• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

அறம் பொருள் இன்பம் -1

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
300
அறம் பொருள் இன்பம்

அத்தியாயம் 1

கிளம்புவதற்கு முன்னர் நிலைக் கண்ணாடியில் நான்காம் முறையாக தன்னைப் பார்த்தாள் நிலா. தனது மூக்குக் கண்ணாடியை இறுதியாய் ஒருதடவை சரி செய்தாள். நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டது. அவளின் வாழ்நாளில் இதுவரை இப்படியான உணர்வை, மனம் அனுபவித்தது இல்லை.
ஒரு வாரத்திற்கு முன்னரும் இதே நிலையில் தான் இருந்தாள். ஆனால் அன்று இதயம் மட்டுமே அதிவேகத்தில் துடித்தது. இன்றோ அது மேல்பக்கமாய் நகர்ந்து வந்து தொண்டைக்குள்ளேயே சுருங்கி விரிவது போலொரு பிரம்மை. அதனால் உடல் முழுவதுமே ஒருவித நடுக்கத்துடன், இயங்கிக் கொண்டிருந்தது.
ஒருபுறம் மனம் இன்னதென்று பிரித்தரிய இயலா ஒருவித இன்பத்தில் கூத்தாடினாலும் மறுபுறம் அச்சத்திலும் கவலையிலும் மருண்டபடியே இருந்தது.
இதற்குமேல் இந்நிலையைத் தொடர விரும்பவில்லை‌ நிலா.
எத்தனை காலம்தான் காதலை உள்ளுக்குள்ளேயே மறைத்து வைத்திருப்பது.? ஆகையால் இன்று சொல்லிவிட முடிவெடுத்து இருந்தாள்.
அவன், கிருபாகரன். முதுகலை வணிக நிர்வாகத்தில் பட்டம் பெற்று, நாட்டின் பெயர் பெற்ற பெரும் நிறுவனம் ஒன்றின் சென்னைக் கிளையில் ஐந்து இலக்க‌ ஊதியத்துடன் பணிபுரிந்து வருகிறான்.
இன்றோடு அவனிற்கு இருபத்தாறு வயது நிறைவு பெறுகிறது. ‘ஆடவனின் பிறந்த தினத்தில் தனது விருப்பத்தைத் தெரிவித்தால் என்ன?’ என்றே, நாள்களைத் தள்ளிப் போட்டு வந்திருந்தாள்.‌
இல்லை என்றால் ஒரு வாரத்திற்கு முன்னர், "வொர்க் சம்மந்தமா மும்பை போறேன் குட்டி. வர்றதுக்கு ஒன் வீக் ஆகும்!" என அவன் உரைத்த பொழுதே, தனது காதலைத் தெரிவித்து இருப்பாள்.
அன்றைய தினம் அதற்குத் தயாராகத்தான் சென்றிருந்தாள். ஆனால் சொல்வதற்கு வாய்ப்புகள் நிறைய கிடைத்தும், அதற்கு நா எழவில்லை. அதன்பின்னர் தான், இம்முடிவிற்கு வந்தாள்.
இருவருக்குமான அறிமுகம், அவர்கள் வசிக்கும் தெருவில் இருக்கும் மளிகைக் கடையின் முன்பு, இருபது ஆண்டுகளிற்கு முன்பு நிகழ்ந்தது.
தந்தையுடன் கடைக்குச் சென்றிருந்த இரண்டு வயது நிலா‍, அங்கு இருந்த சிறுவனின் கையில் விளையாட்டுப் பொம்மையைப் பார்த்துவிட்டு அதேபோல் கேட்க, "பஜாருக்குப் போறப்ப வாங்கித் தர்றேன் பாப்பா!" என்று சமாதானம் உரைத்தார் அவர்.
"என்கு வேணும்!" என மழலை இதழ்களைப் பிதுக்கி அழுக தயாராக, நடந்த நிகழ்வைக் கண்டிருந்த சிறுவனின் அன்னை சித்ரா, "கிருபா, பாப்பா அழுகுறா பாரு. அவக்கூட சேர்ந்து பொம்மையை வச்சு விளையாடு!" என்று குழந்தையைச் சமாதானம் செய்வதற்காக உரைத்தார்.
"அவ குட்டியா இருக்கா அம்மா. நான் எப்படி அவக்கூட‌ சேர்ந்து விளையாட முடியும்?" என அவன் விருப்பமில்லை என்பதை வினாவாய் எழுப்பிட,
"குட்டியா இருந்தா என்ன, விளையாட கூடாதா?"
"அவளால, என் அளவுக்கு ஃபாஸ்டா ஓட முடியாது!"
"அப்ப, நீ மெதுவா ஓடு!"
"அதெல்லாம் முடியாது. அவளுக்காக நான் ஏன் மெதுவா ஓடணும்? அப்புறம் நான் தோத்துப் போயிடுவேன்!" என்று போட்டி மனதுடன் பதில் உரைத்தான்.
"நீ என்னடா ஓட்டப் பந்தயத்துலயா கலந்துக்கப் போற, அவளோட போட்டிப் போடுறதுக்கு. வீட்டுக்குப் போற வரையும் ஒரு பத்து நிமிசம் பிள்ளக்கூட விளையாடச் சொன்னா, தோத்துடுவேன் படுத்துடுவேனு கதை பேசிட்டு இருக்க?" என மகனிடம் உரைக்க, "விடுங்கம்மா. அவனும் குழந்தை தான?‌" என்று சமாதானமாய் மொழிந்தார் நிலாவின் தந்தை.
"இந்தத் தெருவுல தான் குடி இருக்கீங்களா.? இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையே.?"
"நாலு நாளைக்கு முன்னாடி தான்மா குடி வந்தோம்." எனத் தொடர்ந்த அவர்களின் பேச்சு, பத்து நிமிடங்களின் முடிவில் இருவரது குடும்ப அறிமுகத்தில் முடிந்தது.
மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு கிளம்பும் பொழுது, "இந்தாடா குட்டி!" என்று ஒரு குச்சி மிட்டாயை நீட்டிய சித்ராவின் முகம் இன்றுமே நிலாவிற்கு நன்றாய் நினைவில் உள்ளது‌. உடன் வீம்பாய் அன்று விளையாட மறுத்த ஆறு வயது கிருபாவின் முகமும்தான்.
ஆனால் இன்று அப்படி இல்லை. அவனது முதல் மற்றும் நெருக்கமான தோழி அவள்தான்.
"குட்டியா இருக்கா!" என்று சிறுமியுடன் விளையாட மறுத்தவனது இன்றைய அழைப்பே 'குட்டி!' தான்
கிருபா பள்ளிச் செல்லும் பொழுது, இவளது வீட்டைக் கடந்து தான் செல்ல வேண்டும். சரியாக அந்நேரத்தில் காலை உணவு உண்பதற்காக அன்னையை ஓடவைத்து பாடாய் படுத்திக் கொண்டிருப்பாள்.
"சாப்பிடாம இப்படி ஓடிக்கிட்டே இருக்க.? நீ, பேட் கேர்ள்!" என அவன் உரைத்த சொற்களிற்காகவே, மறுநாளில் இருந்து ஈன்றவரைக் கதற வைக்காது ஒழுங்காய் உண்டு குட் கேர்ளாய் மாற தொடங்கினாள்.
அந்த மாற்றம், அன்று மட்டும் அல்ல அதன்பின்னரும் தொடர்ந்து, ஆடவனின் மீது ஆர்வத்தை உண்டாக்கி இருந்தது நிலாவிற்குள்.
கிருபாவிற்கு ஈடுகொடுத்து விளையாட வேண்டும் என அவள் மேற்கொண்ட முயற்சி, ஒவ்வொரு விசயத்திலும் வெளிப்பட்டு, வளர்ச்சியின் பாதையில் அழைத்துச் சென்றது என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்று அவள் சென்னையின் முக்கிய நிறுவனம் ஒன்றின்‌ கணினி பயன்பாட்டுத் துறையின் தலைமை பொறுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறாள்.
சிறு வயதில் ஆடவனிற்கு இணையாய் வளர வேண்டும் என்ற எண்ணம், பருவ பெண்ணாய் ஆன பின்னர் அவளையும் அறியாமல் வாழ்க்கைத் துணையின் இடத்திற்குப் பொருத்தமானவளாய் நிலைபெற வேண்டும் என மாற்றம் கண்டிருந்தது.
என்று, எப்பொழுது, எத்தருணத்தில் என்றெல்லாம் தெரியவில்லை. நிலா, கிருபாவை நேசிக்கத் துவங்கி இருந்தாள்.
"படிச்சு முடிச்சு நல்ல வேலையில இருக்க. அப்புறம் என்ன, உனக்குப் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிடலாமா?" என சித்ரா மகனிடம் திருமண பேச்சை ஆரம்பித்து இருந்தார் சில மாதங்களிற்கு முன்னர்.
"அம்மா, நான் சின்னப் பையன் அதுக்குள்ள என்ன‌ கல்யாணத்தைப் பத்திப் பேசிக்கிட்டு இருக்கீங்க.?" என்று அவன் அதிர்ச்சியாய் வினவ, "எது, சின்னப் பையனா.? உன் வயசுல உங்கப்பாக்கு நீ பிறந்துட்டடா மகனே!" எனப் பதில் தந்தார்.
"வாட்.? அப்ப டேடி உங்களை சைல்ட் மேரேஜா பண்ணிக்கிட்டாரு? திஸ் இஸ் அகைண்ஸ்ட் தி லா ம்மா."
"டேய்! தேவை இல்லாம ஏண்டா என் மண்டைய உருட்டுற? நான் லா'க்கு அகைண்ஸ்ட்டா எல்லாம் எதுவும் பண்ணல. இருபத்தஞ்சு வயசுல தான் கல்யாணம் செஞ்சேன்! உன்னோட அம்மாக்கு அப்ப பத்தொன்பது.‌" என்றபடி வந்த சேது மகனின் அருகே இருந்த நாற்காலியில் அமர, "டுவண்டி ஃபைவ்லயே மேரேஜா.?‌ அம்மாக்கு நயன்டீன்னா.? ஓ காட்! அந்த வயசுல என்ன தெரியும்னு மேரேஜ் பண்ணீங்க டேட்.?"
"எப்படி பிள்ள பெத்துக்கணும்னு தெரியும். பொண்டாட்டிப் பிள்ளைக்குத் தாராளமா செலவு பண்ணுற அளவுக்கு எனக்கு வருமானம் இருக்குனு தெரியும். சோ, செஞ்சுக்கிட்டோம்."
"டேட்.." என அவனும், "பெத்த பிள்ளைக்கிட்ட பேசுற பேச்சா இது‌?" என்று சித்ராவும் அதற்கு எதிர்வினை செய்ய, சின்னதாய்ச் சிரித்தார் சேது.
"அவன் ஒன்னும் விபரம் அறியாத பையன் இல்ல சித்து. நீயே கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சிட்டு, இந்த சின்ன விசயத்துக்கே இப்படி ரியாக்ட் பண்ணா‌ என்ன அர்த்தம்.?‌" என மனைவியிடம் மொழிந்தவர்,
"கிருபா, என்னைக் கேட்டா திஸ் இஸ் தி ரைட் ஏஜ் ஃபார் மேரேஜ்னு சொல்லுவேன்." என்றபடி மகனின் பக்கம் திரும்பினார்.
"டேட், அப்ப தர்ட்டி அபௌவ் பண்ணுறவங்க எல்லாம்.?"
"அதை நம்மளோட எகானமி ஸ்டேட்டஸும், மென்டல் ஹெல்த்தும் தான் டிசைட் பண்ணுது கிருபா‌. உனக்கான கடமைகள்னு நம்ம ஃபேமிலில எதுவும் இல்லாதப்ப, ஜெஸ்ட் என்ஜாய் யுவர் லைஃப் மை சன்!
பெத்தவங்க எங்களுக்கும் பொறுப்பு இருக்குல்ல? நாங்க அதைச் செய்யணுமே! அலையன்ஸ் பார்க்கிறோம். அதுல பிடிச்ச பொண்ணா பார்த்து நீ கல்யாணம் செஞ்சுக்க. இல்லைனா இப்ப எங்கேஜ்மெண்ட் பண்ணீட்டு, ஒன் இயர் ஆஃப்டர் மேரேஜ் பிளான் பண்ணலாம்.
உனக்கு இனிதான் இருபத்தேழு பிறக்கப்‌ போகுது. தர்ட்டி, தர்ட்டி டூ வரைக்கும்‌ உன் பார்ட்னரோட சந்தோஷமா இரு. லைஃப்னா என்னனு ரெண்டு பேரும் சேர்ந்து கத்துக்கோங்க.
அப்புறம் குழந்தைக்குப் பிளான் பண்ணுங்க. அதுக்கு அப்புறம் நீங்க கத்துக்கிட்டதுக்கான எக்ஸாம்ஸ் நடக்கும். தினம் தினம் டெஸ்ட் தான்‌. உங்க பாண்டிங், எலாஸ்டிக் மாதிரி தேவைக்குத் தகுந்தமாதிரி விரிஞ்சு இறுகும்.
எவ்வளவு இக்கட்டான சூழ்நிலை வந்தாலும், அதை அறுந்துடாம எப்படி மெயிண்டெயின் பண்ணுறதுனு பிளான் போடுங்க. நீங்களும் எங்க பொசிஷனுக்கு வருவீங்க‌. அப்ப, நான்‌ உனக்குச் சொன்னதையே நீயும்‌ உன்னோட பையனுக்கோ பொண்ணுக்கோ சொல்லுவ!" எனச் சேது உரைத்திட, சிந்தனை நிறைந்த முகத்துடன் தந்தையைப் பார்த்தான் கிருபா.
"என்னடா.?"
"டேட், லைஃப்னா அவ்வளவு தானா? நீங்களும் அம்மாவும் இப்படித்தான் வாழுறீங்களா.?"
அவர் மனைவியைப் பார்க்க, சேதுவின் அருகே வந்து அமர்ந்தார் சித்ரா.
"என்னம்மா.?"
"அப்பா சொன்னாரே, கத்துக்கோ. எக்ஸாம் நடக்கும்னு. அதுதான் லைஃப். இப்பவும் நாங்க கத்துக்கிறோம், வளர்ந்த பிள்ளைய எப்படி கையாள்றதுனு. நீ அதை ஃபேஸ் பண்ணுற விதம் தான், எங்களுக்கான எக்ஸாம்ஸ். கடைசியா எங்க பையன் எடுக்குற முடிவுதான் ரிசல்ட். சிலநேரம் அது ஃபெயில் ஆகலாம்‌.
அப்புறம் திரும்பவும் நாங்க முதல்ல இருந்து கத்துக்க ஆரம்பிப்போம். ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா. நீயும் கூட நிறைய சொல்லிக் கொடுப்ப.
லைஃப்னா அவ்வளவு தானானு நீ கேட்டியே? அது அவ்வளவு ஈஸி இல்ல. நெடும் பயணம். அது பிறந்த உடனே அழுகுற அழுகையில இருந்து, மூச்சு அடங்கி போற கடைசி நிமிசம் வரையும் தர்ற ஒரு மதிப்பற்ற அனுபவம். அவ்வளவு இருக்கு, ரசிக்க, சிரிக்க, அழ, விழ, எழுந்திரிக்க, விட்டுக்கொடுக்க, ஆதரவு தர, ஏமாந்து போக, அதுல இருந்து மீள, தோற்க, ஜெயிக்க அப்படினு.
இப்ப உன்கிட்ட இவ்வளவு ரிலாக்ஸா நாங்க பேசுறோம்னா, அதுக்கு முப்பது வருசம் நாங்க உழைச்சிருக்கோம். ஒவ்வொன்னுலயும் அனுபவப்பட்டு இருக்கோம்.! வாழ்க்கைனு வார்த்தையா சொல்லுறதுக்கும், அதை வாழ்ந்து பார்க்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு கிருபா!" என்று சித்ரா மகனின் குழலில் விரல் நுழைத்து கலைத்துச் சரிசெய்திட, புன்னகையுடன் தாய்த் தந்தையர் இருவரையும் நோக்கினான்.
கிருபாவிற்கு வாழ்தல் என்பது, இதுவரை எவ்வித அசௌகர்யத்தையோ சிரமத்தையோ தந்தது இல்லை‌.
கல்வியில் முதல்வன், பெற்றவர்களின் அன்பை அமிர்தமாய் பெற்றவன், அரவணைப்பான சுற்றம், படிப்பை முடிக்கும் முன்னரே வளாக நேர்காணலில் மனதிற்கு விருப்பமான பணி, அலுவலக தோழர்களின்‌ பார்வையில் மதிப்பு மிக்கவன், அவசரத்திற்கோ பதற்றத்திற்கோ அவசியமில்லாது திட்டமிடப்பட்டது போன்றதான வளர்ச்சி, அச்சம் கொள்ள தேவையில்லாத நிலையான பொருளாதார பின்னணி, திரை போட வேண்டாத முற்றும் முதலுமாய் பகிர்ந்து கொள்ள உண்மைத் தோழியென நிலா என்று அனைத்தும் கச்சிதமாய் அமைந்து இருந்தது அவனிற்கு.
அமைந்த யாவும் இறுதி வரை நிலைக்கும் என அசைத்திட இயலா நம்பிக்கையையும் கொண்டவன்.
எனினும் அவனை அப்படியே விட்டுவிட்டால் வாழ்க்கையின் புதிய பாடத்தை எங்ஙனம் கற்பது.?
நிலாவின்‌ வடிவில் அவனிற்குக் கற்பிக்கத் தயாரானது, காலம்! அதை அறிந்திடாமல் கிருபாவிடம் தனது காதலைத் தெரிவிப்பதற்காக காற்றில் மிதக்கும் வண்ணத்துப் பூச்சியாய்‌ கிளம்பிக் கொண்டிருந்தாள் பாவை.
 

Author: SudhaSri
Article Title: அறம் பொருள் இன்பம் -1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
222
குட்டி வயதிலேயே
குட்டியின் மனதில்
குடி புகுந்து விட்டான்
கிருபாகரன்....
தொடக்கம் அருமை....
 
Joined
Jun 30, 2024
Messages
38
நல்ல துவக்கம். தந்தையின் வாழ்க்கை பாடங்கள் அருமை
 
Top Bottom