அரங்கம் 13
இரவு உணவுக்காக மாலதி ரங்கனை அழைக்கவென்று அவனது அறைக்கு வந்தாள். ரங்கன் தனது பாடபுத்தககத்தில் ஆழ்ந்திருந்தான்.அவனை பார்த்தவளுக்கு ஏனோ தனது அத்தை மகன் சுந்தரத்தின் ஞாபகங்கள் வந்து சென்றது. ஹாரியை மணந்து கொண்ட பிறகு அவளுக்கு சுந்தரம் பற்றிய யோசனைகள் சுத்தமாகவே இல்லை.அது அவளது பழைய வாழ்க்கை என்பதில் தெளிவு இருந்தது.இப்போது ஏதேதோ எண்ணங்களின் ஆக்கிரமிப்புகள் .
மெதுவாக ரங்கனை அழைத்தாள். "ரங்கா சாப்பிட வர்றியா?" ரங்கன் நிதானமாக நிமிர்ந்து பார்த்தான். அவன் விழிகளின் மொழியை படிக்க முடியாதவளாக "என்னாச்சு ரங்கா..என்கிட்ட ஏதாவது சொல்லணுமா ?என்று தயங்கியவாறே கேட்டாள்.
இல்லேம்மா ..சொல்லணும். இங்கே இப்படி என்னோட எதிர்ல இருக்கும் நாற்காலியில் உட்கார்ந்துக்கோங்க ---இது ரங்கன்.
மகனின் வார்த்தையை மீறாதவளாக மாலதி அமர்ந்து கொண்டாள். ரங்கனுக்கு எங்கிருந்து ஆரம்பிப்பது என்று புரியாமல் மௌனித்தான். மாலதியின் முகம் கலவரம் கொண்டது.
அதைக்கண்டவன்,"ஜஸ்ட் ரிலாக்ஸ் மா.ஒண்ணும் பெரிய விஷயமா இல்ல.நா நாளைக்கு கார்த்தாலேயே இங்கிருந்து கிளம்பிடுவேன். ஹாரிகிட்டேயும் ,பசங்ககிட்டேயும் ஈவினிங்கே சொல்லியாச்சு.நீங்க இன்னமும் ஆபிஸ்லெந்து வந்திருக்கல. அதான் உங்களுக்காக வெயிட் பண்ணேன்.
மாலதியின் கண்களில் கண்ணீர் வந்தது. "முன்னெல்லாம் நீங்க,வாங்கன்னு நீ கூப்பிட்டதில்ல ரங்கா.இப்போவும் உன்னோட அப்பாட்ட ,தாத்தா பாட்டிகிட்டே பேசும்பொழுது நீ வா போன்னு தானே பேசுற.என்னை மட்டும் ஏண்டா அந்நியபடுத்தி பேசறே.அவ்ளோ வேண்டாதவளா போய்ட்டேனா? "
ரங்கனிடம் இதற்க்கான பதில் உண்டு .இந்த நேரத்தில் சொன்னால் உணர்ச்சியின் பிடியில் இருக்கும் அம்மாவால் புரிந்துகொள்ள முடியாது என்று வேறு பேச்சிற்கு தாவினான் ரங்கன்.மாலதிக்கும் புரிந்தது. கொஞ்சநேரம் ஏதேதோ பேசியவர்கள் மீண்டும் வந்து நின்றது மாலதியின் மனநிலைமையில் தான்.
ரங்கன் வெளிப்படையாகவே பேசினான்."அம்மா, உங்களுக்கு இன்னொரு கல்யாண வாழ்க்கை அமையும்னு ஏற்கனவே நாங்க ..ம்ஹும் ,நா எதிர்பார்த்தது தான்.கல்யாணம் ஆனா குழந்தைகள் பிறப்பும் சகஜம் தான். நீங்க யோசிக்க இதில ஒண்ணுமே இல்ல.அண்ட் நீங்க இங்க வந்து பல வருஷங்கள் ஆயாச்சு.உங்களுக்கும் இந்தியாவுக்குமான தொடர்பு ரொம்பவே சொற்பம்தான். யாரு என்ன சொல்றாங்க, தப்பா எடுத்துண்டா என்ன பண்றதுனு இனிமே யோசிச்சு பிரயோஜனம் இல்ல. சோ,ஜஸ்ட் கோ வித் ப்லொவ்.நீங்க எனக்காக யோசிச்சு கிடைச்சிருக்குற அருமையான மனுஷரை மிஸ் பண்ணிடாதீங்க. நா இனிமே இங்கே அடிக்கடி எல்லாம் வர மாட்டேன். நீங்களும் எனக்கு அதிகம் கால் பண்ண வேண்டாம். இந்த குடும்பத்துக்கு , இந்த குழந்தைகளுக்காவது அம்மா இருந்து வளர்க்கணும்." என்றுவிட்டான்.
மாலதி கதறினாள். ரங்கனுக்கு என்ன சொல்வது என்று அவளுக்கு புரியவில்லை.தான் மகனை முழுதுமாக இழந்துவிட்டோம் என்று மட்டும் தெளிவாக புரிந்து போனது.அம்மா பிள்ளை உறவுதான்.கட்டையில் சென்றாலும் விடாது தான். ஆனால்,இங்கு முழுவதுமாகவே நடந்த விஷயங்கள் வேறாயிற்றே! மகன் தன்னை வெறுத்து ,ஒதுக்கி,மீண்டும் ஒட்டாமல் தவிக்கிறான் என்பது அவளுக்கு பெருத்த அடியன்றி வேறென்ன?
ரங்கன் தனது அம்மாவை சமாதானம் செய்ய முயற்சிக்கவில்லை.சில உண்மைகளை அப்படியே ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். இப்போது அழுதாலும் பிறகு சரியாகிவிடும் என்று அமைதியாக இருந்துவிட்டான் .
கொஞ்சநேரம் அழுது,பிறகு விசும்பலில் வந்து முடிந்தது.அதுவரை ரங்கன் எதுவும் பேசினானில்லை. பிறகு தானாகவே சுதாரித்துக்கொண்டு மாலதி கேட்டாள். "அம்மாவை முழுசாவே ஒதுக்கிட்டியா ரங்கா.இந்த அம்மா உனக்கு வேண்டவே வேண்டாமா? தப்பு செஞ்சேந்தான்.இங்கே இந்த மூணோடையும் இருக்கும் பொழுது உன்னை நினைச்சுப்பேன்.உன்னோட இழப்பு பெருசுதான் ரங்கா. அதைவச்சு இப்போ என்னை வெறுத்திடாதே. "
அம்மாவுக்கு என்ன பதில் சொல்வது?ஏற்கனவே விஷம் போல படர்ந்திருக்கும் வெறுப்பு. தாய்ப்பாசத்திற்க்காக ஏங்கிய நாட்கள் அவன் கண்முன் நிழலாட ,ஒரு சம்பிரதாயத்திற்க்காக கூட ரங்கன் ,இல்லை ' என்று சொல்லவில்லை. மாலதிக்கு புரிந்துவிட்டது.
இருவருமாக கீழே உணவருந்த வந்தார்கள். மாலதியின் கண்கள் அழுது சிவந்திருந்தது. பிள்ளைகளுக்கு மறுக்கவும் அவள் முயற்சி செய்யவில்லை.மாறாக,ரங்கன் வெகு இயல்பாக இருந்தான்.குழந்தைகளுக்கு என்று பரிசு பொருட்களை கொடுத்தான். உணவருந்தும் பொழுதும் அரட்டை தான். ஹாரியின் கண்கள் மனைவியின் முகத்தை தீவிரமாக ஆராய்ந்தது.
மகன் தனது அம்மாவுக்கு மயக்க மருந்து இல்லாமல் ரண சிகிச்சை செய்திருக்கிறான் என்று புரிந்துகொண்டார்.aama-பிள்ளைக்குள் தான் செல்ல முடியாது என்று உணர்ந்தவராக அமைதியாக இருந்தார். நிச்சயம் ரங்கனின் வார்த்தைகள் மனைவியை உயிரோடு சிதைத்திருக்கும் என்று நம்பினார்.
உண்மையில் ரங்கன் தனது மனதில் இருப்பதை கால்வாசி கூட சொல்லியிருக்கவில்லை.அதற்க்கே இவ்வளவு வேதனை என்றால் அவன் முற்றிலுமாக உடைந்து நொறுங்கிய தருணங்கள் உண்டே!அதற்கு பதில் சொல்பவர் யார்? அதை வார்த்தைகள் எனும் கூராயுதம் கொண்டு மாலதி மீது தொடுத்தால் அவள் தாங்க மாட்டாள்.
மாலதி மீது ரங்கனுக்கு பரிதாபம்தான் தோன்றியது. ஹாரியின் கண்களில் மனைவி மீதான கனிவும், மகனுக்கு இரக்கத்தை மீறிய கோவமும் உண்டு. இளமைக்காலங்களில் செய்யும் தவறு நடுத்தர வயதில் வேறு விதமாக தோன்றும்.அறுபதை தாண்டிய முதுமை பிராயத்தில் விஷயங்களை பார்க்கும் கோணமே மாறிவிடும். இப்போது அந்த வீட்டில் நடந்து கொண்டிருப்பதும் அதுவே தான்.
மாலதி வெகுநேரத்திற்கு யாரோடும் கதைக்கமுடியாமல் தவித்தாள். ரங்கனின் வார்த்தைகள் கொடுத்த வலி வெகுவாக அவளை செயலிழக்க செய்திருந்தது. 'இங்கே இனி வரவே மாட்டேன்.என்னை தொந்திரவு செய்யாதீர்கள் என்கிறானே. அப்படியென்றால் அவ்வளவு வெறுப்பை என்மீது சுமக்கும் அளவுக்கு மோசமான அம்மாவாக நான் அவனிடம் நடந்துகொண்டிருக்கிறேனா?' என்ற கேள்வி அவளை துளைத்து எடுத்தது. நிச்சயம் இது கண்கெட்டபிறகான சூரிய நமஸ்காரம் தான். எல்லா விஷயங்களுக்கும் பரிகாரங்கள் கிடையாது. அவள் செய்தவற்றிற்க்கு இப்போது தண்ணீர் குடித்தே ஆகவேண்டும். இன்னமும் உச்சத்தை தொடப்போகும் ரங்கனை மறந்தும் மாலதியால் "இவன் என் மகன் "என்று உரிமை கோர முடியாது. அந்த உரிமையை அவன் தனது அப்பாவுக்கும் ,தாத்தா பாட்டிக்கும் கொடுப்பான்.தூரத்தில் நின்று கைகளை தட்டி மாலதியால் சந்தோசம் மட்டுமே கொள்ள முடியும். அவளே எழுதிக்கொண்டது.
ரங்கன் மாலதி வீட்டிலிருந்து அடுத்தநாள் காலையிலே கிளம்பிவிட்டான். ஹாரி மருத்துவமனையில் அவசர அழைப்பு என்று கிளம்பிவிட, குழந்தைகளும் புதியதாக கிடைத்திருக்கும் அண்ணாவுக்கு முத்தமிட்டு,'பை' சொல்லிவிட்டு பள்ளிக்கு சென்று விட்டார்கள். மாலதியால் அலுவலகம் செல்லமுடியும் என்று தோன்றவில்லை.அன்று முழுவதுக்கும் விடுப்பு சொல்லிவிட்டாள். ரங்கன் தனது உடைமைகளை எடுத்து வைத்துக்கொள்வதை கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டே நின்றாள்.ரங்கனுக்கு மாலதியின் மனம் புரிகிறது.அதற்க்காக எதையும் அனுசரித்து ஜீரணம் செய்துகொள்ள அவன் தயாராக இல்லை.
மாலதியிடம் ஒரு சாதாரண தலையசைப்புடன் அங்கிருந்து கிளம்பிவிட்டான். மாலதிக்கு நெஞ்சை அடைத்தது. புதியதாக முளைத்திருக்கும் மகன் மீதான உரிமையுணர்வு. ஒன்றும் சொல்வதற்கு இல்லை.அவள் ஒன்றை யோசிக்க மறந்து விட்டாள். இன்றைக்கு மூன்று குழந்தைகளுக்கு பார்த்து பார்த்து செய்கிறாளே!இதையெல்லாம் ரங்கனுக்கு அவள் என்றாவது செய்திருக்கிறாளா? வளரும் பிராயத்தில் அவனுக்கும் அம்மாவிடம் எவ்வளவு எதிர்பார்ப்புகள் இருந்திருக்கணும்?இவளது இப்போதைய செய்கைகளை காணும் பொழுது ஏமாற்றம் கொண்ட அவனது மனம் எவ்வளவு தவிக்கும்?
ரங்கன் கிளம்பிய பிறகு வெகுநேரம் அவர்கள் வீட்டின் தோட்டத்தில் அமர்ந்திருந்தவளுக்கு பழைய நினைவுகள் அலையடித்தது தன்னை தானே மீட்டெடுத்துக்கொள்ள விருப்பமின்றி அதிலேயே உழன்று கொண்டிருந்தாள்.இந்த நிலைமை மாலை ஹாரி வரும் வரை நீடித்திருந்தது. இவையெல்லாம் தனது சாபம் என்று நம்பினாள்.
இத்தனை வருஷங்களில் பெரிய வீடு,அமெரிக்க வாழ்க்கை, டாலர்களில் சம்பளம் இவையெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை புரிந்தும் கொண்டிருந்தாள்.ஹாரியின் நிபந்தனைகள் அற்ற காதல் அவளை வீழ்த்தியிருந்தது. சுந்தரத்தை கணவன் என்று நீக்கியிருந்தாலும்,பெற்ற மகனை அவளால் மனதால் நகர்த்திவைக்க முடியவில்லை.
அவளருகே மெதுவாக வந்த ஹாரி தான் மேலே அணிந்திருந்த ப்ளேசரை கழட்டி அவளுக்கு போர்த்திவிட்டார். கணவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு தன்னை அதற்கு மேலும் கட்டுப்படுத்திக்கொள்ள இயலாமல் அவரது இடுப்பை கட்டிக்கொண்டாள். அவளை தலைகோதி வீட்டுக்குள் அழைத்துச்சென்றார் அந்த காதலர்.
அதற்குப்பிறகு ரங்கன் தனது அம்மாவுக்கு பேசுவதில்லையானாலும் ஹாரியுடனான அவனது நட்பு தொடர்ந்தது. ஆம்,உறவு கடந்து வயது வரையறை மீறிய நட்புதான் அவர்களுக்குள் இப்போதைக்கான அடையாளம். அவரிடம் பேசும்பொழுது பொதுவில் பெற்றவளை பற்றியும் குட்டி தம்பி தங்கைகள் பற்றியும் கேட்டுக்கொள்வதுடன் சரி.
ஹாரியும் தனது மனைவியிடம் ரங்கன் பேசுவதை பற்றியெல்லாம் சொல்லி அவளை வருந்த செய்ய விரும்பவில்லை.
பலக்லைக்கழகம் மீண்டும் விடுமுறை நாட்கள் முடிந்து மீண்டும் தொடங்கியது. ரங்கன் வெகு சிரத்தை எடுத்துக்கொண்டு படித்தான். அவனுக்கு சாதாரண நிலை தேவையில்லை. அசுர வளர்ச்சி தேவை.அதுதான் அவன் பட்ட அவமானங்களை துடைக்கும் என்று தீவிரமாக நம்பினான்.
பயிற்சிக்காக அவன் தெரிவு செய்திருந்த நிறுவனத்திலேயே அவனுக்கு வேலையும் கிடைத்துவிட , வேகமாக படிப்பை முடித்துவிட்டு அந்த வேலையில் சேர்ந்து விட்டான். மீண்டும் மாலை நேரத்தில் எம்.பி ஏ சேர்ந்தும் விட்டான். மனம் முழுவதும் வைராக்கியம் .தினமும் சீரங்கத்திற்கு பேசுவது மட்டும் மாறவே இல்லை. அவர்களும் அவனை வரசொல்லியெல்லாம் கேட்கவில்லை.அவர்களுக்கு ரங்கன் நிமிர்ந்தால் போறும்.
இப்ப்டோதும் அவன் சியாட்டெல் வீட்டுக்கு செல்கிறான்.அங்கே இப்போது ருக்மிணியின் தரிசனமும் தாராளமாகவே கிடைக்கிறது.நேரடியாக இவனிடம் அவள் பேசியது இல்லை. வெளியே தோட்டத்தில் நாட்டியம் ஆடிக்கொண்டிருப்பாள். இவன் பார்த்தபடியே வீட்டுக்குள் சென்று அவள் அப்பாவையும் வீட்டையும் பார்ப்பான் . ருக்மிணியின் அம்மா போட்டுத்தரும் அருமையான கும்பகோணம் பில்டர் காபியை சுவைத்துவிட்டு கிளம்பி விடுவான். வாசலில் இருக்கும் ருக்மிணிக்கு கவனம் முழுவதும் நம் ஹீரோ ரங்கனிடம் தான்.
அனிருத் வீட்டிலிருந்தால் ரங்கனுடன் அவனும் சேர்ந்து கொண்டு ஏதாவது பேசிக்கொண்டிருப்பான். ருக்மிணி ரங்கனை ஆழப்பார்ப்பது அனிருத்துக்கு நன்றாகவே தெரியும். அதை பலசமயங்களில் ஊர்ஜிதம் செய்து கொண்டிருந்தான். நேரடியாக அக்காவிடம் கேட்க தயக்கம். அதே சமயத்தில் ரங்கராஜனின் பார்வை ஒருமுறை கூட பெண்ணின் மீது படிந்தது இல்லை (?)
ரங்கனின் வருகைக்கு ருக்மிணி காத்திருப்பது வழமையானது. ருக்மிணி தனது படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்லவும் தொடங்கி விட்டாள். வீட்டிலிருக்கும் சமயங்களில் நாட்டிய வகுப்புகள் எடுப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டாள். ருக்மிணியின் பெற்றவர்கள் ரங்கனின் வீடு அருகில் விலைக்கு வந்த பங்களாவை விலைக்கு வாங்கி விட்டார்கள்.
ஒரு நல்ல நாளில் சிறிய அளவில் கிருக பிரவேசமும் நடத்தினார்கள். ange அமெரிக்காவில் இருக்கும் அவர்களது மிக நெருங்கிய உறவினர்கள், ருக்மிணியின் தாத்தா பாட்டி நெருங்கிய நண்பர்கள் அதோடு ரங்கராஜன் .மொத்தமே இருபது பேர் தான் வந்திருந்தது. ரங்கன் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தான். காரணம் ரங்கன் தனது வேலையை இங்கே சியாட்டலுக்கு மாற்றிக்கொண்டு வந்துவிட்டான். முன்பைவிட சம்பளமும் அதிகம்.
தனது அப்பாவின் வீட்டை தனக்கு ஏற்றவாறு புதுப்பித்துக்கொண்டான்.ஹாரி இவனுக்கு தேவையான பல உதவிகளை செய்தும் தந்தார்.மாலதிக்கு இன்னமும் தெரியாது,மகன் தங்களது அருகிலேயே வந்துவிட்டான் என்று. அங்கே வந்த கொஞ்ச மாதங்களில் இந்தியா சென்றவன் அங்கே சீரங்கத்தில் இருக்கும் தனது மனதுக்கு பிடித்தவர்களுக்கு பாஸ்போர்ட்,விசா ஏற்பாடு செய்துவிட்டுத்தான் மீண்டும் கிளம்பினான்.
அவன் அப்பா சுந்தரம் அமேரிக்கா மண்ணை மிதிக்கவே விரும்பவில்லை என்றார்.மகனை விட்டு வரமுடியாது என்றார்கள் முதியவர்கள். எல்லாவற்றையும் சரிக்கட்டி அவர்கள் கிளம்புவதற்கு ஏற்பபடுகளை செய்துவிட்டு கிளம்புவதற்குள் அவனது இரண்டு மாத விடுமுறையும் நிமிஷங்களாக கரைந்தது.
நடுவில் தனது நண்பர்களை சென்று பார்த்துவிட்டு வந்தான். திருச்சியில் தான் படித்த பள்ளியில் சென்று அங்கே ஆசிரியர்களை சந்தித்து வணங்கிவிட்டு வந்தான். ஏனோ மனதின் மூலையில் பெங்களுர் நாட்கள் வந்து சென்றது. முணுக் எனும் வலி மனதில்.
Author: Paithani
Article Title: Arangam 13
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Arangam 13
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.