• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தொட்டுத் தொடரும் -9

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
300
அத்தியாயம்-9



அலைபேசியில் அபிமன்யு பேசிக் கொண்டு இருந்ததை மறுத்தும் பேசாமல், அதன் படி செய்யவும் இல்லாமல், "நீ ஏதோ சொல்கிறாய் என் காது கேட்டுக் கொண்டு இருக்கிறது" என்ற ரீதியில் இருந்த ஸ்ரீநிதி, விடாமல் ஒலித்த மணியின் ஓசையில் அவர்கள் தான் வந்துவிட்டனர் என்று புரிந்து "இதோ வந்துட்டேன்" என்று கதவைத் திறப்பதற்காக ஓடி வந்தாள்.



கௌசல்யாவிற்கும் அந்த இரவு நிறைய யோசனைகளையும் குழப்பங்களையும் கொடுத்து இருந்தது. கணவரிடம் இருந்து வந்த அழைப்புகளின் எண்ணிக்கையைக் கவனிக்காவிட்டாலும் வழக்கத்தைவிட அதிகமாகவே அழைத்திருக்கிறார் என்று அவருக்குத் தெரிந்தே இருந்தது. அதன் காரணமும் எதுவாக இருக்கும் என்பதை அவராகவே கற்பனை செய்துகொண்டார். எதுவாக இருந்தாலும் தனது முடிவு தான் சரி, மகன் அதற்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும் என்று முடிவு செய்தவராய் படுக்கையில் சாய்ந்தார்.



அவரது பிடிவாத குணத்தால் மகன் என்ன சொல்ல வருகிறான் என்பதை காது கொடுத்து கேட்கக் கூட அவர் தயாராக இல்லை. ஒருவேளை அப்படிக் கேட்டிருந்தால், அவன் நண்பர்கள் யார்? படிப்பு விஷயத்தில் எப்படிப்பட்ட பின்புலம் கொண்டவர்கள்? அவர்களது ஆலோசனையை ஏற்றுக் கொள்ளலாமா? கூடாதா? என்பது தெரிந்திருக்கும். ஆனால், இந்த விஷயத்தில் ஏற்கனவே முடிவு செய்து விட்டவராய் எதைப்பற்றியும் யாருடைய ஆலோசனையையும் கேட்க அவர் தயாராக இல்லாததே, ஸ்ரீவத்ஸனது இன்றைய நிலைக்குக் காரணம். அதனை அறியும் போதாவது தன்னை மாற்றிக் கொள்வாரா?



அழைப்பு மணியின் ஓசையில் சற்றே தூக்கம் கலைந்த கௌசல்யா, மறுபடியும் தனது கணவரது அலைபேசி அழைப்போ என்று பார்த்தவர், அது இல்லை என்றவுடன் தனது பிரமையோ என்று உறக்கத்தை தொடரப்போனார். எடுக்கப்படாமல் விட்ட கணவரின் அழைப்புகளின் எண்ணிக்கை இருபத்தியெட்டு என்பது கண்ணில் பட்டாலும் கருத்தில் பதியவில்லை.



விடாது ஒலித்த ஓசையில் அது வீட்டின் அழைப்பு மணி என்று புரிந்து, இந்த நேரத்தில் யார், ஒரு வேளை கணவர் தான் வந்து இருக்கிறாரோ, அதைச் சொல்லத் தான் தொடர்ந்து அழைத்தாரோ என்று எண்ணியவாறு முற்றிலும் தூக்கம் கலைந்தவராய் எழுந்து வந்தார்.



கௌசல்யா வாசலுக்கு வருவதற்குள், வேகமாக ஓடி வந்து கதவைத் திறந்த ஸ்ரீநிதி, தயங்கி நின்ற ராதாவையும் கிருஷ்ணனையும் "ஆன்ட்டி, அங்கிள் வாங்க, சீக்கிரம் வாங்க. அண்ணன ஹாஸ்பிடல் கூப்பிட்டு போயிடலாம் வாங்க" என்று இழுத்துக் கொண்டு ஸ்ரீவத்ஸனது அறைக்குள் அழைத்துச் செல்ல முயன்றாள்.



ஒரு நிமிடம் அதிர்ந்து நின்ற கௌசல்யா சுதாரித்துக் கொண்டு "என்ன பண்ணிட்டு இருக்க நிதி? யாரு இவங்க எல்லாம்? எதுக்கு இந்த நேரத்தில வந்திருக்காங்க?" என்று ஆரம்பித்தவர் "ஓ! இவங்க தான் உங்க அருமை அண்ணனோட ஃப்ரண்ட்ஸா? இப்போ எதுக்கு நேரங்கெட்ட நேரத்தில வந்து இருக்காங்க? இரண்டு நாள் மௌன விரதம் இருந்து சாதிக்க முடியலன்னு இவங்களை வரச் சொல்லி இருக்கானா?" என்று வார்த்தைகளை விஷம் தோய்த்த அம்புகளாக வீச ஆரம்பித்தவர், ஸ்ரீநிதி சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் மெதுவாகப் புரிய "நிதி அண்ணனுக்கு என்னடா? கடவுளே! கண்ணா!" என்றபடி அவனது அறையை நோக்கி ஓட முயன்றார்.



ஆனால் அவரது மகளோ அவரைத் தடுத்து, நீ தான் அனைத்துக்கும் காரணம், அதனால் நீ வரவேண்டியது இல்லை என்பது போல் அவரைப் பார்த்து, "அம்மா!" என்று சத்தமாக அழைத்தவள், "நீங்க போய் நிம்மதியா உங்க தூக்கத்தை கன்டிநியூ பண்ணுங்க மா. என் அண்ணன பாத்துக்க எனக்குத் தெரியும்" என்று முகத்தில் அறைந்தாற் போல சொல்லி விட்டு, "நீங்க வாங்க ஆன்ட்டி" என்று ராதாவை அழைத்துச் செல்ல முயன்றாள்.



மகளது வார்த்தைகளில் அதிர்ந்து நின்ற கௌசல்யாவைக் கண்ட ராதா, நிலைமையைக் கையில் எடுத்துக் கொண்டு, கிருஷ்ணனிடம் "நீங்க போய் வத்ஸனப் பாருங்க. அண்ணா கூப்பிட சொன்னாரே, அபி, அங்கிளைக் கூப்பிடு. கவி, நிதியைப் பாரு" என்று ஆளுக்கொரு வேலையைச் சொன்னவர், கௌசல்யாவை அழைத்துச் சென்று, மூவர் அமருமாறு இருந்த இருக்கையில் அமர்த்தித் தானும் அவரது கையைப் பிடித்துக் கொண்டே அருகில் அமர்ந்தார்.



அவரது வார்த்தைகளைக்குப் பணிந்து, கிருஷ்ணனும், மற்றவரும் உள்ளே சென்றனர். அபியும் கவியும், நண்பனைப் பார்த்து வருத்தம் கொண்டவராய், அவனது அருகில் சென்று கன்னத்தில் தட்டி எழுப்ப முயற்சி செய்ய, கிருஷ்ணன் அவனைத் தொட்டுப் பார்த்து நிலைமையைப் புரிந்து கொள்ள முயன்றவாறே ராகவனுக்கு அழைத்தார்.



ஸ்ரீநிதி அண்ணனிடம் வந்தவள், அழுகையை அடக்கி "நம்ம வீட்டுக்கு அபி வந்திருக்கான், எழுந்து பாருண்ணா" என்று அவனைத் தடவி எழுப்ப முயற்சி செய்தாள்.



ஸ்ரீவத்ஸனின் அறையையே வெறித்த பார்வையில் பார்த்துக் கொண்டு இருந்த கௌசல்யா, ராதாவின் கைகளில் கொடுத்த அழுத்தம், ஒரு தாயாக அவரது மனநிலையைக் காட்டியது. அதை உணர்ந்தவராக ராதா, அவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அவரது கையைத் தட்டிக் கொடுத்தார். அவர்களுக்கு இடையே கனத்த அமைதி நிலவியது.



அவர்களது அமைதியைக் கலைக்கும் விதமாக வாசலில் ஒலித்த "சைரன்" ஆம்புலன்சின் வருகையை அறிவித்தது. ஆனால் அந்த சத்தம் கூட கௌசல்யாவை அசைத்துப் பார்க்கவில்லை. ஆம்புலன்சின் ஓசையைத் தொடர்ந்து "வத்ஸனுக்கு என்ன ஆச்சு ஆன்ட்டி?" என்று ஓடி வந்த சரணும், அவனைத் தொடர்ந்து "சத்தம் போடாமல் போடா. யுவர் ஃப்ரண்ட் வில் பி ஆல்ரைட்" என்றபடி வந்த ராகவனும் கூட அவரது கவனத்தை ஈர்க்கவில்லை.



அடுத்த சில நிமிடங்களில் கௌசல்யாவின் சம்மதத்தை அறியாமலே, அவரது மகன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டான்.


வளசரவாக்கத்தில் இருந்து பூந்தமல்லியில் உள்ள சுஸ்ருதா மருத்துவமனை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த காரில் ஒரு கனத்த அமைதி நிலவியது. யாருக்கும் எதுவும் பேசத் தோன்றவில்லை. கிருஷ்ணன் காரை ஓட்ட அவரது அருகில் இருந்த இருக்கையில் ராதா அமர்ந்திருந்தார்.

நடுவிலிருந்த இருக்கை மூவர் அமருமாறு அமைக்கப்பட்டு இருந்தது. அதில் ஸ்ரீநிதி மற்றும் ராகவி ஒரு புறமும், கௌசல்யா மறுபுறமும் அமர்ந்து இருந்தார்கள். ஜன்னலை ஒட்டி அமர்ந்திருந்த கௌசல்யா, கடந்த ஒரு மணிநேரத்தில் யாருடனும் பேசவில்லை. யாருமே அவரை கண்டு கொள்ளவில்லை என்ற எண்ணம் அவரை மௌனத்தில் ஆழ்த்தியது. முதல்முறையாக தன்னை யாருக்கும் பிடிக்கவில்லையோ என்று தோன்றியது. மகனது உடல்நிலை பயத்தை உருவாக்கியது.



பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போதும் வரலாம் என்ற நிலையில் அவனை மருத்துவராக்க வேண்டும் என்ற தனது கனவு நடக்காமல் போய்விடுமோ என்ற எண்ணம் அவரை ஆட்டிப் படைத்தது. அன்னைக்காக ஆரம்பித்தது தான் என்றாலும் ஸ்ரீவத்ஸனுக்குமே மருத்துவராகும் கனவு இருந்தது அதுவும் லண்டனில் உள்ள ராயல் காலேஜில் எஃப்.ஆர்.சி.எஸ். பெறவேண்டும் என்ற லட்சியமும் இருந்தது. இதை பலமுறை அவன் தன் தந்தையிடம் கூறக் கேட்டிருக்கிறார். தற்போதைய அவனது நிலை இது எதையும் நடக்கவிடாமல் செய்து விடுமோ என்ற பயம் வந்தவுடன் கண்மூடி இருக்கையில் சாய்ந்தார்.



அவரைப் பொறுத்தவரை, தன்னைப்போல் தன் குழந்தைகளும் எதற்காகவும் ஏங்கி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார், இருப்பதாக நினைத்துக் கொண்டார் என்பதே சரி. அதனாலேயே அவர்களுக்கு எல்லாமே கிடைத்துவிட வேண்டும் என்று முடிவு செய்து அதையே நடைமுறைபடுத்த முயற்சித்தார். அவர்கள் உடுத்தும் உடையில் இருந்து அவர்கள் போடும் செருப்பு வரை, உபயோகிக்கும் பேனா முதற்கொண்டு படித்த பள்ளிகள் வரை எல்லாவற்றிலும் ஒரு பெரிய ஆராய்ச்சி செய்த பின்பே ஒன்றை தேர்ந்தெடுப்பார்.



இவ்வளவையும் செய்தவர் தான் செய்தது பிள்ளைகளுக்கு பிடித்ததா என்று என்றுமே ஆராய்ச்சி செய்தது இல்லை, ஏன் அதைப் பற்றி யோசித்தது கூட இல்லை. அவர்களது ஆசை என்ன என்பதையும் அறிந்து கொள்ள முற்பட வில்லை. அவர்களுக்காக தானே எல்லா இடங்களிலும் முடிவெடுத்தார் சுருக்கமாக சொல்லப் போனால் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் வரும் தந்தையை போல, பிள்ளைகளுக்கு பார்த்து பார்த்து செய்து அதில் திருப்தி அடைந்தார். ஆனால், அவர்களுக்கான திருப்தி எதில் இருக்கிறது என்பதை அவர் தெரிந்து கொள்ளவே இல்லை. இவ்வளவும் செய்த அவர் ஒருநாளும் அவர்களுடன் அமர்ந்து அன்பாகப் பேசியதே இல்லை.



பிள்ளைகளைக் கண்டிப்போடு வளர்க்க வேண்டும் அப்போதுதான் கவனம் சிதறாமல் இருப்பார்கள் என்ற எண்ணம் வலுப்பெற்று இருந்தாலும், அவரது அன்பை வெளிப்படுத்த விடாமல் அவரது பிடிவாதம் ஜெயித்துக் கொண்டே இருந்தது. அவர்களுடன் அன்பாக பேசியும் பழகியும் இருந்தால் குழந்தைகள் தங்கள் எண்ணத்தை வெளிப்படையாக சொல்லி இருப்பார்கள். அதைச் செய்யாத காரணத்தால் பிள்ளைகள் அவரிடமிருந்து தள்ளியே இருந்தார்கள்.



பணம், பெயர், புகழ் இவற்றிலெல்லாம் தன்னுடன் பிறந்தவர்களை விட ஒருபடி மேலாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் அவரை ஆட்டுவித்து கொண்டிருந்தது. அதனாலேயே அவரால் மனிதர்களை பாசத்தை கொண்டு எடை போட முடியவில்லை. எதையுமே பணத்தைக் கொண்டு எடைபோட நினைத்தார். மகனின் இன்றைய நிலை மனிதர்களை குறித்த அவரது எண்ணத்தை மாற்றுமா?? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.



இன்று வீட்டில் நடந்த நிகழ்வுகள், அவருக்குப் பிள்ளைகளின் மனதைக் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியது. தனது வளர்ப்பு முறையே சரியானது என்று எண்ணிக்கொண்டு இருந்தவருக்கு, இன்று ராதாவைப் பார்த்து கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது. ஒரு வார்த்தை கூட அதிர்ந்து பேசாமல் பிள்ளைகளை எப்படி வளர்க்க முடியும் என்று அவருக்குப் புரியவே இல்லை. எப்படி, என்று சொல்லித் தருவதைத் தான் ராதா தொழிலாகவே வைத்து இருக்கிறார் என்று அவருக்கு எப்படித் தெரியும்.



கடந்த ஒரு மணிநேரமாக, அதாவது ராதாவை அவர் பார்த்த நிமிடத்தில் இருந்து அவரை மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கிறார். அவரது பிள்ளைகள் மட்டும் இன்றி, அழுகையுடன் வீட்டுக்குள் நுழைந்த சரண் கூட அவரது கண் பார்வையிலேயே சமாதானம் ஆனதையும் ஆச்சரியமாக பார்த்தார்.



சரணைத் தொடர்ந்து வீட்டுக்குள் வந்த, ராகவனது சத்தம் கேட்ட மறு நொடி, வேகமாக அங்கு வந்த ராகவி "உள்ள வந்து வத்ஸனப் பாருங்க அங்கிள், சீக்கிரம் வாங்க" என்று இழுத்துக் கொண்டு போனாள்.



"ஹேய், என்னது இது? ஃபியூச்சர் சர்ஜன்ஸ் எல்லாம் இப்படி அழுதுட்டு இருந்தா, பேஷண்ட்ஸ் என்ன ஆவாங்க? ஸ்டாப் இட் ஐ சே. எங்க இருக்கார் மிஸ்டர்.ஸ்ரீவத்ஸன் எஃப்.ஆர்.சி.எஸ்.? இத்தனை நேரத்தில் உங்க சவுண்ட் கேட்டு அலறி எழுந்திருக்கணுமே? டீப் ஸ்லீப்போ?" என்று பேசிக்கொண்டே தனது பணியைத் தொடங்கினார்.



ஸ்ரீவத்ஸனது வெப்பநிலையை பார்ப்பதற்கு "தெர்மாமீட்டரை" எடுத்தவர், அவனது அக்குளில் இருந்த ஈரமான கைக்குட்டையை வியப்புடன் பார்த்து "பரவாயில்லையே கண்ணோட சேர்ந்து, மூளையும் நல்லாவே வேலை பார்த்து இருக்கு போல இருக்கே!" என்று கூறிக்கொண்டே அந்த கைக்குட்டையை எடுத்தார்.



"தப்பா அங்கிள்? ஃபீவர் குறையும் ன்னு தான் செஞ்சேன். அப்படி இல்லையா? அதான் அண்ணன் கண்ணே முழிக்கலையா?" என்று பதட்டத்துடன் கேட்ட ஸ்ரீநிதியின் தலையைத் தடவியவர், "நோ மை டியர், யு டிட் எ வெரி குட் ஜாப். யு ஹேவ் சேவ்ட் யுவர் ப்ரதர்" என்று சொல்லிக் கொண்டே தனது பணியை முடித்து விட்டு, கிருஷ்ணனை அழைத்துக் கொண்டு கௌசல்யா இருக்கும் இடம் வந்தவர்,



"க்ருஷ்! ஹாஸ்பிடல் போயிடறது பெட்டர். நத்திங் சீரியஸ். டெம்பரேச்சர் ரொம்பவே ஜாஸ்தியா இருக்கு. ஸ்ரீநிதி வைச்சிருந்த வெட் கிளாத்தால தான் ஒரு லெவல்ல இருக்கு. அதுவே ரொம்ப ஹை தான். மைன்ட்ல ஏதோ டென்ஷன் ஏத்தி இருக்கான். அதைக் குறைக்க என்ன செய்யலாம்னு பார்க்கணும்.



அப்போ தான் டெம்பரேச்சர் கண்ட்ரோல் ஆகும். ஃபீவர் குறையலேன்னா ஃபிட்ஸ் வர சான்ஸ் இருக்கு. அதோட ஏன் அன்கான்ஷியஸா இருக்கான்னு தெரியலை. கண்டிப்பா அதுக்கு ஃபீவர் மட்டுமே காரணம் இல்லை" என்று சிறிது இடைவெளி விட்டவர்,



கௌசல்யாவைப் பார்த்து "ஹோப், ஹி ஹேஸ் நாட் டேக்கன் எனி அன்வாண்டட் டிரக்ஸ். மினிமம் இரண்டு நாளாவது அப்சர்வேஷன்ல இருக்கிறது நல்லது. அதோட சீக்கிரம் மூவ் பண்றது நல்லது" என்றார்.

அதைக் கேட்டுக் கொண்டு இருந்த அனைவரும் அவரது கடைசி வார்த்தைகளில் அதிர்ந்து நின்றார்கள்.



இதுவரை மகனது உடல்நிலை பற்றி எதுவும் தெரியாத கௌசல்யா, "அவன் தேவையில்லாத மருந்துகள் எதையும் சாப்பிட்டு இருக்க மாட்டான் என்று நம்புவோம்" என்று ராகவன் சொன்னதும், ஏதேதோ எண்ணங்கள் அலைமோத, சூழ்நிலையின் கனம் தாங்காமல் அருகில் இருந்த ராதாவின் மேல் சாய்ந்தார். அவரது மனம் ஆறுதலுக்காக ஏங்கியதை உணர்ந்து ராதாவும் அவரைத் தோளோடு அணைத்துக் கொண்டார்.
 

Author: SudhaSri
Article Title: தொட்டுத் தொடரும் -9
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom