Kasavu
Member
- Joined
- Apr 29, 2025
- Messages
- 44
நெஞ்சம்-3
சந்துருவின் அப்பா மூர்த்தி மதுரை ஆண்டாள் புரத்தில் பஞ்சு மில் தொழிலாளியாக வேலை பார்த்தவர். அக்காள் பானுமதி , அவனோடு பிறந்த இரட்டை சந்திரமதி, அதன் பின் பாரதி, மாலதி, பாகீரதி ஐந்து பெண்மக்களையும், அவனையும் பெற்றெடுத்த மகராசி அம்மா ராஜாத்தி. குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரத்தை எல்லாம் ஒதுக்கி, அரை டஜன் பிள்ளை பெற்றவர். அதற்குக் காரணம் , அவன் அப்பா ஒற்றை பிள்ளை. அடுத்து ஒரு அத்தையோ, சித்தப்பாவோ வரும்முன் அவன் தாத்தா சிவபதவி அடைந்திருக்க, அப்பத்தா மீனாட்சியின் ஆசைப்படி வீட்டில் பிள்ளைகள் நிறைந்தன. மாமியார் மெச்சும் மருமகளாய், கணவனுக்குப் பிரியமான மனைவியாய், பிள்ளைகளுக்கு நல்ல அம்மாவாக ,வரவுக்குள் சிக்கனமாகச் செலவு செய்யத் தெரிந்த இல்லத்தரசியாக இருந்தார் ராஜாத்தி.
பேரன் பேத்திகளோடு சென்னை வந்த புதிதிலேயே மீனாட்சியம்மா சொர்க வாசியாகி இருக்க, அவர் கையில், கழுத்தில் போட்டிருந்த நகையை புதுப்பித்து, மூத்த மகள் பானுமதியை மதுரையில் சொந்தத்துக்குள் திருமணம் செய்து கொடுத்தனர். அவளுக்கு வரிசையாக சீர் செய்து, பிரசவம் பார்த்து முடிக்க, இரண்டாவது சந்திரமதிக்கு, சென்னையில் அவர்களை போல் குடி பெயர்ந்த குடும்பத்து வரன் தயாளனோடு திருமணத்தை நிச்சயித்தனர். அப்போதே சந்துரு வேலைக்கு செல்ல ஆரம்பித்து இருந்தான்.
சந்திரமதி திருமணத்துக்கு முன்பு மூர்த்தி திடீரென மாரடைப்பால் காலமாக, ஏற்பாடு செய்த இரண்டாவது மகளின் திருமணத்தை நடத்த முடியாமல் மேலும் மூன்று பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு கலக்கத்துடன் நின்றார் ராஜாத்தி.
மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிது என்பது போல் , சந்துரு குடும்பத்தின் பொறுப்பான ஆண் பிள்ளையாக, சந்திராவுக்கு அப்பா நிச்சயித்த மணமகன் தயாளன் குடும்பத்தில் பேசி தனது இரட்டையின் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி வைத்தான். சிறு வயதிலேயே சந்துருவுக்கு குடும்பத்தின் மீது உள்ள பற்றை பார்த்தே, தயாளன் குடும்பம், திருமணத்துக்குச் சம்மதித்தது. அது முதலே சந்துருவுக்குத் தயாளன் துணை நின்றார். அவன் துபாயிலிருந்த போது, மூன்று பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் மாமியாருக்குத் துணையாக அவர்களுக்கு அருகிலேயே குடி அமர்ந்தார்.
பாரதிக்கு மணவாழ்க்கை சுகமானதாக இல்லை. சந்தேக புத்திக் காரனிடமிருந்து அவளை மீட்கப் போராடினர். பல போராட்டங்களுக்குப் பிறகு தங்கையை மீட்ட சந்துரு, அம்மாவின் கவலையும் மீறி, தங்கை பிறந்த வீட்டிலேயே இருக்கட்டும் என அவளுக்கு ஆதரவாக நின்றான். அதில் மனம் குளிர்ந்தவள், நிம்மதியாகப் பிள்ளையைப் பெற்று, இவ்வுலகில் போராடத் தெம்பு இல்லாமல் நித்திய உறக்கத்துக்குச் சென்றாள்.
பாரதி மறைவுக்குப் பின் அவர்கள் வாழ்வில் சில வருடங்கள் இருண்ட காலம். சந்துருவும் எதிலும் பிடிப்பு இல்லாமல் போனது. பாரதிக்கு முடித்து, சந்துருவுக்குத் திருமணம் செய்யவேண்டும், பெண் கொடுத்து, எடுப்பது போல் இருந்தால், மாலதிக்கும், சந்துருவுக்குத்தாக இரட்டை திருமணம் செய்யலாம் எனப் பார்த்துக் கொண்டு இருந்த நேரம் பாரதியின் மறைவு குடும்பத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்து மாலதி திருமணம் பற்றியே பேச்சே இல்லாமல் போக, அக்கா மகளைப் பார்த்துக் கொண்டே தன் காலம் கடந்து விடுமோ என் பயந்த மாலதி, வீட்டுக்கும் தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டாள்.
ராஜாத்தி தன் வளர்ப்பில் குறை என மனம் நொந்துபோனார். சந்துருவுக்கு , தங்கை ஒரு வார்த்தை சொல்லி இருந்தால், தானே செய்து வைத்திருப்பேனே என்ற ஆதங்கம். ஆனாலும் அப்படியே விட முடியாமல் , அம்மாவையும், வீட்டினரையும் மச்சான்களையும் சரி கட்டி, சம்மதிக்க வைத்து, மாலதிக்கும் சீர் செய்தான். இன்றும் அவள், பிறந்த வீட்டோடு சற்று விலகலோடு தான் இருந்து வருகிறாள்.
கடைக் குட்டி ரதிக்குத் திருமணம் செய்யும் முன், சென்னையின் புறநகர்ப் பகுதியில் கீழும், மேலுமாக வீட்டைக் கட்டி, அம்மாவை கீழேயும், சந்திரா, தயாளன் வகையில் வசந்தை மாப்பிள்ளையாகப் பார்த்து, ரதிக்கு திருமணம் முடித்து மாடியில் குடி வைத்தனர். மகன் சம்பாத்தியத்தில் மகள்களுக்கு பேரன் பேத்திகளுக்கு குறைவில்லாமல் சீர் செய்த ராஜாத்திக்கு, மகன் தனி மரமாக நிற்பது மனதை அரித்தது.
மாலதி திருமணத்துக்குப் பின்பு இருந்தே ராஜாத்தி மகனைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திக்கொண்டே தான் இருந்தார். ஆனால் சந்துரு பேச்சைத் தட்டிக் கழித்தே வந்தான்.
சமீபமாக , சரயுவுக்கும் மணம் முடித்துக் கொடுத்து விட்டால், தனக்குப் பின் மகனைக் கவனிக்க, அவனுக்கென்ன ஒரு ஜீவன் வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்தது. மகள்களைக் கூப்பிட்டு வைத்துப் பேசினார்.
“ அவன் வயசுக்குத் தக்க ஒரு பொண்ணை பாருங்க விவாகரத்து ஆன பொண்ணு, விதவையா இருந்தாலும் பரவாயில்லை. எனக்கு அப்புறம் அவனை பார்த்துக்க ஆள் வேணும்” என்றார்
“ ஏன்மா, எங்க மேல நம்பிக்கை இல்லையா” என தங்கைகளும்,
“ மாமாவை நான் பார்த்துக்குவேன்” சரயுவும் எமோஷனலாக சொல்ல, அவர் பேசாமல் பார்த்திருந்தார்.
“ அம்மா சொல்றது வேற. நம்ம பார்க்கலாம், ஆனால் எத்தனை நாளைக்கு. ப்ராக்டிகலா யோசிக்கனும்” என வலியுறுத்திய சந்திரமதி,
“முதல்ல , அண்ணனை இந்தியா வரவழைப்போம். “ என்றாள்.
“ எனக்கென்னமோ, அண்ணன் இதுக்கெல்லாம் ஒத்துக்கும்னு தோணலை. தேவையில்லாமல் இன்னொரு பொம்பளையை கொண்டு வந்து விசயத்தை காம்பிளிகேட் பண்றீங்கன்னு தோணுது. “ என்றாள் மாலதி.
“அண்ணன் ஒத்துக்க மாட்டார் தான், அதுக்காக அப்படியே விட முடியுமா” என ரதியும்,
“ அப்படி என்ன காம்பிளிகேஷன். இத்தனை வருஷமா நமக்காக வாழ்ந்தான். இனிமேலாவது தன் வாழ்க்கையை வாழட்டும்.” சந்திரா சொல்ல,
“ வாழட்டும் மீன்ஸ், ஐம்பது வயசுக்கு அப்புறம் அவர் புள்ளை பெத்து, யார் வளர்க்கிறது. சரயுவை வளர்க்கும் முன்னாடியே எல்லாருக்கும் நாக்கு தள்ளி போச்சு” மாலதி சொல்ல, சரயுவின் முகம் கூம்பிப் போனது.
“ என்னை மாமா வளர்கலையா, அது மாதிரி நான் அவர் பிள்ளையை வளர்த்துத் தருவேன்” என்றாள் ரோசமாக.
“ ம்க்கும் நடக்கிற கதையைப் பேசு. முதல்ல நீ கல்யாணம் கட்டிக்கிட்டு உன் குடும்ப வாழ்க்கையை நல்லபடியா பார்த்துக்கிட்டாலே போதும். “ மறுபடியும் சுறுக்கெனச் சொல்ல,
“ மாலதி, அண்ணனைப் பத்தி தானே பேச்சு, நடுவில் இவளை எதுக்கு இழுக்குற” ரதி கேட்க,
“ இவ அம்மா, புகுந்த வீட்டில் நல்லபடியா குடும்பம் நடத்தியிருந்தா, அண்ணனுக்கும் அப்பவே கல்யாணம் நடந்திருக்கும். எனக்கும் லவ் மேரேஜ் பண்ணிகிட்டேன்கிற கெட்ட பேர் வராமல் இருந்திருக்கும்” என்றாள் மாலதி
“ போனது போகட்டும். இனி நடக்கிறதை மட்டும் பேசுவோம். சந்துருவுக்குக் கட்டாயம் ஒரு துணை தேவை. அம்மாவுக்குப் பிறகு, அவனுக்கு முடியாதபோது தோள் சாயவாவது ஒரு ஆள் வேணும்.” சந்திரா வாதாட
“ அப்படி ஒருத்தி கனவில் தான் வருவா. ப்ராக்டிகலா யோசிக்க சொன்னேல்ல, நானும் அதையே தான் சொல்றேன். இனிமே ஒருத்தி அண்ணா குணத்தைப் பார்த்தா வரப் பேறா? அவர்கிட்ட இருக்கப் பணத்துக்காகத் தான் வருவா. சந்துரு அண்ணாவைக் கவர் பண்றது ரொம்ப ஈஸி. உருக்கமா பேசி, கண்ணை கசக்கினா உருகிடுவார். எல்லா சொத்தையும் அபேஸ் பண்ணிடுவா” என்றாள் மலதி.
“ அவனை பார்த்துக்கிறவளுக்கு சொத்தை கொடுத்தாலும் தப்பில்லை”. ராஜாத்தி சொல்ல,
“ அப்புறம் உங்க இஷ்டம்” என மாலதி கிளம்ப, போனில் இவர்கள் வாதங்களை கேட்டுக் கொண்டிருந்த பானுவும், “ மாலதி சொல்றதிலையும் பாயிண்ட் இருக்கு.” என்றாள்.
“ முதல்ல அண்ணன் இந்தியா வரட்டும். அப்புறம் ஒரு முடிவெடுப்போம்” என ரதி பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தாள்.
சந்துருவுக்குத் திருமணம் செய்து வைப்பதில், சந்திரா, ரதி குடும்பம் உறுதியாக இருந்தது. சரயுவுக்கும் மாமாவையும், அம்மாச்சியையும் தனியாக விட்டுச் செல்ல மனமில்லை. மூவரும் கூட்டாக சந்துருவுக்குப் பெண் பார்க்க ஆரம்பித்தனர்.
சந்திரா உடன் பிறப்பை நன்கு அறிந்தவள், அவனுக்கு ஏற்ற பெண்மணியைத் தேடிக் கொண்டு இருக்க, எதேச்சையாக ஓட்டுப் பள்ளிக் கூடம் ரீ யுனியன் வந்தது. யமுனாவுடன் பேசியதில் சில விவரங்கள் தெரிய வந்தது. அவள் சரயுவுக்கும் வரன் சொல்ல, அதை வைத்து ஒரு திட்டம் தீட்டினாள்.
வாட்ஸ் க்ரூப்பில் சந்துருவை இணைத்து விட்டு, அவன் பதில்களைப் பார்த்த படி மகிழ்ச்சியாக இரவு தூங்கச் சென்ற சந்திராவுக்கு, காலையில் அந்த க்ரூப்பிலிருந்து அவன் விலகிய நோட்டிபிகேஷன் வர, கடுப்பானாள்.
‘ க்ருப்பை விட்டா வெளியே போறே? ரீ யுனியனுக்கும் உன்னை வரவழைக்கிறேன், அதுக்கு அடுத்த மூணு நாள் ட்ரிப்புக்கும் நீ வர்ற. என் ப்ளான்லிருந்து எப்படி நீ எஸ்ஸாகுறேன்னு நானும் பார்க்கிறேன்” என உடன் பிறந்தவனுக்காக உறுதியான சங்கல்பம் எடுத்துக் கொண்டாள்.
சந்துருவின் மனம் ரீ யூனியனுக்கு முன் செல்வதா, பின் செல்வதா என ஊசலாடிக் கொண்டு இருந்தது. ஆனாலும் விதி வலியது, இதோ ராஜாதியம்மாளுக்கு லேசான நூலிழை எலும்பு முறிவு, இன்னும் ஒரு மாதம் கழித்து பயணத்தைத் தள்ளிப் போட நினைத்தவன், முன்னே வரவேண்டிய நிலமையானது. தான் வரும் வரை அம்மாவை மருத்துவமனையிலேயே வைத்திருக்கச் சொல்லி விட்டு, மூன்றாம் நாள் கிளம்பி விட்டான்
அவன் வரும்முன்பே, சகோதரிகளுக்குள் அவன் வாழ்வைப் பற்றி இரண்டு வகையான கருத்துக்கள் இருந்தது. சித்தன் போக்கு, சிவன் போக்கு என இருக்கும் அவன் வாழ்வில் மாற்றங்கள் வருமா?
கவலையில் உழன்றது அவன் நெஞ்சம்.
Author: Kasavu
Article Title: நெஞ்சம்-3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: நெஞ்சம்-3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.