• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Mr. மாமியார் 4

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
13
Mr. மாமியார் 4


திகாலை நான்கு மணிக்கே லலிதாலயத்தின் விளக்குகள் அனைத்தும் ஒளிர, வாசலில் நீர் தெளித்துப் பெரிய கோலமிட்டிருந்தனர்.

அறையில் ஏசி, ஃபேன் இரண்டும் உச்சகதியில் இயங்க, நடுநாயகமாய் நின்றிருந்தாள் லலிதா பரமேஸ்வரி.

அழகு நிலையத்திலிருந்து வந்திருந்த இரண்டு பெண்கள் தங்கள் தளவாடங்களோடு தாக்குதலுக்குத் தயாராக இருந்தனர். அதில் ஒருத்தி கடைசியாக லலிதாவின் புடவையை ஒருமுறை சரிபார்க்கச் சொல்லி, ஒரு ஸ்டூலில் அமரச் செய்தாள்.

தாமதமான தூக்கம், மூன்றரை மணிக்கே எழுந்து எண்ணெய் வைத்துத் தலைக்குக் குளித்தது எல்லாம் சேர, மசங்கலான கண்களை இழுத்தது உறக்கப் பசை. பசிக்க வேறு செய்தது.

‘இந்த அம்மா எங்க ஆளையே காணும்?’

கேள்வி முடியும் முன் காஃபியுடன் வந்த லக்ஷ்மி “லலிதா, தலையை நல்லா துவட்டினியா, இப்ப பின்னினா, கழட்ட குறைஞ்சது ரெண்டு, மூணு மணியாவது ஆகும். சளி, ஜுரம்னு இழுத்து விட்டுக்காத”

“ட்ரையர் போட்டாச்சு மேம்” - அ.நி.பெ.

“லக்ஷ்மீ….” என்ற கணவரின் குரலில் “சீக்கிரம் ஆகட்டும், அஞ்சரைக்கெல்லாம் அவங்க பெண்ணழைக்க வந்துடுவாங்க. சரியா ஆறு மணிக்கு கிளம்பணும்” என்ற லக்ஷ்மி, “லலிதா, உன் ஃப்ரெண்ட்ஸை எழுப்பி ரெடியாகச் சொல்லு” என்று வெளியேறினாள்.

மும்பையில் இருந்து பிராச்சியும் ஏக்தாவும் வந்திருந்தனர். இதில் ஏக்தா எல்கேஜி முதல் இன்ஜினீயரிங் வரை லலிதாவுடன் ஒன்றாகப் படித்தவள்.

அறைக்கு வெளியிலும் கல்யாண வீட்டின் பரபரப்பு இருந்தது.

திருமணத்திற்கென தாய்மாமனாக அமெரிக்காவில் இருந்து லலிதாவின் தம்பி குடும்பத்தோடு வந்திருந்த, தாத்தாவின் அறையில் தங்கி இருந்தனர்.

ஹாலுக்குக் குடி பெயர்ந்த தாத்தா ரத்னத்திற்கென தற்காலிகமாக ஒரு திவான் வாங்கி இருந்தனர்.

ரங்கராஜனின் அக்கா மட்டும் முந்தைய நாள் இரவே வந்து விட்டார். மற்றவர்கள் நேரே திருமணம் நடக்கும் இடத்திற்கு வந்து விடுவர்.

அமைதியான அந்த நேரத்தில், வாசலில் கார் வந்து நின்ற சத்தம் கேட்கவும், அனிச்சையாக கடிகாரத்தைப் பார்த்த லலிதாவை, ராக்கோடியை வைத்து இறுகப் பின்னிக் கொண்டிருந்த பெண் “அசையாதீங்க மேடம்”

‘கொஞ்சம் லைட்டா, வித்யாசமா, மாடர்னா ஹேர் ஸ்டைல் பண்ணிக்கறேன்னு சொன்னா யாரும் கேட்கலை’

அந்த யாரும் என்பது ‘I want a conventional and ethnic wedding. எனக்கு பாரம்பரியமான, சிம்பிளான கல்யாணம்தான் வேணும். இன்னொரு தரம் அந்த மாதிரி நினைச்சாலும் நம்மால செய்ய முடியாது. காட் இட், ஸோ, பீ ஏ குட் கேர்ள்’ என்ற வாமனமூர்த்தியே.

அவனை நினைத்ததுமே மொபைலில் வந்து விழுந்தவனது மெஸேஜ் “ரெடியா?” என்றது.

கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த லலிதாவின் கொலீகும் டீம் மேட்டும் சென்னை வந்தது முதல் அவளது ஆகச் சிறந்த தோழியுமான ஸ்வேதாக்குத் திருமணமாகி இரண்டு வயதில் மகன் இருக்கிறான்.

எப்படி திட்டமிடுகிறாள், வீட்டையும், குழந்தையையும், ஆஃபீஸையும் எப்படி பேலன்ஸ் செய்கிறாள் என்பது அவளுக்கே வெளிச்சம். ஸ்வேதா ஒரு பர்ஃபெக்ஷனிஸ்ட். பேச்சிலும் தோற்றத்திலும் அத்தனை ஆளுமையும் அமெரிக்கையும் இருக்கும். லலிதாவை ஒத்த வயதுதான், சொல்லப் போனால், சில மாதங்கள் இளையவள்.

“என்ன மேடம், ஆல் செட் டு கோ?”

என்றபடி உள்ளே வந்தவளைக் கண்டதுமே லலிதாவிடம் ஒரு உற்சாகமும் அதனோடு கூடவே சமீபமாக மனதில் தோன்றும் முணுமுணுப்பும் எழுந்தது. அதில் லேசான பொறாமையும் உண்டு.

‘ஒருநாளை பார்த்தாப்போல சலிக்காம நீ மட்டும் எப்படி இத்தனை வேலை செய்யற?’

‘அண்ணா, மாமியார், மாமனாரோட உனக்கு சண்டையே வராதா?’


முன்பு விளையாட்டாகக் கேட்ட கேள்வியை இந்தக் கல்யாணம் முடிவான பிறகு தீவிர பாவனையில் கேட்டவளைக் கூர்ந்த ஸ்வேதா “உனக்கு என்ன குழப்பம் லலிதா, அவரைப் பிடிச்சுதானே கல்யாணத்துக்கு சரின்னு சொன்ன?”

“...”

“பதில் சொல்லு லலி…”

“திட்டாத ஸ்வீட்டீ, எனக்கே புரியல”

“வாட்?”

“சேச்சே, நீ நினைக்கற மாதிரி எல்லாம் இல்ல ஸ்வே…”

“அப்புறமென்ன, நீங்க ரெண்டு பேரும் பேசிக்கறீங்களா இல்லையா?”

“ம்… பேசறோம். ஆனா… பட்…”

லலிதாவால் தன் உள்ளக் கிடக்கையை வார்த்தைகளில் வெளிப்படுத்த இயலவில்லை. முதலில் அவளது பயங்களை, எண்ண ஓட்டத்தை அவளாலேயே முழுதாக உணர முடியவில்லை.

ஜில் தட்டிப் போய் கிளுகிளுப்பாக யோசிப்பதற்குப் பதில், சண்டை வந்தா, சரிப்பட்டு வரலைன்னா… என்றே யோசனை ஓட, அந்தப் பழியையும் வாமனமூர்த்தி மீதே போட்டாள்.

கலகலப்பாக பேசுபவனுக்கு காதலில் ‘கா’ வும், ரொமான்ஸின் ‘R’ம் வரவில்லை என்று குறை பட்டவளுக்கு, கிண்டலும் நக்கலுமாக அலட்சியம் தெறிக்கும் அந்த சீண்டல்தான் அவனது காதலின் மொழி என்று புரியவில்லை.

அதைவிட, அவனது தோற்றத்தை, அறிவை, சிரிப்பை, ஆங்கிலத்தை, பல் வரிசையை, அவன் பேசுகையில் உடல் மொழியை எடைபோடுவதிலும், பேசியவற்றில் ஏதாவது உள்குத்து, கேலி,இருக்கிறதா என அவனுடைய வாக்கியங்களுக்கு இடையே படிப்பதிலுமே கவனம் செலுத்தும் லலிதா, வாமனனின் வார்த்தைகளில் அவள் எதிர்பார்க்கும் அந்த மந்திரச் சொற்களையும் மாய உணர்வையும் தான் வெளிப்படுகிறோமா என்று யோசிக்கவே இல்லை.

இத்தனை ஆதங்கப்படுபவள், வாமனனின் அழைப்பை, தகவலைக் கூட விட்டு விடலாம், அவனது அம்மாவோ, அக்காவோ பேசினால் கூட தான் ஏன் பரபரக்கிறோம் என்றும் உணரவில்லை.

“ஹலோ மேடம்…, இன்னும் புகையே போடல, அதுக்குள்ள கனவா?” என்றாள் ஸ்வேதா.

“வா ஸ்வீட்டீ, ராகவ் அண்ணா….?”

“உங்கண்ணா ரிஸப்ஷனுக்கு வருவார்”

“சின்ட்டு குட்டி?”

“அவனும்தான். அவனை நான் பாத்துக்கறேன், நீ போய் என்ஜாய் பண்ணுன்னு தண்ணி தெளிச்சு விட்டுட்டார். மீ ஃப்ரீயோ ஃப்ரீ”

“இவ்வளவு எர்லி மார்னிங்ல எப்டி வந்த?”

“ஷாஃபர் (Chauffeur) ராகவ்தான் ட்ராப் பண்ணினார்”

“அடிப்பாவி”

“அது அவர் கடமைடீ லலி, அதை விடு, நான் இப்ப என்ன செய்யணும்னு சொல்லு”

“கொஞ்சம் லாஸ்ட் மினிட் பேக்கிங் இருக்கு. அந்த ப்ளாஸ்டிக் பேக்ஸ்ல இருக்கறதை எல்லாம், இந்த பெட்டில மாத்தணும்”

“டன்” என்ற ஸ்வேதா, கட்டி இருந்த பட்டோலா புடவை சற்றும் கலையாது மூன்று பைகளில் இருந்தவற்றை பெட்டியில் அடக்கினாள். பரபரவென கலைந்து கிடந்தவற்றை சீர் செய்தாள்.

இதற்குள் விழித்து எழுந்து அமர்ந்திருந்த ஏக்தாவும் பிராச்சியும் லலிதாவின் புதிய தோழியை சற்றே பொறாமையுடன் பார்த்தனர்.

“இதுக்குப் பிறகு மாத்த வேண்டிய புடவை, மத்ததெல்லாம் தனியா பேக் செஞ்சியா லலி?”

“முஹூர்த்தப் புடவை மட்டும்தானே ஸ்வே, அவங்க கிட்டதான் இருக்கு”

“அது சரி, நீங்கதான் திடீர் நிச்சயம் பண்ணிக்கிட்டீங்களே”

“நான் இல்ல, அவர்தான்…”

“அந்த சுவர் எவர்டீ?” என்றவளைப் பாராது தலையைக் குனிந்து கொண்ட லலிதாவின் முகத்தில்… அட, ஆமாம், வெக்கமேதான்!

தன் இடது கை மோதிர விரலில் ஒற்றை வைரம் மின்னிய மோதிரத்தைப் பார்த்தவளுக்கு, ஐந்து நாளைக்கு முந்தைய நினைவு.

அடுத்த நாள் முதல் திருமணத்திற்கான விடுப்பு தொடங்க இருக்க, அன்று ஒர்க் ஃப்ரம் ஹோமில் இருந்தாள் லலிதா. அந்த ப்ராஜெக்டில் அவளது பங்கை முடித்து அன்றே ஒப்படைக்க வேண்டும்.

திடீரென மதிய வேளையில் அழைத்த வாமனமூர்த்தி “தூங்கலையா, உடனே ஃபோனை எடுத்துட்ட?”

ஏற்கனவே கடைசி நேரத்தில் ப்ரோக்ராம் ரன் ஆகாத கடுப்பில் இருந்தவள் “ம்ப்ச்… இப்ப என்ன வேணும் உங்களுக்கு”

“...”

ஆறேழு நிமிடங்கள் வரை நீடித்த வாமனனின் அழுத்தமான அமைதியில், லலிதா “ஸாரி” என்ற பிறகு, அவன் இணைப்பைத் துண்டித்து விட, லலிதாவை பயம் பிடித்துக் கொண்டது. பயம் அவனை நினைத்து அல்ல, அம்மா லக்ஷ்மியை நினைத்துதான்.

லலிதாவிற்கு வழக்கமாக வரும் நாளில் பீரியட் வராமல் நான்கு நாள்கள் அதிகம் சென்றிருக்க, தாயும் மகளும் கைனகாலஜிஸ்ட்டிடம் சென்றனர்.

“ஒரு பிரச்சனையும் இல்ல, அதிக வெயில்னால கூட இருக்கலாம். கல்யாண டென்ஷனா இருக்கலாம். இரண்டு நாள் இந்த மருந்தை சாப்பிடுங்க.. கரும்பு, மாதுளை ஜூஸ் குடிச்சுட்டு வெயிட் பண்ணுங்க. வந்துடும்”

“தேங்க்ஸ் டாக்டர்” என லக்ஷ்மி எழுந்து கொள்ள “ஒரு நிமிஷம்” என்ற மருத்துவர்,

“உங்க உட்பியும் நீங்களும் என்ன பிளான் பண்ணி இருக்கீங்க?”

அவர் கேட்டதன் பொருள் புரியாது, ஒரு கணம் உண்மையிலேயே முழித்த லலிதா “குறிப்பா எதுவுமில்ல டாக்டர்”

அதே மருந்துச் சீட்டில் மளமளவென ஒரு மாத்திரையின் பெயரை எழுதி “குழந்தையைத் தள்ளிப் போடணும்னா இந்த மருந்தை உபயோகிங்க. அதுலயே இன்ஸ்ட்ரக்ஷன் இருக்கும்”

“தேங்க்ஸ் டாக்டர்” என்றவள், ஃபீஸுடன் பத்திரிகையையும் கொடுத்துவிட்டு வந்தாள்.

வீட்டுக்கு வந்ததுமே, லக்ஷ்மி “அந்த டாக்டர் குடுத்த கண்ட கண்ட மாத்திரையைத் தின்னு உடம்பைக் கெடுத்துக்காத லலிதா. இருபத்தாறு வயசாச்சு. சட்டுபுட்டுனு குழந்தை பெத்துக்கற வழியைப் பாரு, சொல்லிட்டேன்”

திடீரென டாக்டர் சொன்னதையே எதிர்பாராதவள், அம்மாவும் வெளிப்படையாகப் பேசியதில் முகம் சிவக்க “ஏம்மா, ஏன்?”

“என்ன ஏன், என்னடீ ஏன், எவளோ ஒரு டாக்டர் கேக்கலாம், நான் சொன்னா என்ன?”

“சரி, சொல்லு”

“...”

“உனக்குப் புரியுதா இல்லையாம்மா, அவனைப் பார்த்தே ரெண்டு வாரம்தான் ஆகுது. அதுக்குள்ள நீ வேற…”

“...”


“இல்ல, தெரியாமதான் கேக்கறேன், சப்போஸ், எனக்கு ஒரே வருஷத்துல சீக்கிரமே குழந்தை பிறக்குதுன்னே வை, அதுக்கப்புறம் அவனுக்கும் எனக்கும் ஒத்து வரலைன்னா, கொஞ்ச நாள்ல அவனை எனக்குப் புடிக்கலைன்னா…?”

அன்று வரை மகளிடம் அடிப்பதுபோல் கையை பாவனையாக ஓங்க மட்டுமே செய்த லக்ஷ்மி, மகளின் கையை நகங்கள் அழுந்தப் பற்றியவள்,

“விதி வலியதுன்னு வாயை பொத்திக்கிட்டு இருக்கணும்”

“..ம்மா…”

“குடிக்கறானா, அடிக்கறானா, உதைக்கறானா, உன் சுயமரியாதைக்கு ஆபத்தா, திரும்பி வா, நாங்க இருக்கோம். அதை விட்டு அவன் எனக்கு ஆமாஞ்சாமி போடல, ஆடி கார் வாங்கலைன்னெல்லாம் காரணம் சொன்ன…”

அரண்டு போன லலிதா “கூல் மா, கூல்.ஒரு பேச்சுக்கு…”

“பத்து நாள்ல கல்யாணம், நல்லதா பேசிப் பழகு. இப்ப வா, சாப்பிடலாம்”

அம்மாவிடம் வாங்கிக் கட்டிய நினைவின்றி, என்ன நினைப்பான், சொல்வான் என்ற கவலையின்றி இயல்பு போல் பேசிவிட்டு, இப்போது இது என்னாகுமோ என்ற எண்ணம் அரித்தது. நீண்ட நேரம் அப்படியே அமர்ந்திருந்தவள், சூடாக ஏதாவது குடித்தால் தேவலாம் போல இருக்கவும், அறையை விட்டு வெளியில் வர, காலிங் பெல் ஒலித்தது. ரங்கராஜன்.

“ஹாய் டாடீ, என்ன திடீர்னு?”

“சொல்றேன், அம்மா எங்க?”

“ரூம்ல, டீ வேணுமாப்பா?”

“நீயா போடப் போற?”

தந்தையின் குரலில் இருந்த கிண்டலில் “டா..டீ” என்று சிணுங்கியவள், அடுக்களைக்குள் செல்ல, ரங்கராஜன் அவரது அறைக்குள் சென்றார்.

அலுவலகத்திலிருந்து அழைப்பு வர, டீயைக் கொடுத்துவிட்டு தனது அறைக்குள் வந்து விட்டாள். தட்டிக் கொட்டி, கெஞ்சிக் கதறியதில், மாலை நாலு மணிக்குள் போனால் போகிறதென ப்ரோக்ராம் ரன் ஆகிவிட, கடையை ஏறக்கட்டிவிட்டு உறங்கிப் போனாள்.

அம்மா லக்ஷ்மியின் குரலைத் தவிர, வேறு யாரோ அழைப்பது போலிருக்க, கஷ்டப்பட்டு கண்களைத் திறந்தால், பவித்ரா நின்றிருந்தாள்.

“ஹாய், வாங்க”

“ஹாய் லலிதா, உனக்கு ஒரு சர்ப்ரைஸ்”

“?!?!”

“எழுந்து ஃப்ரெஷ் ஆயிட்டு, இந்த புடவையை கட்டிக்கிட்டு வா, நான் வெளில வெய்ட் பண்றேன்”

புடவையின் மேல் வெற்றிலை பாக்கு, பூ, வாழைப்பழம், மஞ்சள் கிழங்கு எல்லாம் இருந்தது.

அவள் சென்றதும் “இவங்களை இங்க ஏம்மா கூட்டிட்டு வந்த?”

“இன்னைக்கு நாள் நல்லா இருக்குன்னு வீட்டோட நிச்சயம் பண்ணிடலாம்னு தோணி, உங்கப்பாவை கேட்டாங்களாம். அவரும் சரின்னு சொல்லி, எல்லாம் ரெடி. அவங்களும் வந்தாச்சு”

“மா… எல்லாரும் வந்தாச்சா, யூ மீன்…”

சிரித்த லக்ஷ்மி “மாப்பிள்ளை இல்லாம நிச்சயமா, சீக்கிரம் ரெடியாகு லலிதா”

‘கடவுளே, இதைச் சொல்லவா மதியம் கால் பண்ணினான்?’

‘நான்தான் சொதப்பிட்டேனா?’

‘காலைல முதல் மெஸேஜ்லயே இன்னைக்கு என்ன டே தெரியுமான்னு கேட்டானே, இதானா அது?’

‘பரவாயில்ல, கோவத்துல ரெண்டு நாளாவது எங்கூட பேச மாட்டான்னு பார்த்தா பரிசம் போட வந்துட்டானே!’

ஆழ் நீலத்தில் இருபுறமும் ஜரிகையும், பழைய அன்னபக்ஷியில் புட்டா போட்ட பட்டுப்புடவை லலிதாவின் கோதுமை நிறத்திற்குப் பொலிவு சேர்த்தது. வெண் முத்துச் சரத்தை அணிந்து, பொட்டு வைத்துக் கொண்டாள்.

‘அன்னிக்கு இதையா வாங்கினோம்?’

உள்ளே வந்த லக்ஷ்மி “அழகா இருக்குடீ லலிதா” என்றபடி, தலையில் பூ வைத்து, வெளியில் அழைத்துச் செல்ல, திகைத்தாள்.


முப்பது பேருக்கு மேல் கூடி இருந்தனர். மணை போடப்பட்டிருக்க, பூஜைக்கான சாமான்களுக்கு எதிரே அமர்ந்திருந்த ஐயர் தேங்காயில் மஞ்சளைத் தடவிக்கொண்டிருந்தார்.

தலையைக் காட்டிவிட்டு மாமியார் வீட்டுக்குச் சென்றுவிட்ட அமெரிக்கா மாமாவும் குடும்பத்தோடு ஆஜர்.

வாமனனின் பார்வையை உணர்ந்தவள், விழிகளை சுழற்ற, அவளது தந்தையுடன் பூஜையறைக்குள் நின்றிருந்தான்.

லலிதாவை மேலிருந்து கீழாக கண்களால் ஒருமுறை ஸ்கேன் செய்தவன், திரும்பி தன் பேச்சைத் தொடர்ந்தான். அவனது கையைப் பற்றிக்கொண்டு, நன்றி தெரிவிக்கும் பாவனையில் இவளது தந்தை. இருவரது முகத்திலும் தீவிர பாவம்.

‘இவங்க ரெண்டு பேரும் அப்படி என்னத்தை சீரியஸா பேசறாங்க? ஏதோ ஃப்ரெண்டு மாதிரி பேசறான், என்னோட அப்பாடா அது!’

திடீரென ‘ஒருக்கால் வரதட்சணை, நகைன்னு நிறைய கேக்கறாங்களோ, அதை முடிவு செய்யத்தான் இந்த திடீர் நிச்சயமோ? அப்படி ஏதாவதுன்னா, இந்த நிச்சயம், கல்யாணம் எதுவுமே வேணாம்னு சொல்லிட வேண்டியதுதான். தேவைப்பட்டா போலீஸுக்கு ஃபோன் பண்ணி…”

“வணக்கம் மேடம், நாள் ஃபுல்லா நல்ல தூக்கம் போல”

காதருகில் கேட்ட குரலில் அதிர்ந்து திரும்ப… நல்லவேளை, எல்லார் முன்பும் அவன் மீது மோதவில்லை. காக்கி பேன்ட், வெள்ளை சட்டையில் அத்தனை அருகே நின்றிருந்தவனைக் கண்டு மூச்சடைத்தது.

“அங்காள பரமேஸ்வரி மேடம், ஸ்டெடியா நில்லுங்க”

‘வாட், அங்கா…ள…’

கோபமாகத் திரும்பியவள், வாமனமூர்த்தி கண்களைச் சிமிட்டவும், திருதிருக்க, ‘சுக்லாம்பரதரம் விஷ்ணும்’ என மணியடித்தபடி மந்திரத்தைத் தொடங்கினார் ஐயர்.

ஐயர், விநாயகர் பூஜை, மாலை, சந்தனம், குங்குமம், லக்னப் பத்திரிக்கை என முறையான நிச்சயதார்த்தம். சற்றே குட்டையான, பழைய கால வைர முகப்பு வைத்த இரட்டை சரம் ஒன்றை அணிவித்தார் சீதளா. ஜானகி பாட்டியுடையதாம். வாமனனின் ஃபேவரிட் நகையாம். அன்று வாங்கிய மோதிரங்களை மாற்றிக்கொண்டனர்.

தரமான கேட்டரரிடமிருந்து உணவை தருவித்திருந்தனர். கீழே விருந்தினர்கள் அனைவருக்கும்
பந்தி நடக்கையில் மாடிக்கு அழைத்துச் சென்றவன், எடுத்த எடுப்பில் “யாரு அந்த சதீஷ்குமார்?”

லலிதாவும் “யாரு சதீஷ்குமார்?”

“அதை நீதான் சொல்லணும்”

“எனக்கு அந்தப் பேர்ல யாரையுமே தெரியாது?”

“அப்ப இது யாரு?” என்றவன் காட்டிய இன்ஸ்டாகிராம் பக்கத்தைக் கண்டு அதிர்ந்தாள்.

லலிதா வேண்டாமென நிராகரித்தும், சமூக வலைத் தளங்களிலும் ஃபோனிலும் விடாது தொடர்ந்து இம்சை செய்தவன்தான் அந்த சதீஷ் குமார். அவனை பிளாக் செய்து, அன்ஃப்ரெண்ட் பண்ணி என விலகியே ஆறு மாதங்களுக்கு மேலாகிறது. அவனை சந்தித்ததே இருபது × 2 நிமிடங்கள் இரண்டு முறைதான். இத்தனைக்கும் நன்கு படித்து, நல்ல வேலையில் இருப்பவன்.

இப்போது தன் இன்ஸ்டா பேஜில், அவனது பெற்றோர்களுக்கு ரங்கராஜன் அனுப்பிய லலிதாவின் புகைப்படத்துடன் அவனது படத்தை இணைத்து இன் ரிலேஷன்ஷிப் என்று ஸ்டேட்டஸ் வைத்திருந்தான்.

“அடப்பாவி, சீட், ராஸ்கல், ஐ’ல் ரிபோர்ட் திஸ்… டாடீஈஈய்ய்யிப்ப்”

“மூச், சத்தம் வந்தா பாரு” என்றவன், அவளது வாயை இறுகப் பொத்தி இருந்தான். திமிறினாள். விடுவித்தான்.

லலிதா மூச்சு வாங்க முறைக்க, வாமனமூர்த்தி காதைப் பிடித்துக் கொண்டான்.

“ப்ச், இட்ஸ் ஓகே, நான் கீழ போறேன், அப்பாகிட்ட சொல்லி, அவனை என்ன பண்றதுன்னு…”

“உங்கப்பாக்கு தெரியும், அவனை விடு, இன்னிக்கு என்ன டேன்னு கண்டு புடிச்சியா?”

“நம்ம எங்கேஜ்மென்ட் டே”

“தப்பு”

“லவர்ஸ் டே இல்லன்னு தெரியும். மதர்ஸ் டே, ஃபாதர்ஸ் டே, டாக்டர்ஸ் டே, … ம்… தெரியல”

“மெதுவா யோசி, இப்ப வா போகலாம்”

“ம்…” என்றவள் அசையாது நிற்க, “எனி பிராப்ளம் மேடம்?”

“நத்திங்”

‘ஒரு நிமிஷம்” என்ற வாமனமூர்த்தி நகர்ந்து அருகில் வர, லலிதா “என்ன?” என்றது மியூட்டில் ஒலித்தது.

“மோதிரத்தைக் காட்டு”

அவளுக்கு வலப்புறம் நின்றிருந்தவன், இடது பக்கம் வந்து நின்று, தன் வலது கை சுண்டு விரலை அவளது இடது கையோடு கோர்த்து உயர்த்திப் பிடித்து, குறிப்பிட்ட கோணத்தில் மொபைலில் ஃபோட்டோ எடுத்தவன் “இதை அனுப்பி வைக்கறேன். எந்தெந்த மீடியால இருக்கியோ, எல்லாத்துலயும் எங்கேஜ்ட்னு ஸ்டேட்டஸ் வை, புரியுதா?”

“ம்…”

“என்ன இழுவை?”

“உங்க ஃபோட்டோ?”

“இது போதும்”

‘ஒரு ஃபோட்டோ போட்டாதான் என்ன, மனசுல பெரிய டாம் க்ரூயிஸ்னு நினைப்பு’

“63, அதுவா உன் டேஸ்ட்”

“என்ன?”

“டாம் க்ரூய்ஸோட வயசு. மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு சத்தமா முனகிட்ட”

“...”

மீண்டும் வாமனமூர்த்தி “என்ன டேன்னு தெரிஞ்சுதா?”

“ம்ஹும்”

“போடீ”

கீழிருந்து ஸ்ரீராமின் “வாம்ஸ் மச்சான்” கேட்க, படிகளில் இறங்கினர்.

தாத்தா ரத்னம் ஓய்வெடுக்கச் சென்றுவிட, லக்ஷ்மியும் ரங்கராஜனும் வீட்டை ஒதுங்க வைத்தனர். தளர்வான இரவு உடையில் தலைமுடியைத் தூக்கிக் கட்டியபடி, தன் குஷனில் அமர்ந்த லலிதாவிடம், லக்ஷ்மி “வேடிக்கை பாக்கறதுக்கு உதவி செய்யலாம்ல?”

“என் எங்கேஜ்மென்ட்டுக்கு நானே வேலை செஞ்சா எப்டிம்மா?”

“இல்லைன்னா மட்டும், கழட்டி வீசற காரியக் கப்பல் பாரு நீ” என்ற லக்ஷ்மி குளிக்கச் சென்றாள்.

“பாரு டாடீ, இந்த அம்மா ருமினேட் (ruminate- அசைபோடுதல்) பண்ணவே விட மாட்டேங்கறாங்க”

“விடுடா, அப்பா ஃப்ரெஷ் ஆயிட்டு வரேன், நீ போய் சூடா டீ போட்டு கொண்டு வா”

தொலைக்காட்சித் திரையின் மௌனமான அசைவுகளின் வெளிச்சத்தில், ஏசியின் குளுமையில், அலுப்புப் போக, சூடாக உள்ளிறங்கியது இந்தியாவின் தேசிய பானம்.

மொபைலைக் கூட ஆன் செய்யாது, நிச்சயம் நடந்த வேகத்தை, விதத்தை, சம்பந்தி வீட்டினரின் பெருமையை, மாப்பிள்ளையின் கம்பீரத்தை பேசிய பெற்றோரின் வாய் பார்த்தாள் லலிதா.

ரங்கராஜன் “என்ன இருந்தாலும், மாப்பிள்ளைக்கு சின்னவயசு, இன்னிக்கே எங்கேஜ்மென்ட் பண்ணனும்னு சொன்னாலும், பெரியவங்களும் ஒத்துழைக்கணுமே”

“அதைச் சொல்லுங்க. மாப்பிள்ளைக்கு கிஃப்ட் பிடிச்சதா?”

ரங்கராஜன் “அவசரம்டீ லக்ஷ்மி உனக்கு, அவர் வீட்டுக்கு போய்தானே திறந்து பார்க்கணும்?”

லலிதா “என்ன திறந்து பார்க்கணும், அதான் நகைக்கடை மாடல் மாதிரி மோதிரம், செயின், பிரேஸ்லெட்டுனு இங்கேயே எல்லாத்தையும் மாட்டி விட்டாச்சே டாடீ?”

லக்ஷ்மி “மரியாதையா பேசு லலிதா, அவங்களா கேட்டாங்க, நாங்கதானே ஆசைப்பட்டு வாங்கினோம். ஏன், அவங்க பாட்டி நகையை பேத்திக்கு மட்டுமே தராம, உனக்குப் போடலை, அதை வேணாம்னு சொல்றதுக்கென்ன?”

“நானா கேட்டேன்?”

“கொழுப்புடீ… உனக்கெல்லாம் நல்லா இடிக்கிற மாமியாரா…”

“ஸாரி மம்மி, திருமதி சீதளா ஸ்ரீசைலம், அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டாங்க”

ரங்கராஜன் “ரெண்டு பேரும் கொஞ்சம் சும்மா இருக்கீங்களா, ஏம்மா லலிதா, நிஜமாவே என்ன கிஃப்ட்டுனு உனக்குத் தெரியாதா? ஏன் லக்ஷ்மி, நீ அதை அவகிட்ட காட்டலையா?”

“எனக்கு எங்கங்க நேரம்?”

“என்ன லக்ஷ்மி நீ, அது ஒன்னுமில்லடா, நம்ம செல்வா மாமாவை விட்டு மாப்பிள்ளைக்காக ஒரு RADO வாட்ச் வாங்கிட்டு வரச் சொல்லி இருந்தேன்…”

“ரேடோவா, எதுக்கு டாடீ, நீ உனக்கு கூட வாங்கிக்கலை”

“என் மாமனார் வாங்கித் தரலைடா”

லக்ஷ்மி நொடிப்புடன் “எழுப்பி வேணா சொல்லட்டுமா?”

“சும்மாடீ, ரேடோவாவது, ரோலக்ஸாவது. வாட்ச் என்ன பெரிய வாட்ச்? மாமனார் ரத்னமே எங்கிட்டதான் இருக்கார்”

லக்ஷ்மி “கடைசீல நீங்களும் சொல்லிக் காட்டிட்டீங்க இல்ல. நான் நாளைக்கே என் தம்பி கிட்ட…”

எழுந்து மனைவியின் அருகில் அமர்ந்த ரங்கராஜன் “ஏய், விளையாட்டுக்கு சொல்றதெல்லாம் சீரியஸா எடுத்துப்பியா, என்னைத் தெரியாதா உனக்கு?” என சமாதான முயற்சியில் இறங்க, லக்ஷ்மி மேலும் முறுக்கிக் கொள்ள…

லலிதா “ஹலோ கைஸ், நான் இன்னும் இங்கதான் இருக்கேன்”

லக்ஷ்மி “உள்ள போ”

ரங்கராஜன் “குட்நைட் லலிதா”

கடுப்புடன் “துரோகீஸ்” என்றபடி எழுந்து சென்றவளை நிறுத்தியது, தந்தையின் கேள்வி.

“லலிதா, மாப்பிள்ளைக்கு நீ என்ன கிஃப்ட் குடுத்த?”

“நான் என்ன குடுக்கணும்?”

லக்ஷ்மி “ஏன்டீ, எல்கேஜிலயே கிஃப்ட் இல்லாம பார்ட்டிக்கு போக மாட்டேன்னு அடம் புடிப்ப. அஞ்சு நாள்ல கல்யாணம். வுட்பீயோட பொறந்த நாள், அதுவாவது ஞாபகம் இருக்கா…”

‘ஷக்ஸ்…! சரியான புத்தூடீ நீ லலிதா. எத்தனை தரம் கேட்டான், அதைப் பத்தி நீ யோசிக்கவே இல்லையே’

“அவன் எத்தனை யோசிச்சு, இன்னிக்கே எங்கேஜ்மென்ட் வைக்கணும்னு சொல்லி எனக்கு க்ளூ கொடுத்து…. ஊஃப்ப்…டோட்டல் சொதப்பல் பை தி கிரேட் லலிதா பரமேஸ்வரி’

‘நான் விஷ் பண்ணுவேன்னு ரொம்ப எதிர்பார்த்திருப்பானோ?’

‘பின்ன, இது மாத்திரம் உன்னோட பொறந்தநாளா இருந்து அவன் மிஸ் பண்ணி இருந்தா, என்ன ஆட்டம் காட்டி இருப்ப நீ’

விரைவில் கணவனாகப் போகிறவனின் பிறந்த நாளைக் கூட தெரிந்துகொள்ளவில்லை என்றால்… காதல், ஊதல் எல்லாம் வேண்டாம். அவன் மீது அக்கறையோ, மரியாதையோ, ஈடுபாடோ கூட இல்லை என்றல்லவா அர்த்தம்?

லலிதாவை வாமனமூர்த்தியை, அவனது குறைந்தபட்ச எதிர்பார்ப்பை, அலட்சியம் செய்து விட்டதில் குற்றவுணர்வு அழுத்தியது.

லலிதா அவளது குடும்ப வழக்கப்படி, இதை உடனடியாகப் பேசித் தீர்க்க நினைத்தாள்.

நேரத்தைப் பார்க்க ஒரு மணி. வாமனன் ஆஃப்லைன் சென்று இருபத்தி ஏழு நிமிடங்கள் ஆகி இருந்தது. தூங்கி இருப்பானோ?

ஐந்து மணிக்கு அலாரம் வைத்துவிட்டு ஏதேதோ உருப்படி இல்லாத குருட்டு யோசனைகளை உருட்டினாள்.

லலிதா உறக்கத்தில் ஆழும் முன் எழுந்த ‘எந்த சமூக வலைத்தளத்திலும் இல்லாத வாமனமூர்த்திக்கு சதீஷ்குமாரைப் பற்றித் தெரிய வந்தது எப்படி என்ற கேள்வியை உடனடியாக மறந்து போனாள்.

மறுநாள் காலை ஆறுமணி.

மொபைல் ஒலித்து நின்றதில் விழித்த வாமனமூர்த்தி, மெஸேஜை திறக்காமலே லலிதாவின் குட்மார்னிங்கை பார்த்துவிட்டுத் தூக்கத்தைத் தொடர்ந்தான்.

அலைபேசி விடாது அதிரவும், எரிச்சலுடன் எடுத்து, யாரென்றே பார்க்காமல் “கட் தி ஃபோன்” என்று கிட்டத்தட்ட குரைத்தான்.

மீண்டும் அழைப்பு வர கெட்ட வார்த்தையில் திட்டிக்கொண்டே ஏற்க, அவனைப் பேசவிடாது “கொஞ்சம் வெளில வாங்களேன்” என்றாள் லலிதா.

டெரஸ்ஸில் இருந்து பார்க்க, சற்றுத் தள்ளி எதிர் சாரியில் காருடன் நின்றிருந்தாள். அவசரமாகத் தயாராகி, எட்டரை நிமிடத்தில் கீழே சென்று “என்னாச்சு, இந்த நேரத்துல இங்க என்ன செய்யற, தனியா ஏன் வந்த?” என கேள்வித்தாளை நீட்டினான் வாமனமூர்த்தி.

பதிலுக்குக் கை நீட்டியவள் “ஸாரி அண்ட் பிலேட்டட் ஹேப்பி பர்த்டே”

“எப்டி தெரிஞ்சுது, யார் சொன்னா?”

“அப்பா”

“சரி வா, வீட்டுக்கு போகலாம்”

“ஐயோ, யாருக்கும் தெரியாம வந்திருக்கேன். அம்மாக்கு தெரிஞ்சா கீமாதான். நான் வரேன், பை”

“கிஃப்ட் எங்க?”

“ரெண்டு நாள்ல வரும்”

பவித்ராவும் ஸ்ரீராமும் அமேஸானில் வந்து டீ டேபிளில் பிரித்து வைக்கப்பட்டிருந்த பரிசைச் சுற்றி சுற்றி வந்து சிரிக்க, வாமன மூர்த்தியும் இணைந்து கொண்டான்.

மூவரையும் வேடிக்கை பார்த்தபடி, கம்பீரமாக வீற்றிருந்தது, அந்த தாழங்குடை.


**************

பவித்ராவிற்கு காலை வேளையில் மசக்கை படுத்துவதால் பெண்ணை அழைக்க சீதளாவும் ஸ்ரீசைலமுமே வந்திருந்தனர். கூடவே சீதளாவின் தங்கையும்.

ஸ்வாமி, தாத்தா, பெற்றோர் என வணங்கி, சம்பிரதாயமாகக் கிளம்பியவளுக்கு சட்டென கால் துவண்டு, வயிறு குழைந்தது. எல்லாவற்றையும் கலைத்துவிட்டு, உள்ளே ஓடிவிடலாம் போலிருக்க, மகளின் கண்கள் பிசுபிசுத்ததைக் கண்ட ரங்கராஜன் அருகில் வந்துவிட்டார்.

“லலிதாம்மா”

“டாடீ”

“நல்ல நேத்துல புறப்படும்மா, டயமாச்சு. அப்பா உன் கூடவேதான் வரேன்”

“அம்மா?”

“அம்மாவும்தான்”

**********************

ஐம்பது பேர் தாராளமாக புழங்கக் கூடிய அந்த ஹால், எண்பத்தைந்து பேரை தனக்குள் திணித்துக் கொண்டு, ஒரு புறம் மணவறை, ஒரு புறம் காஃபி, டீ மற்றும் ஜூஸ் கார்னர், என நிரம்பி வழிந்தது.

முஹூர்த்தப் புடவையை ஓதிக் கொடுத்த, மஞ்சளில் அடர்பச்சை பார்டர் ஒருபுறமும், மெரூன் கலர் பார்டர் ஒருபுறமும் , கையகல ஜரிகையுடனும் இருந்த கங்கா ஜமுனா புடவையில் தகதகத்தாள் லலிதா பரமேஸ்வரி.

மேட்ச்சான வளையல்களை மாற்றிக் கொண்டு, கண்ணாடியைப் பார்த்த லலிதா புடவையின் அழகிலும், அது தனக்குப் பொருந்தியதிலும் மகிழ்ச்சியாக உணர்ந்தாள்.

அன்று கடையில்….

வாமனமூர்த்தி குவிந்திருந்த புடவைகளைப் புரட்டித் தீவிரமாக எதையோ தேடினான்.

லலிதா “என்ன தேடறீங்க?”

“மிட்டாய் ரோஸ் புடவையைத்தான்”

“சீரியஸ்லி?”

“என்னை பார்த்தா எப்டி இருக்கு உனக்கு? நானே நீ எங்கேயாவது அந்த கலர்ல புடவை வாங்கிடுவியோன்ற பயத்துல விழுந்தடிச்சு ஓடி வரேன், ஆளைப்பாரு” என்றவன் தேர்ந்தெடுத்த புடவை இதுதான்.

வாமனனின் எதிர்வினை என்னவாக இருக்கும், தன்னை எப்படி எதிர்கொள்வான் என்ற சிந்தனை ஒருபுறம் ஓட, ஓவர் எதிர்பார்ப்பு உடம்புக்கு ஆகாதுடீ, அடங்கு! என்றது மை. வா.

அழகு மிளிர, மென்பஞ்சு பாதங்கள் இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க, தேர் போல அசைந்து வரும் தன்னவளை விழியகற்றாது பார்த்திருந்த மன்னவனைப் பாராது போல் பார்த்து, அவனது கம்பீரத்தில் விழுந்து, அவன் கண்களில் வழிந்த காதலிலும், இதழ்க்கடையில் நெளிந்த சிரிப்பிலும் கிறங்கி, இருவரது ஜோடிப் பொருத்தம் கண்டு ஊரே அதிசயிக்க, அருகில் வந்து அமர்ந்தவளின் வனப்பும் வாசனையும் ‘எனக்கே எனக்கு’ என்ற கர்வம் அவனிடம் மிளிர….

இது போன்ற எதுவும் நிகழாது, எதையும் உணராது, பென்ட் ஹவுஸில் இருந்த அந்தச் சிறிய அறையிலிருந்து மூன்றே அடியில் மணவறை வந்துவிட,
சென்று அமர்ந்த எழுபதாவது நொடியில் லலிதா பரமேஸ்வரி, திருமதி வாமனமூர்த்தியானாள்.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: Mr. மாமியார் 4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Manikodi

New member
Joined
Jun 19, 2024
Messages
1
செம்ம gift
 

Attachments

  • Screenshot_2025-05-16-00-13-57-097_com.android.chrome-edit.jpg
    Screenshot_2025-05-16-00-13-57-097_com.android.chrome-edit.jpg
    495.7 KB · Views: 1

kothaisuresh

Active member
Joined
Jun 19, 2024
Messages
131
அதானே பார்த்தேன், என்னடா இரண்டு பேரும் இப்படியெல்லாமான்னு, 😜😜😜
செம்ம கிப்ட் 😜😜😜😜
 

Goms

New member
Joined
Apr 28, 2025
Messages
18
Wow. அதுக்குள்ள கல்யாணம் முடிஞ்சதா??🤔😄
வாம்ஸ் நீ அவதாரம் எடுக்க வேண்டிய நேரம் வந்தாச்சு. எங்க பொண்ணு பச்ச மண்ணு🥰 😛எந்த பீலிங்கும் இன்னும் வரல. நீ தான் பார்த்துக்க வேணும். 😜🤪
இனிமேல் Mr மாமியார் கெத்து காட்டுவங்களா???🤪 Waiting......
 
Joined
Jun 19, 2024
Messages
6
😍😍😍

திருமதி, சீதளா ஶ்ரீசைலம் வேணும்னா அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டாங்க, ஆனா சீதளா பெத்த வாமனன் இருக்கானே, உன்னை எப்படியெல்லாம் ஆட்டி வைக்க போறானோ? 😜😜

நிச்சியம், கல்யாணம் தான் சிம்பிளா நடந்து போச்சு, ஆனா சம்பம் மாஸா நடக்கணும்..,🙈🙈
இந்த லலிதாவை வச்சுக்கிட்டு நடக்கும்னு நினைக்கிற..☹️☹️

 

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
13
😍😍😍

திருமதி, சீதளா ஶ்ரீசைலம் வேணும்னா அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டாங்க, ஆனா சீதளா பெத்த வாமனன் இருக்கானே, உன்னை எப்படியெல்லாம் ஆட்டி வைக்க போறானோ? 😜😜

நிச்சியம், கல்யாணம் தான் சிம்பிளா நடந்து போச்சு, ஆனா சம்பம் மாஸா நடக்கணும்..,🙈🙈
இந்த லலிதாவை வச்சுக்கிட்டு நடக்கும்னு நினைக்கிற..☹️☹️

பாட்டு செம மாஸ்🤣
 

dharani

Member
Joined
Jul 6, 2024
Messages
32
எல்லாம் feelings யும் வாமன மூர்த்திக்கு மட்டும் தான் போக லலிதாவுக்கு எப்போ ஆராய்சி யோசனை மட்டும் போல
 
Top Bottom