• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Mr. மாமியார் 5

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
12
Mr. மாமியார் 5


யண களைப்பு போக தலைக்குக் குளித்த லலிதா, கையில் கிடைத்த சிவப்பு நிற மிடியை அணிந்து தலையில் துண்டுடன் பகலிலேயே அரையிருட்டாக இருந்த அந்த அறையின் ஒற்றை சோஃபாவில் குளிரில் ஒடுங்கியபடி அமர்ந்திருந்தாள்.

திருமணம், சடங்கு, சம்பிரதாயம் என்ற பெயரில் இரண்டு வீட்டுக்கும் சென்றது, ரிஸப்ஷன், குலதெய்வம் கோவில், உடனடி பயணம் என உறக்கமில்லா இரண்டு நாள்களின் விளைவாகக் கண்கள் இரண்டும் கங்குகளைப் போல் எரிந்தன.

நளிரும் நடுக்கமுமாக இருந்தவளின் ஞாபகம் முழுவதும் கணவனே. வாமனமூர்த்தியின் பேச்சில் விஞ்சி நிற்பது சீண்டலா, சீரியஸா எனப் பட்டிமன்றம் நடத்தும் அளவிற்கு லலிதா குழம்பி இருந்தான்.

இரட்டையர் என்பதற்கான அடையாளமாக பவித்ராவிற்கும் வாமனனுக்கும் ஜாடையில் மட்டுமே ஒற்றுமை. மற்றபடி இருவரும் 180° எதிரே இருந்தனர்.


திருமணமாகி மாசமாக இருக்கும் பவித்ரா குழந்தைபோல் ‘பாரும்மா, பாருப்பா, பாரு பாட்டீ’ என வாமனன் மேல் எந்நேரமும் புகார் படித்தாள். ஸ்ரீராமுமே சிரிப்பதும் மைத்துனனுடன் கிண்டலில் இணைந்து கொள்வதுமாக இருந்தான்.

திருமண ஏற்பாடுகள், கேட்டரர், கான்ட்ராக்டர், வரவேற்பு நடந்த ஹோட்டல் பணியாளர்கள் என எல்லோருக்கும் சொல்வதற்கு வாமனனிடம் ஏதாவது இருந்தது.

வரவேற்பில் ஸ்ரீசைலத்தின் பென்சில் ஃபேக்டரி பணியாளர்கள், சீதளாவின் நட்பு வட்டம், வாமனன் மற்றும் பவித்ராவின் பள்ளி, கல்லூரி நண்பர்கள் என திரண்டு வந்திருந்தனர்.

அவர்களது ஃபேக்டரி அதிகாரிகளை ஸ்ரீசைலம் அறிமுகம் செய்கையில், வாமனமூர்த்தியுமே, அவர்களை ஏதோ நீண்டநாள் கழித்து பார்ப்பது போல் சிரித்து கை குலுக்கினான்.

தந்தை ரங்கராஜன் புதுமாப்பிள்ளை சொல்வதை எல்லாம் ஆமோதித்து, அகலமாகச் சிரித்தவண்ணம் இருக்க, தன்னுடனோ, தனக்குக் கீழோ வேலை செய்பவர் என்று ஒருவரைக் கூட வாமனன் கை காட்டவில்லை.

கூட்டம் குறைந்து, நண்பர்களுடன் புகைப்படம் எடுக்கையில் வேகமாக வந்து, பரிசைக் கொடுத்துவிட்டு ஓரமாகப் போய் நின்றுகொண்ட ஒரு பெண்ணை நட்புகள் அனைவரும் ஒவ்வொருவராக அழைத்தும் வர மறுத்தாள். வாமனனுக்கு சற்று பின்னே நாற்காலியில் அமர்ந்திருந்த பவித்ராவை அழைக்க வந்த ஸ்ரீராமிடம், வாமனன் “ஸ்ரீ, அவ இங்க வந்ததே எனக்குப் பிடிக்கலை, நான் அவளை கூப்பிடவும் இல்லை. அவளை உருவுறதை விட்டு இன்னும் ரெண்டு நிமிஷத்துல இங்க வந்தா ஃபோட்டோ எடுக்கலாம், இல்லைன்னா நான் சாப்பிடப் போயிடுவேன்”

ஸ்ரீராம் “ஏன்டா மச்சான் இப்டி பண்ற, நீ வா பவி”

பவித்ராவை தன்னிடம் இழுத்த வாமனமூர்த்தி “அவ எங்கேயும் வர மாட்டா” என்றவன், பலப்பல யூகங்களுடன் குறுகுறுவென பார்த்த லலிதாவிடம் “வா, சாப்பிடப் போகலாம்” என நகர்ந்துவிட, அந்தப் பெண்ணை அந்தரத்தில் விட்டு எல்லோரும் ஓடிவந்து ஃபோட்டோவிற்கு போஸ் கொடுத்தனர்.

கையில் உணவுடன் புதுமணத் தம்பதிகள் இருவரும் காலியாக இருந்ந ஒரு லவ்சீட்டில் எதேத்சையாக அருகருகில் அமர்கையில், ஒரு பக்கம் அவன் மீது முழுதும் உராய்ந்ததில், லலிதா பட்டென எழப்போக, வாமனமூர்த்தி குறுக்கே கை நீட்டித் தடுத்தான்.

எதிர்பாராத அவனது வேகத்திலும் அழுத்தத்திலும் தொடுதலிலும் சிறிய அதிர்வுடன் அமர்ந்த லலிதாவைக் கண்ட இருவரது நண்பர்கள் குழாமும் ‘ஓஹ்….ஹ்ஹோ’ என்றதும் முகம் சிவந்தவளின் பார்வை வட்டத்தில் மீண்டும் விழுந்தாள், அந்தப் பெண்.

கறுத்துக் கசங்கிய முகத்துடன் தன்னையும் கணவனையும் கண்ணிமைக்காது பார்த்தவளைக் கண்ட லலிதா, வாமனமூர்த்தியைப் பார்க்க, அவனோ தட்டில் இருந்த ருமாலி ரொட்டியுடன் மல்யுத்தம் செய்து கொண்டிருந்தான்.

வரவேற்பு முடிந்தவுடன், மறுநாள் அதிகாலையே திருச்சி அருகே இருந்த ஸ்ரீசைலம் குடும்பத்தின் குலதெய்வமான உறையூர் வெக்காளியம்மன் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்பதால் மணமக்கள் மாப்பிள்ளையின் வீட்டிற்கே சென்றனர்.

சம்பிரதாயத்திற்காக உடன் வரப் புறப்பட்ட லலிதாவின் பெற்றோரை “மணி பத்தாகுது அங்கிள், நீங்க வீட்டுக்கு வந்துட்டு பெஸன்ட் நகர் போக நைட் ஒரு மணியாகும். எதுக்கு வீணா அலைச்சல், ஆன்ட்டீ எவ்ளோ டயர்டா இருக்காங்க பாருங்க” என்ற வாமனமூர்த்தி, ஸ்ரீசைலத்திடம் “சொல்லுங்களேம்ப்பா”

அதிர்ச்சியுடன் பார்த்த லலிதாவை ‘நான் இல்லை மா’ என்ற செய்தியை கண்களில் தாங்கி சங்கடத்துடன் பார்த்த ஸ்ரீசைலம் “ஆமா சம்பந்தி, நாங்க பாத்துக்கறோம், காலைலயும் நாங்க சீக்கிரம் கிளம்பணும்” என்றார்.

வீட்டுக்கு வர, மீண்டும் ஒருமுறை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். ஸ்ரீசைலம், ஸ்ரீராம் இருவரும் வீட்டில் தங்கி இருந்த உறவினர்களை படுக்கையுடன் பென்ட் ஹவுஸூக்கு அழைத்துச் சென்றனர்.


எல்லோரும் ஓய்வறை செல்வதும் உடைமாற்றுவதும், அங்குமிங்கும் நடக்கையில் புதுப் பெண்ணைக் கண்டு சிரிப்பதுமாக இருந்தனர்.

வாமனமூர்த்தி சோஃபாவில் அமர்ந்து தன் மொபைலில் ஆழ்ந்திருக்க, லலிதா பரமேஸ்வரி, உலகின் உச்சபட்ச தர்மசங்கடத்தில் (Height of embarrassment ) செய்வதறியாது நின்றிருந்தாள்.

அவன் மட்டும் பேசாமல் இருந்திருந்தால், இப்போது அவளது பெற்றோர் உடன் இருந்திருப்பர். இப்படி தனியே நிற்க வேண்டி இருந்திருக்காது.

வாமனமூர்த்தியின் முதுகில் ஓங்கி ஒரு அடி வைக்கும் உந்துதலை சிரமப்பட்டு அடக்கினாள். கூடவே ஓய்வறைக்கு செல்வதையும்…


உலக அதிசயமாக பாட்டியும் சீதளாவும் சேர்ந்து நீண்ட நிமிடங்களாக தாழ்ந்த குரலில் பவித்ராவிடம் எதையோ சொல்ல, சீதளாவின் தங்கை அதை ஆமோதித்துக் கொண்டிருந்தாள்,

சீதளா மகனை அருகில் வருமாறு அழைக்க, வாமனன் “என்னம்மா?”

“இங்க வாடா”

வாமனமூர்த்தி லலிதாவைத் தாண்டி அன்னையை நோக்கிச் செல்ல, பவித்ரா லலிதாவிடம் வந்தாள்.

“லலிதா, வந்து… உன்னோட… ஃபர்…நப்ஷல்… ம்… இப்ப மாத்திக்கன்னு வாங்கின புடவை எந்த பெட்டில இருக்கு?“

படக்கென திரும்பியவன் “...ம்மா, இதுக்குதான் இந்த குசுகுசு மீட்டிங்கா, மணி பதினொண்ணே கால். காலைல எழுந்தது. நாளைக்கு வேற ட்ராவல் பண்ணனும். போய் படுங்கமா. ஏய் பவி, இன்னும் போய் தூங்காம என்ன செய்யற, எங்க அந்த தடியன் ஸ்ரீ…”

பவித்ரா முறைக்க, சீதளா “ஷ்… வாமனா, எல்லாரும் இருக்காங்க, நம்ம வீட்டு மாப்பிள்ளைடா…”

“மொதல்ல எனக்கு ஃப்ரெண்டு, அப்புறம்தான் உனக்கு மாப்பிள்ளை, உன் பொண்ணுக்கு….”

ஸ்ரீசைலமும் ஸ்ரீராமும் உள்ளே நுழைந்தனர். வாமனமூர்த்தி போட்ட அதட்டலில் அவனது சித்தி மாடிக்கு ஓடிவிட்டாள்.

ஸ்ரீராம் “என்னாச்சு பவி, ஏன் ஸ்டீம் இன்ஜின் எஃபெக்ட்ல மூச்சு விடற, உங்கண்ணன் வேலையா, மச்சான், என் பொண்டாட்டிய என்னடா சொன்ன?”

“உன்னைத்தான்டா சொன்னேன். முதல்ல நீ பவியை கூட்டிட்டு தூங்கப் போ. ரிஸப்ஷன் மேடையிலயே அவ டயர்ட் ஆயிட்டா. கேட்டா ஒன்னுமில்லன்னு சமாளிப்பு”

ஸ்ரீராம் “உடம்பு முடியலையா பவி, ஏன் சொல்லல?”

பவித்ரா “நீ வேற ஸ்ரீ, கொஞ்சம் கிறுகிறுன்னு வந்தது, வேற ஒண்ணுமில்ல. லலிதா, உன் புடவை…”

“நீ தூங்கப் போ பவி. ஸ்ரீ, டேக் ஹர் இன்சைட். பாட்டி, அம்மா, அப்பா, எல்லாரும் போய் படுங்க”

பாட்டி “சும்மா கத்தாதடா. கல்யாணப் பையன், அடக்கமா இல்லாம… சாஸ்திரம், சடங்கு, சம்பிர…”

வாமனன் “லலிதா பரமேஸ்வரி மேடம், இங்க வாங்க”

புதுக் கணவன் எல்லோரையும் ஆட்டி வைப்பதையும், வரவேற்பில் அத்தனை பரபரப்பிலும் பவித்ராவின் மாற்றங்களைக் கவனித்து, அக்கறையாகப் பேசியதையும் வாயைப் பிளந்தபடி, இன்று தன் முதலிரவு என்பதைக் கூட மறந்து சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்த லலிதா, அவனது உடனடி அழைப்பில் திருதிருவென விழிக்க, அருகே சென்ற வாமனமூர்த்தி. “வா” எனக் கையைப் பிடித்து பூஜையறைக்கு இழுத்துச் சென்றான்.

சிறிதாக எரிந்த விளக்கைத் தூண்டியவனின் சைகையில் இருவரும் நமஸ்கரித்தனர். வெளியில் வந்து, பாட்டி, அப்பா, அம்மாவையும் வணங்கினர்.

“சந்தோஷமா, ஒத்துமையா இருங்க” - ஸ்ரீசைலம்.

“சீக்கிரமே எனக்கு ஒரு கொள்ளுபேரன் வரணும்” பாட்டி.

வாமனமூர்த்தி “ஒண்ணு போதுமா பாட்டீ?”

லலிதா பார்வையைப் பொருத்த இடம் தேட, சீதளா தொண்டையை செருமினாள்.

அசராத வாமனன் “பாட்டி, இப்ப ஓகே வா, போய் படு”

“வாமனா, பட்டு வேட்டி, புடவை…”

ஸ்ரீசைலம் “அம்மா, அவங்களை ஃப்ரீயா விடு. சீதளா, வா போகலாம்.

மூவரும் அவரவர் அறைக்குள் செல்லும் வரை அங்கேயே நின்றவன், தன் அறையை நோக்கி நடக்க, லலிதா நின்ற இடத்திலேயே கால் மாற்றி நின்றாள்.

‘தன் குடும்பத்தினர் மீது எத்தனை அக்கறை இவனுக்கு’

அறை வாசல் வரை சென்றவன்,
“ஹலோ லலிதா பரமேஸ்வரி மேடம், உங்களுக்கு ஹால்லதான் ஃபர்ஸ்ட் நைட் வேணும்னா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை”

வாமனமூர்த்தி தன் அருளுரையைத் தொடங்கியதுமே சுற்றும் முற்றும் பார்த்தவள், ஒரே ஓட்டமாக ஒடி அவனது வாயைப் பொத்த, வாமனனின் கடைசி நாலு வார்த்தைகள் லலிதாவின் வலது உள்ளங்கையில் குறுகுறுத்துப் புதைந்தன.

அறைக்குள்…

மல்லிகையும் அதன் மணமும் நீக்கமற நிறைந்திருந்த அறையில் ஏசியின் உபயத்தால் நீலகிரி எக்ஸ்பிரஸில் ஏறி ஊட்டியே சென்னை வந்திருந்தது.

முன்பே அவஸ்தையில் இருந்த லலிதா, ஓய்வறையின் கதவைத் தேட,

“டூவே டூ மினிட்ஸ்ல நான் வந்துடுவேன். உன் பெட்டி, பையெல்லாம் கப்போர்ட்ல இருக்கும் பாரு” என்ற வாமனன், மாற்றுடையுடன் உள்ளே புகுந்துகொண்டான்.

‘இதை எப்ப, யாரு இவனோட ரூம் அலமாரில வெச்சது?’

லலிதா யோசனையுடன் தன் பெட்டியில் மாற்றுடையைத் தேட, முதலிரவுக்கென வாங்கிய பட்டுப் புடவை மேலாக இருந்தது.

‘இப்ப இதை கட்டிக்கணுமா, வேண்டாமா?’

‘ஒரு மேக்ஸி குடுத்தா போதும், ஒரு வாரம் தூங்குவேன்’

தாழ் நீக்கும் சப்தம் கேட்க, அரை டிராயரும், காலர், கலர் இரண்டுமே இல்லாத டீ ஷர்ட்டுடன் வாமனமூர்த்தி வரும் முன்னே சந்திரிகா சோப் மணத்தது.

லலிதாவின் கையில் இருந்த புடவையைப் பார்த்தவன் விசிலடித்தான்.


“மேடம் ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல”

பையைக் குடைந்து கையில் கிடைத்ததை அள்ளிக்கொண்டு லலிதா குளியலறைக்குள் நுழைந்தாள்…

“கவனமா போ”

‘பாத்ரூம் போறதுல என்னடா கவனம்?’

***************


முப்பத்தைந்து முழு நிமிடங்களுக்குப் பின் வெளியில் வந்த லலிதா அத்தனை சோர்ந்திருந்தாள்.

ஃப்ளாஸ்க்கில் இருந்த பாலை தம்ளரில் ஊற்றி மனைவியிடம் நீட்டிய வாமனமூர்த்தி, அவள் குடித்தபின் ”பாத்ரூம்ல…”

“அந்த போர்டுல இருந்த எல்லாம் செஞ்சாச்சு, போதுமா?” என்ற லலிதாவிற்கு எதிரில் நின்றவனைக் கொலை செய்யும் ஆசை எழுந்தது.

ஒரு மனுஷன் சுத்தமா இருக்கலாம். வீட்டை, பாத்ரூமை சுத்தமா வெச்சிருக்கலாம். ஆனாலும் இப்படியா?

உள்ளே நுழைந்ததுமே அதன் தூய்மை லலிதாவை மிரட்டியது. டாய்லெட்டை உபயோகிக்கவே தயங்கும் அளவிற்கு சுத்தமாக இருந்தது என்பதே உண்மை.

மதியம் உபயோகித்த வேறொரு ஓய்வறை இப்படி இல்லை.

ஏதோ, காலையில்தான் கிருஹபிரவேசம் ஆனது போல், வெள்ளை வெளேரென ஒரு தூசு, தும்பு இல்லாது, பாத்ரூம் க்ளீனிங்கில் பி ஹெச்டி வாங்கியதுபோல்…

சுவரில் க்ளாம்ப் ஒட்டப்பட்டு, விதவிதமான அளவுகளில் பிரஷ்ஷுகள் தொங்கின. ஒரு கம்பியில் மூன்று விதமான கைபிடித் துணிகள் காய்ந்தது. கண்ணாடி குவளையில் மனிபிளான்ட், ஓடோனில், சுத்தம் செய்யத் தேவையான சகலவிதமான தளவாடங்கள்…

‘இவனுக்கு ஓசிடியா (OCD) இருக்குமோ?”

‘என்னவோ போடா மாதவா’ என வெண்ணிற சிங்காதனத்தில் அமர்ந்தவளின் எதிரே, ‘Bathroom Etiquette’ என்ற பேனர் மாட்டப்பட்டு, ‘இருப்பதற்கு’ முன்னும் பின்னும் செய்ய வேண்டியவற்றை பட்டியல் இட்டிருந்தது.

லலிதாவின் வீடும் சுத்தமாகத்தான் இருக்கும். ஏன், மற்ற வேலைகளில் எப்படியோ, தன் அறையின் ஓய்வறையை லலிதா எப்போதுமே நீட்டாகத்தான் வைத்திருப்பாள். ஆனாலும், இவன்… ஸாரி, கொஞ்சம் ஓவர்தான்!

‘...ம்மா, என் நிலமைய பாத்தியா ஃபர்ஸ்ட் நைட்ல பாத்ரூமைத் தொடைச்ச முதல்… சேச்சே, ஒரே பொண்ணு நானாதான் இருப்பேன்’

அம்மா எனவும் நீண்ட நேரமாக ஒரு ஃபோன் கூட செய்யவில்லை என்ற நினைவு வர, பரபரப்பான லலிதாவின் கண்கள் அங்குமிங்கும் எதையோ தேட,

“அந்த டேபிள் மேல இருக்கு பார்”

“ஹான்… என்னது?”

“உன் மொபைலைதானே தேடற?:

“ம்” என்றவள் ஒரே எட்டில் மொபைலை எடுத்து ஆன் செய்ய “என்ன செய்யப் போற?”

“அம்மாக்கு கால்…”

“வாட்…. இன்னிக்கு நைட், இந்த இடத்துல இருந்து, இந்நேரத்துல நீ கால் பண்ணினா உங்கம்மா என்ன நினைப்பாங்க?”

“என்ன நினைப்பாங்க?”

“ஷப்பா… சரி நீ பேசு”

வாமனமூர்த்தி சொன்னது புரிந்து மனதில் உறைத்தாலும், அதை ஏற்க முடியாது நின்றிருந்தாள் லலிதா.

நேரத்துக்கு வீட்டிற்கு வரவில்லையெனில், எங்கே இருக்கிறாள் என்பதை அழைத்துப் பேசவில்லையெனில் கவலைப்பட்ட தன் பெற்றோர், இனி கண்ட நேரத்தில் தான் அழைத்தாலோ, வீட்டிற்குச் சென்றாலோதான் கவலைப்படுவர் என்பதை ஒத்துக் கொள்ளாது முரண்டியது மனம்.

‘இவன் மட்டும் இவன் வீட்டுல, இவன் ரூம்ல, பாத்ரூம் போகக்கூட ரூல்ஸ் போடுவான், நான் எங்கம்மா கிட்ட பேசக்கூட நேரங்காலம் பார்க்கணுமா, நல்லா இருக்குடா உங்க நியாயம்’

“ஹலோ, லலிதா பரமஸ்வரி மேடம்”

‘இவன் ஒருத்தன்’

“என்ன யோசனை?”

திடீரென நினைவு வந்தவளாக “யாரு அந்தப் பொண்ணு?”

“எந்தப் பொண்ணு?”

“ரிஸப்ஷனுக்கு வந்து துக்கியா (சோகமா) இருந்தாளே…”

“ஓ…வனிதாவா, பவித்ராவோட க்ளோஸ் ஃப்ரெண்ட்”

“...”

லலிதாவின் அருகில் வந்த வாமனமூர்த்தி “நீ கற்பனை பண்ற மாதிரி எதுவும் இல்லை. என்னைப் புடிச்சவங்களை எல்லாம் நான் கல்யாணம் செஞ்சுக்க முடியுமா, அதுவும் என் சிஸ்டரோட ஃப்ரெண்டும் எனக்கும் சிஸ்டர் மாதிரிதான்’

லலிதாவின் ‘இவ்வளவு நல்லவனாடா நீ?’ பார்வைக்கு வாமனன் புன்னகைத்ததில் மின்னல் வெட்ட, நல்ல வேளையாக லலிதாவிற்குத் தனக்கு அன்று முதலிரவு என்பது நினைவு வர, அவனது அண்மையில் வெம்மை பரவியது போல் உணர்ந்தாள்.
ஒரே சமயத்தில் உடல் தொய்வது போலவும் இறுகுவது போலவும் தோன்றியது.

வாமனன் தன் இரு கைகளையும் மெதுவே விரித்து “ஹக்?”

“ம்…ம்ஹும்”

“ஏன்?”

“வேணாம்”

“அதான் ஏன்?”

“முன்னப் பின்ன தெரியாத…”

அவன் பார்வையில் லலிதா பேச்சை நிறுத்தினாள்.

“என்ன, வாங்க பழகலாம்னு சொல்லப்போறியா?”

“...”

“தெரியலைன்னா தெரிஞ்சுக்கோ”

“...”

“லிஸன் லலிதா, அரேன்ஞ்ட் மேரேஜ்ல முதல்ல பிடித்தம்தான் இருக்கும். அதுக்கு தோற்றம், பணம், குடும்பம்னு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஆனா, உறவும் நெருக்கமும்தான் அன்பை, காதலை தரும்”

‘இவன் என்ன தத்துவமெல்லாம் சொல்றான். பார்த்து, பழகி, பேசி, தானா ஒரு சந்தர்ப்பத்துல பிடிச்சுப் போய்…’

லலிதாவின் முகம் பிரதிபலித்ததைப் படித்த வாமனன் “உனக்கு எத்தனை நாள் வேணும்?”

“...”

“ஸே, ஒருமூணு மாசம்னு வெச்சுப்போம். நமக்கு லவ் மேரேஜ் கிடையாது. மூணு மாசம் கழிச்சும் உனக்கு லவ் வரலைன்னா, விட்டுட்டு போயிடுவியா?”

“...”

“நாளைக்கு கோவிலுக்குப் போய்ட்டு வந்ததும் ஹனிமூன் போகணும். அங்க போய் ரெண்டு பேரும் ஆழ்நிலைத் தியானம் பண்ணுவோமா?”

“...”

வாமனமூர்த்தியை ஏறிட்டுப் பார்த்த லலிதாவிற்கு அவனது முகம் வெகு அருகில் தெரிய, தன்னைச் சுற்றி இருந்த வலுவான கரங்களை உணர்ந்தாள்.

‘இது எப்படா?’

“ஐஸ்க்ரீம் வாங்கினா சூட்டோட சூடா சாப்பிடணும். இல்லைன்னா உருகி ஊத்திடும்டா”

“சூடான ஐஸ்க்ரீமா?”

“ம்… ட்ரை பண்றியா?” என்ற வாமனமூர்த்தி, அவள் இதழில் பதிந்த வேகத்தில், லலிதாவிற்கு சில்லென்ற தீப்பொறி ஒன்று பாடல் வரி நினைவுக்கு வந்த வேகத்தில் மறந்தும் போயிற்று.

*****************

அந்த ஒற்றை சோஃபாவில் லலிதாவுடன் நெருக்கியடித்து அமர்ந்த வாமனமூர்த்தி

“அழகிக்கு என்ன யோசனை?”

“அழகியா?”

“ம்…லலிதான்னா அழகான, வசீகரமானவள்னு அர்த்தம், இல்லையா?”

“இப்டிதான் ஏதேதோ பேசி, என் பர்மிஷன் இல்லாம…”

“எதுக்குடீ பர்மிஷன், ஐ’ம் தி பிரௌட் ஓனர், யூ நோ”

“ஓனரா, ஹலோ, நான் ப்ராப்பர்டி இல்ல ஸார், மனுஷி”

“யார் இல்லைன்னா, ஆனா, உன் அசையும் , அசையா சொத்துக்கெல்…”

“ச்சீய்… பே ஷரம் (வெக்கம் இல்லாதவன்)”

“யாரு நான், அதுசரி”

தேநிலவுக்கு அவர்கள் வந்திருந்த இடம் , அருணாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் தவாங் (Tawang).

மே மாதத்திலும் பனி மூடிய சிகரங்கள், நினைத்தபோதெல்லாம் மழை, பசேலென்ற புல்வெளிகள், தெளிவான கோபால்ட் நீல வானம், பத்து டிகிரி இரவுகள் என மிரட்டியது இயற்கை.

“கிட்டவே வரமாட்டேன்ன, இப்ப என்னை ஹீட்டர் மாதிரி யூஸ் பண்ற” என்று சிரித்தான் வாமனன்.

தமிழில் கவரிமா எனப்படும்
யாக் (Yak) மீது சவாரி செய்தனர்.அந்தச் சூழலில், லலிதா “இதுதான் சிவனோட நந்தி வாகனமோ?”

“இருக்கலாம்”

இயற்கை பின்னணியில் அமைந்த, இந்தியாவின் மிகப்பெரிய மஹாயான புத்தவிஹாரமான தவாங் மொனாஸ்ட்ரி, அந்த மலைகளோடே நிலைத்து நிற்பதான பிரமை எழுந்தது.
அதன் குட்டி குட்டி சாதுக்களை (monks) பார்க்க பிரமிப்பாக இருந்தது.

***************

வாமனனும் லலிதாவும் தங்கி இருந்த இடம் ஹோட்டல், ரிஸார்ட், ஹோம் ஸ்டே என எதிலும் சேராது தனித்து நின்றது. பழைய சினிமாக்களில் வரும் ட்ராவலர்ஸ் பங்களா போல் இருந்தது. ஆணும் பெண்ணுமாக நால்வர் வேலை செய்தனர். ஆனால், இவர்கள் மட்டுமே தங்கி இருந்தனர்.

தட்டுக்கு வருகையில் சூடாக இருக்கும் ரொட்டி, பாதி சாப்பிட்டதுமே குளிரில் விறைத்து வரட்டியாக மாறியதில், லலிதாவிற்கு தாவாங்கட்டையை தனியாக வலித்தது.

“மும்பைகாரியான உனக்கே இப்டி இருந்தா, எனக்கு எப்படி இருக்கும்?”

“நானா இங்க வரணும்னு கேட்டேன்? இல்ல, எங்க ஹனிமூன் போகலாம்னு என்னைக் கேட்டீங்களா?”

ஏனோ, மனதில் அவன் இவனென்று ஏகவசனத்தில் பேசிய லலிதாவால் வாமனனை ஒருமையில் அழைக்க முடியவில்லை.

“கஷ்டப்பட்டு ஐஎல்பி வாங்கி,
( ILP - Inner Line Permit) சர்ப்ரைஸா இங்க கூட்டிட்டு வந்தா, ஏன்டீ சொல்ல மாட்ட?”

காய்ந்து இறுகிய ரொட்டியுடன் திணறிக் கொண்டிருந்தவளிடம் “இப்ப நீ ஓகேவா, இல்ல டாக்டர் கிட்ட போகலாமா?” எனவும் முகம் சிவந்தவளைக் கண்டு, வாமனமூர்த்தி அன்றைய நினைவில் வெடித்துச் சிரித்தான்.

இருவரும் கௌஹாத்தி ஏர்போர்ட்டில் இருந்து டாக்ஸியில் பயணித்து தவாங் வந்து சேர்ந்தபோது கடிகாரத்தில் நேரம் என்னவோ மாலை நாலரைதான். ஆனாலும், கிழக்கென்பதால் இரவே வந்து விட்டது.

கெஸ்ட்ஹவுஸுக்குள் நுழைந்ததுமே, லலிதா

“நான் ஒன்னு சொல்லணும், என்னை தப்பா நினைக்கக் கூடாது. நான் எப்போதும் இப்படி இல்லை…” என பலமாக அஸ்திவாரம் போட்டாள்.

“எதா இருந்தாலும் சொல்லு”

சற்றே தயங்கியவள் “அது, மூணு, நாலு நாளா விருந்து சாப்பாடு, சரியா தூங்காதது எல்லாம் சேர்ந்து எனக்கு வயிறே சரியா இல்லை. பயங்கர கேஸ். நான்…நான்…”

வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்த வாமனமூர்த்தி “நான் கூட உனக்கு ப்ளட் கேன்ஸரோ, நீ காலையோ கையையோ கழட்டி குடுத்துடுவியோன்னு பயந்தேன். இப்பதான் நிம்மதியா இருக்கு. நீ தைரியமா ரூமை பொல்யூட் பண்ணு”

*****************

இருவரும் சென்னை திரும்பிய இரண்டாம் நாள், லலிதா மீண்டும் அலுவலகம் செல்லத் தொடங்கினாள்.

லலிதா வழக்கம்போல் சிலநேரம் ஒர்க் ஃப்ரம் ஹோம் என வீட்டில் இருந்த அநேக சமயங்களில் வாமனமூர்த்தியும் வீட்டில்தான் இருந்தான்.

லலிதா செய்யும் சின்னச் சின்ன விஷயங்களையும் கவனித்தான்.

‘சோஃபாவில் காலை வைத்து உட்காராதே’

‘தலைமுடியை குப்பைல போடு’

‘சீப்பை க்ளீன் செய்’

‘கப்போர்ட் துணியை சரி செய்’

‘அம்மா வீட்ல இல்லை, பாட்டிக்கு காஃபி குடு’

‘ஆறு மணியாச்சு பாரு, விளக்கேத்து’

சும்மா சொல்லக்கூடாது, சீதளா, லக்ஷ்மியை விட நன்றாக, விதவிதமாகச் சமைத்தாள். என்ன, பாஸ்தாவும் பனீரும் பாட்டிக்குதான் பிடிக்கவில்லை.
மாமியாருக்கு தினமும் பாராட்டு படித்தபடி, ரசித்து, ருசித்து திவ்யமாக சாப்பிட்டாள் லலிதா.

திருமண வாழ்க்கை, வேலை, அவ்வப்போது அம்மா வீடு என இரண்டரை மாதங்கள் செல்ல, ஆவணி மாதம் முதல் தேதியன்று, ஸ்ரீசைலம் இருந்த அதே தளத்தில் எதிரே இருந்த ஃப்ளாட்டிற்கு வாமனமூர்த்தியும் லலிதாவும் தனிக்குடித்தனம் செய்ய பால் காய்ச்ச முடிவானது.

“ஏன்?” - லலிதா.

“ஏன்னா, நம்ம வேலையை நாமதான் பார்க்கணும்” - என்றான் வாமனமூர்த்தி.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: Mr. மாமியார் 5
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Joined
Jun 19, 2024
Messages
5
😍😍😍

ரெண்டு பேரும் ஹனிமூன்ல ஆழ்நிலை தியானம் பண்ணாங்களா? 🙈🙈🙈

கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது…
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட…
ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம்…
ஆழ்நிலையில் அரங்கேற


 

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
54
வாமன் நல்லா training தர லலிதாவுககு. நல்ல டிரள் மாஸ்டர் நீ.
so Mr. மாமியாராக அவதாரம்
 

Goms

New member
Joined
Apr 28, 2025
Messages
15
வெற்றிகரமா 5வது அத்தியாயத்துல கண்டு பிடிச்சுட்டோமில, யார் Mr மாமியார் என்று?🤗🤗
மாமியார் நல்ல மாமியார் தான், மகன் தான் Mr மாமியார்...😃😃😘😜
லலிதா உன்ன நினைச்சா பாவமா இருக்கு, எப்படி சமாளிக்கபோற??😟😌🙄
 
Top Bottom