அத்தியாயம்–8
மகளிடம் மாமாவை அழைக்குமாறு சொன்ன ஸ்ரீதரன் தனது மனைவிக்கு அழைப்பு விடுத்தார். கணக்கில்லாமல் தொடர்ந்து அழைத்த பிறகும் அழைப்பு எடுக்கப்படவே இல்லை. பிள்ளைகள் இப்படி ஒரு நிலைமையில் இருக்கும்போது என்னதான் செய்கிறாள் என்று எரிச்சல் வந்தது. கணவரது அழைப்பை இன்னும் ஒரு வாரத்திற்காவது கண்டுகொள்ளக் கூடாது என்று அவரது அருமை மனைவி எடுத்திருந்த முடிவு அவருக்குத் தெரிவதற்கு வாய்ப்பு இல்லை பாவம்.
பிள்ளைகள் எப்படியும் தந்தையிடம் விஷயத்தைச் சொல்லியிருப்பார்கள் என்று தெரியும். ஸ்ரீதரன், மனைவியை எப்போதும், எந்த இடத்திலும் விட்டுக் கொடுத்ததே இல்லை. ரொம்ப பிரியமானவரும் கூட. ஒரு விஷயத்தைப் பற்றி பல கோணங்களில் ஆராய்ந்த பிறகே ஒரு முடிவுக்கு வருவார். அதனாலேயே அவர், இதுதான் என் முடிவு என்று சொல்லி விட்டால், அதை மறுத்துப் பேசும் எண்ணம் என்றுமே கௌசல்யாவிற்கு வந்ததில்லை.
இந்த முறை தனது முடிவு தான் இறுதியானதாக இருக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். அதனால் கணவரது தொடர்ந்த அழைப்புகளைக் கண்டும் காணாதவர் போல இருந்து விட்டார். அவரது வீண் பிடிவாதத்தால், வழக்கமாக இருமுறைக்கு மேல் அழைக்காதவர் இன்று தொடர்ந்து கணக்கில்லாமல் அழைத்ததன் உண்மையான காரணம் தெரியாமலே போனது.
ஏற்கனவே மாமனிடம் சிறு பெண் என்ன பேசினாளோ என்ற பரிதவிப்பில் இருந்த ஸ்ரீதரன், இதற்கு மேலும் மனைவியை அழைத்து நேரத்தை வீணடிக்க விரும்பாமல், தானே மைத்துனனைக் கூப்பிட்டு பேசிவிடலாம் என்று அழைத்தார். மைத்துனன் என்ற உறவை விட, மாமன் மகன் அத்தை மகன் என்ற விதத்தில் கௌசல்யாவின் தம்பி ரவீந்திரனிற்கும் ஸ்ரீதரனுக்கும் இடையே எப்போதும் ஒரு நல்ல பிணைப்பு இருந்தது. அந்த நம்பிக்கையில் அவரை அழைக்க, அதிலும் அவருக்குத் தோல்வியே வாய்த்தது. அவரது கைபேசி அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.
நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்யும் மருத்துவர் என்பதால், அவர் ஏதாவது அவசர பணியில் இருக்கக் கூடும் என்று முடிவு செய்தார். மற்றபடி, அடுத்த நாள் வந்த பின்னரும் விழித்திருக்கும் ரவீந்திரனின் அலைபேசி இரவு பத்து மணிக்கெல்லாம் அணைத்து வைக்கப் படவேண்டிய அவசியம் இல்லை என்று புரிந்தது.
இருந்தாலும, அடுத்து என்ன செய்வது என்று புரியாமல், கனத்த இதயத்துடன் அப்படியே அருகிலிருந்த சாய்வு நாற்காலியில் தொய்ந்து அமர்ந்தார் ஸ்ரீதரன். மகன் என்ற நிலைமையில் இருக்கிறானோ என்று புரியாமல் மீண்டும் ஸ்ரீநிதிக்கே அழைத்தார் அவள் யாருடனோ பேசிக் கொண்டிருப்பதாக அலைபேசி தெரிவித்தது. பலவித சிந்தனைகள் மனதில் ஓட இந்த ராத்திரி வேளையில் வேறு யாரை தொந்தரவு செய்வது என்று தனக்குத் தெரிந்த நபர்களை எல்லாம் யோசிக்க ஆரம்பித்தார்.
சட்டென்று ஏதோ தோன்ற, அலைபேசி வழியாக மட்டுமே பரிச்சயமான, கிருஷ்ணனுக்கு அழைப்பு விடுத்தார். அவரும் யாருடனோ பேசிக் கொண்டிருப்பதாக அலைபேசி தெரிவிக்க ஒருவேளை மகள் தான் அவருக்கு அழைத்துப் பேசிக்கொண்டு இருக்கிறாளோ என்ற நினைப்பில் சற்று நிம்மதியாக உணர்ந்தார். அடுத்த இரண்டே நிமிடங்களில் வந்த கிருஷ்ணனின் அழைப்பு அதை உறுதி செய்தது. மகனுக்குத் தேவையான மருத்துவ உதவி கிடைத்து விடும் என்று மகிழ்ந்து போனவர், தெளிந்த சிந்தனையோடு தனது பயண ஏற்பாடுகளைக் கவனிக்கச் சென்றார்.
அபிமன்யுவின் குடும்பம் அப்போது வடபழனியில் இருந்தது. ஸ்ரீநிதியின் அழைப்பைத் துண்டித்தவுடன், எழுந்து நின்ற கிருஷ்ணன், அனைவரைது உடையைப் பார்த்து திருப்திப் பட்டவராய் "ஒரு எமர்ஜென்சி, நம்ம நாலு பேருமே போனா பெட்டரா இருக்கும் டைம் வேஸ்ட் பண்ணாம சீக்கிரம் வாங்க" என்றபடி தனது வாலட்டையும், கார் சாவியையும் எடுத்துக் கொண்டு விரைந்தார். அவரைப் பின் தொடர்ந்த மற்றவர்கள், அவர் இன்னோவா காரை எடுத்து புறப்படத் தயாராக வைத்ததைக் கண்டு, ஒருவரை ஒருவர் பார்த்தவாறு காரில் ஏறினர்.
அவர்களது வீட்டில் இருந்து, ஸ்ரீநிதியின் வீடு இருக்கும் வளசரவாக்கம் வரையான தூரம் என்னவோ ஐந்தே கிலோமீட்டர் தான். ஆனால் அவர்கள் பயணித்த பதினைந்து நிமிடங்களைக் கடப்பது என்பது ஏழு கடல் ஏழு மலை தாண்டி போவது போலத் தோன்றியது. அந்த ராத்திரி நேரத்திலும் அந்த சாலை பரபரப்புடன் காணப் பட்டது. அவர்கள், குடும்பத்துடன் செல்லும் வெளியூர் பயணங்களுக்கு மட்டுமே இன்னோவா காரைப் பயன் படுத்துவார்கள். அதுவும் ஒரு ஓட்டுநரை அமர்த்திக் கொண்டு தான் செல்வது வழக்கம். அந்தப் பெரிய காரை, அதிகம் ஓட்டிப் பழக்கம் இல்லாததால் கிருஷ்ணனின் கவனம் முழுவதும் காரில் இருந்தது.
அதனாலேயே மற்ற மூவரும் அமைதி காத்தனர். மற்றபடி மூவருக்கும், ஸ்ரீநிதி என்ன சொல்லி இருப்பாள், ஏன் அவசரமாக அனைவரையும் அழைத்துச் செல்கிறார், யாருக்கு என்ன ஆயிற்று என்ற கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தது. விஜயா மருத்துவமனையைத் தாண்டிய போது, ஏதோ ஞாபகம் வந்தவராக கிருஷ்ணன் அவரது அலைபேசியில் இருந்து ஒரு அழைப்பு விடுத்தார்.
"ஹலோ க்ருஷ்! என்ன இந்த நேரத்துல? எனிதிங் அர்ஜென்ட்? இப்பதான் ஒரு சர்ஜரில இருந்து வந்தேன். ஒரு பைவ் மினிட்ஸ், சாப்பிட்டுட்டு பேசலாமா?" என்ற ஷங்கரின் குரலில் "தேங்க் காட்!' என்று பெருமூச்சு விட்ட கிருஷ்ணன்,
"அர்ஜென்ட் தான் ராகவன், நீங்க எவ்வளவு நேரம் ஹாஸ்பிடல்ல இருப்பீங்க? நீங்க கிளம்பிட்டா வேற யாரு டியூட்டி டாக்டர் இருப்பாங்க? யாரைப் பார்க்கலாம்?" என்று கேட்டார்.
"நான் இன்னைக்கு நைட் ஃபுல்லா ஹாஸ்பிடல்ல தான் இருப்பேன். கிரிஜாவுக்கும் இன்னைக்கு நைட் டியூட்டி இருக்கு. இந்த வாரம் வரிசையா நிறைய பேஷண்ட்ஸ் கிரிஜாவுக்கு. சோ, சரண் கூட இங்கே இருக்கிற குவாட்டர்ஸ்ல தான் இருக்கான்" என்று அவருக்குத் தேவையான விவரங்களை தந்தவர்,
"இந்த ராத்திரி வேளையிலே பார்க்க வேண்டிய மாதிரி என்ன எமர்ஜன்ஸி க்ருஷ்? யாருக்கு என்ன ஆச்சு? பசங்க நல்லா இருக்காங்கள்ள? ராதாவுக்கு ஏதாவது ப்ராப்ளமா? ஆம்புலன்ஸ் அனுப்பணுமா? என்ன விஷயம்னு சொன்னா அதுக்கு ஏத்த மாதிரி பிரிப்பேர்டா இருக்கேன்" என்று கேள்விகளை அடுக்கினார் ராகவன். கிருஷ்ணன் அவரிடம் பேசிக் கொண்டிருப்பதால் மற்ற மூவரில் யாருக்காவது தான் பிரச்சனை என்று நினைத்து அவர் கேள்விகளை அடுக்கினார்.
"நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் ராகவன். ஸ்ரீவத்ஸனுக்குத் தான் ஏதோ ப்ராப்ளம்னு ஸ்ரீநிதி பொண்ணு கூப்பிட்டு அழறா, அவள் சொன்னதை வைத்துப் பார்த்தால் அவனுக்கு நல்ல ஃபீவர் இருக்கு. கொஞ்சம் கான்ஷியஸா இல்லாத மாதிரி தெரியுது. முழு விவரம் தெரியல. நாங்க வீட்டிலிருந்து கிளம்பிட்டோம் இன்னும் ஒரு அஞ்சு, பத்து நிமிஷத்துல அவங்க வீட்டுக்கு போய்டுவோம்.
அவங்கள பிக்கப் பண்ணிட்டு நேரா ஹாஸ்பிடல் வந்திடுறோம். ஆம்புலன்ஸ் தேவைப்படுமான்னு தெரியல. ஆம்புலன்ஸ் வந்தா லேட்டாக சான்ஸ் இருக்கு என்ன பண்ணலாம்?" என்ற கிருஷ்ணனின் பதிலில் ராகவன் மட்டும் இன்றி, காரில் இருந்த மற்றவர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
அபிமன்யு அவசரமாக ராகவியைத் திரும்பிப் பார்க்க, ராகவியும் கண்களில் நீரோடு அவனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். உடனே ஸ்ரீநிதியை அழைக்க வேண்டும் என்று கைகள் பரபரத்தது. தந்தை பேசிக் கொண்டு இருப்பதால் அவர்களால் உடனடியாக ஸ்ரீநிதியை அழைக்க முடியவில்லை. பொங்கி வந்த அழுகையைக் கட்டுப் படுத்திக் கொண்டு ராகவனின் பதிலைக் கவனிக்க முயன்றார்கள்.
"இல்லை க்ருஷ், அன்கான்ஷியஸா இருக்கான்னா கொஞ்சம் யோசிக்கணும்" என்றவர் கௌசல்யா பற்றி சிறிது தெரியும் என்பதால் "அங்க போனவுடனே கிளம்ப முடியும்னு என்ன கேரண்டி? ஆம்புலன்ஸ் கூட நானும் வரேன். நீங்க அதுக்குள்ள அங்க போய் ரெடி பண்ணி வைங்க. அவனைப் பார்த்த உடனே என்னைக் கூப்பிடுங்க. ஃபர்ஸ்ட் எய்ட் எதுவும் பண்ணலாமான்னு பார்க்கலாம்" என்று அழைப்பைத் துண்டித்தார்.
அதற்காகவே காத்திருந்த அபிமன்யு அடுத்த நொடியே ஸ்ரீநிதியை அழைத்தான். அண்ணனின் அருகில் அமர்ந்து விசும்பியபடி, தனக்குத் தெரிந்த விதத்தில் கைக்குட்டைகளை நனைத்து நெற்றியிலும், இரு கைகளுக்கும் அடியில் அக்குள் பகுதியிலும் வைத்தபடி இருந்தவள், அலைபேசியில் வந்த அழைப்பைக் கவனிக்கவே இல்லை. நாலைந்து முறை தொடர்ந்து வந்த அழைப்பு அவளது கவனத்தைச் சிறிது அசைத்துப் பார்த்தது. அது அபியின் அழைப்பு என்று அறிந்ததும் உடனே ஏற்றவள் "அபி! எனக்கு அண்ணா வேணும். அவன் கண்ணைத் திறந்து பார்க்கவே இல்லையே. உடம்பு நெருப்பு மாதிரி சுடுது தெரியுமா? எனக்கு ரொம்ப பயமா இருக்கு" என்று அழ ஆரம்பித்தாள்.
இதைக் கேட்ட நால்வருக்கும் மனதைப் பிசைந்தது. அதுவரை அழுகையை அடக்கி வைத்திருந்த ராகவி குரலெடுத்து அழத் தொடங்கினாள். ராகவியைப் பார்வையால் அதட்டிய அபிமன்யு "ஸ்ரீ, முதல்ல அழுகையை நிறுத்து" என்று வார்த்தைகளில் கொடுத்த அழுத்தத்தில் தனது அழுகையை நிறுத்தி "சொல்லு அபி. நீங்க எல்லாரும் வரீங்க தானே? கிளம்பியாச்சா? எவ்வளவு நேரத்தில வருவீங்க?" என்று கேட்டாள்.
"நாங்க அல்மோஸ்ட் வந்திட்டோம். இன்னும் அஞ்சே நிமிஷத்துல உங்க வீட்டுல இருப்போம். ஆன்ட்டி என்ன பண்றாங்க? ரொம்ப கவலையா இருக்காங்களா?" என்றான். மறுபுறம் பதிலேதும் இல்லை எனவும் "அவங்ககிட்ட சொன்னியா இல்லையா? வத்ஸனுக்கு முடியலைன்னு அவங்களுக்குத் தெரியுமா? தெரியாதா?" என்று அவளைப் பற்றித் தெரிந்தவனாகக் கேள்விகளை மாற்றிக் கேட்டான்.
"நேர்ல தெரிஞ்சிக்கோ அபி" என்று வந்த பதிலில் அவனுக்கு கோபம் வந்தது. என்ன சொல்லி அவளிடம் புரிய வைப்பது என்று யோசித்துப் பேசத் தொடங்கினான்.
கௌசல்யா எப்படிப்பட்டவர் என்று யாருக்கும் தெரியாது. ஸ்ரீவத்ஸனோ, ஸ்ரீநிதியோ எப்போதும் அவரைப் பற்றிய பேச்சுக்களை தவிர்த்து விடுவார்கள். ஆரம்பத்தில் அந்த அண்ணன் தங்கையின் நடவடிக்கைகள், அவர்களது பெற்றோர் விவாகரத்து ஆனவர்களோ என்றே நினைக்கத் தோன்றியது. பழகப் பழக, அப்படி இல்லை தந்தையின் வேலை காரணமாகப் பிரிந்து இருக்கிறார்கள் என்று புரிந்தது. ஸ்ரீதரனுடன் பேச ஆரம்பித்த பிறகு, அவரும் தங்களது தந்தையை போல கலகலப்பானவர் என்று தெரிந்து அடிக்கடி பேசினார்கள். அவருமே மனைவியை எந்த இடத்திலும் குறிப்பிட்டுப் பேசியதே இல்லை.
இந்த நிலையில், ஸ்ரீவத்ஸனின் உடல்நிலை பற்றி கௌசல்யாவிற்குத் தெரியுமா? தெரிந்தும் அவர் உதாசீனப் படுத்துகிறாரா? சரியான பழக்கம் இல்லாத நிலையில், ஒரே வீட்டில் இருக்கும் தன் மகனது நிலை மூன்றாவது மனிதர்களுக்கு முதலில் தெரிந்து, அவர்கள் வந்து தன்னிடம் சொல்லுவதை அவர் எவ்வாறு எடுத்துக் கொள்வார்?
அவரிடம் விளக்கம் சொல்லி, அவரது சம்மதம் பெற்று, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வரை ஸ்ரீவத்ஸனது உடல்நிலை எவ்வாறு இருக்கும்? இப்படி பல பதில் தெரியாத கேள்விகள் இருந்ததால், கௌசல்யாவிடம் ஸ்ரீநிதியே நிலைமையை விளக்கி விடுவது தான் நல்லது என்று அபிமன்யு அவளுக்குப் புரிய வைக்க முயற்சி செய்தான்.
எல்லாவற்றிற்கும் மேலாக இன்னொரு முக்கியமான காரணம், முற்று முதலான காரணம் இருந்தது. ராதாவும், கிருஷ்ணனும் எடுத்துக்காட்டான பெற்றோர்கள். குழந்தைகளையும் அவர்களது உணர்வுகளையும் மதிக்க தெரிந்தவர்கள். என்னதான் தங்கள் குழந்தைகளின் நண்பர்களையும் தங்கள் குழந்தைகள் போல் கருதி, தேவையான நேரத்தில் உதவுவதே நண்பர்களின் கடமை என்று ராதாவும் கிருஷ்ணனும் வந்துவிட்டாலும், எந்த விதத்திலும் அவர்கள் அவமானப்பட்டு விடக் கூடாது என்று ஒரு மகனாக அவன் நினைப்பதில் தவறேதும் இல்லையே.
அதனால் பொறுமையாக அவளிடம் பேசத் தொடங்கினான். "ஸ்ரீ, நான் சொல்றதைக் கொஞ்சம் பொறுமையா கேளு. இது விளையாட்டு விஷயம் இல்லை. பெரியவங்க ஹெல்ப் கண்டிப்பா வேணும். ஆன்ட்டி கிட்ட சொன்னா, அவங்க சிச்சுவேஷனை, உன்னை விட பெட்டரா ஹேண்டில் பண்ணுவாங்க. வத்ஸன எழுப்ப ஏதாவது பண்ணுவாங்க. அதுவுமில்லாம அவங்க எங்களை முன்னே பின்னே பார்த்தது இல்லை.
இந்த ராத்திரி வேளையிலே நாங்க எல்லாரும் திடீர்னு வந்து நின்னா அவங்க என்ன நினைப்பாங்க? நாங்க வந்தப்புறம் வத்ஸன் விஷயம் தெரிஞ்சா அவங்களுக்கு சங்கடமா இருக்காதா? எங்களுக்கு சொல்லி அவங்க கிட்ட சொல்லலன்னு தெரிஞ்சா என்ன ஆகும்? அதனால முதல்ல அவங்கிட்ட வத்ஸன் ஹெல்த்தையும் நாங்க வரப் போறதையும் பத்தி சொல்லி ரெடி பண்ணு. நாங்க வந்ததும் ஹாஸ்பிடல் போயிடலாம். ராகவ் அங்கிள் வேற ஆம்புலன்ஸோட வராங்க. சோ, நீ ஆன்ட்டி கிட்ட கண்டிப்பா சொல்லித் தான் ஆகணும்" என்று நிலைமையைத் தெளிவாக அவளுக்குப் புரியும் விதத்தில் விளக்கினான்.
ராதாவும் கிருஷ்ணனும் தங்களுக்கு இது தோன்றவே இல்லையே என்று நினைத்துக் கொண்ட அதே நேரம், இந்த இளம் வயதிலேயே அவனது மன முதிர்ச்சியை எண்ணி பூரித்துப் போனார்கள். இவர்கள் மட்டுமா, மனைவிக்கு விஷயம் தெரியாத நிலையில், முன்பின் அறியாதவர்கள் இந்த ராத்திரி வேளையில் வந்து நின்றால் அவர்களை எப்படி நடத்துவார், அவரை மீறி ஸ்ரீவத்ஸனை மருத்துவமனை அழைத்துச் செல்ல முடியுமா என்று ஸ்ரீதரனும் யோசிக்கவே இல்லை.
அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே ஸ்ரீநிதியின் வீடு வந்து சேர்ந்து இருந்தனர். பெரியவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு கணம் யோசிக்க, அபிமன்யு இன்னும் தனது அறிவரையைத் தொடர்ந்து கொண்டு இருக்க, அதற்கு மேல் பொறுக்க முடியாத ராகவி வேகமாக இறங்கிச் சென்று அழைப்பு மணியை பலமாக அழுத்தினாள்.
Author: SudhaSri
Article Title: தொட்டுத் தொடரும் -8
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: தொட்டுத் தொடரும் -8
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.