• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

இரு வண்ண வானவில் அத்தியாயம் 3

Mysore

New member
Joined
Mar 27, 2025
Messages
3
அத்தியாயம் 3

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.

வெகு நேரமாக அடித்துக் கொண்டிருந்த கைபேசியின் சத்தத்தில் நினைவிலிருந்து விழித்தவன், தொடுதிரையை பார்த்தான்.அவனது நண்பன் விஷ்வேஷ்வரன் தான் அழைத்திருந்தான். கையிலிருந்த மோதிரத்தை மெதுவாக பாக்கெட்டில் போட்டுவிட்டு, அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

"ஏன் டா போன் பண்ணா எடுக்க மாட்டியா? எத்தனை தடவை கூப்படறது..." வள்ளென்று கத்திவிட்டு "போனை வை, உன்னை பார்த்துட்டேன்..." என்றவன் அழைப்பை துண்டித்து விட, நீண்ட நெடிய பெருமூச்சுடன் திரும்பி பார்த்தான்.

இருட்டில் வரிவடிவமாக தெரிந்தது விஷ்வாவின் பிம்பம். அவனை ஒரு பார்வை பார்த்தவன் அலைபேசியை பாக்கெட்டில் தள்ளி விட்டு, ஒன்றுக்கொன்று போட்டிபோடும் கடலலைகளை வெறித்தான். அவனது மனதை போலவே கடல் நீரும் இருண்டு அழுத்தமாக தெரிந்தது.

அதற்குள் விஷ்வா இவனை நெருங்கிருந்தான். இருண்ட கடலை வெறித்துக் கொண்டிருந்தவனை பார்த்தவாறு, "பண்றதெல்லாம் பண்ணிட்டு, இப்படி தனியா வந்து உட்கார்ந்துட்டா எல்லாமே சரியா போயிடுமா?" சற்று கடுமையாகவே கேட்டான் .

அந்த ஒரு கேள்வியிலேயே நடந்ததெல்லாம் அவனுக்கு தெரிந்து விட்டதென்று தெளிவாக புரிந்தது சர்வாவிற்கு.

தந்தை சொல்லி இருப்பார் என்று நினைத்தவன் விஷ்வாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் கண்களை இறுக மூடிக் கொண்டான்.

கண்களுக்குள் நேற்று மாலை, வெட்கத்தில் தலை குனிந்து நின்ற இயலின் முகம் விழுந்தது. அக்கணம் குற்ற உணர்வில் தவித்து போனான் ஆடவன். அவன் செய்த செயல் பூதாகரமாய் எழுந்து நின்று அவனை பயப்படுத்தியது.

சர்வாவின் அமைதியில் பெருமூச்சு விட்டபடி, அவனது அருகில் வந்தமர்ந்தான் விஷ்வா.

"என்னடா?" என்றவாறு தோளில் மெதுவாய் தொட,

கண்களை திறந்து விஷ்வாவை பார்த்தவன் "நான் பண்ணது தப்புன்னு புரியுது டா... ஆனா அதை எப்படி சரி பண்றதுன்னு தெரியல..."
என்றவன் குரல், உள்ளே இரும்பு உருகுவது போலக் கரகரக்கக் கேட்டது.

சர்வா மேலும் தொடர்ந்தான் "முதல்ல சித்தி பண்ணதுல அத்தனை ஆத்திரம் வந்தது டா. அப்படி என்ன குறைஞ்சு போயிட்டேன் நான்னு ஒரு கோபம். அந்த கோபத்துல தான் இந்த பொண்ணு எனக்கு வேண்டாம்னு வந்துட்டேன். ஆனால் இப்ப இங்க வலிக்குது டா." நெஞ்சை தடவிக் கொண்டே சொன்னவன்

"கண்ணுக்குள்ளேயே நிக்கிறா டா..." என்று மெதுவாய் கூறினான்.

நண்பனின் குரலில் தெரிந்த வேதனை விஷ்வாவையும் தாக்கியது. ஓர் நொடி அமைதிக்கு பின் மெதுவாக அவனைத் தோளோடு அணைத்து,

"கண்ணுக்குள்ளேயே நிக்கிறாள்னா...கால் பண்ணி பேச வேண்டியது தானே டா!" புன்முறுவலுடன் சொல்ல.

விழிகளை அகல விரித்தவன்,
"பேசுவாளா?" என்று சிறு பிள்ளைபோல் அசைந்த குரலில் கேட்டான்.

"நீ பண்ண வேலைக்கு, அவ,உன்னை பிளாக் பண்ணி இருந்தாலும் ஆச்சரியப் படறதுக்கு இல்லை தான். எதுக்கும் கூப்பிட்டு பாரு" என்றவனை முறைத்துக் கொண்டே இயலுக்கு அழைத்தான்.

முதல் முறை...
இரண்டாம் முறை...
மூன்றாவது முறை...

அவள் எடுக்கவில்லை என்றதும் மெல்லிய பதட்டத்துடன் விஷ்வாவை பார்த்தான்.

அவனோ "மிட் நைட் டா... தூங்கிட்டிருப்பாங்க ஒன்ஸ் கால் பண்ணி பாரு, இல்லைன்னா மார்னிங் பேசிக்கலாம்" என்றான் அமைதியாக

"ம்ம்ம்..." என்றவனாய்,
சர்வா மீண்டும் அழைத்தான்.

இந்த முறையோ…
அழைப்பு எதிர்ப்புறம் ஏற்கப்பட்டது.

பட்பட்டென அடித்துக் கொண்ட மனதினை தடவிக் கொண்டே"இயலா..." என்று உயிர் உருக அழைத்தான்.

அந்த அழைப்பிற்கு எதிர்ப்புறம் பதிலில்லை. அதில் தவித்து போனவன் "இயலா..."என்று மீண்டும் அழைத்தான். இம்முறை,
அவனது அழைப்பு இதயத்தின் எல்லை தாண்டி வந்து விழுந்தது.

அந்த நேரத்தில், "ஹலோ...யார் பேசறது? நான் இயலோட அத்தை பேசறேன்"என்ற குரல் எதிர்ப்புறத்தில் ஒலித்தது.

அவன் சற்று சுதாரித்தான்.
நீண்ட பெருமூச்சுடன்,
"நான் சர்வேஸ்வரன் பேசறேன்..." என்றான் மெதுவாய். இவனது பேரைக் கேட்டதும் எதிர் முனையில் ஆழ்ந்த அமைதி.

"ஹலோ..." என்றான்.

"இந்த நேரத்தில எதுக்கு தம்பி கூப்பிட்டு இருக்கீங்க..." அடர்ந்த குரலில் கோபமாக கேட்டார் பாலகிருஷ்ணனின் அக்காவான ஆதி லட்சுமி.

"இயல் கிட்ட பேசணும். அவகிட்ட போனை தர முடியுமா?" எனக் கேட்டவன் குரலில் அவனையும் மீறி பதட்டம் வெளிப்பட தான் செய்தது.

‘அவ தூங்குறா...’ என்றுவிட்டு அழைப்பை துண்டிக்க தான் நினைத்தார். ஆனால்... அவரது மனம் அதை அனுமதிக்கவில்லை.

அழுதுக்கொண்டே உறங்கிய மருமகளை பார்த்தவர்
மனதின் வலியை விழுங்கிக் கொண்டு, கோபத்துடன், பேச ஆரம்பித்தார்.

"ஊரே கேளு, நாடே கேளுன்னு சந்தி சிரிக்க வைச்சிட்டு போயிட்டு,இப்ப வந்து சாவகாசமா அவகிட்ட பேசணும் போனைக் குடுங்கன்னு கேட்கறீங்க... கொஞ்சம் கூட உறுத்தலயா உங்களுக்கு?" எனக் கேட்க. கண்களை இறுக மூடித் திறந்தவன் கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டான்.

"தெரியாம தான் கேட்கிறேன். ஐயோ அம்மா, இப்படியொரு பொண்ணை பார்த்து எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறீங்களேன்னு கோபப் படற அளவுக்கு என் மருமக எதுல குறைஞ்சு போயிட்டா சொல்லுங்க. இந்த பார்வை குறைப் பாட்டை தவிர, வேற என்ன குறை சொல்லிட முடியும் உங்களால?" என்றதற்கு பதில் சொல்லாமல் மௌனமாக நின்றான்.

"...."

"பூ வைச்சுட்டு போனதுல இருந்து உங்களுக்கும், அவளுக்கும் பழக்கம் இருக்கு தானே. இரண்டு பேரும் பேசிட்டு தானே இருந்தீங்க. சில முறை வெளிய கூட போயிட்டு வந்தீங்க இல்லையா? அப்ப,ஒரு தடவை கூட நிறத்தை பத்தி உங்ககிட்ட பேசினது இல்லையா? " எனக் கேட்டதும்

‘வானம், ஒருபக்கம் நீலமா இருக்கு, இன்னொரு பக்கம் இருட்டா இருக்கு. மழை வரதுக்குள்ள உன்னை வீட்டுல விடனும்...’ என்றதும்

வானத்தை அண்ணார்ந்து பார்த்து
‘எனக்கு அப்படி தெரியல, வெறும் நீளமா தான் தெரியுது...’ என்றவள் சிறிது தாமதித்து, ‘உங்களுக்கு தெரியுமா சர்வா? விசுவிசுன்னு வீசற ஈர்க் காத்தும், மண் வாசனையும் எனக்கு மழை வர போகுதுன்னு முன்னாடியே சொல்லிடும். இப்போதைக்கு எனக்கு எந்த செய்தியும் வரவே இல்லை. சோ மழை வர வாய்ப்பு ரொம்ப கம்மி...’ கண்களை சிமிட்டி மெல்லிய புன்னகையோடு சொன்னவளை இமைக்காமல் பார்த்தவன்

‘இந்தளவுக்கு கவிதையா பேசாத இயல். அப்படியே அள்ளிக்க தோணுது’ என்றான் காதலாக.

அதற்கு பதில் சொல்லாமல் இதழ்களை பற்களால் அழுத்தி பிடித்துக் கொண்டே குனிந்து கொண்டது இன்றைக்கும் நினைவு வந்து கொன்றது அவனை. அதே நேரம் அவள் வார்த்தைகள் அது போக்காகச் சொன்ன வார்த்தைகளல்ல, நெஞ்சிலிருந்த உணர்வு என்பது இப்பொழுது புரிந்தது.

அதே நேரம் இங்கு ஆதி லட்சுமி மேலும் தொடர்ந்தார் " சரி அதை விடுங்க, இந்த இரண்டு மாசளவுல ஒருமுறை கூட அவளைப் பத்தி உங்ககிட்ட சொன்னது இல்லையா?" எனக் கேட்க, பதில் சொல்ல முடியவில்லை அவனால்.

"அவ சொல்லி இருப்பா, ஆனால் அது உங்களுக்கு புரிஞ்சு இருக்காது. ஏன்னா அப்போதைக்கு அவ சொல்றதெல்லாம் கவிதையா தானே தெரிஞ்சு இருக்கும்..." நக்கல் தொனிக்க கூறினார்.

"சரி, நடந்தது எல்லாமே நல்லதுக்கு தான். நீங்க வேண்டாம்னு போனதுனால தான் என் பையனுக்கு இயலை பேசி முடிச்சோம்." என்ற வார்த்தைகள்,இதுவரை மெளனமாக நின்றிருந்த சர்வாவை, கோபத்தின் உச்சிக்கே இழுத்து சென்றது.

"என்ன..." கோபமாகவே கேட்டான்.

"ஆமா! இன்னும் இரண்டு வாரத்துல அவளுக்கும், என் மகனுக்கும் கல்யாணம். இனி அவளுக்கு கால் பண்றதை நிறுத்திக்கோங்க..." என்றவர் அவனது பதிலையும் எதிர்ப் பார்க்காமல் அழைப்பை துண்டித்து இருந்தார்.

அத்தனை கோபம் வந்தது சர்வாவிற்கு ‘எப்படி இதற்கு அவள் சம்மதம் சொன்னால்?’ என்ற கேள்வியில் ஆரம்பித்து ‘எப்படி இவள் அவனைத் திருமணம் செய்ய ஒப்புக் கொள்ளலாம்?’ என்ற கேள்வியில் முடிய, அந்த வெறுப்பும், கோபமும் சேர்ந்து கையிலிருந்த அலைபேசியை கடலில் தூக்கி எறியச் செய்தது.

***

சில மாதங்களுக்கு பிறகு.

காலை பத்து மணியைத் தாண்டியும், பரபரப்போடும் வாகன நெரிசலோடும் இயங்கி கொண்டிருந்தது சென்னை மாநகரம்.

அங்கே, அந்த பிரபலமான சாலையின் இரு பக்கங்களிலும் கம்பீரமாக நின்று கொண்டிருந்தன உயரமான கட்டிடங்கள். ஒவ்வொன்றும் ஒன்று மேல் ஒன்றாக வளைந்த செங்குத்து கோடுகளாய், நகரத்தின் வளர்ச்சியைச் சத்தமில்லாமல் பேசிக் கொண்டிருந்தன...

அந்த கட்டிடங்களுக்கு மத்தியில் கம்பீரமாக நின்றிருந்தது புகழ்பெற்ற கட்டிடக் கலை நிறுவனம்.

அது, க்ரீன் ட்ரீ ஆர்க்கிடெக் (Green tree Architect) சென்னையில் அமைந்துள்ள மிக முக்கியமான கட்டிடக் கலை நிறுவனமாகும். சென்னையின் முக்கிய பகுதிகளில் உள்ள ஐடி பார்க், உயர்ந்த தரமான அடுக்குமாடிக் குடியிருப்புகள்,
தனியார் பல்கலைக்கழக வளாகங்கள், மருத்துவமனை வளாகங்கள் உட்பட பல நிறுவனங்கள்_ க்ரீன் ட்ரீ நிறுவனத்தின் கைவண்ணத்திற்கு சாட்சி...

க்ரீன் ட்ரீ ஆர்க்கிடெக் என்ற பெயர் பலகையை தாங்கி நின்ற கட்டிடத்திற்குள் நுழைந்தது அவனது நான்கு சக்கர வாகனம்...

"கிரீன் ட்ரீ ஆர்க்கிடெக்சர்ல தானே குடுத்து இருக்க? ஓகே டா நான் இங்க வந்துட்டேன், அண்ட் மாடலை வேலுகிட்ட குடுத்து விடறேன் வாங்கிக்க..." என்றவன் காதிலிருந்த புளுடூத்தை கழட்டி வைத்துவிட்டு அலுவகத்திற்குள் நுழைந்தான்.

அந்த ஆர்க்கிடெக் அலுவலகத்தின் அமைதியும், நேர்த்தியான ஒழுங்கும்,
பிரம்மாண்ட மாதிரிகள் காட்சிப்படுத்திய மேசைகளும், அவனுக்கு எப்பொழுதும் போல வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தின.

அந்தப் பிரமிப்பை துளியும் வெளிக்காட்டாமல்,
ரிசப்ஷனிடம் சென்று, வந்த காரணத்தை கூறினான்..

"ஓகே சார், வெயிட் பண்ணுங்க.. மேம் உங்களை வந்து மீட் பண்ணுவாங்க..." என்கவும், வெயிட்டிங் ரூமில் சென்று அமர்ந்தவன் அந்த அறையை சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தான்.

அந்த அறையின் ஒரு பகுதி முழுக்க அகலமாக, ஃப்ளோர் டூ சீலிங் வரையிலும் கண்ணாடி ஜன்னல் அமைத்து இருந்தனர்... அதன் வழியே வரும் வெளிச்சத்தில் கட்டிட வடிவமைப்புகளுக்கான மாதிரிகளும், பிரிண்ட் செய்யப்பட்ட சிறிய கட்டிட வடிவங்களும் வைக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னால் சுவரை ஒட்டி, புக்க்ஷெல்ஃப்பொன்று இருந்தது. அதில் பழைய ,கட்டிடவியல் புத்தகங்கள், உலகப் புகழ்பெற்ற ஆர்கிடெக்ட்டுகளின் வேலைகள், மற்றும் கைவினைப் பொருட்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டடிருந்தது.

அதன் ஓரத்தில் ஒரு சிறிய காஃபி மேக்கரும், அருகில் கப்புகளும். சிறிய ஸ்பீக்கரும் இருந்தது அதில் மெல்லியதாக ஒலித்துக் கொண்டிருந்தது ஏ.ஆர்.ரகுமானின் இசை...

ஒரு பார்வையிலே என்னை உறைய வைத்தாய்
சிறு புன்னகையால் என்னை உருக வைத்தாய்...

என்ற வரிகள் அவன் செவிகளை தென்றலாய் தீண்டி செல்ல, அவளது நினைவுகள் மயிலிறகால் வருடி சென்றது அவனை.

கண்களை இறுக மூடி கொண்டான்... அடிவயிற்றிலிருந்து கிளம்பிய பெருமூச்சுடன் கண்களை திறக்க, நினைவுகளில் மயிலிறகாய் வருடிவிட்டவள் நேரில் நின்றாள்.

அதிர்ச்சியில் எழுந்து நின்று விட்டான். அக்கணம்

என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில் என்னை கனிய வைத்தாய்...

பின்னணியிலிருந்த ஸ்பீக்கரில் ஒலித்துக் கொண்டிருந்தது...

அவளோ, அவனது அதிர்ந்த முகத்தை கண்டுக் கொள்ளாமல்
"எல்லாமே ஓகேவா இருக்கான்னு ஒன்ஸ் செக் பண்ணிக்கோங்க சார்" என்றாள். இயலின் குரலில் தன்னிலைக்கு மீண்டவன் அவள் நீட்டிய மாதிரியை வாங்கினான்.

அக்கணம் அவனது பார்வை அவனையும் மீறி அவளது வெண்டை விரல்களை தீண்டி சென்றது. அதில் புதியதாக முளைத்திருந்தது ஓர் மோதிரம். இதயத்தில் மெல்லியதாக ஓர் அதிர்வு, அதையும் தாண்டி முந்திக் கொண்டு வந்தது அவனது முன் கோபம்.

" நிச்சியம் மட்டும் தான் ஆச்சா இல்லை கல்யாணமே பண்ணிட்டியா?" தொண்டை வரைக்கும் வந்த வார்த்தைகளை அடக்கிக் கொண்டவன்

"எல்லாமே ஓகே தான் மேம்.. ஏதாவது மிஸ்டேக் இருந்தா தாரணி மேம்க்கு கால் பண்ணிக்கிறேன்..." என்றுவிட்டு அவ்வறையை விட்டு வேகமாக வெளியேறினான். செல்லும் அவனையே இமைக்காமல் பார்த்தாள் பெண்.

எந்தன் முதலும் முதலும் நீ
முடிவும் முடிவும் நீ

எந்தன் முதலும் முதலும் நீ
முடிவும் முடிவும் நீ

என்ற வரிகள்
பின்னணியிலிருந்த ஸ்பீக்கரில் ஒலித்துக் கொண்டிருந்தது...
 
Last edited:

Author: Mysore
Article Title: இரு வண்ண வானவில் அத்தியாயம் 3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
214
இயலாமையில்
இயலாவை
இழந்து விட்டேன்...
இனி என் கையில்
இணைந்திடுமா என்
இனிய வாழ்க்கை....
 
Top Bottom