• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

வான பிரஸ்தம் -20

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
168
வான பிரஸ்தம் -20
அடுத்த நாள் பரபரப்பாக வேலைகள் ஆரம்பித்தன. அஷ்வின் தனக்குத் தெரிந்த

லாயர் ஒருத்தரைக் கூட்டிக் கொண்டு போய் முதல் வேலையாக ஜில் ஜில் ரமாமணியையும் ஜித்தனையும் பெயிலில் எடுத்து விட்டான்.



இரண்டு பேர் மேலேயும் அதிகம் பெரிய குற்றச்சாட்டுகள் இல்லை. அதுவுமில்லாமல் அந்த வக்கீல் சொல்லிக் கொடுத்த படி வேறு யாரோ என்று தவறாக நினைத்துத் தாங்கள் தொழிலதிபர் நிஷாந்தியிடம் பேசியதாகச் சொல்லி மன்னிப்பும் கேட்க அவர்கள் தயாராக இருந்ததால் விரைவில் கேஸை முடித்து விடுவதாகப் போலீஸ் தரப்பில் இருந்து உறுதியும் தந்து விட்டார்கள்.



அஷ்வின் அவர்களைத் தன்னுடைய வீட்டிற்குக் கூட்டிச் சென்று விட்டான். ஒரு வாரத்திற்கு முக்கியமான வேலைகள் இருப்பதால் அங்கேயே தங்கிக் கொள்ளச் சொல்லி அவர்களிடம் கூறி விட்டான்.



ஆகாஷ் தனக்குத் தெரிந்த ஒரு பிரைவேட் டிடெக்டிவைப் பிடித்து வழக்கறிஞர் சிவலிங்கத்தைப் பற்றிக் கண்டுபிடித்துத் தனக்குத் தகவல் தரும்படி சொல்லி விட்டு வந்தான்.



அன்று வெள்ளிக்கிழமை இரவு .திரும்பவும் அஷ்வினின் வீட்டில் எல்லாப் பெற்றோரும் கூடினார்கள். தாத்தா, பாட்டி பேய்கள் எல்லாம் அத்வைதின் ரூமில் கூடி அங்கு நடப்பவற்றை கவனித்துக் கொண்டிருந்தனர்.



முதலில் ஜில் ஜில் ரமாமணியும் ஜித்தனும் அவர்கள் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டார்கள்.



" எல்லோரும் எங்களை மன்னிச்சுடுங்க. ஏதோ வயிற்றுப் பிழைப்புக்காக ஏமாத்து வேலைகளில் இறங்கிட்டோம். ஆனால் தாத்தா, பாட்டிகளுக்கு அவர்கள் கேட்ட உதவியைச் செய்து விட்டு உங்களிடம் உண்மையைச் சொல்வதாகத் தான் இருந்தோம். எங்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை அவர்கள் எங்கள் பேரில் வங்கியில் கணக்கு ஆரம்பித்து எங்களுக்காக விட்டு விட்டுப் போயிருக்காங்க. அதை வச்சு நாங்க எளிமையான வாழ்க்கை வாழ்ந்து உழைத்துப் பிழைப்போம். இனி இந்த மாதிரி எந்த ஏமாத்து வேலையும் செய்ய மாட்டோம்."



" அதை விடுங்க. எங்களுக்கு இப்போது தான் முதியோர் இல்லம் பத்தின விஷயங்கள் தெரிய வந்தன. நாங்க அவர்களுக்கு நேர்ந்த அவலங்களைத் தோண்டியெடுத்து உண்மை என்னவென்று கண்டுபிடிக்கப் போறோம். நீங்க இரண்டு பேரும் எங்களுக்கு இந்த விஷயத்தில் உதவி செய்ய வேண்டும். நீங்கள் இரண்டு பேரும் கிராமத்திற்குப் போய் விட்டு வந்ததும் என்ன ஆச்சுன்னு மட்டும் சொல்லுங்க."



" நாங்கள் கிராமத்தில் இருந்து திரும்பி வந்ததும் வானப்ரஸ்தத்திற்கு வந்தால் அங்கு தாத்தா, பாட்டிகள் யாருமே இல்லை.

