• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நெஞ்சம்-4

Kasavu

Member
Joined
Apr 29, 2025
Messages
44

நெஞ்சம்-4

மதுரை திருநகர் பகுதியில் உள்ள ராம் காட்டேஜ். பேராசிரியர் சாகேத் ராமின் பங்களா வீடு. இரண்டு தளங்களில் படோடோபமாக இருந்த போதும், பக்கவாட்டில் பங்களாவோடு ஒட்டியிருந்த ஒற்றை படுக்கை அறை போர்ஷனில் தான் சாரு மதி இருந்தாள்.

நாற்பதின் பின் அகவையிலிருந்த போதும், முடி நரைக்க வில்லை, ஒற்றை சரீரமாக நெளி முடியுடன் நளினமாகவே இருந்தாள். அவளின் தங்கைகள் இருவரும், பிள்ளை பெற்று சுராய்காய் மேனியைப் பெற்றிருக்க, கடைக் குட்டி யமுனா, மூவருக்கும் நடுவில் பூசினார் போல் மேனி கொண்டவராக, தலைமை ஆசிரியைக்கான மிடுக்குடன் இருந்தாள். சாருவுக்குத் தங்கையைப் பார்த்து எப்போதும் பெருமை தான்.

ஓட்டுப் பள்ளியில் உயர்ந்து வளர்ந்து நிற்கும் புளியமரத்துப் பிஞ்சுகளை அக்காவுக்காகக் கொண்டு வந்திருந்தாள் யமுனா. அதைப் பார்க்கவும், பெரியவளுக்குச் சுவை நீர் ஊற சிறுபிள்ளையாய் , “அப்பா, அந்த மரத்து புளியம் பிஞ்சு, தனி ருசி தான்” என வாங்கிக் கொண்டாள்.

“சின்ன பிள்ளையாட்டம், இன்னும் இந்த பழக்கத்தை விடலை அக்கா” என ஆச்சரியப்பட,

“தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும். முந்தி அப்படியே சாப்பிடுவேன், இப்போ சட்னி அரைச்சு, தொக்கா செஞ்சு வச்சுக்குறேன், அவ்வளவு தான் வித்தியாசம். புளியங்காய் பறிக்கிறது எவ்வளவு சிரமம் தெரியுமா, எவ்வளவு குதிச்சாலும் எட்டாது. சந்துருவை பறிச்சு குடுடான்னா, ரொம்ப பண்ணுவான்” இயல்பாகப் பேசிக் கொண்டே போக,

“ இந்த மெமரீஸ்காகத் தான், உன்னை அந்த க்ரூப்ல சேர்த்து விடுறேன்னு சொல்றேன். நீ வேணாங்குற” எனத் தங்கை நொடிக்க,

“ ம்ப்ச், வேண்ம்டி. என் மேல பாசத்தை காட்டுறேன்னு எதாவது சொல்லுங்க, அதெல்லாம் மனசுக்குக் கஷ்டம் தான் “ என்றாள்.

“ இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படியே வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து இருப்ப. இந்த கூட்டை வெளியே வா” யமுனா வலியுறுத்த,

“ எனக்கு இதுவே பழகிடுச்சு. வெளியே வரவே கால் நடுங்குதுடி” எனவும்

“ அந்தாள் உனக்குப் பயத்தையும், தயக்கத்தையும் கொடுத்து, உன் வாழ்க்கையவே வீணடிச்சிட்டார்” சின்னவள் பொரும,

“ அப்படி சொல்லாதடி. நீங்க மூணு பேரும் வாழுற வாழ்க்கை அவர் பணத்தால் வந்தது. அந்த நன்றியை மறக்கக் கூடாது” என்றாள்.

“ அதுக்கு தான், நீ உன் வாழ்க்கையவே தொலைச்சிருக்கியே. போக்கா” எனக் கண்கலங்க,

“ இந்த பேச்சை இத்தோட விடு. அவன் காதில விழுந்தா, உன்னையும் உள்ளே விட மாட்டான்” என மெல்லச் சொல்ல,

“ அவன் யாரு, என்னை உள்ளே விட மாட்டேன்னு சொல்ல. இது என் அக்கா வீடு” அவள் சத்தமாகச் சொல்ல,

அவள் வாயைப் பொத்தி,” பேசாமல் இருடி.” என அதட்ட, யமுனா அக்காவை முறைத்தாள்.

பின் கொஞ்சி, கெஞ்சித் தான் செய்த பலகாரத்தைச் சாப்பிடக் கொடுக்க,

“ வேண்டாம் போ” என்றாள்.

இந்த வீட்டுச் சிறையை விட்டு, தன்னோடு வந்து விடச் சொல்லி, யமுனா எவ்வளவோ வற்புறுத்தியும் சாருமதி வர மறுத்து விட்டாள்.

தங்கைகள் அவரவர் வாழ்வைப் பார்க்கட்டும், தான் அவர்களுக்குச் சுமையாக இருக்கக் கூடாது என்ற எண்ணம்.

உணவு, உடை, உறைவிடம், காசு பணத்துக்குக் குறைவில்லை. அந்த ஒரு போர்ஷன் மட்டுமே அவளுக்குச் சொந்தம். அதுவும் அனுபவ பாத்தியதை மட்டுமே. அப்படித் தான் உயில் எழுதி வைத்துச் சென்றிருந்தார், ப்ரபஸர் சாகேத்ராம், அவளின் பெயரளவு கணவன். அவரை சொல்லியும் குற்றமில்லை, ஏனெனில் இது அவள் வலிந்து ஏற்றுக் கொண்ட பந்தம்.

மூர்த்தியின் குடும்பத்துக்கு ஐந்து பெண்களோடு பிறந்த ஆண் பிள்ளை சந்துரு இருந்ததால், அவன் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டான். அப்படிப் பட்ட ஆண் மகவாக விக்கிரமன் குடும்பத்தின் பொறுப்பை ஏற்றது சாருமதி தான்.

அவளுக்குப் பின் மூன்று பெண் பிள்ளைகள் இருக்க, மீனாட்சி அம்மாள் கிளம்பிய சிறிது காலத்திலேயே காச நோய் பாதிக்கப்பட்டு விக்கிரமன் காலமாகி இருந்தார்.

அம்மா கோமளா, தொடர்ந்து தேநீர்க்கடையை நடத்தலாம் எனப் பார்த்தால், பெண்மக்களாக இருப்பவருக்குப் பாதுகாப்பு இல்லாமல், ஆடவர் பார்வை அவர்கள் மேல் தவறாகவே பட்டது. அதனால் டீக்கடையை விட்டு, கோமளாவும், சாருவுமாகச் சமையல் வேலைக்குச் சென்றனர்.

மற்ற பெண்களும் பத்தாவது முடித்து, தையல் சம்பந்தமான வேலைகளில் ஈடுபடக் கடைசி தங்கையை மட்டும் படிக்க வைத்தனர்.

சாருவுக்கு சில சம்பந்தங்கள் வந்த போதும் குடும்பச் சூழலைக் காரணம் காட்டி அவள் மறுக்க, அடுத்தவள் கீதாவுக்கு தங்களிடமிருந்த சொற்ப நகைகளைப் போட்டு திருமணத்தை நடத்தி வைத்தனர். அடுத்தடுத்து சீர் செய்முறை, பிரசவம், பிள்ளைப் பேறு என அம்மாவும் மகளும் வாங்கிய கடன் கழுத்தை நெறித்தது.

அடுத்தவள் வேணிக்கும் திருமண வயது வந்தது. வறுமையிலிருந்தாலும் பிள்ளைகள் அவர்கள் அம்மாவைக் கொண்டு அம்சமாகவே இருக்க, அவர்களைப் பேணி பாதுகாப்பதே பெரிய வேலையாக இருந்தது

சந்துரு வீட்டில் பாரதி மரணம், மாலதி காதல் மணம் என இருந்த சமயம், தன் மகள்களும் அப்படிச் சென்று விடுவார்களோ என கோமளாவுக்கு பயம். ஆனது எல்லாம் ஆகட்டும் என வரன் தேட ஆரம்பிக்க, அப்போது தான் தரகர் மூலம் சாகேத்ராம் க்கு பெண் கேட்டு சாருவுக்குச் சம்பந்தம் வந்தது.

கோமளா கொதித்து விட்டார். என் மகளை விட இருபத்தஞ்சு வயசு மூத்த ஆளுக்குப் பெண் கேட்கிறீங்களே. ஒன்னும் இல்லாதவங்கன்னா அவ்வளவு இளக்காரமா? எனப் பொரிந்து தள்ளினார்.

“ நான் ஒன்னும் உங்களைக் கட்டாயப் படுத்தலை. பொட்ட பிள்ளைகளை வச்சு தடுமாறி நிக்கிறீங்களேன்னு சொன்னேன்.

ப்ரபஸர் பணக்காரர், அவரை பார்த்துக்க ஆள் வேணும். மற்ற பொண்ணுங்க கல்யாணம் படிப்பு, பணத் தேவையை அவர் பூர்த்தி செய்வார். முப்பத்தி சொச்சம் வயசு ஆன பொண்ணை இனி யாரு வந்து கட்டப் போறா. இது நல்ல சான்ஸ். உபயோகபடுத்திக்க பாருங்கள்” என அறிவுறுத்த கோமளா வேண்டாம் என்றார்.

சாகேத் ராம் ஆஸ்திரேலியாவில் பேராசிரியராக இருந்தவர், விருப்ப ஓய்வும், ஆஸ்திரேலிய மனைவியிடமிருந்து விவாகரத்தும் வாங்கி வந்தவருக்கு, சமைத்துப் போட்டு வீட்டையும் அவரையும் தனதாகப் பராமரிக்கப் பெண் தேவைப் படடது. இந்தியாவில் திருமணமின்றி ஒரு பெண் உடனிருப்பது சாத்தியமில்லை என்று சொல்லவும், ஒப்பந்த திருமணத்தைச் சொன்னார்.

அவருடைய கண்டிசனுக்கு பெண் கேட்டால், பெண் வீட்டார் தன்னை அடிக்க வருவது உறுதி எனத் தரகருக்கும் தெரியும். அதனால் தான் வறுமையும், வயது மூப்பும் உள்ள பெண்ணான சாரு மதியைக் கேட்டார். கோமளாவே இவ்வளவு கோபப் பட, திரும்பி நடையைக் கட்டினார். ஆனால் தன் குடும்பச் சூழலுக்கும், மனதின் நிலைக்கும் பேராசிரியரின் நிபந்தனைகள் சரி என்று படவே, சாருமதி தானே தரகரிடம் பேசி, சாகேத் ராமையும் சென்று சந்தித்தாள்



அவளை ஏற இறங்கப் பார்த்தவர், “ எனக்கு பேமலி லைஃப் ல இன்ட்ரெஸ்ட் இல்லை. எனக்கு சில ஹெல்த் இஸ்யூஸ் இருக்கு, அதுக்காகவும், இதோ என் தம்பி பையன் ரஜினீஸ், அவனை வளர்க்கிறதுக்காகவும் ஒரு லேடி வேணும்” என்றார்.

“ அப்போ சம்பளம் போட்டு கொடுங்க. காலத்துக்கும் நான் நன்றியோட வேலை செய்யிறேன்” என்றாள்.

“வேலைக்கு வர்றவளை நான் கட்டாயப் படுத்த முடியாது. இந்திய மனைவிகள், கணவனுக்கு கட்டுபட்டு லாயலா இருபாங்கன்னு சொன்னாங்க. அதனால தான் நான் இதுக்கு சம்மதிச்சேன். இது ஒரு வழிப் பாதை. இதுக்குள்ள வந்திட்டேனா, நான் உயிரோட இருக்கிற வரை நீ வெளியேற முடியாது” என்றார்.

அவள் அதிர்ந்து நிற்க, “ அதுக்கு பதிலா உனக்கு எவ்வளவு பணம் வேணுமோ, நான் தர்றேன்” என்றார்.

கீதாவுக்கு, திருமணத்தின் போது பத்து பவுன் போடுவதாகச் சொல்லி, ஐந்து தான் போட முடிந்தது. அதில் மீதி இருக்க அடுத்து வேணி, யமுனா என வரிசை கட்டி நின்றனர். அவள் உள்ளது உள்ளபடி உரைத்தாள்.

“ ஓகே, ஆளுக்கு இருபது பவுன். உன் அம்மாவுக்குத் தேவையான பணம் டெபாசிட் பண்ணிடுவோம். அதுக்கப்புறம், நீ இங்கே தான் இருக்கனும். ஒரு நாள் கூட வெளியே விட மாட்டேன்” என்றார்.

“சரி “ என ஒப்புக் கொண்டாள். சொன்னபடி அவள் குடும்பத்துக்கு செய்தவர், அவளுக்கும் தங்கத்தில் கொடியோடு தாலியை கோர்த்து போட்டார். உண்மையில் அது சருமதியை மனதளவில் வெகுவாக கட்டித் தான் போட்டது. வினோதமான வியாதி கொண்டவர், குடியில் தன்னை மறந்து, விவாகரத்தான மனைவியாக அவளை பாவித்து திட்ட, சகலத்தையும் பொறுத்துக் கொண்டாள்.

கடந்த பதினைந்து வருடங்களாக, கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டு, பதினைந்து வயதிலிருந்த ரஜினீஷுக்கும் கேர் டேக்கராக இருந்தாள். இருவரும் அவளை வேலைக்காரியாக மட்டுமே பார்த்தனர்.

கடந்த வருடம், சாகேத், இவ்வுலகை விட்டுச் செல்ல கணக்கற்ற சொத்துக்களுக்கு ஒரே வாரிசாக ரஜினீஸ் ராம் இருந்தான்.

சாகேத்தின் உயில் படி, ஒற்றை போர்ஸன் மட்டுமே சாரு மதிக்குக் கொடுக்கப்பட்டது. பங்களாவுக்குள் விநாயகர் கோவிலும், பறவைகளும் உண்டு. வேலையாட்கள் வைத்துச் செல்வர், சாகேத் இருக்கும் வரை அது மட்டுமே சாருவின் உலகம். அவர் சென்ற பின்பும், சாரு அதை மாற்றிக் கொள்ள முயலவில்லை.

ரஜினீஷ் அவள் மீது பாசத்தைப் பொழியாவிட்டாலும், விட்டேற்றியாய் இருந்தாலும் , இன்று வரை பெரியப்பாவின் சொல்லுக்காக சாருமதியை வைத்துப் பராமரித்து வருகிறான். அவளுக்கு முடியாத போது மருத்துவரை வரவழைப்பது முதல், மளிகை, காய்கறி எல்லாமும் அவள் விருப்பப்படி வந்து விடும். இந்த ஓட்டுப் பள்ளிக் கூடம் புனரமைப்புக்காக சாருமதி பேரில் சில லட்சங்களை கொடுத்ததும் அவன் தான். ஆனால் அவனிடம் சாருமதியும் கூட உரிமை பாராட்டுவது அவனுக்குப் பிடிக்காது.

அவனுக்கு பயந்து மற்ற தங்கைகள், இங்கு வரமாட்டார்கள். யமுனா மட்டும் அக்கா அறியாமல் அவனை எதிர்த்தும் பேசுவாள். அப்போதும் ஒரு முறைப்போடு கடந்து விடுவான்.

அக்காவை ரீயுனியனுக்கு வரவழைக்க வேண்டும் என்ற முடிவோடு வெகு நாட்களாகப் படையெடுக்கிறாள். இன்று வரை அதன் பலன் பூஜ்ஜியம் தான்.

தங்கையின் அமைதியைக் கலைக்கவென, “ என்னடி, உன் ஓட்டுப் பள்ளிக் கூட ரீ யூனியன் எப்படி போகுது” என வினவ,

“ அதென்ன, உன் ஓட்டுப் பள்ளிக் கூடம், நீயும் அதில தான் படிச்சிங்க, நினைப்பு இருக்குல்ல” எனவும்

” அது எப்படி மறக்க முடியும். நம்ம கவலைகள் தெரியாமல், சந்தோஷமா பொழுதை கழிச்ச நாட்கள் அது தானே” என பெருமூச்சு விட்டாள்.

“ அந்த சந்தோஷ நினைவுகளை மலர்த்திக்க தான் அக்கா, வான்னு சொல்றேன். நம்ம பக்கத்து வீட்டில் இருந்தாங்கல்ல சநதிராக்கா, அவங்க ரொம்ப ஆர்வமா இருக்காங்க” எனச் சேதி சொல்ல ஆரம்பிக்க, சாரு காது கொடுத்து கேடாகலானாள்.

“ நேத்து, சந்துரு அண்ணாவை க்ரூப்ல சேர்த்து விட்டாங்க” என ஆரம்பித்தவள், அவன் செய்த சேட்டிங்குகளை போட்டோவை சாருவிடம் காட்ட, கை நடுங்க வாங்கி பார்த்தவள், “ கொஞ்சம் உடம்பு போட்டுடுச்சு. கண்ணாடி எல்லாம் போட்டுட்டான்” எனக் கண்ணில் நீரோடு அவன் நிழற் படத்தைப் பார்த்தாள்.

“ ஆமாம், உனக்கு அவர் பரவாயில்லை, க்ருப்லையாவது சேர்ந்தாருன்னு பார்த்தா, காலையில் ஆளை காணோம். க்ரூப்பை விட்டு எஸ்ஸாகிட்டார்” அவள் குறைபட,

“ தனிச்சு இருக்கவங்களுக்கு, மத்தவங்களை பார்க்கச் சங்கடமா தான் இருக்கும் யமுனே.” எனக் காரணம் சொல்ல,

“ உங்களை யார் தனியா இருக்கச் சொன்னதுங்கிறது தான், என் கேள்வி.”
எனவும், மூத்தவள் முறைக்க, “என்னமோ போங்க. “ என்றவள்,

“ சரி அது இருக்கட்டும், மீட்டுக்கு அப்புறம், சந்திராக்கா பேமலி, நம்ம பேமலி இரண்டு பேருக்குமான ஒரு ட்ரிப் ப்ளான் பண்றோம். உங்க ரிசார்ட் புக் பண்ணலாமா. கேட்டு சொல்லுங்க” என்றாள்.

“ இது எதுக்குடி, யார், யார் வராங்க” எனக் கேட்க,

“ பாரதி பொண்ணு சரயூ யூஜி முடிச்சிட்டா, கீதாக்கா பையன் நரேனுக்கு பேசலாமான்னு பார்க்கிறோம்” என்றாள்.

“ இன்டர்கேஸ்ட், அவங்க ஒத்துக்குவாங்களா” சாரு ஆச்சரியமாகக் கேட்க,

“ராஜாத்தி மாமி தான், என் கிட்ட கேட்டாங்க. நானும் கீதாட்ட பேசிட்டேன். எல்லாருக்கும் ஓகே தான்.” என்றாள்.

“பொண்ணுக்கும், பையனுக்கும் பிடிக்குதான்னு கேட்டு செய்யிங்க. மத்த எல்லாத்தையும் விட அது தான் முக்கியம்” சாறு சொல்ல,

“கட்டாயம் அக்கா, அந்த பொண்ணுக்கு சந்துரு அண்ணா தான் கார்டியன் , தன் மகளை மாதிரி தான் வளர்க்கிறார். அவ சம்மதம் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டார். அதுக்கு தான் பெமிலியா பழக ஒரு சான்ஸ் குடுக்கலாமேன்னு தான், அரேஞ்சு பண்ணலாம்னு பார்த்தேன். பாவம் தாயில்லாத பொண்ணு, பாரதி அக்கா மகள், நம்ம வீட்டுக்கு வந்தா, நாம பார்த்துக்கலாம்” சென்டிமெண்டாக சொல்ல, சாருவும் உருகி விட்டாள்.

“இதுவரைக்கும், அவன் கிட்ட எதுவுமே கேட்டது இல்லை.” எனத் தயங்க,

“பணம் குடுத்துடலாம் அக்கா. நீயும் வரணும். அதுக்காக தான், உங்க ரிஸார்ட்டை கேட்குறேன்” என்று சொல்ல,

“நானுமா” என அதிர்ந்து நின்றாள் சாருமதி.

பிறழ்வு கண்டது அவள் நெஞ்சம்.
 

Author: Kasavu
Article Title: நெஞ்சம்-4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
222
தங்களின் வாழ்க்கையை
தங்கள் குடும்பத்திற்கு
தியாகம் செய்த இரு
தன்னலமற்ற ஜீவன்கள்
திரும்பவும் பார்த்தால்
தொலைத்த வாழ்க்கை
திரும்ப கிடைக்குமா😭
 

Kasavu

Member
Joined
Apr 29, 2025
Messages
44
தங்களின் வாழ்க்கையை
தங்கள் குடும்பத்திற்கு
தியாகம் செய்த இரு
தன்னலமற்ற ஜீவன்கள்
திரும்பவும் பார்த்தால்
தொலைத்த வாழ்க்கை
திரும்ப கிடைக்குமா😭
kidaikumaa??????????
 
Top Bottom