• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

சுயம்பு 40

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
71
சுயம்பு-40

தர்ஷினியின் நிச்சயம் முடிந்து இரண்டு வாரங்கள் முடிந்த பின் கவுதம், ஸ்வேதா அபிமன்யுவோடு வந்து சேர..அபிமன்யுவின் அமர்க்களம் ஆரம்பமானது.

ஏற்கனவே ஹாஸ்பிடலில் இருந்த போதே கால் வலி, கை வலி என சொல்லி அதை செய், இதை செய் என சொல்லி அதில் திருப்தி வராமல் ஸ்வேதாவை படுத்தி எடுத்தவன் ஊருக்கு வந்த பின் அம்மா, அப்பா, அத்தை, நண்பர்கள் என எல்லாரையும் பார்த்ததும் ஸ்வேதா தன்னை சரியாக கவனிக்கவில்லை என அவளை பற்றி ஒரு பெரிய குறையாக சொல்லி புலம்பினான்.

அபிமன்யுவை சீக்கிரம் எதிலும் திருப்தி செய்ய முடியாது என வீட்டினர் புரிந்து கொண்டு இருந்ததால் அவனை சமாதானம் செய்து இனி அவனை பத்திரமாக தான் பாத்து கொள்வதாக அவனுடைய அம்மா வாக்கு குடுத்த பின்பே அமைதியானான்.

அன்றே சத்யா வீட்டில் போக வேண்டும் என அடம் பிடித்து அங்கு போனவன் தர்ஷினியை வாசலில் பார்த்ததுமே "ஏய் ராட்சசி.. எப்டி இருக்க..பாவம் டி..எங்க மாப்ளை.."என அவளை கலாய்க்க..

"டேய்..எருமை..வீட்டுக்குள்ள இன்னும் வரவே இல்ல..அதுக்குள்ள என்னை வம்பிழுக்கறீயா..உடம்பு பூரா கட்டு போட்டும் நீ திருந்தலியா..நீ எல்லாம் எப்டி தான் டாக்டர்க்கு படிச்சியோ..நியாயமா உன் வாய் தான் கட்டு போட்டிருக்கணும்.." என பதிலுக்கு அவளும் அவனை வார..

அதற்குள் பேச்சு சத்தம் கேட்டு வெளியே வந்த சத்யா உற்சாகமாக

"அடடே..மனு..வா..வா..எப்ப வந்த..இப்ப உடம்பு எப்டி இருக்கு..வலி கொறஞ்சிருக்கா.." என அவனை விசாரித்து விட்டு தர்ஷினியிடம்

"என்ன தர்ஷீ..இது...வீட்டுக்கு வந்தவங்களை வாசல்ல நிக்க வெச்சு பேசறது நல்லாவா இருக்கு.."

"என்ன தான் அவன் உன் ப்ரெண்டா இருந்தாலும் இந்த மாதிரி பேசறது தப்பு மா..."

"அதுவும் அத்தை வீட்டு ஆளுங்க எல்லாம் வந்திருக்கும் போது நீ கத்தறது கொஞ்சமும் சரியில்ல..உள்ள போ" என மெல்லிய குரலில் அவளை கடிந்து உள்ளே அனுப்பினான்.

எல்லாரையும் உள்ளே அழைத்து போனவன் அங்கிருந்த தன் அத்தையின் உறவினர்களுக்கு கவுதம், ஸ்வேதா, அபிமன்யுவை அறிமுகம் செய்து வைத்தான்.

அபிமன்யுவிடம் ரகசியமாக "மாப்ளையை பாக்கணும்னு சொன்னியே..மேல ஹால்ல ஹர்ஷா கூட விளையாடறாரு..போய் பாரு.." என சொல்லி அவனை அனுப்பி விட்டு மெல்ல சமையலறை பக்கம் நகர்ந்தான்.

அங்கு உத்ராவும் அவனுடைய அத்தை சுமித்ராவும் பேசி கொண்டு இருந்ததை பார்த்து, அங்கிருந்து வாசல் பக்கம் போய் கவுதம், ஸ்வேதாவோடு உட்கார்ந்து பேச ஆரம்பித்தான்.

மாடிக்கு போன அபிமன்யு ஹர்ஷாவோடு விளையாடி கொண்டு இருந்தவனை பார்த்து "அத்தான்..எப்டி இருக்கீங்க.." என குரல் குடுக்க...திரும்பி பார்த்தவன் அபிமன்யு யார் என கேள்வியாக பார்க்க.."வணக்கம் அத்தான்..நான் அபிமன்யு.. சத்யா அண்ணாவோட ப்ரெண்ட்.." என்றதுமே..

"வாங்க..அபிமன்யு..எப்டி இருக்கீங்க..உங்களை பத்தி தர்ஷீ நிறைய சொல்லி இருக்கா.."

"என் பேரு..நிரஞ்சன்..சத்யாவோட அத்தை பையன்..தர்ஷுவை கல்யாணம் செஞ்சுக்க போறவன்.." என கைகளை குலுக்கி தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான்.

அவனோடு உட்கார்ந்தவனை பார்த்த ஹர்ஷா "சித்தப்பா.." என தாவ.."வாடா..குட்டி பையா.." என சொல்லி அவனை தூக்கி கொஞ்ச ஆரம்பித்தான்.

சில நிமிடங்களில் தர்ஷினி இருவருக்குமாக காஃபி கொண்டு வர..அதை பிடிங்கி கொண்டவனை பார்த்து "டேய்..அல்பம்..உனக்கும் சேத்து தான் கொண்டு வந்திருக்கு.. ஏன்டா இப்டி அலையற..." என அவனை திட்டி கொண்டே காஃபி டம்பளரை திணித்து விட்டு நிரஞ்சனுக்கு குடுத்தவள் ஹர்ஷாவை தூக்கி போய் தனியாக அமர்ந்து பக்கத்தில் இருந்த ஜன்னலில் வழியாக வெளியே தெரிந்த மரக்கிளையில் உட்கார்ந்து இருந்த பறவைகளை காண்பித்து, அவனிடம் பேசியபடி கொண்டு வந்த பூஸ்டை மெல்ல குடுக்க ஆரம்பித்தாள்.

அதற்குள் அங்கு கவுதம், ஸ்வேதா, உத்ராவோடு வந்த சத்யா காலியாக இருந்த சோஃபாக்களில் உட்கார்ந்து கொண்டனர்.

நேரம் போவதே தெரியாமல் அரட்டை அடித்தவர்கள் கிளம்ப..அவர்களை சத்யாவும், உத்ராவுமாக சேர்த்து வாசல் வரை சென்று வழியனுப்பி விட்டு வந்தனர்.

மறுநாளில் இருந்தே ஆளுக்கு ஒரு கல்யாண வேலைக்கு பொறுப்பெடுத்து கொண்டதை வேகமாக செய்ய ஆரம்பித்தனர். அழைப்பு வைக்க வேண்டியவர்களின் பேர், அட்ரஸ் என கலெக்ட் செய்து, அட்ரெஸ் சரியா என பார்ப்பது, பத்திரிகை செலக்ட் செய்வது, அச்சடிக்க குடுப்பது, வந்ததும் யாருக்கு பத்திரிகை குடுக்க வேண்டுமோ..அவர்களுடைய பேரை பத்திரிக்கையில் எழுதுவது...

சமையல், பூ அலங்காரம் என ஆட்களை தேடி பார்த்து சரியான ஆட்களை தேர்ந்தெடுப்பது என வேலைகள் தொடர்ந்து நடக்க..நாட்கள் பறந்தது.

நல்ல நாள் பார்த்து மாங்கல்யம் உருக்க அதன் பின் நாட்கள் நகர்ந்தது நிமிடங்கள் நகர்ந்தது போல நகர்ந்து மறுநாள் கல்யாணம் என வந்து நின்றது.

நேரம் நன்றாக இருந்ததால் பெண் அழைப்பு மதியம் என சொல்லி பெண்ணை சத்திரத்துக்கு அழைத்து போக..சொந்தங்கள் வர அவர்களோடு கிளம்பிய தர்ஷினியோடு உத்ராவும் கிளம்பினாள். அங்கு போனதும் ஆரத்தி சுற்றி வரவேற்று மேடைக்கு அழைத்து போய் நலங்கு வைக்க ஆரம்பித்தனர்.

நலங்கு முடிந்ததும் அதுவரை பம்பரமாக சுற்றி வேலை செய்தவர்களுக்கு அவசியம் ஓய்வு தேவை என நிரஞ்சன் மறுநாள் மாலை ரிசப்ஷன் செய்யலாம் என தீர்மானமாக சொல்லிவிடவே..

ஓய்வாக எல்லாருமாக உட்கார்ந்து பேசி அரட்டை அடிக்க..அங்கு வந்திருந்த சத்யா, கவுதம், உத்ரா, அபிமன்யு, நிரஞ்சன் நண்பர்களின் கேலி பேச்சுகள், சிரிப்புக்களால் அந்த இடமே ஆனந்தத்தில் அதிர்ந்தது.

தர்ஷினியோடு உத்ரா, ஸ்வேதா இருக்க..அங்கும் தர்ஷினி, உத்ரா, ஸ்வேதாவின் தோழிகளால் இடமே சிரிப்பால் நிறைந்தது. அதை பார்த்த சத்யாவின் அத்தை ஆனந்த கண்ணீரோடு தன் தம்பியிடம் ஒவ்வொன்றாக சொல்லி பூரித்து போனார்.

"நாளைக்கு காலைல சீக்கிரமே முகூர்த்தம்..இன்னும் என்ன அரட்டை.. போய் எல்லாரும் தூங்குங்க.." என முரளி அவர்களிடம் பல முறைகள் சொல்லி கேட்காததால்..மிரட்டி அனுப்பி வைத்தார்.

மறுநாள் காலை 4 மணிக்கே சத்திரமே விழிக்க..குளிப்பது, அலங்காரம் என ஒவ்வொருவரும் தயாராக அறைகள் போதவில்லை.

காலை 6-7 முகூர்த்தம் என குறித்திருக்க, குறித்த நேரத்தில் சுபமாக திருமணம் நடக்க..எல்லாரும் மகிழ்ச்சியில் மணமக்களிடம் கை குடுத்து ஆனந்தத்தில் திளைத்தனர்.

மேடையில் இருந்து இறங்கி வந்து பெற்றோரிடம் ஆசீர்வாதம் வாங்க வந்த தம்பதிகளை நிறுத்தி வீட்டு பெரியவர்கள் எல்லாருமாக ஒன்றாய் நின்று கொள்ள இருவருமாக வணங்கி எழுந்தனர்.

எழும் போது முரளியின் கண்களில் நீரை பார்த்த நிரஞ்சன் "மாமா... அவ உங்க வீட்டு பொண்ணு மட்டும் இல்ல..எங்க வீட்டு பொண்ணும் தான்..அவளை என்னால முடிஞ்ச அளவுக்கு சந்தோஷமா வெச்சுப்பேன்..நீங்க தயவு செய்து கண் கலங்காதீங்க..மாமா.." என அவரை அணைத்து ஆறுதல் சொன்னான்.

"இல்ல மாப்ள..நான் அழல..சந்தோஷத்துல தானா கண்ல தண்ணி வருது.." என பேச முடியாது பேசியவரை மெல்ல அழைத்து போய் அங்கிருந்த சேரில் உட்கார வைத்த நிரஞ்சன் அவரிடம் தனியாக சில விஷயங்கள் பேச..அதில் அவர் முகம் மலர்ந்தது.

திலகவதி தனக்கு கிடைத்த அதிர்ச்சியால் எந்த பேச்சும் இல்லாமல் அமைதியாக கல்யாணத்தில் தன் வேலைகளை மட்டும் பார்த்து கொண்டிருக்க..எந்த வாக்குவாதமும் இல்லாமல் கல்யாண மண்டபமே அமைதியாக இருந்தது.

அன்று மாலை தான் ரிசப்ஷன் என்பதால் அவர்களின் சொந்த ஊருக்கு போனவர்கள் இரு வீட்டு குல தெய்வ கோயிலுக்கும் போய் நேர்த்திக்கடன் செலுத்தி பொங்கலிட்டு வணங்கி, ஊரில் இருந்த சில சொந்தக்காரர்கள் வீட்டுக்கும் சென்று வந்தனர்.

மாலையில் ஆரம்பித்த ரிசப்ஷன் முடிய நள்ளிரவாக அங்கேயே தங்கி ஓய்வெடுத்தவர்கள் மறுநாள் கிளம்பி தர்ஷினியை அவளுடைய வீட்டில் விட்டு அழுதவளை நிரஞ்சன் சமாதானம் செய்ய..அத்தையிடம் சொல்லி விட்டு சத்யா தம்பதியர் தங்கள் வீட்டுக்கு கிளம்பினார்கள்.

மறுவீடு வந்த நிரஞ்சன், தர்ஷினி இரண்டு நாட்கள் தங்கி விட்டு கிளம்பதும்..சத்யா முரளியிடம் "அப்பா..நாங்க பேசின மாதிரி நாளைக்கு கிளம்பறோம்.." என்றான்.(தொடரும்).
 

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 40
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom