Kasavu
Member
- Joined
- Apr 29, 2025
- Messages
- 45
நெஞ்சம்-14
சரயு, சாருமதி அறையிலேயே படுத்துக் கொள்வதாக மாமனுக்கு போனடித்து விட, ‘இப்பவே தன் கூட்டணிக்கு ஆள் சேர்க்குறா’ எனத் தேவையில்லாமல் குமைந்தான் சந்துரு.
மனம் குட்டையாய் குழம்பிக் கிடக்க, தூக்கம் வரவில்லை. சாருவை ஒதுக்கி, சரயுவைப் பற்றி மட்டும் சிந்தித்தான். இன்று ரஜினீஷ் அவளை அழைத்துச் சென்றதிலிருந்து செய்த சேவைகளைப் பார்க்கும் போதும், அந்த வீட்டுக்குள் சென்று திரும்பி வந்த சரயுவின் முகம் அழுதது போல் இருந்தது. ஒரு வேளை காதலைச் சொல்லி இருப்பானோ, அதை ஏற்க முடியாமல் தயங்குகிறாளோ’ என யோசித்தான்.
ராஜாத்திக்கு நடுவில் முழிப்பு தட்ட , சரயு அருகில் இல்லாததைப் பார்த்தவர், சந்துரு முழித்திருப்பதை அறிந்து கேட்டார். “சாரு ரூம்ல இருக்காம்மா” என்றான்.
“ தூக்கம் வரலையா”
“ மதியம் தூங்கிட்டேன்ல” காரணம் சொன்னான். இறங்கி பாத்ரூம் சென்று வந்தவர்,” ரொம்ப குளிருது” எனவும், காலில் சூடு பறக்கத் தைலத்தைத் தேய்த்து விட்டு, அருகிலேயே அமர, கண் கலங்கிய ராஜாத்தி,
“ உனக்கு ரொம்ப கொடுமை பண்ணிட்டேன் ராஜா” என்றார்.
“ ஏன்மா அப்படி சொல்றீங்க” எனவும்,
“ பாரதி கல்யாணத்துக்கு முன்னாடியே, சாரு உனக்கு ஒரு லெட்டர் போட்டு இருந்தா. வீட்டுக் கஷ்டத்தைச் சொல்லி, உதவி கேட்டுருந்தா” என்று சொல்ல,
“ எப்போ? ஆனா நான் தான் துபாய்ல இருந்தேனே ” என அதிர்ந்தான்.
“நீ லீவுக்கு வந்தது தெரிஞ்சு, பானு சொன்னதா எழுதியிருந்தா” எனவுமே அவனுக்குப் பொறுக்கவில்லை, எழுந்து விட்டான்.
“சந்துரு” என அவன் கையை பிடிக்க , “ மேல எதுவுமே சொல்ல வேண்டாம். என்னை அறியாமல் உங்க மேல வெறுப்பு வந்தா கூட என்னால தாங்க முடியாதும்மா” என்றான்.
“ அப்படி யெல்லாம் சொல்லாத ராஜா” அழுதவர், “ அதுக்கு பிராயச்சித்தம் பண்ண நினைக்கிறேன்”
“ வேண்டாம்மா, நம்ம உதவி அவளுக்குத் தேவை இல்லை. அந்த ப்ரபசருக்கு அவ பார்த்த சேவைக்கு, பெறாமலே நல்ல மகன் கிடைச்சிருக்கான். அன்னைக்கு அவ கேட்டதை உங்களால தரமுடியல. இப்போ அவ மகனுக்குச் சரயுவை கேட்குறா. முடிஞ்சா கொடுங்க” என்றான்.
“ அது என்னயா முடிஞ்சா குடுங்கனு, மூணாம் மனுரு மாதிரி சொல்ற. நீ வளர்த்த புள்ளை சரயு. உனக்கு எல்லா உரிமையும் இருக்குய்யா. சரயு விசயத்தில உன் முடிவு தான் கடேசி. நான் தலையிட மாட்டேன். தாம்பத்திய வாழ்க்கையைத் தான் உன்கிட்ட இருந்து பறிச்சிட்டேன். புள்ளைச் சுகமாவது கிடைக்கட்டும். சரயு வாழ்க்கை முடிவை நீ யே எடு” என்றார்.
“ இப்ப தான் கேட்டா. உங்க கிட்டக் கலந்துகிட்டு சொல்றதா, அத்தான் சொல்லி இருக்கார். இப்ப படுங்க. காலையில் பேசுவோம்” என்றான்.
“ சரயுகிட்ட நான் மன்னிப்பு கேட்கிறேன்.” ராஜாத்தி சொல்ல,
“ வேண்டாம். எனக்காக நீங்க யாருகிட்டயும் தலை குனியக் கூடாது. நான் பேசிக்கிறேன்” என்றவன், அவர் தூங்கவும் விடிவிளக்கையும்,கணப்பையும் போட்டு விட்டு வெளியே வந்தான்.
பனியெல்லாம் கொட்டி தீர்த்து பால் நிலா பளீரென தெரிந்தது. அதை ரசிக்கவும் மனம் இன்றி, சற்று முன்,சாருவை தான் கேட்ட கேள்வி மனதைக் குத்த, அப்படியே வரவேற்பை நோக்கி நடந்தான்.
சாருவுக்கு மன்னிப்பு வேண்டி, குறுந்தகவல் அனுப்பலாம் என்றால், அவள் அலைப்பேசி எண் அவனிடம் இல்லை. ரிசார்ட் முழுதும் சின்ன சின்ன பல்புகள் எரிந்தன. காலையில் அவளைப் பார்த்த பிள்ளையாரிடம் சென்றான். இன்னும் இருபத்தி நான்கு மணி நேரத்தைக் கடக்க வில்லை. அதற்குள் எத்தனை நிகழ்வுகள். ஒரே நாளில் ஒரு வருடம் ஓடியது போல் அயர்வு .
பாரதி கல்யாணத்துக்கு முன்பே எனில், கீதாவுக்கு மணம் பேசிய தருணம். யோசனையோடே காரிடாரில் நடை பயில, சாரு அறையில் இன்னும் விளக்கு எரிந்தது. தட்டலாமா வேண்டாமா என்ற யோசனை.
உள்ளே சரயு, தந்தையின் டைரியை வாசித்திருந்தவள், சாரு வரும் போது அழுது முகம் வீங்கி இருந்தாள். சாருவுக்குப் பார்த்தவுடன் பதட்டம், “என்னடாம்மா” என தலை கோத, அவள் வயிற்றைக் கட்டிக் கொண்டு அழுதாள்.
“ இது அப்பா டைரி ரஜி கொடுத்தார்.” என விசும்ப, முதுகைத் தடவி, தண்ணீர் குடிக்க வைத்தவள், “ பொறுமையா சொல்லு” என்றாள்.
“ அம்மாவைப் பார்த்த நாளில் இருந்து கவிதையா எழுதி இருக்கார். கல்யாணத்துக்கு அப்புறமும் கூட” என்றவள், ஹனிமூன் சென்ற போது, மனைவியை ரசித்து அவன் எடுத்த புகைப்படங்களே அவர்கள் வாழ்க்கைக்கு எமன் ஆனது என்றும். சில ப்ரைவேட் படங்களைத் தானே டெவலப் செய்யலாம் என எடுத்திருக்க, அது எப்படியோ வேறு ஒரு உதவி இயக்குநர் கையில் கிடைத்து இருக்கிறது.
“ டைரக்டர் பார்த்தா, டாப் ஆக்டரஸ்ஸா மாற்றி விடுவார். நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணா போதும்” என்று சொல்ல, அவன் வாயை பேத்து விட்டு வந்திருக்கிறான்.
அதற்குப் பழி வாங்க, படத்தை வைத்தே மிரட்ட அதைக் கைப்பற்ற பெரும் போராட்டம் , அலைக்கழிப்பு செய்து உள்ளனர். அந்த விசயத்தை மனைவியிடம் பகிர முடியாமலும், தன் மீதே உள்ள கோபத்திலும் இருக்க , போட்டோ கிராபர், “ சார் உங்க ஃபைவை போட்டோ எடுத்துட்டு வரச்சொன்னார்” என்றதில் அவனையும் அடித்து அனுப்பி விட்டான்.
போட்டோ எனவும் பெருமையாக போஸ் கொடுக்க வந்த பாரதியையும் கண்டபடி பேச, அது முதல் அவர்கள் போராட்ட காலம். புரிதல் பிழை நிறைய இருக்க, மனைவி தன்னை விட்டுப் பிறந்த வீடு சென்றதைப் பொறுக்க முடியாமல் குடிக்கு அடிமையாகி இருக்கிறான். பாரதி மறைவுக்குப் பின் அவள் அம்சமான குழந்தையையும் பார்க்க முடியாமல் அவன் தவித்த தவிப்பு சொல்லில் அடங்காது.
சரயு, “ அம்மாவை அப்பா கொடுமைபடுத்தினார்னு தான் நினைச்சிட்டு இருந்தேன். அவர் அனுபவிச்ச கொடுமை அதுக்கு மேல இருக்கு. நான் யாருக்குன்னு அழுவேன்” என அரற்றியவளின் புலம்பல், அம்மா குடும்பம் , அப்பாவை பற்றிச் சொன்னால் என்ன நினைப்பார்கள் என்பதாகவும் இருந்தது.
சாரு, சரயுவை ஒரு வழியாகச் சமாதானப் படுத்தித் தூங்க வைத்து, விளக்கை அணைக்க நினைத்த நேரம், வெளியே காலடி சத்தம் கேட்டது.
“ யாரது” அவள் அதட்ட, சிறு மௌனத்துக்குப் பின் “ நான் தான் சந்துரு” என்றான். மணியைப் பார்க்க, இரண்டு எனக் காட்டியது. அவசரமாகக் கதவைத் திறந்தவள், மெல்லச் சாத்தி விட்டு வெளியே வந்தாள்.
“ என்ன இந்த நேரம். மேலுக்கு முடியலையா” என அவன் கையை பற்றி, காலையில் செய்தது போலவே , “வந்து உட்கார்” என அதே இடத்தில் அமர்த்தி, தன் முந்தியால் அவன் முகத்தைத் துடைத்துவிட, அருகில் நின்றவளின் வயிற்றில் முகம் புதைத்து, சரயுவைப் போலவே அவள் மாமனும் அழுதான்.
அதிர்ந்தவள், “சந்துரு, என்ன. என்னனு சொல்லிட்டு அழு.” என்ற போதும் உடல் குலுங்க,
“ நீ கேட்டதைப் பத்தி எனக்குச் சந்தோஷம் தான். நான் தப்பா எடுத்துக்கலை. நான் உன்கிட்ட வந்திருக்கனும் தானே” சமாதானம் சொல்ல,
“ போதும்டி, இன்னும் யாரை காப்பாத்த போற என் அம்மாவையா? நீ லெட்டர் போட்டதை எல்லாம் சொல்லிட்டாங்க.”
“ நீ என்னைத் தேடியிருக்க, நான் தான் உன் கைக்கு எட்டாமல் இருந்திருக்கேன். நீ இத்தனை வருசம் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் நான் தான் பொறுப்பு. என்னை அடி” என அவளை நிமிர்ந்து பார்த்தவன், அவள் கையை பிடித்து தன் கன்னத்தில் அறைய வைக்க முயற்சி செய்ய,
“ போதும் சந்துரு, விடு. நீ கஷ்டபட்டு, என்னையும் கஷ்டப்படுத்தாத” என்றாள் தொண்டை அடைக்க.
“ முடியலடி. எவ்வளவு நாள், நான் சம்பாரிக்க துப்பில்லாதவன்னு நொந்துகிட்டு இருந்திருக்கேன் தெரியுமா. இன்னொருத்தன் பொண்டாட்டினு உன்னைக் கற்பனை பண்ணக் கூட முடியலை. ஓட்டுப் பள்ளிக் கூட வாட்ஸ் க்ரூப்பில நீ இருப்பன்னு தான் வேகமா சேர்ந்தேன். உன் புருஷனோட இருக்க போட்டோ போட்டு இருந்தேன்னா? அந்த கேள்வியே பூதாகரமா இருக்க, பதில் சகிக்க முடியாதுன்னு நைட்டோட நைட்டா வெளியே போயிட்டேன். இந்தியா வர்றதையே தள்ளிப் போட நினைச்சேன். அம்மாவுக்கு முடியலைங்கவும் தான் வந்தேன். “ தன் கதையைச் சொன்னவன், “ உன் புருஷனோட சேர்த்து பார்த்தா, இதயம் துடிக்கிறதை நிறுத்திடும், எனக்கும் இந்த அவஸ்தையிலிருந்து விடுதலை கிடைச்சிடும்னு தான் வந்தேன்” என்றான்.
“ வாயை மூடு” என வாயிலேயே அடித்தவள், “ உனக்காக நான் குருவாயூரப்பன்கிட்டயும், மீனாட்சியம்மா கிட்டையும் ஒவ்வொரு நிமிசமும் வேண்டிகிட்டு இருக்கேன். அது எப்படி நிற்கும்” என்ற கேள்வியில், மீண்டும் முகம் புதைத்தான்.
அவனின் சிகை கோதியவள், “ ஒரு லெட்டர் மட்டும் இல்லை, நீ ஃபாரின் போனதே தெரியாமல் நிறைய லெட்டர் போட்டு இருக்கேன். எதுக்குமே பதில் வராது. ஆனாலும் மன கஷ்டத்தைச் சொல்லி உனக்கு லெட்டர் போட்டுட்டா எனக்கு ஒரு நிம்மதி. கடவுள்கிட்ட சொன்ன மாதிரி. “என்றவள்,
“ மற்றது எல்லாம் புலம்பலா இருக்க, கீதா கல்யாண சமயம் மட்டும் தான் பண உதவி கேட்டு எழுதி இருந்தேன். அதுக்கு அடுத்து தான் ராஜாத்தி மாமி மதுரைக்கு வந்து, நான் போட்ட லெட்டர் எல்லாம் முகத்தில் விட்டு எறிஞ்சு, மகனை மயக்க பார்க்கிறியான்னு திட்டுனாங்க. அது எனக்கும், அம்மாவுக்கும் மட்டும் தான் தெரியும். தங்கச்சிகளுக்குக் கூட தெரியாது. இனிமே உனக்கு லெட்டர் போட மாட்டேன், காண்டேக்ட் பண்ண ட்ரை பண்ண மாட்டேன்னு சத்தியம் பண்ணேன்.” என்று சொல்ல, சந்துருவுக்கு வெறுத்துப் போனது.
அவன் முகத்தைப் பார்த்து “ மாமி செஞ்சதும் தப்பில்லை. மூணு பொண்ணுங்களை கரை ஏத்த உன்னைத் தானே நம்பி இருந்தாங்க. அதுல எங்க வீட்டு சுமையும் சேர்ந்தா, கஷ்டம். அதுவும் போக, அண்ணன் லவ் மேரேஜ் பண்ற வீட்டில் தங்கச்சிகளுக்கு எப்படி கல்யாணம் ஆகும்” என ராஜாத்திக்காகவும் அவளே பேசினாள்.
“ நீ ஏன்டி இவ்வளவு நல்லவளா இருந்த” என்றான்.
“ என்ன செய்ய, மீனாட்சியம்மா பேரனை காதலிச்சிட்டேனே. என் பேரனை பார்த்துக்கடின்னு உன்னை என் மனசுல விதைச்சதே அவுங்க தான். சந்துரு ருசியா சாப்பிடுவான், என் கை பக்குவத்தை நீ கத்துக்கன்னு முழு கத்திரிக்கா குழம்பு வைக்கிறதிலிருந்து எல்லாம் சொல்லி கொடுத்தாங்க” என்றாள்.
“ ஆமாம் போ.” என அவன் சலித்துக் கொள்ள,
“ ஒவ்வொரு வேளையும் உன்னை நினைப்பேன்” என்றாள்.
“ அது தான் தெரியுமே. சாப்பிட உட்காரும் போதெல்லாம் புரை ஏறுதே, உன் பொண்டாட்டி நினைக்கிறாளான்னு கேட்பாங்க” என்றான்.
“ ஆமாம்னு சொல்ல வேண்டியது தானே. மனசளவுல உன் பொண்டாட்டியா தான் வாழ்ந்தேன். ப்ரபசருக்கு தாலி கூட கட்ட முடியலை. நானே தான் கட்டிக் கிட்டேன்” என்றவள், அடுத்துச் சொல்லத் தயங்க,
“ என்ன” என்றான்.
“ ராம் சார் ரகசியம், மத்தவங்க கிட்டச் சொல்லக் கூடாது. இருந்தாலும் சொல்றேன். அவர் ஆண்மை இழந்தவர்னு தான், அவர் சம்சாரம் அவரை கழட்டி விட்டுடுச்சு. அதே காரணத்துக்காகத் தான், நான் அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என தலை குனிந்தபடி சொல்ல
“ அப்பா, மண்டைக் கனத்தை என்னால தாங்கவே முடியலை” என்றவன் உடல் நடுங்கியது.
“ உன்னை கஷ்டபடுத்திக்காத சந்துரு. எதுவா இருந்தாலும் உன் சாருகிட்ட காட்டு” என அவனை அணைக்க, அதைத் தனதாக்கிக் கொண்டு அவளை இறுக்கிக் கொண்டான். கழுத்து வளைவில் முகம் புதைத்து அவளை உணர்ந்தவன், சட்டென விலகி, “போதும். நான் போறேன்” என எட்டு எடுத்து வைக்க, அவனை நகரவிடாமல் பின்னோடு கட்டிக் கொண்டாள்.
“ வேணாம் சாரு. உன்னை ஹர்ட் பண்ணிடுவேன்” என்றான்.
“ பரவாயில்லை செய். என் கற்பை காப்பாத்தி யாருக்கு நிரூபிக்க போறேன். நம்ம தவிப்பாவது முடிவுக்கு வரட்டும் ” எனவும், வேகமாகத் திரும்பி அணைத்து முகமெங்கும் முத்தம் பதித்து, இதழில் நிறுத்தி தன் வேட்கை எல்லாம் தணிக்க, நெடுநாள் தவத்தை அன்றோடு அவளும் நிறைவு செய்தாள்.
நிறைவு கண்டது அவர்கள் நெஞ்சம்.
Author: Kasavu
Article Title: நெஞ்சம்-14
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: நெஞ்சம்-14
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.