அரங்கம் 15
அடுத்தடுத்த நாட்களில் ரங்கராஜன் அலுவலக வேலைகளில் ஓய்வில்லாமல் தன்னை நுழைத்துக்கொள்ளவேண்டியிருந்தது .அது அவனுக்கு பிடித்தும் இருந்தது. அலுவலகமெல்லாம் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தபடிக்கே தனது அறையிலிருந்து வேலை செய்யும் சௌகர்யம். நடுவில் நேரம் எடுத்துக்கொண்டு வந்து பாட்டியிடம் சொல்லி பில்டர் காபி குடிப்பதும், கோதையின் கைமணத்தில் உணவு சாப்பிடுவதும் அவனுக்கு சொர்கமாய் இருந்தது.அவர்ளுக்கும் தனது பேரனின் நிலைமை நன்றாக புரிகிறது.
"வெளியிலிருந்து பார்க்கும்பொழுது அமெரிக்க வாழ்வும்,சாப்ட்வார் உத்தியோகமும் ஆஹா..பேஷ் பேஷ் தான். சம்பளம் எவ்வளவு அதிகமோ அவ்வளவுக்கும் மூளையை உபயோகித்து வேலை செய்தாகவேண்டும். நிறைய பேருக்கு அதிக நேரம் உட்கார்ந்து வெளிசெய்வதால் முதுகு வலியும், வெகுநேரம் கணினியை உற்றுப்பார்ப்பதால் கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் வரத்தான் செய்யும்.
அந்த மாய உலகம் அவ்வளவு பணம் தருவது இதுபோன்ற பிரச்சனைகளுக்கு மருத்துவம் பார்த்துக்கொள்ளவும் சேர்த்து தான் போலிருக்கு."இதை சொன்னது நானில்லை. திருவேங்கடம் தாத்தாதான்.தனது அருமை பேரன் வேலை செய்யும் பாங்கில் ரசித்து தனது பார்யாள் கோதையிடம் மனம் நொந்து சொன்னது.
கூடவே இந்த வேலையின் போக்கில் மூளை சோர்ந்து மன அழுத்தமும் உண்டாகலாம் என்று அவருக்கு புரிந்தது.தனது மகனுக்கும் இது போல ஏதோ ஒரு விஷயத்தால் தாக்கப்பட்டதால் அதை தாக்குப்பிடிக்க முடியாமல்தான் மனநிலை பாதிப்புக்கு உள்ளானதா ?என்ற சந்தேகம் வேறு அவருக்குள் வந்தது.
அதை எல்லாம் சொல்லி தனது மனைவியை குழப்ப அவர் தயாராக இல்லை.ஆனால்,தனது பேரனிடம் அந்த வார இறுதியில் நிறையவே பேசினார்.அவனது வேலையின் போக்கு,அவனின் வேலை நேரம் என்று ஆரம்பித்தது நிச்சயம் வந்து நின்றது சுந்தரத்தின் நிலைப்பற்றித்தான்.
தாத்தாவுக்கு மனதில் பேரனுக்கும் இந்த நிலை வந்துவிடக் கூடாதே என்ற பதட்டம் இருந்ததை ரங்கராஜன் கண்டுகொண்டான். "நிச்சயமா எனக்கு இங்கே செட்டில் ஆற எண்ணமில்லை தாத்தா.கொஞ்சம் பணம் சேர்த்துண்டு அங்கே இந்தியா வந்துடலாம்னுதான் இருக்கேன்.எனக்கு நிச்சயமா இங்கே மனஸு ஒத்துவரல. நீங்கல்லாம் அங்கே இருக்கும் பொழுது நா மட்டும் இங்கே தனியா அனாதையா இருக்குற மாதிரி தோன்றாரது" என்ற பேரனை வாஞ்சையுடன் பார்த்தது அந்த முதிய கண்கள். தாத்தாவின் கைகளை பிடித்துக்கொண்டான் ரங்கராஜன்.
இங்கே வந்ததிலிருந்து அப்பா கொஞ்சம் தடுமாறுவதாக ரங்கனுக்கு தோன்றியது.வீட்டை பலமுறை சுற்றிப்பார்ப்பதும்,சுவற்றை தடவிகொடுப்பதுமாக சுந்தரத்தின் நேரம் செல்கிறது. ஆனால் மறந்தும் முன்பு சுந்தரம் பாவித்த அறைக்குள் இப்போது செல்ல அவர் முனையவில்லை. இதை ரங்கனும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறான்.
கொஞ்சம் வேலை குறைவாக இருந்த நேரங்களில் மூவரையும் அழைத்துக்கொண்டு தான் பயின்ற பலக்லைக்கழகத்தை காண்பித்தான். ஒருமுறை டிஸ்டனி லேண்ட் சென்றார்கள். அருகிலிருந்த பெருமாள் கோவிலுக்கும் அழைத்துச்சென்றான். சுந்தரத்தின் மனதில் இங்கே எவ்வளவு மாற்றங்கள் என்று தோன்றியது.
ஹாரி இவர்களுடைய வீட்டுக்கு வந்தார்.,இல்லை வரவழைக்கப்பட்டார். அவரை தனது நண்பர். தங்கள் வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர்கள் தொலைவில் தான் இவர்களது வீடு என்று மட்டும் அறிமுகம் செய்து வைத்தான் ரங்கராஜன். ஆரம்பத்தில் ஹாரியுடன் பேசவே தயங்கிய சுந்தரத்திற்கு அவரது பேச்சு ஏதோ ஒருவகையில் மனதை அமைதிசெய்வதாக உணர்ந்தார். திருவேங்கடமும் ஹாரியும் கூட நண்பர்கள் ஆனார்கள். ஹாரிக்கு மனதில் இப்பேற்பட்ட மனிதர்களையோ வேண்டாம் என்று விட்டு வந்தாள் மாலதி என்ற கேள்வி எழாமல் இல்லை. இவர்களுடன் பழகும்பொழுது அவரால் ஒரு இலகு தன்மையை உணரமுடிந்தது.
என்னதான் மருத்துவர் என்றாலும்,அவருக்கும் அந்தரங்க வாழ்வு என்று உண்டே.அதிலும் இந்த கேசில் சம்மந்தப்பட்டவர் தனது மனைவி என்று இருக்கும்பொழுது இந்த விஷயத்தை சொந்த விருப்பு வெறுப்பையும்,தோன்றும் நேர்மறை எதிர்மறை எண்ணங்களையும் தூர நிறுத்தி வைத்துவிட்டு கையாள்வது வெகு கடினம். ரங்கன் ஹாரியிடம் உதவி கேட்டதே,தானும் தனது குடும்பமும் எவ்வாறானவர்கள் என்பதை ஹாரி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்க்காகத்தான். அவனை தவறு என்று சொல்ல முடியாது.அவனது இழப்புகளை தூர நின்று புரிந்துகொள்ள முடியாது.
ஆனால், ரங்கனுக்கு ஹாரி தனது மனைவியை பிரிந்துவிடவேண்டும் என்ற எண்ணமெல்லாம் நிச்சயம் இல்லை.மூன்று அழகான குழந்தைகளை குடும்ப அமைப்பிலிருந்து பிரிக்க அவனால் நிச்சயம் முடியாது. அவன் விரும்புவது தனது பக்க நியாயத்தை சொல்லத்தான். ஒரு முக்கியமான விஷயமும் இங்கே உண்டு.மாலதி இன்னமும் தான் சுந்தரம் விஷயத்தில் நாதாந்த கொண்டதில் தவறு எதுவும் இல்லை என்றுதான் நினைக்கிறாள்.அவளது தவறை அவள் உணர்ந்தால்தான் வரும் காலங்களில் அவள் தன்னை மாற்றிக்கொள்ள முடியும். அது அவசியம் என்று அவன் நினைத்தான்.
ரங்கன் இங்கே மறந்த விஷயம் இந்திய பாரம்பரியம் வேறு, அமெரிக்கர்களின் மனோ நிலைமை வேறு. நிச்சயம் எதிரெதிர் துருவங்கள் தாம். மாலதி உணர்ந்தாலும் இல்லாவிட்டாலும் அவளுக்கும் ஹாரிக்குமான குடும்ப வாழ்க்கையில் எந்த மாற்றங்களும் வந்துவிடாது.ஆனால் ஹாரியால் சுந்தரத்தை புரிந்து கொள்ள முடிந்தது. சுந்தரத்திற்கு ஏற்பட்டிருக்கும் மன அழுத்தத்திற்கும் வேலையிலும் சொந்த நிறுவனத்தை நடத்த முடியாமல் தோல்வியை தழுவியதற்கும் அவனது அக வாழ்வுக்கு பெரிய பங்கு உண்டு என்று அவருக்கு புரிந்தது. வேறு சில மருந்துகளை ரங்கன் மூலமாக பரிந்துரை செய்தார்.அவை வீரியம் குறைந்தவை.அதிகம் பக்கவிளைவுகள் கிடையாது. ஏதோ அவரால் முடிந்தது. சுந்தரத்தை முழுவதுமாக மீட்டெடுக்க முடியாது என்பது தெரிந்தது தானே!
இவ்வளவு விஷயங்கள் இங்கே சென்று கொண்டிருக்கிறது.ஆனால் மாலதிக்கு தனது சொந்தங்கள் இங்கே மூன்றே கிலோ மீட்டர்கள் தொலைவில் இருப்பது தெரியாது. யாரும் சொல்லவும் தயாராக இல்லை. இரண்டொருமுறை ரங்கன் தனது காரில் இவள் வீட்டுப்பக்கமாக செல்லும் பொழுது பார்த்தாள் .அதற்குமேல் அவனை தொடர்பு கொண்டு பேச ரங்கன் மாலதியை அனுமதிக்கவில்லை.
இன்னொருபக்கம் ருக்மிணி ரங்கனது குடும்ப உறுப்பினர்கள் வந்திருப்பது தெரியாமல் இங்கே ரங்கனை பார்க்கவென வந்துவிட நன்றாக கோதைப் பாட்டியிடம் மாட்டிக்கொண்டாள். கோதைப்பாட்டிக்கு ருக்மிணியை பார்த்தவுடன் ஏதோ ஒரு சினேக பாவம் தோன்றிவிட நிதானமாக அவளிடம் பேச்சு கொடுத்து பார்த்தாள். வேகமாக பேசினால் ருக்மிணியால் புரிந்துகொண்டு பதில் சொல்ல முடியவில்லை. அவளது கிளிப்பேச்சு கோதைக்கு பிடித்துவிட்டது.
அதே சமயம் திருமணம் ஆகாமல் இங்கே தனியாக இருக்கும் தமது பேரனிடம் இந்த பெண்ணுக்கு என்ன வேலை என்றும் தோன்றாமல் இல்லை. அதை கோதை நேரடியாக ருக்மிணியிடம் கேட்கவில்லை. ருக்மிணியே எனக்கு மறைக்க ஒன்றுமில்லை எனும் ரீதியில் தாங்கள் முன்பு இங்கே குடியிருந்தது ஆரம்பமாக ரங்கனுக்கும் தனக்குமான நட்பு வரை சொல்லிவிட்டாள்.
இதெல்லாம் போதாது என்று தனது பாட்டியையும் மறுநாள் மாலையே ரங்கனின் வீட்டுக்கு அழைத்து வந்து கோதைக்கு அறிமுகம் செய்துவைத்தாள். கபடமில்லாத அந்த பெண்ணை கோதைக்கு நிரம்பவே பிடித்துவிட்டது. இதோ இப்போது அமெரிக்க மண்ணில் இரண்டு பாட்டிகளுக்குமான புதிய நட்பின் தொடக்கம். கையில் தான் செய்த ஏதோ ஒரு இனிப்பை கொண்டுவந்து கொடுத்து தொடங்கி வைத்தாள் ருக்மிணி. அவளுடன் வெகு ஆவலாக வேடிக்கை பார்க்கவென்று உடன் வந்து சேர்ந்தான் அனிருத்.
கீழே பெண்கள் பேசுகிறார்கள் என்று தான் வெளியாக இருந்த ரங்கராஜன் அனிருத்தின் குரல் கேட்டு வேகமாக கீழே இறங்கி வந்தான். அவன் பார்வையில் முதலில் பட்டவள் அதிசயமாக பாவாடை தாவணி உடுத்தியிருந்த ருக்மிணியைத்தான். முதன்முதலாக அவன் தனது ஆண்மையை உணர்ந்த தருணம் இது.
படிகளில் வேகமாக யாரோ வரும் சப்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவளின் பார்வை ரங்கனிடம் உறைந்து நின்றது.அவன் பார்வையில் இருக்கும் ரசனை அவனையே நேர்கோட்டில் பார்க்க செய்தது.பெரியவர்கள் இருவரும் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருக்க ரங்கன் வருவதை நிமிர்ந்து பார்த்த அனிருத் தனது அக்கா ருக்மிணியும் ரங்கனும் பார்ப்பதை உணர்ந்து கொண்டான். அவனுக்குள் ஒரு விருப்பம் கலந்த மனநிலை.' ரங்கன் போல ஒருவன் தங்கள் குடும்ப உறுப்பினராக வந்தால்' என்று யோசித்தான். இருவருக்கும் நல்ல ஜோடி பொருத்தம் என்றது அவன் மனம்.
Author: Paithani
Article Title: Arangam 15
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Arangam 15
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.