இல்லற வீணையின் இனிய சங்கீதம்
அத்தியாயம் 3
பிரசாந்த் விடாமல் காலையிலும் மாலையிலும் ஒருமுறை வந்து குழந்தையைக் கொஞ்சி விட்டு, காமாட்சியிடமும் ஏதாவது வேண்டுமா என்று விசாரித்து விட்டுத் தான் போனான். பத்மினியின் முறைப்பையோ, எரிச்சலையோ கொஞ்சம் கூடக் கண்டு கொள்ளாமல் அவன் நடந்து கொள்வது அவளுக்கு இன்னும் கொஞ்சம் கோபத்தைக் கூட்டியது.
அவன் வந்து விட்டுப் போன பிறகு கொஞ்ச நேரத்திற்கு, கொம்பேறி மூக்கனாக மாறித் தான் நிற்பாள். புஸு புஸுவென்று மூச்சு விட்டுக் கொண்டு முகத்தை வெங்கலப் பானை போலத் தூக்கி வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பாள். காமாட்சி, தனது சிரிப்பை அடக்கிக் கொண்டு ஓரக்கண்ணால் மகளைப் பார்த்து ரசிப்பாள். பத்மினியைப் பார்த்தால் அவளுக்குப் பாவமாகவும் இருக்கும். அதே சமயத்தில், ' சொல் புத்தியும் இல்லை; சுய புத்தியும் இல்லை. நீயா இழுத்து விட்டுக்கிட்ட பிரச்சினை. நீயே தீர்த்துக்கோ' என்ற அலட்சிய மனப்பான்மையும் இருக்கும்.
அம்மா, மகளின் மௌன நாடகத்தை முரசு கொட்டிக் கலைத்து விட்டாள் பேத்தி. அன்று இரவு காமாட்சி கொஞ்சம் அதிகம் களைத்துப் போயிருந்தாள். இரண்டு நாட்களாக சரியாகத் தூங்காததாலோ என்னவோ அன்று சீக்கிரமாகவே கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது காமாட்சிக்கு. அலுப்பில் அசந்து தூங்கி விட்டாள்.
குழந்தையை மகளிடம் விட்டு, அவள் வயிறு முட்டப் பால் குடித்ததும் அவளைக் கையில் வைத்துத் தூங்க வைத்துத் தொட்டிலில் போட்டு விட்டுத் தான் படுத்தாள். படுத்ததும் அடுத்த நிமிடமே தூங்கியும் போனாள். பத்மினிக்கும் மருந்து, மாத்திரைகளைக் கொடுத்துத் தன் கடமைகளை முழுதுமாக முடித்துவிட்டுத் தான் காமாட்சி கண்ணசந்திருந்தாள்.
பத்மினியும் ஆயாசத்துடன் கண்களை மூடிக் கொண்டு படுத்திருந்தாள். தூக்கம் வரவில்லை. கணவனைப் பிரிவது என்ற முடிவை எடுத்த பின்னர் குழந்தையைத் தனியாக எப்படி வளர்க்கப் போகிறோம் என்று நினைத்துப் பார்த்தபோது மலைப்பாகத் தான் இருந்தது.
' இப்போதைக்கு அம்மா உதவி கிடைக்குது. ஆனா அம்மாவுக்கும் வயசாயிட்டே தான் போகுது. ஷுகர், பி. பி( sugar, bp) என்று அந்த வயதுக்குண்டான பிரச்சினைகள். எல்லாம் கன்ட்ரோலில் தான் இருக்குன்னாலும் நம்ப முடியாது. திடீர்னு ஜாஸ்தி ஆகலாம். இப்போதெல்லாம் அம்மாவுக்குக் கால் வலி வேறு அடிக்கடி தொந்தரவு செய்யுது. பாவம் அவங்க மேல அதிகச் சுமை போட முடியாது. ஆனாலும் பேத்திக்காக இழுத்துப் போட்டுக்கிட்டு எல்லா வேலைகளையும் செய்வாங்க. நம்மையும் விட்டுக் கொடுக்க மாட்டாங்க. அதில் ஒண்ணும் சந்தேகமில்லை. ஆனாலும் அவங்களை மட்டும் நம்பிட்டு சும்மாக் கையைக் கட்டிட்டு உட்கார்ந்திருக்க முடியாது. அண்ணா சாந்தனு வேற அம்மாவைத் தன்னோட வந்துரச் சொல்லி இந்தியா வரும் போதெல்லாம் கூப்பிட்டுக்கிட்டே இருக்கான். வரலைன்னு தான் இப்போதைக்கு சொல்றாங்க. இருந்தாலும் திடீர்னு மனசு மாறிக் கிளம்பிட்டாங்கன்னா நான் என்ன பண்ணுவேன்? ' என்று எதிர்காலத்தைப் பற்றி யோசித்து யோசித்து மனம் குழம்பிப் போனது. இமைகள் மூட மறுத்தன.
அந்த சமயத்தில் தான் குழந்தை வீர் வீரென்று கத்த ஆரம்பித்தாள். பதட்டத்தில் சடாரென்று எழுந்து படுக்கையில் உட்கார்ந்த போது அடிவயிற்றில் இருந்து சுரீரென்று வலி உடல் முழுதும் பரவியது. தையல் போட்ட இடத்தில் வேறு தாங்கமுடியாத வலி. துடித்துப் போய்விட்டாள் பத்மினி. அந்த வலியுடன் திரும்பிக் குழந்தையைத் தூக்கும் அளவு உடலில் திராணியில்லை. அம்மாவோ ஆழ்ந்த தூக்கத்தில்! குழந்தையோ அழுகையை நிறுத்திய பாடில்லை.
வேறு வழியின்றி, " அம்மா, அம்மா " என்று கூப்பிட்டாள். அம்மா லேசாக அசைந்ததும் கொஞ்சம் சத்தமாகவே கத்தினாள். காமாட்சி சடாரென்று எழுந்து ஓடி வந்தாள். மகள் வலியில் துடிப்பதைப் பார்த்துப் பதறிப் போனாள். அழும் குழந்தையைக் கையில் தூக்கி சமாதானப் படுத்தியபடி, இன்டர்காமில், டியூட்டி நர்ஸை அழைத்தாள்.
நிலைமை கட்டுக்குள் வருவதற்கு சிறிது நேரம் பிடித்தது.
" என்னம்மா இப்படி செஞ்சிருக்கே? கொஞ்ச நாளைக்கு ஜாக்கிரதையா இருக்க வேணாமா? தையல் போட்ட இடத்தில் புண்ணெல்லாம் ஆறி, சரியாப் போற வரைக்கும் கவனமா நிதானமா எழுந்திருக்கணும்? தடார், புடார்னு எழுந்திருக்கக் கூடாது இப்படி. குழந்தையும் பொறந்தாச்சு. உன் உடம்பு சரியானாத் தானே உன்னோட குழந்தையை உன்னால சரியா கவனிச்சுக்க முடியும்? ஏதாவது இன்ஃபெக்ஷன் ஆனா உனக்குத் தான் கஷ்டம். தையல் வேற பிரிஞ்சு போக சான்ஸ் இருக்கு. இனிமேலாவது ஜாக்ரதையா இரும்மா" என்று அந்த வயதான நர்ஸ், பத்மினியை உரிமையோடு கடிந்து கொண்டாள்.
மகள் பட்ட வேதனையால் காமாட்சியின் மனமும் இளகிவிட்டது. மனதில் இருந்த கோபமெல்லாம் பஞ்சாகப் பறந்து விட்டது. குழந்தையைத் தூங்க வைத்துத் தொட்டிலில் கிடத்தி விட்டு பத்மினியின் அருகில் உட்கார்ந்து, அவளுடைய கையை ஆதரவுடன் பிடித்துக் கொண்டாள்.
" என்னடி அப்படி கோபம் என் மேலே? என்னைக் கூப்பிடக் கூடாதா? நீயாக் கஷ்டப்பட்டு எழுந்து ஏதாவது ஏடாகூடமா ஆயிருந்தா என்ன ஆயிருக்கும்? நினைச்சுப் பாக்கவே பயமா இருக்கு எனக்கு. பதைபதைச்சுப் போயிட்டேன்" என்று சொல்லி பத்மினியைக் கண்டித்தாள்.
" அம்மா, அம்மா. நீங்களும் இனிமே என்னைக் கோவிச்சுக்காதீங்கம்மா" என்று சொல்லியபடி அம்மாவின் மடியில் தலை வைத்துப் படுத்து விம்ம ஆரம்பித்தாள்.
" சரி, சரி, அழுது இன்னும் உடம்பைக் கெடுத்துக்காதே. நானும் பாரு, இன்னைக்குன்னு என்னை மறந்து தூங்கிப் போயிருக்கேன். ரொம்ப அழுதாச் சளி பிடிச்சுக்கும். இந்த சமயத்தில் காய்ச்சல் வந்தாலும் நல்லதில்லை. உனக்கு வந்தாக் குழந்தையையும் அது பாதிக்கும். எல்லாப் பிரச்சினைகளுக்கும் சீக்கிரமா விடிவு காலம் வரும். கவலைப்படாதே. என்ன செய்யறது? பொம்பளை ஜன்மமாப் பொறந்துட்டோமே? இதையெல்லாம் அனுபவிச்சுத் தான் ஆகணும். எதுவா இருந்தாலும் மனசைத் தளரவிடாதே. குழந்தை முகத்தைப் பார்த்துக் கவலையை மறக்க முயற்சி பண்ணு" என்று விதவிதமாக அவளுக்கு அறிவுரைகள் வழங்கியபோது காமாட்சியின் மனதும் லேசானது.
அழுது ஓய்ந்த பின்னர், பத்மினியும் அம்மாவிடம் மனம் விட்டுப் பேசி முடித்து விட்டுத் தான் தூங்கினாள். அம்மாவும், மகளும் பேசிப் பேசி ஓய்ந்த பின்னர், மனநிறைவுடன் படுத்துத் தூங்கினார்கள் அன்று. பேத்தியும் அதன் பிறகு அவர்களை நிம்மதியாகத் தூங்க விட்டாள்.
அடுத்த நாள் காலையில் பத்மினியும், காமாட்சியும் பழையபடி இயல்பாக சிநேகத்துடன் பேசிய போது இரண்டு பேருக்கு நடுவில் இருந்த புரிதலும் பாசமும் சரியான அளவில் மீட்கப்பட்டிருந்தன.
" ஏன்டி பத்மினி, உன் ஆஃபிஸ் ஃப்ரெண்ட்ஸ் யாரும் வரலையே உன்னைப் பார்க்க? "
" அது தான் ஜானு வந்தாளே அன்னைக்கு? எல்லாரும் உடனேயே போய் அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம். சின்னக் குழந்தைக்குச் சட்டுனு இன்ஃபெக்ஷன் ஆயிடும். ஒரு வாரம், பத்து நாட்கள் கழிச்சு பத்மினி டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குப் போனதும் போய்ப் பாருங்கன்னு எங்க பாஸ் சொன்னாங்களாம். ஜானுவுக்கு மட்டும் பொறுமை இல்லை. ஓடியே வந்துட்டா. அன்னைக்கு அம்மாவைத் தனியே விட்டுட்டுப் போக வேண்டிய கட்டாயம்னு சொல்லி ரொம்பவும் வருத்தப்பட்டா"
" உங்க பாஸ் சொன்னதும் ஒரு விதத்தில் சரி தான். நல்ல பிராக்டிக்கலான மனுஷரா இருக்காரே? "
" மனுஷர் இல்லை. மனுஷி. "
" ஓ, அது தான் விஷயமா? பொம்பளையா இருக்கறதுனால தான் புரிஞ்சுட்டுப் பேசறாங்க"
" அண்ணா கிட்டயிருந்து தான் ஃபோனே வரலை. நீங்க அண்ணி கிட்டப் பேசித் தகவல் சொன்னீங்க இல்லையா? "
" சொன்னேனே? எனக்குத் தெரிஞ்ச அரைகுறை இங்கிலீஷில் உளறிக் கொட்டினேன். சாந்தனு ஏதோ ஆஃபிஸ் வேலையா வெளிநாடு போயிருக்கறதா கேதரின் சொன்னா. ஏதோ கான்ஃபரன்ஸாம். அவ பேசினதும் என்னவோ பாதிக்கு மேல எனக்குப் புரியலை போ" என்று காமாட்சி, அலுத்துக் கொண்டிருந்த போது சரியாக, சாந்தனுவிடம் இருந்து அழைப்பு வந்துவிட்டது.
" ஏய் கங்கிராட்ஸ் பத்மினி. என்னோட மருமகள் என்ன சொல்லறா? நீ எப்படி இருக்கே? அம்மா, பக்கத்தில் தானே இருக்கீங்க? பேத்தி வந்தாச்சு. சந்தோஷம் தானே உங்களுக்கு? இனிமே யாராவது பாட்டிம்மான்னு சொன்னாக் கோவிச்சுக்க மாட்டீங்க இல்லையா? " என்று படபடவென்று பேசிக் கொண்டே போனான் சாந்தனு.
" ஆமான்டா, பேத்தி வந்தாச்சு. உன் வழியிலும் சீக்கிரமா ஒரு பேரனோ, பேத்தியோ வந்தாச்சுன்னாப் பாத்துட்டு நிம்மதியாக் கண்ணை மூடுவேன்"
" ஏம்மா இப்படி நல்ல விஷயம் பேசும் போது இப்படில்லாம் பேசி மூடைக் கெடுக்கறீங்க?
சீக்கிரமா உங்க ஆசை நிறைவேறும். அதுக்காக உங்களை அவ்வளவு ஈஸியா இந்த உலகத்தை விட்டு அனுப்பிர மாட்டோம். பேரன், பேத்தி கல்யாணத்தை எல்லாம் பாத்துட்டுத் தான் நீங்க மேல போவீங்க! அப்பாவும் இல்லை. நீங்க தானேம்மா எங்களோட ஒரே சப்போர்ட். இனிமேல் இப்படியெல்லாம் பேச வேணாம்"
என்று சொன்ன போது சாந்தனுவின் குரலில் வருத்தம் அப்பட்டமாகத் தெரிந்தது. அப்பாவைப் பற்றிப் பேசியதால் இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள் காமாட்சி.
' தப்பித் தவறி எதையோ ஆரம்பிச்சு, சாந்தனுவை உணர்ச்சி வசப்பட்டு வச்சிட்டேன் நானே! என்னோட தப்பு தான். இனிமேல் ஜாக்கிரதையாக இருக்கணும். எவ்வளவு கஷ்டப்பட்டு அவனை சரி பண்ணிட்டு நானே மூளை கெட்ட தனமா எதையோ பேசிட்டேனே? ' என்று மனதிற்குள் புலம்பிய காமாட்சி, சாமர்த்தியமாகத் தங்களுடைய உரையாடலைத் திசை திருப்ப முயற்சி செய்தாள்.
" சரி, விடு கழுதையை. உன் ஆசைப்படி நிறைய வருஷம் உசுரோட இருக்க ஆண்டவன் கிட்ட இன்னைக்கே அப்ளிகேஷன் போட்டுடறேன். என் பேத்தியைப் பாரு. அப்படியே பத்மினி குழந்தையில் இருந்த மாதிரியே இருக்கா. அச்சு அசல் அப்படியே கார்பன் காப்பி தான், இல்லையா? "
" இல்லைம்மா, எனக்கென்னவோ பிரசாந்த் ஜாடை தான் தெரியுது. எங்கம்மா அந்தத் தடியன்? பொண்டாட்டியையும் பொண்ணையும் கொண்டாடாம எங்கே போய்த் தொலைஞ்சான்? பொறுப்பே இல்லையே? கல்யாணமாகியும் பொறுப்பு வரலை. இப்போ குழந்தை பிறந்தும் கூட வரலையே? கங்கிராட்ஸ் சொல்ல ஃபோன் பண்ணிட்டே இருக்கேன். கிடைக்க மாட்டேங்குதே?" என்று செல்லமாக நண்பனைப் பற்றிப் பேசி அலுத்துக் கொண்டான் சாந்தனு.
' என்னடா இது? எந்தப் பக்கம் போனாலும் இப்படி முட்டுது! உன் தங்கச்சிக்கும், அவ புருஷனுக்கும் தகராறு, பிரிஞ்சிட்டாங்கன்னு எப்படி என் வாயால சொல்லறது? கேட்டாத் துடிச்சுப் போவானே சாந்தனு! ' என்று தவித்தாள் காமாட்சி.
" காலையில் தான் வீட்டுக்குப் போனார் மாப்பிள்ளை. ரெண்டு நாளா ரெஸ்டே இல்லை. நல்ல அலைச்சல். சரியான டென்ஷன். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்கன்னு நான் தான் வீட்டுக்கு அனுப்பினேன்" என்று சமாளித்த அம்மாவைப் பார்வையால் சுட்டெரித்தாள் பத்மினி. அவளை வாயைத் திறக்காதே என்று சைகை காட்டிய காமாட்சி, தனது நாடகத்தைத் தொடர்ந்தாள்.
" ஆமாம், கேதரின் எங்கே? அவளையும் கொஞ்சம் கண்ணில காமி. பாக்கறேன்"
" அம்மா, அவ இன்னைக்குக் காலையில் தான் கிளம்பி ஏர்போர்ட் போயிருக்கா. யு. கேயில் அவளோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு தகவல் வந்தது. உதவிக்கு யாருமில்லைன்னு கிளம்பிப் போயிருக்கா. இப்போ ஃப்ளைட் ஏறியிருப்பா. அங்கே வீட்டுக்குப் போய்ச் சேந்ததும் உங்க கிட்ட எல்லாம் பேசறேன்னு சொன்னா. கங்கிராட்ஸ் சொல்லச் சொன்னா"
" இப்பத் தான் நீ வெளியூர் போயிட்டுத் திரும்பினே? இப்போ அவ போயிருக்காளா? நல்லாக் கண்ணாமூச்சி ஆடறீங்களே நீங்க? "
" என்னம்மா பண்ணறது? நான் ஆஃபீஸ் வேலையா கொரியா போயிட்டு இன்னைக்குத் தான் திரும்பினேன். அவளுக்கோ சொந்த வேலைக்காக உடனே போகவேண்டிய கட்டாயம். என்ன செய்யறது? நாங்க ரெண்டு பேரும் வாங்கி வந்த வரம் அப்படி! "
" அதுனால என்னடா? பரவாயில்லை போ. சும்மாத் தான் கலாய்ச்சேன் உன்னை. நீ ஒண்ணும் ஸீரியஸா எடுத்துட்டு பதில் சொல்ல வேணாம். சில சமயங்களில் நம்மோட வாழ்க்கை, அலைகடலில் தத்தளிக்கற படகு மாதிரி ஆடித் தவிக்குது. அதுக்கெல்லாம் பயப்படலாமா? காத்து சரியானா, ஆட்டமும் நின்னுடும். எல்லாமே நமக்கு சாதகமா நடக்கும்னு எதிர்பார்க்க முடியாது. நடக்கறதை அப்படியே ஏத்துக்கிட்டுப் பொறுமையாக் காத்திருந்தா பாதகம் எதுவும் இல்லாமல் தப்பிக்கலாம் " என்று மகனுக்கும், மகளுக்கும் சேர்த்துப் பொத்தாம் பொதுவாக அறிவுரையை உதிர்த்தாள். பத்மினியோ கவனிக்காதது போல முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
அன்று மதியமே பத்மினியை டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள். பத்மினி, குழந்தையுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் காமாட்சி. பிரசாந்த் வந்து தேவையான உதவிகள் அனைத்தையும் சிரித்த முகத்துடன் செய்து விட்டு அவர்களை வீட்டில் சேர்த்து விட்டுத் தான் சென்றான்.
" ஒரு வாய் சாப்பிட்டுப் போங்க மாப்பிள்ளை" என்று ஆரம்பித்த காமாட்சியிடம், வேண்டாம் என்று மறுத்து விட்டான் பிரசாந்த்.
" உங்களுக்கே வேலை நிறைய இருக்கும் அத்தை. நோ உபசாரம். நீங்க பத்மினியையும் குழந்தையையும் கவனிங்க. உதவிக்கு யாரையாவது நான் ஏற்பாடு செய்யட்டுமா? எப்படி சமாளிப்பீங்க? "
" இல்லை மாப்பிள்ளை. ஏற்கனவே ஒரு பெண்ணிடம் பேசிருக்கேன். இப்போ ஃபோன் பண்ணி, இன்னையிலேந்து வரச் சொல்லிடறேன். அப்புறம் சாந்தனு பேசி உங்களை விசாரித்தான். அவனுக்கு இங்க நடக்கற கூத்து எதுவும் தெரியாது. தெரியவும் வேணாம். நேரில் வந்தாப் பாத்துத் தெரிஞ்சுக்கட்டும். அநாவசியமா அவனை இப்பவே டென்ஷனுக்கு உள்ளாக்க வேணாம்னு நினைக்கிறேன்"
" ஆமாம் அத்தை, நீங்க சொல்லறது சரி தான். நான் பேசிச் சமாளிச்சுக்கறேன். நீங்க வருத்தப் படாதீங்க" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான் பிரசாந்த். போவதற்கு முன்னால் குழந்தைக்கு வேண்டிய சாமான்கள் அனைத்தையும் வாங்கித் தந்து விட்டுத் தான் நகர்ந்தான்.
தொடரும்,
புவனா சந்திரசேகரன்.
அத்தியாயம் 3
பிரசாந்த் விடாமல் காலையிலும் மாலையிலும் ஒருமுறை வந்து குழந்தையைக் கொஞ்சி விட்டு, காமாட்சியிடமும் ஏதாவது வேண்டுமா என்று விசாரித்து விட்டுத் தான் போனான். பத்மினியின் முறைப்பையோ, எரிச்சலையோ கொஞ்சம் கூடக் கண்டு கொள்ளாமல் அவன் நடந்து கொள்வது அவளுக்கு இன்னும் கொஞ்சம் கோபத்தைக் கூட்டியது.
அவன் வந்து விட்டுப் போன பிறகு கொஞ்ச நேரத்திற்கு, கொம்பேறி மூக்கனாக மாறித் தான் நிற்பாள். புஸு புஸுவென்று மூச்சு விட்டுக் கொண்டு முகத்தை வெங்கலப் பானை போலத் தூக்கி வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பாள். காமாட்சி, தனது சிரிப்பை அடக்கிக் கொண்டு ஓரக்கண்ணால் மகளைப் பார்த்து ரசிப்பாள். பத்மினியைப் பார்த்தால் அவளுக்குப் பாவமாகவும் இருக்கும். அதே சமயத்தில், ' சொல் புத்தியும் இல்லை; சுய புத்தியும் இல்லை. நீயா இழுத்து விட்டுக்கிட்ட பிரச்சினை. நீயே தீர்த்துக்கோ' என்ற அலட்சிய மனப்பான்மையும் இருக்கும்.
அம்மா, மகளின் மௌன நாடகத்தை முரசு கொட்டிக் கலைத்து விட்டாள் பேத்தி. அன்று இரவு காமாட்சி கொஞ்சம் அதிகம் களைத்துப் போயிருந்தாள். இரண்டு நாட்களாக சரியாகத் தூங்காததாலோ என்னவோ அன்று சீக்கிரமாகவே கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது காமாட்சிக்கு. அலுப்பில் அசந்து தூங்கி விட்டாள்.
குழந்தையை மகளிடம் விட்டு, அவள் வயிறு முட்டப் பால் குடித்ததும் அவளைக் கையில் வைத்துத் தூங்க வைத்துத் தொட்டிலில் போட்டு விட்டுத் தான் படுத்தாள். படுத்ததும் அடுத்த நிமிடமே தூங்கியும் போனாள். பத்மினிக்கும் மருந்து, மாத்திரைகளைக் கொடுத்துத் தன் கடமைகளை முழுதுமாக முடித்துவிட்டுத் தான் காமாட்சி கண்ணசந்திருந்தாள்.
பத்மினியும் ஆயாசத்துடன் கண்களை மூடிக் கொண்டு படுத்திருந்தாள். தூக்கம் வரவில்லை. கணவனைப் பிரிவது என்ற முடிவை எடுத்த பின்னர் குழந்தையைத் தனியாக எப்படி வளர்க்கப் போகிறோம் என்று நினைத்துப் பார்த்தபோது மலைப்பாகத் தான் இருந்தது.
' இப்போதைக்கு அம்மா உதவி கிடைக்குது. ஆனா அம்மாவுக்கும் வயசாயிட்டே தான் போகுது. ஷுகர், பி. பி( sugar, bp) என்று அந்த வயதுக்குண்டான பிரச்சினைகள். எல்லாம் கன்ட்ரோலில் தான் இருக்குன்னாலும் நம்ப முடியாது. திடீர்னு ஜாஸ்தி ஆகலாம். இப்போதெல்லாம் அம்மாவுக்குக் கால் வலி வேறு அடிக்கடி தொந்தரவு செய்யுது. பாவம் அவங்க மேல அதிகச் சுமை போட முடியாது. ஆனாலும் பேத்திக்காக இழுத்துப் போட்டுக்கிட்டு எல்லா வேலைகளையும் செய்வாங்க. நம்மையும் விட்டுக் கொடுக்க மாட்டாங்க. அதில் ஒண்ணும் சந்தேகமில்லை. ஆனாலும் அவங்களை மட்டும் நம்பிட்டு சும்மாக் கையைக் கட்டிட்டு உட்கார்ந்திருக்க முடியாது. அண்ணா சாந்தனு வேற அம்மாவைத் தன்னோட வந்துரச் சொல்லி இந்தியா வரும் போதெல்லாம் கூப்பிட்டுக்கிட்டே இருக்கான். வரலைன்னு தான் இப்போதைக்கு சொல்றாங்க. இருந்தாலும் திடீர்னு மனசு மாறிக் கிளம்பிட்டாங்கன்னா நான் என்ன பண்ணுவேன்? ' என்று எதிர்காலத்தைப் பற்றி யோசித்து யோசித்து மனம் குழம்பிப் போனது. இமைகள் மூட மறுத்தன.
அந்த சமயத்தில் தான் குழந்தை வீர் வீரென்று கத்த ஆரம்பித்தாள். பதட்டத்தில் சடாரென்று எழுந்து படுக்கையில் உட்கார்ந்த போது அடிவயிற்றில் இருந்து சுரீரென்று வலி உடல் முழுதும் பரவியது. தையல் போட்ட இடத்தில் வேறு தாங்கமுடியாத வலி. துடித்துப் போய்விட்டாள் பத்மினி. அந்த வலியுடன் திரும்பிக் குழந்தையைத் தூக்கும் அளவு உடலில் திராணியில்லை. அம்மாவோ ஆழ்ந்த தூக்கத்தில்! குழந்தையோ அழுகையை நிறுத்திய பாடில்லை.
வேறு வழியின்றி, " அம்மா, அம்மா " என்று கூப்பிட்டாள். அம்மா லேசாக அசைந்ததும் கொஞ்சம் சத்தமாகவே கத்தினாள். காமாட்சி சடாரென்று எழுந்து ஓடி வந்தாள். மகள் வலியில் துடிப்பதைப் பார்த்துப் பதறிப் போனாள். அழும் குழந்தையைக் கையில் தூக்கி சமாதானப் படுத்தியபடி, இன்டர்காமில், டியூட்டி நர்ஸை அழைத்தாள்.
நிலைமை கட்டுக்குள் வருவதற்கு சிறிது நேரம் பிடித்தது.
" என்னம்மா இப்படி செஞ்சிருக்கே? கொஞ்ச நாளைக்கு ஜாக்கிரதையா இருக்க வேணாமா? தையல் போட்ட இடத்தில் புண்ணெல்லாம் ஆறி, சரியாப் போற வரைக்கும் கவனமா நிதானமா எழுந்திருக்கணும்? தடார், புடார்னு எழுந்திருக்கக் கூடாது இப்படி. குழந்தையும் பொறந்தாச்சு. உன் உடம்பு சரியானாத் தானே உன்னோட குழந்தையை உன்னால சரியா கவனிச்சுக்க முடியும்? ஏதாவது இன்ஃபெக்ஷன் ஆனா உனக்குத் தான் கஷ்டம். தையல் வேற பிரிஞ்சு போக சான்ஸ் இருக்கு. இனிமேலாவது ஜாக்ரதையா இரும்மா" என்று அந்த வயதான நர்ஸ், பத்மினியை உரிமையோடு கடிந்து கொண்டாள்.
மகள் பட்ட வேதனையால் காமாட்சியின் மனமும் இளகிவிட்டது. மனதில் இருந்த கோபமெல்லாம் பஞ்சாகப் பறந்து விட்டது. குழந்தையைத் தூங்க வைத்துத் தொட்டிலில் கிடத்தி விட்டு பத்மினியின் அருகில் உட்கார்ந்து, அவளுடைய கையை ஆதரவுடன் பிடித்துக் கொண்டாள்.
" என்னடி அப்படி கோபம் என் மேலே? என்னைக் கூப்பிடக் கூடாதா? நீயாக் கஷ்டப்பட்டு எழுந்து ஏதாவது ஏடாகூடமா ஆயிருந்தா என்ன ஆயிருக்கும்? நினைச்சுப் பாக்கவே பயமா இருக்கு எனக்கு. பதைபதைச்சுப் போயிட்டேன்" என்று சொல்லி பத்மினியைக் கண்டித்தாள்.
" அம்மா, அம்மா. நீங்களும் இனிமே என்னைக் கோவிச்சுக்காதீங்கம்மா" என்று சொல்லியபடி அம்மாவின் மடியில் தலை வைத்துப் படுத்து விம்ம ஆரம்பித்தாள்.
" சரி, சரி, அழுது இன்னும் உடம்பைக் கெடுத்துக்காதே. நானும் பாரு, இன்னைக்குன்னு என்னை மறந்து தூங்கிப் போயிருக்கேன். ரொம்ப அழுதாச் சளி பிடிச்சுக்கும். இந்த சமயத்தில் காய்ச்சல் வந்தாலும் நல்லதில்லை. உனக்கு வந்தாக் குழந்தையையும் அது பாதிக்கும். எல்லாப் பிரச்சினைகளுக்கும் சீக்கிரமா விடிவு காலம் வரும். கவலைப்படாதே. என்ன செய்யறது? பொம்பளை ஜன்மமாப் பொறந்துட்டோமே? இதையெல்லாம் அனுபவிச்சுத் தான் ஆகணும். எதுவா இருந்தாலும் மனசைத் தளரவிடாதே. குழந்தை முகத்தைப் பார்த்துக் கவலையை மறக்க முயற்சி பண்ணு" என்று விதவிதமாக அவளுக்கு அறிவுரைகள் வழங்கியபோது காமாட்சியின் மனதும் லேசானது.
அழுது ஓய்ந்த பின்னர், பத்மினியும் அம்மாவிடம் மனம் விட்டுப் பேசி முடித்து விட்டுத் தான் தூங்கினாள். அம்மாவும், மகளும் பேசிப் பேசி ஓய்ந்த பின்னர், மனநிறைவுடன் படுத்துத் தூங்கினார்கள் அன்று. பேத்தியும் அதன் பிறகு அவர்களை நிம்மதியாகத் தூங்க விட்டாள்.
அடுத்த நாள் காலையில் பத்மினியும், காமாட்சியும் பழையபடி இயல்பாக சிநேகத்துடன் பேசிய போது இரண்டு பேருக்கு நடுவில் இருந்த புரிதலும் பாசமும் சரியான அளவில் மீட்கப்பட்டிருந்தன.
" ஏன்டி பத்மினி, உன் ஆஃபிஸ் ஃப்ரெண்ட்ஸ் யாரும் வரலையே உன்னைப் பார்க்க? "
" அது தான் ஜானு வந்தாளே அன்னைக்கு? எல்லாரும் உடனேயே போய் அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம். சின்னக் குழந்தைக்குச் சட்டுனு இன்ஃபெக்ஷன் ஆயிடும். ஒரு வாரம், பத்து நாட்கள் கழிச்சு பத்மினி டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குப் போனதும் போய்ப் பாருங்கன்னு எங்க பாஸ் சொன்னாங்களாம். ஜானுவுக்கு மட்டும் பொறுமை இல்லை. ஓடியே வந்துட்டா. அன்னைக்கு அம்மாவைத் தனியே விட்டுட்டுப் போக வேண்டிய கட்டாயம்னு சொல்லி ரொம்பவும் வருத்தப்பட்டா"
" உங்க பாஸ் சொன்னதும் ஒரு விதத்தில் சரி தான். நல்ல பிராக்டிக்கலான மனுஷரா இருக்காரே? "
" மனுஷர் இல்லை. மனுஷி. "
" ஓ, அது தான் விஷயமா? பொம்பளையா இருக்கறதுனால தான் புரிஞ்சுட்டுப் பேசறாங்க"
" அண்ணா கிட்டயிருந்து தான் ஃபோனே வரலை. நீங்க அண்ணி கிட்டப் பேசித் தகவல் சொன்னீங்க இல்லையா? "
" சொன்னேனே? எனக்குத் தெரிஞ்ச அரைகுறை இங்கிலீஷில் உளறிக் கொட்டினேன். சாந்தனு ஏதோ ஆஃபிஸ் வேலையா வெளிநாடு போயிருக்கறதா கேதரின் சொன்னா. ஏதோ கான்ஃபரன்ஸாம். அவ பேசினதும் என்னவோ பாதிக்கு மேல எனக்குப் புரியலை போ" என்று காமாட்சி, அலுத்துக் கொண்டிருந்த போது சரியாக, சாந்தனுவிடம் இருந்து அழைப்பு வந்துவிட்டது.
" ஏய் கங்கிராட்ஸ் பத்மினி. என்னோட மருமகள் என்ன சொல்லறா? நீ எப்படி இருக்கே? அம்மா, பக்கத்தில் தானே இருக்கீங்க? பேத்தி வந்தாச்சு. சந்தோஷம் தானே உங்களுக்கு? இனிமே யாராவது பாட்டிம்மான்னு சொன்னாக் கோவிச்சுக்க மாட்டீங்க இல்லையா? " என்று படபடவென்று பேசிக் கொண்டே போனான் சாந்தனு.
" ஆமான்டா, பேத்தி வந்தாச்சு. உன் வழியிலும் சீக்கிரமா ஒரு பேரனோ, பேத்தியோ வந்தாச்சுன்னாப் பாத்துட்டு நிம்மதியாக் கண்ணை மூடுவேன்"
" ஏம்மா இப்படி நல்ல விஷயம் பேசும் போது இப்படில்லாம் பேசி மூடைக் கெடுக்கறீங்க?
சீக்கிரமா உங்க ஆசை நிறைவேறும். அதுக்காக உங்களை அவ்வளவு ஈஸியா இந்த உலகத்தை விட்டு அனுப்பிர மாட்டோம். பேரன், பேத்தி கல்யாணத்தை எல்லாம் பாத்துட்டுத் தான் நீங்க மேல போவீங்க! அப்பாவும் இல்லை. நீங்க தானேம்மா எங்களோட ஒரே சப்போர்ட். இனிமேல் இப்படியெல்லாம் பேச வேணாம்"
என்று சொன்ன போது சாந்தனுவின் குரலில் வருத்தம் அப்பட்டமாகத் தெரிந்தது. அப்பாவைப் பற்றிப் பேசியதால் இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள் காமாட்சி.
' தப்பித் தவறி எதையோ ஆரம்பிச்சு, சாந்தனுவை உணர்ச்சி வசப்பட்டு வச்சிட்டேன் நானே! என்னோட தப்பு தான். இனிமேல் ஜாக்கிரதையாக இருக்கணும். எவ்வளவு கஷ்டப்பட்டு அவனை சரி பண்ணிட்டு நானே மூளை கெட்ட தனமா எதையோ பேசிட்டேனே? ' என்று மனதிற்குள் புலம்பிய காமாட்சி, சாமர்த்தியமாகத் தங்களுடைய உரையாடலைத் திசை திருப்ப முயற்சி செய்தாள்.
" சரி, விடு கழுதையை. உன் ஆசைப்படி நிறைய வருஷம் உசுரோட இருக்க ஆண்டவன் கிட்ட இன்னைக்கே அப்ளிகேஷன் போட்டுடறேன். என் பேத்தியைப் பாரு. அப்படியே பத்மினி குழந்தையில் இருந்த மாதிரியே இருக்கா. அச்சு அசல் அப்படியே கார்பன் காப்பி தான், இல்லையா? "
" இல்லைம்மா, எனக்கென்னவோ பிரசாந்த் ஜாடை தான் தெரியுது. எங்கம்மா அந்தத் தடியன்? பொண்டாட்டியையும் பொண்ணையும் கொண்டாடாம எங்கே போய்த் தொலைஞ்சான்? பொறுப்பே இல்லையே? கல்யாணமாகியும் பொறுப்பு வரலை. இப்போ குழந்தை பிறந்தும் கூட வரலையே? கங்கிராட்ஸ் சொல்ல ஃபோன் பண்ணிட்டே இருக்கேன். கிடைக்க மாட்டேங்குதே?" என்று செல்லமாக நண்பனைப் பற்றிப் பேசி அலுத்துக் கொண்டான் சாந்தனு.
' என்னடா இது? எந்தப் பக்கம் போனாலும் இப்படி முட்டுது! உன் தங்கச்சிக்கும், அவ புருஷனுக்கும் தகராறு, பிரிஞ்சிட்டாங்கன்னு எப்படி என் வாயால சொல்லறது? கேட்டாத் துடிச்சுப் போவானே சாந்தனு! ' என்று தவித்தாள் காமாட்சி.
" காலையில் தான் வீட்டுக்குப் போனார் மாப்பிள்ளை. ரெண்டு நாளா ரெஸ்டே இல்லை. நல்ல அலைச்சல். சரியான டென்ஷன். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்கன்னு நான் தான் வீட்டுக்கு அனுப்பினேன்" என்று சமாளித்த அம்மாவைப் பார்வையால் சுட்டெரித்தாள் பத்மினி. அவளை வாயைத் திறக்காதே என்று சைகை காட்டிய காமாட்சி, தனது நாடகத்தைத் தொடர்ந்தாள்.
" ஆமாம், கேதரின் எங்கே? அவளையும் கொஞ்சம் கண்ணில காமி. பாக்கறேன்"
" அம்மா, அவ இன்னைக்குக் காலையில் தான் கிளம்பி ஏர்போர்ட் போயிருக்கா. யு. கேயில் அவளோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு தகவல் வந்தது. உதவிக்கு யாருமில்லைன்னு கிளம்பிப் போயிருக்கா. இப்போ ஃப்ளைட் ஏறியிருப்பா. அங்கே வீட்டுக்குப் போய்ச் சேந்ததும் உங்க கிட்ட எல்லாம் பேசறேன்னு சொன்னா. கங்கிராட்ஸ் சொல்லச் சொன்னா"
" இப்பத் தான் நீ வெளியூர் போயிட்டுத் திரும்பினே? இப்போ அவ போயிருக்காளா? நல்லாக் கண்ணாமூச்சி ஆடறீங்களே நீங்க? "
" என்னம்மா பண்ணறது? நான் ஆஃபீஸ் வேலையா கொரியா போயிட்டு இன்னைக்குத் தான் திரும்பினேன். அவளுக்கோ சொந்த வேலைக்காக உடனே போகவேண்டிய கட்டாயம். என்ன செய்யறது? நாங்க ரெண்டு பேரும் வாங்கி வந்த வரம் அப்படி! "
" அதுனால என்னடா? பரவாயில்லை போ. சும்மாத் தான் கலாய்ச்சேன் உன்னை. நீ ஒண்ணும் ஸீரியஸா எடுத்துட்டு பதில் சொல்ல வேணாம். சில சமயங்களில் நம்மோட வாழ்க்கை, அலைகடலில் தத்தளிக்கற படகு மாதிரி ஆடித் தவிக்குது. அதுக்கெல்லாம் பயப்படலாமா? காத்து சரியானா, ஆட்டமும் நின்னுடும். எல்லாமே நமக்கு சாதகமா நடக்கும்னு எதிர்பார்க்க முடியாது. நடக்கறதை அப்படியே ஏத்துக்கிட்டுப் பொறுமையாக் காத்திருந்தா பாதகம் எதுவும் இல்லாமல் தப்பிக்கலாம் " என்று மகனுக்கும், மகளுக்கும் சேர்த்துப் பொத்தாம் பொதுவாக அறிவுரையை உதிர்த்தாள். பத்மினியோ கவனிக்காதது போல முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
அன்று மதியமே பத்மினியை டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள். பத்மினி, குழந்தையுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் காமாட்சி. பிரசாந்த் வந்து தேவையான உதவிகள் அனைத்தையும் சிரித்த முகத்துடன் செய்து விட்டு அவர்களை வீட்டில் சேர்த்து விட்டுத் தான் சென்றான்.
" ஒரு வாய் சாப்பிட்டுப் போங்க மாப்பிள்ளை" என்று ஆரம்பித்த காமாட்சியிடம், வேண்டாம் என்று மறுத்து விட்டான் பிரசாந்த்.
" உங்களுக்கே வேலை நிறைய இருக்கும் அத்தை. நோ உபசாரம். நீங்க பத்மினியையும் குழந்தையையும் கவனிங்க. உதவிக்கு யாரையாவது நான் ஏற்பாடு செய்யட்டுமா? எப்படி சமாளிப்பீங்க? "
" இல்லை மாப்பிள்ளை. ஏற்கனவே ஒரு பெண்ணிடம் பேசிருக்கேன். இப்போ ஃபோன் பண்ணி, இன்னையிலேந்து வரச் சொல்லிடறேன். அப்புறம் சாந்தனு பேசி உங்களை விசாரித்தான். அவனுக்கு இங்க நடக்கற கூத்து எதுவும் தெரியாது. தெரியவும் வேணாம். நேரில் வந்தாப் பாத்துத் தெரிஞ்சுக்கட்டும். அநாவசியமா அவனை இப்பவே டென்ஷனுக்கு உள்ளாக்க வேணாம்னு நினைக்கிறேன்"
" ஆமாம் அத்தை, நீங்க சொல்லறது சரி தான். நான் பேசிச் சமாளிச்சுக்கறேன். நீங்க வருத்தப் படாதீங்க" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான் பிரசாந்த். போவதற்கு முன்னால் குழந்தைக்கு வேண்டிய சாமான்கள் அனைத்தையும் வாங்கித் தந்து விட்டுத் தான் நகர்ந்தான்.
தொடரும்,
புவனா சந்திரசேகரன்.
Author: Puvana
Article Title: இல்லற வீணை 3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: இல்லற வீணை 3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.