அத்தியாயம்-6
கௌசல்யாவைப் பொறுத்தவரை, அவரது வளர்ப்பை யாரும் குறை சொல்லி விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். சில கசப்பான அனுபவங்கள் அவரை அப்படி ஆக்கி விட்டிருந்தன. ஒரு பெண் வேறு அந்த குழுவில் இருப்பது அவருக்கு கோபத்தை அதிகரித்தது. ருத்ர தாண்டவம் ஆடி விட்டார் அவர். இடையிடையே மறுத்துப் பேச முயன்றவனின் முயற்சி முற்றிலும் தோல்வியைத் தழுவியது.
"என்ன நினைச்சுட்டு இருக்கேடா நீ? இத்தனை நாளும் ஊமைக் கோட்டான் மாதிரி இருந்துட்டு, இப்போ ஃப்ரண்ட்ஸோட படிக்கப் போறேன்னு சொல்ற. ஃப்ரண்ட்ஸ் எங்கே இருந்து வந்தாங்க திடீர்னு? எத்தனை நாளா நடக்குது இந்த திருட்டுத்தனம்? ஸ்கூலுக்கு படிக்கத் தானே போனே? இல்லை ஆள் பிடிக்க போனியா? நீ பேசறதப் பார்த்தா அவங்க வீட்டுக்கு புதுசா போகப் போறது மாதிரித் தெரியலை. அவங்க வீட்டில அப்படி என்ன தான் பண்றாங்க? ஒரு பொண்ணு உன்னை கூப்பிட்டா உடனே அவங்க வீட்டுக்கு போயிடுவியா? நான் ஒருத்தி இங்கே எதுக்கு இருக்கேன்?" என்று வெறி பிடித்தவர் போல் கத்திக் கொண்டே போனார்.
நண்பர்களைக் பற்றிய அவரது வார்த்தைப் பிரயோகம் ஸ்ரீவத்ஸனை பதில் பேசவிடாமல் செய்தது. அவன் அமைதியாக இருக்க, அவன் தனியே அவனது மாமா பிள்ளைகள் படிக்கும் சென்டருக்கு சென்று படிக்க வேண்டும் என்பதில் கௌசல்யாவும் பிடிவாதமாக இருந்தார். ஸ்ரீவத்ஸன் மனதுக்குள் வைத்து மருகி காய்ச்சலில் விழ, ஸ்ரீநிதி தந்தைக்கு அழைத்து வீட்டு நிலவரத்தைக் கூறி விட்டாள். ஸ்ரீதரன் வந்த போது அவரது அருமை மகன் சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தான்.
அபிமன்யுவின், பகீரதப் பிரயத்தனத்தால் நண்பர்களுடன் மட்டுமாவது கலகலப்பாக இருந்த ஸ்ரீவத்ஸனை, நண்பர்களைப் பற்றிய தாயின் வார்த்தைப் பிரயோகங்கள் மறுபடியும் கூட்டுக்குள் தள்ளியது. இனிமேல் எப்படி அவர்கள் முகத்தில் முழிப்பது என்று உள்ளுக்குள் வைத்து மருகினான். மேலும் அவர்களைப் பார்க்கக் கூட முடியுமோ முடியாதோ என்று மிகவும் வருந்தினான். யாரிடமும் தனது மனத்தில் உள்ளதைப் பகிர்ந்து கொள்ள முடியாமல் தவித்தான்.
இத்தனைக்கும் நடுவே, தனது தாய் ஏன் இப்படி இருக்கிறார், அவருக்கு என்ன பிரச்சினை, தந்தையிடம் பேசலாமா என்ற எண்ணமும் வராமல் இல்லை. சிறு வயதில் இருந்தே அன்னையைக் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறான். சொந்த பந்தம் யாரிடமும் தானும் ஒட்டாமல் குழந்தைகளையும் ஒட்ட விடாமல் இருப்பவரைப் பார்த்து பலநேரங்களில் எரிச்சல் பட்டு இருக்கிறான். விடுமுறைக் காலங்கள் எல்லாம் பெரும்பாலும் வீட்டிலேயே கழிந்து விடும். தாயுடன் தனியே இருந்தால் அவரது புலம்பல் மழையில் நனையும் படி ஆகிவிடும் என்பதை அறிந்தவர்கள், தந்தையிடம் சொல்லி ஏதாவது வகுப்புகளில் சேர்ந்து விடுவார்கள்.
தந்தைக்கும் விடுமுறை கிடைத்தால் குடும்பத்துடன் எங்காவது செல்வார்கள். அதுவும் பல நேரங்களில் சண்டைகள், வாக்கு வாதங்கள் என்று போய் பாதியில் திரும்பும் படி ஆகும். தாத்தா வீட்டுக்குச் செல்லலாம் என்று கேட்டால் மிக நீளமான அறிவுரைப் படலம் நடக்கும். அவனது மாமனும் மாமியும் கூட ரொம்பவே பிரியமானவர்கள். சொந்தங்கள் எல்லாருமே பிரியமாக இருப்பதாகத்தான் பிள்ளைகளுக்குத் தோன்றியது
தந்தை அவரது பெற்றோருக்கு ஒரே மகன் என்றாலும் அவர்கள் வீட்டிற்கும் விருந்தினர் போலத் தான் செல்வார்கள். வீட்டின் முதல் பேரனாக ஸ்ரீவத்ஸனைக் கொண்டாடியவர்களை, கௌசல்யா எப்போதும் தள்ளியே நிறுத்தினார். நான்கே நாட்கள் தான் அந்த சீராட்டல் எல்லாம். கொஞ்சம் விவரம் தெரிந்த பிறகு பிள்ளைகள் விடுமுறையை அவர்களுடன் கழிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க,
அப்போது தான் வீட்டில் தாய் தந்தைக்கு இடையே ஏதோ பெரிய பிரச்சினை நடந்தது. அதனைத் தொடர்ந்து ஒரு மாதம் தந்தை வீட்டுக்கு வரவே இல்லை. ஸ்ரீவத்ஸன் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி முடிவுகளுக்காகக் காத்திருந்த நேரம் அது. ஸ்ரீதரன், பிரச்சினையின் விவரங்கள் குழந்தைகள் அறியாமல் பார்த்துக் கொண்டார்.
கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து வீட்டுக்கு வந்த ஸ்ரீதரன் , அவர்களைத் தனியே அழைத்துச் சென்று பேசினார். "பசங்களா! அப்பாவுக்கு இப்போ ஒரு பிரமோஷன் வந்திருக்கு" என்று ஆரம்பித்தார். "வாவ்! இதை ஏம்பா இவ்வளவு டல்லா சொல்றீங்க. எந்த ஊருக்குப் போகப் போறோம்?" என்று ஆர்ப்பரித்த தங்கையிடம் "அப்பாவை முழுசா பேசவிடு நிதி. என்ன சொல்ல வராங்கன்னு முதல்ல கேளு" என்று அண்ணனாக அடக்கினான் ஸ்ரீவத்ஸன்.
மகனை நன்றியுடன் பார்த்தவர் "இந்தியன் ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட்ல ஒன் ஆஃப் தி டைரக்டர் டா. இந்த போஸ்ட்ல ஒரே இடத்தில இருக்க முடியாது. நிறைய ஊருக்குப் போக வேண்டியது வரும். அதனால், அம்மா சென்னைக்கு போகணும்னு சொல்றா. நீங்களும் அம்மா கூட போறீங்களா?" என்று கஷ்டமான கேள்வி ஒன்றை அவர்கள் முன் வைத்தார். பிள்ளைகளைப் பொறுத்தவரை தந்தை தான் முதல் தோழன். இதுவரையில் அவர் எங்கு சென்றாலும் கூடவே சென்று கொண்டு இருந்தனர். தாய் கடியும் போதெல்லாம் தந்தை அரவணைப்பார்.
இப்போது இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாவோம் என்று கனவிலும் நினைத்ததில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தவர்களை பெருமூச்சுடன் பார்த்த ஸ்ரீதரன், தானே பேச ஆரம்பித்தார்.
இந்த வயதில் தாயைப் பற்றிய தப்பான அபிப்ராயம் பிள்ளைகளுக்கு வந்து விடக்கூடாது என்று வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசினார். "குட்டி நீ சமர்த்துப் பொண்ணு தானே. அம்மாவுக்கு கொஞ்சம் முடியலடா. அதான் அப்படி இருக்கா. மத்தபடி நீ கேட்கிறது எல்லாம் செஞ்சு தரா, உங்களுக்கு எல்லாமே பெஸ்ட்டா பண்றா தானே? அம்மாவைப் புரிஞ்சுக்கோடா. அம்மா உனக்கு நல்லது தான் நினைப்பா" என்று பெண்ணிடம் ஆரம்பித்து
"கண்ணா! நீ தானே வீட்டுக்கு மூத்த பையன். அப்பா இல்லாதப்போ நீ தானே அம்மாவையும் தங்கையையும் பத்திரமா பாத்துக்கணும். அப்பா கூட வொர்க் பண்றவங்க எல்லாம், உங்க பையன் ரொம்ப பொறுப்பான பையனாச்சேன்னு கேட்கிறாங்க. நீ என்னடான்னா இப்படி யோசிக்கிற?" என்று பையனிடம் முடித்தார்.
"சென்னை போனா தாத்தா பாட்டி, மாமா சித்தின்னு எல்லார் வீட்டுக்கும் அடிக்கடி போகலாம். ஜாலியா இருக்கலாம்" என்று தனக்கே நம்பிக்கை இல்லாத விஷயத்தை சொல்லி உற்சாகப் படுத்தினார். என்ன செய்வது என்று அவருக்குமே புரியாத நிலையில் குழந்தைகளின் மனம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசிக் கொண்டிருந்தார். அப்படித்தான் அவர்கள் சென்னை வந்தார்கள்.
ஒரு வேளை தாயும் தந்தையும் நிரந்தரமாகப் பிரியப் போகிறார்களோ? அதனால் தான் இவ்வளவு நீண்ட நாள் பிரிவோ? என்று அவனது குழம்பிய மனது பல காரணங்கள் தேடிக் குழம்பியது. அதற்கு ஏற்ப தந்தை இந்த இரண்டு வருடங்களில் ஒரேயொரு முறை மட்டுமே இங்கு வந்து சென்றார் என்பது அவனது நினைப்புக்கு தூபம் போட்டது. தங்களையும் தந்தை வெறுத்து விட்டாரோ என்று அச்சம் வந்தது. தந்தை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை , அதுவும் வீடியோவில் அவர்களுடன் பேசிக் கொண்டு இருக்கிறார் என்பதை வசதியாக மறந்து போனான். நண்பர்களைக் கூட தந்தையிடம் அறிமுகம் செய்து பேச வைத்ததையும் மறந்து போனான். இப்படி பல்வேறு நினைவலைகளின் தாக்கத்தை தாங்க முடியாமல் நினைவையே இழக்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டான்.
இரண்டு நாளாகியும் அண்ணன் அமைதியாக இருப்பதைக் கண்டு வருந்திய ஸ்ரீநிதி அவனிடம் ஏதாவது வம்பு வளர்த்து சமாதானப் படுத்தலாம் என்று வந்தவள் அவன் தூங்குவதைப் பார்த்து வெளியேறப் போனாள். ஆனால் அவன் படுத்திருந்த விதம் பார்த்து அவன் அருகில் வந்து தொட்டுப் பார்த்தாள். நெருப்பாய்க் கொதித்ததோடு அல்லாமல் ஏதோ அனத்திக் கொண்டு இருந்தான் அவன்.
உற்றுக் கவனித்தவள் "ராகவி நல்ல பொண்ணும்மா. நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. சரணும் ரொம்ப நல்லவன்மா. எனக்கு ரொம்ப பிடிக்கும்மா. என்னோட ஃப்ரண்ட்ஸ தப்பா சொல்லாதீங்க. அபீ என்னை தப்பா நினைக்காதே! நீ தான் என்னோட பெஸ்ட் பிரண்ட். ஐயோ அவங்கள எப்படி பார்ப்பேன்" என்று ஏதேதோ புலம்பிக் கொண்டு இருந்த அண்ணனைக் கண்டு அழ ஆரம்பித்தாள்.
சிறிது நேரம் வாய் விட்டு அழுதவள், அழுகையினூடே என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து, தந்தையை அழைத்தாள். அழைப்பு எடுக்கப்பட்டதும் "அப்பா சீக்கிரம் வாங்கப்பா. அண்ணா.. அண்ணா.." என்று பெருங்குரலெடுத்து அழுதாள்.
அதில் அதிர்ந்து போன ஸ்ரீதரன் " குட்டி, அப்பா வரேன். முதல்ல நீ அழுகையை நிறுத்து. எதுக்கு அழற? அண்ணனுக்கு என்னடா உங்கூட சண்டை போட்டானா? இல்லை அடிச்சுட்டானா? குட்டியோட அண்ணன் அப்படி எல்லாம் பண்ண மாட்டானே? அழாம அண்ணனுக்கு என்னாச்சுன்னு சொல்லு, நீ இப்படி அழுதா அப்பா என்ன நினைக்கிறது? அப்பாக்கு பயமா இருக்குடா. காம் டவுன் காம் டவுன்" என்று அவளது அழுகையை நிறுத்த முயன்றார். அவரது வார்த்தைகளில் தெளிந்தவள்,
நண்பர்களின் திட்டத்தையும் அதற்கு தாயின் பதிலையும் அவளுக்கு தெரிந்த விதத்தில் சொல்லி முடித்தவள், "அண்ணன் எங்கூட சண்டை போட்டு, அடிச்சாலும் பரவாயில்லை. ஆனா, இரண்டு நாளா அண்ணன் என் கிட்ட பேசவே இல்லை தெரியுமா. அதான் இன்னிக்காவது ஏதாவது பேசுவானான்னு பார்த்தேன். ஆனா ஏதோ புலம்பிட்டே இருக்கான். எழுந்துக்கவே இல்ல. எனக்கு ரொம்ப பயமா இருக்கு பா. எனக்கு அண்ணன் வேணும்" என்று மீண்டும் அழ ஆரம்பித்தாள்.
ஏதேதோ விபரீத எண்ணங்கள் தோன்ற, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தவர் "இம்மீடியட்டா அம்மாவைக் கூப்பிட்டு வாடா குட்டி" என்றார். "நான் மாட்டேன் பா. என் அண்ணனை நானே பார்த்துக்கிறேன். அம்மா வேண்டவே வேண்டாம். அவங்க அப்போவே தூங்கப் போயிட்டாங்க. அவங்களால தான் எல்லாம். நிறைய திட்டிட்டாங்க. அண்ணா பாவம் தெரியுமா. ஒண்ணுமே பேசல. நான் ஏதாவது ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணணுமா? இல்லை ஆம்புலன்ஸ கூப்பிடணுமா?" என்று பிடிவாதம் பிடித்தாள்.
இப்போதும் என்ன வீம்பு என்று மனைவியின் மீது கோபம் வந்தாலும் அதைக் காட்டுவதற்கான நேரம் இது அல்ல என்று புரிந்து " குட்டி! பெரியவங்க இல்லாமல் போனால் கஷ்டம்டா. மாமாவைக் கூப்பிடறியா? மாமா நம்பர் உனக்குத் தெரியுமா?" என்ற தந்தையின் கேள்விக்கு "நான் கூப்பிடுறேன் பா. அப்புறம் பேசறேன்" என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தவள், பெரியவர்கள் வேண்டும் என்ற தந்தையின் கூற்றில், அவளது நினைவுக்கு வந்த பெரியவர்களை அழைத்து விட்டாள்.
Author: SudhaSri
Article Title: தொட்டுத் தொடரும் - 6
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: தொட்டுத் தொடரும் - 6
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.