• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

பகலிரவு பல கனவு -13

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
271
பகலிரவு பல கனவு - 13

“பிரபாக்கு கல்யாணம் பண்ண முடிவு பண்ணி இருக்கேன்” முருகானந்தத்தின் வார்த்தைகளில் பெண்கள் மூவரும் அதிர்ந்து நிற்க, பிரபாகரன் அமைதியாகத் தனது உணவை ரசித்து ருசித்துச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தான். கூடவே காமாட்சிக்கு வேலை கொடுத்துக் கொண்டிருந்தான்.

“ம்மா! அந்த சிக்கன் வறுவலை இன்னும் கொஞ்சம் என் தட்டுல வைங்க. மீன் எங்க வாங்கிட்டு வந்தீங்கம்மா, குழம்பு சூப்பர். எனக்காகக் தானே செஞ்சீங்க, அப்புறம் எதுக்கு இவ்வளவு கஞ்சம். இன்னும் கொஞ்சம் ஊத்துங்க.”

அதோடு நில்லாமல் சப்புக் கொட்டி சாப்பிட்டு தந்தையைக் கடுப்பேத்தினான்.

நால்வரிடமும் தனது பேச்சுக்கு எந்த எதிரொலியும் இல்லை என்று முருகானந்தம் விட்டுவிடவில்லை. அவர் எந்த பதிலையும் எதிர்பார்க்கவும் இல்லை.

“உங்களுக்கு ஆச்சரியமாத்தான் இருக்கும். நானே, இதை எதிர்பார்க்கலை” என்று சொல்லி விட்டு நால்வரையும் ஒரு பார்வை பார்த்தார். இப்போதும் அங்கே எந்த எதிரொலியும் இல்லை. பின்னர் அவரே தொடர்ந்தார்.

“நல்ல சம்பந்தம், படிச்சிட்டு கை நிறைய சம்பாதிக்கிற பொண்ணு. கூடவே அமைதியா அடக்க ஒடுக்கமா இருக்கிற பொண்ணு. இது மாதிரி வாய்ப்பு நம்ம பிரபாவுக்கு அமைஞ்சது பூர்வ ஜென்ம புண்ணியம் தான்.”

‘என்ன இவ்வளவு பெரிய பில்டப் கொடுக்கிறாரு? யாரா இருக்கும்?’ என்று மலர்விழி யோசிக்க, காமாட்சியும் அப்பத்தாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால், யாரும் வாயைத் திறந்து யார் என்று கேட்கவில்லை.

“யாருன்னு ரொம்ப யோசிக்காதீங்க. நானே சொல்றேன், நம்ம தங்கச்சியோட மச்சான் மக கார்த்திகா தான். ரொம்ப தங்கமான பொண்ணு. இன்னைக்கு நான் நம்ம தோட்டத்தில இருக்கும் போது மாப்பிள்ளையும் அவங்க அண்ணனும் யதேச்சையா அந்தப் பக்கம் வந்தாங்க.”

“யதேச்சையா நம்ம தோட்டத்துப் பக்கம் வந்தாங்களா. நம்ப முடியலையே.. ஆமா.. நீ எதுக்கு ஒரு நாளும் இல்லாத திருநாளா இன்னைக்கு தோட்டத்துப் பக்கம் போயிருக்க?” மகனை நோக்கி சரமாரியாகக் கேள்விக் கணைகளைத் தொடுத்தார் அப்பத்தா. அதே கேள்விகள் பிரபாகரனின் மனதிலும் தோன்றியதால் தந்தையை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தான்.

முருகானந்தம் அதைக் கண்டு கொள்ளாமல் இருக்கத் தான் நினைத்தார். ஆனால் மகனது பார்வை நீ பதில் சொல்லித் தான் ஆகவேண்டும் என்றது.

“அது.. வந்து.. தங்கச்சி வீட்டுக்காரர் நேத்து ஃபோன் பண்ணி என்னைப் பார்க்கணும்னு சொன்னாங்க. நம்ம வீட்டுல தான் அவங்களுக்கு மரியாதை தர்றதில்லையே. அதனால நான் தான் வீட்டுக்கு வந்து அவங்க அவமானப் படவேண்டாம்னு தோட்டத்துல பார்க்கலாம்னு சொன்னேன். என் வீட்டுத் தோட்டத்துக்கு நான் போகக் கூடாதா? இதுல என்ன தப்பைக் கண்டீங்க? கல்யாண வயசுல வீட்டில யாராவது இருந்தால் இது மாதிரி கேட்கிறது வழக்கம் தானே. அதுவும் சொந்தத்தில பையன் இருந்தா கேட்கத்தான் செய்வாங்க. அந்தப் பொண்ணுக்கு என்ன குறை, வேற இடமா இருந்தா இவன் படிப்புக்கு பொண்ணு கொடுக்கவே யோசிப்பாங்க.”

