• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

விக்றோம் - 4

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
300
அத்தியாயம் ‌- 4

"2015 வெள்ளத்துல தண்ணீ வீட்டுக்குள்ள வந்துருக்குமே?"

"இல்லங்க‌ நாங்க தான் வீட்டுக்கு அஞ்சு படி வச்சிருக்கோமே. கிட்டத்தட்ட மூன்றரை அடி உயரம். தண்ணி வரலங்க."

"அப்போ வயசானவங்க ஏற முடியாதா?"

"மெதுவா ஏறலாங்க.. படியெல்லாம் சின்னது தான். "

“ஆனாலும் லிஃப்ட் ஒன்னு வச்சிருக்கலாம். அடிக்கடி இரண்டு மாடி ஏறணும்னா கொஞ்சம் கஷ்டம் தான்.”

“லிஃப்ட் வைக்க இடம் இருக்குங்க. தேவைப்படும் போது வச்சுக்கலாம்.”

"அது சரி. கிணறு மட்டும் தான் வச்சிருக்கீங்க. தண்ணி வத்திப்போனா, அவசரத்துக்கு ஒரு போர் போட வேண்டாமா?"

எனக்கு பலத்த சந்தேகம் வந்தது இந்த இடத்தில், பத்து அடி ஆழத்தில குனிந்து தண்ணீர் எடுப்பது போல இருக்கும் கிணறு வத்திப்போகுமா என்று அமைதியா சிரித்து வைத்தேன்.

"நாங்க இங்க வந்து கிட்டத்தட்ட முப்பது வருஷம் ஆகப் போகுது. தண்ணி வத்தலைங்க, மெட்ரோ வாட்டரும் வருது." இது என் கணவர்.

"பவர் பேக் அப் இருக்கா?"

"இன்வெர்ட்டர் 1கேவிஏ இருக்கு ஸார்."

"இவ்வளவு பெரிய வீட்டுல ஜெனரேட்டர் வச்சிருக்கலாம். ஏசி இன்வர்ட்டர்ல ஓடுமா?" இதைக் கேட்டவர் ஒரு மின்வாரிய பொறியாளர்.

"இந்த ஏரியால இது வரைக்கும் பவர் அவ்வளவா போனதில்லை ஸார், பக்கத்தில தான் சப்ஸ்டேஷன் இருக்கு. உங்களுக்குத் தெரியாததா?"

“இங்கே பவர்கட் இல்லேன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் இவ்வளவு பெரிய வீட்டை வாங்கும் போது amenities (கூடுதல் வசதிகள்) எல்லாம் என்ன இருக்குன்னு பார்க்கணுமா இல்லையா?”

“எங்களுக்கு ஜெனரேட்டர் தேவைப்படல சார். நீங்க வேணும்னா வீடு வாங்கினதுக்கு அப்புறம் உங்களுக்கு தேவைன்னு தோணினா வாங்கிக்கோங்க” என்று பட்டென்று சொல்லி விட்டேன் நான்.

“ஏன் மேடம் கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து வீட்டையும் வாங்கிட்டு எல்லாத்தையும் நாங்களே பண்ணனும்னா எப்படி?” அவரது குரலிலும் காரம் ஏறி இருக்க தனசேகரன் இடையே புகுந்து சமாளிக்க வேண்டியதாயிற்று.

“அப்படி கிடையாது சார். இது வரைக்கும் பத்து பேர் பார்த்துட்டு போயிருக்காங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு தேவை. முழுசா கட்டி முடிச்ச வீட்டுல எதெது செய்ய முடியுமோ அது தான் முடியும். விலையும் குறைக்கணும். உங்க தேவைகளையும் பூர்த்தி பண்ணனும்னா எங்களுக்கு ரேட் கட்டுப்படி ஆகணும்ல சார். நீங்களே யோசிச்சு பாருங்க. ப்ரைம் லொகேஷன்ல இவ்வளவு பெரிய வீட்டை நீங்க கேட்கற விலைக்கு நீங்க கேட்ட எக்ஸ்ட்ரா amenitiesஓட கொடுக்க முடியுமா? எங்க தேவைக்கு விக்கறோம்றதுக்காக நீங்க கேட்கற விலைக்கு கொடுக்க முடியாது சார்” என்று முடித்து விட்டார்.

அதன் பிறகு பல நாட்கள் அந்த வீட்டை விற்பதைப் பற்றி நாங்கள் யோசிக்கவே இல்லை

"ஏங்க! இவங்க எல்லாம் நிஜமாவே வீடு வாங்கணும்னு தான் வராங்களா? இல்லேன்னா, ஏதோ சினிமாவில காட்டுற மாதிரி சும்மா பொழுது போகாமல் வந்து நம்ம உயிர வாங்கறாங்களா? எத்தனை நாள் இந்த அவஸ்தை? பேசாம நாம திரும்பவும் அங்கேயே போயிடலாமா?" மனது பொறுக்காமல் ஒரு நாள் இவரிடம் வெடித்து விட்டேன்.

புது இடத்தில் எனக்கு வாய்த்த அனுபவம் அப்படி. அடுக்கு மாடி குடியிருப்பில் அடுத்த வீட்டுக்குத் தெரியாமல் ரகசியம் பேசக் கூட முடியவில்லை. பக்கத்து வீட்டு பரிமளா கோலமாவைப் பெருக்கி நம் வீட்டு வாசலில் நமக்குத் தெரியாமல் எளிதாகத் தள்ளி விட்டு போய் விடுகிறாள்.

நமக்குத் தெரிந்து விட்டால், "பக்கத்து வீடுன்னா அப்படி தான் இருக்கும்" என்று ஒரு நொடிப்பு வேறு.

இதையே நாம் தப்பித் தவறிச் செய்து விட்டால் பத்ரகாளியாக மாறிப் பாய்ந்து விடுகிறாள்.

இதற்கிடையில் அந்த இணையதள ரிலேஷன்ஷிப் மேனேஜர் ஐந்து முறை மாறினார், நன்றாக வேலை செய்கிறார்கள் என்று நான் நினைத்த இருவர் வேலையை விட்டே போனார்கள்.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு முறையும் புதிதாக வந்தவர்களுக்கு எங்கள் வீட்டைப் பற்றிய விளக்கம் கொடுத்துக் கொடுத்து வாய் வலித்தது. ஆனால் இப்போது, “எனது வீடு” என்ற தலைப்பில் பெரிய நாவலே என்னால் எழுத முடியும் என்ற பெருமை மட்டுமே மிச்சம் எனக்கு.

அன்றொரு நாள், வழக்கமாக அழைப்பு வரும் வேளை. "வணக்கம் மேடம். நான் அவினாஷ் பேசறேன். இந்த வீக் அப்டேட்ஸ் சொல்றேன் மேடம்."

"சொல்லுங்க அவினாஷ்."

"நம்ம ப்ராபர்டி இருக்கற ஏரியால சர்வே பண்ணின மார்கெட்டிங் க்ரூப், நாம கோட் பண்ணி இருக்க ரேட் ரொம்ப ஜாஸ்தின்னு ஃபீல் பண்றாங்க. கொஞ்சம் கம்மி பண்ணினா அந்த ரேஞ்ச்ல தேடற நிறைய பேர் நம்ம ப்ராபர்டிய பார்க்க முடியும்." அவர் சொன்ன விலையில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் இரண்டு முறை என்னாலான விலைக்குறைப்பைச் செய்தேன்.

ஆனால் பலனோ பூச்சியம் தான்.
இப்படியான இனிய அனுபவங்களோடு
அவர்கள் கொடுத்த ஆறுமாதங்கள் இன்றோடு முடியப் போகிறது. இன்று மாலைக்குள் நான் விண்ணப்பித்தால் கூட பாதிப் பணம் தான் கைக்கு வந்து சேரும். அதிலும் அவர்களது T & C அதாங்க டர்ம்ஸ் அன்ட் கண்டிஷன் எல்லாம் பார்த்தால் மொத்த பணமும் உண்டியலில் போட்ட காசு போன்றது தான்.

பக்கத்தில் நிம்மதியாக உறங்குபவரைப் பொறாமையுடன் பார்த்தேன். மனமோ "ஹூம்.. கேஷ் பேக்" என்று பெருமூச்சு விட்டது.

இருபத்தைந்து ஆயிரங்கள், எத்தனை எளிதாக ஏமாற்றப் படுகிறோம். அதுவும் படித்த அறிவுள்ள முட்டாள்கள் மட்டுமே இப்படி ஏமாறுவது. அறிந்தவர் தெரிந்தவர் என்று நாலு பேரிடம் சொல்லி வைத்திருந்தால் அவர்கள் மூலம் விஷயம் இன்னும் நாலு பேரை சென்று சேர்ந்திருக்கும். வீடும் இதற்குள் நம்பிக்கையான கைகளில் சென்று சேர்ந்திருக்கும். மனிதனை மனிதன் நம்பாமல் எல்லாவற்றுக்கும் டெக்னாலஜியை நம்புவதன் பலன், பட்டால் தான் புத்தி வருகிறது.

மனிதனைத் தான் நம்பவில்லையே தவிர பல தெய்வங்களுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறோம்.‌ எங்கள் குலதெய்வம் ஏழுமலையானில் ஆரம்பித்து வீட்டுக்கு அருகில் இருக்கும் பிள்ளையார் வரை எங்கள் வீடு விற்பனையில் பங்குதாரர்கள் ஆகிப் போனார்கள். இதில் சிலர் எங்கே இருக்கிறார்கள் என்று கூட நாங்கள் அறிய மாட்டோம். எல்லாம் அறிந்தவர் தெரிந்தவர் அக்கம் பக்கம் ஜோசியர் என்று பலரும் சொன்ன பல்வேறு கடவுள்கள்.‌ தனசேகரனைப் பொறுத்தவரை எல்லாம் பெர்சன்டேஜ் தான். இவர்களுக்கெல்லாம் ஷேர் செய்தது போக நமக்கு ஏதாவது மிஞ்சுமா என்று மகனும் மகளும் பலமுறை சந்தேகம் கேட்டு தெய்வ குற்றத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை
யாராவது ஒருவர் கண்ணைத் திறந்து எங்கள் வீட்டைப்
பார்த்தால் சரி.
 

Author: SudhaSri
Article Title: விக்றோம் - 4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom