• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

வதந்'தீ'!!

siteadmin

Administrator
Staff member
Joined
Jun 18, 2024
Messages
88
வதந்'தீ'!!


எங்கள் மருத்துவமனை வளாகத்தில் சமூக சேவகர் ஒருவர் அடிக்கடி தென்படுவார். ஆதரவற்றோருக்கு உதவுவது, குருதிக்கொடைக்கு உதவுவது என்று ஏதாவது செய்து கொண்டிருப்பார். அருகில் தான் அவர் வீடு. அவர் பார்ப்பது இரவு நேரப் பணி என்பதால் பகலில் மருத்துவமனையிலேயே அடிக்கடி சுற்றி வருவார். எந்த நேரம் ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்குள் நுழைந்தாலும் பின்னாலேயே டூவீலரில் வந்துவிடுவார். 'தூங்கவே மாட்டீங்களா?' என்று அவரிடம் கேட்போம். சிரித்துக் கொள்வார். பலமுறை அவரின் உதவி பயனுள்ளதாக இருந்தாலும் சில சமயம் தொல்லையாக அமைந்துவிடும்.

ஸ்மார்ட் ஃபோன் வந்தபின் நிலை இன்னும் மோசம். விபத்து உயிரிழப்பு போன்ற செய்திகளை உடனுக்குடன் பல வாட்ஸ்அப் குழுக்களுக்கு அனுப்பி வைப்பார். முதலில் தகவல் சொல்வது நானாக இருக்க வேண்டும் என்ற ஆர்வம் அவர் செயல்களில் தொனிக்கும். காயம் பட்டவர்களை, உயிரிழந்தவர்களை அனுமதியின்றி புகைப்படம் எடுப்பது தவறு என்று மூத்த மருத்துவர்கள் அவரைக் கண்டிப்பார்கள்.

ஒரு நாள் நான் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த போது நாய் குறுக்கே வந்து விட்டதால் பைக்கிலிருந்து விழுந்து விட்டேன் என்று கூறி ஒருவர் வந்து நெற்றியில் இரண்டு தையல்கள் போட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். அதன்பின் வேறு சில நோயாளிகளும் வந்து செல்ல, அதன்பின் நம் சமூக சேவகர் எப்போதும் போல வந்திருக்கிறார். பணியாளர்கள் பணி நிமித்தமாக பேசிக்கொள்ளும் போது, "அந்த நாய் குறுக்கே வந்த பேஷன்ட் போயிட்டாரா?" என்று ஒருவர் கேட்க, இன்னொருவர், "அவர் போயிட்டாரு இந்த தளவாய்புரம் பேஷன்ட் தான் இருக்காரு" என்று கூறியிருக்கிறார். இந்த உரையாடலை அரையும் குறையுமாகக் காதில் வாங்கிய சமூகம் தளவாய்புரத்தில் ஆக்சிடெண்டில் நாலு பேர் இறந்து போய்விட்டதாகப் புரிந்து கொண்டிருக்கிறார். நாய் என்பது நாலு என்று காதில் விழுந்திருக்கிறது. உடனே ஒரு ரிப்போட்டர் உட்பட நான்கைந்து பேருக்கு போன் போட்டு தளவாய்புரத்தில் ஆக்சிடெண்டில் நான்கு பேர் இறந்து விட்டதாகச் சொல்லி இருக்கிறார். அது இன்னும் இரண்டு மூன்று பேர் காதுகளுக்கு மாறிப் போய் இறுதியில் ஒரு பத்திரிகை அலுவலகத்திலிருந்து செய்தியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக கலெக்டர் ஆபீசின் கால்சென்டருக்குக் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன கேட்டார்களோ, இவர்கள் என்ன புரிந்து கொண்டார்களோ.. கலெக்டர் ஆபீசில் இருந்து போலீஸ் எஸ்.பி. ஆபீஸுக்குத் தகவல் போய், எஸ்பி ஆபீஸிலிருந்து லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று, அங்கிருந்து எங்கள் மருத்துவமனை புறக் காவல் நிலையத்துக்கும் செய்தி வந்திருக்கிறது. எங்கள் மருத்துவமனைக் காவலர் வேகமாக வந்து, "மேடம்! ஏதோ தளவாய்புரம் பக்கம் பெரிய ஆக்சிடென்டாம். நாலு பாடி வருதாம். பாடியே நாலுன்னா இஞ்சுரி நிறைய இருக்கும். தயாரா இருங்க" என்றார். நாங்களும், அய்யோ அப்படியா என்று பிற வார்டுகளிலிருந்த பணியாளர்கள் மற்றும் செவிலியர்களை அவசரப் பிரிவில் கூடச்செய்து, அது மாலை 7 மணி- ஷிப்ட் மாறும் நேரம் என்பதால் மதியப் பணியிலிருந்த செவிலியர்களையும் போகவிடாமல் இரவுப்பணிக்கு வர வேண்டிய ஆட்களையும் சீக்கிரம் வரச் சொல்லி, வீட்டிலிருக்கும் மருத்துவர்களிடம் தேவையென்றால் கூப்பிடுவோம், தயார் நிலையில் இருங்கள் என்று சொல்லி.. சூழலே மிகப் பரபரப்பாக இருந்தது. வெகு நேரம் வரை யாருமே வராததால் ஆம்புலன்ஸ் டிரைவர்களை அழைத்து, "மாஸ் ஆக்சிடென்ட் பேஷண்ட்ஸ் எதுவும் கொண்டு வரீங்களா?" என்று கேட்டோம். "இல்லையே நம்ம சமூக சேவகர் தான் அப்போ சொன்னாரு,. நாங்களும் ரெடியாத்தான் இருக்கோம். எங்களுக்கு எதுவும் தகவல் வரல" என்றார்கள். எங்கள் போலீஸ்காரர் ஸ்பாட்டுக்குப் போன ஸ்டேஷன் போலீசிடம் கேட்க, "அப்படி ஏதும் இல்லை சார்.. நான் அங்க தான் இருக்கேன்.." என்று தகவல் வந்திருக்கிறது.

என்னதான் விஷயம் என்று நாங்களும் குழம்பி நிற்க சமூக சேவகர் அப்போது பரபரப்பாக வந்தார். "வந்துட்டாங்களா? அந்த தளவாய்புரம் ஆக்சிடென்ட்?" என்றார். உங்களுக்கு யார் சொன்னார்கள் என்று நான் கேட்க, "இங்க நீங்க தானே பேசிக்கிட்டு இருந்தீங்க, அதனால நான் தான் ரிப்போர்ட்டர்ஸுக்கே சொன்னேன்" என்றார். "அடப்பாவி நாய் குறுக்கே வந்தவர் வேற.. தளவாய்புரம் பேஷண்ட் வேற" என்று பேசிக்கொண்டிருந்த உதவியாளர்கள் சொல்ல, அசடு வழிந்தார் சமூகம். அவரைத் திட்டியவாறே சென்றார்கள் பஸ்சைத் தவறவிட்ட செவிலியர்கள். என்ன நடந்தது என்று பின்னோக்கி விசாரிக்கையில் தான் தெரிந்தது, சமூகம் கிளப்பி விட்ட புரளி தான் இது என்று.

இப்படி ஒரு சிறிய புரளியால் கிட்டத்தட்ட நூறு பேரை அன்று சுற்றலில் விட்டுவிட்டார். வேகமாகச் செய்தியைப் பகிர வேண்டும் என்ற ஆர்வம்தான் இத்தனைக்கும் காரணம். இப்படிப் பொதுவான செய்தி என்றில்லாமல் தனிப்பட்ட மனிதர்களின் உடல் நலம் குறித்த செய்திகளும் றெக்கை கட்டிப் பறக்கின்றன. இந்த கொரோனா காலகட்டத்தில் பிடிக்காதவர்கள், தொழில் போட்டியாளருக்கு எல்லாம் கொரோனா தொற்று ஏற்பட்டு விட்டதாக வதந்தி பரப்பி அது சம்பந்தப்பட்டவரை மற்றவர்கள் ஒதுக்கும் அளவுக்குப் போய் காவல் நிலையங்களில் புகார் ஆகியது பல ஊர்களிலும் நடந்தது. ஆரோக்கியத்திற்காக நடைப்பயிற்சிக்குப் போகிறவர்கள் பற்றி இவருக்கு சுகர் பிரஷர் இருக்கிறது என்று பேசப்படுகிறது.

மேலை நாடுகளில் மற்றவர் விஷயங்களில் அனாவசியமாக யாரும் தலையிடுவதில்லை. நம் நாட்டில் நட்பாக இருப்பதும், தகவல் பரிமாற்றமும் கஷ்டத்தில் இருப்பவருக்கு உதவியாக இருக்கும் வரை நல்லது. அதுவே அந்த எல்லைக் கோட்டைத் தாண்டி விட்டால் ஆபத்தில் முடிந்துவிடும். எங்கள் அண்டை சிறு நகரம் ஒன்றில் ஒரு பெண் வேறு பிரச்சனைக்காக வயிற்றுக்கு ஸ்கேன் எடுக்கச் சென்றிருக்கிறார். அதில் அவருக்கு ஒரு கிட்னி தான் இருக்கிறது என்று ரிப்போர்ட் வந்திருக்கிறது. உண்மையில் அவருக்கு அது பிறவிக்குறைபாடு. ஆறு விரல், பிறவி ஊனம் போன்று ஒரு சிறுநீரகம் உருவாகவே இல்லை. இதனால் அவருக்கு பாதிப்பு ஏதும் கிடையாது. இருக்கும் ஒற்றை சிறுநீரகமே உடல்நலத்துக்குப் போதும். சரியான நபரிடம் அந்த ரிப்போர்ட்டைப் பற்றி விவாதித்திருந்தால் உண்மை புரிந்திருக்கும். அந்தப் பெண், 'எனக்கு நான்கு வருடம் முன்பு குறிப்பிட்ட மருத்துவமனையில் குழந்தைப் பேற்றுக்காக சிசேரியன் செய்தார்கள். அப்போது ஒரு கிட்னியைத் திருடி விட்டார்கள் போலும்' என்று யாரிடமோ தன் சந்தேகத்தைக் கூறியிருக்கிறார். இந்தச் செய்தி செவி வழியாகச் சென்று ஊர் முழுவதும் பரவி விட்டது. ஒரு வக்கீல் இதைக் காவல் நிலையத்தில் புகாராகப் பதிந்திருக்கிறார். பெரிய விசாரணை நடைபெற்று கிட்னி திருட்டு நடக்கவில்லை என்று உறுதியாகியிருக்கிறது. சினிமாக்களில் காட்டுவது போல அப்படி எளிதாகக் கிட்னி திருட முடியாது. நிறைய வசதிகள் உள்ள அறுவை அரங்கில் தானம் வழங்குபவரும் தானம் பெறுபவரும் அருகருகே மேஜைகளில் படுக்க வைக்கப்பட்டு இரண்டு அணி மருத்துவர் செவிலியர்கள் ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சையைத் துவங்குவார்கள். ஒருவர் உடலில் இருந்து அகற்றப்பட்ட உடனேயே மற்றவருக்கு சிறுநீரகம் பொருத்தப்பட்டு விடும். மூளைச்சாவு அடைந்தவரின் உடலுறுப்புகளை தானம் செய்யும் போது கூட, ஏர் ஆம்புலன்ஸ், அதிவேக ஆம்புலன்ஸ் மூலம் ஒரு இடத்திலிருந்து அடுத்த இடத்துக்கு உறுப்புகள் மிகவேகமாகக் கொண்டு செல்லப்படும். செயின் திருடர்கள் போல பல கிட்னிக்களை ஒன்றாகத் திருடி வைத்துக்கொண்டு அதை வேறு யாருக்கும் பொருத்திவிட முடியாது. தானம் பெறுபவர், கொடுப்பவர் இருவரின் ரத்த வகை உள்ளிட்ட பல விஷயங்கள் ஒத்துப் போகிறதா என்று பலகட்டப் பரிசோதனைகளைச் முன்கூட்டியே செய்திருக்க வேண்டும்.

அந்தப் பெண்ணுக்கு சிசேரியன் செய்யப்பட்டபோது குழந்தையை ஆரோக்கியமாக வெளியே எடுப்பதும், கர்ப்பப்பையைத் தைத்து மீண்டும் உள்ளே பொருத்துவதுமே முக்கியக் கட்டங்கள். சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு அடிவயிற்றில் நீளமாகக் கீறி அதில் தையல் போட்டிருப்பார்கள். கிட்னி இருப்பது பின் முதுகில் விலா எலும்புக்குக் கீழே. அந்தத் தையல் வேறு மாதிரி இருக்கும். இத்தகைய புரிதல்கள் எதுவுமே இல்லாமல் வீண் வதந்தி கிளம்பி பல குழப்பங்கள் ஏற்பட்டது.

இந்த விவகாரம் வெடித்த நேரம் சிசேரியன் செய்த மருத்துவர் வேறு விஷயமாக வெளியூர் சென்றிருக்க, அவர் ஊரில் இல்லாததால் 'கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்கள் தலைமறைவானார்கள்' என்ற செய்தியும் உலா வந்தது. அந்த மருத்துவர் ஊர் திரும்பி, நான் எங்கேயும் போகவில்லை அந்தச் செய்தி பொய் என்று போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டியது ஒரு தனிக் கதை!
 

Author: siteadmin
Article Title: வதந்'தீ'!!
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom