• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நினைவெல்லாம் நீயே 12

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
84
நினைவெல்லாம் நீயே 12


மறுநாள் காலை எழுந்து வந்த ரூபாவை பார்த்த விலாசினி "நாளைக்கு ஹிந்தி படத்துல நடிக்கற விஷயமா நாம பெங்களூர் போகணும்.. காலைல கிளம்பணும்"

"ஏம்மா...உனக்கு எப்பவும் நடிப்பு..நடிப்பு தானா..காலைல எழுந்து வந்ததும் இதான் பேச்சா..சாப்பிட ஏதாவது குடு மா..பசி உயிர் போகுது.."

விலாசினி திரும்பி சமையலறையை பார்த்து கூப்பிடுவதற்குள் அங்கு வந்த சமையல் செய்யும் ராணி அக்கா "பாப்பா..மன்னிச்சுக்கங்க..
நீங்க வந்ததயே பாக்கல..இந்தாங்க.." என தட்டை நீட்டினார்.

விலாசினியோ கோபத்தோடு வேகமாக "ராணி உனக்கு மரியாதையே தெரியாதா..பாப்பானு சொல்லாத..மேடம்னு சொல்லுனு எத்தனை தடவை சொல்றது..
யாராவது மரியாதைப்பட்ட ஆளுங்க வந்த எங்கள கேவலமா நெனக்க மாட்டாங்க.."

"மா..போதும் மா...அவங்களுக்கு உன் வயசு ஆகுது..விடு...
அவங்களுக்கு எப்டி கூப்பிட வசதியோ அப்டி கூப்பிடட்டும்...நீங்க உள்ள போங்க கா..."

அம்மாவை பேசி சமாளித்து விட்டு தட்டை பார்க்க பச்சை கலர் ஜுஸ், எண்ணி நாலு வறுத்த முந்திரி, பிஸ்தா, வால்நட், அக்ரூட், ஊற வைத்து தோலுரித்த பாதாம் பத்து இருக்க "என்னது மா..இது எனக்கு இத குடுக்கற...எனக்கு வேணாம்..நேத்து நைட்டே சாப்பிடல மா..பயங்கரமா பசிக்கிது..எனக்கு இருக்கற பசிக்கு எத்தனை இட்லி, தோசை சாப்பிடுவேனோ...
தெரியாது..ராணி அக்கா எனக்கு நாலு இட்லி சாம்பார் போட்டு எடுத்துட்டு வாங்க.."

வீட்டில் வேலை செய்பவர்கள் முன்னாலயே அவள் பேசியதை கேட்ட விலாசினிக்கு எங்கு போய் முட்டிக்கொள்வது என்றே தெரியாமல் போனது.

அடுத்த நிமிடமே ராணி தட்டில் இட்லி சாம்பாரோடு வர..கொஞ்சம் கூட அம்மாவை பார்க்காமல் தட்டை வாங்கிய ரூபா எதை பற்றியும் யோசிக்காமல் கண்ணை மூடி திறப்பதற்குள் சாப்பிட்டு தட்டை அலம்பி டைனிங் டேபிளில் வைத்து "கா...சாம்பார் சூப்பர்" என சொல்லி விட்டு வந்தாள்.

அவளை கையை பிடித்து தரதர என இழுத்து சென்ற விலாசினி ரூபாவின் அறைக்கு நுழைந்து கதவை அறைந்து சாத்தி விட்டு

"ஏய் உனக்கு கொஞ்சமானும் அறிவு இருக்கா இல்லையா..காலைல எழுந்து வந்ததும் தின்றது தான் முதல் வேலையா? ஜிம்முக்கு போயிட்டு வந்து தானே சாப்பிட வரணும்..எதுக்கு மொதல்லயே வந்த டி.."

"மா..பசிச்சிது..சாப்பிட்டது ஒரு குத்தமா மா..வயத்துக்காக தானே உழைக்கிறோம்...சாப்பிட கூட இல்லாம எதுக்கு யாருக்கு நான் உழைக்கணும்னு சொல்லு.."

"அடியேய்..ஒழுங்கா நான் சொல்றத கேட்டுட்டு தானே இருந்த..இப்ப என்னாச்சு...யார் என்ன சொல்லி குடுத்தாங்க...ஏன் டி என் வயத்தெரிச்சல கொட்டிக்கற..."

"உன் வெயிட் ஏறாம இருக்கறதுக்கு நான் படற பாடு உனக்கு எப்டி தெரியும்..மொத படத்துல நடிக்கறப்ப உன் வெயிட் 55 கிலோ...இத்தனை வருஷமா அதையே மெயின்டயின் பண்ண நான் எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பேன்.."

"நல்லா தீனி தின்னு வெயிட் ஏறினா ஹீரோயின்னா நடிக்க கூப்பிட மாட்டாங்க டி..ஹீரோயினுக்கு அம்மாவா வேஷம் கட்ட வெச்சு உன் சினிமா வாழ்க்கையையே அழிச்சிடுவாங்க டி புரிஞ்சிக்கோ..."

"ஏற்கனவே தெலுங்கு படத்துல நடிச்சிட்டே...ஹிந்தில நடிக்கணும்..படம் சக்ஸஸ் ஆகணும்...படங்களா வந்து குவியணும்...பாலிவுட்ல நீ தான் லேடி சூப்பர் ஸ்டாரா இருக்கணும்..நீ வெச்சது தான் சட்டமா இருக்கணும்..

"கொஞ்சம் வருஷம் நடிச்சிட்டு யாராவது பெரிய பணக்காரனா, இல்ல வடக்க தான் ராஜ வம்சத்து ஆள் நிறைய இருப்பாங்களே...
அவங்கள பேரும், பணமும், புகழும் இருக்கற ஆளா பாத்து உன்னை கல்யாணம் பண்ணி குடுத்திட்டு உன் பசங்கள பாத்துக்கற சாக்குல நானும் உன் கூடவே வந்திட்டு என் மிச்ச சொச்ச நாளை நிம்மதியா வாழ்ந்திடுவேன்.."

"இப்டி நான் எவ்ளோ கனவு கண்டுட்டு இருக்கேன்..கண்டத எல்லாம் தின்னு...எக்கச்சக்க வெயிட் போட்டு ஆளே அடையாளம் தெரியாம ஆகி..என் ஆசையை நிராசையாக்கி நீர்குமிழி மாறி உடைச்சிடாத டி..."

"மா..போதும் நிறுத்து மா..என்ன பேசணும்னு தெரிஞ்சு தான் பேசறீயா...இத்தனை வருஷமா நீ சொல்றத தானே கேக்கறேன்..

எத்தனை மணிக்கு எழுப்பினாலும் எழுந்துக்கறேன்..நீ சாப்பிட சொல்லி குடுக்கறத தானே சாப்பிடறேன்.."

"யார் கிட்ட பேசணும்னு சொல்றீயோ அவங்க கிட்ட மட்டும் பேசறேன்..நீ பேசக்கூடாதுனு சொல்றவங்க கிட்ட பேச கூட முயற்சி பண்றதில்ல..

இவ்ளோ ஏன் நீ எனக்காக ஒரு லஷ்மண ரேகை கோடு போட்டிருக்கியே.. அந்த கோட்டை தாண்டறது பத்தி யோசிச்சது கூட இல்ல.."

"ஏதோ ஒரு நாள் ஒரே ஒரு தடவை பசிக்கிதுனு சாப்பிட்டதுக்கு இப்டி ஆர்ப்பாட்டம் பண்ணுவீயா..நீ பண்றத பாக்க வெறுப்பா இருக்கு மா.."

"நீ ரொம்ப பேசிட்ட..நீ சொல்றத எல்லாம் கேக்கறேன்..தயவு செய்து என்னை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடு..சரியா சாப்பிடாததால தலைய சுத்தற மாறி இருக்கு..இப்ப இங்கேயிருந்து போ..கொஞ்சம் நேரம் நான் ரெஸ்ட் எடுக்கணும்..ப்ளீஸ் மா.."

எதற்கும் அசராத விலாசினி மகளின் கெஞ்சல் வார்த்தைகளால் போனால் போகட்டும் என எதுவும் பேசாமல் அமைதியாக அவள் அறையில் இருந்து வெளியேறினார்.

அம்மா வெளியே போனதும் கதவை தாழ் போட்ட ரூபா ஜன்னல் கதவுகள் எல்லாவற்றையும் மூடி அறையை இருட்டாக்கி விட்டு, தன் அறையில் இருந்த வேண்டாத பொருட்கள் போட்டு வைக்கும் பெட்டியை அங்கிருக்கும் கேமரா கண்களில் படாமல் உள்ளே இருந்த சிறிய அறைக்கு எடுத்து கொண்டு வைத்து விட்டு அமைதியாக போய் தன் கட்டிலில் தூங்குவது போல படுத்து கொண்டாள்.

விலாசினியின் தன் அறையில் இருந்து ரூபாவின் அறையில் இருக்கும் கேமராவினால் எப்போதும் போல அவளை கண்காணிப்பது போல கண்காணிக்க ஆரம்பித்தார்.

தன்னை அறியாமல் இரண்டு மணி நேரத்துக்கு மேல் தூங்கிய ரூபா இன்டர்காம் சத்தத்தால் கண் விழித்தாலும் தூக்க கலக்கத்தோடு ரிசீவரை எடுக்க அந்த பக்கத்தில் விலாசினி "ரூபா கண்ணு நம்ம தோட்டத்துலேந்து மணி ஃபோன் பண்ணி இருந்தான்...நம்ம நிலத்துக்கு பக்கத்துல இன்னும் கொஞ்சம் இடம் விலைக்கு வருதாம்..அவங்களுக்கு ஏதோ அவசர தேவையாம்..உடனே விக்கணுமாம்.."

"நான் போய் பார்த்து சரியா இருந்து நமக்கு எல்லாம் ஒத்து வந்தா அட்வான்ஸ் குடுத்திட்டு ராத்திரியே திரும்ப வந்திடறேன்..உனக்கு துணைக்கு ராணி இருப்பா..நான் வர்றவரைக்கும் நீ வெளியே வர வேண்டாம்...தூங்கி ரெஸ்ட் எடு..
சரியா.."என மூச்சு வாங்காமல் பேசினார்.

"சரி மா..பாத்து போயிட்டு ஜாக்கிரதையா திரும்ப வா..துணைக்கு ராஜாவையும் அழைச்சிண்டு போ.." என ரூபா சொல்லி ரிசீவரை வைத்து விட்டு மறுபடியும் தூங்கி போனாள்.

கதவு தட்டும் சப்தத்தால் எழுந்த ரூபா கதவை திறந்து பார்க்க வெளியே ராணியின் கையில் இருந்த தட்டை பார்த்து பூரித்தவள் "அக்கா...முகம் அலம்பிட்டு வந்துடறேன்.." என வேகமாக போய் முகத்தை அலம்பி விட்டு வந்து தட்டை வாங்கி கேமரா கண்களில் படாமல் இருந்த சோஃபாவில் உட்கார்ந்து நிமிடங்கள் காலி செய்தாள்.

"பாப்பா என்ன அவசரம்..
பொறுமையா தான் சாப்பிடறது தானே..எப்பவும் போல நீ வழக்கமா சாப்பிடறதை கேமரா இருக்கற பக்கமா எடுத்துட்டு வந்தேன்..இது நம்ம வழி .." என சொல்லி சிரித்து விட்டு தட்டை வாங்கி கொண்டார்.

ரூபா மறுபடியும் தன்னறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டதை கேட்ட ராணி பாப்பா இப்பவாவது நிம்மதியா இருக்கட்டும் என மனதுக்கு நினைத்தபடி கீழே இறங்கி தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்.

கதவை தாளிட்டதும் தன்னறையில் இருந்த டிவியை ஆன் செய்து அவளுக்கு பிடித்த கார்ட்டூன் சேனலை வைத்து விட்டு உட்காரும் இடம் கேமராவில் கவர் ஆகாது என்பதால் வேகமாக சின்ன அறைக்கு போய் ஏற்கனவே எடுத்து வைத்த பெட்டியை திறக்க அதில் அவளுடைய அப்பாவின் ஃபோட்டோவை பார்த்து கண் கலங்கினாள்.

எதாவது அவசரம், ஆபத்து என்றால் மட்டுமே அந்த பெட்டியின் உள்ளே சாதாரணமாக கண்களுக்கே படாமல் இருக்கும் சின்ன பெட்டியை திறக்க வேண்டும் என அப்பாவின் பாச வேண்டுகோள் நினைவுக்கு வர..மெல்ல துழாவி அந்த பெட்டியை தேடி திறக்க..அதனுள் ஒரு சிறிய ஃபைல் இருக்க அதை பிரித்து பார்த்தவளுக்கு இதுவரை அவளுக்கு தெரியாத அவளுடைய வாழ்வின் ரகசியங்கள் அதில் நிறைந்து இருந்தது.


கண்களில் நீர் வழிவது தெரியாமல் பார்த்தவளுக்கு அதனுடேயே அவளுடைய அப்பாவின் கையெழுத்தில் இருந்த கடிதம் தெரிய அதனையும் எடுத்து பிரித்து படித்தவளுக்கு தன் தந்தையின் தீர்க்க தரிசனத்தில் வழக்கம் போல ஆச்சரியம் ஏற்பட்டது.

அவர் உபயோகப்படுத்திய ஃபோனை எடுத்து சார்ஜ் போட்டவள் ஒரு மணி நேரத்துக்கு பின் கடிதத்தில் அப்பாவால் எழுதப்பட்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்தவளுக்கு எதிர் புறம் கேட்ட குரலால் ஆச்சர்யமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது.
சில நிமிட பேச்சுக்கள் மட்டும் எதிர் புறத்தில் பேச ரூபா வெறுமன ம்ம் என சொல்லி விட்டு ஃபோனை வைத்தாள்.

இரவு எப்போதும் போல அறைக்கு அவளுடைய டயட் உணவு வர எந்த எதிர்ப்பும் இல்லாமல் சாப்பிட்டு தட்டை அலம்பி திரும்பி குடுத்து தன்னறைக்குள் சென்றாள்.

இரவில் யாரும் மாடிக்கு போகும் வழக்கம் இல்லாததால் எப்போதும் போல தன்னறையில் ராணி படுத்து தூங்க ஆரம்பித்தார்.

மறுநாள் காலை பெங்களூர் கிளம்ப நேரமாகிவிட்டதே என அவசர அவசரமாக விலாசினி ரூபாவின் அறையை திறந்து பார்த்து தேடியதும் தான் ரூபா வீட்டில் இருந்து காணாமல போனதே தெரிய வந்தது. (தொடரும்)
 

Author: Subha Balaji
Article Title: நினைவெல்லாம் நீயே 12
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom