• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

வான பிரஸ்தம் -14

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
168
வான பிரஸ்தம் -14

புத்தம் புதிய காரிலிருந்து ஸ்டைலாக இறங்கிய நவநாகரீக யுவதியைக் கண்டு திகைத்துப் போய்ப் பார்த்தார்கள் நமது ஜில் ரமாமணியும் ஜித்தனும்.



" அட,பார்த்தால் நம்ப விஷாகா மாதிரியே இருக்காளே இந்தப் பொண்ணு! ஆனால் விஷாகா இந்த மாதிரி டிரஸ் பண்ண மாட்டாளே? ரொம்ப எளிமையாகத் தான் உடை உடுத்துவா. அதுவுமில்லாமக் கண்களில் தெரியும் அன்பும் கருணையும் பரிவும் கலந்த அந்த உணர்வு கூட மிஸ்ஸிங் இங்க. விஷாகா இல்லைன்னா இது வேறு யாரா இருக்கும்?"



மனதுக்குள் குழம்பிப் போய் நின்றார்கள் அக்காவும் தம்பியும்.தங்களைத் தாங்களே சமாளித்துக் கொண்டு,



" எப்படியோ விஷாகாவைப் பற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய பெரிய பொறுப்பை நம்ப கிட்டே தானே தாத்தா பாட்டிகள் கொடுத்திருக்கிறார்கள். பாவம் இறந்து போயும் அமைதியடையாமல் சுத்திக் கொண்டிருக்கும் அந்த நல்ல உள்ளங்களுக்கு உதவ வேண்டியது நம்ப கடமை தானே? சரி, துணிஞ்சு இறங்குவோம்."



என்று அந்தப் பெண்ணை நோக்கி விறுவிறுவென்று வீரநடை போட்டார்கள்.



" விஷாகா,விஷாகாம்மா? எப்படி கண்ணு இருக்கே? ஒன்னை எங்கெல்லாம் தேடினோம். எங்கேம்மா போனே நீ!"



ரமாமணி கேட்க, அந்தப் பெண் திகைத்துப் போய் அவர்களைப் பார்த்தாள். அவர்கள் இருவரும் இன்னும் தங்களுடைய பேயோட்டும் மந்திரவாதிகள் கெட்டப்பை வேறு மாற்றாமல் அதையே தொடரலாம் என்று அப்படியே இருந்தார்கள். பேங்கிற்குப் போன போது மட்டும் தங்களுடைய உண்மைப் பெயர்களைச் சொல்லிப் பணம் எடுத்ததோடு சரி.



அவர்களுடைய அந்தத் தோற்றத்தை ஏற இறங்க அலட்சியமாகப் பார்த்த அந்தப் பெண்ணின் முகத்தில் அப்படி ஓர் அருவருப்பைக் காட்டினாள்.



" வாட் விஷாகா? யார் நீங்கள்? என்ன வேண்டும் உங்களுக்கு? பண உதவி வேண்டுமா? என்னுடைய ஆஃபிஸிற்கோ இல்லை வீட்டுக்கோ வந்து என்னுடைய பி.ஏ.வைப் பாருங்கள்."



என்று பொரிந்து தள்ள, அவள் வார்த்தைகளைக் கேட்ட ஜில்ஜில் ரமாமணியும் ஜித்தனும் திறந்த வாயை மூடாமல் அவளைப் பட்டிக்காட்டான் யானையைப் பார்த்தது போல ஆவென்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.



"அம்மாடியோ! இன்னா பேச்சு பேசறேம்மா! நாங்க என்ன ஒங் கிட்டே கையை நீட்டிப் பணமா கேக்கறோம். எங்கக்காவைப் பாத்து இன்னாம்மா கத்தறே?!"



ஜித்தனுக்கு எக்கச்சக்கமாகக் கோபம் வந்து

காச்மூச்சென்று கத்தித் தையா,தக்கா என்று குதிகுதியென்று குதித்து ஆட்டம் போட்டு விட்டான். அவன் எதிரில் அவனுடைய பாசக்கார அக்காவை யாராவது அவமானப் படுத்தினா தாங்க மாட்டானே அந்தப் பய புள்ளை.



அந்தப் பெண்ணிற்கு இன்னும் கொஞ்சம் கோபம் வந்து ஜித்தனை ஓங்கி ஓர் அறை விட வெலவெலத்துப் போய் நின்றான் ஜித்தன். அந்தப் பெண் எதிர்பாராமல் பளார் என்று அறைந்ததில் கதிகலங்கிப் போய் நின்றான்.



தனக்காகப் பேசித் தன்னுடைய தம்பி அடி வாங்கியதும் கொதித்துப் போன ஜில் ஜில் ரமாமணியும் பொங்கி எழுந்தாள்.



" அடியே போக்கத்தவளே! ஏதோ எங்க விஷாகா அக்கா மாதிரி இருக்கயேன்னு பொறுமையாப் பேசினா எந் தம்பி மேலயே கை வச்சயா நீ! ஒன்னை என்ன செய்யறேன் பாரு."



என்று வீராவேசமாக வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பி அந்தப் பெண்ணைக் கீழே தள்ளி அவளுடைய நெஞ்சில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். திம்திம்மென்று அவளைத் தாக்க ஆரம்பித்தாள்.

தப்தப்பென்று அவளைக் கன்னத்தில் ஓங்கி ஓங்கி அறைந்தாள்.



உடனே அங்கிருந்த ஆட்களும் கார் டிரைவரும் ஓடி வந்து ஜில் ஜில் ரமாமணியையும் ஜித்தனையும் ஒரு வழியாக அடக்க முயற்சித்தார்கள்.



யாரோ இந்தக் காட்சியை செல்ஃபோனில் படம் பிடித்து விட்டு உடனே போலீஸுக்கும் ஃபோன் செய்து விட்டார்கள்.



போலீஸ் வந்ததும் தான் ரமாமணிக்கும் ஜித்தனுக்கும் தாங்கள் செய்த தவறு புரிந்தது. சாதாரணமாகப் பேசி சமாளிக்க வேண்டிய விஷயத்தைத் தப்பும் தவறுமாகக் கையாண்டு சொதப்பித் தாங்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியத்தையே குழி தோண்டிப் புதைத்து விட்ட மாபெரும் விஷயத்தை உணர்ந்து தலைகுனிந்து நின்றார்கள்.



அந்தப் பெண் வளர்ந்து வரும் ஒரு பிரபல தொழிலதிபர்.கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலில் கால் பதித்து வெற்றிக் கொடி நாட்டி வரும் நிஷாந்தி என்ற பெண். பார்ப்பதற்கு விஷாகா போலவே அவள் இருந்ததால் தான் நமது அக்கா, தம்பி ஜோடி தவறாக நினைத்து அடி வாங்கியது.



அவர்கள் மேல் தன்னைத் தாக்கிக் கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றச்சாட்டுகளை அவள் அடுக்கி வைக்க

போலீஸ் அவற்றின் மேல் பெரிய மாளிகையே எழுப்பி விட்டது. வேறு சில பொய்க் குற்றங்களையும் சேர்த்து அவர்களை கைது செய்து இழுத்துச் சென்றது.



நிஷாந்தி மேடத்தின் பணபலமும் செல்வாக்கும் பெரிய மனிதர்களின் தொடர்பும் சேர்ந்து அவளை வலிமையான எதிராளியாக்கி விட ஜில்ஜில் ரமாமணியும் ஜித்தனும் சுண்டெலிகளாக அவள் முன்னே குறுகிப் போய் நின்றார்கள்.



செல்ஃபோனில் இருந்த போட்டோக்களும்

நிகழ்ச்சியை நேரில் பார்த்த மனிதர்களும் வலுவான சாட்சியங்களாக ரமாமணிக்கும் ஜித்தனுக்கும் எதிரே நின்றார்கள்.



கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டு அவர்களை விசாரிக்கும் சாக்கில் போலீஸ் ஆட்கள் அடி பின்னி விட்டார்கள். அவர்கள் பேங்க் சென்று விட்டு அந்த இடத்திற்குச் சென்றதால் அவர்களுடைய உண்மைப் பெயர்கள் வெளியே வந்து விட்டன.



தற்போது பேயோட்டும் போலி மந்திரவாதிகளாக போட்டிருக்கும் வேடங்களும் வெளியே வர இல்லாத கேஸெல்லாம் போட்டுப் பெரிய லெவல் மோசடிக்காரர்களாக இரண்டு பேருமே சித்தரிக்கப் பட்டு விட்டனர். அடுத்த நாள் நியூஸ் பேப்பரில் அவர்களுடைய ஃபோட்டோக்களும் அவர்கள் கைதான விஷயமும் வெளியாகி விட்டன.



பேப்பரில் நியூஸைப் படித்த குழந்தைகளின் பெற்றோர் பதறிப் போனார்கள்.



" அடாடா, சரியான மோசடிக் காரர்களிடம் மாட்டிக். கொள்ள இருந்தோமே! அவர்களை நம்பி நம்முடைய வீட்டுக்கெல்லாம் கூட்டி வந்து நன்றாக ஏமாந்து போனோமே! நல்ல வேளை ஒரு தடவை ஏமாந்ததோடு சரி.பிழைத்துக் கொண்டோம். பணம் ஒரு தடவை தானே கொடுத்தோம்? அதுவும் அப்படி ஒன்றும் அதிகமில்லை. ஏதோ விஷயம் தெரிந்த ஆட்கள் மாதிரி நம்மை இப்படி ஏமாற்றி விட்டார்களே!"



என்று புலம்பித் தள்ளினார்கள். நமது குறும்புக்காரக் குழந்தைகள் பெற்றோரின் புலம்பல்களால் இன்ட்ரஸ்ட் வந்து பேப்பரில் எட்டிப் பார்க்க ஜில்ஜில் ரமாமணியும் ஜித்தனும் கைது செய்யப்பட்டு விலங்குகளுடன் இழுத்துச் செல்லப் படும் புகைப்படத்தை ந்யூஸ் பேப்பரில் பார்த்து விட்டு உடனடியாக தாத்தா பாட்டிகளிடம் சென்று ரிப்போர்ட் செய்து விட்டார்கள்.



"வளர்ந்து வரும் தொழிலதிபர் நிஷாந்தியைத் தாக்கிக் கொலை முயற்சியில் இறங்கிய மோசடிக்காரர்கள்

கைது செய்யப்பட்டனர். போலீசின் தீவிர

விசாரணையில் இவர்கள் ஏற்கனவே பல்வேறு மோசடிக் காரியங்களில் ஈடுபட்டு அப்பாவி மக்களை ஏமாற்றி வந்த விஷயம் வெளியே வந்தது. கையும் களவுமாக மாட்டிய இந்த மோசடிக் காரர்கள் தற்போது பேயோட்டும் மந்திரவாதிகளாக மக்களை ஏமாற்றி வந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஜில்ஜில் ரமாமணி, ஜித்தன் என்று தற்போது தங்களை அழைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றிய இந்த ஜோடி சிம்ரன்-விவேக்,

குஷ்பூ- சந்தானம், த்ரிஷா-யோகி பாபு என்று பல்வேறு பெயர்களைத் தங்களுக்குத் தாங்களே சூட்டிக் கொண்டு வலம் வந்தவர்கள்"



என்று பெரிதாக கவரேஜ் செய்யப் பட்டிருந்த

ந்யூஸை முதலில் பார்த்தது மதன் தாத்தா நேத்ரா மூலமாக. அதிர்ந்து போனார் அவர்.



"உதவி செய்வார்கள் என்று நினைத்தால் இப்படி சொதப்பி விட்டார்களே இந்த பிரகிருதிகள்?"



என்று நினைத்துக் கவலையில் ஆழ்ந்தார் அவர்.



தாங்களே இப்படிப் பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் போது அடுத்த பிரச்சினை முளைத்து விட்டதே.இப்போது போலீஸில் மாட்டிக் கொண்டு முழிக்கும் ஜில்ஜில் ரமாமணி, ஜித்தனை நினைத்து மனதில் அடுத்து என்ன செய்வது என்ற கவலை கூடியது அவருக்கு.
 

Author: SudhaSri
Article Title: வான பிரஸ்தம் -14
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom