• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நினைவெல்லாம் நீயே 16

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
84
நினைவெல்லாம் நீயே 16

காலையில் சீக்கிரம் எழுந்து வந்த விலாசினி ரூபாவின் ரூம் திறந்திருந்ததை பார்த்ததும் நேராக "என்ன ரூபா ரெடியா" என கேட்டு கொண்டே நுழைந்தவரை காலியாக இருந்த ரூம் தான் வரவேற்றது.

பாத்ரூம் கதவை வெளிப்பக்கம் தாழிட்டு இருப்பதை பார்த்து யோசனையோடு பால்கனி பக்கம் சென்று பார்க்க அதுவும் உட்புறமாக தாழிட்டிருந்தது.

பெரும் குழப்பத்தோடு "ரூபா..ரூபா..எங்க இருக்க டி.."
பல முறை கூப்பிட்டும் பதிலில்லாமல் போக..வேகமாக மாடிக்கு போய் தேடி விட்டு கீழே வந்து ஹால், வீட்டுக்கு வெளியே, கார் என எல்லா இடங்களிலும் நடந்தபடி தேடியவர் எழுப்பிய சத்தத்தால் ஹாலில் தூங்கி கொண்டு இருந்த ராணி வேகமாக எழுந்ததும் பார்த்தது விலாசினியின் கோப முகத்தை தான்.

"ரூபா எங்க..நீ பார்த்தியா..எங்க போறேன்னு உன் கிட்ட எதாவது சொன்னாளா.."

"இல்லயே மா..நான் பாப்பாவை பாக்கலையே..நேத்திக்கு ராத்திரி சாப்பாடு குடுக்கும் போது பார்த்தது தான்..அதுக்கு பிறகு..தோ..இப்ப தான் எந்திரிக்கறேன்.."

"சாப்பாடு குடுக்கும் போது எதாவது சொன்னாளா.."

"இல்ல மா...காலைல சாலட் சாப்பிடும் போது கூடவே மாதுளை ஜுஸ் வேணும்னு கொண்டு வெக்க சொன்னாங்க..அதை கொண்டு வெச்சேன்..அவ்ளோ தான் மா..."

"ஏய்..நீ இங்க தானே தூங்கிட்டு இருந்த..கதவு திறக்கற சத்தம் கூட உனக்கு கேக்கலையா..இல்ல கேக்காத மாறி கம்முனு படுத்துட்டு இருந்தீயா...உனக்கு தெரியாம அவ எங்கயும் போயிருக்க முடியாது.."

"என்னை ஏமாத்தணும் பாக்காதே..ஏமாத்த முயற்சி செஞ்ச நடக்கறதே வேற..ஒழுங்கா உண்மைய சொல்லு..இல்ல போலீஸ்ல உன் பேர்ல புகார் குடுத்திடுவேன்...உன்னை ஜெயிலில தள்ளிடுவேன்.."

"மா..எனக்கு எதுவும் தெரியாது..நீங்க எங்க வேணாலும் புகார் சொல்லிக்கோங்க..எனக்கு பயமில்ல..யார் வந்து கேட்டாலும் நான் தைரியமா பதில் சொல்வேன்.."

ராணி பேச்சால் கோபமடைந்த விலாசினி அவளை அடிக்க கை ஓங்க ஓங்கிய கையை பிடித்த ராணி.."நீங்க அடிக்க கை ஓங்கினா..பதிலுக்கு நானும் அதை செய்வேன்.."

"என்னை அடிக்கற தைரியம் உங்களுக்கு எப்டி வருது..ஹான்...நீங்க ஒண்ணும் என்னை வேலைக்கு வெக்கல.."

"பாப்பா நடிக்கறேன்னு சொல்லி நேரத்துக்கு சரியா சாப்பிடாது..நீங்களும் அதை கவனிக்க மாட்டீங்க..அதனால பாப்பாவ கண்ணும் கருத்துமா நேரத்துக்கு சாப்பிட வெச்சு பாத்துக்கிடணும்னு தம்பிங்க என் கிட்ட பல முறை கேட்டுக்கவே தான் நான் வந்தேன்.."

"நான் இங்க வேலைக்கு தான் வந்திருக்கேன்..அதுக்கு சம்பளம் தம்பிங்க தான் தராங்க..நீங்க இல்ல..நீங்க எனக்கு மோதலாளியும் இல்ல.."

"என்னை அடிமை மாதிரி நடத்தறது, கை ஓங்கறது..மிரட்டறதுனு உங்க வெத்து ஜம்பம் எல்லாம் வேணாம்.." என சொல்லி விலாசினியின் வாயை அடைத்து விட்டு ராணி உடனே விலாசினியின் பெரிய பையனை அழைத்து நடந்தது அனைத்தையும் சொல்லி விட்டு குளிக்க போனாள்.

அடுத்த நிமிடம் விலாசினியின் போன் அடிக்க எடுத்தவர் "என்ன மேடம் ரெடியா கிளம்பியாச்சா.." என்ற குரலால் இயல்புக்கு வந்து "ரூபாக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லங்க..ஜுரமா இருக்கு..டாக்டர் பாத்துட்டு இருக்காரு.. சாயந்திரம் நாலு மணிக்குள்ள வந்திடுவோம்..."

"பாத்துக்கங்க..மேடம்..சொன்ன டைம்க்கு மேல போச்சுனா அப்பறம் நாங்க வேற யாராவது செலக்ட் செஞ்சிடுவோம்..அப்பறம் நீங்க கோவப்பட கூடாது..அதுக்கு ரைட் கிடையாது...." என லேசான மிரட்டலோடு ஃபோன் வைக்கப்பட..விலாசினி தளர்ந்து போய் உட்கார்ந்து கொண்டார்.

ரூபா திடீரென காணாமல் போனது, போலீஸ், புகார் என்ற வார்த்தைகளை கேட்டு அங்கு வேலை செய்து கொண்டு இருந்த வேலைக்காரர்கள் தங்களது வேலையை நிறுத்தி விட்டு ஸ்வாரஸ்யமாக நடப்பதை பார்க்க ஆரம்பித்தனர்.

அதை எதையும் கவனிக்க முடியாது தன் ஃபோன் எடுத்த விலாசினி தன்ராஜ்க்கு அழைத்து பெருங்குரலில் ஓஓ என அழுது கொண்டே "அண்ணா..அண்ணா..
என் பொண்ணை காணோம்..
அண்ணா..உங்க தங்கச்சியோட பிள்ளையை காணோம்..அண்ணா.." என கதற ஆரம்பித்தார்..

"மா..காலைல ஃபோன் பண்ணி கதற அளவுக்கு என்னாச்சு..ரூபா எங்க போனா..உனக்கும் அவளுக்கும் ஏதாவது வாக்குவாதமா.."

"பதட்டப்படாம மொதல்ல அமைதியா உக்காரு..வீடு முழுக்க தேடினியா..மொட்டை மாடில பார்த்தியா..வீட்டுக்கு பக்கத்துல எங்காவது போயிருக்காளா பாரு.."

"எல்லாம் இடமும் பாத்தாச்சு..எங்கயும் இல்ல..சண்டை எல்லாம் எதுவும் இல்ல..அண்ணா..எப்பவும் போல சாதாரணமா தான் பேசிட்டு காலைல எழுப்புனு சொல்லிட்டு தூங்க போனா.."

"காலைல எழுப்ப போய் பாத்தா..ஆளை காணோம்..
யாராவது அவளை கடத்தியிருப்பாங்களா..எதுக்கும் போலீஸ்ல கம்ப்ளையிண்ட் குடுத்திடலாமா..அண்ணா.."

"எனக்கு என்ன பண்றதுனே தெரியல..பைத்தியமே பிடிச்சிடும் போலிருக்கு..தனியா இருந்தா யோசிச்சே இன்னும் குழப்பம் தான் வருது..கொஞ்சம் நீங்க அண்ணியோட இங்க வர முடியுமா?"

"சரி மா..பதட்டபடாம இரு..வீட்டுல வேலை செய்யறவங்க இருக்காங்களா..அவங்க இருந்தா எல்லாரையும் எங்கயும் போகாம வீட்டுலேயே இருக்க சொல்லு..இன்னும் கொஞ்சம் நேரத்துல நாங்க வரோம்.." என்றவர் அங்கு வந்த மனைவியிடம் சுருக்கமாக நடந்ததை சொல்லி அவரை உடனே கிளம்ப சொல்லி தானும் கிளம்ப ஆரம்பித்தார்.
காரில் ஏறியதும் யாருக்கோ அழைத்து பேசியபடி வந்தவர் ரூபா வீடு வந்ததும் தான் அதை அணைத்து விட்டு வீட்டுக்குள் நுழைந்தார்.

அங்கு விலாசினி தன் பெரிய மகனிடம் அழுதபடி பேசிக்கொண்டிருந்ததை பார்த்துக்கொண்டே சோபாவில் உட்கார்ந்தார்.

அவர் சென்றதும் உடனே தன் பின்னாலேயே வீட்டுக்கு உள்ளே வந்தவரை எழுந்து வரவேற்று அவரோடு உட்கார்ந்தார்.

விலாசினி ஃபோன் பேசி முடிக்கும் வரை காத்திருந்த தன்ராஜ் "மா..இவர் பேர் சிவகுமரன். நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவர்..ஒடிசா போலீஸ்ல டி.எஸ்.பியா இருந்து ரிட்டயர்ட் ஆனவர்..முக்கியமா நேர்மையானவர்...ரொம்ப நல்லவர்.."

"ரூபா காணாம போனதை நீ சொன்னதுமே அவளை யாருக்கும் தெரியாம தேடி கண்டு பிடிக்கணும்னா..விஷயம் வெளிய மீடியா கிட்ட போகாம இருக்கணும்னா நம்ம ஊர் சம்பந்தப்பட்ட ஆளா இல்லாம இருந்தா நல்லா இருக்கும்னு தோணிச்சு.."

"இவரும் இன்னும் இவரை போலவே ரிட்டயர்ட் ஆன சில போலீஸ் நண்பர்களும் ஒண்ணா சேர்ந்து ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி வெச்சிருக்காங்க.."

"இந்தியா பூரா இவங்களுக்கு 20 பிராஞ்ச் இருக்கு..நம்ம சொல்றத நமக்கு தேவைப்படற விஷயத்தை காதும் காதும் வெச்ச மாறி செஞ்சு குடுப்பாங்க.."

"எனக்கு பர்சனலா சில விஷயங்களை சுமூகமா முடிச்சு குடுத்ததுல இவர் நல்ல பழக்கம்..அதனால தான் யோசிக்காம இவரை கூப்பிட்டேன்.."

"இந்த நேரத்துல உனக்கு சட்டுனு எதுவும் தோணாது..நானே உன் குடும்ப ஆளா உரிமை எடுத்து இவரை வரவழிச்சேன்.."

" இனி என்ன சொல்லணுமோ..இவர் கிட்ட சொல்லு மா.."
விலாசினி அழுது கொண்டே சிவகுமரனிடம் நடந்ததை சொன்னார். அவர் தன் விசாரணையை ஆரம்பித்தார்.

"உங்களுக்கு எப்ப உங்க பொண்ணு காணாம போனது தெரிஞ்சது?"

"இன்னிக்கு அவளுக்கு பெங்களூர்ல ஹிந்தி படத்துக்கு ஸ்க்ரீன் டெஸ்ட் இருந்தது. எப்பவும் போல காலைல அவளை எழுப்ப போன போது தான் அவ ரூம்ல இல்லைனே தெரிஞ்சது.."

"வீடு பூரா தேடி பார்த்தும், வீட்டுல வேலை செய்யறவங்களை கேட்டும் எதுவும் தெரியலனு ஆன பிறகு தான் அண்ணன் கிட்ட சொன்னேன்.."

"சரிங்க மேடம்..நீங்க பாக்கும் போது உங்க வீட்டு கதவு திறந்திருந்ததா..இல்லை மூடி இருந்ததா?

"மூடி இருந்தது..நான் தான் திறந்தேன் சார்..."

"உங்க பொண்ணு வீட்டுல எப்டி நடந்துப்பாங்க..எல்லார் கிட்டயும் எப்டி பழகுவாங்க.."

"அவங்களுக்கும் உங்களுக்கும் ஏதாவது பிரச்னை நடந்ததா...உங்க குடும்பத்துல எத்தனை பேர்.."
அதை முடிப்பதற்குள் விலாசினி

"எனக்கும் அவளுக்கும் எந்த பிரச்சினை இல்ல சார்..எங்க வீட்டுல எல்லாருக்கும் அவளை ரொம்ப பிடிக்கும்.."

"அதுலயும் அவ அண்ணனுங்க ரெண்டு பேருக்கும் ரூபா னா உயிர் ங்க..ரெண்டு அண்ணன்க்கும் தினமும் ஃபோன் பேசிடுவா சார்.."

"உங்க பசங்க எங்க இருக்காங்க மேடம்.."
"
ரெண்டு பேரும் அமெரிக்கால இருக்காங்க..சார்..இவ கடைசி..என் வீட்டுக்காரர் போன பிறகு இவ தான் சார் என்னை குழந்தை மாதிரி பாத்துக்கறா.."

"இன்டஸ்ட்ரில யார் கிட்டயாவது சண்டை அந்த மாறி எதாவது.."

"அப்டி எல்லாம் இல்ல சார்..அவ யார் கிட்டயும் அனாவஸ்யமா பேச மாட்டா சார்..எல்லாரையும் அவ நட்பா தான் பார்ப்பா.."

"எதாவது லவ் அவங்களுக்கு இருக்கா..."

அதில் அதிர்ந்த விலாசினி "சார்..என்ன சொல்றீங்க..அவ குழந்தை சார்...அவளுக்கு கார்த்தால ஒரு ஷிப்ட், மதியம் ஒரே ஷிப்ட், சில நாட்கள்ல நைட் ஷுட்ல இருக்கற பிசி ஷெட்யூல்ல 24 மணி நேரமே போதல சார்.."

"ஒரே வருஷத்துல நாலு படம் நடிப்பா..சார்..அவ்ளோ பிசி..இதுல லவ் பத்தி எல்லாம் யோசிக்க அவளுக்கு டைம் இல்லங்க...சார்.."

ஒரு நிமிடம் அந்த இடத்தை சுற்றி பார்த்தார். அங்கு நின்று கொண்டிருந்த வேலைக்காரர்களை பார்த்து "வீட்டுல வேலை செய்யற ஆளுங்க எத்தனை பேர் இருக்காங்க.."

"பொண்ணு தனியா அவளுக்கு ஏத்த மாறி சமையல் செய்ய ஒருத்தி, எனக்கும் மத்த ஆளுங்களுக்கும் சமையல் செய்ய
ஒருத்தி, வீடு சுத்தம் செஞ்சு பாத்திரம் எல்லாம் க்ளீன் செஞ்சு, பெருக்கி, துடைக்க ஒருத்தி, கார் டிரைவர் ஒருத்தர் அவ்ளோ தான் சார்..."

"நான் வீட்டை சுத்தி பாக்கலாமா.."

"வாங்க..சார்.."என விலாசினி அவரை அழைத்து கொண்டு வீட்டை சுற்றி காட்ட ஆரம்பித்தார். (தொடரும்)
 

Author: Subha Balaji
Article Title: நினைவெல்லாம் நீயே 16
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom