• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

ஏகாந்த வீணை 5

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
ஏகாந்த வீணை

அத்தியாயம் 5



நாகபாசத்தில் சுற்றப்பட்டிருக்கும் லங்கர்களின் மேல் உள்ள சிறுவளையங்கள் சுருதியைச் செம்மையாக சேர்ப்பதற்குப் பயன்படும். வளையங்களில் நாகபாசப் பக்கமாகத் தள்ளினால் சுருதி அதிகரிக்கும். யாளியின் பக்கம் தள்ளினால் சுருதி குறைவடையும். மேலும், பிரடைகளை யாளி முகப்பக்கம் தள்ளினால் சுருதி குறைவடையும்.

ஒவ்வொருவராக மதிய உணவு சாப்பிட்டுவிட்டு விடை பெற்றுக் கொண்டார்கள். இறுதியில் வீட்டு மனிதர்கள் மட்டுமே மிஞ்சியிருந்தார்கள்.

" எல்லாரும் கிளம்பிப் போயாச்சு. இனிமேல் அண்ணா நம்ம கிட்ட மனம் விட்டுப் பேசுவாரா இருக்கும். வரட்டும், வந்து முதலில் சாப்பிடட்டும். நாமா ஒண்ணும் கேக்கவேணாம். அவராச் சொல்லற வரைக்கும் வெயிட் பண்ணுவோம். பாவம் , அவரே நொந்து போயிருக்காரு. சும்மாச் சும்மா அவரைத் தொந்தரவு செய்யாமல், ஆதரவா நடந்துக்குவோம். நம்மை விட்டா யாரு இருக்கா அவருக்கும்? ஆனால், என்ன நடக்குதுன்னு தான் ஒண்ணுமே புரியலை. அந்தப் பொண்ணோட பேர் அண்ணாவுக்குத் தெரிஞ்சிருக்கிறது, அவளோட அம்மாவையும் தெரிஞ்சுருக்கறது இவைதான் கொஞ்சம் சந்தேகத்தைக் கெளப்புது. என்ன நடக்குதுன்னு பாக்கலாம்" என்றாள் பல்லவி, சத்யனிடம்.

குழந்தைகளைச் சாப்பிட அழைத்தாள். இருண்டு போன முகங்களுடன் நமஸ்வி, மனஸ்வி, நிர்மல் மூன்று பேரும் வந்து உட்கார்ந்தார்கள்.

" நம்மு, மன்னு நாளையில் இருந்து லீவு போட்டிருந்தீங்க இல்லையா? எத்தனை நாளைக்கு? "

" மூணு நாளைக்கு. ஏன்? என்னாச்சு? "

" லீவை கேன்ஸல் பண்ணிட்டு வேலைக்குப் போக ஆரம்பிங்க. நம்ம புரோகிராம் எல்லாமே கேன்ஸலாயிடுச்சு" என்றாள் பல்லவி.

" ஏம்மா" என்று ஆரம்பித்த மனஸ்வியை, நமஸ்வி அடக்கி விட்டாள். வயதான அவர்களுக்கு இது கூடப் புரியாதா என்ன? பாவம், நிர்மலுக்குத் தான் நாளை ஸ்கூல் போகணும்னா, ஹோம் வொர்க் முடிக்கணுமே என்ற கவலை பெரியதாக வாட்டியது.

" அம்மா, பெரியப்பா சாப்பிட வரலை? " என்றான் நிர்மல். விடுமுறை நாட்களில் எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவது தான் வழக்கம் அவர்களுக்கு. அதுவும் பெரியப்பா வந்து உட்கார்ந்ததற்கு அப்புறம் தான் பல்லவி பரிமாறவே ஆரம்பிப்பாள்.

" அடடா, ஆமாம், அண்ணா வரலையே? எனக்கிருக்கிற மனக்குழப்பத்தில் அதைக் கூட கவனிக்கலை பாரு. நிர்மல், நீ போய் உன்னோட பெரியப்பாவைக் கொஞ்சம் சாப்பிடக் கூட்டிட்டு வரயா? " என்று நிர்மலை அனுப்பினாள். அவராகவே தன்னையும் தனது கணவரையும் அறையை விட்டு வெளியே அனுப்பியது இன்னமும் அவளுக்கு உறுத்திக் கொண்டே இருந்தது. கொஞ்சம் அவமானமாகவும் இருந்தது. அதனால் தான் அவளே போகாமல், கொஞ்சம் யோசித்துத் தான் நிர்மலை அனுப்பினாள். எந்தவொரு மனநிலையில் அவர் இருந்தாலும் நிர்மலிடம் நிச்சயமாகக் கடுமையாகப் பேச மாட்டார் என்று நினைத்தாள்.

பெரியப்பாவின் அறைக்குள் நுழைந்த நிர்மல் வீலென்று கத்தினான். அவன் கத்திய கத்தலில் எல்லோருமே அரண்டு போய்விட்டார்கள். உடனடியாக உள்ளே ஓடினார்கள். ஈஸ்வரனின் நிலைமையைப் பார்த்து அவர்களுமே பயந்து போனார்கள்.

அவருடைய படுக்கைக்கு எதிரே இருந்த சேரில் இருந்து கீழே சரிந்திருந்தார். தலையை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு தவித்தார். அவருடைய முகத்தைப் பார்த்தால் தாங்கமுடியாத வலியால் துடிப்பது தெரிந்தது. சத்யன் ஓடிப்போய் அண்ணனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டபோது அவன் மேலேயே வாந்தி எடுத்துவிட்டார். திடீரென, "ஸீஸர்ஸ்" (Seizures) என்று சொல்லப்படும் வலிப்பும் வந்துவிட்டது. கை, கால்கள் வெட்டி இழுக்க ஆரம்பித்தன. ஏதோ எமர்ஜென்சி என்று புரிந்து கொண்டு நமஸ்வி ஓடிப்போய் ஆம்புலன்சுக்கு ஃபோன் செய்து வரவழைத்தாள். அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனையில் உடனடியாக சேர்த்தார்கள். அங்கிருந்த டாக்டர் அவரை சோதித்து விட்டு,

" ஸிம்ப்டம்ஸ் பாத்தா ஏதோ பிரெயின் சம்பந்தப்பட்ட பிரச்சினை மாதிரி தான் இருக்கு. உடனடியாக ஸர்ஜரி கூடத் தேவைப்படலாம். நல்ல நியூரோ சர்ஜன் இருக்கற மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலுக்கு உடனடியாக் கூட்டிட்டுப் போங்க" என்று சொன்னவர், தானே எந்த மருத்துவமனை என்றும் யோசனை சொல்லி விட்டார்.

அதற்குள் ஈஸ்வரனுக்கு மூச்சுத்திணறலும் ஆரம்பித்துவிட்டது. ஆக்ஸிஜன் ஸப்போர்ட்டுடன் தங்கள் ஹாஸ்பிடலில் இருந்து ஒரு நல்ல ஆம்புலன்ஸும் கொடுத்ததோடு கூடவே எக்ஸ்பர்ட் ஒருத்தரையும் உதவிக்காக அனுப்பி வைத்தார்.

அதன்பிறகு நடந்ததெல்லாம் அவர்களுடைய கைகளை மீறிப் போய்க் கொண்டிருந்தது. விதவிதமான டெஸ்ட், ஸ்கேன் எல்லாம் எடுக்கப்பட்டன. பல நிபுணர்கள் வந்து சோதனை செய்தார்கள். தலைவலி பொறுக்கமுடியாமல் துடித்துக் கொண்டிருந்தார் ஈஸ்வரன். வலியைக் குறைக்க மருந்து தரப்பட்டது. அடுத்த நாள் மதியம் அளவில் தான் பிரச்சினை என்னவென்று அவர்களுக்குப் புரிய வந்தது.

சத்யனுக்கு அதிகமாக இது போன்ற விஷயங்களில் எக்ஸ்போஷர் அதாவது மருத்துவ ரீதியான விஷயங்களில் அனுபவம், பட்டறிவு இல்லை. எல்லாமே அண்ணா இருக்கிறார், அவர் பார்த்துக் கொள்வார் என்று அவரையே சார்ந்து இருந்து விட்டார்கள். இப்போது அவருக்கே முடியாமல் போனபோது ஆடிப் போனார்கள். அதுவும் இதுவரை ஈஸ்வரன் உடம்பு சரியில்லை என்று பெரிதாகப் படுத்துக் கிடந்ததில்லை. தனது உடல்நலனை சரியாகப் பேணி வந்தார். தினமும் தவறாமல் யோகா, வாக்கிங், வீட்டு சாப்பாடு அதுவும் அளவாக என்று எல்லாமே அவருடைய அட்டவணைப்படி ஒழுங்காக, நேரம் தவறாமல் கடைப்பிடித்தவர் ஈஸ்வரன். உலக ஞானம், பொது அறிவு, அனுபவம் எல்லாமே சத்யமூர்த்தியை விட அவருக்கு மிகவும் அதிகம்.

இந்தக் காலக் குழந்தைகளுக்கு இது போன்ற விஷயங்களில் எக்ஸ்போஷர் அதிகம் என்பதால் மனஸ்வி, நமஸ்வி இரண்டு பேரையும் தங்களுடன் வைத்துக் கொண்டிருந்தார்கள். நிர்மலை மட்டும் ஸ்கூலுக்கு அனுப்பி விட்டு எல்லோருமே ஹாஸ்பிடலில் தான் இருந்தார்கள்.

" பெரியவருக்கு மூளையில் டியூமர் இருக்கு. அது கேன்ஸராகக் கூட இருக்கலாம். பயாப்ஸிக்கு அனுப்பினால் தான் உறுதியாச் சொல்லமுடியும். எப்படி இருந்தாலும் இதுக்கு ட்ரீட்மென்ட் பத்தி நீங்க யோசிக்கணும். ஸர்ஜரி பண்ணி ரிமூவ் பண்ணலாம். இன்னும் அதிகமாக வளராமல் இருக்க மருந்துகள் கொடுத்துக் கட்டுப்படுத்தலாம். அது வளரும் போது தான் தலையில் தாங்கமுடியாத வலி வரும். வலிப்பு வரும். இதில் முக்கியமான விஷயம் இவரோட வயசு. இந்த வயசுல சிகிச்சை எவ்வளவு தூரம் பலனளிக்கும்னு உறுதியாச் சொல்ல முடியலை. இப்போதைக்கு வலி குறையறதுக்கும், ஃபிட்ஸ் வராமல் இருக்கறதுக்கும் மருந்து குடுத்திட்டு இருக்கோம்" என்று சொன்னார்.

" இன்னும் ஒரு வாரமாவது அப்ஸர்வேஷனில் வச்சு மானிட்டர் பண்ணனும். அதுக்குள்ள மிச்ச, மீதி ரிப்போர்ட்டும் வந்துடுச்சுன்னா மேலே எந்த மாதிரியான ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கலாம் னு கிளியர் பிக்சர் கிடைக்கும் " என்றும் சொன்னார் அவர்.

அதே வாரத்தில் ஒருநாள் மனஸ்வி, " என் ஃப்ரண்டோட அண்ணா டாக்டர். அதுவும் நியூரோ ஸ்பெஷலிஸ்ட். அவரை வேணா ஒருதடவை வந்து பாக்கச் சொல்லட்டுமா? " என்று கேட்க, சரியென்று சொல்லி விட்டார்கள் பல்லவியும், சத்யனும்.

அவர் போய் ஈஸ்வரனைப் பார்த்துவிட்டு, மருத்துவர்களையும் சென்று சந்தித்தார். அதன் பிறகு அவர்களிடம் மருத்துவமனை கேன்டீனில் வைத்து விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

" உங்க பெரியப்பாவுக்கு வந்திருக்கிற பிராப்ளம், க்ளியோபிளாஸ்டோமான்னு(Glioblastoma multiforme (GBM) ) சொல்லப்படுகிற ஒரு வகை புற்றுநோய். இது மூளை அல்லது முதுகுத் தண்டில் இருக்கற செல்களின் வளர்ச்சியில ஆரம்பிச்சு, ரொம்ப வேகமாக வளருது. மற்றும் மத்த ஆரோக்கியமான ஸெல்களை ஆக்கிரமிச்சு அழிக்குது.

கிளியோபிளாஸ்டோமா எந்த வயசிலயும் வரலாம். ஆனால் இது மோஸ்ட்லி வயசானவங்களுக்கும், அதிலும் குறிப்பாக ஆண்களுக்குத்தான் வருது. க்ளியோபிளாஸ்டோமாவுக்கான ஸிம்ப்டம்ஸ் என்னன்னா தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தி, மங்கலான அல்லது இரட்டைப் பார்வை அப்புறம் வலிப்பு இவைகள்தான். உங்க பெரியப்பாவுக்கு இதில் ஏதாவது இருந்துச்சா" என்று கேட்டார் அவர்.

" சரியாத் தெரியலை. நிறைய சமயங்களில் தனக்கு ஏதாவது உடம்பு சரியில்லைன்னாக் கூட வெளிப்படையாகப் புலம்ப மாட்டார். ஆனால் சமீபகாலமா அடிக்கடி தலைவலி, தலைவலின்னு சொல்லித் தைலம் தடவிக்கறதைப் பாத்துருக்கேன்" என்றாள் பல்லவி.

" நிச்சயமாக இருந்திருக்கும். பை நேச்சர் அதை வெளியே சொல்லி இருக்க மாட்டாரா இருக்கும். ஒருவேளை அதுவாகவே இருந்தாலும் என்ன ஸ்டேஜ்ல இருக்குன்னு முதலில் பாக்கணும். அது பயாப்ஸிக்கு அப்புறம் தான் தெரியவரும். சர்ஜரி நடந்தாத் தான் பயாப்ஸிக்கு அனுப்புவாங்க. கிளியோபிளாஸ்டோமா மல்டிஃபார்ம்னு சொல்லற வியாதிக்கு எந்த சிகிச்சையும் இல்லை. சிகிச்சைகள் புற்றுநோயின் வளர்ச்சியைக் குறைக்கலாம் இல்லைன்னா அறிகுறிகளைக் குறைக்கலாம்.

கிளியோபிளாஸ்டோமாவை அகற்ற அறுவை சிகிச்சை ஒரு வழி. ஒரு நியூரோ சர்ஜன், முடிந்தவரை கட்டியை அகற்ற முயற்சி செய்வார். புற்றுநோய் செல்கள் எல்லாத்தையும் அகற்ற முடியாமலும் போகலாம் "என்று அவர் விளக்கமாகச் சொன்னாலும் அவர்களுக்கு என்னவோ பிரமாதமாகப் புரியவில்லை.

இரண்டு வாரங்கள் கழித்து ஈஸ்வரன் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்துவிட்டார். யாரிடமும் பேசவில்லை. தனிமையில் நேரத்தைக் கழித்தார். பல்லவி தன்னால் முடிந்தவரை அவரை நன்றாகப் பார்த்துக் கொண்டாள். ஆனால் அவர் தான் யாரிடமும் முகம் கொடுத்துப் பேசவில்லை.

" ஸர்ஜரி எதுவும் எனக்கு வேண்டாம் டாக்டர். இப்போதைக்கு வலி கொறஞ்சிருக்கு. அப்பப்ப செக்கப்புக்கு வரேன். மீதி இருக்கற வாழ்நாட்களை நான் இப்படியே கழிச்சுடறேன்" என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டார். அவருடைய விருப்பத்தை மீறி மற்றவர்களாலும் எதுவும் செய்ய முடியவில்லை.

வீட்டில் அசாதாரண மௌனம் நிலவியது. குழந்தைகள் கூட அவருடைய அறைக்குப் போவதில்லை. முதலில் உடம்பு சரியில்லாதவரைத் தொந்தரவு செய்யக்கூடாது, அவர் நன்றாக ஓய்வெடுக்கட்டும் என்றுதான் போகவில்லை. இப்போது என்னவோ அதுவே எல்லோருக்கும் பழகி விட்டது. மனதில் இருந்த ஒரு தயக்கத்தினால் யாரும் அவருடைய அறைக்குப் போய் முன்பு போல இயல்பாகப் பேசிப் பழகுவதில்லை.

இப்போது அவர் வீட்டுக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. பழைய நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். வீட்டை விட்டு வெளியே எங்கும் போவதில்லை. வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தார். வீட்டில் இருக்கும் மற்ற உறுப்பினர்களுக்கும், ஈஸ்வரனுக்கும் நடுவே ஒரு பெரிய மௌனச்சுவர் எழுந்து நின்றது. அதைத் தகர்ப்பதற்கு யாரும் முயற்சி செய்யவில்லை.

இப்படியே நாட்கள் கடந்துகொண்டிருந்தன. அந்த வீட்டில் எல்லோரும் இயந்திரத்தனமாக நடமாடிக் கொண்டிருந்தார்கள். உணர்ச்சிகள் உள்ளுக்குள்ளே கொதித்துக் கொண்டிருந்தாலும், வெளியே உணர்ச்சிகள் இல்லாத ஜடங்களாகத் தான் தங்களைக் காண்பித்துக் கொண்டார்கள்.

இந்த நிலையை அடியோடு மாற்றும் படியாக அடுத்த நிகழ்வு நடந்தது. அவர்களுடைய இயந்திரத்தனமான வாழ்க்கையைத் தடாரென்று புரட்டிப் போட்டது அந்த நிகழ்வு.
ஈஸ்வரன் திடீரென ஒரு நாள் அந்த வீட்டில் இருந்து மாயமாக மறைந்து போனார்.


தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 

Author: Puvana
Article Title: ஏகாந்த வீணை 5
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
113
யாருக்கும் தொந்தரவு குடுக்க கூடாதுனு கிளம்பிட்டாரோ 🤔🤔🤔🤔
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
Still Water Runs Deep என்று ஆங்கிலத்தில் சொல்வது ஈஸ்வரனுக்கு மிகவும் பொருந்தும் என்று தோன்றுகிறது. தெள்ளிய நீரோடை போல அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் செல்லுவது போன்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவருக்கு எத்தனை வெளியில் தெரியாத சொல்ல முடியாத சோதனைகள்! Waiting for his story to be unravelled.
 

Mahalakshmi Babu

New member
Joined
Aug 13, 2024
Messages
14
அவர் வாழ்க்கையில் ஏதோவொரு மர்மம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.
 
Top Bottom