• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Arangam 11

Paithani

New member
Joined
Jun 19, 2024
Messages
19

அரங்கம் 11

"ஆழி சூழ் உலகில் அனைத்துமாய் நீ என்று உன்னிடம் அடைக்கலம் அடைந்த என்னை கைவிடலாமோ..

அன்னையாய் தந்தையாய் என்னை காத்து நிற்பாய் என்று நம்பினேன் ..என்னை மறந்திடலாமோ .."------ என்று தனது இரு கரங்களையும் கூப்பிக்கொண்டு தனது முன்னே வைக்கப்பட்டிருந்த வெங்கடாஜலபதி படத்தை பார்த்து கண்ணீர் மல்க நின்றிருந்தான் ரங்கராஜன். அப்பாவிற்கு உடல்நிலை தேறியிருக்கிறது ஆனாலும் வயிற்றில் காணப்படும் மாறுதல்கள் வேறு சந்தேகத்தை கொடுப்பதாக இருக்கிறது என்கிறார்களாம் மருத்துவர்கள். தாத்தா வழக்கம் போல் பேசிவிட்டு சென்றாலும்,கோதை பாட்டியால் தனது மன பாரத்தை சுமக்க முடியாமல் அதை இறக்கி வைக்கும் சுமைதாங்கியாக ரங்கனிடம் சொல்லி அழுது தீர்த்தாள். தன்னுடைய மகன் என்று ஒரு காலத்தில் கர்வம் கொண்டது போக , தன் கண்ணே பட்டுவிட்டதை போல அவன் வாழ்க்கையில் அடுத்தடுத்த அடிகள். மன நலம் பாதிப்புடன்,இப்போது உடல்நலனுக்கு வந்திருக்கும் பிரச்சனை.

பாட்டி அழுவதை கேட்ட ரங்கனுக்கோ,இந்தக்கணமே இந்தியா சென்று விடவேண்டும் என்ற வேகம். ஆனால் சுந்தரம் தடுத்துவிட்டார்.

"ரங்கா..இப்போதைக்கு எனக்கு இருக்கும் பெரிய ஆறுதல் நீ மேலே படிக்க அங்கே யு.எஸ் போயிருக்கறது தான். என்னோட மகனா பொறந்தது தவிர வேறே உன்னோட தப்பு என்ன இருக்கு? உன்னோட வாழ்க்கைல ரொம்ப மேலோட்டமா இருந்துட்டேன்ங்குற குற்ற உணர்ச்சி இப்போதான் மட்டுப்பட்டிருக்கு.நீ இங்கே என்ன பார்த்துக்கறேன்னு வந்து அதை ஒண்ணுமில்லாம பண்ணிடாதே."

அப்பாவின் தவிப்பு புரிந்தவனாக,"இங்கே வந்து படிக்கறதுனாலேயோ ,இல்லாட்டன்னா வாழ்க்கையே போய்டும்னோ ஒண்ணுமே இல்லப்பா.திறமை இருக்கிறவன் எங்கே வேணும்னாலும் பொழச்சுப்பான்.எனக்கு அமெரிக்காவும்

ஒண்ணுதான்,நம்ம அக்கிரஹாரமும் ஒண்ணுதான். நீ,தாத்தா-பாட்டி நீங்க மூணு பேரும் இருந்தா போறும் "என்றெல்லாம் சொல்லி பார்த்தான்.சுந்தரம் எதற்கும் பதில் சொல்லவில்லை.

இங்கே கண்முன்னே இருக்கும் கடவுள் படத்திடம் முறையிட்டு அழுவதை தவிர ரங்கராஜனுக்கு வேறு வழி இருக்கவில்லை. கண்ணீர் அவன் கூப்பியிருந்த கரங்கள் வரை வழிந்தது. அவனது நண்பர்கள் அவனை தேற்ற முயற்சி செய்தார்கள். மனதின் வலியை வைராக்கியமாக வைத்துக்கொண்டு கல்லூரி சென்று வரத்தொடங்கினான்.

பணம் என்பது அவனுக்கு இப்போது பெரிய பிரச்சனையாக இல்லை.இங்கிருந்து செல்லும் அநேக மாணவர்களுக்கு அது மிகப்பெரிய விஷயம். வயிற்றை கட்டி வாயை கட்டி ,கட்டிய வீட்டை அடமானத்தில் வைத்து , பணம் இருப்பதாக கணக்கு காட்ட ஏற்பாடுகள் செய்து ,வங்கியில் கல்விக்கடன் வாங்கி என்று எத்தனை செய்தபொழுதும் வெளிநாட்டுக்கு சென்ற பிறகு கட்டாயம் ஒரு பகுதிநேர வேலை தேடிக்கொண்டே ஆகவேண்டும் என்பது எழுதப்படாத விதி.அப்போதுதான் அவர்களது நித்தியபடி விஷயங்களுக்குபணப்புழக்கம் இருக்கும். ரங்கராஜனுக்கு வெறும் பணத்திற்க்காக அல்ல,மனம் நிலையில் இருக்க வேலை கட்டாயமாக வேண்டும். அவன் படிக்கும் பலக்லைக்கழகத்தில் நூலக பராமரிப்பு பகுதியில் வேலை கிடைத்தது. அதையே தனக்கான பெரும் பாக்கியமாக நினைத்துக்கொண்டான் ரங்கராஜன்.

அமெரிக்க மண்ணை மிதித்து ஆறு மாத காலமாகியும் இன்னமும் தனது அம்மாவை சென்று பார்க்கவேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு வரவில்லை. இவனது தனிப்பட்ட எண்ணையும் கூட ரங்கராஜன் தனது அம்மாவுக்கு தெரியபடுத்தவில்லை. மாலதி மகனிடம் பேசவேண்டும் என்றால் அவனது இந்திய எண்ணில் இருக்கும் வாட்சாப் அழைப்பில் தாம் பேசியாகவேண்டும். தினமும் தனது அப்பா தாத்தா பாட்டி என்று ஒரு ரவுண்டு பேசிவிடுபவனுக்கு அம்மா எனும் உறவு சற்று தள்ளியே தெரிந்தது. 'இவ்வளவு அருமையான பிள்ளையுடன் வாழ அந்த அம்மாவுக்கு தான் கொடுப்பினை இல்லையோ 'என்று உணர்கிறேன்.

இயல்பாகவே அந்த மண்ணின் வாழ்க்கையை ஏற்றுக்கொண்டான் ரங்கராஜன். அந்த சீதோஷ்ண நிலையும் கூட அவனுக்கு ஏற்புடையதாகவே இருந்தது. அவனது நண்பர்கள் அவனை "மண்ணின் மைந்தன் "என்று கிண்டல் செய்தார்கள்.

சுந்தரத்திற்கு வயிற்றில் புற்றுநோயாக இருக்கும் என்று அஞ்சியதற்கு பதிலாக அல்சர் என்றார்கள் மருத்துவர்கள். அதற்க்கு இப்போது மருத்துவம் பார்த்துக்கொள்கிறார் சுந்தரம். நடுவில் ஒருமுறை மாலதியின் தங்கை பெங்களூருவிலிருந்து திருவரங்கம் வந்திருந்தாள் தனது குடும்பத்துடன்.அவள் நேரே வந்திறங்கியது இங்கே தனது தாய் மாமனான திருவேங்கடத்தின் அகத்திற்கு தான். " கிஞ்சித்தும் லஜ்ஜையே இல்லாம இப்படி வந்து இங்கே இறங்கியிருக்குகளே "என்று கோதை மனதிற்குள் பொருமினாலும் வாயால் ஒரு வார்த்தை சொல்லவில்லை. சுந்தரமும் தனது அத்தை மகளையும் அவளது புகுந்த வீட்டினரையும் பார்த்தானே தவிர மற்ற விஷயங்கள் பேசவில்லை. மாலதி பற்றி சுந்தரம் ஏதாவது கேட்கக்கூடுமோ என்று யோசித்த மாலதியின் தங்கைக்கு விஞ்சியது ஏமாற்றம்தான். அதோடு அத்தை அத்திம்பேர் பற்றியெல்லாம் கூட சுந்தரம் கேட்கவில்லை.

வந்தவர்களும் ஒப்புக்கு இவர்களிடம் பேசினார்களே தவிர அதில் ஆத்மார்த்தம் துளியும் இல்லை.நடந்த விஷயங்களுக்கு வருத்தம் இல்லாத அவர்களது நடத்தையை பார்த்து திருவேங்கடம் வியந்துதான் போனார்.மனிதர்களில் இப்படியும் உண்டு என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். உண்மையில் அவர்கள் வந்தது பள்ளிகளில் விடுமுறை சமயம் என்பதால் சீரங்கத்தில் இவர்கள் தங்க ஏதுவாக ஒன்றும் கிடைக்கவில்லை.அதில்தான் திடீரென மாமனின் வீடு அங்கே தானே என்று ஞானம் வந்து விட்டது மாலதியின் தங்கைக்கு. முதல்வாரம் மாமனிடம் பேசிவிட்டு அடுத்தவாரம் வந்து நின்றார்கள். மறந்தும் மாலதியின் குடும்பம் ரங்கராஜன் பற்றி எதுவும் கேட்கவில்லை.அவன் ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலையில் இருப்பான்.நமக்கேன் வம்பு என்று அமைதியாக இருந்துவிட்டார்கள். அவர்கள் வீட்டு பிள்ளைகள் இருவரும் முதல் பையன் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படிப்பதாகவும்,இரண்டாவது பெண் பள்ளிப்படிப்பில் இறுதி ஆண்டு என்றும் சொன்னான் சுந்தரத்தின் ஷட்டகர். அவ்வளவுதான் . திருவேங்கடம் ஏற்பாடு செய்ய திருவரங்க நாதனையும், உறையூர்,வயலூர் என்று ஒரு சுற்று சுற்றிவிட்டு ஐந்து நாட்கள் இருந்துவிட்டு ஒருகிலோ மாம்பழம் வாங்கிக்கொடுத்து திருவேங்கடம் தம்பதியை காலில் விழுந்து சேவித்துவிட்டு கிளம்பியது கூட்டம். திருவேங்கடத்திற்க்கு சிரிப்புதான் வந்தது. வேறு என்ன செய்யமுடியும்?

கசப்பான விஷயங்களை நினைத்து மனதை புண்ணாக்கி கொள்ள அங்கிருக்கும் மூவருக்குமே விருப்பம் இல்லை.

ரங்கராஜனிடம் பேசும்பொழுது அவன் மட்டும் அலுத்துக்கொண்டான்." நாம இப்படியே இருக்கறதுனால தான் எல்லாருமா நம்ம தலைல மொளகா அரைச்சிட்டு போறா. பார்த்துகோங்கோ.அவா எல்லாரும் கிளம்பி போனப்புறமா எனக்கு கால் பண்ணுங்கோ. என்னால இதையெல்லாம் கொஞ்சமும் ஜீரணிக்க முடியல" என்றுவிட்டான்.

மாலதி பொறுக்கமுடியாமல் ஏழு மாதங்கள் கழித்து தனது மகன் ரங்கராஜனுக்கு அழைத்துப்பேசிவிட்டாள். "ஏண்டா,நா என்ன பண்ணேன்னு எம்மேல இவ்வளவு கோவம் உனக்கு.உங்க அப்பா என்னை பத்தி தப்பா சொல்லி நன்னா கலைச்சு விட்டுருக்காரா? இல்ல பாட்டியும் தாத்தாவும் சேர்ந்து உன்னோட மனச மாத்தி வச்சிருக்காங்களா? இப்படி வன்மமா நடந்துக்கறே. ரொம்ப தப்புடா ரங்கா. உன்ன என் வயத்துல சுமந்து பெத்து,வளர்த்திருக்கேன். நீ என்கிட்ட நடந்துக்குற முறை கொஞ்சமும் சரியில்ல.நானும் எவ்வளவு நாள் பொறுக்க முடியும்?நீயா வருவேன்னு வெயிட் பண்ணியாச்சு.இனிமே முடியாது.இந்த வீக் எண்டுல நா உன்னை பார்க்க வரேன்.உன்னோட அட்ரெஸ் அனுப்பு" என்றுவிட்டு வைத்துவிட்டாள். ரங்கனை பேசக்கூட அனுமதிக்கவில்லை.ரங்கன் சிரித்துக்கொண்டான். மாலதியின் அதிரடி அவனுக்கு கொஞ்சம் பிடித்துத்தான் இருந்தது. அம்மாவுக்கு என்மேலும் பாசம் இன்னமும் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு வேலைக்கு கிளம்பிவிட்டான்.

பல்கலைக்கழகம் பத்து நாட்களுக்கு விடுமுறையில் இருக்கிறது. நூலகம் வழக்கப்படி வேலை செய்யும். மாணவர்கள் கூட்டம் அதிகமாக இல்லை ஆதலால் ரங்கனுக்கு படிக்கவென்று நிறையவே நேரம் கிடைத்தது. அவனுக்கான கணினி முன் நேரம் காலம் பார்க்காமல் அமர்ந்து கொண்டு படித்தான். சந்தோஷமாக இருந்தது. நண்பர்களுடன் திரைப்படம் சென்று வந்தான். படத்தின் காட்சிகளில் தெறித்த அதீத வன்முறையும், பாலியல் துன்புறுத்தல்களும் ரங்கனுக்கு ஏற்புடையதாக இல்லை. தலைவலி என்றுவிட்டு வீட்டுக்கு கிளம்பி வந்துவிட்டான்.

அந்த வார இறுதியில் லோங் பீச்சில் சந்திக்கலாம் என்று தனது அம்மாவுக்கு தகவல் அனுப்பிவிட்டான். தனது அறைக்கு அம்மாவை வரச்சொல்வதிலோ, கொஞ்சம் அருகில் இருக்கும் இடங்களில் சந்திக்கவோ அவனுக்கு சற்றும் விருப்பம் இல்லை. மனதில் ஒரு அந்நிய தன்மை படிந்திருக்க அதை வெளியே காட்டாதிருக்க வெகுவாக முயன்றான்.

ஞாயிறு மாலை நான்கு மணிக்கு மேல் ரங்கன் அனுப்பியிருந்த லொகேஷன் மேப் வைத்துக்கொண்டு மாலதி அங்கே வந்து சேர்ந்தாள். அவள் உருவமும்,அலங்காரங்களும் வெகுவாக அவளை மாற்றியிருந்தது . வயது கூடியது போல இல்லை.ரங்கனுக்கு சற்றே மூத்தவர் என்று வேண்டுமானால் சொல்ல முடியும்.

'அம்மா' என்று ஒருமுறை அழைப்பதற்குள் ஆயிரம் முறை மனதுள் தடுக்கியது ரங்கனுக்கு. முடிந்தவரை அந்த வார்த்தையை தவிர்த்து பேசினான்.மாலதியால் அதை புரிந்துகொள்ள முடிந்தது. கொஞ்சநேரம் இருவரும் பொதுவாக பேசிக்கொண்டிருந்தார்கள். அவனது படிப்பு,வேலை,இருப்பிடம் போன்றவற்றை அலசினார்கள்.வேறு என்ன பேசுவது என்று இருவருக்குமே குழப்பம்.

வெகுநேர தயக்கத்திற்கு பிறகு மாலதி தனது முன்னாள் கணவன்,அவனது பெற்றவர்கள் பற்றி கேட்டாள். ரங்கராஜனின் முகம் கடுத்தது. " அவங்களை பத்தி நீங்க விசாரிக்கலன்னு உங்கள நா தப்பா சொல்ல மாட்டேன்.சோ,ப்ளீஸ் ." என்று முடித்துக்கொண்டான். அதில் மகன் தன்னை எந்த இடத்தில வைத்திருக்கிறான் என்பதை தெளிவாக உணர்ந்துகொண்டாள் மாலதி. அவளிடமிருந்து ஒரு கசந்த முறுவல்.

தான் செய்தவை தவறு என்று யாராகிலும் சொன்னால் புரிந்துகொள்ளும் நிலையில் மாலதி இல்லை என்பது உண்மை. சற்று கனத்த மௌனம்.இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள். ரங்கராஜன் காய்கறிகளின் சாலட்டை ருசிக்க,மாலதி அசைவ உணவை ஒருகை பார்த்துக்கொண்டிருந்தாள். மகன் இன்னமும் சைவ பக்ஷியாக இருப்பது அவளுக்கு வியப்பாக இருந்தது. ,மனதுக்குள்,"இந்த கும்பலே அம்மாஞ்சி கும்பல்.இவனுமா? எப்போ மாறுவானோ!" என்று நினைத்துக்கொண்டாள்.

ரங்கன் மாலதியையும்,அவள் உணவு முறையையும் பெரியதாக கண்டுகொள்ளவில்லை. சந்திப்பு முடியும் நேரம்.தனது வீட்டு முகவரியையும்,தனது இன்னொரு அலைபேசி எண்ணையும் மகனிடம் கொடுத்துவிட்டு கண்டிப்பாக ஒருவாரமாவது வந்து தன்னுடன் தங்கவேண்டும் என்றும் மிரட்டிவிட்டு மாலதி கிளம்பினாள்.

அதற்குப்பிறகும் மாலதி அடிக்கடி அழைத்து பேசினாள். ஆனால்,ரங்கனுக்கு மனதின் இறுக்கம் இன்னமும் தளரவில்லை. சுமூகமாக அம்மாவுடன் அவனால் பேசவும் முடியவில்லை.

தன்னுடைய நிலைமையை எத்தனையோ முறைகளில் அம்மாவிடம் சொல்லிப்பார்த்துவிட்டான்.மாலதிக்கு உண்மையாகவே புரியவில்லையா அல்லது புரிந்துகொள்ள இஷ்டமில்லையா என்பது அவளுக்கு மட்டுமே தெரியும். இத்தனை வருஷங்களாக பிரிந்திருந்த மகன்.தற்போது தன்னுடன் இல்லை என்றாலும் சற்று தொலைவிலாவது இருக்கிறான் .அவனை மீண்டும் தவறவிடக் கூடாது என்று கூட யோசித்திருக்கலாம். அம்மாக்களை புரிந்துகொள்வது அவ்வளவு எளிது அல்லவே!

முன்பெல்லாம் வீரியமாக வார்த்தைகளை அம்மாவிடம் பேசும் ரங்கன் இப்போது சற்றே தணிந்து இருந்தான்.மாலதி ஏதாவது கேட்டால் பொறுமையாக பதில் சொல்லவும் ஆரம்பித்திருந்தான்.

"என்ன இருந்தாலும் மாலதி உன்னோட அம்மா ரங்கா.அவளை வெறுத்துடாத. மனசு நோக பேசிடாத. பெத்தவளை மனஸு நோக வச்சிட்டு பிள்ளை நன்னா இருக்கவே முடியாது" என்று சுந்தரம் உணர்ந்து தனது மகனிடம் சொன்ன வார்த்தைகள் கூட காரணமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் ரங்கனிடம் மாற்றங்கள் வந்தது உண்மையே !

 

Author: Paithani
Article Title: Arangam 11
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
214
தாயாக இருந்தாலும்
திருந்தாத ஜென்மம்...
தன் வாழ்க்கை
தான் விருப்பம் என்று
திருந்தவில்லை இன்னும் மாலதி.....


மகனின் தவிப்பை
மாலதிக்கு புரிய வாய்ப்பிலை.....
 
Top Bottom