• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

பகலிரவு பல கனவு -12

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
271
பகலிரவு பல கனவு -12

இரண்டு வருடங்கள் கழித்தும் சரண்யாவின் வார்த்தைகள் இன்னும் சம்யுக்தாவின் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தன. பிரபாகரனின் குடும்ப பின்னணி பற்றி கவலைப் படாதவளுக்கு அவனது தொழிலைப் பற்றி யோசிக்கும் போதே தலை சுற்றியது. அதற்கேற்ப சரண்யாவும் அப்போது பேசியிருந்தாள்.

“எனக்கென்னவோ பிரபாகரன் அவரோட அப்பா அம்மாவைக் கன்வின்ஸ் பண்ணிடுவாருன்னு தோணுது. இப்போதைக்கு இவரு தான் அந்த வீட்டுல சம்பாதிக்கிற ஆளு. அவங்க அப்பா சொத்தையெல்லாம் அவரோட தங்கச்சிக்கு வாரி வழங்கிட்டாருன்னு வீட்டில எல்லாருக்கும் கோபம். அதனால அம்மா, தங்கச்சி, அப்பத்தான்னு லேடீஸ் வோட் எல்லாம் இவருக்கு தான் இருக்கும். அவங்க இவரு யாரைக் காட்டினாலும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிடுவாங்க.”

“அப்போ எங்க அப்பா, அம்மா ஓகே சொல்ல மாட்டாங்கன்னு சொல்றியா?”

“நீயே கொஞ்சம் யோசிச்சு பாரு சம்யு. ஒரு வேளை இந்த லவ் கல்யாணத்துல முடியுதுன்னு வச்சுக்குவோம். பிரபாகரன் தொழில் பண்றாரு, நிறைய சம்பாதிக்கிறாருன்னு சொன்னாலும், உங்க பேரன்ட்ஸ் அவங்க ஸ்டேடஸ விட்டு பிரபாகரனை சொந்தமா ஏத்துப்பாங்கன்னு நினைக்கிறியா? உன் பிடிவாதம் எல்லாம் அப்போ செல்லாது.

உனக்காக பிரபாகரனும் தனியா வர்ராருன்னு வச்சுக்கலாம். உள்ளூர்ல இருந்துட்டு பேரன்ட்ஸ பார்க்காமல் உன்னால இருக்க முடியுமா?” என்று நிறைய குழப்பி விட்டாள் சரண்யா. இன்னும் கூட குடும்பம் நடத்துவது, குழந்தை என்று நிறையப் பேசியிருப்பாள். தோழியின் முகத்தில் பிரதிபலித்திருக்கும் குழப்பத்தை கண்டு நிறுத்தி விட்டாள்.

“சரண்! இப்போதைக்கு ஃப்ரீயா விடுன்னு சொல்லிட்டு என்னை ரொம்ப கன்ஃபியூஸ் பண்ற. நான் அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். அதுக்கு இன்னும் வருஷங்கள் இருக்கு. ஸோ, நீ என்னைப் பத்தி திங்க் பண்றத விடு.” சம்யுக்தா சொன்ன தோரணையில் சரண்யா வாய் மூடிக் கொண்டாள்.

நினைவலைகள் எங்கெங்கோ செல்ல, சம்யுக்தா அப்படியே உறங்கிப் போனாள். கனவில் பிரபாகரன் வந்தானோ, தூக்கத்திலும் அவளது முகத்தில் ஒரு வெட்கப் புன்னகை.

சரண்யா, சம்யுக்தா இருவருமே யோசிக்காத ஒரு விஷயம் பிரபாகரனின் வயது. இவள் வேண்டுமானால் பெண்ணின் திருமண வயது இருபத்தி ஒன்று என்று அரசாங்கம் சொன்ன வயதுக்காகக் காத்திருக்கலாம். ஆனால் பிரபாகரனின் வயது பற்றியோ, அவனது தங்கையின் வயது பற்றியோ சிறிதும் நினைத்துப் பார்க்கவில்லை. சிறு பெண்கள் தானே, இத்தனை யோசித்ததே பெரிய விஷயம்.

இவர்கள் நினைக்காததை முருகானந்தம் , அதாவது பிரபாகரனின் அப்பா நினைத்துப் பார்த்திருந்தார். என்ன இருந்தாலும் பொறுப்பான (?!) தந்தை அல்லவா?

அன்று இந்திய திருநாட்டில் தேர்தல் திருவிழா நடந்து கொண்டிருந்தது. அதனால் பிரபாகரனின் அனைத்து கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அவனும் காலையில் வழக்கம் போல எழுந்து தோட்ட வேலைகளை முடித்து, முதல் ஆளாக வரிசையில் நின்று ஜனநாயகக் கடமையையும் ஆற்றிவிட்டு ஒன்பது மணிக்குள் திரும்பவும் தூங்கி விட்டான்.

வெகு மாதங்களுக்குப் பிறகான பகல் தூக்கம். தொழிலை மேம்படுத்த நேரம் காலம் பார்க்காமல் சுற்றிக்கொண்டு இருந்தவன் அன்று நிம்மதியாக உறங்கிப் போனான். காலை உணவுக்காக அவனை எழுப்ப வந்த மலர்விழி சத்தம் செய்யாமல் திரும்பிச் சென்று விட்டாள்.

“அம்மா! அண்ணா நல்லா அசந்து தூங்கிட்டு இருக்கான். நீங்க சீக்கிரம் மதிய சாப்பாட்டை செஞ்சிடுங்க. அதுக்கப்புறம் எழுப்பி விடறேன்.” மகளது பேச்சைக் கேட்ட காமாட்சி

“ஹும்.. எம்பேரனுக்கு எத்தனை அசதி இருந்தா இப்படிக் காலைலயே தூங்குவான். ஏழெட்டு வருஷமா அவன் பொழப்பு அப்படியே போயிடுச்சு. எல்லாம் நான் பெத்த முட்டாப் பயலால வந்தது. பெரிய பாசமலர் சிவாஜி கணக்கா எல்லாத்தையும் அள்ளி தங்கச்சிக்கு தாரை வார்த்துட்டான். அண்ணன் குடும்பம் என்ன ஆகுமோன்னு கொஞ்சமாச்சும் நினைச்சுப் பாத்தாளா அவ? பணமும் பவிசும் வந்துட்டா பெத்த ஆத்தாவக் கூட மறக்கச் சொல்லும் போல.”

இடைவெளி இல்லாமல் தான் பெற்ற மக்களுக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டிருந்த அப்பத்தா பேரன் மாடியில் இருந்து இறங்கி வருவதைக் கண்டதும் வாய்க்கு ஃபெவிகால் போட்டுக் கொண்டார். முன்பெல்லாம் அவன் காதில் இது போன்ற விஷயங்கள் விழுந்தால் ருத்ர தாண்டவம் ஆடிவிடுவான்.

ஆனால் இப்போதெல்லாம் கடந்து போன விஷயங்களை அவன் நினைப்பதே இல்லை. அவனுக்குத் தான் நினைப்பதற்கு வேறு விஷயம் இருக்கிறதே.

மொத்தத்தில் பிரபாகரனிடம் காதல் வந்த‌ பிறகு நிறைய மாற்றங்கள். இது தெரியாமல் அப்பத்தா பேரனின் முன்பு அடக்கி வாசித்தார்.

“ம்மா! இன்னைக்கு என்ன ஸ்பெஷல், நீ செய்யற சமையல் வாசனை தூக்கத்தில இருந்தவனை அப்படியே இழுத்துட்டு வந்திடுச்சு” என்று சொல்லிக்கொண்டே சமையல் அறைக்குள் எட்டிப் பார்த்தவன் அங்கே அணிவகுத்து நின்றவற்றைப் பார்த்து மலைத்து நின்றான். முழு அசைவ விருந்து ஒன்று அவனுக்காக அங்கே தயாராக இருக்க, வெகு நாட்கள் கழித்து பசி என்பதை உணர்ந்தான்.

“எதுக்கு‌ மா இவ்வளவு செஞ்சிருக்கீங்க? யாராவது வர்றாங்களா?”

“அட பேராண்டி, என்ன இப்படிக் கேட்டுப்புட்ட? யாராவது வந்தா தான் இதெல்லாம் உங்க அம்மா செய்யணுமா? எல்லாம் உனக்காகத்தான்” என்ற அப்பத்தாவின் பேச்சில் மலர்விழி குறுக்கிட்டாள்.

“ரொம்ப நாள் கழிச்சு மதிய நேரத்தில அக்கடான்னு வீட்டுல இருக்கியா, கொஞ்சம் ருசியான சாப்பாடு கிடைக்கட்டும்னு நாந்தான் அம்மா கிட்ட சொன்னேன். கை கழுவிட்டு உட்காருண்ணா, சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.”

மூன்று தலைமுறை பெண்களும் சேர்ந்து அவனை அன்பால் திணற வைத்துக் கொண்டிருக்கும் வேளையில் உள்ளே நுழைந்தார் முருகானந்தம் . மகனைக் கண்டதும் புருவங்களை உயர்த்தியவர் கூடத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்து தொண்டையைக் கனைத்தார்.

“இப்போ என்ன வில்லங்கத்தைத் தூக்கிட்டு வந்திருக்கான்னு தெரியலையே. இருந்திருந்து எம்பேரன் இன்னைக்குத் தான் நாலு வாய் சோறு நிதானமா திங்குறான். அது பொறுக்கலையா இவனுக்கு.”

புலம்பியவாறே மருமகளை நோக்கி ஒரு கண்டனப் பார்வையை வீசினார் அப்பத்தா. ‘உன் புருஷன் வாயைத் திறந்தால் நடக்கிறதே வேற’ என்றது அந்தப் பார்வை.

மாமியாரின் பார்வையை உணர்ந்து கொண்ட காமாட்சி கணவனிடம், “என்னங்க! கை கழுவிட்டு வாங்க. சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்றார்.

அவரென்னவோ சாதாரணமாகத்தான் சொன்னார். ஆனால், கேட்ட மனிதருக்கு அப்படி இல்லை. சட்டென்று சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தார். மணி மதியம் பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. வழக்கமாக இரண்டு மணிக்குத் தான் அந்த வீட்டில் மதியம் உண்பது வழக்கம். அதனால் காமாட்சி நிதானமாகவே சமையல் செய்வார்.
இன்று மகனுக்காக என்று வேகமாகச் சமையல் செய்ததும் அல்லாமல் கணவரையும் சாப்பிட அழைக்க, முருகானந்தம் மனைவியை முறைத்தார்.

சாதாரணமாக காமாட்சியை வரையறை இல்லாமல் திட்டுபவர் தான். ஆனால் பிரபாகரனின் முன்பு காமாட்சியைத் திட்டிவிட முடியாது. பார்வையிலேயே கண்டனத்தை வெளிப்படுத்துவான். அதுவும் போதாது என்று வரும் போது முருகானந்தம் ஏன் வாயைத் திறந்தோம் என்று நொந்து போகும் வரை பேசித் தீர்த்துவிடுவான். அவன் இருக்கும் போது திட்டுவதென்ன, நம் மனைவி தானே வேலை வாங்கிவிடக் கூட முடியாது. அந்த அளவுக்குப் பேசுவான் பிரபாகரன்.

“அதென்ன தண்ணி சொம்பு கண்ணுக்கு முன்னாடி இருக்கு. அதை எடுத்துக் கொடுக்க சமையக்கட்டுல இருந்து எங்க அம்மா வரணுமா? அவங்க கால் என்ன இரும்புலயா செஞ்சு வச்சிருக்கு?”

“அந்த ஆல மரத்தடியில உட்கார்ந்து வெட்டி நியாயம் பேசிப் பொழுதைப் போக்கிட்டு கண்ட நேரத்தில வருவீங்க. எங்கம்மா அது வரைக்கும் பட்டினியா இருக்கணும்னு என்ன தலையெழுத்தா?”

“பெரிய மைசூர் மகாராஜா! இவர் வேட்டி கொஞ்சம் மங்கிப் போயிட்டா இவரு பவுசு குறைஞ்சா போயிடும். இதுக்காக எங்க அம்மா வயசான காலத்துல உட்கார்ந்து துவைக்கணுமா? உங்களுக்கு வேணும்னா போய் லாண்ட்ரில கொடுக்க வேண்டியது தான”

“உங்க தொங்கச்சி கேட்டாங்கன்னு எங்க அம்மாவ மீன் குழம்பு செஞ்சு தரச் சொன்னீங்களாமே. எங்க அம்மா என்ன அவங்க வீட்டுக்கு சமையல் ஆளா? செய்யத் தெரியாதவங்களுக்கு நாக்கை நீட்டி சாப்பிட மட்டும் தெரியும் போல”

ஏற்கனவே இது போன்ற பல்வேறு வசனங்களைப் பேசி அவரை ஒரு வழி செய்திருந்தான். அதுவும் ஒவ்வொரு வாக்கியத்திலும் “எங்க அம்மா” என்று அழுத்தம் திருத்தமாகப் பேசி வைப்பான். , இவனுக்கு அம்மான்னா என் பொண்டாட்டி இல்லேன்னு ஆகிடுமா என்று மனதுக்குள் புலம்பத்தான் அவரால் முடிந்தது.

இன்றும் அது போல எதையும் எதிர்கொள்ள அவர் தயாராக இல்லை. அவர் பேச வந்த விஷயம் அப்படி. அதனால் அடக்கியே வாசிக்க முடிவு செய்து மனைவியைப் பார்த்து ஒரு தெய்வீக சிரிப்பை சிந்தினார்.

“எனக்கு வழக்கம் போல இரண்டு மணிக்கு சாப்பிட்டா போதும் காமாட்சி. உனக்குப் பசிச்சா நீ சாப்பிடு.”

அப்போது தான் மகனைப் பார்ப்பது போல அவனிடம் பேச்சை ஆரம்பித்தார்.

“அட என்ன பிரபா, இந்த நேரத்தில வீட்டுல இருக்க? இன்னைக்கு கடையெல்லாம் லீவு விட்டிருக்கியா? எல்லாம் நம்பிக்கையான ஆள் தானே. உனக்கு முடியலேன்னா சொல்லு. நம்ம பஸ் ஸ்டான்ட் கடையை நான் பாத்துக்கிறேன். வயசுப் பையன், வேலை வேலைன்னு இருந்தா போதுமா, நேரத்துக்கு சாப்பிட வேண்டாமா. உனக்கு உதவி செய்ய அப்பா எப்பவும் தயாரா இருக்கேன்.”

அவரது கரிசனத்தைக் கேட்ட மலர்விழி வாசலுக்கு சென்று வானத்தைப் பார்த்து விட்டு அண்ணனைப் பார்த்துச் சிரித்தாள். அவனோ வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு சாப்பாடு, அதானே எல்லாம் என்று கைக்கும் வாய்க்கும் வேலை கொடுத்துக் கொண்டிருந்தான்.

தனது வார்த்தைகளுக்கு அங்கே மதிப்பிருக்காது என்று தெரிந்தும் முருகானந்தம் மீண்டும் பேசினார்.

“ஆத்தா! காமாட்சி! நான் ஒரு நல்ல விஷயம் பேசலாம்னு இருக்கேன். இரண்டு பேரும் இப்படி வாங்க.”

“நீ சும்மா பேசினாலே வில்லங்கம் தான். இதுல நல்ல விஷயம்னு ஒரு பீடிகை வேற. சொல்லித் தொலை” என்று தோளில் இடித்துக் கொண்டார் அப்பத்தா.

“நம்ம பிரபாவுக்கு இருபத்தாறு முடியப் போகுது. கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்” என்று அவர் ஆரம்பித்து வைத்த அந்த
ப் பேச்சு மகனுக்கும் தந்தைக்குமான இடைவெளியில் பெரும் பள்ளத்தை உருவாக்கி விட்டது.
 

Author: SudhaSri
Article Title: பகலிரவு பல கனவு -12
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom