன் இருக்கும் தருணங்களில் எல்லாம் அவளின் சலசல பேச்சொலி ஓயாது செவிகளில் கேட்டுக் கொண்டே இருக்கும்.
துவக்கத்தில் கிக்கி, கிறுக்கு, கிக்குப் பையா என வாய்க்கு வந்ததைச் சொல்லி அழைத்தவள், சற்றே வளர்ந்த பின்னர் தான் கிரு என்ற நிலையான பெயரிற்கு வந்தாள்.
அருகே இருக்கும் போது‍, ஒரு நிமிடத்திற்குள் நான்கு முறையேனும் அழைத்து விடுவாள். பாவையின் பேச்சில் பாதிக்கும் மேல் அவனின் பெயரே நிறைந்து இருக்கும்.
ஆனால் இன்று அவள் உடன்‌இல்லா இத்தருணத்தின் நிசப்தம், அவனுள் பேரிரைச்சலை உண்டாக்கியது. பட்டென்று காதுகளை மூடிக் கொண்டான்.
வீட்டிற்குப் பூச்சுவேலை செய்ததின் நெடி நாசிக்குள் ஏற, மெல்ல அடியெடுத்து வைத்து நிலாவின் அறைக்குள் சென்றான்.
தூசியும் அழுக்குமே அவனை வரவேற்றது.‌ இரண்டு மாதங்களிற்கு முன்பே அவளின் குடும்பத்தார் வீடுமாறி சென்றிருக்க, இல்லத்தின் உரிமையாளர் வாடகைக்கு விடுவதற்காக பணிசெய்து வைத்திருந்தார்.
இன்னும் எவரும் குடி வராததால், மூடி இருந்த வீடு ரகசியங்களைப் பதுக்கி வைத்திருப்பது போல் மர்மமாய் காட்சி அளித்தது. நிலா இருந்தால், அவ்விடமே எப்பொழுதும் பார்வைக்குப் பளிச்சென்று பாந்தமாய் மிளிரும். மெலிதான சிரிப்பொலி இசை மீட்டியபடி இருக்கும்.
வலியுடன் கூடிய ஒரு பெருமூச்சு வெளிவர, ஜன்னல் கதவுகளைத் திறந்துவிட்டு நண்பகல் கதிரவனின் கதிர்களை உள்பக்கம் படரவிட்டான்.
ஜன்னல் பகுதியை இரண்டாய் பிரித்து, ஒரு பக்க கம்பிகளின் இடைவெளியில் கிருபாவிற்குப் பிடித்த சிறிய அளவிலான விளையாட்டு கார்களை அடுக்கியும், மற்றொரு பக்கத்தில் நிலாவின் விளையாட்டுப் பொருள்களை வைத்தும் விளையாடியது நினைவிற்கு வந்தது. அவனின் பன்னிரண்டு வயது வரையிலுமே இது தொடர்ந்தது.
எட்டு வயதில், "அம்மா, நான் வளர்ந்துட்டேன். இன்னும்‌ என்னை இந்தக் குட்டிக்கூட விளையாட சொல்லுறீங்க? என்னால எல்லாம் முடியாது.‌ பாலும் பேட்டும் வாங்கிக் கொடுங்க‌. நான், பசங்களோட கிரிக்கெட் விளையாடப் போறேன்!" எனக் கேட்ட போது, "நானு, பால் விளையாட!" என்று அடம்பிடித்து நின்றாள் அவளும்.
"நாலு வயசுதான் ஆகுது‌‌. பிளாஸ்டிக் பேட் சைஸ் கூட இல்ல. அதுக்குள்ள அவன்கூட விளையாடணும்கிற? இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். கிருபா அளவுக்கு வளர்ந்ததும், விளையாடு!" என நிலாவின் தாய் சமாதானம் உரைத்து அமைதியாக்க முயல,
அதைப் பார்த்திருந்த சித்ரா, "குட்டிக்கூட விளையாட வேற யாருடா இருக்கா.? மத்த பசங்கக்கூட சேர வேணாம்னு சொல்லல. அதேநேரம் குழந்தை கூடவும் ‌அப்பப்ப விளையாடணும். அவளை அழ விடாம நீதான் பார்த்துக்கணும்!" என்ற நிபந்தனையோடு மகன் கேட்டதை வாங்கிக் கொடுத்தார்‌‌.
நிலாவின் ஏழு வயது எட்டும் வரையிலும் இது தொடர்ந்தது‌. பின்னர், "நானும் உன்கூட கிரிக்கெட் விளையாட வர்றேனே.?" என அவளும் கிருபாவுடன் இணைந்து கொண்டாள்.
"எப்பப் பாரு, உன்னாலதான் லேட் ஆகுது‌! ஒரு நாளாவது சீக்கிரம் எழுந்திரிச்சு ரெடியாகுறியா.?" என்று விடுமுறை தினங்களில் விளையாடுவதற்காக வெளியே செல்லும் பொழுதெல்லாம் சிறுமியின் கால தாமதத்தை அவன் குறையாய்ச் சொல்ல,
"என்னடா செய்யட்டும் கிக்கி? நீ எழுந்திரிக்கிற அதே நேரத்துக்குத்தான் நானும் எழுந்திரிக்கிறேன். ஆனா எனக்கு மட்டும் ரெடியாக லேட் ஆகிடுது!" என இதழ் பிதுக்கி நின்றாள் ஒன்பது வயது நிலா‌.
"அம்மா, இப்ப தலை சீவி விடுறீங்களா இல்லையா.? இந்த கிறுக்குப் பையன் லேட்டாச்சுனு கத்துறான்!" என்று அன்னையுடன் வாதாடச் சென்றவள், தனது நீளமான குழலால் தான் இதெல்லாம் என மறுநாளே ஆண் பிள்ளையைப் போல் தலைமுடியைக் கத்தரித்துக் கொண்டாள்.
"அட லூசு! இப்படியா பாய் மாதிரி கட் பண்ணுவ.?" என்று சிரிக்க,
"இது எவ்வளவு ஈஸியா இருக்குத் தெரியுமா.? கொஞ்சமா எண்ணெய் தேய்ச்சு, சீப்பு எடுத்து சொய்யிங்னு ஒரு பக்கமா சீவினா போதும். ரெடி ஆகிடலாம். இல்லனா சீவவே தேவை இல்ல. போற போக்குல கையால தலையை சரி பண்ணிக்கலாம்.
முதல்ல இருந்த முடிக்கு, எனக்கு மட்டுமே ஒரு நாளைக்கு கால் லிட்டர் எண்ணெய் தேவைப்படும். அதை சிக்கு எடுக்குறதுக்கு ஒரு மணிநேரம். பின்னிப் போட அரை மணிநேரம். இதுல வாரத்துக்கு ஒருதடவை எண்ணெய் வச்சு தலைக்கு ஊத்துறேன்னு எங்கம்மா பாடா படுத்துவாங்க. பேன் தொல்லை வேற!
இப்ப பார்த்தியா? ஐம் எ ஃப்ரீ பேர்ட். உன்னை விட நான் சீக்கிரமா ரெடி ஆகிடுறேன். நீதான்டா லேட் பண்ணுற கிக்குப் பையா!" எனப் பதில் தந்தாள்.
அதில் இருந்தே, கிருபாவின் சிகை அலங்காரம் தான் அவளிற்கும். இருவரும் முடி திருத்துவதற்கு ஒன்றாய் கடைக்குச் சென்று வருவதை பழக்கமாய் மாற்றிக் கொண்டனர்.
கிருபாவுடன் விளையாட அவனிற்கு இணையாய் இருக்க வேண்டும் என தன்னை ஒவ்வொரு தருணத்திலும் மெருகேற்றிக் கொண்டே வந்தாள்.‌ படிப்பிலும், உயரத்திலும் தான் அவனை விட சற்று பின்தங்கிப் போனாள்.
என்ன முயன்றும் கல்வியில் முதல்வனாய் இருக்கும் ஆடவனின் மதிப்பெண்களை நெருங்க முடியவில்லை. ஆனால் பாவையின் முயற்சிக்கான பலன், கிடைத்துக் கொண்டே தான் வந்தது.
இவர்களிற்கு இடையேயான உறவு, நிலா பூப்பெய்திய தருணத்தில் வேறு ஒரு பரிமாணம் அடைந்தது.
அதுவரை கிருபா முன்னே செல்ல, நிலா அவனைத் துரத்திச் சென்றாள். அதன்பிறகு, தனது தோழிக்காக சற்றே நிதானிக்கத் தொடங்கினான் ஆடவன்.
பதினேழு வயது அவனிற்கு. உடல் மாற்றம், உள்ளத்தின் உணர்வுகள், உலகத்தின் நியதிகள் என அகமும் புறமும் புரிபடத் தொடங்கிய பருவம்.
பதின்மூன்று வயதிலேயே உடலும் மனமும் சிறுவனில் இருந்து அடுத்தக் கட்டத்திற்கு முன்னேற ஆரம்பித்து விடும்தான். பதினைந்து வயதில் குழப்பங்களையும் வினாக்களையும் அதிகப்படியாய் பரிசளித்து, அடுத்தடுத்து மெல்ல அதற்கான தெளிவையும் விடைகளையும் தேடி அறியும் ஆர்வத்தைத் தூண்டும்.
அந்தத் தூண்டலில்.. சக மாணவ மாணவிகளுடனான நட்பும், ஏட்டுக் கல்வியும்‌, அத்தோடு பெற்றோரின் வளர்ப்பும் வழிகாட்டுதலும் அவனை சிறிது சிறிதாய் 'கிருபாகரன் இப்படியானவன்' என வார்க்கத் துவங்கியது.
தன்னைத் தானே வரையறுத்துக் கொண்டான். வேகத்தையும் விவேகத்தையும் சரியான முறையில், தேவையான தருணங்களில் மாற்றிப் பயன்படுத்தினான்.
முன்பு நிலாவை விட்டு முன்னே ஓடியவன், தற்போது அவளோடு இணைந்து தன்னை நிதானப்படுத்தினான்.
"ஏன்மா இப்படிப் பண்ணுறீங்க.? நாள் முழுசும் ஒரே இடத்துல உட்கார சொன்னா எப்படி.? என்னால எல்லாம் முடியாது. லேஸியா ஃபீல் ஆகுது. நான் விளையாடப் போகணும்!" என அவள் அடம்பிடிக்க, "சொன்னா கேளு நிலா. இந்த நேரத்துல நல்லா ரெஸ்ட் எடுக்கணும். அப்பதான் என் வயசுல ஓட முடியும் உன்னால!" என்று மகளின் விருப்பத்திற்குச் செவி சாய்க்க மறுத்தார் அன்னை‌.
"போங்க!" எனச் சினந்து கொண்டு வேறு வழி இல்லாது பெற்றோர்கள் இடும் கட்டுப்பாடுகளிற்குள் வலுக்கட்டாயமாய் நிற்க, அச்சிறுமிக்குத் துணையாய் வந்தான் கிருபா.
"அம்மா, குட்டிக்காக ஸுவீட் செஞ்சு கொடுத்தாங்க அத்தை. "
"அவளுக்கு இடியாப்பம் பிடிக்கும்ல.?"
"புட்டு, கொலுக்கட்டை, களி, முட்டைக் குழம்பு இந்தாங்க!" எனச் சித்ராவின் கைப்பக்குவத்தில் தயாரானதைக் கொண்டு வந்து தருபவன், "உனக்குப் போர் அடிக்கும்ல.? செஸ் விளையாடலாமா?"
"இன்னைக்குக் கேரம்!"
"கார்ட்ஸ். பரமபதம்!" என்று அவளின் நேரக் கடத்தலுக்கு இணை சேர்ந்தான்.
இடையிடையே படிக்கவும் செய்தனர். பள்ளிக்குச் செல்ல இயலாததால், அவளின் வகுப்புத் தோழிகளிடம் வீட்டுப் பாடங்களைக் கேட்டு வந்து நாள் தவறாது செய்ய வைத்தான். மறுநாள் அதை கொண்டுச் சென்று ஆசிரியரிடம் திருத்தியும் வாங்கி வந்தான்.
இத்தருணங்களில் எல்லாம் கிருபா நற்குணத்தையும் பண்பையும் வளர்த்து எதிர்கால வாழ்விற்கு அடித்தளம் இட, நிலாவோ அவனை மனதில் பதிய வைக்கத் துவங்கி இருந்தாள்.
"பெரிய பொண்ணாகிட்ட. இனிமேலும் பையனை மாதிரி முடி வெட்டாத!" என்று முதல் கட்டுப்பாடு வந்தது அன்னையிடம் இருந்து.‌
"சரி! ஆனா, உங்களை மாதிரி நீளமா எல்லாம் வளர்க்க மாட்டேன். ஷோல்டர் வரைக்கும் தான்!" என நிபந்தனையுடன் அதை ஏற்றாள்.
"எப்பப் பாரு வெளியவே சுத்தாத! கொஞ்சம் ஆட்டத்தைக் குறைச்சிட்டு வீட்டுல இருக்கப் பாரு!" என்று அடுத்த கட்டளை.
"சரி! அதுக்குனு இங்க போகாத அங்க போகாதனு ஓவரா கண்ட்ரோல் பண்ணக் கூடாது! எனக்கு இஷ்டப்படும் போதெல்லாம், நான் கிரு வீட்டுக்குப் போவேன். வெளிய விளையாடுற நேரத்தை வேணும்னா குறைச்சுக்கிறேன்!" என நிபந்தனை விதித்தாள்.
"பதிலுக்குப் பதில் பேசலேனா, தூக்கம் வராதா உனக்கு? ஒரு தடவையாவது நான் சொல்லுறதை சரினு கேட்டிருக்கியா? ஏண்டா கிருபா, நீயாவது அவளுக்குச் சொல்லக் கூடாது.?" என்று நிலாவின் அன்னை அவனைத் துணைக்கு அழைக்க,
"அத்தைச் சொல்லுறதைத் தான் கேளேன் குட்டி!" என ஒரே வாக்கியத்தில் முடித்து விடுவான்‌.
"அதுக்கு உன்கிட்ட நான் சொல்லாமலேயே இருந்திருக்கலாம்டா." என்று அவர் சலித்துக் கொள்ள," என்கூட தான இருக்கா? நான் பார்த்துக்கிறேன்‌ அத்தை!" எனச் சமாதானம் வரும்.
நிலா இருவரையுமே அறிவாள் என்பதால், "ஆமா! இவன் பெரிய இவன். இந்த கிறுக்குச் சொன்னா, நான் கேட்பேனா.? நீ சொல்லுறதையும் கேட்க மாட்டேன். உன்னோட அத்தைச் சொல்லுறதையும் கேட்க மாட்டேன். போடா!" என்பது தான் அவளின் பதிலாக இருக்கும்.
அச்சமயங்களில் எல்லாம் கிருபாவின் எதிர்வினை பெரும்பாலும் சிறு புன்னகை மட்டுமே!
அந்நினைவுகளில் இன்றும் இதழ்கள் புன்னகைக்கத் தவறவில்லை.‌ ஆனால் கண்களில் கண்ணீர் நிறைந்து நின்றது.
போலிப் புன்னகை, அழுகைக்கு மாற்றமடைய தன்னைக் கட்டுப்படுத்திக் கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டான் கிருபாகரன்.
ஒலித்த கைப்பேசி, நிலாவின் நினைவுகளில் இருந்து தற்காலிகமாய் அவனை வெளியே அழைத்து வந்தது.
அதனை செவியோடு இணைத்தவன், "ஹலோ."
"சார், ஸ்பெக்ஸ் ரெடி ஆகிடுச்சு. வந்து வாங்கிக்கிறீங்களா? இல்லேனா, நான் வீட்டுல டெலிவரி பண்ணிடவா?" என்றான் மறுபுறம் இருந்தவன்.
"இல்ல, நானே வர்றேன்!" என்று பேச்சை முடித்தவன் அடுத்த அரைமணி நேரத்தில் அவ்விடத்தை அடைந்தான்.
பெட்டியில் அடைக்கப்பட்ட கண் கண்ணாடியைக் கொடுத்த கடையின் உரிமையாளர், "என்ன சார்? நிலா மேடமைக் காணோம். நீங்க மட்டும் வந்திருக்கீங்க? எப்பவும் ரெண்டு பேரும் சேர்ந்து தான வருவீங்க.?" என வினவிட, "ஸீ இஸ் நோ மோர்!" என்று பதில் தந்தான்.
அவன் அதிர்ந்து, "இந்தக் கண்ணாடி.?"
"அவளோடது தான்‌. ஆக்ஸிடெண்ட் டைம்ல பிரேக் ஆகிடுச்சு. அதான், மாத்தக் கொடுத்தேன்!" என வாங்கிக் கொண்டவனின் கரம் அதனை சட்டைப் பையில் வைத்தது.
சரி செய்து விட்டபோதும், உடைத்த அதன் துண்டுகளின் பிம்பம் மனதைக் கீறிட, வெளி வராத குருதியின் வலியுடன் அங்கிருந்து கிளம்பினான்‌.
 

Author: SudhaSri
Article Title: அறம் பொருள் இன்பம் -3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
222
நினைவுகளில்
நம் மனதும் கண்ணீரில்
நனைகிறது... 😭
 
Top Bottom