• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Arangam 16(final part 1)

Paithani

New member
Joined
Jun 19, 2024
Messages
26

அரங்கம் 16.(இறுதிப்பகுதி. 1 )

தனது ஒற்றை முத்தத்தால் உயிர் தொடும் தனது காதலை ரங்கராஜனுக்குள் செலுத்த முயன்றாள் ருக்மிணி. அவனது கண்ணீர் சொன்ன காதலை அவனது வார்த்தைகள் வேறு விதமாக சொன்னது.

" சோ, மத்த பெண்களுக்கும் உனக்கும் வித்தியாசங்கள் ஒண்ணும் இல்ல. நீ உன்னோட முத்தத்தின் மூலமா உன்னோட தேவையை வெளிப்படுத்திட்டே . சரிதானே?"

மார்புக்கு குறுக்காக தனது கைகளை கட்டிக்கொண்டு அவன் கேட்ட விதம் அவளின் உயிரை துளைத்தது. அவன் சொன்னதன் அர்த்தம் நிச்சயமாக வேறு தானே? அவளால் அதை தாங்கி கொள்ளவே முடியவில்லை.இன்று வரை எந்த ஆணும் அவளது மனக்கூட்டுக்குள் வந்தது இல்லை. வெகு காலமாக பூட்டி வைத்திருந்த காதல்.அதை இவ்வளவு எளிதாக உதாசீனம் செய்ய முடியுமா என்ன?

முடிகிறதே! அவனால் மட்டும் ,அவன்மேல் மட்டும் உண்டான இந்த காதல் அவனாலேயே உதாசீனம் செய்யப்படுகிறது. ருக்மிணிக்கு கண்ணீர் வரவில்லை. அவனிடம் நிமிர்ந்துதான் பேசினாள்.

"சோ, நீங்க பெரிய ஆணழகன்.என்னோட முத்தத்துக்கு அர்த்தம் லஸ்ட். சரிதானே?"என்று நக்கலடித்தாள். அவன் உதடுகள் உச்சரிக்கும் வார்த்தைகளை அவனது கண்கள் பிரதிபலிக்கவில்லை. கண்களின் வழியை அவள் கண்டுகொண்டுவிட்டாள். ஏதோ ஒன்று பெரியதாக அவன் மனதில் இருக்கிறது என்பது அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. அவனுக்காகவென்று எதை செய்தும் அவனை பெறுவதற்கு அவள் தயாராக இருந்தாள்.

அவன் இப்போது இருக்கும் நிலையில் அவனிடமிருந்து எதுவும் வெளிவராது என்று உணர்ந்தவள் பார்வையில் ஒரு அலட்சியம் காட்டி மீண்டும் அவனது உதடுகளில் முத்தம் வைத்துவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தாள். ரங்கரானால் அதிலிருந்து வெளியே வரவே முடியவில்லை. அவளில் தெரிந்த காதலும் உரிமையுணர்வும் அவனுக்கு ரொம்பவே பிடித்திருந்தது.அதை இழப்பதற்கு அவனுக்கு கடினம் தான்.ஆனால்,அவனுக்குள் இருக்கும் பயம் ?

பயமா ..ரங்கனுக்கா என்றால் ஆமாம்.பயமேதான். சுந்தரமும் நடுத்தர வயது வரை உற்சாகமான,வேகமான சாதாரண மனிதராகத்தானே இருந்தார். பிறகு எப்படி வந்ததோ தெரியாது. மனசோர்வும், தாழ்வுணர்ச்சியும் அவரை எவ்வளவு புரட்டிப் போட்டுவிட்டது. இன்று வரை மீள முடியாமல் தவிக்கிறார். தனக்கும் இது போன்ற பிரச்சனை வந்தால் என்ன செய்வது என்று பயம்.

அதற்க்கு காரணம் விடலைப் பருவத்திலேயே அவன் அப்பாவை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அவனுக்கு வந்து விட்டது. அது சம்மந்தமாக அதிகமாக வலைத்தளங்களில் தேடி படித்ததும், பெங்களூரு பள்ளிக்கூடத்தில் அவன் பெற்ற மோசமான அனுபவங்களும் ,பெற்றவளின் தங்கள் மீதான அலட்சியமும், அம்மம்மா வீட்டில் தங்களுக்கு ஏற்பட்ட அவமானங்களும் அவனை தனது சொந்த வாழ்க்கை மீதான ஒருவித பயத்தை விதைத்திருக்கிறது.அதோடு அவனுக்கே தெரியாமல் பெண்கள் மீதான அவநம்பிக்கையை விதைத்து இருக்கிறது. நிச்சயம் அவனுக்கு இது குறித்த ஆலோசனை தேவை .நான் சொல்லவில்லை ..இதோ தனது மனதின் எண்ணங்களை அவனே தான் மருத்துவர் ஹாரியிடம் சொல்லிக்கொண்டிருக்கிறான். அதுவும் அவரது மருத்துவமனையை தேடித் சென்று சொல்லிக்கொண்டிருக்கிறான். அவரும் நிதானமாக அவன் சொல்பவற்றை கேட்டுக்கொண்டிருக்கிறான்.

அவருக்கு நன்றாக அவனது நிலைமை புரிகிறது.இது போன்ற சூழ்நிலையில் அவன் நிதானத்தை இழக்காமல் இவ்வளவு தூரம் தன்னை செதுக்கிக்கொண்டு வந்திருப்பதே பெரிய விஷயம் தான்.அதற்கு திருவேங்கடம் - கோதையின் அர்ப்பணிப்பு பெரியது.

"நிச்சயம் கொஞ்ச வருஷம் நீ கொன்சில்லிங் வரணும் ரங்கன். ரொம்ப ஆழமா நிறைய விஷயங்கள் பதிஞ்சிருக்கு.அதுலேந்து வெளியே வராம கல்யாணம் செஞ்சுக்கறது தப்பு.அது நிச்சயம் உன்னோட வாழ்க்கையை பாதிக்கும்" என்றார் ஹாரி. அவர் சொல்வது மிகச் சரியாக பட்டது ரங்கராஜனுக்கு.

அந்த சம்பவத்துக்கு பிறகு ரங்கராஜனின் வீட்டுக்கு ருக்மிணி வருவதே இல்லை.வேறே வேலை தேடிக்கொண்டு நியூ ஜெர்சிக்கு சென்று விட்டாள் என்றார் அவளது அப்பா. ரங்கராஜனுக்கு நிறைய வருத்தமும்,கொஞ்சம் சந்தோஷமுமாக இருந்தது.

கோதையும்,ருக்மிணியின் பாட்டியும் இன்னமும் நட்பில்தான் இருந்தார்கள். ருக்மிணி வீட்டில் இது பற்றி பேசி இருக்கமாட்டாள் என்று நம்பினான் ரங்கன். கோதையும் திருவேங்கடமும் சுந்தரத்தை கூட்டிக்கொண்டு இந்தியா கிளம்பிவிட்டார்கள். வீடே அமைதியாக இருந்தது. ரங்கனுக்கு மனம் சோர்ந்து போனது.

வேலையில் அதிக கவனம் செலுத்தினான்.நண்பர்களுடன் சேர்ந்து முதலீடு செய்து சிறிய நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார்கள். அலுவலக வேலையுடன் இந்த வேலையும் சேர்ந்து கொண்டதில் ருக்மிணி பற்றிய யோசனைகள் கொஞ்சமாய் தூர் சென்றது.மற்றபடிக்கு தினமும் தனது வீட்டுக்கு பேசுவது தான்.

அலுவலகத்தில் அவனுக்கு அடுத்தடுத்த நிலைகள் கிடைத்தது. பணமும் சேர்ந்தது.அவர்களது சொந்த நிறுவனமும் சற்றே வளர்ந்தது. ருக்மிணி பற்றிய தகவல்களே இல்லை. அனிருத்துக்கு திருமணம் நிச்சயம் ஆனது.பெண் இங்கே அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இந்திய குடும்பம்.வாஷிங்டனில் இருப்பவர்கள் என்றார்கள்.

கல்யாணம் அங்கிருந்த பாலாஜி மந்திரில் நடந்தது. இருபக்க உறவுகளும் நண்பர்களுமாக நிறைந்திருந்தது. அங்கே ருக்மிணி வந்திருக்கிறாளா என்று ரங்கனின் கண்கள் தேடியது.அவள் ரங்கனின் கண்களில் படவே இல்லை. யாரிடமாவது கேட்கலாம் என்றாலும் ஏதோ ஒன்று வேண்டாம் என்று தடுத்தது.

முகூர்த்த நேரத்தில் பச்சை பட்டுடுத்தி அழகுப் பதுமையாக தனது தம்பியின் அருகில் நின்றுகொண்டிருந்தாள் ருக்மிணி. அவளிடம் நிறைய மாற்றங்கள். ஐந்து வருஷத்தில் இன்னமும் நிமிர்வு கூடி இருந்தது. கண்களில் அலட்சியம் பரவியிருந்தது. முகத்தில் மாறாத அதே சிரிப்பு. ரங்கராஜனை கண்டுகொள்ளவே இல்லை. தெரிந்தவர்களிடம் பேசும் அதே பாவனை இவனிடமும். அவ்வளவுதான். ரங்கனின் மனம் வலித்தது. காரணம் அவனுக்குத் தெரியுமே!

யாரோ அனிருத்தின் அம்மாவிடம் ருக்மிணியின் திருமணம் பற்றி கேட்டார்கள். 'பார்த்துக்கொண்டிருக்கிறோம்.எதுவும் சரியாக அமையவில்லை . இங்கே அமெரிக்காவாக இருந்தால் பரவாயில்லை ' என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

"ஓ ,ருக்மிணிக்கு திருமணத்திற்கு பார்க்கிறார்களா "என்று ரங்கனுக்கு தோன்றியது .விழுங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான். அவனுக்கு இப்போது என்னதான் வேண்டும் என்று அவனது மனம் கேட்டதற்கு அவனிடம் பதில் இல்லை. ஒருவேளை அவள் தனது விருப்பத்தை சொன்ன பொழுது சரி என்று சொல்லியிருந்திருக்க வேண்டும் என்று இப்போது தோன்றியது. கவுன்சிலிங்கின் பலன். கோதைக்கு முட்டி வலி வந்துவிட்டதில் அவன் வீட்டிலிருந்து யாரும் இங்கே வருவது இல்லை. இரண்டு வருஷங்களாக ஒரு மாதம் விடுப்பு எடுத்துக்கொண்டு இவன்தான் சென்று வருகிறான்.

இந்தியாவுக்கு நிரந்தரமாக சென்று விட வேண்டும் என்று அவன் மனம் தவித்தது.வீட்டில் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை என்று தீர்மானமாக சொல்லி விட்டதில் அவர்கள் திருமணம் பற்றியெல்லாம் ரங்கராஜனிடம் பேசுவதே இல்லை.

எப்போதாவது யாரவது பத்திரிக்கை கொடுத்தால் மட்டும் அந்த சமயத்தில் பெரியவர்கள் புலம்புவார்கள்.சுந்தரம் இப்போதெல்லாம் கோவில் உண்டு தான் உண்டு என்று தான் இருக்கிறார்.எதை பற்றியும் யாரிடமும் பேசுவது இல்லை.

ஆறு வருஷங்கள் உழைப்பில் ரங்கராஜனின் நிறுவனம் நல்ல வளர்ச்சியை கண்டது. அதனால் தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விடுத்து முழுநேரமும் சொந்த தொழிலை பார்க்கத் தொடங்கி மூன்று வருஷங்கள் ஆகிறது.

ஒருமுறை நியூயார்க் விமான நிலையத்தில் ருக்மிணியை பார்த்தான் ரங்கன் .இருவருமாக கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அவளும் "என்னோட முதல் காதலுக்கு பிறகு வேறே யாரு மேலயும் இன்டெரெஸ்ட் வரல. வீட்டுலயும் கல்யாணத்துக்கு பாக்கறாங்க. ஒருவேளை அது சக்ஸஸ் ஆகலாம் இல்லையா? அதனால் ஓகேய் சொல்லியிருக்கேன்" என்றாள்.

"நாம கல்யாணம் பண்ணிக்கலாமா "என்று மனதோடு மட்டும் கேட்டுக்கொண்டவன் அவளிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு வந்த வேலையை பார்க்கவென்று சென்றான். அவளும் இவனை பற்றி எதுவும் கேட்டுக்கொள்ளவேயில்லை. மருத்துவர் ஹாரியை சந்திக்கும் பொழுது தான் ருக்மிணியை சந்தித்தது பற்றி சொன்னான். அவரோ ,"வீட்டுல சொல்லி வேறே யாரையாவது கல்யாணம் செஞ்சுக்கோ.உனக்குன்னு ஒரு லைஃப் பார்ட்னர் கண்டிப்பா வேண்டும் " என்றார். ரன்கள் பதில் எதுவும் சொல்லவில்லை.

கூடிய சீக்கிரம் இந்தியாவில் தொழில் தொடங்க வேண்டும் ,நிரந்தரமாக அங்கேயே சென்று விட வேண்டும் என்றும் நினைத்துக்கொண்டான்.

 
Last edited:

Author: Paithani
Article Title: Arangam 16(final part 1)
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom