• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நீருக்குள் பூத்த நெருப்பு - 13

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
278
நீருக்குள் பூத்த நெருப்பு

அத்தியாயம் 13

புதிய கண்ணாடியின்
புதிய பிம்பம்
கனவுகளை நனவாக்க
முடிவு செய்கிறது!
நம்பிக்கையின் துணையுடன்
வெற்றியெனும்
இலக்கை நோக்கி
வீறுநடை போடுகிறது!
பயணத்தின் முடிவில்
மகிழ்ச்சிப் பூ மலரட்டும்!

தற்கொலை என்பது ஒரு நொடியில் எடுக்கப்படும் கோழைத்தனமான முடிவு. தன்னைச் சார்ந்து வாழும் உயிர்கள் தன்னை இழந்த பின்னர் எப்படி வாழப் போகிறார்கள், எவ்வளவு துயரத்தை அனுபவிக்கப் போகிறார்கள் என்பதை உணராமல் தன்னுடைய அவமானத்தை மட்டுமே மனதில் கொண்டு எடுக்கப்படும் முடிவு. அந்த ஒரு நொடி கடப்பதற்குக் கடினமானது. மிகவும் அதிகமாக மனோதிடம் அதை வெல்வதற்குத் தேவைப்படுகிறது. தோல்வியின் வலியை எப்படியாவது விழுங்கிவிட்டு அந்த நொடியை மட்டும் கடந்துவிட்டால் போதும். அதன்பிறகு போராடி வாழ்க்கையில் வெல்லலாம். இந்த நொடியைக் கடக்க இயலாத நிலையில் மணிமாறன், தற்கொலை செய்து கொண்டு மாதவியின் வாழ்க்கையையும் சேர்த்துப் பாழாக்கிவிட்டுப் போய்விட்டான்.

அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த மாதவியின் கண்கள், காணக்கூடாத அந்தக் காட்சியைக் கண்டன. மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து போய் ஊசலாடிக் கொண்டிருந்த கணவனின் முகம், கோரமாக அவளைப் பார்த்து விழித்தது.

அழுது புரண்டு கதறி என்ன பயன்? மணிமாறனின் வாழ்க்கை முடிந்துபோனது. இறுதிக் காரியங்கள் நடந்தன. வயதான காலத்தில் மகனுக்கு இறுதிக் காரியங்கள் நடப்பதைப் பார்ப்பது, பெற்றோருக்கு மிகவும் கொடுமையான துயரம். அந்தத் துயரத்தை அனுபவித்தார்கள் பாவையும், அவளுடைய கணவரும். திருநாவுக்கரசு எதுவுமே நடக்காதது போல நடந்து கொண்டான். தம்பியைத் தவறாகப் பேசி விட்டோம் என்கிற குற்றவுணர்வு அவன் மனதில் துளிக்கூட இல்லை. செழியன் கூட விஷயத்தைக் கேள்விப்பட்டு வந்தான். ஒதுங்கியிருந்து அண்ணனை வழியனுப்பினான். அவனுடைய மனைவி அப்போது வயிற்றில் குழந்தையைச் சுமந்துகொண்டு இருந்ததால் வரவில்லை.

மணிமாறனின் மறைவுக்குப் பிறகு மாதவியின் வாழ்க்கை நரகமாகிப் போனது. மணிமாறன் இறந்துபோனதற்கு முதல் நாள் மாதவியிடம் பிரியத்துடன் பாவை பேசி சமாதானம் செய்திருந்தாள். இருந்தாலும் அவனுடைய மறைவுக்கு ஒருவிதத்தில் மாதவியே காரணம் என்று மனதில் போட்டுக் கொண்டாள். தன்னுடைய மூத்த மகன் பேசிய வார்த்தைகள், மணிமாறனின் மனதை ரணமாக்கித் தற்கொலைக்குத் தூண்டின என்கிற உண்மையான காரணத்தை ஏற்க மறுத்தாள். ஏனென்றால் திருநாவுக்கரசு அவள் பெற்ற மகன். மாதவி, வெளியிலிருந்து வந்த பெண்ணாயிற்றே! .

இளம் விதவையாக நின்ற மாதவி, துக்கம் விசாரிக்க வந்தவர்களுக்குப் பேசுபொருளானாள். விதவை என்கிற புதிய பட்டம், அவளுடைய சின்னச் சின்ன சந்தோஷங்களைக் கூடப் பறித்து அவளை மூலையில் முடக்கியது. அவளுடைய மாமனார் கூட இந்த விஷயத்தில் அவளுடைய ஆதரவிற்கு வரவில்லை. புத்திர சோகம் கொடுமையானது தான். மகனைப் பிரிந்த துயரம் தசரதரின் உயிரைப் பறித்தது. இளம் மகனைக் காலனுக்குப் பறிகொடுத்த துயரம் மாமனாரைக் கொஞ்சம் கொஞ்சமாக நோயாளியாக்கிப் படுக்கையில் தள்ளியது.

“ எந்த வேளையில இந்த வீட்டுல காலடி எடுத்து வச்சாளோ, நல்லது நடக்கறதே நின்னு போச்சு. ஒரு மகன் வீட்டை விட்டுப் பிரிஞ்சு போனான். பெரியவன் வேலையை விட்டான். அவளுக்குத் தாலி கட்டின பாவத்துக்கு என் மகன் உலகத்தை விட்டே போயிட்டான். குழந்தை, குழந்தைன்னு இவ்வளவு அனத்தி அவனோட கதையையே முடிச்சுட்டாளே பாவி” என்று பாவை புலம்பியபோது மணிமேகலைக்கு அத்தையை ஓங்கி அறையலாம் என்று கூடத் தோன்றியது. மாதவி பாவம் பொறுமையாக இருந்தாள். மணிமேகலை மட்டும் இல்லையென்றால் என்றோ அவளும் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பாள். மணிமேகலையும், அவளுடைய குழந்தைகளும் அவளைச் சுற்றி பாதுகாப்பு அரண்களாக நின்றார்கள்.

இந்தக் கொடுமைகளின் உச்சமாக நடந்த ஒரு நிகழ்வு, மணிமேகலையை வேறொரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளியது. தாய்ப் பறவை, குஞ்சை எப்படியாவது காக்கத் துணிவதுபோலத் துணிந்து களத்தில் இறங்கினாள். அவளுக்கும் அவளுடைய கணவனுக்கும் நடுவிலான உறவில் அன்றுதான் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது.

மணிமாறன் மறைந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் முடிந்திருந்தது. திருநாவுக்கரசு ஆரம்பித்த பிஸினஸ் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. கணிசமாக லாபம் கிடைத்து வந்தது. அப்பாவும், அம்மாவும் ஒடுங்கிப் போய்க் கிடந்தார்கள். மணிமேகலையின் தலையில் அத்தனை பொறுப்புகளும். இப்போதெல்லாம் அரசு எப்போது வீட்டுக்கு வருகிறான், எப்போது கிளம்பிப் போகிறான் என்று கூட வீட்டில் இருப்பவர்களுக்குத் தெரிவதில்லை. அன்று அப்படித்தான் லேட்டாக வந்து படுக்கையில் கணவன் படுத்ததைப் பார்த்தாள் மணிமேகலை. அரைகுறைத் தூக்கத்தில் இருந்தாள். அப்படியே நன்றாகத் தூங்கி விட்டாள்.

திடீரென்று இரவில் குழந்தை சுடரி அழுதபோது கண்விழித்த மணிமேகலை, கணவன் படுக்கையில் இல்லையென்று கவனித்தாள். ஒருவழியாக சுடரியை சமாதானம் செய்து தூங்க வைத்து விட்டு, கணவன் எங்கே என்று தேட ஆரம்பித்தாள். பாத்ரூம் கதவும் திறந்தே இருந்தது. மெல்ல எழுந்து வெளியே வந்தபோது திருநாவுக்கரசுவைப் பார்த்துத் திடுக்கிட்டாள்.

அவர்களுடைய படுக்கையறைக்கு நேரெதிரே அந்தப் பகுதியில் கடைசியாக இருந்த அறை மணிமாறன், மாதவியுடையது. அந்த அறையின் கதவுக்கு அருகில் நின்றுகொண்டு கதவின் கைப்பிடியைத் திருகிக் கதவைத் திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தவனைப் பார்த்துப் பகீரென்று மணிமேகலைக்கு. அவனுடைய நோக்கம் புரிந்துவிட்டது அவளுக்கு.

‘ ஓஹோ, இவனுக்குள் இப்படி ஒரு முகம் இருக்கோ! இவ்வளவு நாட்களா நான் ஏன் இதனைக் கவனிக்கவேயில்லை? மணிமாறன் இறப்பதற்கு முதல் நாள் மாதவியின் அழகைப் பத்திக் கீழ்த்தரமான கமெண்ட் அடிச்சானே அப்பவே நான் புரிஞ்சுக்கத் தவறிட்டேனே? ஏதோ பேச்சு வாக்கில் உளறினதா நான் நெனைச்சு அதை அப்போ ஸீரியஸா எடுத்துக்கலையே? இவன் கிட்டயிருந்து மாதவியை எப்படியாவது காப்பாத்தணும்’ என்று முடிவு செய்த மணிமேகலை, தொண்டையைக் கனைத்தாள்.

திடுக்கிட்டுப் போய்த் திரும்பிப் பார்த்த அரசு, சமாளிக்க முயற்சி செய்தான்.

“ என்ன ஆச்சு மேகலை? வெளியே ஏதோ சத்தம் கேட்ட மாதிரி இருந்தது. பாக்க வந்தேன்” என்று அசடு வழிந்தான்.

“ சுடரி எதுக்கோ அழுதுட்டே இருக்கா. கொஞ்சம் பாத்துக்கங்க. நான் கிச்சன்ல போயித் தண்ணி பாட்டில் கொண்டு வரேன்” என்று சொல்லிவிட்டு சமையலறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். தன்னுடைய முயற்சி தோல்வியடைந்த எரிச்சலில், திருநாவுக்கரசு தங்களுடைய அறைக்கே திரும்பினான். அதன் பிறகு மணிமேகலைக்குத் தூக்கம் வரவில்லை.

இரவு முழுவதும் யோசித்துக் கொண்டிருந்த மணிமேகலை ஒரு முடிவேடுத்தாள்.

‘ இவரோட மனசுல கள்ளம் இருக்குன்னு நல்லாத் தெரிஞ்சுபோச்சு. எப்பப் பாரு இவரைக் கண்காணிச்சுகிட்டே இருக்கறது கஷ்டம். என்ன மீறி ஏதாவது தப்பு நடந்துருச்சுன்னா மாதவி நிலைமை என்ன ஆகும்? செய்யறதைச் செஞ்சுட்டு மாதவி பேருல பழி போடத் தயங்க மாட்டான் இந்தக் கேவலபுத்திக்காரன்’ என்று திட்டித் தீர்த்தாள் மனதுக்குள்.

அடுத்த நாள் எழுந்ததும் தனது திட்டத்திற்கான வழிமுறைகளைச் செயல்படுத்தத் தொடங்கினாள். வேண்டுமென்றே மாதவியை வம்மபுக்கிழுத்தாள் மணிமேகலை. கடுஞ்சொற்களைப் பேசி அவளுடைய மனதைக் காயப்படுத்தினாள். பாவைக்கோ ஆச்சர்யம். ஒற்றுமையாக இருந்த இரண்டு மருமகள்கள் நடுவில் என்ன பிரச்சினை வந்திருக்க முடியும் என்று குழப்பமாக இருந்தது அவளுக்கு. சரியாக ஒரு வாரம் கழித்து மாதவி, ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டுப் போய்விட்டாள்.

திருநாவுக்கரசுவின் மனதில் மாதவியின் பேரில் இருந்த இச்சை என்று தெரியவந்ததோ, அதற்கு அடுத்த நாளில் இருந்து குழந்தைகளுடன் மாதவியின் அறையில் தூங்க ஆரம்பித்தாள் மணிமேகலை. மாதவி வீட்டை விட்டுப் போன பிறகும் அதே அறையில் இரவு தூங்கினாள். கணவனைத் தன்னருகில் நெருங்கவிடவேயில்லை மணிமேகலை. வலுக்கட்டாயமாக அவளிடம் அவன் வந்தபோது மிரட்டி அனுப்பிவிட்டாள்.

“ மாதவியை நீங்க எப்போ தப்பான பார்வை பாக்க ஆரம்பிச்சீங்களோ, அப்பவே நம்ம தாம்பத்தியம் முடிஞ்சு போச்சு. எனக்கும் உங்களுக்கும் இனிமேல் எல்லாம் முடிஞ்சு போச்சு. தவறி என் பக்கத்தில் வந்தீங்கன்னா, நீங்க செஞ்சதை அத்தை, மாமா கிட்டச் சொல்லிடுவேன்.போலீஸுக்கு லெட்டர் எழுதிப் போட்டுட்டுத் தற்கொலை செஞ்சுக்குவேன்” என்று சொல்லிவிட்டாள். அன்றே அவர்கள் மனதளவில் பிரிந்துவிட்டார்கள். ஆனாலும், மணிமேகலை தன் கடமைகளில் தவறவில்லை. வயதான மாமனார், மாமியாரை இறுதி வரை பார்த்துக் கொண்டாள்.

திருநாவுக்கரசுவின் ராசி அவனுடைய பிஸினஸ் வெற்றிகரமாக முன்னேறியது. வாகனங்களுக்கான டயர் தயாரிக்கும் கம்பெனியொன்றை விலைக்கு வாங்கி அதையும் நன்றாக நிர்வாகம் செய்து பணத்தில் கொழித்தான். குழந்தைகள் வளர்ந்து வந்தன. பெரிய பங்களா ஒன்றை, விலைக்கு வாங்க எண்ணி, அவர்கள் இருந்த வீட்டை விற்க முடிவு செய்தான் திருநாவுக்கரசு. அந்த வீடு பாவை பெயரில் இருந்தது. புது வீட்டை மணிமேகலை பேரில் பதிவு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தாள் பாவை.

“ மருமக பேரில் இருந்த நிலம், தோட்டம் எல்லாத்தையும் வித்து உன் பிஸினஸில போட்டுருக்கே. இப்போ இந்த வீட்டையாவது மேகலை பேருல ரிஜிஸ்டர் பண்ணு” என்றாள் பாவை.

“ அது எதுக்கும்மா? அவ பேருல இருந்தா என்ன? என் பேருல இருந்தா என்ன? ஒரு எல்லாம் ஒண்ணு தானே? “

“ எல்லாம் ஒண்ணுதான்னு நீயே சொல்லறயே? அப்ப அவ பேருல வாங்கறதுல உனக்கு என்ன கஷ்டம்? அவளுக்குன்னு ஏதாவது பிராபர்ட்டி இருக்கணும். உங்கப்பா, என் பேருல தானே வீடு வாங்கினாரு? ” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாள் பாவை. சரி, ஒரு விதத்தில் மணிமேகலை பேரில் வாங்கினால் வரிச்சலுகைகள் கிடைக்கலாம் என்கிற சமாதானத்தைச் சொல்லிக்கொண்டு மணிமேகலை பெயரில் வீட்டைப் பதிவு செய்தான் திருநாவுக்கரசு. புதிய வீட்டிற்குக் குடியேறினார்கள். இரண்டு வருடங்கள் கழித்து முதலில் மாமா, அவரைத் தொடர்ந்து பாவை அத்தை இருவருமே இறைவனடி சேர்ந்தார்கள்.

ஒரே வீட்டிற்குள் இரண்டு தனித்தனித் தீவுகளாகக் கணவனும், மனைவியும் வாழ்ந்தார்கள். குழந்தைகளுக்குப் படிப்பு விஷயத்தில் எந்தக் குறையும் வைக்காமல் பார்த்துக் கொண்டாள் மணிமேகலை. பிஸினஸ் விஷயத்திலும் முடிந்த விஷயங்களில் தலையிட்டுத் தன்னுடைய நிர்வாகத் திறமையையும் நிரூபிக்கத் தவறவில்லை அவள். திருநாவுக்கரசுவுக்கும் அது வசதியாகவே இருந்ததால் அவளுடைய உதவியை ஏற்றுக் கொண்டான்.

தன்னுடைய கடந்த காலத்தின் பக்கங்களை பூரணி எதிரில் விரித்து வைத்து விட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள் மணிமேகலை.
அனைத்தையும் தெரிந்துகொண்ட பூரணி வாயடைத்துப் போயிருந்தாள்.

“ கலை, எனக்கும் உனக்கும் காம்பட்டிஷனே வைக்கலாம் போலத் தோணுது எனக்கு. யாருக்கு அதிகப் பிரச்சினைகள்னு முடிவு சொல்ல முடியாதபடி கடுமையான போட்டியா இருக்கும் அது! ”

“ பிரச்சினைன்னு நினைச்சுப் பாக்கக்கூட நம்ம கிட்ட அவகாசம் இல்லை. வாழ்க்கையே இப்படித்தான் இருக்கும்னு புரிஞ்சுக்கிட்டு எதிர்நீச்சல் போட்டு ஒருவழியாக்கடந்து வந்துட்டோம் பூரணி”

“ ஆமாம், மாதவியை வீட்டை விட்டு நீதான் அனுப்பியிருக்கேன்னு புரியுது. அதை எப்படி சமாளிச்சே? ”

“ மாதவி அந்த வீட்டில் தொடர்ந்து இருக்கறது அவளுக்கு நல்லதில்லைன்னு புரிந்து. இந்த விஷயத்தை அத்தை கிட்டச் சொல்ல விருப்பமில்லை எனக்கு. சொன்னா நம்புவாங்களான்னும் உறுதியாத் தெரியலை. அதுனால அவ கிட்ட என்னோட திட்டத்தைச் சொல்லிட்டு வேணும்னே அவளோட வம்புச்சண்டை வளத்தேன். அவளை எங்கே அனுப்பறதுன்னு புரியலை. என் பொறந்த வீட்டுல யாருமே இல்லை. அவளோட மாமாவுக்கும் வயசாயிடுச்சு. அங்கயும் அனுப்ப முடியலை. அப்பத்தான் செழியனும், அவரோட மனைவியும் நினைவுக்கு வந்தாங்க. அவங்க கிட்டப் பேசிட்டு பெங்களூர் அனுப்பினேன் முதலில். ஸ்கூல் டீச்சர் வேலைக்கான தகுதிகள் அவளிடம் ஏற்கனவே இருந்ததால், பெங்களூரில் ஒரு ஸ்கூலில வேலை கிடைச்சது. வேலை கெடைச்சதும் ஒரு வொர்க்கிங் விமன் ஹாஸ்டலில் ரூமெடுத்துத் தங்கினா. அதுவரைக்கும் செழியன் ஃபேமிலி மாதவிக்கு ஆதரவு கொடுத்தாங்க. அதுக்கப்புறம் சில வருடங்கள் கழிச்சு இங்கே கொடைக்கானலில் இந்த ஸ்கூல் வேலை கெடைச்சதும் இந்த வேலைக்கு மாறிட்டா”

“ சரி, அது புரிஞ்சுடுச்சு. உன்னோட குழந்தைகள் சுரபி, சுடரி ரெண்டு பேரும் வளந்துருப்பாங்களே? அவங்க எங்கே இருக்காங்க? ”

“ படிச்சு முடிச்சு வேலை பாக்கறாங்க. பெரியவ டாக்டர். ஆஸ்திரேலியாக்குப் படிக்கப் போனா. அங்கேயே வேலை பாக்கறா. அந்த ஊர்க்காரனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த நாட்டுப் பிரஜையாவே ஆயிட்டா. சின்னவ இப்போ யு. எஸ். ஸில் இருக்கா. ஸாஃப்ட்வேர் இஞ்சினியர். இனிமேல்தான் கல்யாணம் நடக்கணும்”

“ சரி, உன்னோட பொண்ணுங்க ரெண்டு பேருக்கும் உன்னோட இந்த முடிவு தெரியுமா? அப்பாவைப் பிரிஞ்சி அம்மா எதுக்கு வரணும்னு அவங்க ஒண்ணும் தப்பா நெனைக்கலையா? “

“ அதெல்லாம் அவங்க கிட்ட நான் டிஸ்கஸ் பண்ணலை. ஆனால், எங்களுக்குள்ளே ஏதோ பிரச்சினை ஓடிட்டிருக்குன்னு அவங்க ரெண்டு பேரும் புரிஞ்சுகிட்டாங்க. அதைப் பத்தி அவங்களா எதுவும் கேக்கவும் இல்லை. இந்த விஷயத்தில் அவங்க தலையிடவும் இல்லை. உண்மையைச் சொன்னாப் புரிஞ்சுக்குவாங்க. ஆனா, அவங்க அப்பாவைப் பத்தின உண்மைகளைச் சொல்லி அவங்களை ஏன் டென்ஷனாக்கணும்னு நெனைச்சு விட்டுட்டேன்”

“ பரவாயில்லை, நல்ல மெச்சூர்டா இருப்பாங்க போல இருக்கு. நீயும் நல்லா வளத்துருக்கே அவங்களை”

“ நல்லா வளத்துருக்கேனான்னு தெரியலை. ஆனால் துணிச்சலா எதையும் ஃபேஸ் பண்ணற அளவு அவர்களைத் தயார் பண்ணிக்கறேன். பணப் பெருமை அவங்க மேல படியாமல் ஜாக்கிரதையாப் பாத்துகிட்டேன். சாதாரண நடுத்தர வர்க்கக் குடும்பத்துக் குழந்தைகளாகத் தான் அவங்களை வளத்தேன். படிக்க வச்சதும் சாதாரண ஸ்கூலில் தான். ஆனால் படிப்பு முக்கியம், படிப்பை வச்சுத்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்னு குழந்தையில் இருந்தே அவங்க மனசுல போட்டு வளத்தேன்” என்று சொல்லி முடித்தாள் மணிமேகலை.

“ அந்த மாதவி விஷயத்துக்கு அப்புறம் நாங்க ரெண்டு பேரும் ஒதுங்கியே இருந்தோம். ஆனால் குழந்தைகள் வளரட்டும்னு காத்துக்கிட்டு இருந்தேன். என்னோட முடிவினால அவங்க வாழ்க்கை எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாதுன்னு நினைச்சேன். இனிமேல் கவலையில்லை. என் வாழ்க்கையை என் இஷ்டப்படி வாழலாம்னு நினைச்சேன். மாதவி என்னை இங்கே வரச்சொல்லிச் சொல்லிட்டே இருந்தா. அவ பேச்சைக் கேட்டு அவளுக்காகவே இங்கே வந்துட்டேன். இனிமேல் மாதவி பத்தியும் எனக்குக் கவலையில்லை” என்றாள் மணிமேகலை. பூரணி அவளைப் பார்த்த பார்வையில் பாராட்டு தெரிந்தது.

அடுத்த ஒரு வாரம் நன்றாகவே போனது. மணிமேகலை வேலையை நன்றாகக் கற்றுக் கொண்டாள். அந்த வார இறுதியில், சனிக்கிழமை மதிய நேரத்தில் பூரணியைச் சந்திப்பதற்காக மணிமேகலை அவளுடைய வீட்டுக்குப் போயிருந்தாள்.

“ வா மணிமேகலை. என்னோட தேவதை அம்மா சென்னையில் இருந்து திரும்பி வந்துட்டாங்க. நானே உன்னை வரச் சொல்லணும்னு நினைச்சேன். நீயே வந்துட்டே. வா, அவங்களுக்கு உன்னை அறிமுகம் செஞ்சு வைக்கிறேன்” என்று அவளுடைய கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள் பூரணி.

வரவேற்பறையில் ஸோஃபாவில் அமர்ந்திருந்த அந்தப் பெண்மணி, மணிமேகலையை நிமிர்ந்து பார்த்தாள்.

“ மணிமேகலை, இவங்கதான் என்னோட தேவதை அம்மா” என்று உற்சாகத்துடன் அறிமுகம் செய்து வைத்தாள் பூரணி.

“ பூரணி, நான் உனக்கு மட்டும் தான் தேவதை அம்மா. உன்னோட ஃப்ரண்டுக்கு இல்லை” என்று சொல்ல, மணிமேகலையின் முகம், மோப்பக் குழையும்
அனிச்சமாக உடனடியாக வாடி விட்டது.

தொடரும்,

திருபுவனம் நெசவாளி.
 

Author: SudhaSri
Article Title: நீருக்குள் பூத்த நெருப்பு - 13
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
165
பெண்ணாக பிறந்தாலே
பல பிரச்சனைகளை
பார்க்க வேண்டும்....
படிப்பு தான் மிக
பெரிய சொத்து.....

பொறுத்துக் கொள்வது
பலவீனம் அல்ல
பலமே...நம் வாழ்வை
பிரமிக்க வைக்கும்....

பெண் நினைத்தால்
பொறுத்தும் போகலாம்
பூமியும் ஆளலாம்....

பெத்த பிள்ளையை
பிரிந்து சென்ற தாய்
எப்படி தேவதை அம்மா
ஆகுவாள்????

திருப்பம் அருமை....
 
Top Bottom