அந்த இடத்தை வித்துட்டு எங்கயோ வெளியூருக்குப் போயிட்டாங்கன்னு

சொன்னாங்க. எங்களால் நம்பவே முடியலை. அதை விற்பதற்கு இஷ்டம் இல்லை என்று தானே போராடிட்டு இருந்தாங்க? அவர்கள் எப்படி திடீர்னு விற்று விட்டுப் போயிருக்க முடியும்? அதுவும் எங்களிடம் ஒண்ணுமே சொல்லிக்காம எப்படிப் போயிருக்க முடியும்? ஒண்ணுமே புரியவில்லை. திடீரென்று பார்த்துக் கொண்டிருந்த வேலையும் போய் வருமானமும் நின்று போனதால் வேறு வழி இல்லாமல் தவித்துப் போய் ஏமாத்து வேலைகளில் இறங்கி விட்டோம். முதியோர் இல்லத்தைப் புதிய ஆட்கள் ஆக்கிரமித்து இடிப்பதற்கான ஆயத்தங்கள் ஆரம்பித்து விட்டன. இங்கே வந்த போது தான் அவங்க இறந்து போன விஷயமே எங்களுக்குத் தெரிய வந்தது."



" அவர்களுக்கு நடந்த அநீதியைக் கண்டுபிடித்துக் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தரணும். இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? விஷாகாவிற்கு என்ன ஆச்சுன்னும் தெரிஞ்சுக்கணும்."



" இதில் விஷாகாவிற்கும் சம்பந்தம் ‌இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கு. அவள் மீது முதியவர்களுக்கு இருந்த பாசத்தையும் ஒட்டுதலையும் தவறாக உபயோகித்து அவள் தான் தீயவர்களுக்குத் துணை போனாளோ என்று கண்டுபிடிக்கணும். அப்புறம் வழக்கறிஞர் சிவலிங்கம் என்ன ஆனார்? கமலாகர் அனுப்பிய மெயிலை அவர் பாத்தாரா இல்லையா என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும்."



ஆகாஷ் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் அவனுக்கு பிரைவேட் டிடெக்டிவிடம் இருந்து ஃபோன் வந்தது. பேசி விட்டு மலர்ந்த முகத்துடன் வந்தான் ஆகாஷ்.



" நல்ல விஷயம் தான்.சிவலிங்கம் இன்னும் ஆஸ்திரேலியாவில் தான் இருக்கிறாராம். அவருக்கு ஆக்ஸிடென்ட் ஆகி ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்ததால் திரும்ப முடியலையாம். இப்போது சரியாகி விட்டதால் ஞாயிறு காலை சென்னை திரும்பி வராராம். நாம் ஞாயிறு மாலையே அவரைப் போய்ப் பாத்துப் பேசலாம்."



" அடுத்துக் கீழே உடல்கள் புதைக்கப் பட்டிருக்கும் இடத்தை எப்படித் தோண்டுவது என்று பார்க்க வேண்டும்."



அதற்கும் அடுத்த நாள் காலையில் தானாகவே ஒரு வழி கிடைத்தது. முதல் நாள் இரவு சென்னையில் கனத்த மழையுடன் பலத்த காற்றும் வீசியதில் அந்தக் கல்யாண முருங்கை மரம் சாய்ந்து குழந்தைகள் விளையாடும் இடம் பெரிய பாதிப்புக்குள்ளானது. அதை உடனடியாக சரி செய்ய வேலையாட்களைக் கூட்டி வந்து அந்த இடத்தைச் சுற்றித் தோண்ட ஆரம்பிக்க ஒவ்வொன்றாக ஆறு சடலங்கள் வெளிவந்தன.



உடனே போலீஸ் வந்து விட்டது. மீடியா ஆட்களும் வந்து விட இந்த விஷயம் பெரிய பரபரப்பான ந்யூஸாகி விட்டது.

உடல்கள் அகற்றப்பட்டு சோதனைகளுக்காக அனுப்பப் பட்டன.



அங்கே நடந்த அமர்க்களங்களை கண்ணுக்குத் தெரியாதபடி அருவங்களாக நின்று பார்த்துக் கொண்டிருந்த தாத்தா பாட்டிகளுக்கு அந்த சடலங்கள் வெளியே எடுக்கப் பட்டவுடன் அதீதமான அமானுஷ்ய சக்தி வந்து விட அங்கிருந்து கிளம்பினார்கள்.



அவர்களுடைய முதல் வேலை விஷாகாவைத் தேடிக் கண்டு பிடிப்பது தான்.அதற்காகக் கிளம்பி விட்டார்கள்.



இளம் தொழிலதிபர் நிஷாந்தியின் வீடு, இல்லை இல்லை பெரிய மாளிகை. தனது வீட்டின் வரவேற்பறையில் உட்கார்ந்து மடியில் லேப்டாப். கையருகில் எடுக்க வசதியாக ஸெல்ஃபோன்.



டி.வியில் ந்யூஸ் சானல்களை ஸர்ஃபிங் செய்து கொண்டு

லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தவள் அப்போது வந்த ந்யூஸைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தாள்.



" அப்பா, அப்பா சீக்கிரம் இங்கே வாங்க.

டி.வியில் முக்கியமான ந்யூஸ் வருகிறது. நம்ப ப்ராஜெக்ட் சம்பந்தப் பட்டது."



"என்னம்மா என்ன ஆச்சு? அப்படி என்ன ந்யூஸ்?"



வெளியே வந்தார் ‌அந்த பிரபல கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியின் நிர்வாகி ஆன அவளுடைய தந்தை. தனது அறையில் இருந்து வெளியே வந்து தனது மகளின் அருகே வந்து அமர்ந்தார்.



" ஓ.எம்.ஆரில் நம்முடைய புதிய ப்ராஜெக்ட் போன வருடம் முடிந்து ஹேண்ட் ஓவர் செஞ்சோமே, அந்தக் குடியிருப்பு வளாகத்தில் ஆறு சடலங்களைத் தோண்டி எடுத்திருக்காங்க. உங்களுக்கு இதில் எதுவும் சம்பந்தம் இல்லையே? ஏதாவது சம்பந்தம் இருப்பதாகத் தெரிந்தால் நான் இப்போது கவனித்துக் கொண்டிருக்கும் பொறுப்புகளை எல்லாம் அப்படியே போட்டுட்டு நான் திரும்பவும் யு.கே.போய் விடுவேன்."



" இல்லைம்மா. எனக்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லைம்மா. நான் அந்த மாதிரி ஆள் இல்லைம்மா. எனக்கு இந்த அடிதடி, கொலை எதிலும் ‌எப்போதுமே ஈடுபாடு இருந்ததில்லை. ஏம்மா, என் மேல் சந்தேகப் படறே? அதெல்லாம் நான் ஒன்றும் தப்பான காரியங்கள் செய்பவனில்லைம்மா."



" அப்புறம் ஏம்பா அம்மா உங்களை விட்டுப் பிரிந்து போனாங்க? அக்காவையும் அம்மாவையும் சின்னக் குழந்தையிலேயே பிரிஞ்சு நான் ஏம்பா தனியாவே வளந்தேன்? அதுவும் சின்னக் குழந்தையில் இருந்தே வெளிநாட்டில் வளர்ந்த எனக்கு அம்மாவின் முகமும் அக்காவின் முகமும் மறந்தே போச்சேப்பா? அக்கா பேரென்ன? விஷாகா தானே? அன்னைக்கு நான்

ஓ.எம்.ஆர் அருகில் தாழையூர் பக்கத்தில் புது ப்ராஜெக்ட் நடக்கும் அந்த ஸைட்டைப் பார்க்கப் போன போது யாரோ இரண்டு பேர் வந்து என்னை விஷாகான்னு கூப்பிட்டுத் தகராறு செஞ்சாங்களே? விஷாகாவுக்கும் எனக்கும் நிச்சயமாக உருவ ஒத்துமை இருக்குமே? அதனால் அவர்கள் தவறாக நினைத்ததில் ஆச்சர்யம் இல்லையே? விஷாகாவும் அம்மாவும் சென்னையில் தான் இருக்கிறார்களா? மும்பையில் இருப்பதாகத் தானே நீங்கள் என்னிடம் சொன்னீங்க? என்னிடம் இன்னும் எத்தனை விஷயங்களை மறைச்சிருக்கீங்க? உண்மைகளைச் சொல்லி விடுங்கள். அந்த ஆட்களைப் பற்றிப் போலீஸில் கம்ப்ளைண்ட் கொடுத்துப் போலீஸும் அவர்களைக் கைது செய்து விட்டார்கள். எனக்கும் அப்புறம் தான் ஞாபகம் வந்தது. அக்கா பேரும் விஷாகா தான் என்பது கேட்டார் தான் தோணுச்சு. நான் நாளைக்கே போய் அந்த கம்ப்ளைண்டை வாபஸ் வாங்கப் போறேன்."



" அவர்களுக்கு விஷாகாவைப் பற்றி என்ன தெரியும் என்று விசாரிச்சு அம்மாவையும் அக்காவையும் பத்தி ஏதாவது தெரியுமான்னு கேட்டுப் பாக்கறேன்."



ஒன்றும் பதில் பேசாமல் திகைத்துப் போய் நின்றிருந்தார் நிஷாந்தியின் தந்தை.



அவர்கள் பேசியதையெல்லாம் ஒளிந்து நின்று கேட்டுக் கொண்டிருந்த ஒரு வேலைக்காரன் வேகமாகத் தோட்டத்துப்

பக்கம் சென்று யாருக்கோ அவசர அவசரமாக ஃபோன் செய்தான்.
 

Author: SudhaSri
Article Title: வான பிரஸ்தம் -20
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom