Kasavu
Member
- Joined
- Apr 29, 2025
- Messages
- 45
நெஞ்சம் -10-பார்ட்-1
சந்துருவுக்கு இரவு முழுதும் தூக்கம் வரவில்லை. அடுத்த நாள் சாருவைச் சந்திக்கப் போகிறோம் என்ற நினைவே பரபரப்பைத் தந்தது. சரயூ சொன்ன விசயங்கள் வேறு அவன் மனதை அரித்துக் கொண்டே இருந்தது. இருபத்தைந்து வயது மூத்தவர் எனில் அப்பா வயது. குடும்ப நிலைக்காகத் தான் மணந்தாள் என்றாலும், இந்த பொருந்தா மணத்தில் பதினைந்து வருடமாக அவள் அனுபவித்த மன அழுத்தங்களை எண்ணி அவன் மனம் தவித்தது. ‘நான் கொஞ்சம் தைரியமா, சுயநலமா கூட முடிவு எடுத்திருக்கலாம். ஏன் அப்போ இது தோணல’ எனத் தன்னைத் தானே நொந்துக் கொண்டான்
சாருவுக்கும், நாளைய பொழுதில் சந்துருவைச் சந்திக்கப் போகிறோம் என்ற நினைவில் கண்ணைப் பொருதவும் முடிய வில்லை. இத்தனை வருஷம் தனியா ஓட்டிட்டானே. வறுமையிலிருந்த போதும், மீனாட்சியம்மா பேரனை ராஜாவாகத் தான் வளர்த்தார். வேளை வேளைக்குச் சாப்பாடு முதல் ஸ்பெஷல் ஐயிட்டங்கள் வரை எல்லாமே, பெண் பிள்ளைகளுக்கு இல்லாமல் பதுக்கி வைத்து பேரனுக்குத் தருவார்.
“ இது என்ன ஓரவஞ்சனை” சாருவே கேட்டிருக்கிறாள்.
“ஐஞ்சு பொட்டபிள்ளைகளோட பிறந்தவன், அப்பனுக்கு அப்புறம் அவன் தானே, இதுங்களுக்காக ஓடனும், உடம்பில் வலு வேண்டாமா” என்பார்.
அவளும் கூட, தங்கள் வீட்டில் செய்வதை அவனுக்கென ரகசியமாகக் கொண்டு போய் தருவாள். சந்துருவை ஊட்டி தான் வளர்த்தனர்.
‘இத்தனை வருஷத்தில் எத்தனை பேருக்கு சமைச்சு போட்டு இருப்பேன்?’ அவள் கை சமயலை ருசிக்க வேண்டியவன், கடல்கடந்து சென்று தானே பொங்கித் தின்னும் நிலை. “ராம் சாருக்கு எவ்வளவு பார்த்தேன். ஒரு காய்ச்சல் வந்திருந்தாலும் வெந்நீர் வச்சு தரக் கூட யாரும் இருந்திருக்க மாட்டாங்களே! இது எல்லாத்தையும் விட அந்த தனிமை. அது போல் கொள்ளும் வியாதி எதுவும் உண்டோ?’ ஒவ்வொன்றாய் நினைத்து தலையணையை நனைத்தது தான் மிச்சம்.
இரவும், பகலும் யாருக்காகவும் காத்திராமல் அதன் வேலையை செல்வனே செய்யப் பொழுதும் விடிந்தது.
அவர்கள் திட்டமிட்டதை விட, குடும்ப சுற்றுலாவுக்கான ஆட்கள் அதிகமாக, சந்துரு முதல் வேனை பிடித்து, அதிகாலை வந்து இறங்கிய தங்கைகள் குடும்பத்தைத் திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்தே அழைத்துக் கொண்டு நேராகப் பன்றிமலை சென்றான். யமுனா ஒரு வேனில் சாருவின் குடும்பத்தையும், ராஜாத்தி அம்மாவை பானுமதி, அவள் கணவர் , மகன் மருமகள் காரில் அழைத்து வருவதாக ஏற்பாடானது.
சந்திரா, “ சொல்லாமல், கொள்ளாமல் இவ்வளவு பேர் போறோமே, ரிஸார்டுகாரேன் விரட்டி விட போறான்” என சந்துரு காதை கடிக்க,
“உன் தோஸ்தோட ரிஸார்டு தானாம், நீயே கேளு” என்றான்.
“ம்க்கும், என்னை விட நீ தான் அவ பெஸ்டி , நீயே கேளு” சந்திரா சொல்ல,
“ அங்க ரூம் இல்லையினா, அடுத்த ரிசார்ட் பார்ப்போம். இது ஒரு பிரச்சனையா. குடும்பமா என்ஜாய் பண்றது தான் முக்கியம்” என்றான்.
சரயு, ‘நம்ம குடும்பத்துக்கு ஐஸ் வைக்கவே, அந்த ரக்கடு பார்ட்டி ரூம் கொடுப்பான். இதுல இவுங்க வேற நிலைமை புரியாமல் பேசுறாங்க. என்ன செய்யக் காத்து இருக்கானோ’ மனதில் பயந்தபடி வந்தாள்.
திண்டுக்கல்லில் கிளம்பியதிலிருந்து, “சந்துரு மாமா ஸ்பெஷல்” என மாலதி, ரதியின் பிள்ளைகள் ரஜினி பாட்டாகவே போட்டு வர, சந்துருவும் பாடலுக்கு ஏற்ப ரஜினி பாணியில் நடித்து முடியைச் சிலுப்பப் பிள்ளைகள் ஆரவாரம் செய்தனர்.
சந்திராவும், ரதியும், “ தலைக்குக் குஷியை பார்த்தியா” என ரகசியமாகக் கண் ஜாடை காட்டிக் கொள்ள, “ இனிமேலாவது வாழ்ந்துட்டு போறான் விடுங்க” என்றார் தயாளன்.
“ நாங்களா குறுக்க நிற்கிறோம்” எனச் சகோதரிகள் இருவரும் அவரோடு மல்லுக்கட்டினர்.
கூத்தும் கும்மாளமுமாக உல்லாச விடுதி வந்திருக்க, சந்துருவின் உள்ளம் பராபரத்தது. இன்னும் சில நிமிடங்கள் தான் என.
இவர்கள் எதிர்பார்த்தை விட ரிசார்ட் பெரிதாகவே இருந்தது. வேனிலிருந்து இறங்கி எல்லோரும் வேடிக்கை பார்க்க, வணக்கம் வைத்த காவலாளி , “மதுரையிலிருந்து வந்துருக்கீங்களா, அந்த கட்டிடம் “ என வழி காட்டினான்.
“ரிசார்ட் மேனேஜர், கேர்டேக்கர் யாரவது இருக்காங்களா, எதிர்பார்த்ததை விட ஆளுங்க நிறையப் பேர் இருக்கோம்” சந்துரு கேட்க,
“நோ ப்ரோப்லேம் சார், எக்ஸ்ட்ரா பெட் போட்டுடலாம்.”
“இருந்தாலும், உங்க மேனஜர் கிட்ட பேசணும்” என சந்துரு கேட்கவும்,
மற்றொருவனை அழைத்து , அறையைத் திறந்து விடச் சொல்லி விட்டு, சந்துருவை அலுவலகம் நோக்கி அழைத்துச் சென்றான்.
பெரியவர்கள் அறையை நோக்கிச் சென்றனர். சரயுவையும் சேர்த்து, இளவட்டங்கள் மாலதி, ரதியின் பிள்ளைகள் சேர்த்து ஐவரும், இயற்கை எழிலை ரசிக்க ஓடினர்.
ரஜினிஷ், வழக்கத்தை விடச் சீக்கிரமே எழுந்திருந்தவன், பால்கனியில் வந்து உடற்பயிற்சி செய்து கொண்டிருக்க, “ ஏய், சூப்பர், வாவ்” என்ற இளையவர்களின் சத்தம் வந்த திசை நோக்கிப் பார்க்க,
புல் சூட் ஜெர்கினில் கைகளைத் தேய்த்து முகத்தில் வைத்து, சாவகாசமாக நடந்து வந்து கொண்டிருந்தாள் சரயு.
காலை பனியில் புதுமலராய் மாமன் மகள், தன் மனதுக்குகந்தவளை வைத்த கண் வாங்காமல் பார்த்து நின்றான் ரஜினீஷ். அவளைப் பார்த்த நொடி முதல்,அவனிடம் எல்லாம் தலைகீழ் மாற்றம் தான்.
விழி எடுக்காமல் அவளை பார்த்துக் கொண்டே இருக்க, உள்ளுணர்வு உந்த அவள் திரும்பி பார்த்தாள்.
அரை டவுசர் மட்டுமே அணிந்து, வெற்று மேனியாய் அவளை பார்த்து சிரித்து , கண்ணடித்து வைக்க, முறைப்போடு திரும்பி கொண்டாள்.
தம்பி, தங்கைகள் வெகு தூரம் சென்றிருக்க, அவள் மட்டுமே தனியே நடந்தாள்.
இந்த தருணம் அமையாதே, சட்டென டீ சர்ட்டை மாட்டிக்கொண்டு, அவளை படம் பிடிக்க செல்போனையும் எடுத்துக் கொண்டு இறங்கி விட்டான்.
"இவனெல்லாம் மனுசனா மாடா, சட்டை இல்லாமல் நின்னுட்டு இளிப்பு வேற. பல்லை தட்டி கையில குடுக்காம. கடா மாடு" அவனுக்கு கேக்காது என முனங்கி கொண்டே செல்ல,
சட்டென அவள் முன் வந்தவன், ஒரு மரத்தின் மறைவில் இழுத்து சென்று அவளை சிறை செய்தபடி, "மனுஷன் தான், தொட்டு பார்க்கிறியா" புருவத்தை ஏற்றி இறக்க, அவள் மூச்சை இழுத்து பிடித்து நின்றாள்.
"என்ன பேபி " ஒற்றை விரலால் அவளை அளக்க,
"இதெல்லாம் சரியில்லை. நான் குடும்பத்தோட வந்துருக்கேன். ஒரு சத்தம் குடுத்தா, உங்க மானம் போயிடும்" என்றாள்.
"கூப்புடு, எனக்கு வேலை மிச்சமாகும்" என்றான்.
" ஏன் இப்படி வம்பு பண்றிங்க" அவள் அழுகைக்கு மாறா,
'ஐ லவ் யு சரயு. நீ தான் புரிஞ்சுக்க மாட்டிங்கிற."குறைபாட்டான்.
"நீங்க யாருன்னு தெரிஞ்சா, பெரிய கலவரம் ஆகிடும் ப்ளீஸ் "
" யாருன்னு சொல்ல வேண்டாம். சருமமா வளர்ப்பு மகனாவே உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்றான். அவள்முகம் திருப்ப. ரிசெப்பினில் இருந்து போன் வந்தது, அவன் எடுத்து, ஹலோ எனும் முன் சாருவின் குரல்,
"ரஜ்ஜு, உடனே ஆபீஸ் ரூமுக்கு வா. சந்துரு" எனும் போதே கட் ஆனது.
"சரயு, உன் மாமா எங்கே" என்றபடி அவளை விடுத்து அவன் நடக்க,
" மேனேஜரை பார்க்க போனாங்க" என்றாள்.
"சாரும்மா அங்க தான் இருந்தாங்க." என நடையை விரைவு படுத்த அவள், "என்னாச்சு" அவன் பின்னோடு ஓடினாள்.
Author: Kasavu
Article Title: நெஞ்சம் -10-பார்ட்-1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: நெஞ்சம் -10-பார்ட்-1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.