• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

வான பிரஸ்தம் -18

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
168
வான பிரஸ்தம் -18
வானப்ரஸ்தத்தில் அன்றைய மாலைப் பொழுது ஆரம்பிக்கையில் தாத்தா, பாட்டிகள் மனம் நிறையக் கவலையுடனும் டென்ஷனுடனும் காத்துக் கொண்டிருந்தார்கள். தேவையில்லாமல் வெளியே தேடிக் கொண்டு போகவும் முடியாது. போனாலும் யார் போவது? முதியோர் இல்லத்தில் இருக்கும் மற்ற தாத்தா பாட்டிகளின் பாதுகாப்பு அல்லவா பாதிக்கப் படும்!.



அந்த சமயத்தில் தான் அந்த ஃபோன் வந்தது. கமலாகர் தாத்தா தலையில் அடிபட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்தார். அவருடைய சட்டைப் பையில் இருந்த ஃபோனில் இருந்து யாரோ கூப்பிட்டார்கள்.



உடனே மதன் தாத்தாவும் நல்லசிவமும் அங்கிருந்து அவசர அவசரமாகக் கிளம்பி அந்த அட்ரஸுக்குச் சென்றார்கள்.ஃநல்ல வேளையாக இவர்கள் அந்த ஹாஸ்பிடலை அடைந்த சமயம் கமலாகருக்கு நினைவு வந்திருந்தது.



தலையில் பலமான அடி.தையல் போட்டுக் கட்டுப் போட்டிருந்தார்கள். வேறு ஒன்றும்

பாதிப்பு இல்லாததால் அவரை உடனே டிஸ்சார்ஜ் செய்து விட முதலில் அவரை அங்கிருந்து கூட்டிக் கொண்டு கிளம்பினார்கள்.



மற்ற விஷயங்களை எல்லாம் முதியோர் இல்லத்தில் போய்ப் பேசித் தெரிந்து கொள்ளலாம் என்று அங்கு போய்ச் சேரும் வரை அவரிடம் ஒன்றும் கேட்கவில்லை. மற்ற நண்பர்களும் பயங்கர டென்ஷனில் தான் காத்துக் கொண்டிருந்தார்கள்.



கமலாகர் என்ன‌ நடந்தது என்று வானப்ரஸ்தத்தை அடைந்ததும் விரிவாக எடுத்துச் சொன்னார்.



கால் டாக்ஸியில் அவர்கள் இரண்டு பேரும்

போய்க் கொண்டிருந்த போது வழியில்

கொஞ்சம் ஆள் நடமாட்டமில்லாத சாலையில் காரைக் கையைக் காட்டி நிறுத்தினார்கள் இரண்டு பேர். ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் அவளுடைய கணவனும்.



"மனைவியை அவசரமாக மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்ல வேண்டியிருக்கிறது. வேறு எந்த வண்டியும் கிடைக்கவில்லை. எங்களை வழியில் ஏதாவது மருத்துவமனையில் இறக்கி விட

முடியுமா?"



என்று கெஞ்சினார்கள். அந்தப் பெண்ணும் வலியில் துடித்துக் கொண்டிருந்தாள்.

ஏற்கனவே இரக்க சுபாவம் உடைய கமலாகரும் விஷாகாவும் அவர்களை வண்டியில் ஏற்றிக் கொண்டார்கள். கமலாகர் முன் சீட்டில் டிரைவர் அருகில் அமர்ந்து கொண்டார். அந்த கர்ப்பிணிப் பெண்ணும் அவளுடைய கணவனும் பின் ஸீட்டில் விஷாகாவுடன் சேர்ந்து அமர்ந்து கொண்டனர்.



சிறிது நேரம் சென்றதும் கமலாகருக்குப்

பின்னால் உட்கார்ந்திருந்த அந்தக் கணவன் ஏதோ கர்சீப்பைத் தனது முகத்தில் வைத்து அமுக்கியதும் தான் மயங்கியதாகவும் மயக்க நிலைக்குச் சென்ற சமயத்தில்

விஷாகாவின் கத்தல் சத்தம் கேட்டதாகவும்

சொல்லி முடித்தார்.



"கண்ணை விழித்துப் பார்த்த சமயம்

அந்த ஹாஸ்பிடலில் இருந்தேன். ரோடில் மயங்கிக் கீழே கிடந்த என்னை யாரோ ஒரு நல்ல மனிதர் கொண்டு வந்து சேர்த்ததாகச் சொன்னார்கள். நல்லவேளையாக என்னுடைய ஸெல்ஃபோனும் பர்ஸும் ஆதார் கார்டும் பத்திரமாக எனது சட்டைப் பையில் இருந்தன. அதனால் உடனே உங்களுக்குத் தகவல் கிடைத்து விட்டது.

ஆனால் விஷாகா என்ன ஆனாள் என்று தெரியவில்லை. நான் அவளுடன் சென்றதால் ஒரு பயனுமில்லை. மதனோ இல்லை முத்தரசுவோ போயிருந்தால் அந்த ஆட்களை எதிர்த்து சமாளித்திருக்கலாம்."



" இல்லை கமலாகர். நாங்கள் போயிருந்தாலும் எங்களுக்கும் இதே கதி தான் ஆகியிருக்கும். எதிர்பாராமல் தாக்குதல் வரும் போது நாம் என்ன செய்ய

முடியும்?"



விஷாகாவைப் பற்றி ஒரு தகவலும் தெரியவில்லை. அவள் கடத்தப் பட்டு விட்டாள் என்று மட்டும் புரிந்தது. அடுத்த

நாளே போலீஸிலும் சென்று கம்ப்ளைண்ட் கொடுத்தார்கள். விஷாகாவின் குடும்பத்தைப் பற்றியும் வேறு எந்தத் தகவலும் அவர்களுக்குத் தெரியாது. வழக்கறிஞரும் இந்தியாவில் இல்லை. அவருக்கு கமலாகர் ஒரு மெயில் அனுப்பினார்.



கால் டாக்ஸி டிரைவரைப் பற்றித் தெரிந்து கொள்ள ஃபோன் செய்தால் அந்த வண்டியும் டிரைவருமே இந்த சம்பவம் நடந்த நாளில் இருந்தே திரும்பி வரவில்லை என்ற தகவல் தான் கிடைத்தது.



இரண்டு நாட்கள் கழித்து அவர்களுக்கு ஒரு ஃபோன் வந்தது.



" விஷாகாவை உயிருடன் பார்க்க வேண்டுமானால் நாங்கள் சொல்லும் இடத்திற்கு உங்கள் வீட்டுப் பத்திரங்களோடு நாங்கள் சொல்லும் நேரத்திற்கு நீங்கள் எல்லோரும் வரவேண்டும். போலீஸிடமோ இல்லை வேறு யாரிடமோ இந்த விஷயத்தைச் சொன்னால் விஷாகாவின் கைவிரல்களை வெட்டி நாளை அனுப்புவோம். உங்களுடைய நடவடிக்கைகளை நாங்கள் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறோம். நீங்கள் என்ன செய்தாலும் நாங்கள் கண்டு பிடித்து விடுவோம்" என்று சொல்லி ஃபோனை கட் பண்ணி விட்டார்கள்.



அடுத்து ஒரு மணி நேரம் கழித்து இன்னொரு புது நம்பரில் இருந்து ஃபோன் வந்தது.



" என்ன சம்மதமா? வருகிறீர்களா நாங்கள் சொல்லும் இடத்திற்கு?"



" வருகிறோம். விஷாகாவை ஒன்றும் செய்ய வேண்டாம். அவளை எங்களுடன் ஒரு முறை பேச வையுங்கள். அப்போது தான் நீங்கள் சொல்வதை நம்புவோம்."



" இதோ அவளுடைய குரலைக் கேளுங்கள். அவளுடைய படத்தை இந்த நம்பருக்கு அனுப்புகிறோம்" என்று சொல்லி கட் பண்ணினார்கள்



விஷாகாவின் வலியுடன் கத்திய அலறல்கள் கேட்கவே மனதிற்குக் கஷ்டமாக இருந்தன. அவளுடைய ஃபோட்டோவும் வந்தது.ஒரு சேரில் கை கால்கள் கயிற்றால் கட்டப்பட்டுக் கண்களிலும் துணியால் மறைத்துக் கட்டியிருந்தார்கள்.



" முட்டுக்காடு போகும் வழியில் நாங்கள் அனுப்பும் இந்த அட்ரஸுக்கு நீங்கள் ஆறு பேரும் டாக்குமெண்ட்களோடு வந்து விடுங்கள். இரவு சரியாக ஒன்பது மணிக்கு வரவேண்டும். நீங்கள் எல்லோரும் வரவேண்டியது முக்கியம். உங்களுடைய ஒவ்வொரு செயலையும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறோம். உங்களுடைய ஃபோன்களும்

டேப் செய்திருக்கிறோம். யாரையும் தொடர்பு கொள்ள முயற்சி செய்தால் எங்களுக்குத் தெரிந்து விடும்."



என்ன செய்வதென்று புரியாமல் திகைத்தார்கள். அவர்கள் கொடுத்த அட்ரஸைத் திரும்பத் திரும்பப் பார்த்து

விட்டு வேறு வழியில்லாமல் அங்கு கிளம்பத் தயாரானார்கள். டாகுமெண்டின் ஒரிஜினல் அவர்களிடம் இல்லை. வழக்கறிஞர் சிவலிங்கம் கஸ்டடியில் தான் இருந்தது. அவரும் வெளி நாட்டில் இருக்கிறார்.



தங்களிடம் இருந்த ஃபோட்டோ காப்பியை எடுத்துக் கொண்டு தங்களுடைய ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டார்கள் தற்காப்பிற்காக.மதன் தன்னுடைய கன்னையும் முத்தரசு ஒரு கத்தியையும் தான். வேறென்ன அந்த முதியவர்களிடம் ஆயுதங்கள் இருக்க முடியும்?



ஒரே ஒரு நல்ல காரியம் கிளம்புவதற்கு முன்னால் யோசித்து செய்து விட்டு கிளம்பினார்கள். வழக்கறிஞர் சிவலிங்கத்திற்கு கமலாகர் ஒரு விரிவான மெயில் அனுப்பினார். தங்களுக்கு தற்போது நடந்துகொண்டிருந்த பிரச்சனைகளை விளக்கி விஷாகாவும்

கடத்தப்பட்டு இருக்கும் விஷயத்தையும் அதில் விளக்கி இருந்தார்.



கடத்தல்காரர்களுடைய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு அவர்கள் சொன்ன இடத்திற்கு கிளம்பி கொண்டிருக்கிறோம் என்றும் எழுதினார். அவருக்குத் தங்களைப் பற்றிய தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் அந்த மெயிலை எழுதினார்.



ஆறு பேரும் எட்டு மணி வாக்கில் கிளம்பித்

தயாராக நிற்கையில் வாசலில் ஒரு டாக்ஸி அவர்கள் கூப்பிடாமலே வந்து நின்றது.

அவர்களை அழைத்துவர அந்தக் கடத்தல்காரனே ஏற்பாடு செய்திருந்தான்.



கடத்தல்காரன் கொடுத்த அட்ரஸ் முட்டுக்காடு போகும் வழியில் ஜன நடமாட்டம் இல்லாத தனியான ஒரு இடத்தில் கட்டப்பட்ட ஒரு பங்களாவாக இருந்தது ‌.அங்கே போனதும் உள்ளே சென்று கடத்தல்காரர்களை சந்திப்பதற்காக

அவர்கள் காத்துக் கொண்டிருந்த போது அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் ஒரு வேலைக்காரன் கொண்டு வந்து கொடுத்தான். அதை எடுத்துக் குடித்தது தான் அவர்கள் இந்த உலக வாழ்வில் உயிருடன் செய்த இறுதிக் காரியம்.



கொஞ்சம் படபடப்புடன் விஷாகாவைப் பற்றிய கவலையுடன் இருந்த அவர்கள் யோசிக்காமல் அந்தத் தண்ணீரைக் குடித்தது தான் அவர்கள் செய்த மாபெரும் தவறு.



தண்ணீரில் மயக்க மருந்து கொடுத்து அவர்களை மயங்க வைத்து அவர்கள் மயக்கத்தில் இருக்கும் போதே கழுத்தை அறுத்துக் கொல்லப் பட்டார்கள். அவர்களிடம் இருந்த காகிதங்கள் எடுத்துக் கொள்ளப் பட்டன.



இறந்த அவர்களுடைய உடல்கள் கன்ஸ்ட்ரக்ஷன் முடியப் போகும் நிலையில் இருந்த அதே பில்டருடைய அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் ஒரு மரத்தின் அடியில் இரவோடு இரவாகப் புதைக்கப் பட்டன.



உலகிற்கு அவர்கள் திடீரென்று தங்களுடைய முதியோர் இல்லமான வானப்ரஸ்தம் இருந்த இடத்தை விற்று விட்டு அங்கிருந்து வேறு இடத்திற்குச் சென்று விட்டதாகக் கட்டுக்கதை கட்டப் பட்டது.



அவர்களுக்கு ஒரிஜினல் டாக்குமெண்ட் கிடைக்கவில்லை. ஆனால் ஃபோட்டோகாபியை வைத்துப் போலியாக ஆவணங்களைத் தயாரிப்பது கஷ்டமான காரியமா என்ன இன்றைய நாட்களில்!.



பழைய நினைவுகளை அசை போட்ட பின்னர் அடுத்து தற்போது என்ன செய்ய வேண்டும் என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார்கள் அந்தத் தாத்தா, பாட்டி பேய்கள்.
 

Author: SudhaSri
Article Title: வான பிரஸ்தம் -18
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom