• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

சுயம்பு 39

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
71
சுயம்பு-39

சத்யா "அப்பா...அம்மாவுக்கு நானும் என்னோட விருப்பமும் ஒரு பொருட்டாவே இல்லை..அதே மாதிரி நானும் இனி அவங்களை ஒரு பொருட்டா நினைக்க மாட்டேன்.."

"அவங்களுக்கு என் பொண்டாட்டி தேவையில்லேனா...என் பொண்டாட்டிக்கும் அவங்க தேவையில்ல..எப்ப இவங்களோட சுயரூபம் தெரிந்ததோ, இனி நானும் என் குடும்பமும் இந்த வீட்டுல இருக்கறது சரியா வராது.."

"இன்னிக்கு மன்னிப்பு கேட்டாங்களேனு அவங்களை நம்பி இருந்தா..மறுபடியும் வேற யாரையாவது சேத்துக்கிட்டு இதையே செய்ய மாட்டாங்கனு என்ன நிச்சயம்..எப்பவுமே பயத்தோட வாழ முடியாது பா.."

"அதனால நாங்க தனியா போறோம்..ஏன் நாங்க உங்க கூட இல்லேனு உங்களை யாரும் கேள்வி கேக்கற மாதிரி வெக்க மாட்டோம்..."

"இந்த ஊர்ல நாங்க இருக்க மாட்டோம்..போதும் பா..இப்ப அனுபவிச்சதே..எனக்கு வர போற ஜென்மங்களுக்கும் போதும்.."

"அம்மாக்கு எப்பவுமே உங்க கூட பிறந்த அத்தைனாலே இளக்காரம் தான்..வீட்டுக்கு வந்தா வானு கூட கூப்பிட மாட்டாங்க..அது முன்னால நடந்திருக்கலாம்.."

"இப்ப அவங்க முறைப்படி தர்ஷீவை பொண்ணு கேட்டு, தர்ஷீக்கும் பிடிச்சு தானே நாம சம்பந்தம் பேசினோம்..ஆனா இவங்களுக்கு பிடிக்கலைனு எனக்கு நல்லா தெரியும்...தர்ஷீ காதுபட இவங்க அத்தை குடும்பத்தை கேவலமா பேசியிருக்காங்க..அவ சொல்லி வருத்தப்பட்டா.."

"இவங்க அடுத்து எதையாவது யோசிச்சு குழப்பறத்துக்குள்ள.. சீக்கிரமே நல்லபடியா தர்ஷீக்கு கல்யாணம் பண்ணி வெச்சிட்டா தான் எனக்கு நிம்மதி.."

"இல்லே..இவங்க அங்கயும் யாரையாவது கூட்டணி சேத்துக்கிட்டு அவ வாழ்க்கையும் பாழாக்கிடுவாங்க.." என்றதுமே..

"டேய்..அப்டி சொல்லாதே...சத்யா..நான் அந்த மாதிரி குடும்பத்தை கெடுக்கறவ இல்ல..உன்னையும், இவளையும் பிரிக்க நான் நினைச்ச காரணம்.. இவளுக்கு எந்த சொத்தும் இல்ல..இவ பராரினு இவளோட பெரியம்மா சொன்னாங்க..அதான் அப்டி செஞ்சேன்.." என்று திலகவதி தன் நிலையை சொன்னார்..

"அம்மா..நிறுத்துங்க..மா..என்ன மாதிரி என்னை நினைச்சீங்க..நான் சொத்துக்கு ஆசைப்பட்டா இவளை கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்..

இதுவரைக்கும் அவளுக்கு எவ்ளோ சொத்து இருக்கு..இல்ல சொத்து இருக்கானு நான் கவலைப்படல..அது எனக்கு தேவையும் இல்ல.."

"என் வருமானத்துல அவளை வெச்சு காப்பாத்த முடியும்னு நம்பிக்கைல தான் நான் கல்யாணம் செஞ்சேன்..ஆனா நீங்க..பணம் தான் முக்கியம்னு கேவலமா நடந்துட்டீங்க.."

"அப்பா..தெரிஞ்சுக்கிட்டீங்களா..ஓவ்வொன்னா வருது பாருங்க..நிஜமாகவே நீங்க என் அம்மா தானா..ச்சே.."

"நாம போய் நாளேக்கே அத்தை வீட்டுக்கு போய் சீக்கிரமே கல்யாணத்துக்கு நாள் குறிக்கறோம்.. கல்யாணம் முடியற வரைக்கும் நாங்க எதையும் வெளிய காமிக்காம இங்கயே இருப்போம்..

ஆனா கல்யாணம் முடிஞ்ச ஒரு வாரத்துக்கு பிறகு நாங்க கிளம்பிடுவோம் பா..இது தீர்மானமா முடிவு.."

"இவங்க உங்களை இதுவரைக்கும் மனுஷனா கூட மதிச்சதே இல்ல..இந்த வீட்டுல இவங்களே இருந்துக்கட்டும்.."

"அதனால நீங்களும் எங்க கூடவே வந்துடுங்க பா..நாங்க உங்களை நல்லா பாத்துப்போம்.." என சத்யா தன் மனநிலையை சொல்லி அவரை தன்னுடன் வருமாறு அழைத்தான்.

"இதை கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு..எத்தனை பசங்க உங்களை போல அவங்க பெத்தவங்களை பாசமா என் கூட வந்துடுங்க..நாங்க பாத்துக்கறோம்னு கூப்பிடறாங்க..நான் அதிர்ஷ்டக்காரன் சத்யா.." என கண்கலங்க சொல்லியவர்...

"சத்யா..போனது போகட்டும்..நீ இவளால பாதிக்கப்பட்டிருக்க..நீ சொல்றதை கேக்கறது தான் சரி..நீ என்ன செய்தாலும் அதுக்கு என்னோட முழு சப்போர்ட் உண்டு சத்யா.."

"இதுவரைக்கும் உங்கம்மா பண்ணதுக்கு நீ பேசின..இங்கே இருந்து கிளம்பறேன்னு சொல்லிட்ட..அது உன் முடிவு .. அதை தடுக்க எனக்கு மனசு வரல"

"ஆனா நான் என் பொண்டாட்டியை அவ சரியானவளோ..சரியில்லாதவளோ காலம் பூரா வெச்சு காப்பாத்துவேன்னு அக்னி சாட்சியா சத்தியம் செஞ்சதை மீற விரும்பல..நீ எங்களை விட்டு தனியா போனாலும் என் உயிர் போற வரைக்கும் நான் உங்கம்மாவோட தான் இருப்பேன்..இது என் முடிவு டா" என முரளி சொல்லி முடித்தார்

பேசிய விஷயங்களில் உணர்ச்சி குவியலால் யாரும் பேசாமல் அமைதியாக இருந்தனர். அதை கலைப்பதை போல..ஹர்ஷாவோடு வந்த தர்ஷினி "பா..இந்தாங்க..பிடிங்க இவனை..தாத்தா வேணும்னு ஒரே பிடிவாதம்..என்னால உங்க பேரனை சமாளிக்க முடியல.." என சொல்லி அவர் கைகளில் குடுத்து விட்டு உத்ராவுக்கு அருகில் போய் உட்கார்ந்து கொண்டு எதையோ சொல்லி சிரிக்க..உத்ராவும் அவளோடு சிரிக்க ஆரம்பித்தாள்.

அன்று இரவு தூங்க போகும் முன் உத்ராவிடம் சத்யா "எல்லார் கிட்டயும் சகஜமா இயல்பா பேசற மாதிரி உன் கிட்ட என்னால பேச முடியல..பேச வரும் போது..நீ என்னை நம்பாம போனது தான் நினைவுக்கு வருது.."

"பயங்கரமா கோவம் வருது..பல சமயங்கள்ல உன் மேல பாவம் பாத்து..அமைதியா போயிடறேன்.."

"ஆனா சில சமயங்களில கோவம் என்னையும் மீறி வந்துடும்...உன்னை திட்டுவேன்..ஏன் பேசாம கூட இருப்பேன்..அப்டி வந்தா பண்ண தப்புக்கு நீ பொறுத்துட்டு தான் போய் ஆகணும்.."

" என் மனநிலை மாறுமாங்கறது சூழ்நிலைகளை பொருத்து தான் இருக்கு...அதனால நீ புரிஞ்சு நடந்துப்பனு நினைக்கிறேன்.." என அவளை எதுவுமே பேசவிடாமல் தான் மட்டும் பேசி விட்டு குழத்தையை தூக்கி தன் மேல் விட்டு கொண்டு தூங்க ஆரம்பித்தான்.

மறுநாளே அவனுக்கு அவன் அப்பாவுமாக போய் அத்தை வீட்டுக்கு போய் அவர்களிடம் வீட்டில் நடந்ததை கொஞ்சமும் வெளியிட்டு கொள்ளாமல் உத்ரா திரும்பி கிடைத்து விட்டதையும் கூடவே தனக்கு இரண்டு வயதில் பேரன் இருப்பதாக சொல்லி முரளி மகிழ்ச்சியுடன் சொன்னார்.

அதை கேட்டு அவனுடைய அத்தை சந்தோஷமாக "அப்டியா தம்பி..ரொம்ப சந்தோஷம்..எங்க இருந்தா..எப்ப வந்தா..என அடுக்கடுக்காக கேள்விகளாய் கேட்க..அவரை சமாளித்து அவருக்கு நடந்ததை எல்லாம் விளக்கமாக சொல்லி அவர்கள் வீட்டு ஜோசியரிடம் பேசி ஒரு வாரத்தில் நிச்சயம், அடுத்த இரண்டு மாதத்தில் கல்யாணம் என குறித்து கொண்டு அத்தை ஆசையாக செய்து குடுத்த தோசையை சாப்பிட்டு விட்டு கிளம்பினார்கள்.

வரும் வழியில் சத்யா "அப்பா..வீட்டுக்கு போனதுமே நிச்சயத்துக்கு சொந்தக்காரங்க யாரை கூப்பிடணும்னு நீங்க ஒரு லிஸ்ட் எழுதிடுங்க..."

"உள்ளூர் ஆட்களை இன்னிக்கு சாயந்திரமே நானும் உத்ராவுமா போய் அழைச்சிட்டு வந்துடறோம்.."

"நீங்க வெளியூர் ஆளுங்களுக்கு போன்ல அழைச்சிடுங்க..நாளை மறுநாள் நிச்சய பட்டு எடுக்கணுமே..நமக்கு நேரமில்லை பா.." என்றவன் ..

திடீரென காரை நிறுத்தி விட்டு "புரிஞ்சுக்கிட்டத்துக்கு தேங்க்ஸ் பா" என சொல்ல "என் பையன் எது செஞ்சாலும் சரியா தான் இருக்கும்..என்னோட மொதல் குழந்தை தத்து தான் எடுப்பேன்னு உன்னோட ஆசையை பல தடவைகள் என் கிட்ட சொல்லி இருக்க..அதை உத்ரா கிட்டயும் நீ எத்தனை தடவை சொல்லி இருப்பியோ...அவ அதை சரியா செஞ்சுட்டா.."

"எனக்கு ரொம்ப சந்தோஷம் டா..அவன் தான் என்னோட முதல் பேரன்..இதை எந்த சூழ்நிலையிலும் உங்கம்மாக்கு தெரியாம பாத்துப்பேன்..தர்ஷீக்கும் தெரிய வேணாம்.."என முரளி சொல்லவும்..

"சரி பா..நீங்க சொன்னா..சரி.."என சொல்லி காரை கிளப்பி வீட்டுக்கு போய் சேர்ந்தார்கள்.

சொன்னது போல நிச்சயத்துக்கு சொந்தக்காரர்களை அழைப்பது, சத்திரம் ஏற்பாடு, சமையல், பூ என எல்லாவற்றையும் முரளியை உட்கார வைத்து விட்டு சத்யாவும் உத்ராவுமாக பம்பரமாக சுழன்று செய்தனர்.

தர்ஷினிக்கு பிடித்த பாட்டில் க்ரீன் கலரில் நிச்சய புடவை போய் கடையில் உட்கார்ந்த அரைமணி நேரத்துக்குள்ளாகவே கிடைத்து விட..உடனே முடிவெடுத்து அன்றே தர்ஷினிக்கு கல்யாண புடவை, உத்ராவுக்கு, திலகவதிக்கு என வீட்டினர் எல்லாருக்கும் வேகமாக புடவைகள் பிடித்த மாதிரி அமைந்து போனது.

நிச்சயத்தன்று ஜொலித்த தர்ஷினிக்கு ஈடாக உத்ராவும் எளிய அலங்காரத்தில் பளிச்சென்று மின்னினாள். நிச்சயம் நினைத்ததை விட நல்லபடியா முடிய, வந்த சொந்தக்காரர்களை கவனித்து அனுப்பி, சத்திரத்தில் இருந்த தங்களது சாமான்களை எடுத்து வர அன்று நடு இரவு ஆகிவிட்டது. (தொடரும்)
 

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 39
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom