Kasavu
Member
- Joined
- Apr 29, 2025
- Messages
- 44
நெஞ்சம்-12
சந்துரு மருமகளைப் பூப் போல் தாங்கி, முன்சீட்டில் அமர்த்தி விட்டு கதவைச் சாத்த, ரஜினீஷ் சீட் பெல்ட்டை மாட்டி விடும் சாக்கில், “ சாரி பேபி, ரொம்ப வலிக்குதா” வினவ,“ ரொம்ப ஜாலியா இருக்கு” எனப் பல்லைக் கடித்தாள்.
“ அத்தான் வாங்க” வெளியே நின்று சந்துரு தயாளனை அழைக்க
“ உனக்குப் பதிலா அவரை கட்டலாம் போல, எத்தனை தடவை அத்தான் போடுறாரு பாரு. எங்க நீ கூப்பிடு” வம்பிழுக்க,
“ போடா ரக்கடு” என்றாள்.
“ அதுலையாவது வாடான்னு சொல்றியாடி” என நலுக்கு படாமல் சொல்லி விட்டு, மாமன், மச்சினன் ஏறவும் வண்டியைத் துள்ளலோடு கிளப்பினான்.
“ சஹானா சாரல் தூவுதோ” ரஜினி மெலோடிஸ் பாடல் போட
“ இவன் ஹிஸ்டிரி, உங்களுக்கும் தெரியுமா. ஊருக்கு போற வரைக்கும் ரஜினி பாட்டு தான் நமக்கு” தயாளன் சொல்ல,
“ அவர் பேரே ரஜினி தான் அத்தான். ரஜினீஷ் ராம்” என்றான் சந்துரு. சரி தான் என்றவர் வழி நெடுக, மச்சினனை வாரிக் கொண்டே வந்தார்.
“ பெரியப்பா, மாமாவை இவ்வளவு வம்பிழுக்குறீங்களே.இவர் லவ்வர் யாருன்னு கண்டுபிடிச்சு கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாம்ல” அவள் கேட்க,
“ உன் அம்மா கல்யாணம் முடியவும், இவனுக்குத் தான் பார்க்கிறதா இருந்தோம். உன் அப்பன் ஒரு லூசுப் பய, அவனோட ஓரியாடவே பொழுது பத்தாமல் போச்சு” எனவும், ரஜினீஷ் உடல் விறைத்தது.
அது தானே அவளுக்கும் தேவை ,”ஏன் பெரியப்பா. விரும்பி தானே அம்மாவைக் கல்யாணம் பண்ணாரு. அப்புறம் என்ன” அவள் பேச்சுக் கொடுக்க,
“குட்டிமா, இப்போ எதுக்கு இந்த பேச்சு” என்றான் சந்துரு.
“ இல்லை மாமா. எனக்கு தெரியனும். அம்மாச்சி சித்தி, பெரியம்மா எல்லாம் எமோசனலா எதுவும் சொல்ல மாட்டேங்குறாங்க. பெரியப்பாவாவது சொல்லட்டுமே “ என்றாள்.
தயாளன் பாரதி கண்ணன் கதையைச் சொல்லி, “ இது ஒரு வகை அதீதமான அன்பு. அவன் சினிமால இருந்ததால், அவுங்க கூட்டத்து ஆளுங்க, பாரதியை அழகா இருக்கான்னு சொன்னா கூட அவனால் பொறுக்க முடியாது. சீனியர் ஆளுகளை பகைக்க முடியாம , பொண்டாட்டியைத் திட்டுவான்.
அப்படியே ஆரம்பிச்ச சண்டை, அவன் சந்தேகபடுறான்னு வந்து முடிஞ்சது” என்றார்.
கனத்த மௌனம், “ உங்க ஃபேமலி மேட்டர்ல கருத்து சொல்றதுக்கு மன்னிக்கனும். தன் மனைவியை காப்பாத்திகனும்கிற நினைப்புல கூட அவர் அப்படி ரியாக்ட் பண்ணி இருக்கலாம்ல” என ரஜினீஷ் கேட்க,
“ இருக்கலாம். பாரதியும் சில விசயத்தில் பிடிவாதமா, கொஞ்சம் ஈகோவோட தான் இருப்பா. இவுக எல்லாருக்குமே அந்த கிறுக்கு உண்டு. கோவிச்சிட்டு வீட்டில் வந்து உட்கார்ந்தவ, அவன் பேசுற வார்த்தைகளைச் சொல்ல, அக்கா, தங்கச்சிகளுக்கு, எப்படி மாசமா இருக்க பொண்ண அப்படி பேச போச்சுன்னு கோபம்.
டைவர்ஸ் கொடுக்கவும் அவன் ஒத்துக்கலை. அவன் பேச்சுக்காகவே டிஎன்ஏ டெஸ்ட் பண்ணா. இதெல்லாம் தேவையில்லை. நீ இல்லாமல் நான் இல்லை வாடின்னு அழுதான். வீட்டு முன்னாடி வந்து குடிச்சிட்டு தகறார் பண்ண , அதுவே பெரிய சாட்சியா மாறுச்சு. டிவோர்ஸ் ஆச்சு. அவ பிரசவத்தில் போனா, அதுக்கு பிறகு ஆறுமாசத்தில் குடிச்சே அவனும் உயிரை விட்டான். பொண்ணாட்டி மேல பைத்தியமா தான் இருந்திருக்கான்” எனத் தயாளன். சொல்ல,
ரஜினீஷ் கண்ணில் நீர் உருண்டது. அதைக் கவனித்த சரயுவின் கண்ணிலும் அதன் பிரதிபலிப்பு.
சந்துருவுக்கு இதில் நிறைய விசயங்கள் புதிது. “மன்னிப்பு கேட்டானா அத்தான்” இறுகிய முகத்தோடு கேட்க,
“ ஒவ்வொரு தடவையும் குடிச்சிட்டு வந்து கேட்பான். அது எல்லாம் தகராறு கணக்கில் தான் சேர்ந்தது. என்னையவும் ஒரு தரம் அசிங்கமா பேசிட்டான். அதுனால நான் ஒதுங்கினேன். கல்யாணம் ஆகாத இரண்டு பிள்ளைகள் வேற இருந்ததே. அதனால தான் போலீஸ் கம்ளைண்ட் வரை போக வேண்டியதா போச்சு” என்றார்.
“ நான் இங்க இருந்திருந்தா, சரி பண்ணி இருக்கலாமோ” சந்துரு சுயபச்சாபத்தில் கேட்க
“ நீ எந்தந்த வேலையைத் தான் செய்வ. விதி, விட்டுத் தள்ளு.” என்றவர் “ ஹான், இப்ப தான் ஞாபகம் வருது. கண்ணனோட ஊரு இதுதான்” என்று சொல்ல
“ இருந்துட்டு போகுது விடுங்க. அம்மாக்கு தெரிஞ்சா , இந்த ஊர்ல கூட இருக்கக்கூடாது கிளம்புன்னு பிடிவாதம் பிடிப்பாங்க. குடும்பமா வந்துருக்கோம். நாமளா தேடிப் போகாத வரை, அவுங்களுக்கு நம்மளை தெரிய போறது இல்லை. விடுங்க” என்றான்.
“சரயுவுக்கு அவ அப்பா வழி சொந்தத்தை பாக்கனும்னு ஆசை இருக்கும்ல.” தயாளன் கேட்க,
“ எனக்கு அப்படி எல்லாம் எந்த ஆசையும் இல்லை பெரியப்பா. என்னை வளர்த்த அம்மாச்சி மனசை நோகடிக்க விரும்பலை” எனவும், ரஜினீஷ் உடல் மீண்டும் விறைத்தது.
“ அவுங்க பொண்ணை பெத்தவுங்க அப்படி தான் சொல்லுவாங்க. அந்த பக்கம் ஒரு நியாயம்,காரணம், கோணம் இருக்குமே சரயு” தயாளன் சொல்ல,
“ இப்ப என்ன, அவுங்களை தேடிப் போயி, குட்டிமாவை காட்டனும்னு சொல்றீங்களா. அப்படியே போனாலும், சொத்துக்காக வந்திருக்காங்கன்னு சொல்லுவாங்க அத்தான். பாரதி கல்யாணத்துக்கு வந்த மாமியாரும், நாத்தனாரும் அப்படி தான் பேசுனாங்க” என்றான் சந்துரு கோபமாக.
“ நான் பொதுவா தானப்பா சொன்னேன். இப்ப என்னைப் பத்தி உனக்கு ஒரு கோணம் இருக்கும், அது முக்காவாசி உன் உடன்பிறப்பு கருத்தை ஒட்டி இருக்கும். அதே என் தம்பி, தங்கச்சி, அப்பா, அம்மா வேற மாதிரி சொல்லுவாங்கல்ல. உனக்குக் கல்யாணம் ஆகாததினால் உனக்குத் தெரியலை. இது எல்லாத்துக்கும் மேல, என் பிள்ளைகளுக்கு நான் அப்பா. உயிர் கொடுத்த என்னைப் பத்தி என் பிள்ளைகளுக்குத் தெரிய வேண்டாமா. சரயுவுக்கு அந்த ஆப்சனே இல்லாமல் போச்சே. இப்ப கல்யாணத்துக்கு பார்க்குறீங்க, வளர்த்தவுங்க மனசு நோகக் கூடாதேன்னு சரின்னு மண்டையை ஆட்டும். இதே கண்ணன் வளர்த்திருந்தா, நான் இவனைத் தான் கட்டுவேன்னு பிடிவாதம் பிடிக்க முடியும்ல” அவர் விளக்க, அதிர்ந்த சந்துரு,
“குட்டிமா, பெரியப்பா சொல்ற மாதிரி, எங்களுக்காக யோசிக்காத. உன் மனசுக்கு பிடிச்சு இருந்தா மட்டும் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லு”எனவும்,
“எனக்குக் கல்யாணமே வேண்டாம்னா விட்டுடுவீங்களா” எனக் கேட்க,
“ அது எப்பிடி” என்றான்.
“ நீங்க இருக்கீங்க. கணக்குப் படி பார்த்தா, உங்களுக்குக் கல்யாணம் முடிச்சு தான் எனக்குக் கல்யாணம் பண்ணனும். “ என்று சொல்ல,
“ கிடக்கிறது எல்லாம் கிடக்கட்டும், கிழவனைத் தூக்கி மனையில் வையிங்கிற கதையா, என்னைய நிறுத்தலாம்னு பார்க்குறீங்க”
“ அதுல என்ன தப்புங்குறேன், என்ன தம்பி சொல்றீங்க ” என ரஜினீஷையும் இழுத்து தயாளன் திரும்பி ஆரம்பிக்க,
“ இந்த வண்டில நீங்க மட்டும் தான் மேரீட். எனக்கென்னமோ, நீங்கல்லாம் எப்படி தப்பிபிங்கன்னு மத்தவங்களை இழுத்து விடுற மாதிரி இருக்கு” என ரஜினீஷும் “ அதே தான். அதே தான் “ என சந்துருவும் சொல்ல,
“ கண்டுபிடிச்சிட்டீங்களேப்பா” எனத் தயாளன் சோக கீதம் வாசிக்க, மற்றவர் சிரித்தனர்.
அவர்கள் இறங்க வேண்டிய இடமும் வந்திருந்தது.
“ இது பிக்னிக் ஸ்பாட் மாதிரி தெரியலையே” என்றார் தயாளன்.
“ கரெக்ட் சார். இது ப்ரேவேட் ப்ராபர்ட்டி. மற்ற யாரும் வரமாட்டாங்க. ஆயில் மசாஜ் பண்ணிட்டு அப்படியே ஓடைல குளியலைப் போடலாம் “ என்றவன் வண்டியை நிறுத்தி விட்டு வந்து சரயு இறங்க உதவி செய்தான்.
சற்று சாய்வான பாதை, தனி, தனி ஷெட், கல்மேடை இரண்டு இருக்க, பாதி வரை கட்டிடமும்,மீதியை மறைக்கப் படுதாவும் தொங்கியது.
சந்துரு, சரயுவுக்கு உதவ வர, “உங்களுக்கு பேலன்ஸ் பண்ண முடியாது. நான் கூட்டிட்டு வரேன்” என அவன் சொல்ல, மாமனும், மச்சினனுமாக கை பிடித்தபடி இறங்கினர். இரண்டு மசாஜ் ஆட்கள் தயாராக இருந்தனர்.
சரயு, கீழே இறங்க யோசித்தாள். கதவைத் திறந்தவன், “வா” என கை நீட்ட,
“கால் வைக்கவே பயமா இருக்கு” என்றாள்.
“ சன்னாசி கை பட்டா, பத்தே நிமிசத்தில சரியாகிடும். சாயந்திரம் நீ டான்ஸே ஆடலாம். நான் தூக்கிட்டு போறேன்” என்றான்.
அவள் தயங்க, “ஆபத்துக்குப் பாவம் இல்லை” என இரண்டு கையாளும் அவளைத் தூக்க,
“ஹேய் “ என அதிர்ச்சியோடு அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். அவள் முக பாவனைகளை ரசித்துக் கொண்டே இறங்க, “வழியைப் பார்த்து நட” என ஆணையிட்டாள்.
“கட்டளை மகாராணி” எனச் சிரித்துக் கொண்டே நடக்க, திரும்பிப் பார்த்த தயாளன்,சந்துருவுக்கும் லேசான அதிர்ச்சி தான் . சின்ன புள்ளைத்தனமா கேட்கக் கூடாது, இங்கு வேறு வழியும் இல்லை என உணர்ந்து , “பார்த்து வாங்க” என்று மட்டும் சொன்னார்கள்.
சன்னாசி என்பவர், ஓங்கு தாங்காக உடல் உறுதியோடு இருந்தார்.
“வாங்கப்பு” என வாஞ்சையாக ரஜினீஷை வரவேற்க,
“நல்லா இருக்கீங்களா தாத்தா” எனக் கேட்டுக் கொண்டே வர,
“உங்க புண்ணியத்தில் சௌக்கியமா இருக்கோம்” என்றவர், கண்ணால் சங்கேதமாக ஏதோ வினவ, அவனும் நயன பாஷையில் ஆம் என்றான்.
இயற்கையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மாமன், மச்சினன் இவர்களைக் கவனிக்க வில்லை.
‘நம்ம ரிஸார்டுக்கு தங்க வந்தாங்க. சாரும்மா சொந்தகாரங்க” என ரஜினீஷ் அறிமுகப் படுத்தி வைக்க, அவர்களுக்கு வணக்கம் வைத்தவர்,
“பெத்தவுகளை பறிகொடுத்துட்டு குழந்தை புள்ளை தவிச்சப்ப, அவுக பெரியப்பாரு வந்து கூட்டிகிட்டு போனாரு. வெளிநாட்டு பொம்பளைய கட்டினவரு எப்படியோன்னு எல்லாருக்கும் கவலை. குத்து விளக்காட்டாம , அந்த அம்மா இவரையும் சேர்த்து பார்த்துக்கிச்சு” எனக் கதை அளந்தார்.
“தாத்தா, அவுங்களுக்கு தெரியும், நீங்க இந்த பொண்ணு காலை பாருங்க. மேஜையில் இடிச்சதுக்கே கால் வீங்கிடுச்சு” என்றான்.
“கல்லுல உட்கார வைங்க சாமி” என்றவர்.
“பலம் கொண்டு காலை உதைச்ச மாதிரியில்ல தெரியுது. யாரு மேல ஆத்தா அம்புட்டு கோபம்” நேரில் பார்த்தது போல் அவர் கேட்க, ரஜினீஷ் ரகசியமாக சிரித்தான்.
“என் மருமகளுக்குக் கோபமே வராதே” சந்துரு சொல்ல,
“நீங்கப் பார்க்க வந்திருக்காது.” என்றவர், “ நரம்பில் பட்டு இருக்கு சாமி கொஞ்சம் பொறுத்துக்க” என்றார்.
லெக்கின், குர்தி போட்டு இருக்க, சன்னாசி சைகை புரிந்து, ரஜினீஷ் லெக்கினை சுருட்டி விட முயல,
“ ஹேய்” என அவன் கையை தட்டிவிட்டாள்.
சன்னாசி, சந்துருவை ஒரு பார்வை பார்த்து விட்டு, “ எண்ணை தடவனும் தாயி, பேண்டை சுருட்டி விடு”என்றவர்,
“ பொம்பளை புள்ளையை அனுமதி வாங்கிட்டு தான் தொடனும். இல்லையினா உங்க பேரு கெட்டுப் போகும்” அறிவுரை சொல்ல,
“ சரிங்க தாத்தா” என்றான்.
“ புள்ளைத் தெளிவு தான். நல்ல வளர்ப்பு ஐயா. நீங்க என்ன வேணும்” எனத் தயாளனிடம் பேச்சுக் கொடுக்க, அடுத்து மடை திறந்த வெள்ளமாய் அவர் பேச ஆரம்பித்தார்.
அவள் காலை எண்ணெய் போட்டு உருவிக் கொண்டே, “ அம்மினி எப்படி? வலியைத் தாங்கிடுமா” எனப் பேச்சுக் கொடுக்க, அவர்கள் சரயுவின் சரித்திரத்தையே சொன்னார்கள்.
ரஜினீஷ் அவள் அருகிலேயே தயாராக நின்றான். பேசிக் கொண்டே ஒரு விரலை வெடுக்கென வர்ம புள்ளியில் இழுக்க, “ அம்மா” என ரஜினீஷின்
கையை இறுகப் பற்றி, அவன் மேலே சாய்ந்து விட,
“ குட்டிமா” என சந்துரு பதற,
“ ஒன்னும் இல்லை. சரியாகிடும்” என்றவர், காலை மெல்ல அமுக்கி விட , வலி நிவாரணம் பெற்று அவள் முகமும் தெளிவாகி இருந்தது. சூடாக வைத்திருந்த மூலிகை பாலை அவளுக்குக் குடிக்கக் கொடுக்க , வாங்கி மடக்கு மடக்கெனக் குடித்தவள்,
“ என்ன தாத்தா செஞ்சிங்க. வலி போயிடுச்சு” எனக் காலை ஆட்டி பார்த்துக் கொண்டாள்.
“அது மந்திரம் சொல்லக் கூடாது” என்றார்.
சட்டென வயிற்றைக் கலக்க, “தாத்தா, என்ன கொடுத்திங்க” எனக் கலவரமானாள்.
“ ஒன்னும் இல்லை ஆத்தா” என்றவர்,
“ குழந்தை, புள்ளைக்கு வயித்த கலக்கும். நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போ. பொன்னி இருக்கா” என்றார்.
“அவுங்க இருண்டு பேருக்கும் மாசாஜ் பண்ணுங்க. “ என்றவன்,
காரிலிருந்து டர்கி டவல் இரண்டை கொண்டு வந்து தந்துவிட்டு, அவளை அழைத்துச் சென்றான்.
சந்துரு,”நானும் வர்றேன்” என எழ,
“பாதுகாப்பான இடம் தான் சாமி. என் சம்சாரம் உள்ளுக்கு இருக்குது, பயப்படாதீங்க” என்றார்.
மற்றொரு ஆளும் வந்து சேர, தயாளனுக்கும், சந்துருவுக்குமாக, ஊர்க் கதையெல்லாம் பேசிக்கொண்டே ஆயில் மசாஜ் செய்தனர்.
ரஜினீஷ், சரயுவை அந்த பெரிய வீட்டுக்கு அழைத்துச் சென்று, ஒரு அறையைத் திறந்து விட்டான். உள்ளே கழிவறை வசதி இருந்தது. வயிறு கலக்கிய அவசரத்தில் அவள் எதையும் கவனிக்காமல் சென்று விட்டாள்.
சற்று பொறுத்து, முகத்தில் நீரடித்து புத்துணர்வோடு வெளியே வந்தவள், அங்கே போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்தாள்.
ரஜினீஷ், தட்டு நிறையத் துண்டு போடப்பட்ட பழங்களோடு வந்தான்.
“தாங்க்ஸ், நிஜமாவே பசி” என எடுத்துக் கொண்டவள், அறையில் மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களைப் பார்த்து,
“இது யார் வீடு” என வினவ,
“விதியை பார்த்தியா, ஓனரே, இது யார் வீடுன்னு கேட்கிற. உனக்கு அவரை அடையாளம் தெரியலையா” என்றான்.
இல்லை எனத் தலை ஆட்டியவள், அவன் பேச்சின் பொருள் புரிந்து, தொண்டைக் குழி அடைக்க , “என் அப்பாவா” எனக் கேட்டாள்.
ஏனெனில் தயாளன் பேசியதில், கண்ணன் மீதிருந்த அபிப்ராயம் மாறி இருந்தது. கண்ணில் நீரோடு, படத்தின் அருகில் சென்று தடவிப் பார்த்தாள்
புகைப்படத்திலேயே, செழுமையாய், கூர் கண்களோடு மிரட்டிக் கொண்டிருந்தான், ரஜினீஷை போலவே.
“நான் பார்த்ததே இல்லை” என்றாள்.
மூச்சடைப்பது போல் இருக்க, “போகலாம்” அழுகையோடு சொல்ல,
“உன் அப்பாவைப் பத்தி தெரிச்சுக்க வேண்டாமா” என்றான்.
“தெரிஞ்சு, என்ன பண்ண போறேன். அது தான் சந்தேக புத்திக்காரன், கொடுமைக்காரன்னு பட்டம் கொடுத்து இருக்காங்களே” அவள் விம்மி அழ ,
சட்டென அணைத்துக் கொண்டான். “எனக்கு மட்டும் ஏன் இப்படி விதிச்சு இருக்கு” என அரற்ற,
“அழாதடி, என் வாழ்க்கையும் அப்படி தான்.” என்றவன், அவளை ஒரு கப்போர்ட பக்கம் அழைத்துச் சென்று, திறந்து காட்டினான்.
அவள் அப்பா, அம்மா திருமண புகைப்படம், திருஷ்டி படும் அழகோடு இருந்தார்கள்.
இரண்டு ஆல்பம் இருந்தது , ஒன்று திருமண ஆல்பம். மற்றொன்று அவர்கள் தனிப்பட்ட படங்கள். தேனிலவு சென்ற போது , மனைவியை ரசித்து விதவிதமாக எடுத்திருந்தான்.
ஒரு டைரியை அவளிடம் நீட்டியவன், “அவர் எடுத்த போட்டோக்கள் தான், அவருக்கு வினையா முடிஞ்சிருக்கு. பொறுமையா வாசிச்சு பாரு” எனத் தந்தவன், மணியைப் பார்த்து,
“தாத்தாவை பார்த்துட்டு வந்திடலாம்” என அழைத்து சென்றான். திருமேனியப்பன், மேனி வற்றிக் கிழிந்த நாராகக் கட்டிலில் கிடந்தார்.
“தாத்தா , யார் வந்திருக்கா பாருங்க. உங்க பேத்தி . கண்ணன் மாமா மகள் சரயு” என அவன் குனிந்து சொல்ல,
அரை மயக்கத்திலிருந்தவர், “ம்ம்” என அவசரமாக எழ முயன்றார்.
“மெதுவா” என அவன் தூக்கி விட, சரயு உரிமையாய் வந்து அவர் கையை பிடித்தாள்.
“நான் கானா காணலையே, என் ஆத்தா, என்ன பெத்தவளே” என அவள் கன்னம் வழித்துக் கொஞ்ச, சரயு நெகிழ்ந்து அழுதாள்.
“ அழகுபெத்த பேத்தியை , இத்தனை வருஷம் பார்க்காமல் இருந்திருக்கேன் பாரு. நான் பண்ணப் பாவம்” என அழுதவர்,
“உன் அப்பன் மேல இருக்க கோவத்தில, அவன் கல்யாணத்துக்குக் கூடப் போகலை. அதுக்கும் சேர்த்து, தெய்வம் மொத்தமா தண்டிச்சிடுச்சு ஆத்தா” என , தன் தவறுகளை எல்லாம் சொல்லி, பாரதியை தன் வீட்டுக்கு அழைத்து வந்திருக்க வேண்டும் என வருந்தி, பேத்தியிடம் பாவ மன்னிப்பு கேட்டார். சரயுவுக்குப் பேச, வார்த்தைகளே வரவில்லை.
“சாகறதுக்குள்ள உன்னை பார்த்துட்டேனே , என் கட்டை கைலாசம் போயிடும்” என்றவர், “ உன் அத்தை மகன். நாங்க செஞ்ச பாவத்துக்கு, அவனும் பெத்தவுகளை இழந்துட்டு ஒத்தையா நிக்கிறான். எந்த சாமி புண்ணியமோ, இரண்டு பேரும் நல்ல இடத்தில் வளர்ந்துட்டிங்க. என்னைக்கும் நீங்க இரண்டு பேரும் நல்லா இருக்கனும். என் வம்சம் தழைக்கனும்” வேண்டுதலாக வாழ்த்துக் கூறினார்.
“ அவுங்க, மாமா, அம்மச்சிகிட்ட பேசு அய்யா, நான் வந்து மன்னிப்பு கேட்கிறேன்” எனத் தாத்தா சொல்ல,
“இல்லை வேண்டாம். அம்மா குடும்பம் உங்க மேல ரொம்ப வெறுப்பா இருக்காங்க.” அவள் பதட்டமாகச் சொல்ல,
“நான் பார்த்துக்கறேன் தாத்தா. நீங்க ரெஸ்ட் எடுங்க. நம்ம ரிஸார்டுல தான் தங்கி இருக்காங்க, நாளைக்கும் கூட்டிட்டு வரேன். அவுங்க மாமாவும் வந்திருக்கார்” என விவரம் சொல்ல,
“கூட்டிட்டு வா அய்யா, நான் மன்னிப்பு கேட்கிறேன்” என்றார்.
“இருக்கட்டும் தாத்தா, நான் மாமாகிட்ட பேசி, அப்புறம் கூட்டிட்டு வரேன் தாத்தா” அவளும் சொல்ல, பிரிய மனம் இல்லாமல், ரஜினீஷை பெட்டகத்தைத் திறக்கச் சொல்லி, தன் அம்மா போட்டிருந்த பரம்பரை சங்கிலியை அவளுக்குப் போட்டு விட்டார். அவள் மறுக்கப் போக, ரஜினீஷ் எதுவும் சொல்லாதே எனக் கண்ணைக் காட்டினான்.
உணர்வு குவியலாய் அவள் நெஞ்சம்.
Author: Kasavu
Article Title: நெஞ்சம்-12
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: நெஞ்சம்-12
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.