• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

உனதன்பின் கதகதப்பில் 11

Dhakai

Member
Joined
Mar 23, 2025
Messages
69
பிறந்த வீட்டில் இருந்த சுந்தரலட்சுமிக்கு அன்றாட வழக்கமாய்க் காலை ஐந்து மணிக்கே விழிப்பு வந்துவிட்டிருந்தது.

கைப்பேசி விழிப்பூட்டியை அணைத்து விட்டு படுத்தவளுக்கு, இன்று தான் சமைக்கத் தேவையில்லை என்ற எண்ணமே அத்தனை ஆசுவாசத்தை அளித்திருந்தது.

அவளது மாமியார் அவளுக்காக மதிய உணவை காலையே சமைக்க முடியாது என்று உரைத்த மறுநாளிலிருந்து அவளே காலையில் எழுந்து சமைக்கத் தொடங்கினாள்.

சுந்தரலட்சுமிக்கு நன்றாகவே சமைக்கத் தெரியும் என்பதால் தனித்துச் சமையல் செய்வதில் எவ்வித பிரச்சினையும் இருக்கவில்லை. ஆயினும் அவளது மாமியாருடன் இணைந்து செய்யும் பொழுது தான் பிரச்சினையே வந்தது.

முதல் நாள் சமைப்பதற்காகக் காலை ஆறேகால் மணியளவில் எழுந்து ஆறரை மணிக்கு சமையலறைக்குள் நுழைந்த போது, பால் காய்த்துக் கொண்டிருந்தார் அவளின் மாமியார்.

"நான் சமைக்கிறேன் அத்தை. நீங்க உட்காருங்க" என்று அவரை அங்கிருந்து அவள் செல்லச் சொன்னதும்,

"சரி மா! இன்னிக்கு இட்லியும் சாம்பாரும் தான் செய்யலாம்னு இருந்தேன். அதையே செஞ்சிடுறியா?" என்றவராய் அங்கிருந்து செல்லாமல் அப்படியே நின்றிருந்தார்.

"சரிங்க அத்தை" என்று அவள் வேலைச் செய்ய ஆரம்பித்ததும்,

"பால் பொங்கி வந்ததும் டீ போட்டுடுமா! டீ போட தெரியும் தானே" என்றார்.

"தெரியும்" என்றவளாய் டீ போடும் பாத்திரம் எதுவெனக் கேட்டு, கொஞ்சம் பாலை அப்பாத்திரத்தில் ஊற்றி டீத்தூளைப் போட போக,

"நிறுத்து! நிறுத்து! நிறுத்து! என்ன பால்ல டீத்தூள் போடுற? மொதல்ல தண்ணீர்ல டீத்தூள் போட்டு கொதிக்க விட்டுத் தான் டீ போடனும்‌. இதுக்கூடத் தெரியாதா உனக்கு?" என்றவர் சொன்னதுமே சுர்ரெனப் பொங்கி வந்த கோபத்தை அடக்கியவளாய்,

"அம்மா வீட்டுல கொஞ்சம் பால் எடுத்துத் தண்ணீர் ஊத்தி டீத்தூள் போட்டு டீ போடுவோம் அத்தை" என்றாள்.

"அப்படிப் போட்டா எம்பூட்டு பால் ஆகும். அவ்ளோ திக்கான டீ செந்திலுக்குப் பிடிக்காது. அவனுக்குத் தண்ணீயா இருந்தா தான் பிடிக்கும்" என்றார்.

'அதை மட்டம் தட்டாம சொன்னா தான் என்னவாம்?' என்று மனத்தோடு குமுறியவளாய் வேலைச் செய்து கொண்டிருந்தாள் சுந்தரலட்சுமி.

சாம்பாருக்காகக் காய்கறிகளைக் கைப்போன போக்கில் அவள் நறுக்கியதைப் பார்த்தவர், "சாம்பாருக்கு காயை இப்படியா நறுக்குவாங்க. உனக்கு டீ போட தான் தெரியாதுனு பார்த்தா, சாம்பார் வைக்கவும் தெரியாதா?" என்று அவரே காய்கறிகளை நறுக்கினார்.

தன்னை ஏதோ வகையில் மட்டம் தட்டுவது போலவே இருக்கும் அவரது பேச்சைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை அவளுக்கு.

அடுத்த ஒரு மணி நேரமும் அவளைத் தனித்துச் சமையல் செய்ய விடாமல், அவளுக்கு எதுவும் செய்ய வராது என்று கூறிக் கொண்டே, "இவ்வளோ பருப்பு போடு, இவ்வளோ காய்கறி போடு, இவ்வளோ சாம்பார் பொடி போடு. இவ்வளோ தண்ணியா சாம்பாருக்கு ஊத்துவ?" என்று அவளுக்குக் கட்டளையிட்டுக் கொண்டே செய்ய வைத்திருந்தார் மீனா.

'என்னைத் தனியா விட்டா இதை விட நல்லாவே சாம்பார் வைப்பேன்' என்று தனக்குள்ளேயே புலம்பியவளாய் தான் அவர் கூறியனவற்றைச் செய்து கொண்டிருந்தாள் சுந்தரலட்சுமி.

அந்த ஒரு மணி நேரத்தில் பல தடவை சுந்தரலட்சுமியின் ரத்த அழுத்தம் ஏறியிறங்கியிருக்க, 'அய்யோ இந்தம்மா கூட எப்படித் தான் குப்பை கொட்ட போறேனோ தெரியலையே! எனக்குப் பொறுமையைக் கொடு இறைவா' என்று புலம்பியிருந்தாள் சுந்தரலட்சுமி.

மகனுக்குக் காலை உணவைப் பரிமாறியவராய், "இன்னிக்கு சமையல் உன் பொண்டாட்டி தான் செஞ்சா! எப்படி இருக்குனு சொல்லு" என்று மீனா கூறியதைக் கேட்டு, சமையலறையில் தனக்கான மதிய உணவை தயார் செய்து கொண்டிருந்த சுந்தரலட்சுமிக்கு, 'நான் சமைக்கலை' என்று கத்த வேண்டும் போல் இருந்தது.

செந்தில் ஏதும் உரைக்காமல் உண்டு விட்டுச் சென்றிருக்க, காலை உணவை உண்ட மீனா, "சாம்பாரை நீ இன்னும் நல்லா வச்சிருக்கலாம். பரவாயில்ல மொத முறையா தானே செய்ற! போகப் போக வந்திடும்" என்று வேறு கூறி அவளின் முறைப்பை வாங்கிக் கொண்டார்.

அன்று மட்டுமல்ல அடுத்து வந்த நாள்களிலும் இப்படியே தான் அவளுடன் இருந்து சமையலறையில் அவளை எதுவுமே தனித்துச் செய்யவிடவில்லை.

என் சமையலறை என்னுரிமை என்பது போன்றே நடந்து கொண்டார். அங்கு ஒரு பொருள் இடம் மாறிப் போனாலும் எண்ணெயில் போட்ட கடுகாய் பொரியத் தொடங்கிடுவார்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாய் ஒரு நாள் அவருக்கு முன்பு எழுந்து சமையலை முடித்து விடுவோம் என்று சுந்தரலட்சுமி திட்டமிட்டு எழுந்த போதும், சமையலறையில் சத்தம் கேட்டதும் எழுந்து இவளுடன் வந்து நின்று விட்டார் மீனா.

காலை சமையலைச் செய்து விட்டு அலுவல் வேலைக்குச் செல்வது என்பது அவளுக்குப் பெரிய களைப்பளிக்கும் வேலையாய் இருக்க, இதில் முன்பு காரில் அலுவலகம் சென்று வந்தவள் இப்பொழுது வெஸ்பாவில் செல்வதில் மேலும் களைப்பாய் உணர்ந்தாள். புத்துணர்வின்றிச் சோர்வுடனேயே அன்றாடம் தன்னுடைய நாளினை தொடங்குவதாய் மாறிப் போயிருந்தது அவளின் வாழ்வு.

அம்மாவை எதிர்த்துப் பேசாதே, மாமா அத்தையை எதிர்த்துப் பேசாதே, அவர்களின் குணம் அப்படித் தான் என ஏற்றுக் கொண்டு அமைதியாக இருந்திடு என எந்தப் பக்கம் தவறு இருக்கிறது என்று விசாரிக்காமல் எப்பொழுதும் தனக்குப் பாடமெடுக்கும் கணவனிடம், சமையலறையில் தான் அனுபவிக்கும் பிரச்சினையை உரைத்தால் உணர்ந்து கொள்வான் என்ற நம்பிக்கை இல்லாமல் போனதால் இதைப் பற்றி ஏதும் அவனிடம் உரைக்கவில்லை அவள்.

ஆனால் இதற்கு வேறு தீர்வை யோசித்தவளாய், ஒரு நாள் செந்திலிடம், "நாம சமையலுக்கு வேலைக்காரங்களை வச்சிக்கலாமா செந்தில்? அத்தைக்கும் இதுலருந்து ரெஸ்ட் கொடுத்த மாதிரி இருக்கும்‌. எனக்கும் தினமும் சமைச்சிட்டு அவசர அவசரமா வேலைக்குப் போற டென்ஷன் குறையும்" எனக் கேட்டிருந்தாள்.

"அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை. நீ என்ன தனியாவா செய்ற? அம்மா தான் கூட உதவிக்கு இருக்காங்களே! அப்புறம் என்ன?" என்று கூறி விட்டான் செந்தில்.

'உங்கம்மா உதவியா இல்ல உபத்திரவமா தான் இருக்காங்க' என்று சொல்ல முடியாமல் வாய்க்குள் முனகியவளாய் அவளே வேலையாளைத் தேட முயற்சித்தாள். வேலையாள் கிடைப்பது அத்தனை சுலபமான காரியம் அல்லவே!

இதற்கிடையில் அவளின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாகப் பறந்திருக்க, மாமியாருடன் மல்லுக்கட்டி மூன்று மாதங்கள் வரையில் தாக்குப் பிடித்தவள் அதற்கு மேல் முடியாமல் ஒரு நாள், "கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு உட்காருறீங்களா அத்தை? நொய் நொய்னு டார்ச்சர் பண்றீங்க. என்னைத் தனியா சமைக்க விட்டா நானே நல்லா சமைப்பேன்" என்று கத்தியிருந்தாள்.

காலை கடைப்பணிக்காகக் கிளம்பிக் கொண்டிருந்த செந்திலின் காதில் தெளிவாய் இந்த வார்த்தைகள் விழவும், சமையலறைக்குள் நுழையும் போதே, "ஆமா நல்லா சமைப்பியே! நான் கூட இருக்கும் போதே நீ சமைக்கிற சாப்பாட்டை வாய்ல வைக்க முடியலை" எனத் தனது தாய் கூறியதைக் கேட்டவனாய் அங்குச் சென்றவன், "ஆமா என்னை மட்டம் தட்டலைனா உங்களுக்குத் தூக்கம் வராதே" என்று கத்திய மனைவியை நோக்கி முறைத்தவனாய், "அம்மாகிட்ட இப்படித் தான் பேசுவியா சுந்தரி! அம்மாகிட்ட மன்னிப்பு கேளு" என்றான்.

மகனைக் கண்டதும் இல்லாத கண்ணீரைத் துடைத்தவராய் மீனா நின்றிருக்க, செந்திலைக் கடுங்கோபத்துடன் பார்த்தவளாய், "நான் ஏன் சாரி கேட்கனும். தினமும் என்னை அவங்க டார்ச்சர் செய்றதுக்கு அவங்க தான் என்கிட்ட சாரி கேட்கனும்" என்ற சுந்தரலட்சுமி, அங்கிருந்து படுக்கையறைக்குச் சென்றிருந்தாள்.

"பார்த்தியாடா! நீ இருக்கும் போதே என்னை மரியாதை இல்லாம பேசுறா பார்த்தியா" என்று மகனிடம் புலம்பினார்.

"ம்ப்ச் அவ ஏதோ கோபத்துல பேசியிருப்பாமா! எனக்குக் கடைக்குப் போக நேரம் ஆகுது. சாப்பிட டிபன் எடுத்துட்டு வாங்க!" என்று தாயிடம் உரைத்து விட்டு முகப்பறையில் உட்கார்ந்து விட்டான்.

அவளை மீறி கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை வைராக்கியத்துடன் துடைத்தவளாய் விறுவிறுவெனக் கிளம்பியவள், வேலைக்குச் சென்றிருந்தாள்.

அன்று மாலை இங்கு வராமல் தாய் வீட்டுக்குச் சென்றாள். செந்தில் இல்லாமல் தனித்து வந்த மகளைக் கண்டு பதறிய செல்வராணி, அவளின் புலம்பலைக் கேட்டு, 'இதுலாம் குடும்பத்துல சகஜம்மா' என்று சமாதானம் செய்தவராய் அன்றிரவே அவளது தந்தையுடன் அவளைச் செந்தில் வீட்டிற்கு அனுப்பியிருந்தார்.

தன்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் தாய் வீட்டிற்குச் சென்றதில் அவள் மீது பெருத்த கோபம் உண்டாக, வீட்டிற்கு வந்தவளிடம் பேசாது முகத்தைத் தூக்கிக் கொண்டு சுற்றினான் செந்தில்.

அன்று மொட்டை மாடியில் படுக்கச் சென்றவனை, "உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்" என்று கூறி தடுத்து நிறுத்தினாள்.

"நான் செம்ம கோபத்துல இருக்கேன் சுந்தரி. இப்ப எதுவும் பேச வேண்டாம்" என்றவனிடம்,

"நான் இப்ப பேசியே ஆகனும்" என்று அவள் கோபத்துடன் சத்தமாய்ச் சொல்லவும்,

"ம்ப்ச் அமைதியா பேசு சுந்தரி. வெளில அம்மாக்கு கேட்கப் போகுது. நீ இப்படிக் கோபத்துல ஏதாவது கத்துவ, அது அம்மா காதுல விழும்னு தான் நமக்குள்ள சண்டை வரும் போதெல்லாம் நான் மொட்டை மாடிக்குப் போய்ப் படுத்துக்கிறது" என்றான்.

"சரி நானும் மொட்டை மாடிக்கு வரேன். எனக்கு இன்னிக்கு பேசியே ஆகனும்" என்றவள் அவன் பதிலுக்குக் கூடக் காத்திராமல் விறுவிறுவென மாடிக்குச் சென்றிருந்தாள்.

அவள் பின்னேயே சென்ற மகனையும் முகப்பறை சோபாவில் படுத்தவாறு பார்த்திருந்த மீனா, 'என்னைப் பத்தி ஏதாவது வத்தி வச்சி என் மகனை என்கிட்ட இருந்து பிரிச்சிடுவாளா? அப்படி எதுவும் நடந்துடக் கூடாதுனு தானே அவளைத் தனியா சமைக்க விடாம நானும் கூடச் சேர்ந்து செய்றேன்' என்று சிந்தித்தவாறு எழுந்து அமர்ந்தார்.

மாடிக்கு வந்து நின்றதும், "என்ன பேசனும் சொல்லு!" என்றவன் கேட்க,

மாடியில் உடலை வருடிய சில்லென்ற காற்றில் சற்று தணிந்தவளாய், "நாம இங்கே நமக்காக ஒரு ரூம் கட்டிக்கலாமா செந்தில்" எனக் கேட்டாள்.

'இது தான் நீ பேச வந்ததா?' என்பது போல் அவளை அவன் பார்த்திருக்க,

"நான் உங்கம்மாவைப் பத்தி என்ன சொன்னாலும், நான் குறை சொல்ற மாதிரி தான் உங்களுக்குத் தோணும். அதனால நான் குறை சொல்ல வரலை. இதுக்கான சொல்யூஷன் என்னனு தான் நான் யோசிச்சேன். நானும் அத்தையும் சேர்ந்து சமைச்சா தானே சண்டை வருது. சமையலுக்கு ஆளு வச்சிக்கலாம்" என்றாள்.

"சரி இதை என்கிட்ட சொல்ல வேண்டியது தானே. எதுக்காக உங்க அம்மா வீட்டுக்கு போன?" கைகளைக் கட்டிக் கொண்டு சுவற்றில் சாய்ந்து குற்றம் சுமத்தும் பார்வையுடன் நின்றவனாய் கேட்டவனை முறைப்புடன் பார்த்தாள்.

"மொறச்சா என்ன அர்த்தம்? பதில் சொல்லு சுந்தரி!" எனக் கேட்டான்.

"உங்க அம்மாவும் அத்தையும் என்னைக் கார்னர் செய்றது உங்களுக்குப் புரியுதா இல்லையா செந்தில்?" எனக் கேட்டாள்.

"நான் தான் சொன்னேனே சுந்தரி. என் அம்மாவுக்கும் அத்தைக்கும் நான் உன்னைக் கட்டிக்கிறதுல விருப்பமில்லை. அதையும் மீறி நான் கட்டிக்கிட்ட கோபத்துல அப்படி நடந்துக்கிறாங்க. நீ அமைதியா இதெல்லாம் கண்டுகாம நல்ல மருமகளா உன்னோட வேலையைச் செஞ்சிட்டு இருக்கும் போது, நல்ல பொண்ணுனு உன்னைப் புரிஞ்சிக்கிட்டு அவங்களே இறங்கி வருவாங்க" என்றவன் சொன்னதும்,

"அப்ப உங்க அம்மாவும் அத்தையும் பிடிக்காத மருமககிட்ட டாக்சிக் பெர்சனா நடந்துப்பாங்க. நான் எல்லாத்தையும் சகிச்சிட்டு வாழனும்னு சொல்றீங்களா? அதெல்லாம் என்னால முடியாது" என்று கோபமாய் உரைத்திருந்தாள்.

"ஜஸ்ட் ஸ்டாப் இட் சுந்தரி! யாரை டாக்சிக் பர்சன்னு சொல்ற? என் அம்மாவையா? மைண்ட் யுவர் வர்ட்ஸ்" என்று கத்தியிருந்தவன் அதிர்ந்து விரிந்த அவளின் கண்களில் தேங்கிய நீரைக் கண்டு அவளுக்கு முதுகைக் காட்டி நின்று கொண்டான். அவனுக்கு உள்ளம் கொதித்த நிலை. இதற்கு மேலும் ஏதேனும் கத்தி விடுவோமோ என்று பயந்தவனாய் தன்னை நிதானப்படுத்த முனைந்தான்.

அவனுக்கு எதிர்திசையில் வானத்தைப் பார்த்தவளாய் திரும்பி நின்றவளின் விழிகளை நிறைத்திருந்த கண்ணீர் பெருகி வழிய, விசும்பியவளாய் நின்றிருந்தாள் சுந்தரலட்சுமி.

பதினைந்து நிமிடங்கள் இருவரும் அப்படியே நின்றிருந்தனர்.

தன்னைச் சமன்படுத்தியவளாய் சுந்தரலட்சுமி அவனருகில் சென்று நின்றாள்.

அவன் அவள் புறம் திரும்பாது அப்படியே வானத்தை வெறித்தவாறு நிற்க,

"நான் அத்தையைக் குறைச் சொல்லனும்னு சொல்லலை செந்தில்" என்றவள் பேசத் தொடங்கவும்,

"இன்னிக்கு இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம் சுந்தரி" என்றான்.

"இல்ல பேசிடலாம் செந்தில். என்னால முடியலை" எனும் போதே மீண்டுமாய் அவளின் கண்களில் இருந்து கண்ணீர் பொங்கியது.

அவள் அழுவது அவனை வேதனைப்படுத்த, தன்னாலேயே உயர்ந்தெழுந்து அவளது கண்ணீரைத் துடைத்து விட்டது அவன் கரம்‌. அவனை அணைத்தவளாய் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

அவள் முதுகை வருடியவனாய் சில நிமிடங்கள் அமைதியாக நின்றிருந்தவன், "நீ நினைக்கிற அளவுக்கு அம்மா கெட்டவங்க இல்ல சுந்தரி. அத்தைப் பேச்சைக் கேட்டு அப்படி நடந்துக்கிறாங்க" என்றான்.

"உங்க அத்தை என்னைப் பத்தி தப்புத் தப்பா போட்டுக் கொடுக்கிறாங்கனு உங்களுக்குத் தெரியுமா?" நிமிர்ந்து அவன் முகம் நோக்கி ஆச்சரிய பாவனையில் அவள் கேட்க,

"அதெப்படி தெரியாம இருக்கும்" என்றான்.

"ஒரு குடும்பத்துல எல்லாரும் நல்லவங்களா இருக்க மாட்டாங்க தானே சுந்தரி. என்கிட்ட உன்னைப் பத்தி என்ன சொன்னா கோபம் வருமோ அதைச் சொல்றது, அம்மாகிட்ட அவங்களுக்கு ஏத்த மாதிரி பேசி விடுறதுனு இதையே தான் வேலையா செஞ்சிட்டு இருக்காங்கனு எனக்குத் தெரியும். அதுக்காகச் சண்டை போட்டுக்கிட்டேவா இருக்க முடியும். கண்டும் காணாம ஒதுங்கிப் போய்டனும். என் மாமா குடும்பத்துக்கிட்ட உன்னை அப்படித் தான் இருக்கச் சொல்றேன்"

அவனை விட்டு விலகி நின்றவளாய், "நமக்கு ஜாதகப் பொருத்தமில்லனு ஜோசியர்கிட்ட பொய் சொல்ல சொல்லிருக்காங்க உங்க மாமா? நம்ம ஹனிமூன்லருந்து வந்த உடனேயே இதை நான் கண்டுபிடிச்சிட்டேன். அதான் அங்கே மறுவீடு போனப்ப அப்படிப் பேசினேன்" என்றாள்.

அவன் முகத்தில் அதிர்ச்சியும் நம்பாத பாவனையும் தென்பட, "சத்தியம் செந்தில். நீங்களே அந்த ஜோசியர்கிட்ட வேணா போய்க் கேளுங்க. உங்களை அவங்க கைக்குள்ள வச்சிக்கனும்னு நினைக்கிறாங்க. நல்லா படிச்சி அதிகச் சம்பளம் வாங்கி நல்ல வேலைல இருக்க என்னை மாதிரி பொண்ணை உங்களுக்குக் கல்யாணம் செஞ்சி வைக்கிறதுல அவங்களுக்கு விருப்பமில்லை. அதான் உங்கம்மாவை எனக்கு எதிராக இப்படி ஏத்தி விட்டுட்டு இருக்காங்க" என்றாள்.

"சரி முடிஞ்சது முடிஞ்சி போச்சு. இப்ப நமக்குக் கல்யாணமும் ஆகிப் போச்சு. இதுக்கு மேல எதுக்கு அதை எல்லாம் தோண்டி துருவிட்டு இருப்பானேன்" என்றவன்,

"நான் முன்னாடியே சொன்னது தான் சுந்தரி. என் மாமா குடும்பத்துக்கிட்ட மூஞ்சை தூக்கி வச்சிட்டு இருக்காம, அமைதியா பொறுத்திட்டு போய்டு. உன்னை அப்படித் தான் இருக்கச் சொல்றேன்" என்றான்.

"அவங்க உங்களை நல்லபடியா வளர்த்ததுக்கு நீங்க அவங்களுக்கு நன்றியோட எல்லாத்தையும் பொறுத்துட்டு இருக்கலாம் செந்தில். ஆனா நான் அப்படி இருக்கனும்னு எந்த அவசியமும் இல்லயே" என்றவளாய் கோபத்துடன் அவனைப் பார்த்தாள்.

அவளை முறைத்தவனாய், "இப்ப நான் என்ன செய்யனும்னு சொல்ற?" எனக் கேட்டான்.

"மொதல்ல வீட்டுக்கு ஒரு வேலையாளைப் பாருங்க. மாடில ஒரு வீடு கட்டுங்க. நாம மாடில இருக்கலாம். அத்தை கீழே இருக்கட்டும். அத்தைக்கும் சேர்த்து இங்கேயே நான் சமைக்கிறேன். கீழ இருக்கக் கிச்சனை அத்தையே வச்சி ஆளட்டும்" என்றாள்.

"எனக்கு இதுல உடன்பாடு இல்லை சுந்தரி. அம்மா என்ன நினைப்பாங்க? ஏற்கனவே நீ வந்து என்னை அவங்கிட்ட இருந்து பிரிச்சிடுவியோனு தான் அவங்களுக்கு பயம். அவங்களைத் தனியா விடச் சொல்றியா?" எனக் கேட்டான்.

"நாம தான் மேலே இருப்போமே. அப்புறம் எப்படி அத்தை தனியா இருக்கிறதா ஆகும்? அவங்களுக்கும் சேர்த்து நானே சமைக்கிறேனும் சொல்றேனே! இது எப்படி குடும்பத்தைப் பிரிக்கிறதா ஆகும்? வீட்டை பெருக்கித் துடைக்க, கூட மாட சமையலுக்கு உதவ, பாத்திரம் தேய்க்க, வேலையாள் இருந்தா மட்டும் போதும். அத்தையோட துணிமணியைத் துவைச்சி கொடுத்து, அவங்களுக்குச் சமைச்சு கொடுத்து நான் பார்த்துக்கிறேன்" என்றாள்.

எந்தவிதத்தில் சொன்னால் அவன் ஏற்பானோ அவ்விதத்தில் யோசித்து வார்த்தைகளைக் கோர்த்து உரைத்திருந்தாள்.

அவன் சிந்திப்பதைப் பார்த்தவளாய், "அப்படியே கார் வாங்கவும் பிளான் செய்யுங்க செந்தில். டூவீலர்ல போய்ட்டு வர கஷ்டமா இருக்கு" என்றாள்.

"முரளி பணம் கொடுத்துட்டா கார் வாங்கிடலாம். அதுக்குத் தான் வெயிட்டிங்" என்றவன் சொன்னதும்,

"கார் இஎம்ஐல வாங்கிக்கலாம். எங்க ஆபிஸ்லயே எனக்கு ஆஃபர் பிரைஸ்ல தருவாங்க. முரளி கொடுக்கிற காசு வச்சி இங்கே ரூம் கட்டிடலாம்" என்றாள்.

சில நிமிடங்கள் ஏதும் பேசாது யோசித்தவாறு நின்றவனிடம், "என்ன யோசிக்கிறீங்க?" எனக் கேட்டாள்.

"அம்மா இதுக்கு என்ன சொல்வாங்கனு தெரியலை. கல்யாணத்துக்குப் பிறகு குடும்பத்தைப் பிரிச்சிட்டனு உன்னை வேற பழிச்சி பேசுவாங்க சுந்தரி" என்றான்.

"பரவாயில்ல! யார் எப்படினாலும் பேசிட்டு போகட்டும். எனக்கு என் நிம்மதி தான் முக்கியம்" என்றாள்.

ஆனால் மீனா இதையே பெரும் பிரச்சினையாக்குவார் என்று எண்ணியிருக்கவில்லை அவள்.

இந்நினைவுகளுடனேயே காலை மீண்டுமாய் உறங்கியிருந்தவள் ஒன்பது மணியளவில் எழுந்தாள்.

"அய்யோ ஆபிஸ் போகனுமே! இந்த அம்மா ஏன் எழுப்பாம விட்டாங்க" என்று பதறியவளாய் எழுந்தவள் தாயை அழைக்க,

"எழுப்ப மனசு வரலைடி. உன் ஆபிஸ்ல இருந்து போன் வந்துச்சு. அப்பா தான் எடுத்து பேசினார். உனக்குச் சிக் லீவ் சொல்லிட்டாரு. நீ குளிச்சிட்டு சாப்பிட வா" என்றார் செல்வராணி.

'ஒவ்வொரு பொண்ணுக்கும் புகுந்த வீடும் இப்படி அமைஞ்சிட்டா வாழ்க்கை எவ்ளோ நல்லா இருக்கும்ல' என்று எண்ணியவாறே படுக்கையில் இருந்து எழுந்தாள் சுந்தரலட்சுமி.
 

Author: Dhakai
Article Title: உனதன்பின் கதகதப்பில் 11
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
222
பிறந்த வீடு வேற
புகுந்த வீடு வேற தான்
பெண்ணின் குழந்தைத் தான் உள்ளது பிறந்த வீடு
பொறுப்புகள் கூடி வருவது புகுந்த வீடு....
பொறுத்து போகுவது கூட
ஆட்களை பொறுத்து தான் வரும்....
தெரிந்தும் அறியாது போல
இருக்கும் செந்தில்

தெரிந்ததால் அவனுக்கு
தெரியவிக்க நினைத்து
தெரிந்தவனை அறிந்து
திகைத்து நின்று....
தள்ளி நின்றாள் தீர்வு கிடைக்குமோ....
தீர்ந்து தான் போகுமோ???
தீர விசாரித்து தீர்வு
தாங்க செந்தில்🤩🤩🤩
 

Dhakai

Member
Joined
Mar 23, 2025
Messages
69
பிறந்த வீடு வேற
புகுந்த வீடு வேற தான்
பெண்ணின் குழந்தைத் தான் உள்ளது பிறந்த வீடு
பொறுப்புகள் கூடி வருவது புகுந்த வீடு....
பொறுத்து போகுவது கூட
ஆட்களை பொறுத்து தான் வரும்....
தெரிந்தும் அறியாது போல
இருக்கும் செந்தில்

தெரிந்ததால் அவனுக்கு
தெரியவிக்க நினைத்து
தெரிந்தவனை அறிந்து
திகைத்து நின்று....
தள்ளி நின்றாள் தீர்வு கிடைக்குமோ....
தீர்ந்து தான் போகுமோ???
தீர விசாரித்து தீர்வு
தாங்க செந்தில்🤩🤩🤩
கதையின் சாராம்சத்தை அழகாய் கவிப்படுத்தியிருக்கீங்க. மிக்க நன்றி சிஸ் ❤️
 

Lakshmi

Member
Joined
Jun 19, 2024
Messages
98
சுந்தரி நல்ல பொண்ணு தான் செந்தில் தான் அதை புரிந்து கொள்ள வேண்டும்.
 

Dhakai

Member
Joined
Mar 23, 2025
Messages
69
சுந்தரி நல்ல பொண்ணு தான் செந்தில் தான் அதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஆமா.. மிக்க நன்றி சிஸ்
 
Top Bottom