தங்கை குடும்பத்தால் தனக்கு நடந்ததை எல்லாம் மறந்து விட்டு அவர்களுக்கு வக்காலத்து வாங்கினார் முருகானந்தம்.

“எம்பேரனுக்கு என்னடா குறைச்சல்? சுயம்புடா அவன், உனக்கு அவனைக் கண்டு பொறாமையா இருக்கோ? படிக்காட்டா என்ன, அவனை மாதிரி பொறுப்பான பையன இந்தக் காலத்தில பார்த்துட முடியுமா? படிக்கலைன்னு குத்திக் காட்டுறியோ, அவன் படிக்காமல் போனதுக்கு காரணமே நீ தானே. வந்துட்டான் நியாயம் பேச.. நீ சொல்றியே தங்கமான பொண்ணு, அந்தப் பொண்ணு போன வாரம் யாரையோ ரிஜிஸ்டர் ஆஃபீஸ்ல போய் கல்யாணம் பண்ணிக்கிட்டாளாம், தெரியுமா உனக்கு?

பையன் வீட்டுல உள்ள விடவே இல்லையாம். இவங்க போய் பொண்ண மட்டும் இழுத்துட்டு வந்திருக்காங்க. உனக்கென்ன களி தின்ன ஆசையா? ஏற்கனவே கல்யாணம் ஆன பொண்ண உம்மகன் தலையில கட்டப் பாக்குறாங்க. அதை நம்பி நீயும் இங்க வந்து கூறு கெட்டதனமா கூவிட்டிருக்க. யாருன்னு நினைச்சாங்க எம்பேரனை? எனக்கு வர்ற கோபத்தில அடிச்சிடப் போறேன் பேசாமல் போயிடு சொல்லிட்டேன்.”

அருவியாகப் பொழிந்து விட்டு அப்பாடா என்று மூச்சு வாங்கினார் அப்பத்தா. மற்ற நால்வருக்கும் ஆயாசமாக இருந்தது. என்ன மனிதர் இவர்? அந்தக் குடும்பத்தால் நடுத்தெருவில் நின்றதை எல்லாம் மறந்து விட்டு உறவாடியதும் அல்லாமல் இப்போதும் ஏமாந்து போகத் தயாராக இருக்கிறாரே என்று வருந்தினார்கள்.

முருகானந்தம் செய்வதறியாது திகைத்தார். இன்னும் தன்னை எளிதாக ஏமாற்றி விட முடியும் என்று தங்கை வீட்டில் நம்புகிறார்களா? வீட்டை விட்டு வெளியே செல்லாத அவரது தாய்க்குத் தெரிந்த விஷயம் தனக்குத் தெரியவில்லையே என்று நொந்து போனார். எப்படித் தெரியும் என்று கேட்க ஆசைதான். கேட்டால் இன்னும் தாயின் சொற்பொழிவைக் கேட்க வேண்டியது வரும் என்று தொண்டைக்குள் கேள்வியை விழுங்கினார்.

சாப்பிட்டு முடித்த பிரபாகரன் எழுந்து தனது அறைக்குச் சென்று விட்டான். போவதற்கு முன் அவன் தந்தையைப் பார்த்த பார்வையில் அவரது சகலமும் நடுங்கியது. ‘எப்படிப் பார்க்கிறான் பார். இவன் வாயைத் திறந்து நல்லா திட்டி இருக்கலாம்’

“ஏங்க உங்களுக்கு என்ன தான் ஆச்சு? பெத்தவ நான் உயிரோட தானே இருக்கேன். எங்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கல்யாணத்தையே முடிவு பண்ணிட்டேன்னு சொல்றீங்க. என்னை விடுங்க, கட்டிக்கப் போறவன் சம்மதம் கூட தேவையில்லையா? ஏன் இப்படிப் பண்ணீங்க? அதுவும் சம்பந்தம் பண்றதுக்கு வேற ஆளே கிடைக்கலயா? அவங்களால நாம பட்டதெல்லாம் போதாதா? இன்னமும் அவங்களோட மானத்தை யோசிக்கிறீங்க, நமக்கு அதெல்லாம் இருக்கக் கூடாதா?” காமாட்சிக்குக் கணவனது செயல் பிடிக்கவில்லை என்று நேரடியாகவே சொல்லிவிட்டார்.

தாயிடமும் தாரத்திடமும் பேச்சு வாங்கியாயிற்று. இன்னும் மகள் மட்டுமே பாக்கி. தானாகவே சென்று அவளது வலையில் சிக்கினார்.

“என்ன மலரு, நீ எதுவும் கருத்து சொல்லலையா?”

“அண்ணனே ஒன்னும் சொல்லலை. நான் எதுக்கு அனாவசியமா வாயைத் திறக்கணும்.”

இப்படி அந்த வீட்டில் அருமையாக ஆரம்பித்த காலைப்பொழுதில் ஏழரையைக் கூட்டி அமைதியிழக்கச் செய்துவிட்டார். ஏற்கனவே வீட்டில் யாரும் அவரை மதிப்பதே இல்லை. குடும்பத் தலைவன் என்ற முறையில் தனது நிலையைத் தக்க வைத்துக் கொள்ள அவர் செய்த முதல் முயற்சியே தோல்வியைத் தழுவியது.

மொட்டை மாடியில் நின்று வானத்தை வெறித்துக் கொண்டிருந்த பிரபாகரனின் சிந்தனை முழுவதும் தந்தையைப் பற்றியதாக இருந்தது. சிறு வயதில் என்ன தேவை என்றாலும் அவரிடம் தான் கேட்பான். இருவருக்கும் இடையே இடைவெளி விழுந்த பிறகு அவரிடம் பேச்சுவார்த்தையைக் குறைத்துக் கொண்டான். அவன் தொழில் தொடங்கிய போது உண்டான இடைவெளி அதனை விரிவாக்கம் செய்த போது குறைந்தது. பிரபாகரன் ஊரில் இல்லாத நேரங்களில் முருகானந்தம் கடையைப் பார்த்ததும் உண்டு.

ஆனால் சற்றும் எதிர்பாராமல் அவனது திருமணம் பற்றிய முடிவை அவரே எடுத்தது என்பதை இன்னும் நம்ப முடியவில்லை. அவனே காதலியோடு பேசிப் பழகும் வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் போது திருமணம் பற்றி எல்லாம் யோசிக்கக் கூட நேரமில்லை.

ஆனால் வெகு விரைவில் சம்யுக்தா அவனைக் கட்டாயப் படுத்தி செய்ய வைத்த ஒரு செயல் இரு குடும்பத்துக்கும் அவர்களது காதலை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

******

“நம்ம சனத்துல, சொந்தத்தில உனக்கு பொண்ணு கொடுக்க நீ, நான்னு போட்டி போட்டு காத்திருக்காங்க. வீடு கொள்ளாம வரிசை வச்சு ஊர் மெச்ச கல்யாணம் செஞ்சு காலம் பூராவும் சீர் குறையாம பாத்துக்குற ஆளுங்கள விட்டு சிகப்பு தோலைப் பாத்து மயங்கிப் போய் கிடக்கான். ஆத்தாவும் தங்கச்சியும் அவனுக்கு ஒத்து ஊதுறீங்க. பின்னாடி அண்ணனை மாதிரியே நீயும் எவனையாவது கூட்டிட்டு வாரதுக்கா? நல்லா வளத்துருக்கா புள்ளைங்கள… சொல் பேச்சு கேட்காம… “ மூச்சு விடாமல் கத்திக் கொண்டிருந்தார்
முருகானந்தம்.

“ஆமா… மகன் முன்னேறும் போதெல்லாம் என் மகனாக்கும்னு மார் தட்டிக்க வேண்டியது.. அதுவே இவருக்கு பிடிக்காத விஷயம்னா நான் வளர்த்தது சரியில்லை.. எல்லா ஆம்பளைகளும் இப்படித்தான்.. எப்போத்தான் மாறுவாங்களோ.. அந்தப் புள்ளைக்கு என்ன குறைச்சல்.. இவரோட தங்கச்சி பொண்ணு அறுக்காணியை விட ஆயிரம் மடங்கு அழகா இருக்காளே… அந்தப் பொறாமை தான் மனுசருக்கு.. கூடவே முதல்ல இவர் கிட்ட சொல்லாம என் கிட்ட சொல்லிட்டானே .. அந்தப் பொறாமை தான்..‌” என்று புடவைத் தலைப்பை வாயில் வைத்துக் கொண்டு முணுமுணுத்தார் காமாட்சி, திருமதி முருகானந்தம்.

ஆம், எப்போதும் எந்த விஷயத்தையும் முதலில் தந்தையிடம் பகிர்ந்து கொள்ளும் தனயன் இவ்விஷயத்தில் ஏனோ அவரை விடுத்துத் தாயிடம் நெருக்கம் காட்டிவிட்டான்

தாயின் பேச்சு அச்சு பிசகாமல் அருகில் இருந்த அண்ணன் தங்கை இருவரது காதிலும் விழுந்தது. தங்கை தந்தையின் முன் சிரித்து அவரது கோபத்தைக் கூட்ட விரும்பாமல் உள்ளே ஓடி விட்டாள்.

ஆனால், தந்தையின் கோபத்தில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமல், வாய் விட்டுச் சிரித்தான் பிரபாகரன். அருகில் இருந்த காமாட்சி அவன் முதுகில் ஓங்கி ஒன்று போட்டு அவனைத் தரையிறக்கினார்.

சட்டென்று சூழ்நிலை உணர்ந்து அவன் தந்தையைப் பாவமாகப் பார்க்க அவரோ நெற்றிக் கண்ணைத் திறந்தார்.

****
“உனக்கு சம்யுக்தான்னு பேர் வச்சதால எங்கிருந்தோ உன் ப்ருத்விராஜன் குதிரை மேல வந்து உன்னை தூக்கிட்டு போறது மாதிரியே கனவு கண்டுகிட்டு இருக்க. ஆனா அவன் கிட்ட குதிரையும் இல்ல… உங்க அப்பாவோட பவருக்கு முன்னாடி வாயைத் திறந்து பேசறதுக்கு தைரியமும் இல்ல.. “

‘அவனோட பேக் ரவுண்ட் இங்கே யாருக்கும் தெரியாது. அவன் நிச்சயம் வருவான்..’ மனதுக்குள் சொல்லிக் கொண்டாளே தவிர தோழியிடம் வாயைத் திறக்கவில்லை அவள்.

“இங்கே பாரு சம்யூ! என் மேலேயும் தப்பு இருக்கு. ஆரம்பத்திலேயே உன் கூட சேர்ந்து அவனைப் பார்த்தது தெரிஞ்சு தான் இப்போ உன் பேரண்ட்ஸ் என்னைக் கேள்வி கேட்கறாங்க. நான் அதெல்லாம் ஒரு டைம் பாஸ், வயசுல வர்ற இன்ஃபேச்சுவேஷன்னு கடந்து வந்துட்டேன். நீ எப்படி இவ்வளவு கொஞ்ச பீரியட்ல வாழ்க்கையே அவன் தான்ற அளவுக்கு ஃபிக்ஸ் ஆகிப் போயிருக்க.”

“அதுவா… அவனை மாதிரி ஆளை எல்லாம் பார்த்த உடனே பிடிக்காது… பார்க்கப் பார்க்க தான் பிடிக்கும்… அதான்.. பழகிப் பார்த்து…. “

“ஷட் அப் சம்யூ. என்னையும் சேர்த்து இதுல மாட்டி விட்டிருக்க. உன்னைக் கெஞ்சி கேட்கிறேன்.. அவன் வருவான்னு தேவையில்லாமல் ஆசையை வளர்த்துட்டு படிப்பைக் கெடுத்துக்காத சம்யூ.”

சம்யுக்தா தோழியின் வார்த்தைகளைக் கேட்டு சோர்ந்து போய்விடவில்லை. அவளது நம்பிக்கையைக் காக்கும் விதமாக அவளது பிருத்விராஜன் பெற்றோருடன் வந்தான். இரு பெற்றோருக்கும் நடந்த பேச்சு வார்த்தைக்குப் பிறகு இருவரும் ஏன் தான் காதலித்தோமோ என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
 

Author: SudhaSri
Article Title: பகலிரவு பல கனவு -13
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom