Kasavu
Member
- Joined
- Apr 29, 2025
- Messages
- 44
நெஞ்சம்-15
அடுத்த நாள் காலையில் உணவுக்குப் பின் எல்லோரையும் அரங்கில் கூட்டினான் ரஜினீஷ் ராம். சந்துருவும், சாருவும் சாந்தமாக அமர்ந்திருக்க, சரயு மட்டும் தவிப்பாகப் பார்த்திருந்தாள். சரயு டைரியை படித்து அழுத்திருப்பாளே என வந்த ரஜினீஷ், மூத்த ஜோடிகள் சங்கமத்தைப் பார்த்து மனம் நிறைந்தான். வந்த சுவடு தெரியாமல் கிளம்ப முனைய, சாரு சுதாரித்து, அவனை அழைத்து விட்டாள்.
“சாரிமா, சரு தூங்கிட்டாளானு பார்க்க வந்தேன்” என்றான். அதில் குழம்பிய, சந்துரு, “ஏன், சரயுவுக்கு என்ன? மறுபடியும் கால் வழியா” என வினவ,
சாரு சமாளிக்கப் பார்த்தாள்.
“இல்லை சாரும்மா, எதையும் மறைக்க வேண்டாம், அவளும் அதை விரும்பல” சந்துருவிடம் தன் பரிச்சயம் முழுதும் சொல்ல,
“முழுசா சொல்லி முடிங்க” என அமர்த்தலாகவே கேட்டான்.
“சந்துரு, ப்ளீஸ் தப்பா எடுத்துக்காத” என உள்ளே ஓடியவள் கண்ணனின் டைரியை எடுத்து வந்து கொடுக்க, தங்கையைப் பற்றிய அவள் கணவனின் காதல் கவிதைகள், இருபக்கத்துக்கு மேல் அவனால் படிக்க முடியவில்லை. ரஜினீஷ் பக்கத்தைப் புரட்டி,”இதை மட்டும் படிங்க” எனக் காட்ட,
“என்னால முடியல, நீயே சொல்லு” எனவும் , சுருக்கமாகச் சொன்னான்.
பாரதி கண்ணன் வாழ்க்கையின் மற்றொரு கோணம், காதலித்தவன் ஆயிற்றே, சந்துருவால் கண்ணனின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், இதுமட்டும் இல்லை, வேறு ஏதோ , தன் அம்மா மறைகிறார் எனத் தோன்றியது.
“சரயு, இதெல்லாம் வாசிச்சாளா” கவலையாகக் கேட்க, சாரு தேற்றினாள்.
ரஜினீஷ், தன் தாத்தாவைப் பற்றிச் சொல்லி, காலையில் நடந்ததையும் சொல்ல. “ஒருநாள் எத்தனை அதிர்ச்சியை குடுப்பிங்க. கேப் விட்டு அடிங்க” எனப் புலம்பினான்.
“இவுங்க கல்யாணம்” சாரு கேட்க,
“அதிலேயே நில்லு” என்றவன்,
“சரயுவை நீ உன்மையாவே விரும்புறதா இருந்தா, எனக்குச் சம்மதம்” என்றான்.
“தாங்ஸ் பா” என்றான் ரஜினீஷ், சந்துருவைக் கட்டிக் கொண்டு, அப்பா என்ற சொல் உள்ளே உருக்கி விட்டது..
இதோ இன்று காலையில் சரயுவின் குடும்பத்தை கூட்டிவிட்டான் அந்த ரக்கடு பாய். சரயுவை மணக்க அவள் குடும்பம் முன் சம்மதம் கேட்டு நின்றான்.
ராஜாத்தி அம்மாவுக்கு, சாருவுக்குச் செய்த பாவத்துக்கு அவள் மகனுக்குச் சரயுவை மணமுடித்துக் கொடுத்து நேர் செய்து கொள்ளலாம். அவன் மூலமே சாருவையும் சரிக்கட்டி சந்துருவுக்கு மணமுடித்து வைத்துக் கொள்ளலாம் என்ற திட்டம்.
எல்லோரும், எங்கெங்கோ கிளம்பும் யோசனையில் இருக்க, “ ஒரு நிமிஷம். நான் கொஞ்சம் பேசனும்” என்றான் ரஜினீஷ்.
“ உங்க கல்யாண விசயமா தம்பி, சாரு சொல்லுச்சு” என்றார் தயாளன்.
“ அது எப்படி நீங்களா முடிவு பண்ணுவீங்க” பானுவின் கணவன் எகிற,
“ எல்லார் சம்மதத்தோட தான் கல்யாணம் நடக்கும். கவலை படாதீங்க. ஏன்னா அது தான் என் மாமன் மகளோட இஷ்டம். உரிமையா, எல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்சு கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசை பட்டா” சரயுவைப் பார்த்துக் கொண்டே சொல்ல.
“ரஜ்ஜு, இத அப்புறம் பேசலாமே” யமுனா தடை போட முயன்றாள்.
ராஜாத்தி, “ உங்கம்மா சாரு, உனக்காக பொண்ணு கேட்டான்னு சந்துரு சொன்னான். சரயு அவன் வளர்ப்பு, நீ சந்துருவை மட்டும் சம்மதிக்க வச்சா போதும்” என வாயை விட்டார். சந்துரு எதிர்வினையே காட்டவில்லை.
“ சொல்லுங்க மாப்பிள்ளை, என்ன விசயம்” எனத் தயாளன் மறைமுகமாக தன் சம்மதத்தை ரஜினீஷ்க்கு தெரியப் படுத்தினார்.
“ சரயுவைக் கல்யாணம் பண்ணிக்க, நாட்டார் வழக்கப்படி எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. நான் யாரையும் கேட்கனும்கிறதே இல்லை. அவளை கடத்திட்டு போயி கல்யாணம் பண்ணாலும் செல்லும்” என வழக்கமான ரக்கடு பார்வை பார்க்க, சரயு அவனை முறைத்தாள்.
“ கூல் பேபி. அது தான் நான் உன் ஆசையை நிறைவேத்துறேன்னு சொல்லிட்டேன்ல” என்றவன்,
“ நான் சாரும்மாவோட வளர்ப்பு மகன்.ப்ரபசர் சாகேத்ராமோட தம்பி பையன், இதைத் தவிர இன்னொரு அடையாளமும் இருக்கு” அவன் சொல்ல
“ அப்படினா, நீங்கள் யார் பாட்ஷாவா. சொல்லுங்க” என மாலதி மகன் கேலி பேச அவன் அம்மா மண்டையிலேயே ஒன்று போட்டாள். அதில் சிரித்தவன்,
“ அப்படி தான். அந்த ரேஞ்சுக்கு தான் உங்க வீட்டில் என் மாமாவை பில்டப் பண்ணி வச்சிருந்தீங்க. சந்தேகபுத்திகாரன், கொடுமைக்காரன்னு” என்று சொல்லவுமே மொத்த குடும்பத்துக்குமே புரிந்தது.
“ எஸ் , கண்ணன் திருமேனி என் மாமா. சொந்த ஊர் பன்றிமலை. நீங்க நிக்கிற இந்த ரிசார்டே அவரோட இடம் தான். நான் அவரோட அக்கா மகன் ரஜினீஷ் ராம்” என பிற் கதையையும் சேர்த்துச் சொல்ல,
ராஜாத்திக்கு அதிர்ச்சி எனில், அவரின் நான்கு பெண்களும் சாருவைக் கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.
“ உனக்கு தெரிஞ்சு மறைச்சு இருக்க.”
“யமுனா நீயும் இதில் கூட்டா.”
“ நாங்க இங்க வந்திருக்கவே கூடாது.”
“பாரதியை அந்த ராட்சன்கிட்ட உயிரோட பலி கொடுத்தோம்.”
“ சரயு, நீ இங்கிட்டு வா.”
“சந்துரு, நீ எதாவது சொல்லு, சாரு கேட்டான்னு சரின்னு சொல்ல வேண்டிய அவசியம் நமக்கு இல்லை.”என மாற்றி, மாற்றி சகோதரிகள் சொல்ல,
“ நான் சொல்றதை முழுசா கேளுங்க” என வாதாடினான் ரஜினீஷ்.
இதுவரை அமைதியாக இருந்த சந்துரு எழுந்து அம்மாவிடம் வந்தவன், “ அம்மா, பாரதி விசயத்திலும் நீங்க மறைச்சது ஏதாவது இருக்கா. இருந்தா உடைச்சு சொல்லுங்க. உங்க பேத்தியோட வாழ்க்கை அதில அடங்கி இருக்கு. அவள் இவ்வளவு நாள் நினைச்சது ஒன்னு, அப்பாவோட டைரி வேற ஒன்னை சொல்லுது. அவளுக்கு ரஜீனீஷை பிடிச்சிருக்கு. ஆனாலும் வளர்த்த பாசம், கடமை அவளை தடுக்குது. என்னை மாதிரி குற்ற உணர்ச்சியோட அவளையும் வாழ விட்டுறாதீங்க ப்ளீஸ்” என உருக்கமாகப் பேச,
“ நான் என் பொண்ணோட வீக்னசை மறைச்சேன்டா. அதுவும் அவ நல்லதுக்காக, மாசமா இருக்க பொண்ணை காப்பாத்தனுமேன்னு. மனசளவுள பாதிக்கப் பட்டு இருந்தா. அவனுக்கும் சொல்லிப் புரிய வைக்க முடியலை. இரண்டும் எதிர் எதிர் துருவமா நின்னதுங்க. டைவர்ஸ் வாங்கி கொடுத்தாளே ஆச்சுனு பாரதி ஹிஸ்டீரியா வந்து கத்த ஆரம்பிச்சுட்டா. டி என் ஏ செய்யனும்னு பிடிவாதம் பிடிச்தும் அவ தான். டாக்டர் அவ போக்கில் போயி சரி பண்ணுங்க. குழந்தை பிறந்தா சரியாகும்னு சொன்னார். அதைத் தான் செஞ்சேன். பிரசவத்தையே தாண்டலையே” என அழ, சரயு ஓடி வந்து அம்மாச்சியைக் கட்டிக் கொண்டாள்.
“ இவகிட்ட நேரடியா எதையுமே சொன்னது இல்லை. இவ மனசு பாதிக்க கூடாதேங்குற பயம் தான் “ என்றார்.
“ தன்னை சமாளிக்கத் தெரியாத இரண்டு பேர் சேர்ந்து, என்னை இந்த உலகத்தில் கொண்டு வந்து எல்லாருக்கும் சுமையா வச்சுட்டு போயிட்டாங்க” சரயு அழ,
“ இல்லடி தங்கம். நூறு புள்ளை இருந்தாலும், ஒரு பிள்ளையைக் கூட அம்மா யமனுக்குக் கொடுக்க மாட்டா. என் மகளை எமனுக்கு கொடுத்துட்டு பரிதவிச்சு நின்னப்ப, நீதான் எங்களுக்கு மருந்தா இருந்தே” என்றார்.
“ சரயு என் பொண்ணு, அவ சம்பந்த பட்ட முடிவையும் நான் எடுக்கலாம்னு சொல்லிட்டே தானேமா” என உறுதிப் படுத்திக் கொள்ள,
“ ஆமாம் ராஜா. உன் முடிவு தான்” என்றார் ராஜாத்தி.
“சம்பந்தியம்மா, முறைப்படி பொண்ணு கேளுங்க. நான் என் மகளை கொடுக்குறேன்” சாருவைப் பார்த்து சந்துரு சவால் விட
“ ஹேய் ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப்” என எல்லோருமாகக் கத்தினர்.
“ என்ன? ரஜினீஷ், என் தலைவர் பேரு வச்சிருக்கார். அதுக்கே என் பொண்ணை கொடுப்பேன்” என்றான் சந்துரு.
“ டேய் மாப்ளை, முறையை மாத்தாத. பொண்ணுக்கு நீ தாய் மாமன். நாங்க நாலு ஜோடி, அப்பா, அம்மா முறைக்குத் தண்டத்துக்கா இருக்கோம். சாரு எங்களுக்கு தான் சம்பந்தியம்மா. மரியாதையா நீ அங்குட்டு போயி நில்லு” என்றார் தயாளன்.
“ எங்க அண்ணனை எதுக்கு அங்குட்டு அனுப்புறீங்க. அதெல்லாம் நாங்க விட மாட்டோம்” மாலதி முன்னே வந்து சந்துரு கையை பிடித்துக் கொண்டாள்.
“இது என்னடா. ராம்ஸ் வொண்டர் ரிசார்டுக்கு வந்த சோதனை” என்றனர் பொடியன்கள்.
யமுனா, “ நாங்க மூணு பேரும் ரஜினீஷ் பக்கம். மாப்பிள்ளை பையனுக்குச் சித்தி சித்தப்பாக்களா நிக்கிறோம். நாங்க தான் சம்பந்தி. இப்போ, நான் பொண்ணு கேட்கிறேன்” என்றாள்.
“சித்தி ஒரு நிமிஷம்” என்ற ரஜினீஷ், சந்துருவிடம் சென்று, “ எனக்கு அம்மாவா சாரும்மா கிடைச்சிட்டாங்க. அவங்க நேசிச்ச மீனாட்சியம்மா பேரன், சந்துரு எனக்கு அப்பாவா வேணும். “ என அவர் கையை பிடிக்க,
“ இது நான் முடிவு பண்ற விசயம் இல்லைபா. அவ காதலிச்ச மீனாட்சி அம்மா பேரனா தான் நான் இருக்கேன். அவ என் விக்கிரமன் மாமா மகளா இல்லையே. என்னை நம்பி, என் வருமானத்தில் குடும்பம் நடத்த வருவாளான்னு கேட்டு சொல்லு. மாமியார், நாத்தனார் கொடுமை எல்லாம் இருக்கத் தான் செய்யும்.” சந்துரு பிகு பண்ண, அவன் திரும்பி சாரும்மாவை பார்த்தான்.
அவள் எதுவும் பேசாமல் அறைக்குச் செல்ல, “ சேச்சி, சரின்னு சொல்லுங்க” எனத் தங்கைகள் பின்னாடியே சென்றனர்.
“ இருங்கடி, விக்கிரமன் மகளா வர்றேன்” என்றவள், ஐந்து நிமிடம் கழித்து, பல வருடங்களுக்கு முன் போட்டிருந்த சின்ன தங்கத் தோடு, கழுத்தில் பாசி மாலை. கையில் அவன் வாங்கித் தந்த கண்ணாடி வளையல், சாந்து,சந்தனப் பொட்டு சகிதமாக வந்தாள். சாருவை பார்த்தவர்களுக்கு, நடுவில் சில வருடங்கள் கடக்கவே இல்லையோ? எனத் தோன்றியது.
“ இதெல்லாம் எங்க இருந்தது” என மற்றவர் வியக்க,
“ மீனாட்சியம்மா பேரன் இப்படி எல்லாம் கேட்பான்னு எப்பவுமே என் கூட வச்சிருப்பேன்.” என்றாள்
ரஜீனிஷ், சாரும்மாவை அழைத்துச் சென்றவன், “ இப்போ, சாரும்மாவுக்கு ஜோடியா எனக்கு அப்பா கிடைப்பாரா. நீங்க தான் நம்ம வீட்டோட தலைவன். உங்களுக்குக் கீழே தான், அம்மா, மகன், மருமகள், அப்பத்தா. எல்லாருமே இருப்போம்” என ராஜாத்தி , சரயுவையும் சேர்த்து சந்துரு முன் வந்து நிற்க,
“ சரின்னு சொன்னா, இந்த அம்மாவை மன்னிச்சிட்டதா அர்த்தம்” என்றார் ராஜாத்தி.
“ மாமி, மகனுக்கு ஆர்டர் போடுங்க மாமி. அதென்ன மன்னிப்பு, கின்னப்புன்னு” சாரு கேட்க,
“ சரிடி அம்மா. நான் கட்டளை போடுற காலமெல்லாம் மலை ஏறிடுச்சு. நீ ஆர்டர் போடு” என்றார்.
“ சந்துரு” எனவும்,
“ என் தம்பியைப் பேர் சொல்லி கூப்பிடுற” எனப் பானு அதட்ட,
“ அப்புறம் எப்பிடி கூப்பிடுறதாம்” சாரு சிணுங்க.
ரஜினீஷை பார்த்துக் கொண்டே, அத்தான்னு கூப்பிடீங்க அத்தை” சரயு சொல்லித்தந்தாள்.
“அது நீ, என் மகனைக் கூப்பிட்டுக்கோ.” என்றவள் தயங்கி நிற்க,
“ இது சரியா வராது” என்றான் சந்துரு.
“ அப்படி சொல்லு அண்ணேன்.” தங்கச்சிகள் கோரஸ் பாட,
“முறை சொல்லி கூப்பிடுறது எல்லாம் ஓல்ட் பேஷன். என் சந்துரு என்னைக்குமே யூத். அதனால பேர் சொல்லித் தான் கூப்பிடுவேன். ஒகே தானே சந்துரு” எனக் கேட்க,
“யூத்துன்னு வேற சொல்லிட்ட , வேற வழி” என்றான்.
மகிழ்ச்சியில் திளைத்தது நெஞ்சம்.
Author: Kasavu
Article Title: நெஞ்சம்-15
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: நெஞ்சம்-15
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.