• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

பார்வைகள் மாறட்டும்

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
296
பார்வைகள் மாறட்டும்

ஓரிரு வருடங்களுக்கு முன்பு ஒரு அரசு கலைக் கல்லூரிக்கு ரத்ததானம் முகாம் நடத்துவதற்காகச் சென்றிருந்தோம். வருடாவருடம் முகாம் நடத்தி நூறு மாணவர்களுக்கு மேல் ரத்த தானம் கொடுக்கும் வழக்கம் உள்ள கல்லூரி அது. மாணவர்களை மொத்தமாக அமரவைத்து ரத்த தானம் குறித்த விஷயங்களை விளக்கிவிட்டு அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகளையும் கூறிவிட்டு குருதி சேகரிப்பை ஆரம்பித்தோம்.

கல்லூரி என்பதால் மாணவர்கள் அந்த வயதுக்கே உரிய உற்சாகத்துடனும் விளையாட்டுத்தனத்துடன் சுற்றிச் சுற்றி வந்தார்கள். 'கூட்டம் போடாதீங்க.. உட்காருங்கப்பா' என்றால் கேட்கவே இல்லை. எந்தக் கல்லூரியானாலும் அவர்களது தினசரி வழக்கத்திலிருந்து விடுதலை என்பதால் இப்படிப்பட்ட நிகழ்வுகளை ஒரு விழா போல கொண்டாடுவார்கள்.

இரத்த தானத்திற்கு முன் உடல் பரிசோதனை அவசியம் அல்லவா? அதனால் எடை ஹீமோகுளோபின் அளவு, இரத்த அழுத்தம் போன்றவற்றைப் பரிசோதித்தோம். அப்படி ஒவ்வொரு மாணவனையும் பரிசோதனை செய்யும்போது மற்றவர்கள் வட்டமாகச் சுற்றி நின்று கேலியும் கிண்டலுமாகப் பொழுதைக் கழித்தனர். எழுபது பேருக்கு மேல் இரத்தம் அளித்து விட்ட நிலையில் ஒரு மாணவன் வந்தான். பருமனான உடல்வாகு, நடையில் பேச்சில் பெண்தன்மை நிரம்பியிருந்தது. முகத்தில், கழுத்தில் ரோஸ் பவுடர் பூசியிருந்தான். வடிவாகத் தீட்டப்பட்ட குங்குமம் விபூதி, லேசான உதட்டுச்சாயம் என்று வித்தியாசமாக இருந்தான். மற்ற மாணவர்களை விட அதிகம் பேசினான். அவன் வந்து பரிசோதனைக்காக என் அருகில் அமர்ந்தவுடன் அருகில் நின்று கொண்டிருந்த இரண்டு, மூன்று பேர் இப்போது ஏழு எட்டு பேராக ஆனார்கள். அவர்களுக்குள்ளே குசுகுசுவென்று பேசி அவனைக் கிண்டல் அடித்துக் கொண்டு இருந்தார்கள்.

அவன் தயங்கித் தயங்கி சுற்றிலும் பார்த்துக் கொண்டே பேசினான், 'மேடம்! எனக்கு ஏதாவது சாதிக்கணும்னு சின்ன வயசில இருந்தே ஆசை மேடம். ஆனா எனக்கு வாய்ப்பே அமையாது. இப்பக் கூட ரத்தம் கொடுக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. ஆனா இங்க பாருங்க, எனக்கு படபடன்னு வேர்த்துக்கொட்டுது, கையெல்லாம் நடுங்குது. என்னால குடுக்க முடியுமா மேடம்?" என்றான். குரலிலும் பெண்தன்மை நிரம்பி வழிந்தது.

"பதட்டப் படாதே! செக் பண்ணிப் பாப்போம்" என்று கூறிவிட்டு, பிடிவாதமாக சுற்றி நின்ற மாணவர்களைத் துரத்திவிட்டு அவனைப் பரிசோதித்தேன். இவ்வளவு ஆர்வமாக இருக்கிறானே,தோற்றத்தை வைத்து கிண்டல் செய்கிறார்களே என்ற யோசனையுடன் அவனுக்கு இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க, அது அதிகமாக இருந்தது. "பிரஷர் ரொம்ப அதிகமா இருக்கே தம்பி.. பதட்டப்படாம தண்ணி குடிச்சுட்டு ஒரு பத்து நிமிஷம் கழிச்சு வாங்க" என்றேன்.

"மேடம்! எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கு.. எல்லாரும் என்னை எப்பவும் கேலி பண்ணிக்கிட்டே இருப்பாங்க.. நானும் ஏதாவது நல்லது செய்யணும் மேடம்.. எப்படியாவது எனக்கு ரத்தத்தை எடுத்துடுங்க மேடம்" என்று கூறிவிட்டு பத்து நிமிட ஓய்வுக்குப் போனான். அதன்பின் வந்த போதும் அவனுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகவே இருந்தது. "உங்களுக்கு பிரஷர் கொஞ்சம் அதிகமா இருக்கு தம்பி.. ரெண்டு நாள் கழிச்சு திருப்பி பக்கத்துல இருக்கிற ஹாஸ்பிடல்ல செக் பண்ணுங்க. அப்ப நார்மலா இருந்தா நேரா வந்து ரத்த வங்கியில் எப்ப வேணாலும் நீங்க ரத்ததானம் பண்ணிக்கலாம்" என்று கூறி அவனை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தேன்.

என் மேஜையில் எனக்கு எதிரில் அமர்ந்திருந்த எச்ஐவி ஆலோசகர் என்னிடம், "இவனை ரிஜெக்ட் பண்ணினதே நல்லது மேடம்" என்றார். ஏனென்றால் இப்படி மூன்றாம் பாலினத்தவர்களாக இருக்கும் இளைஞர், இளைஞிகள் எச்ஐவி போன்ற பால்வினை நோய்கள் தாக்க அதிக வாய்ப்புள்ள 'ஹை ரிஸ்க் கேட்டகிரி' யின் கீழ் வருவார்கள்.

எனக்கும் அந்த விஷயம் முன்பே தெரிந்திருந்தாலும் மனம் ஏற்க மறுத்தது. "அது எப்படி சார்.. சின்னப் பையனா இருக்கான். BP குறைஞ்சா ப்ளட் எடுத்துடலாம்" என்றேன் ஆலோசகரிடம்.

"எனக்கு இந்த டிபார்ட்மெண்ட்ல இருபது வருஷம் அனுபவம் இருக்கு..இந்த மாதிரியான பசங்களை நிச்சயம் விட்டு வச்சிருக்க மாட்டாங்க.. இவங்களுக்கான அடையாளம் பாலியல் ஒண்ணு தான்னு எல்லாரும் நினைக்கிறாங்க. வேற விதமா அவங்களப் பத்தி சிந்திக்கவே இந்த சமூகத்துக்குத் தெரியாது. நிச்சயமாக நிறைய பேர் அவனை பலவந்தப்படுத்தி இருப்பாங்க. அதிலிருந்து மீள விரும்பியும் முடியாமல் தான் அவனுக்கு இந்த பதட்டம், ஹை பிரஷர் எல்லாமே.. வேணா பாருங்க. திரும்பி அந்தப் பையன் வரவே மாட்டான்" என்றார். அவர் கூறியது போலவே அதன் பின் அவனை நான் சந்திக்கவே இல்லை.

பாலியல் நோய்கள் தவிர ஹார்மோன் சிகிச்சைகளால் ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் அவர்களின் உலகத்தில் பரவியிருக்கும் புகை, மது, போதைப் பழக்கங்கள் இரண்டும் சேர்ந்து மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களும் மூன்றாம் பாலினத்தவருக்கு அதிகம் ஏற்படுவதாகக் கூறுகிறார்கள்.

அது தவிர, போதை ஊசிகள், செயற்கை மார்பகங்களைத் தோற்றுவிக்க சிலிக்கான் ஊசிகள், அங்கீகரிக்கப்படாத மையங்களில் செய்யப்படும் பால்மாற்று அறுவை சிகிச்சைகள் இவற்றால் ஹெப்படைடிஸ் பி, சி போன்ற நோய்களும் அதிகம். குறைவான வருமானத்தாலும் காப்பீட்டு வசதி இல்லாததால் அவர்களுக்கு மருத்துவ உதவிகள் பெறுவதில் தடையும் தாமதமும் ஏற்படுகிறது.

உலக அளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, மூன்றாம் பாலினத்தவரில் 41 சதவீதம் பேர் வாழ்வில் ஒரு முறையாவது தற்கொலை முயற்சி செய்திருப்பதாகக் கூறுகிறது. திருநங்கையாக மாறுவதற்கு முன்பும், மாறிய பின்னும் அதீத மன உளைச்சலுக்கு ஆளானதாக இந்த ஆய்வில் பங்குபெற்ற ஒவ்வொரு திருநங்கையும் கூறியிருக்கிறார்கள்.

மூன்றாம் பாலினத்திற்கான விசேஷ மருத்துவக் கல்வி கற்றவர்கள் உலகம் முழுவதிலுமே மிகக் குறைவு. வழக்கமான மருத்துவர்களுக்கு திருநங்கையர் திருநம்பியரின் சிகிச்சை முறைகள் குறித்த போதுமான கல்வி இல்லை. இந்த இடத்தில் சமீபத்திய செய்தி ஒன்று முக்கியத்துவம் பெறுகிறது. ஆண் என்ற அடையாளத்துடன் மருத்துவம் படித்து முடித்த ஒருவர் அதன் பின் திருநங்கையாக மாறி ரோட்டில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்ததாகவும் அவரை மீட்டு க்ளினிக் வைக்க காவல்துறை உதவியாகவும் தொலைக்காட்சியில் சொன்னார்கள்.

மருத்துவம் படித்தவருக்கே ஏன் இந்த நிலை? ஒரு ஆண் மருத்துவர், ஒரு பெண் மருத்துவர் என்று இருப்பது போல் ஒரு திருநங்கை மருத்துவராக இருந்தால் என்ன? மற்ற இருபாலினரையும் போலவே தான் இவரும் படித்திருக்கிறார். அவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள ஏன் சமூகம் தயங்குகிறது? அவருக்குமே அரசு வேலைக்கு விண்ணப்பிப்பதையோ சொந்தமாக பிராக்டிஸ் செய்வதையோ எது தடுக்கிறது? பிறரைப் போலவே தான் இந்த உலகில் மூன்றாம் பாலினத்தவரும் பிறக்கிறார்கள், வளர்கிறார்கள். ஏன் இப்படி ஓடி ஒளிய வேண்டிய நிலை? தனித்து வாழ வேண்டிய சூழல்? மூன்றாம் பாலினத்தவருக்கான சிறப்பு மருத்துவர்கள் இல்லாத நிலையில் சமூகம் குடும்பமும் கைகொடுத்தால் மேற்கூறிய இந்த மருத்துவரால் அவர்களுக்கான சிறப்பு மருத்துவராக ஆகிவிட முடியாதா?

ஒரு சில வார்த்தைகளில் இதற்கான பதிலை அடக்கிவிட முடியாது. காலம் காலமாய் மக்கள் மனங்களில் விதைக்கப்பட்டிருக்கும் எண்ணங்கள் மாறாத வரை, திரைப்படங்கள் அவர்களை சாதாரணமாக காட்டாத வரை அவர்கள் நிலையிலும் மாற்றம் வராது. அந்த மாற்றம் ஓரிரு நாட்களில் ஏற்பட்டு விடாது.

மூன்றாம் பாலினத்தவருக்கான சட்டங்கள் தனியாக வகுக்கப்படவேண்டும், சட்டமன்ற, உள்ளாட்சி அமைப்புகளில் அவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். தனி இலாகா தொடங்கி ஒரு திருநங்கையையே அமைச்சராகவும் ஆக்கலாம். சமத்துவபுரம் போன்ற பல இனத்தவரும் இணைந்து வாழும் திட்டங்களில் அவர்களுக்கான தனி வீடுகள் ஒதுக்கவேண்டும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று தனித்து வாழும் மூன்றாம் பாலினத்தவர் மீண்டும் குடும்பங்களுக்குள் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளலாம். இப்போது பிறக்கும் குழந்தைகளிடம் உறவில் உள்ள ஒரு திருநங்கையைக் காட்டி, 'இது உன் அத்தை, உன் சித்தி' என்று சொல்லிக் கொடுத்தால் அந்தக் குழந்தை அவரை சொந்தங்களில் ஒருவராக அழகாக ஏற்றுக்கொள்ளும். அதற்கு முதலில் நமது மனங்கள் இன்னும் நிறைய பக்குவப்பட வேண்டும். நம் பார்வையும் மாற வேண்டும்.

(மூன்றாம் பாலினம் உருவாவதற்கான அறிவியல் காரணங்கள், மற்று
ம் பல விஷயங்கள் அடுத்த வாரம்..)
 

Author: SudhaSri
Article Title: பார்வைகள் மாறட்டும்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom